திரு நெடும் தாண்டகம்–27–செங்கால மட நாராய் இன்றே சென்று–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் –

அவதாரிகை –

கீழ் பாட்டில்
வண்டுகளைத் தூது விட்டாள் –
அது சென்று சொல்லி மறு மாற்றம் கொண்டு வரும் அளவும்
தரித்து இருக்க சக்தி இல்லாமையாலே
ஒரு நாரையைத் தூது விடுகிறாள் –

யாம் கபீநாம் சஹஸ்ராணி ஸூ பஹூந் யயுதா நிச-திஷூ சர்வாஸூ மார்கந்தே -என்றும் பிராட்டியைத் தேடுகைக்காக
ஸ்ரீ வானர வீரரை அடைய ஏவினால் போலே
இவரும் கண்டவற்றை அடைய ஏவுகிறாள்

ராமாவதாரத்தில் வானர ஜாதி ஸ்லாக்கியமானால் போலே
காணும் ஆழ்வார்களைத் தோற்றி பஷி ஜாதி ஸ்லாக்கியமானபடி –

———————————————

செங்கால மட நாராய் இன்றே சென்று
திருக் கண்ணபுரம் புக்கு என் செங்கண் மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தி யாகில்
இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும்
பைம் கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்
இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே–27-

பதவுரை

செம் கால–சிவந்த கால்களை யுடைய
மட நாராய்–அழகிய நாரைப் பறவையே!
இன்றே சென்று-இன்றைக்கே புறப்பட்டுப் போய்
திருக் கண்ணபுரம் புக்கு–திருக் கண்ணபுரத்தில் புகுந்து
என் செங்கண் மாலுக்கு-செந்தாமரைக் கண்ணராய் என்மீது வியாமோஹங் கொண்டவரும்
என் துணைவர்க்கு–எனக்குத் துணைவருமான சௌரிப் பெருமாள் பக்கலிலே
என் காதல்–எனது விருப்பத்தை
உரைத்தி ஆகில்–சொல்லுவாயாகில்
எமக்கு-(அவரைப் பிரிந்து வருந்திக் கிடக்கின்ற) நமக்கு
இது ஒப்பது இன்பம் இல்லை–இதுபோன்ற ஆனந்தம் வேறொன்றுமில்லை;
(இதற்காக உனக்கு நான் செய்யக்கூடிய உதவி யாதெனில்;)

சிவந்த கால்களையும் மடப்பத்தையுமுடைய நாரையே
இன்றைக்கே போய்
திருக் கண்ணபுரத்தில் பிரவேசித்து
என்னுடைய புண்டரீகாக்ஷராய்
ஆஸ்ரித வியாமுக்தராய்
எனக்கு வல்லபரானவர் இடத்திலே
எனக்கு அவர் பக்கலிலே உண்டான வ்யாமோஹத்தைச் சொல்லுவாயாகில்
அவரைப் பிரியில் தரியாத எமக்கு இதுக்கு ஸத்ருசமான ஸூகம் இல்லை
நீ உள்ள காலம் எல்லாம் இந்த பரப்பை யுடைத்தான சோலை சூழ்ந்த காட்டை எல்லாம்
உனக்கே உரித்தாம் படி செய்து நீர் நிலங்களில் உள்ள மத்ஸ்யங்களை எல்லாம் மேல் விழுந்து புஜிக்கும்படியாக
விருப்பத்தோடே கொடுப்பேன்
தருவேனே யாகில் உன் மனையாட்டியும் நீயும் இவ்விடத்தில் வந்து ஸந்துஷ்ட சித்தராய் இருந்து
இந்த மஹா பிருத்வியிலே அனுகூல ஸூகத்தை அடையலாம் –

———————————————————

செங்கால மட நாராய் –
சம்ஸ்லேஷ தசையில் தன் காலை அவன் கொண்டாட கண்டு இருந்தவள் ஆகையால்
அல்லாத அவயவங்களை விட்டு காலைக் கொண்டாடுகிறாள் –
இது ஒரு காலும்
சிவப்பும்
இருந்தபடி என் -என்கிறாள் –

ஒரு சிவந்த காலோடு வாசனை உண்டு போலே காணும் இவளுக்கு –
அபிமதன் உடைய கால் போலே இருந்ததீ -உன் காலும் -என்கிறாள் –

கரு முகை மாலையை சும்மாடு கொண்டாப் போலே
தூது விடுகை மிகையாய்
சதா தர்சனம் பண்ணலாய் இருந்ததீ –உன் கால் இருந்த படி -என்கிறாள் –

(ஆச்சார்யர் திருவடியையே உபேயமாகக் கொள்ளாமல் உபாயமாக்குவதே)

(அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் நீ தான் தந்து எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே-69-)

அவன் காலோடு ஒக்கும் என்னும் இடம் தப்பச் சொன்னேன் –
தன் காலைத் தரும் இத்தனை இறே அவன் செய்வது
அவன் காலையும் தந்து உன்னையும் தரும் ஏற்றம் உண்டே உன் காலுக்கு –
நீயும் ஸூலபனாய் இருந்து
அவனையும் ஸூலபனாக்கும் ஏற்றம் உண்டே உனக்கு –

மட நாராய் –
அறிவு கெட்ட நாராய்
மடம் -என்று இங்கு அறிவின்மையை சொல்கிறது –

ஸ்தோத்ரம் பண்ண இழிந்தவள் இங்கன் சொல்லக் கடவளோ என்னில்
நிந்தா ஸ்துதி போலே இதுவும் கொண்டாடத்தில் ஒன்றாய் இருக்கிறது
நிந்தா ஸ்துதி யாகிறது -ஆபாத ப்ரதீதியிலே நிந்தை போலேயே
விழுக் காட்டில் ஸ்தோத்ரமாய் இறே இருப்பது

சம்ஸ்லேஷ தசையில்– (அத்யந்த பக்தனுக்கு )ந சாஸ்திரம் நைவ சக்கரம் -என்கிறபடியே
அறிவழிந்து முறை கெட பரிமாறுகை இறே
பிரணயித்வத்தில் உனக்கு உண்டான கௌசலம் -என்கிறாள்-

முறையிலே பரிமாறில் ஸ்வரூபத்தை நோக்கிற்றோம் இத்தனை ஒழிய
பிரணயியன்றிக்கே ஒழியும் இறே –
என் இழவு தீரும்படியான பூர்த்தி உனக்கு உண்டாகப் பெற்றேன் -என்கிறாள் -(மடம் -அனைத்துக்கும் உப லக்ஷணம் )

நாராய் –
என்கிற யுக்தி -அம்மே -என்பாரைப் போலே இருக்கிறது ஆய்த்து –
வழி பறி உண்கிற தசையிலே தாய் முகத்திலே விழித்தால் போலே யாய்த்து

அவனைப் பிரிந்து நோவு படுகிற தசையிலே இதின் சந்நிதி உண்டான இது –
ஸபர்யா –பம்பா தீரே ஹநுமதா சங்கதா வானரேண ஹ -என்று பிராட்டியைப் பிரிந்து
ஸ்மாரக பதார்த்தங்களின் கையிலே
பெருமாள் நோவு படுகிற தசையிலே திருவடி வந்து சந்நிஹிதனான இது
வழி பறி வுண்ட தசையிலே தாய் முகத்திலே விழித்தால் போலே இருந்தது இறே பெருமாளுக்கு –

நாராய்
என்ற போதை யார்த்தி -உச்ச ஸ்வரத்தாலே -இசையிலே இறே தோற்றுவது –
ராஜ மகிஷி யாகையாலே கைக்கூலி தந்து கார்யம் செய்ய வேண்டும்படி அன்றோ
என்னுடைய ஏற்றம் இருப்பது –

நீ அபேஷிக்க வேணுமோ -கார்யத்தைச் சொல்லலாகாதோ -என்னச் சொல்லுகிறாள் –
இன்றே சென்று –
நாளை செய்கிறோம் என்னுமது அன்று
அவன் படியைப் பார்த்தாலும் நாளை செய்யுமது அன்று –
என் படியைப் பார்த்தாலும் நாளை செய்யுமது அன்று
ந ஜீவேயம் ஷணம் அபி -என்னும் படி யாய்த்து அவன் படி –
ஜலான் மத்ஸ்யா விவோத்தருதௌ –என்னும்படி யாய்த்து என் படி –

(ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷணாம் -சுந்தர 66-10-)

(ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்தருதௌ-அயோத்யா -53-31-)

(ந ஜீவேயம் ஷணம் அபி விதாதாம் அஸி தேஷணாம்-அந்த ஸீதையைப் பிரிந்து ஒரு நொடிப் பொழுதும் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்ற அவர் படியைப் பார்த்தாலும்கால தாமதம் செய்யலாகாது;
“ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராகவ – முஹூர்த்த மபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யா விவோத்த்ருதௌ.“
என்னத் தக்க என் படியைப் பார்த்தாலும் கால தாமதம் செய்யலாகாது. இப்போதே புறப்படவேணும்.

திருக் கண்ணபுரம் புக்கு –
ரிஷிகளும் அல்லாத ஆழ்வார்களும் சொல்லுமா போலே அன்று காணும்
இவர்க்கு திருக் கண்ணபுரம் என்றால் இருக்கும் படி –
அவர்கள் அளவன்றே இவர்க்கு அவ் ஊரில் உண்டான பாவ பந்தம் –

நம்மாழ்வார் திருத்தொலை வில்லி மங்கலம் என்னுமா போலேயும் -அனந்தாழ்வான் -திரு வேங்கடமுடையான் -என்னுமா போலேயும்
பட்டர் -அழகிய மணவாள பெருமாள் -என்னுமா போலேயும்
சோமாசி யாண்டான் -எம்பெருமானார் -என்னுமா போலேயும் –
திரு நாமங்களைச் சொல்லும் போது இவர் ஆதாரம் –

திருக் கண்ணபுரம் புக்கு –
திருவழுந்தூரில் தூது விட்டாள் ஆகில் பின்பும் அங்கு விடுமது ஒழிய
இங்கே விடுவான் என் என்னில் –
திருவழுந்தூரில் -அவன் தரிக்க மாட்டான் –
வண்டும் தானும் அரை குலைய தலை குலைய
எதிரே வந்து ஒரு பயணம் புகா நிற்கும் –
அங்கே செல்லுங்கோள் என்கிறாள்-

என் செங்கண் மாலுக்கு
என் மாலுக்கு
உபய விபூதியும் தாம் இட்ட வழக்காய் இருக்கிறவர் –
நான் இட்ட வழக்காம் படி என் அபிமானத்தே அடங்கி இருக்கிறவருக்கு

செங்கண் மாலுக்கு
கண் அழகைக் காட்டி என்னை ஜிதம் என்னப் பண்ணி
தன் அபிமானத்தே இட்டு வைத்தவருக்கு

செங்கண் மாலுக்கு
அநித்ரஸ் சததாம் ராம (ஸூக்தோபி நர உத்தம சீதேபி மதுரா வாணீம் )- என்கிறபடியே
என்னைப் பிரிகையாலே அவருக்கு உறக்கம் இல்லை –
அத்தாலே கண் குதறிச் சிவந்து இருக்கும்
அது உங்களுக்கு அடையாளம் -என்கிறாள் -ஆகவுமாம்

(“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே“
என்கிறபடியே என்னைப் பிச்சேற்றின கண்களே அவரைக் கோட் சொல்லித் தருமே
என்னைப் பிரிந்திருக்கையாலே அவர்க்கு உறக்கம் இராது; அதனாலும் கண்கள் குதறிச் சிவந்திருக்கும்;
அந்த அடையாளங்கொண்ட அவரைக் கண்டு பிடித்துக் கொள்ளலா மென்கிறாளாயிற்று.)

மாலுக்கு
பெரும் பித்தருக்கு –
தம்முடைய பித்தைக் காட்டி என்னை பிச்சேற்றினவருக்கு
பிச்சேறி இருக்கும் அத்தனை இறே இத் தலைக்கு உள்ளது –
பிச்சேறி இருக்கையும்
எதிர் தலையை பிச்சேற்றுகையும்
அத் தலைக்கு இறே உள்ளது –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே –

(மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை* 
ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?* 
மேலால் பரந்த வெயில்காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்* 
மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*     )
என் காதல்-
தம்முடைய காதல் போல் அன்று என்று சொல்லுங்கோள்-
மின்னிலங்கு திருவுருவு என்று -உடம்பு குறி அழியாத படி அன்றோ நீர் காதல் பண்ணிற்று –
பொங்கார் மென்னிளம் கொங்கை பொன்னே பூக்கும்படி அன்றோ அவள் காதல் பண்ணிற்று(17-பாசுரம்) என்னுங்கோள் –

என் காதல்
யா ப்ரீதிர் அவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயினி (ஸ்ரீ விஷ்ணு புராணம் )- என்கிறபடியே நாட்டார் காதல் போல் அன்று –
முக்தர் காதல் போல் அன்று காணும் இவளுடைய காதல்
ஞானம் பிறந்தவாறே த்யாஜ்யமான காதல் இறே சம்சாரிகளது –
ஸூக ஹேதுவான காதல் இறே முக்தரது –

(‘பாதாழ்வானுடையநோய்‘ என்றால் விலக்ஷணமென்று ப்ரஸித்தமன்றோ, அதுபோலே.)

(மற்றையோருடைய காதலைக் காட்டிலும் தன்னுடைய காதல் பரம விலக்ஷணம் என்பது தோன்ற ‘என் காதல்‘ என்கிறாள்.
“சொல்லாதொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியாரெல்லாரோடுமொக்க எண்ணியிருந்தீரடியேனை,
நல்லாரறிவீர் தீயாரறிவீர் நமக்கிவ்வுலகத்து எல்லாமறிவீர் ஈதேயறியீரிந்தளூரீரே. (4-9-6) என்ற பாசுரம்
இங்கு அநுஸந்திக்கத்தக்கது.)

என் துணைவர்க்கு
எனக்கு அவர்ஜநீய பந்துவாய் இருக்குமவர்க்கு –
எவ் வவஸ்தையிலும் எனக்கு துணையாய் இருக்குமவர்க்கு சொல்லுங்கோள்
விமுகமான தசையிலே சத்தையை நோக்கி
பின்பு ஆபிமுக்கியத்தை பிறப்பித்து
சம்ஸ்லேஷித்து பிரிந்த பின்பும் சத்தை கிடக்கும் படி இறே
அவர் துணை இருக்கும்படி

என் துணைவர்க்கு-
இவ் வாற்றாமையை பரிஹரிக்கும் அவர்க்குச் சொல்லுங்கோள்

(“எருத்துக் கொடி யுடையானும் பிரமனுமிந்திரனும் மற்று, மொருத்தருமிப் பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“.)

உரைத்தி யாகில்-
சொல்லுவுதி யாகில் –

ஆகில் –
கடகரை இரக்குமது ஒழிய நியமிக்க பிராப்தி இல்லை இறே-
அத்தாலே -திரு உள்ளம் ஆகில் -என்கிறாள் –

உரைத்தி யாகில்-
அவர் அழகிலே கால் தாழ்ந்து
போன கார்யத்தை மறவாதே
என் தசையை அறிவிப்புதி யாகில் –

உரைத்தி –
வாசா தர்மம் அவாப்நுஹி–(ஸூந்தர காண்டம் உயிருடன் வாழும் என்னை பெருமாள் மதிக்கும் படி வார்த்தை சொல்ல வேண்டும் ) -என்கிறாள் –
உனக்கு ஒரு வார்த்தை -நான் பெறுகிறது சத்தை -என்கிறாள் –

இது வொப்பது எமக்கு இன்பம் இல்லை-
எனக்கு இத்தோடு ஒத்த பிரியம் இல்லை –
நீ உரைக்கை யாகிற இதுக்கு மேற்பட்ட ஸூகம் இல்லை –
அவனோடு சம்ஸ்லேஷித்தால் அன்றோ ஸூக ஸித்தி உள்ளது –

அறிவித்த மாத்ரத்திலே ஸூக ஸித்தி உண்டாமோ -என்னில் –
அறிவிக்குமதுவே -விளம்பம் –
வரவு தப்பாது -என்று இருக்கையால் -சொல்லுகிறாள் –

நாளும்–பைம் கானம் ஈதெல்லாம் உனதேயாகப்-
எனக்கு உபகரித்து விடும் அளவு போராது –
உபகார ஸ்ம்ர்தியாலே -நான் பண்ணும் கிஞ்சித் காரத்தையும் அங்கீ கரிக்க வேணும் -என்கிறாள் –

நாளும் -இத்யாதி –
ஆசார்யன் ஒருக்கால் உபகரித்து விட்டால்
சிஷ்யன் யாவதாயுஷம் அனுவர்த்திக்கக் கடவன் -என்கை-

பைம் கானமீது எல்லாம் –
தன் அபிமானத்தில் கிடந்தத்தைக் கொடுக்கும் அத்தனை இறே செய்யலாவது –
பரப்பை உடைத்தான கடல் கரை சோலை அடைய –
பிரிந்தார் இரங்கும் இடம் நெய்தல் ஆகையால்
கடல் கரையில் தான் இருக்கையாலே –
பைம் கானமீதெல்லாம் -என்கிறாள் –

ஈ தெல்லாம் –
தன் கண்ணால் கண்ட பிரதேசத்தை அடையக் கொடுக்கிறாள் –
என் விபூதி அடங்கலும் தருவன் -என்கிறாள் –
இது உபய விபூதிக்கும் உப லஷணம்
பொன் உலகு ஆளீரோ புவன முழுது ஆளீரோ -என்னக் கடவது இறே

(பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-)

உனதேயாக –
எனக்கும் உனக்கும் பொதுவாக அன்றியே
உனக்கே சேஷமாம்படி தருவன்-

பழன மீன் –
நீர் மாறாதே இருக்கையாலே
மத்ஸ்யங்களும் ஆனைக் கன்று போலே இருக்கும் இறே –
யதன்னம் புருஷோ பவதி ததன்யாஸ் தஸ்ய தேவதா -(அயோத்யா-இலந்தை பழத்தால் செய்த அடை பெருமாள் தந்தைக்கு கொடுத்து )என்கிறபடியே
தனக்கு சித்தித்த அம்சத்தை கொடுக்கலாவது இறே அவர்களுக்கு
கடகருக்கு அவர்கள் உகந்தது தேடிக் கொடுக்க வேணும் என்கை –

(“பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன்“ என்றதன் உள்ளூறை பொருளாவது –
நாரைக்கு மீன் எப்படி இனிதோ அப்படி ஆசார்யனுக்கு உகப்பான பொருளைத் தந்து கிஞ்சித்தகரிக்க வேணுமென்பதாம்.)

கவர்ந்து உண்ணத் தருவன் –
மேல் விழுந்து புஜிக்கும் படியாக சாதரமாக தருவன் –

தந்தால் இங்கே வந்து-
உங்கள் பூர்த்தியாலே நான் பண்ணின கிஞ்சித் காரத்தை ஸ்வீகரித்தி கோளாய்ப் போகை அன்றிக்கே
என் சந்நிதியிலே புஜிக்க வேணும் –

வந்து-
அவனைப் போலே உபகரித்து பின்பு வாராது ஒழியாதே
நான் இருந்த இடத்தே வந்து புஜிக்க வேண்டும்

இனிது இருந்து உன் பெடையும் நீயும்-
உன் பெடையும் நீயும் இனிது இருந்து –
ஏகாகியாய் வந்து இருக்க ஒண்ணாது –
அபிமத விஷயத்தோடு கூட வந்து இருக்க வேணும் –
அது தனக்குத் தேட்டம் இறே –

இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே-
அநந்த கிலேச பாஜனமான சம்சாரத்திலே
அந்தமில் பேரின்பத்தை பிராபிக்கலாம் –
நல்ல பதத்தால் மனை வாழ்வர் -என்கிறபடியே வாழப் பெறலாம் –

(நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11-)

வைஷ்ணவர்கள் சரீர சம்பந்த உக்தர் ஆகையாலே
அபேஷித தசைகளிலே அபேஷிதங்களைக் கொடுத்து வர்த்திக்கும்
கார்ஹ்யஸ்த்யத்தால் வந்த ஏற்றம் இல்லை இறே -நித்ய விபூதியில்-

(வையத்து வாழ்வீர்காள் -தெள்ளியார் அனுபவம் இங்கே தானே-)

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading