ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -63 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி இருக்கிற சௌகுமார்யம் பாராதே
ஆஸ்ரித விஷயத்திலே தன்னை அழிய மாறியும்
கார்யம் செய்யும்படியான அவன் பக்கலிலே என்னுடைய
சகல இந்த்ரியங்களும் பிரவணம் ஆய்த்தின
நானும் பிரவணன் ஆனேன்
என்கிறார்-

——————————————————–

தோளவனை யல்லால் தொழா என் செவி யிரண்டும்
கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் -நா நாளும்
கோணா கணையான் குரை கழலே கூறுவதே
நாணாமை நள்ளேன் நயம்  ——-63-

பதவுரை

தோள்–(எனது) கைகளானவை
அவனை அல்லால் தொழா–(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்)
அப் பெருமானை யல்லது வேறு எவரையும் வணங்க மாட்டா;
என் செவி இரண்டும்–எனது காதுகளிரண்டும்
கேள் அவனது–ஸகல வித பந்துவுமாகிய அப் பெருமான் விஷயமான
இன்மொழியே–இனிய பேச்சுக்களையே
கேட்டு இருக்கும்–கேட்டுக் கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;
என் நா–என்னுடைய நாவானது
நாளும்–நாள் தோறும்
கோள் நாக அணையான்–மிடுக்கை யுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய அப்பெருமானது
குரை கழலே–ஒலிக்கின்ற வீரக் கழலை யணிந்த திருவடிகளையே
கூறுவது–சொல்லா நிற்கிறது
(இப்படியான பின்பு)
நயம்–சப்தாதி விஷயங்களை
நாணாமை நள்ளேன்–வெட்கப்படாமல் விரும்புவாரைப் போலே நான் விரும்ப மாட்டேன்.

——————————————————————————-

வியாக்யானம் –

தோளவனை யல்லால் தொழா –
நான் வேறு ஒன்றைத் தொழச் சொன்னாலும்
என் தோளானது அவனை யல்லது
தொழுகிறது இல்லை
அவன் ரஷகன் ஆகவுமாம் -தவிரவுமாம்  -அவனை யல்லது தொழாது –

என் செவி யிரண்டும் கேள்வன தின் மொழியே கேட்டிருக்கும் –
என்னுடைய செவிகள் இரண்டும்
கேள்வன ஆனவனுடைய இனிய மொழியே கேட்டு இருக்கும்

நிருபாதிக பந்துவானவன் உடைய
இனிய பேச்சைக் கேட்டு
அத்தாலே தரித்து இருக்கும் –

நா நாளும் –
நா வானது எப்போதும் –
கோணா கணையான் குரை கழலே கூறுவதே  –

கோள் நாகணையான் –
மிடுக்கை யுடையவன் -என்னுதல்
ஒளியை யுடையவன் -என்னுதல்
பிராட்டியும் அவனுமான போதைக்கு
தாரண சாமர்த்தியத்தை யுடையவன் -என்னுதல் –
ப்ரக்ருஷ்ட விஜ்ஞானபலை கதாமதி -ஸ்தோத்ர ரத்னம் -39-
அவனோட்டை சம்ச்லேஷத்தால் வந்த புகரை உடையவன் -என்னுதல்
அப்படிப்பட்ட திரு வநந்த வாழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வேஸ்வரன் உடைய திருவடிகளையே கூறுவதும்

நாணாமை நள்ளேன் நயம்  –
நாட்டார் சப்தாதி விஷயங்களை விரும்பிவது நிர் லஜ்ஜராய் கொண்டாய்த்து
அப்படியே நானும் நிர் லஜ்ஜனாய்க் கொண்டு அவற்றைச் செறியேன்

ஜ்ஞானம் பிறந்த பின்பு லஜ்ஜித்து மீள வேண்டும்படியால் இறே –
விஷய ப்ராவண்யம் தான் இருப்பது
குருட்டு நிலாவிலே ஆண் பிள்ளைச் செற்றாழ்வியை -அலியை -ஸ்திரீ என்று தொடர்ந்து
திரிந்த மாத்ரமாய் இருக்கும் இறே –

——————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading