ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -79 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆஸ்ரிதருக்காக   தன்னை அழிய மாறி
மேல் விழுந்து கார்யம் செய்யும் ஸ்வபாவன் என்று  இறே
சொல்லிற்றே நின்றது –

அது பின்னை எங்கே கண்டோம் அவனுக்கு -என்னில்
ஒருத்தனுக்காகத் தன்னை இரப்பாளன் ஆக்கிக்
கார்யம் செய்திலனோ
என்கிறார் –

—————————————

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண்டா வென விரந்து மாவலியை ஒண்டாரை
நீரங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில்
ஆரங்கை தோய வடுத்து  –79-

பதவுரை

மண் தா என மாவலியை இரந்து–(‘மூவடி) நிலத்தை எனக்குத் தா’ என்று மாவலியிடத்தில் யாசித்து
(அவனும் மறுக்க மாட்டாமல் அப்படியே உனக்குத் தந்தேனென்று தாரை வார்க்க)
ஒண் தாரை நீர்–அழகிய அந்த நீர்த் தாரை
அம் கை–(தனது) அழகிய திருக்கையிலே
தோய–வந்து விழுந்ததும்
நீள் விசும்பிலார்–பரம்பின மேலுலகத்தில் வாழ்கின்ற ப்ரஹ்மாதிகளுடைய
அம் கை–அழகிய கைகள்
தோய்–ஸ்பர்சித்துத் திருவடி விளக்கும்படி
அடுத்து நிமிர்ந்திலையே–கடுக ஓங்கி வளர வில்லையோ?
(இப்படி தன்னதான வஸ்துவைக் கொள்வதற்கும் தன்னை அழிய மாறி வந்து)
கொண்டானை–தன்னதாக்கிக் கொண்ட எம்பெருமானைப்
அல்லால்–பழிக்கிறார்களே யன்றி
கொடுத்தாரை யார் பழிப்பார்–(தன்னதல்லாத்தைத் தன்னதாக அபிமானித்துக்) கொடுத்த
அந்த மாவலியைப் பழிப்பார்கள் யாருமில்லையே! (இஃது என்ன அநியாயம்!)

——————————–

வியாக்யானம் –

நீ செய்த செயலை அனுசந்தித்து நாட்டார்   உன்னைக் கொண்டாடும்படி தான் செய்தாயோ –
குணமே குற்றமாய்க் குற்றமும் குணமாம் கிடீர் சம்சாரம் –
தன்னைதான பூமியை அவனதாக மேல் எழுத்து இட்டு
அவன் கொடுத்தானாக இவன் கொண்டத்தை
தன் கையிலே நீர் வார்த்தவனைப் பாதாளத்திலே  தள்ளினான் என்று பழி சொல்லா நிற்பார்கள் –

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் –
மகா பலி யாகிறான் ஆசூர ப்ரக்ருதியாய் –
ஈஸ்வர விபூதியைத் தன்னதாக அபிமானித்து
நிரசிக்க ஒண்ணாதபடி ஔதார்யம் என்பதொரு
குணத்தை ஏறிட்டுக் கொண்டு இருந்தான் –

இவன் கையிலே விபூதி கிடக்கும் அன்று அனுகூலர் நெருக்குண்பர்கள்
ஆனால் அவன் இட உகக்குமாகில்
நாம் பெற்றால் ஆகாதோ என்று தன்னைக் குறைய விட்டுச் சென்று அர்தித்தான் ஆயிற்று –

நாட்டார் இவற்றை ஒன்றையும் அனுசந்தியாதே
அவனை வஞ்சித்துக் கொண்டான் கிடீர் என்று பழி சொல்லா நிற்பார்கள்

இனி ஆராய்ந்து பார்த்தால்
நெல் வாலிலே வைத்து தெறிக்க வேண்டுவது மகா பலியை யாய்த்து
ராவணணோபாதி வத்யனாய்த்து
அதாகிறது
அஸ்வாமி விக்ராயம் பண்ணக் கடவன் அல்லன்
அவனதான ஆத்மாவை அவன் பக்கலிலே சமர்ப்பித்தால்
அநந்தரம் அனுதாபம் விளைந்து
அதவா  கிந்னு சமர்பயாமி தே-ஸ்தோத்ர ரத்னம் -53-என்னக் கடவது இறே
அங்கன்  அன்றிக்கே
கொடுத்த பின்பும் –
தன்னத்தையே கொடுத்ததாக நினைத்து இருந்தான்

கொண்டாரை என்று பாடமான போது-
பிரயோஜனத்தைச் சொல்லிற்று ஆகிறது –

மண்டா வென விரந்து மாவலியை –
தன்னைதான ஜகத்திலே
ஏக தேசமான மண்ணை
மகாபலி பக்கலிலே சென்று
தர வேணும் என்று அபேஷித்தான் ஆயிற்று –

ஒண்டாரை நீரங்கை தோய நிமிர்ந்திலையே –
ஒள்ளிய தாரையின் நீரானது கொடுத்து வளர்ந்த அழகிய கையிலே வந்து
விழும் காட்டில்
ஆசூர பிரக்ருதியானவன் மறு மனஸ்ஸூப் படில் செய்வது என்-என்று
சிவிட்கு என வளர்ந்தான் ஆயிற்று
அலாப்ய லாபம் பெற்றால் போலே
வர்ஷேண  பீஜம் பிரதி சஞ்ஜ ஹர்ஷா – சுந்தர -29-6-என்னுமா போலே
நீர் விழும் காட்டில் வளர்ந்ததிலையோ –

அப்போது –
நீள் விசும்பில் ஆரங்கை தோய வடுத்து  –
அளவுடைத்தான ஆகாசத்தில் ஆரமும் கையும் சேரும்படி கிட்டி -என்னுதல்-

அன்றிக்கே
நீள் விசும்பிலார் அழகிய கைகளைக் கொண்டு ஸ்பர்சிக்கும் படிக்கு ஈடாக கிட்டி -என்றுமாம்

தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம்  சிவந்த தன் கை யனைத்தும்
ஆரக் கழுவினான் -இரண்டாம் திரு -78-என்னக் கடவது இறே –

அன்றிக்கே
நீள் விசும்பு ஆரங்கை எடுத்து ஆஸ்ரயிக்க நிமிர்ந்திலையே -என்னவுமாம் –

நீரங்கை தோய நிமிர்ந்திலையே –
திருக் கையிலே நீரும் திருவடிகளிலே
நீரும் ஒக்க விழுந்தது

ஸ்வரூப ஜ்ஞானம் வேண்டா கிடீர்
இந்தச் செயலைக் காண வமையும் கிடீர்
நமக்கு ஸ்ரோத்ராதிகள் உண்டாகைக்கு –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading