ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் –19–பிண்டியார் மண்டை ஏந்தி–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–

(எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும்
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே
பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக்
கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே- என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள்
உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார்.
வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது.
அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்ய வழி யில்லை யென்கிறாரிவ்வாழ்வார்.)

(“இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே-வீணாக க்லேசப்படாதே

மேம்பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம்பரி சறிந்து கொண்டு ஐம்புலன் அகத்தடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத் தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே–என்கிறபடியே

திவ்ய தேசாநுபவமே போது போக்காக இருப்பவர்கட்கே
எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்கு மென்றதாயிற்று.)

பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை  திரி தந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே -19-

பதவுரை

பிண்டி ஆர் மண்டை ஏந்தி–உளுத்த பொடிகள் உதிருகிற தலை யோட்டைக் கையிலேந்திக் கொண்டு
பிறர் மனை–அயலாருடைய வீடுகளிலே
திரி தந்து–திரிந்து (பிச்சை யெடுத்து)
உண்ணும்–ஜீவித்த
முண்டியான்–மொட்டை யாண்டியான ருத்ரனுடைய
சாபம்–ப்ரஹ்ம ஹத்தி சாபத்தை
தீர்த்த–போக்கின
ஒருவன்–அத்விதீயனான் எம்பெருமானுடைய
ஊர்–திருப்பதிகளாய்
உலகம் ஏந்தும்–உலகத்தவர்களால் கொண்டாடப்பட்டன வாயு முள்ள
கண்டியூர்–திருக்கண்டியூரென்ன
அரங்கம்–திருவரங்கமென்ன
மெய்யம்–திருமெய்யமென்ன
கச்சி–திருக்கச்சியென்ன
பேர்–திருப்பேர்நகரென்ன
மல்லை–திருக் கடன்மல்லை யென்ன
என்று–ஆகிய இத் திருப்பதிகளைப் பேசிக் கொண்டு
மண்டினார்–அவகாஹிக்குமவர்கள்
உய்யல் அல்லால்–உஜ்ஜீவிக்கலாமத்தனை யொழிய
மற்றையார்க்கு–அல்லாதவர்களுக்கு
உய்யல் ஆமே–உஜ்ஜீவிக்க வழியுண்டோ? (இல்லை)

—————————————————

பிண்டியார் மண்டை ஏந்திப் –
உளுத்து அளம் பற்றின சுவர் போலே
பொடி உதிருகிற தலையோட்டையைக் கையிலே ஏந்தி –

பிறர் மனை திரி தந்து உண்ணும் –
முடை யடர்த்த சிரம் ஏந்தி -மூ வுலகும் பலி திரிவோன் -என்கிறபடியே
நெடும் காலம் கையோட்டைக் கொண்டு
திரிந்து இரந்து உண்டான் –

(பெடை யடர்த்த மட வன்னம் பிரியாது மலர்க் கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத திருவாளன் இணை யடியே  யடை நெஞ்சே –6-9-1-)

(வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-)

முண்டியான் –
தாபச வேஷத்தை உடைய
ருத்ரன் –

(“உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாட பேதங்கள்
உண்டி-உணவு; பிச்சை யெடுத்து உண்ணப் பட்ட உணவை யுடையவன் என்றபடி.)

சாபம் தீர்த்த ஒருவன் –
ப்ரஹ்ம சாபத்தாலே மண்டை ஏந்தி திரிந்தவன் சாபம்
அவனை விட்டு போம்படி பண்ணின அத்விதீயன் –

அவனூர் உலகம் ஏத்தும் கண்டியூர் அரங்கம் மெய்யம கச்சி பேர் மல்லை என்று –
அவனூரான உலகம் ஏத்தும்
திருக் கண்டியூர்
கோயில்
திரு மெய்யம்
திருக் கச்சி
திருப் பேர்
திருக் கடல் மல்லை –
என்றும்

மண்டினார் உய்யல் அல்லால்-
அவன் உகந்து அருளின இத் திருப் பதிகளிலே
நெஞ்சு மண்டினவர்கள் உய்யல் அல்லது

மற்றை யார்க்கு உய்யலாமே –
அல்லாதார்க்கு உஜ்ஜீவிக்க விரகு உண்டோ –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading