கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே–2-6-10-
—————————————————–
வியாக்யானம் –
கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து அடிகளடியே நினையும் அடியவர்கள் தம்மடியான் –
பரிமளம் பிரவஹியா நின்றுள்ள
பெரிய வீதிகளை உடைத்தான
திருக் கடல் மல்லையிலே வந்து
கண் வளர்ந்து அருளுகிற
சர்வ ஸ்வாமி உடைய திருவடிகளையே
அனுசந்திக்கும் சேஷ பூதர் சேஷத்வத்திலே நின்றவன் –
ஜ்ஞான ஆநந்தங்கள் அல்ல நிரூபகம்
பாகவத சேஷத்வமே என்கிறார் –
வடி கொள் நெடு வேல் வலவன் கலி கன்றி யொலி வல்லார் –
காக்கைக்கு-ரஷிக்கைக்கு – கையில் வேல் பிடித்தால் போலே
ஆயிற்று சேஷத்வத்திலும் -பாகவத சேஷத்வத்தில் நின்றபடி –
கூர்மையையும் ஒழுகு நீட்சியையும் உடைத்தான
வேலை உடையராய்-பிரதிபந்த நிரசன சமர்த்தராய்
இருந்துள்ள ஆழ்வார் உடைய
இத் திருமொழியை அப்யசிக்க வல்லார் –
முடி கொள் நெடு மன்னர் தம் முதல்வர் முதலாவாரே-
முடியை உடையராய்
நாட்டுக்கு அநந்ய பிரதானராய்
இருந்துள்ள ஷத்ரியருக்கு
பிரதானரான ப்ரஹ்மாதிகளுக்கும் நிர்வாஹகராய்
நித்ய ஸூரிகளோடு சத்ருசராகப் பெறுவர்-
————
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.
நண்ணாமல் மால் அடியார் அல்லாரை சீர் மல்லையான்
தொண்டர் தம் தொண்டரையே ஆறு பேறாய் -திண்ணிதா
எண்ணு நீலன் தொண்டர் எல்லைத் தானாய்ச் சொல் இன் தமிழை
எண்ண மதி திவளும் -16-
தொண்டரை அடையாவிடிலும் தொண்டர் அல்லாரோடு கூடாமையே முக்கியம்
அடியாரையே ஆறு பேறாகக் கொள்வதே நம பத தாத்பர்ய அர்த்தம்
வாய்த்த திரு மந்திரத்தின் மத்திமம் பாதத்தின் எல்லையான பொருளை நாம் எண்ண
நம்முடைய சேஷத்வ பாரதந்தர்யங்களாம் ஸ்வரூபம் -நன்கு பிரகாசிக்கும் –
மதி திவளும் -புத்தி சுடர் விட்டுப் பிரகாசிக்கும்
சீர் -திரு மல்லைக்கும் -மல்லையானிலும் மல்லை தொண்டரிலும் -மல்லையான் தொண்டர் தம் தொண்டரிலும் அந்வயிக்கும் –
———————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply