மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -64-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவன் தான் –
பிரயோஜனாந்தர பரராய்
தேவதாந்தரரான தேவர்களுக்கும் கூடத்
தன்னை அழித்துத்
கார்யம் செய்து கொடுப்பான் -என்று
அவன் ஸ்வ பாவத்தை அனுசந்தித்து
அவனுக்குப் பரிகிறார்-

——————————————————————————–

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

பதவுரை

இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தரபர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்த்தனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (கிருவூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?

———————————————————————————–

வியாக்யானம் –

இசைந்த வரவும் வெற்பும் கடலும் –
கடலிலே ஒரு மலையை நட்டு
ஒரு பாம்பைச் சுற்றிக்
கடையா நின்றால்
சேராச் சேர்த்தி யாய்   இருக்குமோ என்னில்
தன்னிலே பொருந்தி இருக்கும் –

கயிறாகச் சுற்றிக் கடைகைக்குத் தகுதியான
வாஸூகியும் மத்தாக நட்டுக்
கடைகைக்குத் தகுதியான மந்தரமும்
தாழியாகப் போரும்படியான கடலும் —

பசைந்தங்கு அமுது படுப்ப –
இம் மூன்றையும் கொண்டு
கடலிலே நீர் கோதாகக் கொண்டு
அம்ருதத்தை உத்பதிக்கும் படி
அமுதம் படும்படிக்கு  ஈடாக
பசை கொடுத்துக்
கடைந்தான் ஆயத்து –

அசைந்து கடைந்த வருத்தமோ –
திருமேனி நோவும் படி
ஆயாசித்துக்
கடைந்த வருத்தமோ –
சஞ்சரித்து வ்யாபரிக்கை –

கச்சி வெக்காவில்கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –
திருக் கச்சியிலே
திரு வெக்காவிலே
கண் வளர்ந்து –
அவ்விடம் தன்னிலே
திருப்பாடகத்திலே -இருந்து –
திரு ஊரகத்திலே-நின்றதுவும் –

இப்படி –
நிற்பது
இருப்பது
சாய்வதான
இச் செயல்களை அனுசந்தித்து –
தனித் தனியே கடல் கடைந்து
அத்தால் திரு மேனியில் பிறந்த ஆயாசமோ
இது எல்லாவற்றுக்கும் என்று கொண்டு
அஞ்சுகிறார் –

—————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading