ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -71 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நாட்டார் செய்த படி செய்கிறார்கள்
நெஞ்சே
நீ இவ் விஷயத்தை விடாதே கிடாய்
என்கிறார்

வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்
புயல் மேகம் போல் திரு மேனி யம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ? –திருவாய் மொழி -8-10-2-இத்யாதிப் படியே

ஐஸ்வர்ய கைவல்யங்களில்  புகாதே
அவன் தன்னையே பற்று
என்கிறார் –

————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி நான் கூழி
நின்று நிலமுழுது மாண்டாலும் -என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய்
அடலாழி கொண்டான் மாட்டன்பு —–71–

பதவுரை

ஆழி நெஞ்சமே–(எம்பெருமானிடத்தில்) ஆழ்ந்திருக்கிற நெஞ்சே!
பிணி–வியாதியையும்
மூப்பு–கிழத் தனத்தையும்
நன்று கை அகற்றி–நன்றாக [ அடியோடு தொலைந்தொழியும்படி] விட்டும் [கைவல்ய மோஷத்தைப் பெற்றாலும்]
நான்கு ஊழி–நான்கு யுகங்களிலும் [காலமுள்ள வரையுலும்]
நின்று–ஸ்திரமாக இருந்து
நிலம் முழுதும் ஆண்டாலும்–பூமி தொடங்கிப் பிரமலோகம் வரையுள்ள இந்த அண்டைஸ்வரியங்கள்
முழுவதையும் ஸ்வாதீனமாய் நிவகிக்கப் பெற்றாலும்
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு–தீக்ஷ்ணமான திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் ப்ரீதீயை
விடல்–விடாமலிரு;
வேண்டினேன்–உன்னைப் பிரார்த்திக்கின்றேன் காண்.

—————————————————————–

நன்று பிணி மூப்புக் கையகற்றி
இத்தால் கைவல்யத்தைச் சொன்னபடி –
அழகிதாக வியாதி தொடக்கமான வற்றை எல்லாம்
கை கழல விடுவது –

நான்கு ஊழி நின்று நிலமுழுது மாண்டாலும் –
கால தத்வம் உள்ளதனையும் நின்று
பூமிப் பரப்பை ஆளப் பெறுவது

இத்தால்
ப்ரஹ்மாதி களுடைய ஐஸ்வர்யத்தைச் சொன்ன படி
கீழ்ச் சொன்ன கைவல்யத்தோடே
இவ் வைஸ்வர்யத்தைப் பெற்றாலும் –

என்றும் விடல் –
ஒரு நாளும் விடாதே கொள்-

ஐஸ்வர்யம் நிலை நில்லாதது
கைவல்யம் பகவத் கைங்கர்யத்தைப் பார்க்க அல்பம்

ஆகையாலே
இரண்டையும் சேர்த்துச் சொல்லுகிறது

இவை நன்றான வன்றும்
விடுகைக்கு -அவன் அல்லாமையும்
பற்றுகைக்கு அவனாகையும் அமையும் –

ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் –
பால் குடிக்க இரக்கிறேன் இறே

நீ முற்பட்டு இருக்க
உன்னை இரக்கிறேன் இறே –

அடலாழி கொண்டான் மாட்டன்பு விடல் –
கைக் கூலி கொடுத்துப் பற்ற வேண்டும் விஷயம்
பிரதி பஷத்தின் மேலே சினந்து வாரா நின்றுள்ள
திரு வாழியைக் கையிலே யுடையவன் பக்கல் உண்டான
ஸ்நேஹத்தை விடாதே ஒழிய வேணும்

எனக்கும் உபதேசிக்க வல்ல
அளவுடைய நெஞ்சே   –

—————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading