அவதாரிகை –
இவ் விஷயத்தில் தலையான பக்தி உடையளாய்க் கொண்டு
பெற்றாள் யசோதைப் பிராட்டி ஒருத்தியும் இறே என்கிறார்
புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் –
என்
இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது
அன்றிக்கே
இத்தை ஒருவர் மெய் என்னும்படி எங்கனே – என்னவுமாம் –
———————————-
என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே -34–
பதவுரை
முன்–முற்காலத்தில்
ஏழ் உலகு உண்டு–ஏழுலகங்களையும் (பிரளயத்திலழியாதபடி) அமுது செய்து
ஆல் இலையில்–ஓர் ஆலந்தளிரிலே
ஒருவன் ஆய–துணை யற்றவனாய்க் கண் வளர்ந்தருளின
முகில் வண்ணா–காள மேகத் திரு வுருவனான பெருமானே!
நின் உருகி–உன் விஷயத்தில் உருக்கம் கொண்டவள் போல மேலுக்குக் காட்டி
முலை தந்தாள்–முலை கொடுத்தவளான
பேய் தாய்–பேய்த் தாயாகிய பூதனை யானவள்.
பேர்ந்திலள்–அவ்விடத்தில் றின்றும் பேர மாட்டாமல் (பிணமாய்) விழுந்தாள்;
பேர் அமர் கண்–பெரிய அந்த யுத்த பூமியில்
ஆய் தாய்–இடைத் தாயாகிய யசோதை யானவள்
முலை தந்த ஆறு–முலை கொடுத்த விதத்தை
ஒருவர்–ஞானத்தில் ஒப்பற்றவர்களான வ்யாஸ பராஸராதி ரிஷிகள்
மெய் என்பர்–மெய்யென்று சொல்லா நிற்பர்கள்;
என்–இது என்ன ஆச்சரியம்?
————————————-
வியாக்யானம் –
என்னொருவர் மெய்யென்பர் –
ப்ரதானர் ஆனவர்கள் இத்தை சத்யம் என்று சொல்லா நின்றார்கள்
அறிந்த ரிஷிகளிலே சிலவர் இத்தை
அர்த்த வாத சங்கை இல்லை
மெய் என்னா நின்றார்கள் –
ஏழு உலகு உண்டு ஆலிலையில் முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப் –
சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே
பரிவரான யசோதாதிகளும் இல்லாத சமயத்திலே
ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளினவனே
நீ செய்யும் செயலுக்கு அடைவு உண்டாகில் இறே
உன்னை ஆஸ்ரயித்தார் உடைய செயலுக்கு அடைவு உள்ளது –
நின் உருகி –
அற்றை இழவு தீர உனக்கு ஸ்நேஹித்து –
பேய்த் தாய் முலை தந்தாள் பேரிந்திலளால்-
பூதனை யானவள் உனக்கு முலை தந்து
அவ்வருகில் போகப் பெற்றிலள்
அப் பிணம் கிடக்கச் செய்தே –
பேரமர்க் கண் –
பெரிய பூசலிலே
பேர் ஆரவாரம் இறே
ஜகத்தில் பிரளயம் தீர்த்தவனுக்குப் பிரளயம் விளைக்க வந்து முடிந்தாள்-
அவ் வளவிலே ஆய்த் தாய் உண்டு -யசோதைப் பிரட்டி
ஆய்த் தாய் முலை தந்தவாறே –
அவள் முலை தந்த பிரகாரம் என்
இத்தை அடி அறிவார் மெய் என்னா நின்றார்கள்
ஔபாதிகம் இன்றிக்கே
ஸ்வா பாவிகமாக ஸ்நேஹித்தவளை நினைக்கிறார்
சர்வேஸ்வரனாய் அகடிதங்களைக் கடிப்பிக்க வல்லவனுக்கு
அஞ்சுகிற யசோதைப் பிராட்டி ஸ்நேஹமும்
ஒரு ஸ்நேஹமே -என்கிறார் –
—————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply