ஸ்ரீ திரு மாலை-43–அமர ஓர் அங்கம் ஆறும் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

அவதாரிகை

கீழ்ச் சொன்ன ஜன்ம வ்ருத்தாதிகளுக்கு மேலே
ஜ்ஞானாதிகாருமான இவர்கள்
ஜன்ம வ்ருத்தாதிகள் இன்றிக்கே
இந்த ஜ்ஞானம் உடையார் ஆனவர்களை
பகவத் பிரசாதத்தாலே வந்த வை லஷ்ண்யத்தை புத்தி பண்ணாதே
கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி
தாழ நினைத்தார்கள் ஆகில்
அந்த ஷணத்திலே அவர்கள் தான் சண்டாளர்கள்
என்கிறார் –

—–

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்கள் ஏலும்
நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும் அரங்க மா நகர் உளானே –

பதவுரை

அரங்கமா நகருளானே!-;
ஓர் அங்கம் ஆறும்–(வேதத்தின்) விலக்ஷணமான ஆறு அங்கங்களையும்
ஓர் வேதம் நான்கும்–நான்கு வேதங்களையும்
அமர ஓதி–நெஞ்சில் பதியும்படி அதிகரித்து
தமர்களில் தலைவர் ஆய–பாகவதர்களுக்குள்ளே முதன்மையான
சாதி அந்தணர்களேனும்–ப்ராஹ்மண ஜாதீயர்களாயினும் (அவர்கள்
நுமர்களை–தேவரீருடைய ஜந்மத்தைப்
பழிப்பர் ஆகில்–(அவர்களுடைய ஜந்மத்தைப் பார்த்து) தூஷிப்பாராகில்
நொடிப்பது ஓர் அளவில்–ஒரு நிமிஷ காலத்துக்குள்ளே
அவர்கள் தாம்–அந்த ஜாதி ப்ராஹ்மணர்கள் தாம்
ஆங்கே–அப்போதே
புலையர் –சண்டாளராவர்கள்
(போலும்-வாக்யாலங்காரம்.)

———-

அமர ஓர் அங்கம் ஆறும்-
அத்விதீயமான ஷட் அங்கங்களையும் அழகிதாக பாடங்களையும் தரித்து
அர்த்தத்தையும் தரிக்குமவர்கள் ஆகை –

அங்கங்களுக்கு அத்விதீயம் ஆவது
ஓர் அங்கத்தில் ஜ்ஞானம் குறைவு அற உண்டானால்
லோகத்தார் அவனை சர்வஞ்ஞன் என்று சொல்லும்படி இருக்கை –
சீஷாயாம் வர்ண சிஷா -இத்யாதி –

வேதம் ஓர் நான்கும் –
வேதங்களுக்கு அத்விதீயம் அபௌருஷேயத்வம் –
பௌருஷேய சப்தங்களில் காட்டில் வ்யாவர்த்தி யாதல் –
தனித் தனியே விநியோக பேதத்தால் வந்த வ்யாவர்த்தி யாதல் –

ஓதித்
அங்கங்களோடு
வேதங்களோடு
வாசி யற
ஆச்சார்ய உச்சாரண அனுச்சாரண முகத்தாலே கிரஹிக்கை –
இப்படிகளிலாலே -எம்பெருமானை உள்ளபடி அறிபவர்கள் ஆகை –

தமர்களில் தலைவராய –
ஜ்ஞான அனுகூலமான பகவத் விஷயத்தில்
சம்பந்தம் உடையாரில் அக்ரேசரராய் இருக்கை –

சாதி அந்தணர்கள் –
கீழ்ச் சொன்னவை ஷத்ரிய வைஸ்யர்களுக்கும் பொது விறே –
அவ்வளவு அன்றியே ஜாத்யா பிராமணராய் இருக்கை –

ஏலும் –
கீழ்ச் சொன்னவை ஒருவருக்கும் சித்திக்கும் அது அல்ல –

சித்திக்குமே யாகிலும் –
வைஷ்ணவ நிந்தையில் வந்தால் இவை எல்லாம் அசத் சமம் என்கை –
துர்மானோ பஹதர்க்கு அபசார ஹேதுவுமாய் –
இவை இல்லாதார் தலை மேலே கால் இட்டு திரிகைக்கு உடலாம் இத்தனை –

நுமர்களைப் –
தேவரீர் அபிமானத்துக்கு உள்ளே அடங்கி
பிராப்ய பிராபகங்கள் தேவரீரே என்று அத்யவசித்து –
உடையவனே உடைமைக்கு நிர்வாஹகன் –
உடைமையை விநியோகம் கொள்ளுவானும் அவனே
என்று இருக்குமவர்களை –

பழிப்பர் ஆகில்-
பகவத் பிரபாவத்தை அஹங்காரத்தாலே விஸ்மரித்து –
அவர்கள் உடைய ஜன்ம மாத்ரத்தையே புத்தி பண்ணி –
தங்களைக் காட்டில் குறைய நினைப்பார்கள் ஆகில் –

பழிப்பாகிறது -குற்றம் –
அதாகிறது
பகவத் அபசாரங்களில் தலையான அபசாரம் –
உகந்து அருளின நிலங்களிலே த்ரவ்ய மாத்ரத்தையே புத்தி பண்ணி குறைய நினைக்குமா போலே
வைஷ்ணவர்கள் ஜன்ம மாத்ரத்தையே புத்தி பண்ணி குறைய நினைக்கை-

பழிப்பர் ஆகில்–
கொண்டாடுகையே யாய்த்து பிராப்தம் –
அஹங்காரம் ஆகிற ஒரு முசலவன் -பேய்-ஏறி பிரமித்த போது இறே
அவர்களைக் குறைய நினைப்பது –
இப்படி கூடிற்று ஆகில் –

நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே –
காலாந்தரே
தேசாந்தரே
தேகாந்தரே -அன்று
அந்த ஷணத்திலே
அவ்விடத்திலே

புனிதம் அன்றே -என்ற நன்மையாலே
தீமை வரும் இடத்தில் விளம்பம் இல்லை –

அவர்கள் தாம் புலையர் போலும் –
அத் தேகத்தோடு சண்டாளர்கள் ஆவார்கள் –
த்ரிசங்குக்கு ப்ராஹ்மன சாபத்தாலே கழுத்திலே வீர சங்கிலி தானே வாரானாப் போலே
இவனுக்கும் மார்வில் இட்ட பூணூல் தானே வாராய் விடும் –

தாம் புலையர் –
கீழ் சொன்ன ஜன்மாதிகளில் உத்கர்ஷங்கள் அபிமான ஹேது வாகையாலே
அவை தானே இவர்களுக்கு அநர்த்த ஹேது வாய் விட்டது –

ஜாதி சண்டாளனுக்கு ஒரு காலத்திலே வைஷ்ணவன் ஆகைக்கு அதிகாரம் உண்டு –
இவன் உயர வேறித் தானே விழுந்தவன் ஆகையாலும்
பாகவத அபசாரம் ஆகிற மகா பாபத்தை பண்ணினவன் ஆகையாலும்
அவனிலும் தண்ணியன் கர்ம சண்டாளன் இறே –

பிள்ளை பிள்ளை ஆழ்வானுக்கு ஆத்ம ஹிதம் சொன்ன சமனந்தரத்திலே
ஆழ்வான் பணித்த வார்த்தையை ஸ்மரிப்பது –

அரங்க மா நகர் உளானே –
ந ஷமாமி கதாசன -என்ற
தேவரீர்க்கு இறே -பாகவத அபசாரத்தின் தண்மை தெரிவது –

கர்ம யோக உபாய நிஷ்டர்க்கு ஸ்வ கதமான உபாயாந்தரங்களில்
ந்யூநாதி ரேகங்களைப் பற்றி இருக்கலாம் –

பகவத் சம்பந்தம் கொண்டு பெற இருக்கிற பிரபன்னனுக்கு
பாகவத அபசாரம் ஆகிறது பகவத் சம்பந்தத்தை அறுக்கும் ஆகையாலே பெறவில்லை –

பெறுகைக்கு அவர்கள் சம்பந்தமே அமைகிறாப் போலே
இழக்கைக்கும் அபசாரமே அமையும்

ஆகையால் பிரபன்னனுக்கு பயப்பட்டு நோக்க வேண்டுவது
தேவதாந்தர சம்பந்தமும்
பாகவத அபசாரமும் –ஆகும்
பகவத் விஷயத்தில் ஒரு ஆனுகூல்யம் பண்ண வேண்டுவது இல்லை –
இவை இன்றிலே ஒழிந்தவனுக்கு ஈஸ்வரன் ஸூ லபனாம் –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading