எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் தமக்கு வாய்த்த படியை வாயாரப் பேசுகிறார்.
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-
பதவுரை
பகல் கண்டேன்–இராக்காலம் கலசாமல் ஒரே பகற் போதாய்ச் செல்லுகிற நல் விடிவைக் கண்டேன். (அதாவது என்னவென்றால்)
நாரணனை கண்டேன்–ஸ்ரீமந் நாராயணனாகிற என்று மஸ்தமியாத ஆதிதயனைக் கண்டேன்,
மீண்டு–இன்னமும்,
கனவில்–மாநஸ ஸாக்ஷாத் காரத்திற் காட்டிலும்
மிக மெய்யே–மிகவும் ப்ரத்யக்ஷமாக
ஊன் திகழும் நேமி–திருமேனியில் விளங்குகின்ற திருவாழியை யுடையவனும்
ஒளி திகழும் சே அடியான்–பிரகாசம் மிக்க திருவடிகளை யுடையவனுமான அப்பெருமானுடைய
வான் திகழும்–பரமபதத்திலே விளங்குகின்ற
சோதி வடிவு–சோதி மயமான வடிவத்தை
மிக கண்டேன்-(இங்கே) நன்று ஸேவிக்கப் பெற்றேன்.
இந்த ஸம்ஸாரத்தில் முப்பது நாழகைக்கு ஒருமுறை இராப்பொழுதும் பகற்பொழுதும் மாறி மாறி வந்தாலும்
எம்பெருமானுடைய ஸேவை கிடைக்கப்பெறாத காலத்தைக் காளராத்திரியாகவே ஞானிகள் கருதுவர்கள்.
ஸூரியன் விளங்குங்காலம் பகற்பொழுது என்றும், அங்ஙனல்லாத காலம் இராப்பொழுதென்றும்
ஸாமாந்யர்கள் நினைத்திருப்பர்களாயினும், விஷேச ஞானிகள் அங்ஙனம் நினைத்திரார்கள்.
பகவத் ஸேவை வாய்க்குங்காலம் எதுவோ, அதுவே பகல், மற்றது இரவு – என்பதை இவர்களது ஸித்தாந்தம்.
அதனை அடியொற்று ஆழ்வார் “பகற் கண்டேன்“ என்கிறார். எம்பெருமானை ஸேவிக்கப் பெற்றேன் என்பது இதன் கருத்து.
இக்கருத்தை பிறர் தெரிந்து கொள்ளுதல் அரிதாகையாலே தாமே இதனை விவரணஞ் செய்தருள வேண்டி
“நாரணனைக் கண்டேன்“ என்கிறார்.
இவ்விடத்தில் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானவருளிச் செயல்காண்மின் –
“(பகற்கண்டேன் தாளராத்ரியாய்ச் செல்லாதே விடியக் கண்டேன் வடுகர் வார்த்தை போலே தெரிகிறதில்லை,
எங்களுக்குத் தெரியும்படி சொல்லீரென்ன, (நாரணனைக் கண்டேன்) அஸ்தமியாத ஆதித்யனைக் கண்டேன்.
இப்படி இவர் “பகற்கண்டேன்“ என்றும் “நாரணனைக் கண்டேன்“ என்றும் சொல்லக் கேட்டவர்கள்
‘நீர் அடிக்கடி கண்டேன் கண்னே என்கிறதெல்லாம் கனவுபோல நெஞசில் தோற்றுகிற தோற்றத்தை தானே
சொல்லுகிறீர் இப்போது கண்டேனென்கிறதும் அப்படிப்பட்ட தோற்றத்தானே‘ என்ன
இப்போது நான் விலக்ஷணமாகக் கண்டேனென்கிறார் மற்ற அடிகளால்,
பரமபதத்திலே “ஸதா பச்யந்தி ஸூரய“ என்று நித்யஸூரியர்கள் கண்டுகொண்டிருக்கும்
திவ்யமங்கள விக்ரஹத்தை மெய்யே காணப்பெற்றே னென்றாராயிற்று.
வான் திகழும் சோதிவடிவு கைகின்ற சோதி வடிவை என்று முரைப்பர்.
————————————————————————–
வடிக்கோல வாள் நெடுங்கண் மா மலராள் செவ்விப்
படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள்-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என் கொலோ
கோலத்தால் இல்லை குறை–82–
பதவுரை
வடி கோலம்–வடிக் கட்டின அழகை யுடையவளும்
வாள நெடுங்கண்–ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள்–சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம்–சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து
பல் நாள் அகலாள்–க்ஷண காலமும் விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடியே யிருக்கின்றாள்
பின்னும்–எம்பெருமானுடைய அழகிலே பிராட்டி ஆழங்காற்பட்டு அழுந்துகிற படியைக் கண்டுவைத்தும்
ஞாலத்தாள்–பூமிப்பிராட்டியானவள்
அடிக்கோலி–பாரித்துக்கொண்டு
நலம் புரிந்தது என் கொலோ–அப்பெருமானிடத்தில் ஆசையைப் பெருக்கிக் கொண்டிருப்பது என்னோ
கோலத்தால் குறை இல்லை–(எத்தனை பேர்கள் அநுபவித்தாலும் ஏற்றியிருக்கும்படியான அழகினால் குறையில்லையன்றோ.
அழகு அ ஆசைப்பட நேர்கின்றது (அளவற்றிருப்பதானல் பலரும் எம்பெருமானிடத்தில்)
கீழ்ப்பாட்டில் “நாரணனைக் கண்டேன்“ என்றாரே, ப்ரஹ்மசாரி நாராயணனைக் கண்டேனல்லேன்,
திருமடந்தை மண்மடந்தைகட்குக் கொழுநனான திருமாலைக் கண்டேனென்கிறார் இதில்.
இவ்வார்த்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிற அழகு காண்மின்.
பூவிற்பிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு
‘உன்னை ஒரு நொடிபொழுதும் விட்டுப்பிரியமாட்டேன். உன்னை ஒரு நொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்‘ என்றே
வாய்வெருவிக்கொண்டு அவனுடைய போக்யதையாகிற அமுத வெள்ளத்திலே கிடந்து தத்தளிக்கின்றாள்.
அநுபவத்தில் பெரிய கைகாரியான பிராட்டியின் நிலைமையே இதுவாயின் அவளிலும கீழ்ப்பட்டவளான பூமிப்பிராட்டி
‘நாம் அணுகுவதற்கும் நமக்கு யோக்யதையில்லை, ஒன்றான பிராட்டியே குமிழ் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தகுமோ? என்று
உதாஸீநையாய் விலக வேண்டியிருக்கவும் அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அபிநிவேசங்கொண்டு அணுகுகின்றாளே, இஃது என்கொல்?
இதற்குத் தாமே ஸமாதாந மருளிச்செய்கிறார் ஈற்றடியால், (கோலத்தால் குறை இல்லை) உலகத்தில் க்ஷுத்ர விஷயங்களிலே
ஒரு வஸ்துவில் ஒருவன் ஆசை வைத்துவிட்டால் அதை மற்றொருவன் ஆசைப்பட நினையாதிருப்பதுண்டு,
அதற்குக் காரணம் ஏதென்னில், அந்த விஷயங்களில் போக்யத்தை மிகவும் அறபராகையாலே
ஒருவன் அநுபவிப்பதற்கே போதும் போதாதாயிருக்கும், சிறயதொரு குட்டையில் தண்ணீர் குடிக்க ஒருவன் இறங்கினால்
“அவ்னொருவனுக்கே போராததான அதிலே நாமும் இற“குவதேன்? என்று மற்றையோர் அதனை உபேக்ஷித்துப் போவர்.
அதுவே ஒரு பெரு வெள்ளமாயிருந்தால் ‘இஃது எல்லார்க்கும் ஈடு கொடுக்கும்‘ என்று அனைவரும் அதிலே இறங்கி அநுபவிப்பரகள்,
அதுபோல் பகவத்விஷயமானது “கொள்ளமாளாவின்ப வெள்ளமாதலால் எத்தனைபேர் அநுபவித்தாலும் பாங்காகவே யிருக்குமாகையாலே
பூமிப்பிராட்டியும் மேல்விழும்படி யிருக்கின்றது என்று – எம்பெருமானுடைய போக்யதையின் அளவின்மை சொன்னவாறு.
இங்கே வியாக்சியான ஸ்ரீஸூக்தி வருமாறு – “தன்னில் மிடுக்கனானவன் அழுந்தப் புக்கால் கரையிலே நிற்கிறவன் புகாதே போகவன்றோ அடுப்பது,
எல்லாரிலும் அளவுடைய பெரியபிராட்டியார் குமிழ் நீருண்ணும் விஷயமானால் இவள் அகலப்பாராதே அகப்படுகைக்கு ஹேதுவென்னென்னில்,
ஹேது சொல்லுகிறது (கோலத்தால் இத்யாதி). நின்றார் நின்ற நிலைகளில் அகப்பட வேண்டும் அழகு குறைவற்றிருக்கையாலே யென்கை.
இதரவிஷயங்கள் இருவர்க்கும் அநுபவிக்கப் போராமையாலே சீறுபாறென்கறது. கிண்ணகத்தி லிழியுமாபோலே
எல்லாரும் திறவநுபவிக்க வேண்டும் பரப்பு உண்டாகையாலே இவ்விஷயத்தை யநுபவிப்பார்க்கு ப்ரியமே யுள்ளது.“
வடிக்கோல் வாள் நெடுங்கண் – வடி – கூர்மை பொருந்தியதும்,
கோலம் – அழசியதுமான, வாள் – வாள்போன்ற நெடுங்கண்களையுடைய மாமலராள என்று முரைக்கலாம்.
“அடிக்கோலி“ என்பதற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ‘அகலப்பாரித்து‘ என்று பொருள் காண்கிறது.
அதாவது ‘இலையகலப் பாரித்து‘ என்றபடி. ச்ரார்த்தத்தில் நிமந்த்ரண் முண்ணப்போகிறவன்
‘அப்படி உண்ணவேணும்‘ இப்படி உண்ணவேணும், வடையை நெய்யில் தோய்த்து உண்ண அதுபோல,
பூமிப்பிராட்டியார் எம்பெருமானை அநுபவிப்பதற்கு மநோரதிக்கும் படியை ‘அடிக்கோலி‘ என்றதனால் சொல்லிற்றென்க.
அரும்பதவுரைகாரர் “அடிகோலுகை – அகலுக்கு உத்யோகிக்கை“ என்று வரைந்து வைத்தது என்னோ அறியோம்.
————————————————————————–
கீழ் எழுபத்துநான்காம் பாசுரத்தில் “யானே இத்தமிழ் நன்மால யிணையடிக்கே சொன்னேன், பெருந்தமிழன் நல்லேன் என்று
பகவத்விஷயத்தில் நாம் கவிபாடப் பெற்றமைக்கு மகிழ்ந்து பேசினவர்
கீழ்ப்பாட்டிற்படியே நாய்ச்சிமாரும் பெருமாளாகக் கூடியிருக்கும் சேர்த்தியழைகைக் கண்டவாறே அந்தோ!
இச் சேர்த்தி யழகுக்குப் பொருத்தமாகச் கவிபாடத் தெரியவில்லை எனக்கு செவிக்கினிய
“செஞ்சொற்களால் நிறையப் பாடுகையின்றியே கடுஞ்சொற்களால் ஏதே அரைகுறையாகப் பாடினேனே!,
இப்படி பாடினது மல்லாமல் நம்முடைய பாடலுக்கு ஏதோ வெகுமதி கிடைக்கப்பொகிறதென்று
கைம்மாறு தன்னையுங் கருதிக்கிடந்தேனே! என்று அநுதபிக்கிறார்.
குறையாக வெம் சொற்கள் கூறினேன் கூறி
மறை யாங்கு என உரைத்த மாலை -இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்
மாயன் கண் சென்ற வரம் -83-
பதவுரை
மறை–வேதங்களும்
ஆங்கு என உரைத்த மாலை–ப்ரத்யக்ஷித்துச் சொல்ல மாட்டாமல் பரோக்ஷமாகவே சொன்ன எம்பெருமான (அல்பஜ்ஞனான நான்)
மாயன் கண் சென்ற வரம்–அப்பெருமானிடத்தில் தங்கியிருக்கின்ற அநுக்ரஹமானது.
இறையேனும்–ஸ்வல்பமான பலனையாகிலும்
குறை ஆக–குறையுண்டாம்படி
வெம் சொற்கள்–செவிசுடும்படியான சொற்களால்
கூறினேன்–பேசினேன்
கூறி–அப்படி பேசினது மல்லாமல்
ஈயும் கொல் என்றே–(நமக்குக்) கொடுக்குமோ என்று (பலனையும் எதிர்பார்த்துக் கொண்டு)
எனைப் பகலும்–வெகுகாலமாக
இருந்தேன்–இருக்கின்றேன்.
மறை ஆங்கெனவுரைத்தமாலை – ப்ரக்யக்ஷ நிர்த்தேசமென்றும் பரோக்ஷ நிர்தேசமென்றும் இருவகையான வ்யவுஹாரங்களுண்டு.
‘அவன் அங்கே யிருக்கின்றான் அது அப்படிப்பட்டது என்றாற்போன்ற வ்யவ்ஹாரங்களை பரோக்ஷ திர்த்தேசமெனப்படும்
இவன் இதோஇருக்கின்றான் இது இப்படிப்பட்ட என்றாற் போன்ற வ்யாவஹாரங்கள் ப்ரத்யக்ஷ நிர்த்தேசமெனப்படும்.
“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ“ என்று – எம்பெருமானுடைய தனமை சிறிதுங் கண்டறியமாட்டாமல்
வேதங்களும் மீள்கின்றன என்கையாலே வேதபுருஷனும் ப்ரத்யக்ஷிக்க பேசுகின்றானென்பதை மறை ஆங்கெனவுரைத்த‘ என்றதனாற் காட்டினபடி.
‘அவன்படிகளை உள்ளபடி தரை கண்டு பேச வொருப்பட்ட வேதங்களானவை அது என்று சொல்லுமித்தனை போக்கி
இதம் மென்று பரிச்சோதிச்சுச் சொல்லமாட்டாதபெருமையையுடைய ஸர்வேச்வரனை“ என்பது முன்னோருரை வாக்கியம்.
மாயன் கண்சென்ற வரம் இறையேனும் ஈயுங்கொலென்றே இருந்தேன் – எம்பெருமானுடைய அநுக்ரஹமானது நாம்
பாடின பாட்டுக்குப் பரிசாக ஏதாவதொரு பலனைத் தந்திடுமன்றோவென்று ப்ரயோஜநாபேக்ஷியாயு மிருந்தேனே! என்றவாறு.
ஆக இப்பாட்டில், திருமாலின் வைலக்ஷணயத்திற்குத் தகுந்தவாறு கவிபாடப் பெறாமைக்கு அநுதாபமும்,
பச்சையை நச்சிப்பாடினத்திற்கு அநுதாபமும் ஆக இரண்டு அநுதாபங்கள் முறையே முன்னடிகளிலும் பின்னடிகளிலும் விளங்கும்.
————————————————————————–
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருது மூர்க்கத்தவனை -நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே
அங்கண் மா ஞாலத்து அமுது–84-
பதவுரை
வரம் கருதி–(தேவர்களிடத்துப் பெற்ற) வரத்தை மதித்து
தன்னை வணங்காத–(ஸர்வேச்வரனான) தன்னை வணங்காதிருந்தவனும்
வன்மை உரம் கருதி–(தன்னுடைய) மன வலிமையையும் நினைத்து
மூர்க்க தவனை–மூர்க்கத்தனம் கொண்டிருந்தவனுமான இரணியனை
நரம் கலந்த சிங்கம் ஆய்கீண்ட–நரசிங்க வுருக்கொண்டு பிளந்தொழிந்த
திருவன்–அழகனுடைய
அடி இணையே-உபய பாதமே
அம் கண் மா ஞாலத்து–அழகிய இடமுடைத் தான இம்மாநிலத்தில்
அமுது–(போக்யமான) அம்ருதமாகும்.
ஆழ்வார்!, “குறைவாக வெஞ்சொற்கள் கூறினேன்“ என்று அநுதாபமாகச் சொல்லிக்கொண்டே மேன்மேலும் கவிபாடாநின்றீரே,
உமது சொற்கள் வெஞ்சொற்களாயின் கவிபாடுதலை நிறுத்திக்கொள்ளலாமே‘ என்று சிலர் சொல்லக்கூடு மென்றெண்ணி
ஒரு போக்கியமான வஸ்துவைக்கண்டால் நாமும் இதில் சிறிது வாய்வைக்க வேணுமென்று தோன்றுவதுபோல,
எம்பெருமான் பரமபோக்ய னென்ற்றிந்தவாறே அதில் வாய்வைக்காதிருக்க முடியவில்லை“ என்று விடையளிக்க விரும்பி
இரணியனை நரசிங்க மாகிக்கிழித்த அழகியானுடைய அடியினை இவ்வுலகத்து அமுதம் போன்றுள்ளது என்று
பகவத் விஷய போக்யத்தையை பேசுகிறாரிதில்.
நாங்கலந்த சிங்கத்தினால் கிழித்தெறியப்பட்ட இரணியன் எப்படிப்பட்டவனென்றால்,
அவன் பரம மூர்க்கனாயிருந்தவனென்பன முன்னடிகள்
வரபலத்தினாலம் புஜபலத்தினாலும் மனக் கொடுமையினாலும் வணங்க முடி மன்னனாயிருந்த மூட அரக்கனும் இரணியன்.
————————————————————————–
கீழ் எண்பத்து மூன்றாம் பாட்டில் “குறையாத வெஞ்சொற்கள் கூறினேன். என்று தாம் புன்மையான சொற்களைத் தொடுத்துக்
கவிபாடினதற்கு அநுதபித்தார், ‘இப்படி அநுதாப்படுகிற நீர் வாய்மூடிக்கிடவாமல் மேன்மேலும் கவிபாடி கொண்டே யிருப்பானேன்?‘
என்று கேட்டவர்கட்கு உத்தரமாக ‘பகவத்விஷயம் பரமபோக்யமாயிருப்பதனாலே அதில் வாய் வைத்தே தீரவேண்டியிருக்கின்றது‘
என்பவர்போல பகவத்விஷயத்தின் பரமபோக்யதையைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்.
அப்படி பரமபோக்யமான விஷயத்தைப்பற்றின பாடலாகையாலே என்னுடைய வெஞ்சொற்களும்
அமுதன்ன சொல்மலைபாய் விட்டன என்கிறாரிப்பாட்டில்.
அமுதென்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று –85-
பதவுரை
அமுது என்றும்–அமிருதம் போன்றவனென்றும்
தேன் என்றும்–தேன் போன்றவனென்றும்
ஆழியான் என்றும்–திருவாழியை யுடையவனென்றும்
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும்–முற்காலத்தில் (கடல் கடைந்து) அமுதமெடுத்தளித்து மகிழ்ந்தவனென்றும்
சொல்லப்பட்ட–சொல்லப்பட்டிருக்கின்ற
நல் மாலை–விலக்ஷணனான எம்பெருமானை
அமுது அன்ன சொல் மாலை–அம்ருதம் போன்ற இப்பாசுரங்களினால்
ஏத்தி ஏத்தி நவின்று தொழுதேன்–பலகாலும் துதித்துச் சொல்லி வணங்கினேன்.
அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் அன்று அமுதுகொண்டுகந்தானென்றும் சொலப்பட்ட நன்மாலை
அமுதன்ன சொன்மாலை (கொண்டு) ஏத்தியேத்தி நவின்று தொழுதேன் – என்று அந்வயிப்பது,
சக்ரபாணி என்பதும் கடல்கடைந்தமுதங்கொண்டவனென்பதும் எம்பெருமானுக்கு எப்படி திருநாமங்களோ
அப்படியே ‘அமுது‘ என்பதும் ‘தேன்‘ என்பதும் அவனுக்குத் திருநாமங்களாமென்க. “ரஸோ வைஸ“ என்றாள் வேதபுருஷன்.
“தேனைநன்பாலைக் கன்னலையமுதை“ “எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே
திருமாலிருஞ் சோலைக் கோனேயாகி நின்றொழிந்தான்“ என்பர் ஆழ்வாரக்ள்.
இப்படி அமுதுந்தேனுமான எம்பெருமானைப் பாடுகின்ற பால்களும் அமுத மயமாகக் குறையில்லையென்பார்
‘அமுதன்ன சொன்மாலை‘ என்றார்.
“அமுது அன்று கொண்டு உகந்தான்“ – தன்னை வந்து அடிபணிந்தவர்கட்குக் காரியம் நிறைவேறினால்
அவர்கள் மகிழ்வதிலுங்காட்டில் அதிகமாக மகிழ்வன் எம்பெருமான், ‘நம் ஆச்ரிதருடைய குறையைத்தீர்க்கப்பெற்றோமே!‘ என்று மகிழ்வனாம்.
அதுதோன்ற ‘உகந்தான்‘ எனப்பட்டது.
————————————————————————–
எம்பெருமானைக் காணவேணுமென்று சிலர் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவதுண்டு,
எம்பெருமான் தானே சிலர்க்குக் காட்சி தந்தருளவேணுமென்று பாரிப்பதுண்டு,
இவற்றுள், பரகதஸ்வீகாரமெனப்படுகிற எம்பெருமான் தானே பற்றும் பற்று பலிக்குமேயன்றி, சேதநர் பண்ணுகிற
ஸாதநாநுஷ்டாநம் பலிக்கமாட்டாது என்கிறாரிதில்.
எம்பெருமான் தானே தனது நிரஹேதுகிருபையினாலே தன்படிகளையெல்லாம் எனக்குக்காட்டி யருள நான் காணப்பெற்றேன்,
வேறு எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணியும் நான் காணப்பெற்றேனல்லேன்,
ஆகையாலே, ஸாதநாநுஷ்டாநம்பண்ணிக் காண்கிறவர்கள் என்னோடு ஓப்பர்களோ? என்கை.
நவின்றுரைத்த நாவலர்கள் நாண் மலர் கொண்டு ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என் கொல் -பயின்றார் தம்
மெய்த் தவத்தால் காண்பரிய மேக மணிவண்ணனை யான்
எத்த்வத்தால் காண்பன் கொல் இன்று –86-
பதவுரை
நவின்று உரைத்த–(அவனது திரு நாமங்களைப்) பலகாலுஞ் சொல்லுகின்ற
நாவலர்கள்–கவிகள்
நாள் மலர் கொண்டு–அப்போதலர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
ஆங்கே பயின்று–அந்த ஸர்வேச்வரனிடத்தில் நெருங்கி யாச்ரயித்து
அதனால் பெற்ற பயன் என்சொல்–அதனால் (அவர்கள்) பெற்ற பிரயோஜ நம் என்னோ
(எம்பெருமான் தானே நிர்ஹேதுகமாக அநுக்ரஹித்தாலன்றி, இவர்களுடைய ஸ்வப்ரயத்நத்தால் என்ன பேறு பெறமுடியும் என்கை.)
பயின்றார் தம்–நெருங்கி ஸாதநா நுஷ்டாநம் பண்ணுமவர்களுடைய
மெய் தவத்தால்–சரீரம் நொந்து செய்கிற தபஸ்ஸினால்
காண்பு அரிய–காணமுடியாதவனும்
மேகம் மணி வண்ணனை–மேகத்தையும் நீல மணியையும் போன்றநிறத்தை யுடையனுமான எம்பெருமானை
யான்–அடியேன்
இன்று–இப்போது
எத் தவத்தால் கொல் காண்பன்–எந்தத் தபஸ்ஸினால் காணப்பெற்றேன்?
(அவனே காட்டிக்கொடுக்கக் கண்டேனேயொழிய, ஒரு தவஞ்செய்து கண்டவனல்லேனென்கை)
நாம் ஒரு உபாயத்தை அநுஷ்டித்தே எம்பெருமானைப் பெறவேணுமென்கிற எண்ணத்துடன் திருநாமங்களைப் பலகால்
ஸங்கீர்த்தனம் பண்ணியும் புஷ்பம் முதலியவற்றைப் பலகால் கொண்டு ஆராதித்தும் ஆகவிப்படி செய்யும்
உபாயாநுஷ்டாநங்கள் பயனற்றவை என்பன-முன்னடிகள்.
அப்படி உபாயாநுஷ்டநாம் பண்ணினவர்களுக்கும் காண்பதற்கு அரியனான எம்பெருமானைத் தாம் கண்டபடியையும்,
‘அப்படி கண்டது ஒரு தவத்தினாலன்று, அவனது நிர்ஹேதுக கிருபையினாலே‘ என்பதையும் தெரிவிப்பன – பின்னடிகளில்.
தவம் – உடம்பினால் வருத்தப்பட்டுச் செய்யும் காரியம். யான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று – நான் ஒரு ஸாதநமும்
அநுஷ்டியாமல் இன்று காணப்பெற்றேன் என்றவாறு.
————————————————————————–
இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமானதேயாம் எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷண்யத்தைப் பேசுகிறார்.
நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து எம்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன்னுடைய
ஸ்வரூப ரூபகுண் விபூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு
“ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந ஸாத்லிகஸ் ஸது விஜ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக –
(கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித்தருள்வனோ அவனே ஸாத்விகன், அவனே முழுக்ஷுவாவான்)
என்கிறபடியே சுத்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை
ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன்,
எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடியேன் அவனை மறவாது
வாழ்த்தக்கொண்டிருந்தேனாகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்தவனே யன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை -அன்று
கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
திருக் கோட்டி எந்தை திறம் -87-
பதவுரை
அன்று கரு கோட்டியுன் கிடந்து–முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து
திருக்கோட்டி எந்தை திறம்–திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை
கண்டேன்–கண்டு அநுபவிக்கப் பெற்றேன்
கை தொழுதேன்–கை தொழவும் பெற்றேன், (ஆனபின்பு)
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
ஆங்கு சென்று அளந்த திரு அடியை–அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை
இன்று ஆ அறிகின்றேன் அல்லேன்–இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)
இருநிலத்தைச் சென்று ஆங்களந்த திருவடியை என்றது இங்கு விசேஷாபிப்ராயத்தோடு கூடியது,
“அவன் அளக்கிற விடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித்தனையன்றோ“
என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
உலகமுள்ள விடமெல்லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டதுபோல
அவன் தானே மேல்விழுந்து விஷயீகரிக்கப்பெற்றேனடியேன் என்றவாறு.
இதில் முன்றாமடியில் ஒரு சங்கை பிறக்கும், அதாவது – குருக்கத்திப் பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே திருவவதரித்தத்தனால்
அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸமென்பது கிடையாதே,
அப்படியிருக்க “கருக்கோட்டியுள் கிடந்து“ என்று இவர் தாம் எங்ஙனே அருளிச்செய்கிறாரென்று.
இதற்கு உத்தரமாவது – ‘கருக்கோட்டியுள் கிடந்து‘ என்ற விகனால்
* தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டாநாற்றம் மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில்நின்றும்
ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை, எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்ப ஸ்தாநமாகும்.
‘நான் இவ்விருள் தருமாஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்‘ என்று
சொல்லுவதே இங்கு விவக்ஷிதம். “அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்“ என்றாற்போலுமாம்.
————————————————————————-
எம்பெருமானே வேறொன்றை எதிர்பாரத உபாயபூதன் என்று நன்குணர்ந்து அவ்வுணர்ச்சியின்படியே நடந்து
கொள்ளுமவர்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக் கொண்டு வைகுந்த நின்வாசலினுள்ளே புகப்பெறுவர்,
மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு திறவாதே மூடிக்கொள்ளு மென்கிறார்.
திறம்பிற்று இனி அறிந்தேன் தென்னரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் -திறம்பாச்
செடி நரகை நீக்கித் தான் செல்வதன் முன் வானோர்
கடி நகர வாசற் கதவு–88-
பதவுரை
தென் அரங்கத்து எந்தை–தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி–பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால்–நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம்–தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி–அறுக்க முடியாத புதர் போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டு
செல்வதன் முன்–போவதற்குள்ளே
வானோர்–நித்ய ஸூரிகளுடையதும்
கடி–அரணை யுடையதானதுமான
நகரம்–வைகுந்தமா நகரத்தினுடைய
வாசல் கதவு–வாசற் கதவானது
திறம் பிற்று–மூடிக்கொண்டதாகும்
இனி அறிந்தேன்–(இதை) இப்போது அறிந்து கொண்டேன்
திறம்பிற்று –எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன்னது காலவழுவமைதி.
————————————————————————–
எம்பெருமானே! நீ ஆச்ரிதர்களுக்குக் காரியஞ்செய்வதென்று மனம்வைத்துவிட்டால் அருமையான காரியங்களையும்
எளிதாகச்செய்து முடிப்பவன்ன்றோ என்ன வேண்டி, அடியவர்க்காச்செய்த சில காரியங்களை எடுத்துரைக்கின்றாரிதில்.
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
அதவிப் போர் யானை ஒசித்துப -பதவியாய்
பாணியால் நீரேற்றுப பண்டு ஒரு நாள் மாவலியை
மாணியாய் கொண்டிலையே மண்–89-
பதவுரை
முன்–முற்காலத்தில்
கதம் சிறந்த–கோபம் மிகுந்த
கஞ்சனை–கம்ஸனை
கதவி காய்ந்து–கோபித்து முடித்து
போர் யானை–போர் செய்வதாக எதிர்த்து வந்த குவலயாபீடமென்னும் யானையை
ஒசித்து–கொம்பு முறித்து
அதவி–கொன்று,
பண்டு ஒரு கால்–முன்னொரு காலத்தில்
பதவியாய்–நீர்மையை யுடையனாயக்கொண்டு
மாணி ஆய்–பிரமசாரியாகி
மாவலியை–மஹாபலியினிடத்திலே
பாணியால்–கையினாலே
நீர் ஏற்று–தானம் வாங்கி
மண் கொண்டிலையே–பூமியைப் பெற்றாயல்லையோ?
“சாதுசனத்தை நலியுங்கஞ்சன்“ என்கிறபடியே பாகவதர்களுக்கெல்லாம் கொடுமையியற்று மவனாயிருந்த கம்ஸனைச் சீறி முடித்தாய்,
பாகவதற்களுக்கு உயிரான உன்னைக் கொல்லுமாறு அக்கஞ்சனால் ஏவிநிறுத்தப்பட்டிருந்த மதயானையை முடித்தாய்,
இந்திரனுக்கா மாவலிபக்கல் மூவடிமண் நீரேற்றுப்பெற்று மூவுலகங்களையும் அடிப்படுத்தி வாழ்வித்தாய்.
ஆக இப்படிப்பட்ட காரியங்கள் செய்தவனல்லையோ நீ.
அதவுதல் – ஹதம்பண்ணுதல். “அதவிப் போர்யானையொசித்து“ என்பதே வியாக்கியானத்துக்கிணங்கிய ஆன்றோர் பாடம்,
“உதவிப் போர்யானை“ என்றும் சிலர் ஓதுவர்களாம், இப்பாடம் மோனையின்பத்துக்குச் சேர்ந்திருக்கு மென்னலாமாயினும்
முன்னோர் விரும்பியபாடமன்று கம்ஸனுக்கு உதவியாயிருந்த யானையை ஒசித்து என்று பொருள் கூறலாம்.
பதவியாய் –“***“ என்னும் வடசொல்லாகக் கொண்டு ‘வழியாகவே‘ என்று பொரு கொள்வதம் தகும். பாணி –வடசொல்.
————————————————————————–
‘ஆழ்வீர்! நாம் முன்பு செய்த காரியங்களை எடுத்துரைக்கிறீர், அஃது இருக்கட்டும். இப்போது நாம் உமக்குச் செய்ய
வேண்டிய காரியம் ஏதேனுமுண்டாகில் சொல்லிக் காணீர்‘ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய,
பிரானே! உன்னை ஆச்ரயித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனோனேன்காண்,
மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தோடு வாசியற உபயவிபூதியும் நானிட்டவழக்காம்படி ஆள்வதற்கு உதியேனானபின்!
இனி எனக்குச் செய்யவேண்டுவதொன்றுண்டோ? என்றாராயிற்று.
மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே -நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கை தொழுத பின்-90-
பதவுரை
திருமாலை–பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண்–செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை–ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை–எம்பெருமானை
நண்ணி–கிட்டி
கை தொழுத பின்–அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு
மண் உலகம் ஆளேளே–இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?
வானவர்க்கும் வானவன் ஆய்–தேவாதிதேவனாய்க் கொண்டு
விண் உலகம் தன் அகத்து–நித்ய விபூதியிலே
மேவேனே–நித்யாநந்த மநுபவிக்க மாட்டேனோ?
————————————————————————–
இப்பாட்டுத் தொடங்கி மேல் நான்கு பாட்டுக்களாலே பரோபதேசம் பண்ணுகிறார்.
உலகத்தவர்களே! நீங்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால் நரக மார்க்கத்திற்கே செல்லப் பார்க்கிறீர்களென்று
நினைக்கும்படியா யிராநின்றது. ‘நரகவேதனை நமக்குக் கிடைத்தால் என்செய்வோம்‘ என்று கலங்கி நிற்கிறீர்களாகில்
அதைத் தப்புவதற்கு இப்போதே உபாயம் சொல்லுகிறேன் கேளுங்கள், உலகளந்த பெருமானுடைய சேவடியை
வணங்குதற்கு முயற்சி செய்தீர்களாகில் பின்னால் அருநரகம் சேராமல் பிழைக்கலாம் என்கிறார்.
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர்
முன்னால் வணங்க முயல்மினோ -பன்னூல்
அளந்தான் இக்கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி –91-
பதவுரை
பின்னால்–சரீரம் விழுந்த பின்பு
அரு நகரம்–கடினமான நரகத்தை
சேராமல்–அடையாமலிருக்கும் படிக்கு
பேதுறுவீர்–மனங்கலங்கியிருக்கும் மனிசர்களே!
பல் நூல்–பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களினால்
அளந்தானை–நிச்சயிக்கப்படுபவனும்
கார் கடல்சூழ் ஞாலத்தை எல்லாம் அளந்தானவன்–கரிய கடல் சூழப்பட்ட பூமியையெல்லாம் அளந்து கொண்டவனுமான எம்பெருமானுடைய
சே அடி–செவ்விய திருவடிகளை
முன்னால்–இப்போதே
வணங்க–வணங்குமாறு
முயல்மின்–முயற்சிசெய்யுங்கள்.
‘சேவடியை வணய்குமினோ‘ என்னாமல் – ‘வணங்க முயல்மினோ‘ என்றமையால் – எம்பெருமான் திருவடிகளை
வணங்க வேணுமென்னும் முயற்சியுண்டான மாத்திரமே நரகம் தவிரும் என்பது விளங்கும்.
————————————————————————–
எம்பெருமானது திருவடிகளை வணங்க முயன்றால் நரகயாதனை தவிருமென்றார் கீழ்ப்பாட்டில்,
அவனுடைய திருநாமங்களைக் கீர்த்தனம்பண்ணினால் நீங்கள் விரும்புகின்ற புருஷார்த்தங்களெல்லாம் கைபுகுமென்கிறாரிதில்.
அடியால் முன் கஞ்சனைச் செற்று அமரர் ஏத்தும்
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான் தன்
நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால் தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது–92-
பதவுரை
முன்–முன்னே
அடியால்–திருவடியினால்
கஞசனே–கம்ஸனை
செற்று–உதைத்துக் கொன்றதனாலே
அமரர் ஏத்தும் படியான்–தேவர்கள் துதிக்கும் படியாக வுள்ளவனும்
கொடிமேல் புள் கொண்டான்–த்வஜத்திலே கருடபக்ஷியையுடைய வனுமான
நெடியான் தன்–ஸர்வேச்வரனுடைய
நாமமே–திருநாமங்களையே கொண்டு
ஏத்துமின்கள்–ஸ்தோத்ரம் பண்ணுங்கள்
ஏத்தினால்–அப்படி ஸ்தோத்ரம் பண்ணினால்
தாம் வேண்டும் காமம்–தாங்கள் அபேக்ஷிக்கும் புருஷார்த்தத்தை
கடிது–விரைவாக
காட்டும்–(அத்திருநாமம்) பெறுவிக்கும்
உயர்ந்த சிங்காசனத்தின் மீது வீற்றிருந்த கம்ஸனைத் தலைமயிர் பற்றியிழுத்துக் கிரீடம் சிதறக் கீழேநள்ளித் திருவடியால்
உதைத்து முடித்ததனால்இந்த வீரச்செயலிலே ஈடுபட்டுத் தேவர்கள் துதிக்கநின்ற கருடத்வஜனுடைய திருநாமங்களையே சொல்லுங்கள்,
சொன்னால், சொன்ன வாய் மூடுவதற்குள்ளே தாம் தாம் விரும்பும் புருஷார்த்தங்களை அத்திருநாமமே பெறுவிக்கு மென்றாராயிற்று.
————————————————————————-
உலகத்தவர்களே!, ‘நரகம்‘ என்கிற சொல் காதல் பட்டமாத்திரத்திலே ஒவ்வொருவருடைய உடலும் நடுங்கும்,
அதற்குமேல், அந்த நரகத்தில் யமபடர்கள் செய்கிற நலிவுகளைக் கேட்டாலோ இடிவிழுந்தாற்போலாகும்.
இப்படி கோரமான நரகவேதனைகட்கு இடமுண்டாவதற்கு முன்னே, விரோதி நிரஸத சீலனான
எம்பெருமானுடைய தோத்திரத்திலே மூளுங்கோள் என்கிறார்.
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்றது கூடா முன்னம் -வடி சங்கம்
கொண்டானைக் கூந்தல் வாய் கீண்டானைக் கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று–93-
பதவுரை
கொடுநரகம்-க்ரூரமான நரகமானது
கடிது–கண்கொண்டு காணவொண்ணாதபடி கோரமாயிருக்கும்
பிற்காலும்–அதற்குமேலும்
செய்கை–(அங்கு யமபடர்கள் செய்யும் யாதனைச்) செயல்கள்
கொடிது–பொறுக்க முடியாதனவாயிருக்கும்,
என்று–என்று தெரிந்து கொண்டு
அது கூடா முன்னம்–அந்த நரகவேதனை நேராதபடி
வடி சங்கம் கொண்டானை–கூர்மையான த்வநியையுடைய சங்கைத் திருக்கையிலே உடையவனும்
கூந்தல் வாய் கீண்டானை–கேசியின்வாயைக் கீண்டொழித் தவனும்
கொங்கை நஞ்சு உண்டானை–(பேய்ச்சின்) மூலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவனுமான எம்பெருமானை
உற்று–பொருந்தி
ஏத்துமின்–ஸ்தோத்திரம் பண்ணுங்கள்
கூந்தல்வாய் கீண்டானை – தலைமயிர்க்கு வாசகமான கூந்தலென்னுஞ்சொல் ‘லக்ஷிதலக்ஷணை‘ என்னும் வழியால்
கேசியென்பவனைக் குறிக்கும். எங்ஙனேயென்னில், கூந்தல் என்பதற்கு வடமொழிநாமம் கேசமாகும்.
அச்சொல் கேசியை நினைப்பூட்டும். வில்லிப்புத்தூரார் பாரதத்தில் புத்திஸேதனைச் சொல்லவேண்டுமிடத்து, ‘
திங்கள் சேர் பெயரினான்“ என்றதுகாண்க.
(திங்கள் – சந்திரன், தமிழில் மதி என்னுஞ்சொல்லும் சந்திரனைச் சொல்லும், ‘மதி‘ என்கிற அச்சொல்
வடமொழியாய்க்கொண்டு புத்தியென்னும் பொருள் தரும். ஆகவே, புத்திஸேநன் என்ற பெயர் திங்கள் சேர் பெயராயிற்று,
இங்ஙனே தமிழ்ப் பிரயோகங்கள் பலவுள) கம்ஸனுடைய ஏவுதனினால் குதிரைவடிவங்கொண்டு
கண்ணபிரானைக் கொல்லவந்த கேசி யன்னுமஸுரனை வாய்பிளந்து முடித்தவரலாறு ப்ரஸித்தம்.
————————————————————————–
உற்று வணங்கித் தொழுமின் உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் -பற்றிப்
பொருந்தா தான் மார்பிடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு–94-
பதவுரை
உலகு எழும் முற்றும் விழுங்கும்–உலகங்களை யெல்லாம் (பிரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனும்
முகில் வண்ணன்–மேகம் போன்ற வடிவையுடையவனும்
பொருந்தா தான்–(ப்ரஹ்லாதனுக்கு) சத்ருவான் இரணியனுடைய
மார்பு–மார்வை
பற்றி–பிடித்து
இடந்து–கிழித்தவனும்
பூ பாடகத்துள் இருந்தானை–அழகிய திருப்பாடகமென்னுந் திருப்பதியில் வீற்றிருப்பவனுமான எம்பெருமானை
என் நெஞ்சு–என் மனமானது
ஏத்தும்–துதிக்கும் (நீங்களும் இப்படியே)
உற்று வணங்கி தொழுமின்–பொருந்தி வணங்கி ஆச்ரயியுங்கோள்.
பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கடலிலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம்
திருவயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி
இரணியன் மார்பிடந்த சிரமம் தீரவும் கச்சிநகரில் திருப்பாடகமென்னுந் திருப்பதியில்
இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என்நெஞ்சு ஏத்துகின்றது,
நீங்களும் அவனையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.
பாடகம் –பெரியகாஞ்சீபுரத்திலுள்ள பாண்டவதூதர் ஸந்நிதி. ‘பாடு அகம்‘ என்று பிரிக்க.
பெருமைதோற்ற எழுந்தருளியிருக்கும். தலம் என்கை.
கண்ணன் பாண்டவதூதனாய்த துரியோதனனிடஞ் சென்றபொழுது துர்யோதநன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில்
மிகப்பெரிய நிலவறையொன்றைத் தோண்டுவித்து அதில் அனேகமல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து
அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புகளால் மேலேமூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை அமைத்து
அவ்வாஸனத்தில் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன்மேல் ஏறினமாத்திரத்திலே
மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆசனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில், அப்பெருமான் மிகப்பெரிதாக
விச்வரூபமெடுத்துப் பல கைகளையும் கால்களையுங்கெண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர்.
அப்போது கொண்ட விச்வரூபத்திருக்கோலத்திற்கு ஸ்மாரமாகப் பெரிய திருமேனியோடே ஸேவைஸாதிக்குமிடம் பாடகம்.
பாடு –பெருமை. (“அரவுநீள் கொடியோனவையுளாசனத்தை அஞ்சிடாதேயிட அதற்குப் பெரியமாமேனி
அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்“ என்ற பெரிய திருமொழிப்பாசுரத்தில்
அநுஸந்திக்கப்பட்ட திருமேனிவளர்த்தியோடே ஸேவைஸாதிக்கு மாறுகாண்க.
————————————————————————–
பெருமாள் கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேர்ருளாளனை
மங்களாசரஸநம் பண்ணும் பாசுரங்கள் – இப்பாட்டும் மேற்பாட்டும்.
என் நெஞ்சமேயான் என் சென்னியான் தானவனை
வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தி ஊரான் -95-
பதவுரை
தானவனை–இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம்-வலிய மார்வை
கீண்ட–கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன்–நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான்–நெடுங்காலமாக வுள்ளவனும்
ஊழி பெயர்த்தான்–காலம் முதலிய ஸகல வஸ்துக்களையு முண்டாக்கினவனும்
உலகு ஏத்தும் ஆழியான்–உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்க் கொண்டு திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனும்
அத்தியூரான்–ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான்
என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே பொருந்தியிரா நின்றான்
என் சென்னியான்–என்னுடைய தலையிலே உள்ளான்.
‘எங்குமுளன் கண்ணன்‘ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளாலும் நலிந்த இரணியாசுரனுடைய
முரட்டுடலைப்பினைந்தொழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும்,
அநாதிகாலமாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும்,
உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்த் திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற
ஸ்ரீஹஸ்திகிரி க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிராநின்றான், அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின் மீதும்
வந்து சேர்ந்து மகிழ்விக்கின்றான் காண்மின் என்கிறார்.
திருவாய்மொழியில் “இவையு மவையு முவையும்“ என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தம்முடைய ஒவ்வொரு அவயவத்திலும்
எம்பெருமான் வந்து சேர்ந்ததாக அநுஸந்தித்ததுபோலவே இப்பாட்டிலும் அநுஸந்தேயம்,
நெஞ்சு, தலை என்ற இரண்டிடங்களை மாத்திரம் சொன்னது மற்ற ஒக்கலை, கண், மார்பு, தோள் முதலிய அவயவங்கட்கும் உபலக்ஷணமென்க.
ஸ்ரீஹஸ்திகிரியின் கீழே நரஸிம்ஹ மூர்த்தியாக ஸேவை ஸாதிக்கும் பெருமானைத் தானவனை
வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் என்றதனால் மங்களாசாஸநம் செய்கிறாரென்னலாம்.
முன்னம் சேயூழியான் – ‘சேய்‘ என்றது வெகுதூரம் என்றபடி. ஊழியாவது காலம்.
முன்னமே பிடித்து வெகுதூரமான காலத்திலு உள்ளான் எனவே, அநாதிஸித்தன் என்றதாம்.
ஊழி பெயர்த்தான் –இங்கும் ஊழியென்று காலத்தைச் சொல்லுகிறது. பரமபதமாகிய நித்யவிபூதியில் காலமென்பது கிடையாது,
அஃது உள்ளது இவ்விபூதியில் மாத்திரமே ஆகவே, இங்குக் காலத்தைச்சொன்னது மற்றும் இவ்விபூதியிலுள்ள வஸ்துக்களையெல்லாம் சொன்னபடி.
பெயர்த்தல் – உண்டாக்குதல். “உலகேத்து மாழியான்“ என்பதற்கு –உலகம் புகழும் திருவாழி யாழ்வானையுடையவன் என்றும் பொருள்கொள்ளலாம்.
அத்தியூரான் – ‘ஹஸ்தி‘ என்னும் வடசொல் அத்தியெனத்திரியும். ஹஸ்திக்ஷேத்ர மென்றபடி.
ஹஸ்திகிரி மஹாத்மியத்தில் முதலதயாயத்திற் சொல்லப்பட்டுள்ளமை காண்க. பண்டு இந்த க்ஷேத்ரத்தல் திக்கஜங்கள் வந்து
‘எம்பெருமானை ஆராதித்தமையால் அதுபற்றி ஹஸ்திகிரி யென்று திருநாம்மாயிற்றாம். மற்றும் சில வகையாகவும் நிர்வஹிப்பதுண்டு.
————————————————————————–
தென்னத்தியூரரான போருளாளப் பெருமான் மங்களாசாஸநம் செய்தருளு மிப்பாசுரத்தில் ‘புள்ளையூர்வான்‘ என்று
ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளவேதான் இப்பெருமானுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடங்கி
இருங்கடலளவும் பிரஸித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர்.
அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-
பதவுரை
புள்ளை ஊர்வான்–பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு நடந்து மவனும்
அணி மணியின் துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான்–அழகிய மாணிக்கங்களோடு கூடினவனாய்
படப்பொறிகளை யுடையனான ஆதிசேஷன் மேல் பள்ளி கொள்பவனும்
முத்தீ ஆவான்–மூன்று அக்நிகளாலே ஆராதிக்கப்படுகிறவனும்
மறை ஆவான்–வேதங்களால் பிரதிபாதிக்கப்படுகிறவனும்
மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் இறை ஆவான்–பெரிய கடலில் நின்று உண்டான விஷத்தை
உட்கொண்டவனான ருத்ரனுக்கும் ஸ்வாமியாயிருப்பவனுமான
எங்கள் பிரான்–எம்பெருமான்
அத்தியூரான்–ஸ்ரீஹஸ்திகிரியிலே எழுந்தருளி யிருக்கிறான்.
நாகத்தின்மேல் துயில்வான் –திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்ரீஹஸ்திகிரியிலும்
ஸேவை ஸாதித்தருள்வதாக அநுஸந்திக்கிறார். இந்த விசேஷணம் கூரத்தாழ்வான் திருவுள்ளத்திலே புகுந்திருந்து,
வரதராஜஸ்தவத்தில் “நீலமேக நிபம்“ என்னும் ச்லோகத்தில் ‘அநந்தசயம் த்வாம்‘ என்றருளிச் செய்வதற்குக் காரணமாயிற்றென்க.
என்ற வேதாந்த தேசிக திவ்யஸூக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு.
துத்தி –படங்களிலுள்ள பொறி, இலக்கணையால் படத்தையும் சொல்லுமென்ப.
“முத்தீ மறையாவான்“ “முத்தி மறையாவனா“ என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீ ஹோமம் செய்யும் முகத்தாலே
ஆராதிக்கப்படுகவனும் வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனுமான பெருமான் என்க.
அன்றியே, த்ரேதாக்நிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுமவன் என்றுமாம்.
இனி, “முத்திமறையாவான்“ என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிக்கின்ற வேதங்களாலே சொல்லப்படுமவன் என்கை.
கால் இல்லா யானை மேல் பறந்து காட்டி விரோதிகளை நிரசித்த ஐதிக்யம் –
ஏகாம்பரர் கோயிலில் முன்பே -இன்றும் யானை வாகன ஏசல் கண்டு அருளுகிறார்
யானை வாஹனத்துக்கு கால் இல்லை இங்கு
————————————————————————–
எம்பெருமானே! என்போன்ற அடியார்களை விஷயீ கரிப்பதற்காகவன்றோ திருக்குடந்தையிலே
வந்து சாய்ந்தருளா நின்றாய் என்கிறார்.
‘கும்பகோணம்‘ என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் குடமூக்கு என்பதாம்.
(கும்பம் –குடம், கோணம் –மூக்கு) இல் –க்ருஹம்.
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ
செங்கண் நெடுமால் திரு மார்பா -பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் பாம்பணை மேல் சேர்ந்தாய்
குட மூக்கில் கோயிலாகக் கொண்டு–97-
பதவுரை
செம் கண் நெடுமால்–சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வேச்வரனே!
திருமார்பா-பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!
இமையோர் தலை மகன் நீ–நித்யஸூரிகளுக்குத் தலைவனான நீ
எங்கள் பெருமான்–எங்களுக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
குடமூக்கு இல்–கும்பகோண க்ஷேத்ரத்தை
கோயில் ஆ கொண்டு–கோயிலாகத் திருவுள்ளம்பற்றி
பொங்கு படம் மூக்கின்–விகஸித்தபடங்களையும் மூக்கையுமுடையவனும்
ஆயிரம் வாய்–ஆயிரம் வாயையுடையவனுமான
பாம்பு–ஆதிசேஷனாகிற
அணை மேல்–படுக்கையின் மீது
சேர்ந்தாய்–பள்ளி கொண்டருளினாய்.
————————————————————————–
தம்மை விஷயீகரித்த எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை அநுபவிக்கிறார்.
கொண்டு வளர்க்கக் குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்கக் கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி என்நெஞ்சம்
இடமாகக் கொண்டவிறை-98-
பதவுரை
கோவலன் ஆய்–இடையனாய் வந்து பிறந்து
குடம் கொண்டு ஆடி–குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)
என் நெஞசம் மேவி–என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி
இடம் ஆக கொண்ட இறை–(எனது நெஞ்சையெ) நித்ய வாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி
கொண்டு வளர்க்க–சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான
குழவி ஆய்–சிறுகுழந்தையாய்
தான் வளர்ந்தது–தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே
உலகு ஏழும்–ஸப்த லோகங்களும்
உள் ஓடுங்க–தன்னுள்ளே ஒடுங்கும்படி
உண்டது!–உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)
இடையனாய் வந்து பறந்தருளி அந்த ஜாதியின் மெய்ப்பாட்டுக்காகக் குடக்கூத்தாடி அதனாலுண்டான சிரமந்தீர
என்னெஞ்சிலேவந்து இளைப்பாறு மெம்பெருமான், முன்னே செய்தவொரு அற்புதச்செயலை என்னவென்று சொல்லுவேன்,
அது யாதெனில், மிகச்சிறிய குழந்தையாக இருக்கும் பருவத்திலே ஏழுலங்களும் தனது சிறிய திருவயிற்றிலுள்ளே
ஒடுங்கும்படி செய்த விசித்திரம். இவன் வளர்ந்ததோ கொண்டு வளர்க்கக் குழவியாய்,
உண்டதோ உலகேழுமுன்ளொடுங்க, இது என்ன மாயம்.
ஸ்வாதீநமாக ஒருகாரியமும் செய்யமுடியாத மிகச்சிறிய குழந்தைப்பருவம் என்று காட்டுதற்காகக்
கொண்டு வளர்க்கக் குழவியாய் என்றது
குடமாடி – தலையில் அடுக்குக்குடமிருக்க, இருதோள்களிலும் அங்ஙனே அடுக்குக்குடமிருக்க இவை சிறிதும்
சலியாதபடி இரண்டுகைகளாலும் குடங்களை மாறிமாறியெறிந்து ஆடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும்.
‘கோபாலன்‘ என்பது கோவலனாயிற்று.
————————————————————————–
எம்பெருமான் செய்தருளின அவதாரங்கள் பலபல கிடந்தாலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் க்ருஷ்ணாவதாரத்திலுமே
இவ்வாழ்வார் திருவுள்ளம் மிக ஈடுபட்டிருக்குமென்பது சாத்துப் பாசுரமாகிய இப்பாட்டிலும் மேற்பாட்டிலும் விளங்கும்.
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ -அறை கழல
சேவடியான் செங்கண் நெடியான் குறளுருவாய்
மாவலியை மண் கொண்டான் மால் –99-
பதவுரை
இமையோர்–(பிரமன் முதலான) தேவர்கள்
எம்பெருமான்–‘எம்பெருமானே!‘ (எங்கள் விஷயத்தில்)
இறை–கொஞ்சம்
அருள் என்று–கிருபை பண்ண வேணும் என்று சொல்லி
முறை நின்று–அடிமைக்கு ஏற்ப நின்று
மொய் மலர்கள்–அழகிய புஷ்பங்களை
தூவ–பணிமாறும்படியாக,
அறை கழல சே அடியான்–ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய திருவடிகளை யுடையவனும்
செம் கண்–செந்தாமரைக் கண்ணனும்
நெடியான்–எல்லாரிலும் மேம்பட்டவனுமான
மால்–திருமால்
குறள் உரு ஆய்–(மாவலி பக்கல்) வாமந ரூபியான் வந்து தோன்றி
மா வடிவின்–பெரிய வடிவினாலே
மண் கொண்டான்–பூமியை அளந்து கொண்டான்.
உலகங்களை வியாபிக்கும்போது ஓங்கிவளர்ந்த திருவடியைக் கண்டு அதற்குமுன் அஹங்காரிகளாயிருந்த
தேவர்களெல்லாரும் ‘ஸ்வாமிந்! எமக்கு சிறிது அருள் புரியவேணும்‘ என்று இரந்து புஷ்பங்களை ஸமர்ப்பித்து
வழிபாடுகள் செய்தமை முன்னடிகளின் கருத்து.
இப்படி தேவர்களெல்லாரும் ஆச்ரயிக்கும்படியாக எம்பெருமான் உலகளந்தான் என்று சொல்லிவிட்டதானது –
அத்திருவடிகளே நமக்கும் ஆச்ரயணீயம் என்றபடி.
————————————————————————–
அமுதம்போன்ற பல விளிகளாலே எம்பெருமானை யழைத்து “என்றனளவென்றால் யானுடையவன்பு“ என்று
சொல்லித் தலைக்கட்டுகிற இவ்வாழ்வாருடைய கருத்து யாதெனில், பிரானே! பிரயோஜநாந்தரங்களை விரும்புகின்ற
தேவர்களுக்கு நீ படாதன்பட்டு உடம்பு நோவக் காரியங்கள் செய்தான், எனக்காக அப்படி ஒருகாரியமும் செய்யவேண்டா,
என்னால் தாங்கமுடியாதபடி வளர்ந்து செல்லுகிற எனது காதலை அடக்கித் தந்தாயாகில்
இதுவே எனக்குப் பாமோபகாரம் செய்ததாகும் என்கை. இதனால், பகவத்விஷயத்தல் தமக்கு அளவுகடந்த அன்பு
விளைந்திருக்கும்படியைச் சொல்லி, இப்பிரபந்தம் கற்பார்க்கும் இப்படிப்பட்ட அன்பு விளையும் என்று ஸூசிப்பிக்கிறபடி.
மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-
பதவுரை
மாலே–(அடியாரிடத்தில்) வியாமோஹ முள்ளவனே!
நெடியோனே–ஸர்வஸ்மாத்பரனே!
கண்ணனே–ஸ்ரீக்ருஷ்ணனே!
விண்ணவர்க்கு மேலா–நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
வியன் துழாய் கண்ணியனே–அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
மேலால்–முன்னொரு காலத்தில்
விளவின்காய்–விளங்காயை
கன்றினால்–ஒரு கன்றைக் கொண்டு
வீழ்த்தவனே–உதிர்த்துத்தள்ளினவனே!,
யான் உடை– (உன்னிடத்தில்) அடியேன் வைத்திருக்கிற
அன்பு–அன்பானது
என்தன் அளவு அன்று–என்னளவில்அடங்கி நிற்பதன்று.
இப்பாசுரந்தன்னையே திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகத்தில்
“சித்தமும் செவ்வைநில்லாது என்செய்கேன் தீவினை யேன், பத்திமைக்கு அன்புடையேனாவதே பணியாய் எந்தாய்!“
என்று விரித்துரைத்தனர் போலும்.
இஷ்டங்களைக் கொடுப்பதற்கும் அநிஷ்டங்களைத் தவிர்ப்பதற்கும் கடவனான எம்பெருமானே
அன்புக்கு உரியவன் என்று சொல்லிப் பிரபந்தத்தைத் தலைக்கட்டினாராயிற்று.
————————————————————————–
அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக
இன்புருகும் சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் பிரிந்த நான் -1
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply