மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -65-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அம்ருத மதனம் பண்ணின ஆயாசமே யன்றிக்கே
மற்றுள்ள அவதாரங்களிலும்
ஆயாச ஹேதுவான
வியாபாரங்களை
யருளிச் செய்கிறார் –

——————————————————————————

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65-

பதவுரை

அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப்பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்

————————————————————————————
வியாக்யானம் –

அங்கற்கு இடரின்றி –
பிள்ளைக்கு ஓர் இடர் வாராத படி
சிறுக்கனான  ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு
ஒரு துக்கம் வாராத படி
அங்கற் கிடர் இன்றி   -என்ற பாடமாய்த்தாகில் –
அவ்விடத்தில் இடர் தீர -எனபது –

அந்திப் பொழுதத்து –
தேவர்களுக்கு பலம் ஷயித்து
அசுரர்களுக்கு பலம் வர்த்திக்கும்
காலத்திலே-

மங்க விரணியன தாகத்தை –
அவனுக்கு பலம் விஞ்சி இருக்கிற போதிலே
ஆசூர பிரக்ருதியான
ஹிரண்யன் உடைய உடலை
மங்கும் படிக்கு  ஈடாக –

இரணியனதாகம் –
வர பலத்தாலே பூண் கட்டின உடம்பு –
அவனுடைய ஆகமுண்டு -ஹிருதயம் –
அது மங்கும் படி –

பொங்கி –
மகா விஷ்ணும் -என்கிறபடியே -கிளர்ந்து கொண்டு புறப்பட்டு

அரியுருவமாய்ப் –
ஜ்வலந்தம் -என்கிறபடியே
நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –

பிளந்த அம்மான் –
பிளந்து பொகட்ட சர்வேஸ்வரன் ஆனவனே
பிறை எயிற்றன் அடல் அரியாய் பெருகினானை -பெரிய திருமொழி -2-5-8-என்னும்படியே –

அவனே -கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து –
ஒருவர் அளவன்றிக்கே
அனுகூல வர்க்கத்துக்காக வந்த நலிவைப் போக்கினான் –
சினந்து கொண்டு
குவலயா   பீடத்தின் உடைய
கொம்பை முறித்தான் –

காய்ந்து –
சீற்றம் இல்லாதவன் சீறி
அவனே கரியுருவம் கொம்பு ஒசித்தான் -என்கையாலே
ஒருவனுக்கே
இரண்டு உபகாரம் பண்ணினான் -என்னவுமாம் –
இதுவும் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்குச் செய்தது போலே காணும் –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading