ஸ்ரீ திரு மாலை-44 –பெண்ணுலாம் சடையினானும்–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

அவதாரிகை

கீழ் பிரதிபாதித்த அர்த்தங்கள் உஜ்ஜீவிக்கும் என்னும் இடம்
ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை
திர்யக் ஜாதியிலே பிறந்த ஒருவன் பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று
அன்யாபதேசத்தாலே
ஸ்வ லாபத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறார் –

—–

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே

பதவுரை

பெண் உலாம் சடையினானும்–கங்கா நதி உலாவுகின்ற சடையை யுடையனான சிவனும்
பிரமனும்–நான் முகக் கடவுளும்
உன்னைக் காண்பான்–உன்னைக் காண்பதற்காக
எண் இலா ஊழி ஊழி–எண்ண முடியாத நெடுங்காலமாக
தவம் செய்தார்–தவம் புரிந்தவர்களாய் (அவ் வளவிலும் காணப் பெறாமையாலே)
வெள்கி நிற்ப–வெட்கமடைந்து கவிழ்தலை யிட்டிருக்க
அன்று–அக் காலத்திலே
ஆனைக்கு–(முதலை வாயிலகப்பட்ட) ஸ்ரீகஜேந்த்ராழ்வானுக்காக
வந்து–(மடுவின் கரையில்) எழுந்தருளி
விண் உளார் வியப்ப அருளை ஈந்த –நித்ய ஸூரிகளும் ஆச்சிரியப்படும்படி பரம க்ருபையைச் செய்தருளிய
கண்ணறாய்–(என்னிடத்து அருள் செய்யாமையாலே) தயவில்லாதவனே!
உன்னை–உன்னை
களை கணா–தஞ்சமாக
கருதும் ஆறு என்னோ–நினைக்கலாகுமோ?

—————–

பெண்ணுலாம் சடையினானும் –
கங்கையானவள் உள்ளே சஞ்சரிக்கும்படி ஜடையை உடையவள் –
கங்கையை ஜடை மேலே அடக்கினேன் என்னும் பிடாரைக் கொண்டு சர்வேஸ்வரனை காணலாமோ –
ஆறு சடைக் கரந்தான் -இத்யாதி –

பிரமனும் –
அவனுக்கு ஜனகனாய் –
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம்வா -என்கிறபடியே
இப்பால் உள்ளார்க்கு -சித்த உபாயம் காட்டில் –
இவ்வளவு அறிவு கொண்டு -எம்பெருமானை அறியப் போமோ –

தன்னால் ஸ்ருஷ்டர் ஆனவர்களை தான் பரிச்சேதிக்கும் அத்தனை ஒழிய
அபரிச்சின்னவனான பரிச்சேதிக்கப் போமோ –

கடிக் கமலத்து உள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை -என்னக் கடவது இறே –

உன்னைக் காண்பான் –
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்கிறபடியே
உன் குணங்களில் ஒன்றை அவதி காண மாட்டாத உன்னைக் காண்கைக்காக –
ஸூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும் எல்லை காண மாட்டாத உன்னை –

வத்ய பர ப்ராப்தே -என்னக் கடவது இறே –
பிறரால் அறிய ஒண்ணாத அளவே அன்றியே
உன்னாலும் உன்னை எல்லை காண ஒண்ணாத உன்னை –
தனக்கும் தன் தன்மை அறிவரிய -என்னக் கடவது இறே –

காண்பான் –
காணப் பெற்றால் பின்னை அன்றோ பிரயோஜனம் சொல்வது
தான தன்னை கண்ணுக்கு விஷயமாக்கி காட்டும் அன்று இறே காணல் ஆவது –
அல்லது ஸ்வ சாமர்த்தியத்தால் காணும் விஷயம் அன்றே –

ந சஷூஷா பஸ்யதி கச்ச நைனம் -என்றும்
நமாம் ஸாஷூஷா த்ர்ஷ்டும் ப்ரஹ்ம பூதஸ் சசக்யதே – என்றும்
சொல்லக் கடவது இறே

எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப –
நெடும் காலம் தபஸ் பண்ணி
நாம் ஆராய் தபஸ் பண்ணுகிறோம் -என்று லஜ்ஜித்து கை வாங்கி நிற்க –
பிறர் தங்களைக் குறித்து பண்ணும் தபசுக்கு பலம் கொடுக்குமவர்கள் இறே
இவனை நோக்கி தபஸ் பண்ணுகிறார்கள் –
யுக கோடி சஹஸ்ராணி -என்னக் கடவது இறே-

வெள்கி நிற்ப –
முதலையின் வாயிலே விழாதே
தபஸ்ஸூலே இழிந்து என்ன கார்யம் செய்தோம் என்று லஜ்ஜித்து நிற்கை –

பரமாபதமா பந்நோ மனசா சிந்த யத்தரிம் -என்கிறபடியே
ஆபத்தை முன்னிடாதே தபஸ்ஸூலே இழிந்து என்ன கார்யம் செய்தோம்
என்று லஜ்ஜித்து நிற்கை –

விண்ணுளார் வியப்ப வந்து –
நித்ய ஸூரிகள்
ப்ரஹ்மாதிகள் இப்படி படா நிற்க
அவர்களையும் எங்களையும் அநாதரித்து –
ஒரு திர்யக்கின் கால் கடையிலே அரை குலைய தலை குலைய வந்து விழுவதே –
எத்திறம் -எத்திறம் -என்று விஸ்மயப்பட –

வந்து –
அவன் இடர்பட்ட மடுவின் கரையிலே வந்து –
சென்று -என்னாதே -வந்து -என்றது –
ஆனைக்கு உதவினது தம் பேறாக இருக்கிறபடி –

ஆனைக்கு-
ப்ரஹ்மாதிகள் உடைய ஜன்ம உத்கர்ஷத்தை ஆதல் –
இவனுடைய ஜன்ம அபகர்ஷத்தை யாதல்
இவற்றை ஒன்றும் பாராதே
ஆபத்தை பார்த்து
ரஷித்தபடி –

அன்று –
ஸ்வ பலம் அற்ற அன்று –
கஜ ஆகர்ஷே தே தீரே -என்று
சென்ற காலத்தில் இவனோடு ப்ரஹ்மாதிகளோடு வாசி இல்லை –

அன்று ஒரு முதலையின் கையில் அகப்பட்ட ஆனைக்கு அருளை ஈந்தாய் –
இன்று அஞ்சு முதலையில் கையில் அகப்பட்ட எனக்கு அருளாய் –

ஆனை ஆயிரம் சம்வத்சரம் நோவு பட்டது –
நான் அநாதி காலம் நோவு பட்டேன் –

அவன் அகப்பட்டது மடுவிலே
நான் அகப்பட்டது சம்சார சாகரத்திலே இறே –

அருளை ஈந்த –
அருளுகை யாவது முதலையின் வாயில் நின்றும் மீட்டு
அவனுடைய நொந்த காலைத் திருக் கையால் தடவி அருளி
ஆஸ்வசிப்பித்து
அவன் கையில் பூவைத் தன் திருவடியில் இடுவித்துக் கொள்ளுகை –

அப்படி என்னையும் விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு
இழந்த காலத்துக்கு சாந்த்வனம் பண்ணி இறே
அடிமையில் மூட்டுவது-

கண்ணுறா –
அவன் உபகரித்த தசையிலே –
கண்ணுறா -என்கிறது
ப்ரீதி தலை மண்டை இட்டுச் சொல்லுகிற வார்த்தை –

ஸ்வ லாபத்தில்-ஸ்வ யத்னத்தாலே லபிக்க இழிவாரைப் பாராதே
அகிஞ்சனர் பக்கலிலே முழு நோக்காய் இருக்கிற இது
என்ன சுணை உடைமை
என்ன பும்ஸ்த்வம்

ஸ்வ சாமர்த்யத்தைப் பொகட்டு
தங்கள் வெறுமையை முன்னிட்டு
உன்னைக் காலிலே விழ விட்டுக் கொள்ள மாட்டாதே
ஜகத்து இழப்பதே

வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே –
ஆஸ்ரித பஷ பாதியான உன்னை –
ஜகத்துக்கு பொதுவான ரஷகன் என்று சொல்வார்கள் மதி கேடர்கள் -என்கிறார் –
தேவாநாம் தானவாநாஞ்ச சாமான்ய மதி தைவதம் -என்கிற பந்தம் கிடக்க
சிலர்க்காக சிலரை அழிக்கிற
இவனை சர்வ ரஷகன் என்று நினைக்கலாமோ –

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading