இன்றைய நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் என்று வழங்கப்பட்டு வந்தது. அவ்வூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி – உடைய நங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். உடைய நங்கையின் ஊர்திருவண் பரிசாரம். (இன்றைய திருப்பதிசாரம்). திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார். மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர். சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார். ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.பெருமாள் முன்பு, “கலியுகத்திலே வடமொழி வேதங்களை தமிழில் உருவாக்க சடகோபன் என்ற பெயரில் அவதரிப்பேன்” என்று கூறியதுபோல, பாண்டியநாட்டில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரியர், உடையநங்கை தம்பதிகளுக்கு, அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார்.
இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம் “எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும் படி, சேனை முதலியாரை நம்மாழ்வாராக…….. நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.
பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ அவ்வாறு பிறந்த குழந்தை பாலுண்ணுதல், அழுதல் என எந்த இயற்கையான செயல்களையும் செய்யாமல்) இருந்தது. இந்தக் குழந்தை. விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குழந்தையை திருக்குருகூர் கோயில் கொண்டு வந்து, குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர். உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்றும் பாராங்குசன் என்றும் பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் ஆதிசேஷன் புளிய மரமாக உள்ளதிருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்
இந்நிலையில் சடகோபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்கோளூரில் பிறந்த மதுரகவி, திருமாலை வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வயலில் மேய்ந்த பசு மாட்டினை மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிய வேகத்தில் கால் இடறி கீழே விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திய மதுரகவி, அப்பாவத்தைப் போக்க எண்ணி புனித நீராடும் பொருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு நேரத்தில், வானத்தில் பேரொளியைக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாதையிலேயே பல நாட்கள் நடந்து வந்து கொண்டே இருந்தார். அந்த ஒளியானது திருக்குருகூர் வந்ததும் மறைந்து போனது. ஜோதியாக வந்து தன்னை ஆட்கொண்டது திருக்குருகூர் புளிய மரத்து ஆழ்வார்தான் என்பதை மதுரகவி கண்டுகொண்டார்.
கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி”செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?”, இது வரை பேசாத ஆழ்வார் இவரின் வினாவிற்கு விடை யளிக்கும் வண்ணம் ” அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று இசைந்தார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார். ஆழ்வார் கூறிய பதில் சிறியதாக இருந்தாலும் அது அனைத்தயும் அடக்கிய தத்துவார்த்தமாக அமைந்திருந்தது.
(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.) மகான் மதுரகவி, தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி நம்மாழ்வாரை வேண்டினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யப்பிரபந்தத்தை உபதேசித்தருளினார்.
அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டி தங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”. ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.
எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.
ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். 31 ஆண்டு காலம் இந்த புளிய மரத்தடியில் 36 பெருமாளைப் பற்றி பாடியதால் இந்த மரத்தினைச் சுற்றி 36 திவ்ய தேசப் பெருமாளின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. நம்மாழ்வார், தனது 35-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிகொண்டுள்ள இடத்தில் திருக்கோயில் அமைத்து வைகாசித் திருவிழாக் கொண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட மொழியில் நான்கு வேதங்கள் உள்ளது போல் தமிழில் நான்கு வேதங்களை உருவாக்கியுள்ளார் நம்மாழ்வார். இவர் இயற்றிய திருவாய் மொழி, திராவிட வேதம் என அழைக்கப்படுகிறது.
மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார். நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள்.
ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் பிறந்தது முதல் குழந்தைக்குரிய அழுதல், தாய்ப்பால் குடித்தல் போன்ற செயல்கள் செய்யாது வாட்டமின்றி இருந்தார்.
எனவே பெற்றோர் அக்குழந்தை பிறந்து, பன்னிரண்டாம் நாள் திருக்குருகூர்ப்பிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். உலக வழக்கத்திற்கு மாறாகக் காட்சி அளித்த அக்குழந்தைக்கு மாறன் எனத் திருநாமம் இட்டனர்.
திருவரங்கநாதன், நம் ஆழ்வார் என்று அழைத்ததால் நம்மாழ்வார் என்பர். பெருமாள் கொடுத்த மகிழம்பூ மாலையை அணிந்தவர் என்பதால் மகிழ்மாலை மார்பினர் ஆனார்.
புறச் சமயங்களாகிய யானையை அடக்கத் தம் அருளிச் செயல்களை அங்குசம் போலப் பயன்படுத்திக் கொண்டவர். ஆகையால் பராங்குசதாசர் எனப் போற்றினர். சடகோபர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. நம்மாழ்வார் அருளிய நான்கு திவ்வியப் பிரபந்தங்களும் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்றும் போற்றப்படுகிறார். இவர் ஸ்ரீ விஸ்வக்ஷேனாவின் அவதாரமவார்.
இவரின் ஆயுள் 32 ஆண்டுகள் என்றாலும், நான்கு வேதங்களை பற்றி எடுத்துரைக்கும் வண்ணம், திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என நான்கு படைப்புகளை உருவாக்கினார். இதனால் இவரை ஜகத்குரு ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜர் “வேதம் தமிழ் செய்த மாறன்” எனப் பட்டம் சூட்டியுள்ளார். மேலும் நம்மாழ்வார் இயற்றிய ஸ்ரீ பகவத் விஷயம், சாம வேதத்தினை விளக்குவதாக உள்ளது.
இவர் பெருமானின் மீது கொண்டிருந்த பக்தி, இவரை இவ்வாறு பாடவைத்ததோ?…
”உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன் மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே” என்றும்..
“திடவிசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றும்…
”கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே”என பரவசத்துடன் பாடி இறைவனடிக்கு சேவை புரிந்த இவர் ஸ்ரீ நாதமுனிக்கு நாலாயிரம் பாசுரமும் கிடைக்க வழி வகுத்தார்.
இயற்பெயர் : –
நக்ஷத்திரம் : விசாகம்
மாதம் : வைகாசி
சேக்ஷதிரம் : திருகுருஹூர் (ஆழ்வார் திருநகரி),
திருநெல்வேலி – தமிழ்நாடு
பிரபந்தம் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி (பிற்காலத்தில் இவை அனைத்தும் சேர்த்து ஸ்ரீ பகவத் விஷயம் எனப்போற்றபட்டது)
ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது. ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர். இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார். வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு. பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.
நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.
திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை. எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது. இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.
நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது
நம்மாழ்வாரின் பெருமை:
சைவத்தில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தது போல வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள்.
1. காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது மேல் நாட்டிலிருந்து வைணவ அடியார்கள் சிலர் மன்னாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச்சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள்அடியார்களிடம் ஆழ்வாரின் ஆயிரம் பாடல்கள் பற்றியும் கேட்டார்.
அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.
நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார். நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான். எனவே தான் ஆழ்வாரின் தனியனில் “ நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே” என்று கூறியுள்ளனர்.
2. பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர். வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது. திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள். பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது. நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது வைணவ குருபரம்பரை. ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாரே முதலும் முடிவுமாக இருக்கின்றார். இவர் ஆழ்வார்களுள் கடைசியும் ஆசாரியர்களுள் முதல்வரும் ஆவர்.
3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு. இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம். இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல் “ சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.
4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும். அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து. இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு. 1, 12, 18, 40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும், 27, 38, 78, 79 ஆகியவை உயிர்நிலையையும், 2, 2, 331, 81 ஆகியன விரோதி சொரூபத்தையும், 47, 48, 49, 40 ஆகியன உபாய சொரூபத்தையும், 19, 23, 80, 93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.
வைணவத்தின் தத்துவக் கருத்துக்கள் ஆழ்வார்கள் பிறர் பாசுரங்களை விட நம்மாழ்வார் பாசுரங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இதிலிருந்துதான் ராமாநுஜர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கினார். எனவேதான் ஆளவந்தார் நம்மாழ்வாரை “ குலபதி” என்று போற்றுகிறார். இதனையே பராசர பட்டர் ,
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்.-என்று ஏத்தினார்.
5. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நம்மாழ்வார் அருளிச் செய்தவை. இவற்றுள் திருவாய்மொழி சாமவேத சாரமாகக் கருதப் படுவது. இதுவே ஆழ்வார் அருளியவற்றில் வைணவர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுவது.
இத்திருவாய்மொழிக்கு மட்டும் கி. பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கி 7 விதமானவியாக்கியானங்கள் (விரிவுரைகள்) தோன்றியுள்ளன. இவற்றுக்கு ‘ ஸ்ரீ பகவத் விஷயம்’ என்று பெயர். திருவாய்மொழியின் நுட்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இவ்வுரைகளே பெருந்துணை செய்கின்றன. திருவாய்மொழி ‘ திராவிட வேத உபநிஷத்’ என்றே போற்றப்படுகிறது. இதன் சிறப்பை ‘ திராவிட வேதோபநிஷத் சங்கதி’, ‘ திராவிட வேதோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற வடமொழி நூல்கள் எடுத்துரைக்கின்றன.
இத்திருவாய்மொழி வடமொழி, தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது .
திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயரையும் பத்துப் பத்துக்களும் அவனுடைய பத்து அவதாரங்களையும் நினைவூட்டுவன என்பர் பெரியோர் .
6. ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக ( உறுப்புகளாக) அமைத்து ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,
நம்பெருமாள் – ( நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை, பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்
என்பதாக அமைவர்.
7. நம்மாழ்வார் அருளியவை நால்வேதம் எனவும் திருமங்கையாழ்வார் அருளியவை அதற்கான ஆறங்கம் எனவும் மணவாள மாமுனிகள் போற்றுகிறார்.
8. நம்மாழ்வார் பாசுரங்களில் கூறப்பட்டுள்ள திருமாலின் பெயர்களே அந்தந்த திருப்பதி பெருமான்களுக்கு இன்றளவும் வழங்கப்படுகின்றன. ‘ ஒன்றும் தேவும்’ என்னும் குருகூர் பாசுரத்தில் ‘ ஆதிப்பிரான் , பொலிந்து நின்ற பிரான்’ என்ற ஆழ்வாரின் வாக்குகளே ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமானுக்குப் பெயராயிற்று. இவ்வாறே பிற திவ்ய தேசங்களிலும் கண்டு கொள்ளலாம்.
9. ” வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைக்கின்ற நம்மாழ்வார் பாடல்கள் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் , தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுமையிலுமே முன்னென்றும் கண்டிராத ஒரு புதிய பக்தி வெள்ளமும் சமய தத்துவப் பிரவாகமும் தோன்றி வளர்வதற்கு மூலமாயிருந்தன. இது தமிழருடைய ஒரு பெரும் சாதனை.” என்பார் பேரறிஞர் மு. அருணாசலம்.
10. நம்மாழ்வார் பிறந்து வளர்ந்ததனாலேயே திருக்குருகூர் ‘ ஆழ்வார்திருநகரி’ எனப் புகழ் பெறுவதாயிற்று.
11. ஆழ்வார் மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், மகிழ்மாறன், வகுளாபரணன், திருக்குருகூர் நம்பி, குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன், திருவாய்மொழிப் பெருமாள், திருவழுதி வளநாடன், நாவீறுடையான் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
12. இவர் உலகனைத்துக்கும் ஞான உபதேசம் செய்கின்ற ஆழ்வார் என்பதனால் ‘ நம்மாழ்வார்’ எனப் படுகின்றார். நம்பெருமாள் என்ற திருமாலின் அருமைத் திருநாமத்தைப் போல நம்மாழ்வார் என்ற பெயரும் அமைந்துள்ள சிறப்பை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில்(50)
“ நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பது அவரவர்தம் ஏற்றத்தால்“-என்று போற்றுகின்றார்.
உலக நடைக்கு மாறாக இருந்ததனால் ‘ மாறன்’ எனவும், மாறன் காரியார் புதல்வர் ஆதலின் ‘ காரிமாறன்’ எனவும், கர்ப்பத்திலிருக்கும்போது குழந்தைகளை அஞ்ஞானத்திற்கு ஆட்படுத்தும் சடம் எனும் வாயுவை கோபித்து ஓட்டியதால் ‘ சடகோபன்’ எனவும், குருகூர் பொலிந்து நின்ற பிரான் தந்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் ’ மகிழ்மாறன்’,’ வகுளாபரணன்’ எனவும், பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களில் கூறிய தத்துவக் கருத்துக்கள் எனும் அங்குசத்தால் அடக்கியமையால் ‘ பராங்குசர்’ எனவும், பிரபக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் வைணவர் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதால் ‘ பிரபன்ன ஜன கூடஸ்தர்’ எனவும் போற்றப் பெறுகின்றார்.
13. மதுரகவிகள், திருவரங்கத்து அமுதனார், மணவாள மாமுனிகள், ஈசுவர முனிகள், சொட்டை நம்பி, அனந்தாழ்வான், பட்டர், அப்புள்ளார், வேதாந்த தேசிகர் முதலிய ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நம்மாழ்வாரைப் பலபடியாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
14. கி. பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சடகோபர் அந்தாதி, நம்மாழ்வாரின் பெருமைகளை 100 பாடல்களில் எடுத்துரைக்கின்றது.
15. கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால் மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.
16. வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில் ‘ திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’ அற்றது பற்றெனில்’ என்றும், ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’ களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை ‘ களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும், ‘ நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.
17. கி. பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.
அரையர் சேவையும் திருவாய்மொழியும்
ஆழ்வார்களின் பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை அழகுறப் பேசி நடிக்கும் கலைதான் அரையர் சேவை.
திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்தார். பின் பெருமாளிடம் அவர், “ மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அத்யயன உற்சவம் நிகழும்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருளி வேத சாம்யமாக ஏற்றம் அருள வேண்டும்” என்று கேட்டார். பெருமாளும் சம்மதம் தந்தார்.
அன்று முதல் ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை மார்கழி மாத சுக்ல தசமியன்று திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்வித்தனர். நம்மாழ்வாரின் பிரதிநிதியாக மதுரகவியாழ்வார் இருந்து திருவாய்மொழியைப் பண்ணுடன் இசைத்து அபிநயித்தார். இதற்காக அவருக்கு “ திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்ற விருதினை நம்பெருமாள் வழங்கினார். இவ்விருதுப் பெயர் நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வரும் ‘ அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்ற வாக்கிலிருந்து வந்திருக்கலாம்.
நாலாயிரத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள் அதை இயலும் இசையுமாக வகுத்து தன் மருமக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் கற்பித்தார். அவர்களைக் கொண்டே திருவரங்கத்தில் மீண்டும் அரையர் சேவை நடைபெறச் செய்தார்.
மார்கழி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் பகலில் நடப்பது பகல்பத்து. இதில் பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெருமாள் திருமொழி, திருமாலை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் அடங்கிய முதலாயிரம் பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.
திருமங்கையாழ்வாரால் முன்னமே ஏற்படுத்தப்பட்டு நின்று போயிருந்த திருவாய்மொழித் திருநாளை மீண்டும் நடத்தினார் நாதமுனிகள். இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் 10 நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது 10 நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’ இராப்பத்து’ எனப்படுகிறது.
இதுவே ’ அத்யயனத் திருவிழா’ எனப்படும். நம்பிள்ளை ஈட்டுரையில் ‘ திருவத்யயனம்’ என இவ்விழாவைக் குறிப்பிடுகிறார்.
ஆழ்வார்திருநகரி, திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 திருப்பதிகளில் மட்டுமே அரையர் சேவை இப்போது நடைபெறுகிறது.
ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:
ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “ இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார். அவள், “ ‘ கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள். இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.
பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு
இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?-என்று போற்றி மகிழ்ந்தனர்.
————–
நம்மாழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-16
1. ஸ்ரீவைகுண்டம் (அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில் (நவ திருப்பதி), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி)
2. நத்தம் (அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் (நவ திருப்பதி), வரகுணமங்கை, நத்தம், தூத்துக்குடி
3. திருப்புளியங்குடி (அருள்மிகு காசினி வேந்தன் திருக்கோயில், (நவ திருப்பதி), திருப்புளியங்குடி, தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில் (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
4. திருத்தொலைவில்லி மங்கலம் (அருள்மிகு அரவிந்த லோசனன் திருக்கோயில், (நவ திருப்பதி), இரட்டைத் திருப்பதி,(திருத்தொலைவில்லி மங்கலம்), தூத்துக்குடி
5. பெருங்குளம் (அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோயில், (நவ திருப்பதி), பெருங்குளம், தூத்துக்குடி)
6. தென்திருப்பேரை (அருள்மிகு மகா நெடுங்குழைக்காதர் திருக்கோயில்(நவ திருப்பதி), தென்திருப்பேரை, தூத்துக்குடி)
7. திருக்கோளூர் (அருள்மிகு வைத்த மாநிதிப் பெருமாள் திருக்கோயில்(நவ திருப்பதி), திருக்கோளூர், தூத்துக்குடி)
8. வானமாமலை (அருள்மிகு தோத்தாத்ரி நாதன் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி)
9. திருப்பதிசாரம் (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், நாகர் கோவில், கன்னியாகுமரி)
10. திருவட்டாறு (அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி)
11. திருவனந்தபுரம் (அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம்)
12. ஆரம்முளா (அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்)
13. திருவண்வண்டூர் (அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், திருவண்வண்டூர்,ஆழப்புழா, கேரளா மாநிலம்)
14. திருக்கடித்தானம் (அருள்மிகு அற்புத நாராயணன் திருக்கோயில், திருக்கடித்தானம்,கோட்டயம், கேரளா மாநிலம்)
15. திருக்காக்கரை (அருள்மிகு காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
16. திருச்செங்குன்றூர் (அருள்மிகு இமையவரம்பன் திருக்கோயில்,செங்கனூர், திருச்சிற்றாறு, ஆழப்புழா, கேரளா மாநிலம்)
——————–
நம்மாழ்வார் மற்ற ஆழ்வார்களுடன் சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள்-19
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் (5)
1. திருமோகூர் (அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், மதுரை)
2. திருப்புலியூர் (அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா மாநிலம்)
3. திருவல்லவாழ் (அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், வல்லப ÷க்ஷத்திரம், பந்தனம் திட்டா, கேரளா மாநிலம்
4. திருமூழிக்களம் (அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம்,எர்ணாகுளம், கேரளா மாநிலம்)
5. திருநாவாய் (அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்,மலப்புரம், கேரளா மாநிலம்)
நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் (1)
1. ஆழ்வார் திருநகரி (அருள்மிகு ஆதி நாதன் திருக்கோயில், (நவ திருப்பதி), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி)
நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் (1)
1. திரு விண்ணகர் (அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், ஒப்பிலியப்பன்கோவில், தஞ்சாவூர்)
நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. வெண்ணாற்றங்கரை (அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள், தஞ்சைமாமணி கோயில், தஞ்சாவூர்)
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
1. துவாரகை (அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில், துவாரகை, குஜராத்)
2. திருவடமதுரை (அருள்மிகு கோவர்த்தனன் திருக்கோயில், மதுரா, உ.பி.)
நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (2)
1. திருப்பேர் நகர் (அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி, தஞ்சாவூர்)
2. திருக்குறுங்குடி (அருள்மிகு நின்ற நம்பி திருக்கோயில், திருக்குறுங்குடி, திருநெல்வேலி)
நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)
நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)
1. அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார் (1)
1. திருமாலிருஞ்சோலை (அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில், மதுரை
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார் (1)
1. கும்பகோணம் (அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்)
நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)
—————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்—
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply