ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -87/ 88 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சர்வேஸ்வரன் இப்படி வந்து சந்நிஹிதன் ஆன பின்பு இனி நரகத்துக்கு ஆள் கிடையாது
அவ்வோ விடங்களுக்குக் கடவார் வாசல்களை யடைத்து ஓடிப் போக வமையும் -என்கிறார் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை -என்னுமா போலே –

இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித்தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —87–

பதவுரை

கனி சாய-விளாம்பழம் உதிர்ந்து விழும்படி
கன்று–வத்ஸாஸுரனை
எறிந்த–எறி தடியாக எடுதெறிந்து இரண்டசுரரையும் முடித்த
தோளான்–திருத் தோள்களை யுடையவனான ஸர்வேஸ்வரனுடைய
கனை கழலே–ஆபரண த்வநியை யுடைய திருவடிகளை
கண்பதற்கு–ஸேவிப்பதற்கு ஸாதநம்
(அவன் உகந்து வாழ்கிற திருக்கோவலூர்க்கு ஸமீபமான இடத்தில் வஸிப்பது தானென்று)
நன்கு–நன்றாக
அம் நாவல் சூழ் நாடு–அழகிய ‘ஜம்பூ’ என்று பேர் படைத்த பரந்த த்வீ பத்திலுள்ள பிராணிகள்
அறிந்த–அறிந்து விட்டன;
(இப்படியானபின்)
எழு நரகம் வாசல்–ஏழு வகைப் பட்ட நரகங்களின் வாசல்களிலே
இனி–இனி மேல்
புகுவார் ஆர்–பிரவேசிப்பவர் யாவர்?
(ஒருவருமில்லை)
(ஓ யம கிங்கரர்களே!)
முனியாது–(உங்கள் ஸ்தானத்துக்கு அழிவுண்டாவதாகச் சொல்லுகிற என் மேல்) கோபங்கொள்ளமல்
மூரி தாள் கோமின்–(இனி ஒருகாலும் திறக்க முடியாதபடி) பெரிய தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டுங்கோள்

இனியார் புகுவார் எழு நரக வாசல் –
எழு நரக வாசல் –இனியார் புகுவார் –
எழு வகைப் பட்டிருந்த நரக வாசல் இனி யார் போய்ப் புகுவார் –
இனி நரக விசேஷங்களும் பாப விசேஷங்களும் கொண்டு கார்யம் யுண்டோ —
ஒருவன் சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-என்று நிற்கச் செய்தே –

அன்றிக்கே
எழுகிற நரக வாசல் யுண்டு -எல்லோரும் போய்ப் புகுகிற நரக வாசல் என்னுதல்-
ஆழ்வார்கள் திருவவதாரம் பண்ணின பின்பு பழைய சம்சாரம் அன்று என்கை-

முனியாது-
யம படருடைய கோபத்துக்கு இனி பலம் இல்லை -என்கிறது –
எங்கள் பதத்துக்கு அழிவு சொல்லுவதே என்று பொடியாதே –
முனிந்தார்கள் ஆகில்
யம படர் கன்றும் விளாவும் பட்டது படும் அத்தனை –

மூரித்தாள் கோமின் –
பெரும் தாளைப் பூட்டுங்கோள்-
அதுக்கடி இன்னம் ஒருகால் திறக்கும் என்னும்படி இருக்கில் இறே
எளிதாகக் கோர்க்க வேண்டுவது –

கனிசாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு –
கனிகள் உதிரும்படிக்கு ஈடாகக் கன்றை எறிந்த தோளை உடையவனானவனுடைய
ஆபரணத்தால் வந்த த்வனியை
யுடைத்தான திருவடிகளைக் காண்பதற்கு –
அதாகிறது –
இலக்கைக் குறித்து எறிகிற போது மாறியிட்ட திருவடிகளில்
வீரக் கழல் த்வநிக்கிற படி –

நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு —
நாவலம் சூழ் நாடு நன்கறிந்த –
ஜம்பூத் வீபமானது விரோதி நிரசன சீலனானவன் திருவடிகளை அழகிதாக அறிந்தது –
அதாகிறது –
திருக் கோவலூரோடு சூழ்ந்த பூமியை விட்டு அவ்வருகே போவோம் என்று இரார்கள் போலே
ஏக தேச வாசத்தால் வந்த சம்பந்தமே அமையும் இறே ரஷிக்கைக்கு –
பவத் விஷய வாஸின-
திருக் கோவலூர் உப லஷணம்-உகந்து அருளின தேசங்கள் அடைய நினைக்கிறது –

நாவலம் சூழ் நாடு –
ஆழ்வார்களும் அருளிச் செயல்களும் நடையாடின இடமே நாட்டுக்கு உடல் என்று இருக்கிறார் –

—————————-

அவதாரிகை –

கீழே -நன்கறிந்த நாவலம் சூழ் நாடு -என்றாரே
அதாகிறது –
திருக் கோவலூருக்கு உட்பட்ட பூமிக்கு உள்ளே கிடந்தமையைக் கொண்டு இறே

அத்தை நாடும் அறிந்து பற்றப் பெற்றது இல்லை
அவன் படிக்கு இஸ் சம்சாரிகள் படியைப் பார்த்தால்
யமனுக்கும் அவகாசம் உண்டாய் இருந்தது

தேன மைத்ரீ பவது தே -சுந்தர -21-20-
அனந்தரம்
தம்மைப் பார்த்து
நாடு செய்தபடி செய்ய
நாம் முந்துற முன்னம்
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் -திருவாய்மொழி -1-2-8-என்கிறபடியே
என்னுடைய கரணங்கள் மூன்றையும் கொண்டு இங்கே
ப்ரவணனாகப் பெற்றேனே -என்கிறார்

வழி பறிக்கும் நிலத்திலே -தம் தாம் கையிலே தனம் கொண்டு தப்புவாரைப் போலே
என்னுடைய மநோ வாக் காயங்கள் மூன்றுக்கும் விஷயம் இங்கே யாகப்  பெற்றேனே
என்கிறார் –

——————————————

நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும்
பாடிலும்  நின் புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு –88-

பதவுரை

நாடிலும்–(மனத்தினால்) தேடும் போது
நின் அடியே–உனது திருவடிகளையே
நாடுவன்–தேடுவேன்;
நாள் தோறும்–எப்போதும்
பாடிலும்–வாய் விட்டு ஏதாவது சொல்லும் போதும்
நின் புகழே–உனது புகழ்களையே
பாடுவன்–பாடுவேன்;
சூடிலும்–ஏதாவது தொன்றைத் தலையில் அணிவதாயிருந்தாலும்
பொன் ஆழி ஏந்தினான்–அழகிய திருவாழியைத் தரித்து கொண்டிருக்கின்ற உன்னுடைய
பொன் அடியே–அழகிய திருவடிகளையே
சூடுவேற்கு எனக்கு–சிரோ பூஷணமாகக் கொள்பவனான எனக்கு
என் ஆகில் என்–எது எப்படியானாலென்ன?

————————————

வியாக்யானம் –

நாடிலும் நின்னடியே நாடுவன் –
நெஞ்சைக் கொண்டு தேடும் இடத்திலும்
உன் திருவடிகளையே தேடுவன் –

நாடோறும் பாடிலும்  நின் புகழே பாடுவன் –
நித்யமாக ஸ்தோத்ரம் பண்ணும் இடத்திலும்
தேவருடைய புகழே ஸ்தோத்ரம் பண்ணா நிற்பன் –

இவை தானே பிரயோஜனமாக -என்கிறது –
ஏவ காரத்தாலே –

சூடிலும்  பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு –
நான் என் தலையாலே தரிக்குமவையும்
தர்ச நீயமான திருவாழியை ஏந்தின சர்வேஸ்வரனான
உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான
திருவடிகளையே தரிக்கக் கடவேனான -எனக்கு –

என்னாகில் என்னே எனக்கு –
இங்கே தாகில் என்
பரம பதத்திலே போனாலும் மநோ வாக் காயங்கள் அங்கே
ப்ரவணமாகை இறே செய்வது

அது இங்கே பெற்றேனாகில்
எனக்கு எங்கே இருக்க நல்லது -என்றதாகவுமாம் –

அன்றிக்கே
நாட்டார்க்காக இருந்து வ்யசனப் பட்டால் பிரயோஜனம் உண்டோ
அறிந்தார்கள் ஆகில் இந்த லாபத்தைப் பெறுகிறார்கள்
அறிந்திலர்கள் ஆகில் இந்தப் பேற்றை இழக்கிறார்கள்

பேறு அவனாலே ஆனவோபாதி
இழவும் தம்மாலே யாவும் கடவது இறே

நான் முன்னம் திருக் கோவலூர் இங்கே யாகையால் உள்ள பிரயோஜனம்
கொள்ளப் பெற்றேன் ஆகிறேன்

நாட்டை நம்மால் திருத்தலாய் இருந்ததோ
நமக்கு இந்நன்மை உண்டாகப் பெற்றோமே என்னும்
லாபத்தோடு தலைக் கட்டுகிறார் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading