ஸ்ரீ முதல் திருவந்தாதி-பாசுரம் -39 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவனது அல்லாத தேசம் உண்டோ –
அவன் ஆஸ்ரித அர்த்தமாகப் பண்ணாத வியாபாரம் உண்டோ
ஆன பின்பு இங்குத்தைக்கு இத்தனை விசேஷம் என்னென்ன

அல்லாத இடங்கள் போல் அன்றிக்கே
இவ் விடம் அவன் விரும்பி நித்ய வாஸம் பண்ணுகிற  தேசம்  –
என்கிறார் –

————————-

இடந்தது பூமி எடுத்தது குன்றம்
கடநதது கஞ்சனை முன்னஞ்ச  கிடந்ததுவும்
நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே
பேரோத வண்ணர் பெரிது-39–

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்–பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்
முன்–முற்காலத்தில்
இடந்தது–(மஹா வராஹமாகிக்) கோட்டார் குத்தி யெடுத்தது
பூமி–பூமியாம்;
எடுத்தது–குடையாக வெடுத்துப் பிடித்தது
குன்றம்–கோவர்த்தன மலையாம்
அஞ்ச கடந்தது–அஞ்சி முடிந்து போம்படி செய்தது
கஞ்சனை–கம்ஸனையாம்;
கிடந்ததுவும்–திருக் கண் வளர்ந்தருளினது
ஓதம் நீர் மாகடல்–பெரு வெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்
பெரிது நின்றதும்–பெருமை யெல்லாம் தோற்ற நின்றது
வேங்கடம்–திருமலையிலாம்.

——————————

வியாக்யானம் –

இடந்தது பூமி எடுத்தது குன்றம் –
பிரளய ஆபத்து பிரஸ்துதமான பின்பு
பூமியை எடுத்துக் கொண்டு ஏறினான்

இந்த்ரனாலே இடர்ப்பட்ட வன்று
மலையை எடுத்துப் பரிஹரித்தது –

கடநதது கஞ்சனை முன்னஞ்ச –
கம்சன் மிகைச் செயல் செய்த அன்று
அவன் தோற்றரவிலே அஞ்சும் படிக்கு ஈடாக அவனை முடித்து விட்டது –

கிடந்ததுவும் நீரோத மா கடலே –
இது எல்லாத்துக்கும் அடியாகத்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளிற்று

இங்கன் அன்று
பேரோத வண்ணர் பெரிது வேங்கடமே நின்றதுவும் -என்கிறார்

கிளர்ந்து வருகிற ஓதம் போலே இருந்துள்ள வடிவை யுடையவர்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே விரும்பிக் கொண்டு
நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இவ்விடம் -என்கிறார்

அவதாரங்கள் -சம்பவாமி யுகே யுகே -கீதை -4-8-என்று
கார்ய காலங்களிலே ஆபத்துக்கு அநு குணமாக வந்து உதவிப் போம் இறே
ஏற்கவே பரிஹரிப்பதாக நிற்கிற விடம் இறே இவ்விடம் –

நாம் எம்பெருமானை உகந்தோம் என்று வைத்து சோற்றை உகப்புதோம்
சோற்றை உகந்தோம் என்றாலும் நாலைந்து பட்டினி விடுவுதோம்
ஸ்திரீகளை உகந்தோம் என்று சதுரங்கம் பொருத்தல் உறங்குதல் செய்வுதோம்
நமக்கு ஒன்றிலும் ஸ்நேஹம் இல்லை –

இடந்தது இத்யாதி –
பிரளய ஆபத்தில் வந்த நலிவு தீர்த்த  படி –
இந்த்ரனால் வந்த நலிவு தீர்த்த படி –
கம்சனால் வந்த நலிவு தீர்த்த படி –
அவதாரத்துக்கு ஏகாந்த மான விடம் –

பிரளயம் கொண்ட பூமியை எடுத்து அருளின் போதை அழகும்
கோவர்த்த உத்தரணம் பண்ணின போதை அழகும்
கம்சனை அழித்த வெற்றியால் வந்த   அழகும்
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின அழகும்
எல்லாம்
திரு வேங்கடமுடையான் பக்கலிலே காணலாம் –

———————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading