ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -53 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கார்ய காலத்திலே வந்து –
பிரயோஜனங்களைக் கொண்டு போகை யன்றிக்கே –
கைங்கர்யமே ஸ்வ பாவமாக உடையராய் இருக்குமவர்கள்
அவன் பக்கல் பரிமாறும்படி சொல்லுகிறது –

எல்லா நேர்த்தியும் நேர்ந்து –
தங்களுக்கு உறுப்பாக ஆஸ்ரயிக்குமவர்களைச் சொல்லிற்று
கீழ்

இதில்
தங்களை எல்லாம் அழிய மாறியும் அங்குத்தைக்கு
உறுப்பாம் அவர்களைச் சொல்லுகிறது –

————————————

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள் கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம் பட்டாம் புல்கு
மணையாம்  திருமாற் கரவு –53-

பதவுரை

திரு மாற்கு–பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு
அரவு–திருவனந்தாழ்வான்,
சென்றால் குடை ஆம்–(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;
இருந்தால்–எழுந்தருளியிருந்தால்
(அப்போது)-
சிங்காசனம் ஆம்–ஸிம்ஹாஸாமாயிருப்பன்;
நின்றால்–நின்று கொண்டிருந்தால்
(அப்போது)
மரவடி ஆம்–பாதுகையாவன்;
நீள் கடலுள்–பரப்பை உடைத்தான கடலிலே
(சயனிக்கும் போது)
என்றும்–எப்போதும்
புணை ஆம்–திருப் பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம்–மங்கள தீபமாவன்;
பூம்பட்டு ஆம்–அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம்–தழுவிக் கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

——————————————————————————–

வியாக்யானம் –

சென்றால் குடையாம் யிருந்தால் சிங்காசனமாம் –
அவ்வோவபேஷித சமயங்களிலே
அதுக்கு ஈடான வடிவுகளைக் கொண்டு அடிமை செய்யும் படியைச் சொல்லுகிறது –

நான் குடையாக நின்றேன் வந்து ஒதுங்கு -என்கை யாகிறது –
சேஷத்வ விரோதி -இறே

எங்கேனும் உலாவும் போதைக்குக் குடையாய் நிற்கை –
கைங்கர்யம் ஸ்வ புத்த்யதீனம் அன்று -என்கிறது
இருப்பு அபேஷிதமான போதைக்கு சிம்ஹாசனமாய் இருக்கும் –

நின்றால் மரவடியாம் –
நிற்கை திரு உள்ளமான போது
பாதுகையாய் இருக்கும்

நின்றால் –
நின்ற பின்பு –

நீள் கடலுள் என்றும் புணையாம் –
பரப்பை உடைத்தான கடலிலே திருக் கண் வளர்ந்து அருளும் போதைக்கு
பள்ளி மெத்தையாய் இருக்கும்

புணை -என்று
தெப்பமுமாம் –

மணி விளக்காம்-
மங்கள தீபம்

அணி விளக்கு -என்று பாடமான போது
அழகிய தீபம் -என்னவுமாம்

ஒரு விளக்காலே ஒரு பதார்த்தத்தை காண வேணும் என்னும் போது
மங்கள தீபமாய் இருக்கும்

பூம் பட்டாம்-
திருப் பரியட்டம் அபேஷிதமான போது
அழகிய பட்டாம்
பும்ஸ்த்வாவஹமாய் இருக்கும் –

புல்கு மணையாம்
சாய்ந்து அருளின போதைக்குத்
தழு வணையாய்  இருக்கும்

பிராட்டிமார் ஊடினால் வ்யசனம் மறப்பிக்க வற்றாகை

ஊடலுக்கு ஹேதுவாஹவுமாம் –
இவனைத் தழு வுவதால் –

இது எல்லாம் ஆர்க்குத் தான் என்னில்
திருமாற்கு
ஒரு மிதுனத்துக்கு
இளைய பெருமாளைப் போலே அந்தரங்க சேவை –

அரவு  –
இது எல்லாம் அழிக்கலாம்-
கட்டிப் பொன் போன்று இருக்கிறபடி –

பிராட்டியும் தானும் கூடத் துகைக்கையால்
ஒரு சேதனன் என்று அவர்கள் கூச வேண்டாத படி
தன்னைத் தாழ விட்டுக் கொண்டு இருக்கும் படி –

ராஜ சந்நிவேசங்களில் கூனர் குறளர் போலே –

இது அங்கு உள்ளார்க்கு எல்லாம் உப லஷணம் –

————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading