இது ‘மயர்வற மதிநலம்’ அருளப் பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாங் கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப் புலவர்க்கு எழுதி யருளிய திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் ‘அண்ட கோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ என வருங் கடவுள் வணக்கப் பாடலால் (13) துணியலாகும்.
அண்ட கோள மெய்ப் பொருள்-ஸேது ஸம்ஸ்தான மஹா வித்வானும் பாஷா கவி சேகரரும் அண்ணாமலை சருவகலாசாலைத் தமிழாராய்ச்சியாளருமாகிய ஸ்ரீ ரா. இராகவையங்கார்
ஸ்வாமிகள் எழுதியது- சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேத வேதாந்தவர்த்தனீ மகா சபையாரால் -1934.-வெளியிடப்பெற்றது-
அண்ட கோளத்தாரணு’ என்ற பாசுரம், ‘ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்’ என்ற தலைக்குறிப்புடன், ஆழ்வார் திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதல் என்னாற் காணப்பட்டது. அதனை மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை தொகுதி 3, பக்கம் 405ல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்காலத்துப் பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் ‘இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை’ என்ற குறிப்பும் ஆங்குத் தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப் பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில், சிலவாண்டுகட்குமுன் அதன் உண்மைப்பொருள் இஃதென்பதை உணரலாயினேன்.-அப்பாசுரத்தின் சொற்றொடர்ப் பொலிவினையும், அதனுளடங்கிய அரிய பெரிய வடமொழிப்பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அஃது ஆழ்வார் அருளிச் செயலாதற்குரிய எல்லாத் தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத் தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மைப் பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியைக் குருபரம்பரை நூல்களும், ‘அண்டகோளத்தாரென்னு மாரியத் தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்’ (கடவுள் வணக்கம், 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராகத் தெரியும் கூடற்புராண ஆசிரியரும் கூறுவது, ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.இவ்வரிய பெரிய பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்துக் கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கப் பெற்ற இப்பாசுரார்த்தத்தைக் கேட்டு மகிழ்ந்த சென்னைத் திருவல்லிக்கேணி ஸ்ரீ வேதவேதாந்த வர்த்தனீ மஹாஸபையார், இதனைப் பலரும் அறிய வெளியிடவிரும்பியவாறு, அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய, திருவல்லிக்கேணி: ஸ்ரீபார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ்பஹதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹாசபையார்க்கும் என் மனமார்ந்த பெருநன்றி உரியதாகும்.–ஸ்ரீ ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள்-
சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் – பாரிற்
றெருள் காட்டும் வேதச் செழுந் தமிழ் நா வீறன்
அருள் காட்ட மெய்ம்மை யறிந்து–தற் சிறப்புப் பாயிரம்
அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ் (10)
செறி பொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.–ஆழ்வார் சங்கத்தார்க்கு எழுதிய அகவல்-
அண்டகோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்தினுடைய அரிய அணு வளர்ந்து என்றவாறு.-ஆகல் – வளர்தல்; பரிணமித்தல்; வளர்தற்குக் காரணமாகிய ஊழினை ‘ஆகலூழ்‘ (திருக்குறள் – 372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது அணு என்பது வடநூற் கொள்கை (பாகவதம்). அண்டகோளத்து ஆரணு – அண்டகோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின்வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதி நிலை (இதுவே படைப்பிற்கு முன்னிலை யுமாகும்) பரமாணுவே என்பதை ஸ்ரீ பாகவதம் 3-ஆம் ஸ்கந்தம் (11 – 1) ‘பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியப்படுவது’ என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி 3-ஆம் ஸ்கந்தம் 11
பிண்டம் பூத்த பேரெழி லொருமை என்பது சராசர ரூபமான பிராணிகள் மலர்தற்குக் காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.-ஆம் அத்தியாய முடிவில் ‘ஐம்பது யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்மடங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்டகோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடி யண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் ஸ்வரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரமம் எனவுங் கூறுகின்றனர்’ என்று வருதலான் இதனுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பரதெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தாரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தைக் கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். ‘ஆகி’ என்று பரிணமித்தல் கூறுதலான் இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுவுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. ‘அண்டகோளத்து ஆரணு’ என்புழி அத்துச்சாரியை ‘காமத்துக் காழில்கனி’ (திருக்குறள் – 1191) என்புழிப்போல அல்வழிச்சாரியையாகக் கொண்டு அண்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது. ஆகிப் பூத்த மரம் என இயையும்.
ஈருயிர் மருங்கின் ஆருயிர் தொகுத்து என்புழி, ஈருயிர் மருங்கின் என்பது இருவகைப்பட்ட உயிர்களின் பக்கத்தில் எ-று.-மோக்ஷாநந்தத்திற்கு உபகாரமாகிய தெய்வ ஸம்பத்தையுடைய உயிர் என்றும், ஸம்ஸார பந்தத்திற்கு உபகாரமாகிய ஆஸுர ஸம்பத்தையுடைய உயிரென்றும் வகுக்கப்பட்ட இருவகை உயிர்களின் பக்கலில் என்று கொள்க. ஸ்ரீகீதை பதினாறாம் அத்யாயத்தில் ‘இவ்வுலகிற் பிராணிகளின் ஸ்ருஷ்டி, தேவர்களின் ஸ்வபாவ முள்ளதென்றும், அஸுரர்களின் ஸ்வபாவமுள்ளதென்றும் இருவகைப்படும்’ என்று பகவான் அருளிச்செய்ததை ஈண்டைக்கு நோக்கிக் கொள்க. இனி ஈருயிரென்றது ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்தில் பகவானைத் தொழாரும் தொழுவாருமாகிய ‘துஷ்க்ருதிந: ஸுக்ருதிந:’ என்று கூறப்பட்ட இருவகை உயிர்களை எனினுமாம். தொழாராகிய துஷ்க்ருதிகள் நராதமர், மாயை கவர்ந்த மதியினர், அஸுரஸ்வபாவமுள்ளவர், மூடர் என்று நால்வகையினர் எனவும், தொழுவாராகிய ஸுக்ருதிகள் ஆர்த்தன், ஜிஜ்ஞாஸு, அர்த்தார்த்தி, ஞானி என நால்வகையினர் எனவும், இவருள் ஞானி அத்யர்த்த ப்ரியனான மேன்மையனெனவும், அப்பெருந்தகையோன் கிடைத்தற்கரியோனெனவும், அவனே ஸர்வம் வாஸுதேவனென்னும் ஞானவான் எனவும் அருளிச் செய்தலால் தொழாரும் தொழுவாருமாகிய இருவகை உயிர்களின் பக்கலில் என்றாலும் பொருந்தும்.
‘ஆருயிர் தொகுத்து’ என்றது கிடைத்தற்கரிய உயிர்களாகிய தெய்வஸம்பத்து நிறைந்த ஞானிகளாகிய பரமைகாந்திகளைத் தன்னடிநீழலிற் குழாங்கொளச் செய்து என்றவாறாம். ஆருயிர் – ‘ஸமஹாத்மா ஸுதுர்ல்லப:’ என்றபடி தனக்குங் கிடைக்கரிய மஹாத்மாக்கள் எ-று. வாஸுதேவ தருச்சாயையை விட்டுப் புறம்போகாத பெருந்தகையார் அவரே என்க. மஹாத்மா என்பதே ஆருயிர் எனப்பட்டதெனினும் பொருந்தும். தொகுத்து என்றதனால் கிடைத்தற்கரிய இப்பரமைகாந்திகளைத் தன்னடி நீழலில் திரள்வித்தது பகவத் ப்ரயத்நமென்று காட்டியவாறு. ப்ருஹ்ம ஸூத்ர பாஷ்ய முடிவில் ‘அத்யர்த்தப் பிரியம் ஞாநிநம் லப்த்வா‘ (இவ்வளவென்று சொல்லற்கரிய ப்ரீதியுடையவனாகிய ஞானியைத் தன் பேறாக அடைந்து) என்று ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளுதலான் அளவிடப்படாத பிரியனாகிய ஞானியைப் பரதெய்வம் தன் லாபமாக அடைதல் கருத்தல்லது ‘ஞானி பரதெய்வத்தை அடைந்து’ என்பது ஆழ்வார் கருத்தாகாமை கண்டுகொள்க
இனி, ஈண்டு மருங்கு என்றது சுற்றம் எனக் கொண்டு, இருவகையுயிராயுள்ள சுற்றத்திற் கிடைத்தற்கரிய தன் ஆத்மஸமாநரான அரியஞானிகளைத் தொகுத்து எனினுமாம். ‘ஞானீ த்வாத்மைவ மேமதம்’ (ஞானியோ என்னுயிரே யென்பது என் கொள்கை) என்னும் ஸ்ரீ கீதையால் ஞானி பகவானுக்கு ஆத்மாவாதல் தெளியலாம். தீயவுயிரையும் சுற்றமென்றது, வெறுக்கின்ற அவர் பாலும் உறைதலானும் அவரையும் சன்ம சன்மாந்தரங் காத்துச் சேறலானும், அவர்க்கும் அருள இருக்குந் தாயும் தந்தையும் தானாதலானும், அவரையும் மகவென்று கருதித் திருத்தமுயறல் காட்டியவாறு. ‘தாய் தந்தை எவ்வுயிர்க்குந் தான்’ என் இவ்வாழ்வாரே அருளிச்செய்தலானிதனுண்மையுணர்க. ‘பிதா மாதாச ஸர்வஸ்ய’ என்பது மஹாபாரதம். சுத்த ஸத்வ நிஷ்டரான பரமைகாந்திகளைத் தொகுத்து நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பிற் றொன் மிகு பெருமரம் என இயைக்க. தொகுத்துப் பரப்பில் மிகு மரம் என்க.
4. நித்திலத்தன்ன வெண்மணற் பரப்பில் என்றது முத்துக்களை யொத்த வெண்மையான ஒளியையுடைய பரந்த மணற் பிரதேசத்தில் எ-று.-வெண்மையும், ஒண்மையும், குளிர்த்தியும், உயர்த்தியும், தூய்மையும், அருமையும் முதலிய சிறப்பால் நித்திலத்தன்ன என்றார். வெண்மணற் பரப்பு என்றது ச்வேதத்வீபம் எ-று. இது, திருப்பாற்கடலின் வடகரையிலுள்ள மஹா பரிசுத்த ஸ்தல விசேஷம். திருப்பாற்கடல் கொழித்த நித்திலத்திற்கும் இப்பரப்பில் வெண்மணற்கும் வேற்றுமை காண அரியதாய் ஒரே சுவேதமயமா யுண்மையால் இவ்வாறு கூறப்பட்டது. இதனைப் பாரதம் சாந்திபருவம் (343) ‘பாற்கடலின் வடபாகத்திற் பேரொளி நிறைந்த ச்வேதத்வீபம் இருப்பது; அங்குள்ள மக்கள் சந்திரனையொத்த காந்தியினர்; நாராயண பராயணர்; அவ்வன்பர் புருஷோத்தமனை ஏகாந்த பாவனையாலடைந்தவர்; பொறிகளால் வேறொன்றும் நுகராதவரும், உண்ணாதவரும், அசைவற்றவரும், நறுமணங்கமழ்பவரும், ஏகாந்திகளு மாவர்’, என வருவனவற்றா லறிக. இந்த த்வீபத்திற்கு நாரதமஹருஷியானவர் தெய்வகிருபையாற் சென்று ஈங்குள்ள அநிருத்த மூர்த்தியைப் பலபடியாக ஸ்துதித்ததும் பரமைகாந்திகளைத் தரிசித்து ஆச்சரியமடைந்ததும் பிறவும் அப்பருவத்தே கண்டு கொள்க. -இனி ஸஹஸ்ரநாம த்யான சுலோகத்தில் ‘க்ஷீரோதந்வத்ப்ரதேசே’ என்பதில் திருப்பாற்கடல் வடகரையில் மணி விளக்கெடுக்கும் மணற்பரப்பில் நித்திலமாலையணிந்த அணையில் இம்மூர்த்தி எழுந்தருளி இருப்பது கூறுதலான், அதற்கியைய நித்திலப் பரப்பில் எனவும் அன்ன வெண்மணற் பரப்பில் எனவும் கூறினு மமையும். அன்ன வெண்மணல் – அத்தகைய வெண்மணல்.
5. வேரும் வித்தும் இன்றி = தான் நிலைபெறுதற்குக் காரணமான மூலமும், தானுண்டாதற்குக் காரணமான பீஜமும் தானே யன்றி வேறில்லாமல் எ-று.-வினைகளையே வேராகவும், அவ்யத்தத்தை வித்தாகவும், பிறவிகளைக் கிளைகளாகவும் கொண்ட ஸம்ஸார வ்ருக்ஷத்தின் (ஸ்ரீகீதை; விஷ்ணு புராணம் ௭ – ஆம் அத்யாயம்) இது வேறாய பரப்ருஹ்ம வ்ருக்ஷம் என்பது தோன்ற வேரும் வித்தும் இன்றி என்றார். எல்லாப் பொருட்குந் தானே வேரும் வித்துமாகு மென்றவாறு. இத்தன்மையை,-‘வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார்முகில் போல்வண்ணன்‘ (திருவாய்மொழி, 2,8,10) என்று பணித்தலாறிக. ஸ்ரீ கீதையிலும் ‘பீஜம்மாம் ஸர்வ பூதாநாம்‘ (எல்லாப் பிராணிகட்கும் வித்தாகிய என்னை) என்பதனால் எல்லா பிராணிகட்குந்தானே வித்தாயிருத்தலைப் பகவான் வெளியிட்டருளினான். ‘எல்லாப் பொருள்கட்கும் வித்தாய்’ ‘தானோருருவே தனிவித்தாய்’ (திருவாய்மொழி, 1 – 5 – 2, 4) என்று பணித்தல் காண்க. ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் ஸம்ஸார வ்ருக்ஷத்திற்கு அவ்யக்தத்தை வித்தென்று கொண்டு, வித்துண்டாதற்கு ஆகாயம் காலம் முதலிய காரணமாதல் போல, அஃதுண்டாதற்கு ஸ்ரீஹரிபகவான் காரணன் என்பர் (ஏழாம் அத்யாயம் பார்க்க). இதனால் அவ்யக்தத்தின் பரிணாமத்திற்கு இறைவன் காரணனாதல் அறியலாம்.
5 – 6 தானே தன்னிலையறியா – ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தானேயும் தன் ஸ்வபாவ மகிமை அறியலாகாத எ-று.-தன்நிலை – தன் தெய்வநிலை: ‘-துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–திருவாய்மொழி (3, 10, 6); அஃது அநந்த கல்யாண குணமுடைமை. அஃது அவனால் இவ்வளவென்றறியப் படுமாயின் அநந்தம் என்று முழங்கிய சாஸ்த்ரங்கள் வீணாகுமென்க. ஒருவன் தன்கண் அச்சமும் தன் வலியில் ஐயமும் உள்ள போதன்றே தன்னை அளந்தறியப்புகுவான்? அவ்விரண்டுமில்லாமையால் தன்னிலையை அளந்தறிதலே யில்லாமை அறிக. அசித்தினும், பத்தர் முக்தர் நித்யர் எனப்பட்ட ஆத்மாக்களினும் வேறாய்ப் பிரிப்புண்டு அவற்றிற்கு ஈசனான தானே அறியலாகாத என்றவாறாம். அறியா மரம் என இயையும். ‘தனக்குந்தன் றன்மை யறிவரியானைத் தடங்கடற் பள்ளியம்மானை’ எனத் திருவாய்மொழியில் (8, 4, 6) வருவதான் இதனுண்மை யுணர்க. ஆண்டு, ஈட்டில் நம் பிள்ளையாசிரியர், இத்திருப்பாட்டின் கருத்தொடு பொருந்தவே ‘ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனான தன்னாலுந் தன்னைப் பரிச்சேதிக்கப் போகாது ஸ்வேத த்வீபவாசிகள் ஆஸ்ரயிக்கைக்கு …. திருப்பாற் கடலிலே கண்வளர்ந்தருளினவனை‘ என வ்யாக்யானமிட்டது காண்க.
இனி யஜுர்வேத காடகத்தில் ‘த்வமேவத்வாம் வேத்த யோஸி ஸோஸி (நீ யாராயுள்ளனை அவனாயுள்ளனை யென்று நின்னை நீயே யறிகிற்வை) எனவும், ஸ்ரீகீதையில் (10 – 15) ‘நீ நின்னை ஸ்வயமாகவே நின்னறிவால் அறிகின்றனை’ எனவும், பரிபாடலில் (3) ‘நின்னைப் புரைநினைப்பினீயல துணர்தியோ’ – நின்னை உயர்வுகூறக் கருதின் அது நீயே யுணரினல்லது பிறரானுணரப்படுதியோ (பரிமேலழகருரை) – எனவும் வருதலான் ஈண்டுத் தானே தன்னிலையறியா என்பது தன்னியல்பு தானே யறிந்து எனக்கருதினாரெனினு மிழுக்காது. இதற்கு அறியா மிகு மரம் என இயைக்க. இவ்வாறு பிறர் அறியாமைக்குக் காரணமிவையென, தொன்மிகுபெருமரம் என்று இப் பரப்ருஹ்ம வ்ருக்ஷத்தை விசேடிக்குமாற்றால் விளக்குகின்றார்.
6. தொன்மிகு பெருமரம் என்பது அநாதியே மிகுத்த பெரிய பர ப்ருஹ்மமாகிய வ்ருக்ஷம் எ-று.-காலத்தாலும் தேசத்தாலும் வஸ்துவாலும் பரிச்சேதிக்கப்படுவதொன்றன்றே ஒருவர் அறிவிற்கு விஷயமாவது? இஃது அம்மூன்று பரிச்சேதமும் கடந்துள்ளதென்று இவ்விசேடண்ங்களாற் கொள்ளவைத்தவாறாம். தொன்மரம் என்றதனால் காலவளவையைக் கடந்ததென்றும், மிகுமரம் என்றதனால் தேசவளவையைக் கடந்ததென்றும், பெருமரம் என்றதனால் வஸ்து அளவையைக் கடந்ததென்றும் தெளிவித்தது கண்டுகொள்க. ‘ப்ருஹத் ரூப:’ என்னுந் திருநாமம் பற்றிப் பெருமை வஸ்துபரிச்சேதங் கடந்ததுக்கு ஆயிற்று. ‘இனைத்தென வெண்வரம்பறியா யாக்கையை’ என்பது பரிபாடல். இதற்குப் பரிமேலழகர் ‘இனைத்தென எண்ணும் எண்ணிற்கு எல்லை யறியப்படாத வடிவினை யுடையை‘ என்றுரைத்தலானறிக. இக்காலத்ததென்றும், இவ்விடத்ததென்றும், இப்படித்தென்றும் அறியலாகாததென்று குறித்ததெனக் கொள்க.
மரம் என்பது உவமையாற் போந்த பெயர்; தன்னடி நீழலிற் புக்கார் பயன்றுய்த்து வாழ நிற்கும் மரம் போலுதலான் இறைவனை மரமாக்கினார். ‘அருஞ்சுரத்து மரம் போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு‘ என்பர் நச்சினார்க்கினியர் (சீவகசிந்தாமணி, 3). ‘வாஸுதேவதரு’ என்ப. வ்ருக்ஷ: என்பது, இறைவன் ஆயிரநாமத்துளொன்றாதல் காண்க. ஸ்ரீ பராசரபட்டர் ‘உயிர்கட்கு ஜீவனமாகி அவ்வுயிர்கள் தனக்கிழைக்கும் அபராதங்களைப் பொறுத்து நிற்றலான் மரம்‘ என்று பெயராயிற்றென்றார். மூன்றுலகிற்கும் நிழல் செய்தலான் இறைவன் ‘பூர்புவஸ்வஸ்தரு:’ என்று பெயர் சிறப்பன் என்பதும் அவ்வாயிர நாமத்தே கண்டது. ப்ரமாணங்களிற் றலைசிறந்த வேதம் ‘வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவிதிஷ்டத்யேக:‘ என்று முழங்கிற்று. ஒருவன் மரம் போல அசையாது திவ்ய லோகத்திலுள்ளானென்பது இதன் பொருள். வால்மீகி பகவானும் தாரை கூற்றால் ‘நிவாஸ வ்ருக்ஷஸ் ஸாதூநாம்‘ (ஸாதுக்களுக்குப் புகலிடமான மரம்) என்று பெருமாளைக் கூறினான். ‘ப்ரஹ்மதரு’ என்று ப்ரஹ்லாதாழ்வான் கூற்றில் வைத்துப் பராசர பகவான் வெளியிட்டு அதனினின்று முக்தியென்னும் பழம் விழுவதென்னுங் கருத்தால் ‘முக்தி பல ப்ரபாத:’ என விளக்கியருளியதையும் ஈண்டைக்கு நோக்குக. இவ்வாழ்வார் திருப்பாட்டிற்கு இப்பராசரர் கருத்தே உடன்பாடாகும்.-இம்முன்னோர் மொழி பொருளைப் போற்றியே இவ்வாழ்வார் ‘மரம்’ என்றாரென்க. ‘என்னை ஆக்கிக் கொண்டெனக்கே தன்னைத் தந்த கற்பகம்‘ என்பதும் மரங்களினுயர்ந்ததாகக் கூறியதாகும்.
அன்றியும் ஈண்டு ஸ்வேதத்வீபத்து அநிருத்த மூர்த்தியை ‘மரம்’ என்றது, அம்மூர்த்தி பச்செனத் தழைத்த திருவடிவுடையனாதல் பற்றியென்று கொள்ளத்தகும். பரிபாடலின் கண் அநிருத்தமூர்த்தியைப் ‘பைங்கண் மாஅல்‘ என்றதனையும் அதற்குப் பரிமேலழகர் ‘பசிய உடம்பினையுடைய அநிருத்தனே’ என உரை கூறியதனையும் நோக்கித் தெளிக. ( ஈண்டே ‘பொன்கட்பச்சை’ என்புழிச் ‘சிவந்த உடம்பினையுடைய காமனே’ எனவுரைத்துப் ‘பச்சை யென்பது ப்ரத்யும்நனென்னும் வடமொழித் திரிபு’ என விளக்கியதனையும் நோக்கிக் கொள்க.)பிற்காலத்தவரும் இக்கருத்தே தழுவி ‘அத்தியின் மத்தியிலே … நித்திரைகொள்ளுந் தமாலத்துருவன்’ (அழகர் கலம்பகக் காப்பு) எனப்ப் பாடியதனையுங் காண்க. மஹாபாரதம் சாந்திபர்வத்தில் நாரத மஹருஷி ஸ்வேதத்வீபஞ் சென்று இம்மூர்த்தியை ஸ்துதித்த ஸ்தோத்திரத்தில் ‘வநஸ்பதயே நம: (வனங்கட்குப் பதியாகிய பெரு மரத்திற்கு நமஸ்காரம்) என வருதலும் ஈண்டு நினைக்கத்தகும்.
‘மனிசரு மற்று முற்றுமாய்‘ என்னுந் திருவாய்மொழி யீட்டில் ‘தடங்கடற் சேர்ந்த பிரானை’ என்புழி நம்பிள்ளை ஆசிரியர் – ‘திருப்பாற்கடலிலே அநிருத்த ரூபியாய்க் கொண்டு கண்வளர்ந்தருளுகிற இடம் அவதார கந்தமிறே (அவதாரங் கிளைத்தற்குரிய கிழங்கு-கந்தம் – கிழங்கு. அவதார கந்தம் – அவதார மூலம். கந்தம் மூலம் கிழங்கு மூன்று மொருபொருளன.); வெள்ளத்தரவிற் றுயிலமர்ந்த வித்திறே‘ என்று அருளிச் செய்ததனையும் ஈண்டைக் கேற்ப நோக்கிக் கொள்க. ப்ரச்நோபநிஷத்தில் ‘ஒரு விருக்ஷத்திற் பல பறவைகளுந் தங்கியிருத்தல்போல உலகெல்லாம் பரமாத்மாவினிடத்துத் தங்கியிருப்பன’ என்பதனால் இஃது உவமையாற் போந்த பெயரென்பது அறியப்படும். விஷ்ணுபுராணத்தும், மகாவிஷ்ணு விருக்ஷம் என்றும், ஸ்ரீதேவி அதன்கட் படர்ந்த கொடி என்றும் பராசரபகவான் அருளிச் செய்தான் (1, 8). மரம் தன் பழத்தைத் தானுண்ணாது தன்னையடைந்த உயிர் உண்ணநிற்றல்போல இறைவனுண்மை உணர்ந்துகொள்க. ‘பெருமரம்’ என்புழிப் பெருமை தான் பெரியதாயிருப்பதனாலும், தன்னையடைந்ததைப் பெரிதாக்குதலாலும் உள்ளது என்பர். இதனை விஷ்ணுபுராணத்தில் ப்ருஹ்ம சப்தத்திற்கு ஸ்ரீ பராசர பகவான் ‘பெரிதாதலானும் பெரிதாக்குதலானும் ப்ருஹ்மம் என்று அறியப்படுவது’ என்று கூறியதனாலும் உணரலாம். வெண்மணற் பரப்பில் வேரும் வித்துமின்றி ஆரணுவாகிப் பிண்டம் பூத்த தன்னிலையறியாத் தொன்மிகு பெருமரம் என்க.
7. மூவழி முப்பழம் முறைமுறை தருதலின்: மூவழி – ஐச்வர்யகதி, ஆத்மகதி, பரமாத்மகதி என்ற மூன்று நெறியில்: அசித்து சித்து பரதெய்வம் என்ற மூன்றேயுண்மையால் அவற்றை யடையும் நெறிகளும் மூன்றேயாயின. ஐச்வர்யம் – இனிய தேஹவிசேஷமும் அஃது அநுபவித்தற்கினிய தாரக போஷக போக்யங்களும் ஆக அசித்துப் பரிணமிப்பதேயாகும்; இவை இந்திரச் செல்வம் முதலியன என்க. ஆத்மகதி என்பது கைவல்யமார்க்கம்; கேவலம் ஆத்மாவை அநுபவித்தற்குரிய வழி எ-று. பரமாத்மகதி – நிரதிசயாநந்தமான மோக்ஷ மார்க்கம். இந்நெறிகளிற் செல்லும் அதிகாரியும் மூவகையினர் என்பர். ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் என் இருவகைப்படும் ஐச்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும், மோக்ஷார்த்தியுமென மூவகைப்படுதல் -ஸ்ரீகீதை ஏழாம் அத்யாயத்திற் கண்டது. இம்மூன்றதிகாரிகட்கும் ஈச்வரனைப் பக்திபூர்வகமாக அடைதல் வேண்டப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு மரத்திலுண்டாகும் பல்வகைக் கனிகளை அடைய விரும்பின பலரும் அம்மரத்தை ஆச்ரயிப்பது இன்றியமையாததோ, அங்ஙனமே இம்மூன்றதிகாரிகளும் தாம்தாம் அடைய விரும்பிய பலன்களை எய்தற்குப் பலப்ரதாதாவாகிய ஈச்வரனை அடைதல் இன்றியமையாததாகுமென்றுணர்க. அவர் கருதிய பலன்கள் வேறேனும், இம்மூவரும் ஆச்ரயிக்கவேண்டிய இடம் ஒன்றேயாதல் நன்கு துணிக. இதனாலன்றே, ஆளவந்தாரென்னும் பெரியார் ‘பக்தியோகமே இம்மூன்று பலன்களுக்கும் காரணம்’ என்று கீதார்த்தஸங்க்ரஹத்தில் (௨௭) விசதமாக அருளிச்செய்தார். இதனை, ‘பக்தியோகஸ்ததர்த்தீசேத்’ என்பது முதலாக வருமிடங்களிற் கண்டுகொள்க. ஸ்ரீ கீதாபாஷ்யத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் ‘தேஷாம் ஜ்ஞாநீ’ என்கின்ற ச்லோக விளக்கத்தில் ‘ஞானிக்கு என்னொருவனிடத்திற் பக்தி, மற்றை இருவர்க்குமோவெனின் தங்களிஷ்ட பலத்திலும், அவற்றிற்கு ஸாதனமாகையாலே என்னிடத்திலும் பக்தி’ என்று பக்தியையே இம்மூன்றற்கும் ஏதுவாக்கி அது வித்யாஸ பலன்றருவது இவ்விதமென்றுங் கூறியருளினார்.
மஹாபாரத்தத்திலும் ‘சதுர்விதா மமஜநா பக்தா:’ என்று, ஸ்ரீகீதையிற் சொல்லியபடியே, ஐச்வர்யார்த்தியை ஆர்த்தன், அர்த்தார்த்தி என இருவகைப்படுத்து மற்றை யிருவரொடுங் கூட்டி, நால்வரும் என் பக்தர்கள் எனக்கூறியுள்ளதும் காண்க. இவற்றாற் கர்மத்தையே முக்யமாகக் கொண்டு அதனடியாகப் பிறந்த ஞானந் துணையாக ஐச்வர்யங்களை விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்திமார்க்கம் ஐச்வர்ய கதி என்றும், ஞானத்தையே முக்யமாகக் கொண்டு கர்மந்துணையாக ஆத்மாவை அடைய விரும்பி ஈச்வரனை உபாஸிக்கும் பக்தி மார்க்கம் கைவல்யகதி என்றும், கர்மஞானங்கள் துனையாக ஈச்வரனையே யடையவிரும்பி அதனையே உபாஸிக்கும் ஏகபக்திமார்க்கம் பரமாத்மகதி அல்லது மோக்ஷகதி என்றும் நன்கு துணிந்துகொள்க. ‘நோற்ற நோன்பிலேன்’ என்னுந் திருவாய்மொழி யீட்டில் நம் பிள்ளை யாசிரியர் ‘ஞான கர்மங்களிரண்டுங் கூடினாற் பக்தி கூடியல்லது நில்லாது’ என்று உரைத்ததனையும் தெளிய நோக்கிக் கொள்க. இதனாலன்றே ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரகத்தில்,’
முப்பழம் – ஐச்வர்ய சுகம், கைவல்ய சுகம், மோக்ஷ சுகம் என்ற் மூன்று கனிகளை எ-று. இம்மூவகையை‘ப்ருஹ்மணோஹி ப்ரதிஷ்டாஹம்‘ என்னுங் கீதையின் பாஷ்யத்திற் காண்க.
‘இறவாதுவி காரம்மிலை யாகும்பிர மத்திற்
கெவ்வேதுவின் யான்றங்கிட னவ்வேதுவி னழியா
அறனால்விளை தற்கும்மொரு முடிபேதுணி புடையா
ரடையின்ப மதற்குந்நிலை யிடனாகுவ லம்மா’-என்பது கீதைப்பாடல்.முறைமுறை – அவரவர் அர்த்தித்த கிரமங்களில் எ-று. அதிகாரியும் பலராய் அவர் விருப்பமும் பலவாதலின் முறைமுறை என்று அடுக்கினார்.
‘மறைமுறையால் வானாடர் கூடி – முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தா லொவ்வாதே‘ (பெரியதிருவந்தாதி – 61) என்பது போலக் கொள்க. முறை என்று நூற்குப் பெயராதலான் முறை முறை என்பது நூன்முறையென்றால், அவனிட்ட வழக்கு சாஸ்த்ரம் என்பதாகாது சாஸ்த்ரமிட்ட வழக்கிலே அவன் தருவதாய் இறைவனுக்குத் தலைமை கூறாது சாஸ்த்ரத்திற்கே அவனினுமிகுத்துத் தலைமை கூறுவதாக முடியும். அன்றியும் சாஸ்த்ரம், பரதெய்வத்திற்கும் அதன் செயற்கும் ஞாபகவேதுவல்லது காரகவேது ஆகாமையு முணர்க (வாய்மொழியோடை மலர்ந்த தாமரைப்பூ’ என வரும் பரிபாடலிற் பரிமேலழகர் ‘தாமரைப்பூ படைப்பிற்கு முதலாக வந்து மலரும் என்பதற்கு வேதம் ஞாபகவேதுவாதலின்’ எனவுரைத்தது காண்க). சாஸ்த்ரத்திற்கும் பரதெய்வம் எட்டாதது என்று கூறுதலானும் பரம்பொருளின் தலைமை யுணரப்படும். தருதலின் = தருதலான் எ-று. தருதற்கண் எனினும் அமையும். தருதலான் ஒன்றுண்டு ஒண்சுவை தருவது என இயையும். ஈதலின், கொடுத்தலின் என்று உயர்த்தியும் தாழ்ச்சியும் தோன்றக்கூறாது ‘தருதலின்’ என ஒத்தோன் கூற்றாற் கூறியது, இறைவன் தன்னடைந்தார்க்குத் தன்னையே ஒக்க அருள் செய்தல் குறித்த தென்றுணர்க. ‘வீடும்பெறுத்தித் தன்மூவுலகுக்குந்தரு மொருநாயகமே’ (திருவாய்மொழி ௩ – ௧0 – ௧௧) என வரும் ஆழ்வார் திவ்ய ஸூக்திகளால் இதனுண்மை யுணர்க. ஒருநாயகம் ஈச்வரனுடையதாதல் தெள்ளிது. தன்னொக்க அருளலால் அஃது இவனுக்காயிற்றென்று உணர்க. தன் மூவுலகு என்றதனால் ஐச்வர்யம் ஈச்வரனதாதல் தெளியலாம். ஐச்வர்யம் என்ற சொல்லே இவ்வுண்மையை விளக்கும்.
ஒன்றுண்டு ஒண்சுவை தருவது – ஒண்மையொடு கூடிய இனிமையைத் தருவது ஒன்று உள்ளது எ-று.-ஒண்மை – ‘ஒளிக்கொண்ட சோதியுமா யுடன்கூடுவதென்று கொலோ’ என்ற திருவாய்மொழியிற் கூறியருளியபடி, ஜ்யோதிர்மயமான முக்தஸ்வரூபத் தன்மை. ஒண்மை தருவது கூறியதனால் இவ்விருக்ஷம் ஜ்யோதிர்விருக்ஷம் என்பது உய்த்துணரலாகும். சுவை – பரமஸாம்யமான நிரதிசயாநந்த ஸுகம். ஈண்டே தருவது கூறியதனால் இச்சுவை பரமஸாம்யமாதல் நன்கு துணியப்படும். ‘தம்மையே யொக்க வருள்செய்வர்‘ எனவும் ‘நிரஞ்சன: பரமம் ஸாம்யம் உபைதி’ எனவும் ‘போகமாத்ர ஸாம்யலிங்காச்ச’ எனவும் ‘பரஞ்ஜ்யோதிருபஸம்பத்ய‘ எனவும் வருமிடங்கள் நோக்கிக் கண்டு கொள்க. இதனால் இது மோக்ஷமாகிய பேரின்பமென்று குறித்தார்.-
9 – 11. கல்லின் எழுந்து கடலினழுந்தி அறுகாற்குறவன் நீரற விளைக்கும் செறிபொழிற் குப்பை தரு கட்பு – இதன்கண், அறுகாற்குறவன் – அறுகாற்கு உறவன் என்றவாறு. அறுகால் – ஆறு வாய்க்கால்; ஆறு வழி எனினுமமையும். இவை ஆறிந்திரியங்களென்றவாறு. ஆறிந்திரியங்கள் – மெய் வாய் கண் மூக்குச் செவி மனம் என இவை; ‘இந்திரியாணி ஷட்’ (பொறிகள் ஆறு) என்பது வடநூல் வழக்கு. கீதாசாரியனும் ‘மநஷ் ஷஷ்டாநீந்த்ரியாணி’ என அருளிச்செய்தான். ஆறிந்திரியங்கட்கும் உறவு பூண்டவன் பத்தாத்மா எனவறிக. இவன் உடம்பைவிட்டுப் புறப்படும்பொழுதும் இவ்வாறிந்திரியங்களையும் விடாது உடன் கொண்டு சேறலான் இவற்றிற்குச் சிறப்பாக உறவுபூண்டவன் என்று பெயர் பெற்றான். இவ்வுண்மையை,
பொறியீச் சுரனா முயிரெவ் வுடலிற்
புகுவானெதினின் றுபுறப் படுவான்
எறிகால் தொடுமவ் விடனின் றுமணத்
தினையீர்ப் பதுபோ லிவனீர்த் தெழுமே (கீதை – ௧௫ – ௮)என வருங் கீதைப்பாடலா லறியலாகும். ஜனன மரணங்களிற் சீவன் இந்திரியங்களுடன் வருவது போவதாயிருக்கு மென்பது ப்ருஹ்மஸூத்ரபாஷ்யத்து, இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதத்திலும், மூன்றாம் அத்யாயம் முதற்பாதத்திலும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இந்திரியங்களை வேதம் ‘தசமே புருஷேப்ராணா: ஆத்மைகாதச’ ‘சீவனிடத்தில் இந்திரியங்கள் பத்து, மனம் பதினொன்றாகும்’ என்றதினால் இந்திரியங்களை ப்ராணபதத்தால் கூறுதல் நோக்கி அதன் மொழிபெயர்ப்பாகிய ‘கால்’ என்பதனாற் பாடியருளினாரெனினும் ஸமஞ்ஜஸமே யாகும். பதினோரிந்திரியங் கூறியிருப்ப ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றது, கருமேந்திரியமைந்தும் சரீரத்துடன் உண்டாய் அதனோடு இறுதியில் நசித்துவிடுமென்று வ்யாஸ பகவான் ப்ருஹ்மஸூத்ரத்தில் அருளிச்செய்தது பற்றியென்று துணியப்படும். இதனை ‘ஹஸ்தாதயஸ்து ஸ்திதேதோ நைவம்’ என்பதற்கு ஸ்ரீ பாஷ்யகாரர் உரைத்தருளிய வாற்றானுணர்க. இதனால் இவ்வைந்தையுங் கொள்ளாது ஆறிந்திரியங்கட்கே உறவுள்ளவன் என்றார் என்க.
கல்லின் எழுந்து கடலின் அழுந்தி நீரற என்பது, மலையிடை நின்றும், கடலிடை மூழ்கியும் பசையற உணக்குதலான் எ – று.-இவற்றால் இந்திரியங்கட்கு உறவு பூன்ட பத்தாத்மா ஐச்வர்ய காமனாய் அஃதெய்தற்கு உபாயமாகத் தீர்த்தம் படிந்தும், மலையிடைத் தனி நின்றும், நெருப்பிடை நின்று பசையற வுணக்கியும் தவஞ்செய்தல் முதலிய கர்மங்களைக் குறித்தாராவர். இதனை-பொருப்பிடையே நின்றும் புனற்குளித்து மைந்து நெருப்பிடையே நிற்கவுநீர் வேண்டா‘ (மூன்றாந்திருவந்தாதி – ௭௬)என வரும் பாசுரங்கொண்டுணர்க. எழுதல் – இராது நிற்றலாதலானும், கல் – பொருப்பாதலானும் ‘பொருப்பிடையே நின்றும்’ என்பதனையே ‘கல்லின் எழுந்து‘ என்பதனாற் கூறினார். ‘கல்லுங் கனைகடலும் வைகுந்த வானாடும்‘ (பெரிய திருவந்தாதி 68) என்புழிக் கல் என்பது பொருப்பாதல் காண்க. ‘வடபெருங்கல்’ எனப் புறப்பாட்டினும் இமயமலையைக் கூறுதல் காணலாம். புனற்குளித்து மென்பதனையே ‘கடலினழுந்தி’ என்று கூறிக்காட்டினார். தீர்த்தங்களிற் றலை சிறந்ததாகலின் கடலைக் கூறினார். ‘நீண்ட தோள் மால் கிடந்த நீளகடனீ ராடுவான், பூண்டநா ளெல்லாம் புகும்’ (மூன்றாந்திரு. 69) என்றபாசுரத்தால் இதன் உயர்த்தி நன்குணரலாகும். அழுந்தல் – மூழ்குதல். நீரற என்பது பசையற உணக்குதலாதலான் நெருப்பிடை நிற்றல் கூறினார். பரமைகாந்திகள் வேண்டாவென்று தள்ளியவற்றை இப்பத்தாத்மா ஐச்வர்ய காமனாய்ச் செய்தொழுகுமாறு கூறப்பட்டது. ‘நீரற’ என்பது பசையற வுணக்குதலைக் குறிப்பதாதல் ‘முழூஉவள்ளுர முணக்குமள்ள‘ (புறம் 219) என்று கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானை நல்லிசைப்புலவர் பாடியதனான் நன்கறியலாகும். ஐச்வர்யகாமன் பல்வகைக் கர்மங்களையே தலையாகக் கொண்டு காயம் வாட்டுதலை-படிமன்னு பல்கலன் பற்றோடறுத் தைம்புலன் வென்று
செடிமன்னு காயஞ்செற்றார்களு மாங்கவனை யில்லார்
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு மீள்வர்கள்’–4-1-9-
விளைக்கும் செறி பொழிற் குப்பை தருகட்பு – (அறுகாற்கு உறவன்) இவ்வாறு எழுந்து அழுந்தி நீர் அறுதலான் அவற்றின் பயனாக விளைக்கின்ற செறிந்த கற்பகச் சோலை உதிர்த்த குப்பைகள் தரும் வஞ்சம் எ-று. பொழில் என்றது, கற்பக முதலிய ஐந்தருக்களுள்ள சோலையாதலான். இதனைக் கற்பகச் சோலை என்பது தலைமையான வண்மை பற்றி. ஈண்டுக் கூறிய இந்திரச் செல்வம்,-‘இன்றளிர்க் கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை’-என்பதும், அதுவும் அவ்வைந்தருச்சோலை யுதிர்த்ததென்பதும், நல்லறிவாளர் கண்டுகைவிட்ட மயல் (துரால்) என்பதும் தோன்றச் செறிபொழிற் குப்பை என்றார். ‘குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை’ என்பது இவர் திருவாக்கு. இது, நல்கிய இறைவனை ஆங்கு மறப்பித்தலானும் புண்ணிய கர்மம் நசித்து மண்ணிடைத் தோன்றியவிடத்தும் அச்செல்வத்திற்கே வாசனையால் முயலச்செய்தலானும், ‘குப்பை தருகட்பு’ என்றார். கட்பு – களவு, வஞ்சம் எ – று. ‘செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது பேணார்’ என்ப. (பாரதம்)’வியன் மூவுலகு பெறினும் போய்த் தானேதானேயானாலும்’ (திருவாய்மொழி 8 – 10 – 2) என்று ஐச்வர்ய கைவல்யங்களைக் கூறியவிடத்து ஐச்வர்யார்த்தி மூவுலகும் அருமையிற் பெறுதல் கூறியதேனும் ஈண்டுத் தலைமைபற்றி இந்திரச் செல்வமே கருதினாரெனக் கொள்க.
இனி, இதற்கே வேறோருரை கூறுதும். அறுகாற்கு உறவன் என்புழி அறுமீனாய்க் கால்வடிவாகவுள்ள உரோகிணிக்கு உறவுபூண்ட சந்த்ரன் எ-று. உரோகிணி ஆறாய்ச் சகடம் எனப்பெறுதலும் சந்த்ரனுக்கு அதிகப்பிரியையாதலும் நூல்களிற் காணலாகும். இஃது அறுமீன் எனவும் பெயர் பெறுமென்பது ‘அறுமீனினைவனள்’ என வரும் அகநானூற்றின் குறிப்பில் ‘அறுமீன் – உரோகிணி’ எனக் கூறியதனானறிக. கால் – உருளை. ‘சகடக்கால்’ (நாலடி) எனவும் ‘கால்பார்கோத்து ஞாலத்தியங்கும்‘ (புறம். 185) எனவும் வருவன காண்க. வ்ருஷப வீடு சந்த்ரனுக்கு உச்சஸ்தானமாதலின் ஆண்டுள்ள உரோகிணியின்பால் அவன் மிகவும் உறவுள்ளவனாயினன் என்பர். ரோஹிணீசன் ரோஹிணீ நாயகன் என்பன சந்திரன் பெயர்களாகும்-இவன் நீரறஎன்றது, இவன் உடலமிழ்தத்தைத் தேவர் பருகலான் இவன் அமிழ்தம் அற என்றவாறாம். இவ்விதம் சந்த்ரன் அமிர்தமயமாய்க் குளிர்ந்த ஜலபரமாணுக்களாலே சுக்ல பக்ஷத்தில் தேவர்களையும் கிருஷ்ண பக்ஷத்தில் பிதுர்க்களையும் திருப்தி செய்கின்றான் என்று புராண ரத்னம் கூறுதலை நோக்குக (விஷ்ணுபுராணம் 2 – 12). இத் தேவர் வளர்ச்சிக்கு ஒருவன் உடல் தேயவேண்டுவதென்று குறித்தவாறாம்
இனிக் கல்லினெழுந்து கடலின் அழுந்தி என்பதனைக் கடலினழுந்திக் கல்லினெழுந்து என மாறிக் கூட்டுக. சிந்தாமணிப் பதிகத்திற் ‘குணமாலையை வைதுமாறி’ என்பதனை ‘மாறி வைது’ என மாறிக் கூட்டியதுபோல ஈண்டுங் கொள்ளற்பாலது; இவ்வளர்ச்சியும் நிலைபேறுடையதில்லையென்று இதிகாசங் காட்டியது இஃதென்க. இவ்விந்திரச் செல்வம் துர்வாஸ முனிவர் சாபத்தாற் கடலினழுந்தி மந்தரமென்னுங் கல்லானெழுந்து சந்த்ரன் நீரற விளைக்கும் செறிபொழிற்குப்பை என்றவாறாம். சந்த்ரன் விளைக்கும் பொழில் என்க. சந்த்ரன் தன் அமிழ்தம் அறா நிற்கவும், விளைக்கின்ற கற்பகச்சோலை எ-று. ஓஷதீசன் சந்த்ரனாதலான் அவன் விளைக்கும் பொழில் என்றார். இச் செல்வம் சந்த்ரன் விளைப்பதென்றாலும் இழுக்காது; என்னையெனிற் கூறுவேம். வீடு புகுதற்குரியது அர்ச்சிராதிகதியென்றும் சுவர்க்கம் புகுதற்குரியது தூமாதிகதி என்றும் வேதம் கூறும். இவ்விருகதிகளுள் ஐச்வர்யார்த்திகள் புகும் தூமாதிகதி, முதலிற் சந்த்ரனிடம் புக்கு அப்பாற் சுவர்க்கம் போகும் முறைமைத் தாதலின் ‘சாந்த்ரமஸம்’ என்று வழங்கப்படும். இச்செல்வம் திங்களாகிய உண்டியால் அமைவதனாலும் இதனுண்மை யுணர்க. பரிபாடலில், ‘நிறைமதி யுண்டி யமரர்க்கு’ எனவும், ‘அமரருண்டி மதி‘ எனவும், ‘மதியுண் அரமகள்‘ எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும்.
11 – 12. ஒன்று வித்து அறு கோட்டு – பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு.-இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள் – குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம்மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய தொன்று. இதனை ‘நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தினருங்க் குறளானான்‘ எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியினுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். ‘தானோருருவே தனிவித்தாய்‘ (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனே வித்தாகக் கூறப்படுதல் காணலாம்.
‘பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து பின்னும்
இறக்கவு மின்புடைத்தா மேலும் – மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்’ (பெரிதிருவந். 80)என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசதமாக எடுத்தோதி, அதன்கட் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்றமாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்தென்று தெளிவித்தார். ஏதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம் – துன்பம் எனினுமமையும்.-நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாங் கடை’ (இரண்டாந்திரு. 54)-ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினைந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே அவகாசமில்லை யென்று கொண்டு கடையாக்கினார். ‘அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவர்‘ (இரண்டாந் திருவந்தாதி, ௧௧) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பத்தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறுகூறலு முண்டு.-இனிக் கைவல்யத்தைத் தோடற்ற நெல்வித்திற்கு (௧, ௨௨) விஷ்ணுபுராணத்தில் உவமித்தலான், அதனையே ஈண்டுத் தழீஇயினாரெனக் கொண்டு ‘வித்தறு தோட்டு’ எனப்பாடம் ஓதி, ஒன்று அறுதோட்டு வித்து என்றாலும் நன்கு பொருந்தும். ‘நாற்கூற்றே மருந்து’ (திருக்குறள். ௬௫0) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது.
12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ – று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். ‘தேறுமா செய்யா அசுரர்களை‘ (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க; ‘ஆமாறொன்றறியேன்’ (திருவாய், 4, 9, 2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளக்கும் நாடன் என்க. ஜகத் சிருஷ்டி செய்பவன் எ – று. விளைக்கும் நாடன் என்பதனை நாடுவிளைப்பவன் என்று கொள்க; ‘செய்த வேள்வியர்’ (திருவாய் 5,7,6) என்பதனை வேள்வி செய்தவர் என்று கொள்வது போல. இவ்வழக்கு வடநூலிலே மிகவும் பயில்வதொன்று; பெருந்தமிழ்நூல்களிலும் ஆங்காங்குக் காணலாம்.
நாடு விளைப்பவன் – உலகு படைப்பவனாகிய பிரமன். நாடு உலகிற்காதல் ‘நாட்டைப் படையென் றயன்முதலாத் தந்த‘ என்னும் நாச்சியார் திருமொழியால் (14,9) அறிந்துகொள்க. இறைவன் ஆணையாற் பிரமன் நாடு விளைப்பது இம்மூன்று பெரும்பலன்களுள் ஒன்றேனும், உயிர்கட்கு ஆமாறன்றி வேறில்லை யென்பது கருத்தாகும். ஸ்ரீமத் பாகவதத்தில் (11 – 3 – 7) ‘ஆதிமூர்த்தி ஜீவனுக்கு உயர்ந்த ஸித்தி உண்டாம்பொருட்டுப் பூதங்களாற் பிராணிகளைப் படைத்தான்‘ என வருதலானும் உணர்க.-உய்யவுலகு படைத்து‘ எனப் பெரியாழ்வார் திருமொழியிலும் (1, 6, 1)-படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
பணிந்தேத்த வல்லார் துயராயவெல்லாந் துடைத்திட் டவரைத் தனக்காக்கவென்னத் தெளியா‘-எனப் பெரியதிருமொழியிலும் (10, 6, 7) வருதல் கொண்டு இவ்வுண்மை அறிக. உயிர்கட்கு அநுகூலிக்கவே உலகு விளைப்பதல்லது ப்ரதிகூலிக்கவில்லையென்பது கருத்து. இங்ஙனம் மாக்கதிக்கணாமாறு நாடு விளைப்பவனாகவும் ‘என்னொருவர் தீக்கதிக்கட் செல்லுந்திறன்’ எனப் பெரியோரிரங்குதலான் இஃதெளிதிலறியலாம். தீக்கதி புகுவது உயிர்கள் தம் தீயவினையால் என்றறிக.
‘நாவாயி லுண்டே நமோநார ணாவென்று
ஓவா துரைக்கு முரையுண்டே – மூவாத
மாக்கதிக்கட் செல்லும் வகையுண்டே யென்னொருவர்
தீக்கதிக்கட் செல்லுந் திறன்‘ (முதற்றிருவந்தாதி, 95)-என்னும் பாசுர நோக்கிக் கொள்க. வாய் படைக்கப்பட்டுள்ளது; அதன்கண்ணே நாப் படைக்கப்பட்டுள்ளது; நாரணா என்றுரைக்கும் உரை நித்யமாகவுள்ளது. இந்நாவையும் இத்திவ்ய நாமாவையுஞ் சேர்த்தால் ‘மாக்கதிக்கட் செல்லவகையுண்டே’ என்றோதியவாறாம். ஈச்வரன் உடம்பைப் படைப்பது பந்தம் ஒழிதற்கேயன்றி வேறொன்றற்கில்லை யென்பது.-ஆப்பங்கொழியவும் பல்லுயிர்க்கும் – ஆக்கை கொடுத்தளித்த கோனே குணப்பரனே யுன்னை விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம்‘ (நான்முகன் றிருவந்தாதி, 93)என்பதனாலறியலாம். இத்துணையுங் கூறியவாற்றால் படைப்பவன் உலகு விளைப்பது, உயிர்கள், முற்கூறிய மூன்று கதிகளிலும் ஆமாறல்லது நரகிற்போமாறில்லையென்று துணிந்து கொள்க.
இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.13. அவனே தலையிலி என்பது உலகு விளைப்பவனாகிய அப்பெரியோனே தன் தலையிழந்தவனாயினான் எ – று.-நாடன் என்பதன்பின் அவனேயென அடுத்து வேண்டாத சுட்டுச்சொல் வந்தது, முன்னே எல்லாருடைய தலைகளையும் தன் தலைகளையும் படைக்கும் அவனே பின்னே தலையில்லையாயினான் என்று குறிக்கொள்ளுதற்கென அறியலாம். சிந்தாமணிப் பதிகத்தில் (4) ‘தேவிபோகி…சுடுகாடவள் சேர்ந்தவாறும்’ என்புழி ‘தேவியவள்’ என வந்தது, முன்னே இன்னமிழ்தாயினவள் பின்னே இங்ஙனஞ் சுடுகாடுபுக்காள் என உணர்த்தற்கு என்பதுபோல இதனையுங்கொள்க.-பிரமன் பலதலை படைத்துக்கொண்ட செய்த மத்ஸ்ய புராணம் ௩-ஆம் அத்யாயத்திற் (30 – 41) கண்டது. ஆண்டு இவன் தன்னுடம்பிற் றோன்றிய ஸரஸ்வதியைக் கண்டு காமித்தான் என்றும், இவனைக்கண்டு ஒவ்வோர் திசையிலும் அவள் ஒதுங்கினாள் என்றும், ஒதுங்கியதிசையெல்லாம் இருந்தபடியே தலையைப் படைத்துக்கொண்டு நோக்கினானென்றும், அதுகண்டுஸரஸ்வதி வானம் புகலாயினள் என்றும், அவள் வான்புகுதலைக் காண உச்சியில் ஐந்தாந்தலை படைத்து நோக்கினான் என்றும், இவ்வாறு ஐந்தலையன் ஆயினானென்றும், ஐந்தாந்தலையைச் சடைகளான் மறைத்திருந்தானென்றும் கூறுதல் காணலாம். இவன் ஐந்தலை வரலாறு இப்புராணங் கூறுதல் கொண்டு, இவன் முதற்கண்ணே நான்கு மில்லனாயிருந்தானென்று உய்த்துணரலாகும்.-கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும்’ (குறள், 1101) ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவம் இல்லான் என்றது, இவன் காமபோகந்துய்த்தற்கேற்ற உறுப்பே இல்லையாயினான் என்பது கருதிற்று. ‘ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள’ என்பது திருக்குறள். பின் பிரமசிரசு கிள்ளப்பட்டுச் சிவபிரான் கையது ஆயிற்று எனப் பன்னூலினுங் கேட்கப்படுதலான், தலையிலி என்றார். ‘கபாலநன் மோக்கத்துக் கண்டு கொண்மின்’ (திருவாய்மொழி. 4 – 10 – 4) என்புழி, நம்பிள்ளையாசிரியர் ‘ஒருவன் தலைகெட்டு நின்றான்’ என்று உரைத்ததனாலும் ‘தலையிலி’யாதலுணர்க; ‘வாணன் கையிழந்து நின்றான்’ என்பதுபோல இதனையும் கொள்க.
இவனைப் பரமேஷ்டி, சுவயம்பூ என்பதுபற்றித் தன்னிற் றலைமை வேறில்லானென்று பொருள் கொள்ளலாமேனும், பின் முலையிலி என்று உறுப்புப்பற்றி வந்தததனோ டொருபடித்தாய் இயைபுள்ளதாகாமை யுணர்க. ஜகத்சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமன், முதல்முதல் அநிருத்த மூர்த்தியிடத்தே தோன்றினானென்பது மஹாபாரதம் சாந்தி பர்வம் – ‘அநிருத்தாத் ததா ப்ரஹ்மா தந்நாபி கமலோத்பவ:’ எனவரும் வாக்யத்தால் அறியப்படுதலான் ஸ்ருஷ்டியினாரம்பமும் இத் தொன்மிகு பெரு மரமாகிய அம்மூர்த்தியின்கண்ணே நிலையுறுவ தாதலால் இயைபு காணலாகும்.-‘தேவுமெப் பொருளும் படைக்கப் பூவினான்முகனைப் படைத்த தேவன்’ (திருவாய், 2,2,4)என்பதனால் இப்படைப்பின் மூலம் ஸர்வேச்வரனிடத்திலே நிலைபெறுவது என்க.
13. அவன் மகள் முலையிலி = அப்பிரமனுக்கு மகளாய்த் தோன்றிய ஸரஸ்வதி ஸ்தனமில்லையாயினாள் எ – று.-பிரமன் தவத்தால் அவன் திருமேனியிற் றோன்றினாள் என்றும், இவள் அவனுக்கு மகளேயாகவும் இவளெழிலான் மனங்கவரப்பட்டுக் காமித்தானென்றும், அது கண்டு பிரமபுத்திரராகிய மகருஷிகள் பிரமனை வெறுத்தனரென்றும் மத்ஸ்யபுராணமும் ஸ்ரீபாகவதமும் நன்குவிளக்குதலான், , இவள் பிரமனுக்கு மகளேயாதல் தெள்ளிது. தமிழில் மகள் என்பது மனைவிக்கும் பெயராதலின், பின் அவன் இவளை மனைவியாக விழைந்ததற்கும் பொருந்தவே ‘அவன் மகள்’ என்று ஈண்டுக் கூறப்பட்டது என்பது பொருந்தும்.-இவளை முலையிலியென்றது, இயலும் இசையுமல்லது வேறு ஸ்தனமில்லாமையா லென உய்த்துணரலாகும். ‘ஸங்கீதமபி ஸாஹித்யம் ஸரஸ்வத்யா: குசத்வயம்’ என வரும் வடமொழிவழக்கானுணர்க. ஸரஸ்வதி ஞானசக்தி என்பது நூல்களின் றுணிபு. ‘ஞானமுதல்வி’ என்பர். ஞானங் காமத்தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது. ‘கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ’ என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங்ஙனங் காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காமமின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். ‘முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற்றற்று’ (திருக்குறள், 402) என்பதனான் இதனை யுய்த்துணர்க. முலையென்றது ‘காமாநுபோகத்தை’ என்று தக்கயாகப்பரணி உரைகாரர் வெளியிடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிசமான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாஸிக்குமிடத்து வ்ருத்தையாக வழங்குவது ‘ஸாயம் ஸரஸ்வதீம் ச்யாமாம்; நமாமி விஷ்ணுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹநாம்’ என வருந் தியானத்தால் உலகம் அறிந்தது.
நூல்வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்‘ (நான்முகன்றிரு. 40) என்பதனாற் பெரியபிராட்டி வித்யாரூபிணியாதல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையர் என்றும், வருமுலை மாதர் யுவதிகள் என்றும் வந்தமுலைமாதர் பேரிளம்பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினார் வ்ருத்தையள் என்றும் தெரிந்துகொள்க.
ஈட்டினரும் பதத்திற் சீயர் ‘யௌவன சூசகமான முலையானவை‘ என உரைத்ததனாலும் இதனுண்மை யறியலாகும். (திருவாய்மொழி 4 – 6 – 10). பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபிணியாதல் விஷ்ணு புராண ஸ்ரீஸ்துதியிற் கண்டது.-இவ்வாறு தலைவனுந் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியுமாதலே யன்றி இத்தலைவி –
14. தானும் ஈனாள் ஈனவும் படாஅள் என்றது இவள் தானும் ஒரு ப்ரஜையைத் தன்னினின்று ப்ரஸவிக்கமாட்டாள், ஒருவராற் ப்ரஸவிக்கப்படவுமாட்டாள் எ – று.ஈனாள்…படாஅள் என ஈண்டுக்கூறியதன் காரணம் நுணுகி நோக்கிற் புலனாம். எவ்விதத்தினும் எவரானும் தவறாதவன் என்றுணர்க. (மஹாபாரதம், சாந்தி 353). இவள் வாக்தேவியாய்ச் சப்தமே வடிவாயுள்ளவளாதலின் உலகிற் பெண்டிர்போலக் கருவுயிர்த்தலில்லை எ – று. இவள் வடிவான சப்தம் பரப்ருஹ்மத்துக்கு ச்வாஸமாய் நித்யமான வேதவாக்யமாதலான், ஈனவும் படாஅள் என்றாரென்ன. ஈனப்பட்டால் நித்யமாதல் கெடும்; ‘ஏதத் நிச்வஸிதம்’ என்பது ப்ருஹதாரண்யக சுருதி. இவ்வாறே ஸுபாலசுருதியுங் கூறிற்று. இங்ஙனம்
15. எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் – எழுவரும் மூவருமாகிய பதின்மர் ப்ரஜைகளைப் பெற்றனள் என்று வியப்புச் சுவைபட உரைத்தார். தசப்பிரமாக்களைப் புத்திரராக அடைந்தாள் என்பதைக் குறித்ததாம். காமாநுபவபோக ஸூசகமான முலையில்லாளாகியும், காமாநுபோகந் துய்த்தற்குரிய ஐம்பொறியுமுள்ள உத்தம அவயவவிசேட மில்லாதவனைக் கலந்து – வேதம் ஒவ்வொரு சுமங்கலையும் அடைய வேண்டி ஆசீர்வதித்த – பத்துமக்களையும் பயந்தனள்; இது வியப்பாகும் என்பதாம்.வேதம் பத்து மக்கள் பெறுபடி வாழ்த்தியது ‘தசாஸ்யாம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி’ என்னும் வாக்யத்தாலறிந்தது; ‘பதின்மர்மக்களைப் பெற்று பதியைப் பதினோரா மகவாகச் செய்க’ என்பது இதன் பொருள்.உள்ளவளாகியும் –
இவள், பிரமாவின் சக்தியாய் அவன் உள்ளத்தமர்ந்து அவன் மானஸபுத்ரர்களான பிரமர்பதின்மரை உண்டாக்கியபடியால் இங்ஙனங் கூறினார். பிரமதேவனுடைய புத்ரர்கள் பதின்மர் என்பதும், அவர் இவரிவர் என்பதும் ஸ்ரீமத் பாகவதம் 3 – ஆம் ஸ்கந்தம் (12 – 22) ‘மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்த்யர், புலஹர், க்ரது, ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர், பத்தாமவராகிய நாரதர்‘ என்பதனால் அறிக. இவருள் ப்ருகு, மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது என்னும் இவர் ஸப்த ப்ரஹ்மாக்கள் என்று ஸ்ரீ பாகவதத்தில் (11 – 14 – 4) ஒரு தொகையாக வழங்கப்படுதலான் எழுவர் மூவர் என்று பிரித்துரைத்தார். பத்தினை மூன்றும் ஏழுமாக எண்ணிக் கோடலும் பண்டை வழக்கேயாகும். ‘முடிப்போது மூன்றேழென் றெண்ணினான்’ (மூன்றாந் திருவந். 77) என்று பெரியார் பணித்தலானறிக.-பிரமசக்தியாய்ப் பிரமனினைவி லமர்ந்து இப்பதின்மரையுந் தோற்றுவித்தலாற் பயந்தனள் என்றார். ‘திதியின் சிறுவர்’ என்புழிப் போலச் சிறுவர் என்பது மக்களுக்காயிற்று.
உலகத்தை அபிவிர்த்தி செய்யவும், உயிர்கட்கு ஞானோதயஞ் செய்யவும், ஆசாரத்தை அநுஷ்டிப்பித்துத் திருத்தவும் இவரைப் பயந்தனள் என்று கருதிக் கூறினார். ‘மலர்மிசை முதல்வனு மற்றவனிடைத்தோன்றி, யுலகிருளகற்றிய பதின்மரும்’ எனப் பரிபாடலின் வருவது கொண்டு இதன் உண்மையுணர்க. ‘சிந்தாதேவி‘ (சிலப்பதிகாரம்) என்பதும் புலமாமகள் என்பதும் (சிந்தாமணி) இவள் பெயராதலால், பிரமன் நினைவிலமர்தல் அறிக. இப்பதின்மரும் பிரமன் நினைவிற்றோன்றியோர் என்பது ‘விதியின் மக்களும்’ (பரிபாடல், ௩) என்புழி ‘ஆதிப்பிரமற்கு நினைவிற்றோன்றிய பிரமர் பதின்மருள்’ எனப் பரிமேலழகர் உரைத்ததனான் உணரலாம்.இனி இரட்டுறமொழிதலான், ஸரஸ்வதியாகிய வித்யா லக்ஷ்மி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் என்று கொண்டு, மூன்றும் ஏழுமாய் அக்ஷரவொலிவடிவாய் நுண்ணியவாய் திருமந்திரம்பத்தெழுத்துக்களையும் உலகுய்ய உதவினள் எனினும் நன்கு பொருந்தும்.அகார உகார மகாரமாகப் பிரிப்புண்பதுபற்றி ப்ரணவத்தை ‘த்ர்யக்ஷரீ’ ‘த்ரிவ்ருத்’ என வழங்குதலான் அஃது மூன்றாதல் தெள்ளிது. எஞ்சிய ‘நமோ நாராயணாய’ என்பது ஏழாதல் கண்டுகொள்க. அச்க்ஷரங்கள் தேவதைகளின் வடிவாதலும் உயர்த்தியும் நோக்கி உயர்திணையாற் கூறினார். ‘இசைத்தலுமுரிய வேறிடத்தான‘ (தொல்காப்பியம்) என்பது, இலக்கணம்.இங்ஙனம் மறைத்துக் கூறியது, மறையிற் றலைசிறத்தல் பற்றியும் இதன் கௌரவம் பற்றியும் எனக் குறிக்கொள்க. இதன் அநுக்ரக விசேடம் ப்ரஹ்லாதாழ்வான் முதலியோரிடம் நன்கு காணலாம். அக்ஷரங்கள் தெய்வவடிவே என்பதும் அவ்வவ் வக்ஷரங்கட்கு அதிதெய்வம் இவையென்பதும் அக்நிபுராணம் கூறிற்று. தமிழிலும் பாட்டியலிற் காணலாம். மந்த்ரகாரிணி ஸரஸ்வதி என்பது பற்றி இவ்வாறு கூறப்பட்டது.
16. அவள் இவள் உவள் என அறிதல் – இவ்வாறு இருடிகளையும் திருமந்த்ரத்தையும் உலகுய்யப் பயந்த அத்தகையள் ஸரஸ்வதியென இலக்குமியென ஒருபடியாகத் துணிதல் எ-று. உவள் – உகாரார்த்தமா யுள்ளவள்; இலக்குமி என்பது திருமந்த்ரார்த்தத்தால் ஸம்ப்ரதாயஸ்தர் பலரும் நன்கறிவர். அவள் ஒழிந்த இவள் ஸரஸ்வதி என்பது தெள்ளிது. இது பிரமன் மகளாதலானும் நன்கறிந்ததாம். உபகாரஸ்ம்ருதி செய்ய வேண்டுதலின் அறிதல் இன்றியமையாதென்று கருதிக் கூறினார். பத்தெழுத்தினையும் உலகில் வெளியிட்ட இருடியர் இப்பதின்மர் எனக் கருதினாரோ என ஊகிக்கவும் இடனுண்டு. இருடி, மந்த்ரம், தெய்வம் மூன்றும் ஸர்வதா உபாதேயமாகக் கடவன வென்பது நம் பெரியோர் திருவாக்காதலான், அவற்றையே இவரும் ஞாபிக்கின்றார் எனக் கொள்ளலுமாம்.
17. துவளறு காட்சிப் புலவரது கடனே – துவட்சியற்ற அறிவினாற் புலவரென்று பெயர்சிறந்தாரது கடப்பாடேயாம் எ – று.புலவரது கடன் என்றது, மஹாபாரதத்தில் ‘வித்வத் ஸம்ரக்ஷணம்‘ என ஓர் பகுதியுண்டு – அதன்கண், வித்வான் அஷ்டாக்ஷர ஜபபாராயணனாக இருத்தல் கூறப்பட்டுள்ளது. அவ்வுண்மையை அச்சங்கப்புலவர்க்கு அறிவுறுத்துவாராய்க் கடன் என்றுரைத்தருளினாரென்க. துவளல் – வாடுதல். துவளறு காட்சி – யதாவஸ்திதஞானம். அஃதாவது பொருளியல்புள்ளவா றுணரும் நுண்ணறிவு. புலவர் என்புழிப் புலம் அறிவாதலிற் காட்சிப் புலவர் என்பதற்கு இவ்வாறு கூறப்பட்டது. அன்றியும் இச்சங்கப்புலவர் ஸரஸ்வதி அம்சமென்ப வாதலான் அவள் பயந்த இருடியரையும், இலக்குமியின் வடிவாகிய அவளே பயந்த திருமந்த்ரத்தையும், அது கூறும் வாசுதேவ தருவையுமல்லது தஞ்சம் வேறில்லையென்றும் உய்த்துணர வைத்தவாறாம்.
பரமாத்ம சக்தி பலபல படியாகக் கேட்கப்படுவது’ என்பது வேதமாதலின், அவள் இலக்குமியாகவும் ஸரஸ்வதியாகவும் நூல்கள் கூறுமென் றுணர்க. நாமங்கையே, நாவினுணின்று மலரு ஞானக் கலைகளுக்கெல்லாம் ஆலியும் ஆக்கையும் இறைவன் றானே (திருவாய் 1, 9, 8) என்று ஞாபித்து, அவ்விறைவனையும் அவள் பரிகரத்தையும் பாடுக என்று அருள் செய்தாள் எனக் கருதி உபகாரஸ்ம்ருதி பண்ணிய பெரியாரும் நம் ஆழ்வார்களி லுண்டு.
நாம்பெற்ற நன்மையு நாமங்கை நந்நெஞ்சத்
தோம்பி யிருந்தெம்மை யோதுவித்து – வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்
றருணீர்மை தந்த வருள்’–என பூதத்தார் அருளிச்செயலானறிக. ஸரஸ்வதியே வேத மந்த்ரகாரிணியென்று தக்கயாகப்பரணி உரையாசிரியர் உரைப்பர் (தாழிசை, 593). இவற்றாற் பயந்தவள் இவள் என அறிதல் கடனென்றார்.
இனி நாமங்கையும் அறிந்தோதற்கரிய பொலிவுடையன் இறைவனென்று பாடியருளிய பெரியாரு முண்டு. இதனை ‘நாமங்கை தானு நலம்புகழ வல்லளே, பூமங்கை கேள்வன் பொலிவு’ (மூன்றாந் திருவந்தாதி, 57) என்பதனால் அறியலாம். தான் நன்கறியாததொன்றை உலகிற்கோதவல்லவள் இவளில்லை யன்றே? ஆதலால் வித்யாலக்ஷ்மியாகிய பூமங்கை தான் தன்கேள்வன்படி உணரவல்லள்; உவள்தான் நம்வினை தீர்த்து அவனை உணர்த்தவல்லள்; ஆதலான் ‘உவளென அறிதல் கடன்’ என்றார். இவ்விருவரும் பரமாத்ம சக்தி பேதமாதலின் எங்ஙனம் அறியினும் பயனுண்டென்பது கருத்து.
இனி எழுவர் மூவர் சிறுவரைப் பயந்தனள் எவள் அவள் பிரமற்கு மகளென மனையாட்டியென அறிதல் புலவர் கடன் என்றாரென்றலும் ஒன்று.பராசக்தியியல்பு பலபடியாதல் பிறர்க்கு மொக்கும். இதனை ‘அவளத்தனா மகனாந் தில்லையான்’ எனத் திருக்கோவையினும் ‘அனகநாடற் கெம்மன்னை, மனைவி தாய் தங்கை மகள்’ எனச் சிதம்பரச் செய்யுட்கோவையினுங் கூறுதலானுணர்க. ஸரஸ்வதி பரமாத்மசக்தி யென்பதும் அவள் பிரமனுக்குப் புத்திரியாயினாள் என்பதும் தொன்னூற் துணிபு. இவ்வாறே மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மத்தில் ‘பிரமாவின் புத்திரியாகிய என்னுடைய ஸரஸ்வதீதேவியானவள் தவறாதவள், சத்தியமுள்ளவள்’ எனப் பகவான் அருளிச்செய்தலானும் உண்மையறிக. இனி,-கண்ணன் கழலிணை, நண்ணு மனமுடையீர்
எண்ணுந் திருநாமந், திண்ண நாரணமே‘ (10,5,1)என்னுந் திருவாய்மொழி எழுதிய திரு ஏட்டினைச் சங்கப்பலகையின்மேல் வைக்க அப்பலகை அத்திருவேட்டளவிற் சுருங்கிப் பிறர் இதனோடொக்கவிருக்க இடந்தாராது இதன் தெய்வச்சிறப்புணர்த்தியது என்று குருபரம்பரையிற் கேட்கப்படுதலான், அதற்கியைய, அப்புலவர் ஆராய்ந்து துணிய எழுதியருளிய இத்திருப்பாட்டும் அத்திருநாம மந்த்ரத்தையும் அதைப் பயந்த பராசக்தியையும் அதற்குரிய பரதெய்வத்தையும் தலைமையாகக் கொண்ட தென்று உய்த்துணர்ந்து கொள்க.
பரமகாருணிகரான நம்மாழ்வார் தாம் பெற்ற பேறு எல்லாப் புலவர்க்குமாமாறு, ஸகல சாஸ்த்ரார்த்தங்களும் ஆடிநிழலினடங்கவைத்து மெய்ப்பொருள் தேற்றிய வித்தகத் தனிப்பாட்டு இஃதாகும். இங்ஙனம் வடநூற்பொருளையே யுடைய தமிழ்ப்பாட்டாதலின் இதனை ‘ஆரியத் தமிழ்’ என்று கூடலழகர்புராணமுடையார் கூறினாரென்க. வேதப்பொருளேயுடைய தமிழை ‘வேதத் தமிழ்’ என்பதுபோல இதனையுங் கொள்க.
ஈயா டுவதோ கருடற் கெதிரே யிரவிக் கெதிர்மின் மினியா டுவதோ
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் நரிகே சரிமுன் னடையா டுவதோ
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன் பெருமா னடிசேர் வகுளா பரணன்
ஓரா யிரமா மறையின் றமிழின் ஒருசொற் பொருமோ வுலகிற் கவியே’-என்பது சங்கத்தார் இவ்வரிய பாசுரத்தை வியந்து ஆழ்வார் திவ்யபிரபந்தத்தைப் புகழ்ந்துபாடிய பாட்டாகும்.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply