ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -100 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு
நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்

பெறுவதும் அவனையே
பெறுகைக்கு சாதனமும்
அவனே என்று –
அத்யவசித்துப்   போவாய் –
என்கிறார் –

—————————————

ஓரடியும் சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
ஓர் அடியின்–(தனது) ஒப்பற்ற அடி வைப்பினாலே
தாயவனை–லோகங்களையெல்லாம் அளந்து கொண்டவனும்
கேசவனை–கேசியென்னும் அஸுரனைக் கொன்றவனும்
தண் துழாய் மாலை சேர்–குளிர்ந்த திருத்துழாய் மாலையோடு சேர்ந்தவனுமான
மாயவனையே–எம்பெருமானையே
மனத்து வை–மனத்தில் உறுதியாக்க் கொள்வாயாக (இப்படி அவனே உபாயமென்று உறுதி கொண்டால்)
ஓர் அடியும்–உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட ஒரு திருவடியும்
சாடு உதைத்த ஒண்மலர் சேஅடியும்–சகடம் முறிந்து விழும்படி உதைத்த அழகிய பூப்போன்ற திருவடியும் ஆகிய
ஈர் அடியும் காணலாம்–இரண்டு திருவடிகளையும் ஸேவிக்கப் பெறலாங்காண்

—————————————

வியாக்யானம் –

ஓரடியும்-
எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட
ஒரு திருவடிகளும் –

சாடுதைத்த  வொண் மலர்ச் சேவடியும் –
சகடாசூர நிரசனம்  பண்ணின போக்யமான திருவடியும்
ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –

ஈரடியும் காணலாம் என்நெஞ்சே-
அவ்விரண்டு திருவடிகளும்
நமக்குக் காணலாம்
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் –

என் நெஞ்சே –
காண வேணும் என்று இருக்கிற நெஞ்சே
இதுக்கு உபாயம் ஏது என்னில் –

ஓரடியில் தாயவனைக் –
கீழ்ச் சொன்ன சர்வ ஸூலபமான திருவடிகள் இருக்கிறபடி –

கேசவனைத் –
விரோதி நிரசன சீலனானவனை
கேசி ஹந்தா விறே

திருவடிகளைத் தருவானும்
விரோதியைப் போக்குவானும்
அவனே –

தண் துழாய் மாலை சேர் மாயவனையே –
திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனாய்
போக்யதை அளவிறந்து இருந்து உள்ளவனையே
சாதனமாக ஹ்ருதயத்தில் அத்யவசி  –

தண் துழாய் -இத்யாதி
ஸூலபனும் அன்றிக்கே
விரோதி போக்காதே ஒழியிலும்
விடப் போகாது –

மாயவனையே –
நாமும் சஹாகாரிகள் என்று இராதே –
மாயவனை அன்றி வேறு ஒன்றை நினையாத படி பண்ண வல்லவன் –

மனத்து வை –
இப்படி அத்யவசிக்க
அனந்தரம்
பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –

வையம் தகளி  -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம்
பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி
வாழும் அத்தனை
என்கிறார்  –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading