ஸ்ரீ பேசும் அரங்கன் -ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள்-

மன்னிய சீர் மணவாள மாமுணிகள் ஈடு உகந்து

இன்னொரு ஸ்ரீசைலேசாயெனப் பேசும் அரங்காயெச்சரீகை!”

இது நம்பெருமாள் புறப்பாட்டின் போது நம் திருக்கோவில் சாத்தானி ஸ்ரீவைஷ்ணவர்களின் கட்டியமாகும். அரங்கனின் வருகை குறித்து நம்மை எச்சரிக்கின்றனர். தோன்றினது முதல் தற்காலம் வரை நம்மை அரவணைத்துப் பேசுக்கொண்டிருக்கும் அரங்கன் வருகின்றார் – தாங்கள் கவனம் சிதையாமல் இம்முதல்வனை தியானியுங்கள் – இவனிடம் மனம் விடடு பேசுங்கள் என்று குறிப்பால் உணர்த்துகின்றனர். அன்றும் சரி, இன்றும் சரி அரங்கன் பலருடனும் பேசிய வண்ணம்தான். பல்வேறு லீலைகள் புரிந்த வண்ணம்தான். ஏனைய தெய்வங்கள் போல் அவனால் வாளாதிருக்க முடியாது. இவன் இல்லாவிடின் ஏனைய தெய்வங்களேது? இவன்தானே அனைத்திற்குமே ஆதாரமானவன்!. இதனால்தான் தொண்டரடிப்பொடியாழ்வார் தனது திருமாலையில்

“மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலா மானிடங்காள்!

உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்,

அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை,

கற்றினம் மேய்த்த எந்தை கழலினைப் பணிமின்நீரே!”

“மற்ற தெய்வங்களைப் போல இவன் ஆராதிப்பதற்கு அரியவன் அல்லன். பசு கன்றுகளுக்கும் கூட தோழனாயிருந்து எளியவனாயிருப்பவன்” என்று அறுதியிட்டுரைத்தார்.

இவன் வந்தாரை வாழ வைப்பவன் –

தன்னோடு உறறாரோடு உரையாடுபவன்.

——-

திருத்துழாய் இலையுண்டாகும் போதே பரிமளத்தோட அங்குரிக்கும். அது போன்று ஸ்வாமி நம்மாழ்வாரும் மற்றைய ஆழ்வார்கள் போன்று இவ்வுலக உணர்ச்சி ஏதும் அடையாமல், தத்துவஞானத்தோடு இயற்கையான ஞான பக்தியையுடையவராய், சதா தியானபரராய், இந்நிலை என்றும் மாறதிருந்த மாறன் ஆவார். இவர் அவயவி. மற்றைய ஆழ்வார்களெல்லாரும் இவருக்கு அவயம்..

இவருக்கு
– பூதத்தாழ்வார் : சிரம்
– பொய்கை மற்றும் பேயாழ்வார்கள் : இரண்டு கண்கள்
– பெரியாழ்வார்: முகம்
– திருமழிசை: கழுத்து
– குலசேகராழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார்: இரண்டு கைகள்.
– தொண்டரடிப்பொடியாழ்வார்: திருமார்பு
– திருமங்கையாழ்வார்: கொப்பூழ்
– மதுரகவியாழ்வார் : திருப்பாதங்கள்.

இந்த பூமியில் சுமார் 35 ஆண்டுகள் எழுந்தருளி, எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் தாமிருக்கும் இடத்திலே தரிசித்து களித்த ஸ்வாமி நம்மாழ்வார் பரமபதம் செல்லத் திருவுள்ளம் கொண்டார். மிக மிக துக்கித்த அவரின் சீடர் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருமேனியை வேண்டினார். ஆழ்வார் தாமிரபரணியின் ஆற்று நீரை கொணர்ந்து சுண்ட காய்ச்சினால் தமதுருவம் கிடைக்கும் எனத் தேற்றினார். மதுரகவிகள் ஒரு பொற்குடத்தில் தாமிரபரணியாற்றின் நீரை இடைவிடாமல் வேத விற்பன்னர்களின் வேதகோஷத்தோடு காய்ச்சினார்.

ஏழாம் நாள் கூப்பிய கையுடனும், திரிதண்டத்துடனும், ஒரு திவ்வய மங்கள விக்ரஹம் யாரும் எதிர்பாராவண்ணம் தோன்றிற்று. அதனைக் கண்ட நம்மாழ்வார் ‘பொலிக பொலிக பொலிக” எனத் திருவாய் மலர்ந்தருளி அது வருங்காலத்தில் வைணவத்தை ஸ்திரமாக நிலைநாட்டப் போகும் ஸ்வாமி இராமானுஜரின் ‘பவிக்ஷதாச் சார்ய’ திருமேனி என்று அருளி, தனது வலது திருவடியை அங்கு காண்பித்தார். அதில் இராமானுஜருடைய உருவத்தினை அனைவரும் தரிசித்தனர். அந்த விக்ரஹத்தினை அங்கேயே ஆராதித்து வரும்படி பணித்தார்.

மீண்டும் ஒருமுறை காய்ச்சச் சொன்னார். மீண்டும் முன்பு செய்தது போல செய்யும்போது, இன்று நாமனைவரும்
ஆழ்வார் திருநகரியில் தரிசித்துக் கொண்டிருக்கும் இந்த ஸ்வாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் சின்முத்திரையோடு அப்போது உண்டாயிற்று. அப்போது நம்மாழ்வாரின் திருமேனியிலிருந்து ஒரு அருள்ஒளி விக்ரஹ திருமேனியில் பாய்ந்தது. இதன் பின்பு நம்மாழ்வார் ”சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின’ என்கின்றபடியே பரமபதம் எழுந்தருளினார். மதுரகவியாழ்வார் அவரது சரமத்திருமேனியை திருப்புளியாழ்வாரினடியில் திருப்பள்ளிப்படுத்தி, திருவரசு ஏற்படுத்தி வழிப்பட்டு வரலானார்.

முடிவு இவன் தனக்கு ஒன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே! என்னும் –
கடிகமழ்கொன்றைச் சடையனே! என்னும்
நான்முகக் கடவுளே! என்னும் –
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்
வண் திருவரங்கனே! என்னும்
அடியடையாதார் போல் இவளணுகி
அடைந்தனள் முகில் வண்ணனடியே!.

இந்த பெண் இவ்வாறு சிரமப்படும் நேரங்களில் தனக்கோ அல்லது தன்னுடைய சிரமங்களுக்கோ எந்தவித முடிவும் தெரியவில்லை என்கிறாள். மூன்று லோகங்களையும் ஆண்டு வரும் இந்திரனுக்கு ஆத்மாவாக உள்ளவனே என்கிறாள். மிகுந்த மணம் உடைய கொன்றை மாலையை தனது சடையில் தரித்துள்ள சிவனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். நான்முகனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். உன்னுடைய வடிவினை உடைய வானோர்களின் தலைவனே என்கிறாள். அனைவருக்கும் அருள்புரிகின்ற திருவரங்கப் பெரியபெருமாளே என்கிறாள். அவனது திருவடிகளை அடைய மாட்டாள் என்று எண்ணும்படியிருந்தபோது, நீர் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய அவன் திருவடிகளை அவள் பெற்றுவிட்டாள்.

மூவுலகாளியே என்பதை மூ + உலகு + ஆளியே என்று பிரிக்க வேண்டும். திருமலையாண்டன் உரைக்கையில் ”மூன்று உலகையாளும் இந்திரன் எனப்படும், சிவன் எனப்படும், பிரம்மன் எனப்படும் வடிவுடைய வானோர்கள் மற்றும் தேவர்களின் தலைவனே’ என்று கூறுகின்றார். எம்பெருமானார் கூறுகையில் அவர்களது தலைவன் என்பதோடு அந்தர்யாமி என்று சேர்க்கின்றார்.

இந்த மூவலகின் தலைவன் என்று கூறும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.

திருவரங்கம் கோவிலில், காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் கர்ப்பகிரஹத்தில் பச்சரிசி மாவை நீர் கொண்டு குழைத்து பூர்ணம் போன்று செய்து நடுவில் நெய் திரி ஏற்றி ஆறு மங்களஹாரத்தியும், கற்பூரத்தினால் மூன்று கற்பூரஹாரத்தியும் பெரியபெருமாளுக்கு காண்பித்தருளுவர். சுமார் இரண்டு வருடங்களிருக்கும். அன்று ஒரு ஏகாதசி. நம்பெருமாள் புறப்படுவதற்கு முன் மங்களஹாரத்தி செய்தேன். வெளியில் ஆந்திரா ஸ்ரீதிரிதண்டி நாராயண ஜீயர் ஸ்வாமிகள் ஸேவித்துக் கொண்டிருந்தார். அவர் கூட உபன்யாஸகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீகண்ணன் ஸ்வாமிகளும் உடனிருந்தார். ஏளப்பண்ணுவதற்கு என்னுடன் கூட இரண்டு மூத்த அர்ச்சகர்களும் உடனிருந்தனர். நம்பெருமாளை தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து ஒவ்வொருவராக துவாரபாலகர்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். ஜீயர் ஸ்வாமிகளுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். எதற்காக ஆறு பூரணம் போன்று செய்யப்பட்ட மங்கள ஹாரத்தி? எதற்காக மூன்று கற்பூர ஹாரத்தி? என்று. இரண்டு மூத்த அர்ச்சகளிடமும் கேட்டார். அவர்களால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை. ஸ்ரீ கண்ணன் ஸ்வாமிகள், ‘ முரளீ! உனக்குத் தெரியுமா?’ என்றார். நான் பட்டென்று நம்பெருமாள் ஷாட்குண்யபரிபூரணர் (ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களையும் முழுமையாக பெற்றவன்) அதனால் ஆறு மங்களஹாரத்தி என்றேன். ‘மூன்று கற்பூரஹாரத்தி?’ வினவினார்
ஜீயர் ஸ்வாமிகள். த்ரைலோக்ய பூஜிதர்! (மூன்று உலகிலும் ஆளும் இந்திரன், சிவன், பிரம்மனால் பூஜிக்கப்படுபவர்) 

——————-

நாயனாராச்சான்பிள்ளைக்குப் பிறகு ஈயுண்ணி மாதவப்பெருமாள் குமாரரான பத்மநாபப்பெருமாள் தம் தந்தையிடமிருந்து திருவாய்மொழி ஈடு முப்பதாறாயிரமும் (வடக்குத்திருவீதிபிள்ளை அருளியது) தெளிவாகக் கற்று ரஹஸ்யார்த்தங்களையும் கற்று தர்ஸன ப்ரவர்த்தகராயிருந்தார்.

இவருக்குப்பின் இவரது அந்தரங்க சிஷ்யரான கோலவராஹநாயனார் என்னும் நாலூர் பிள்ளை இவரிடமிருந்து அனைத்ததும் கற்றித் தெளிந்து தர்ஸனத்தினை நடத்தி பின்னர் தம் மகனான நாலூராச்சான் பிள்ளைக்கு அனைத்தும் போதித்து தர்ஸனத்தினை வழிநடத்திடச் செய்தார்.  இவர் தாம் கற்ற ஈட்டின் பொருளை, மணவாளமாமுனிகளின் நேர் ஆச்சார்யனான திருவாய்மொழிப் பிள்ளைக்கும், திருநாராயணபுரத்தாயி (திருவாய்மொழியாச்சான்) ஆகியோருக்கு திருவாய்மொழியின் ஈட்டினைப் பரஸாதித்து அருளினார்.

————–

அழகிய மணவாளனின் இராமானுஜ பக்தியை மெச்சிய திருவாய்மொழிப்பிள்ளை ஒரு அற்புத அரிய இராமானுஜரின் திருமேனியை அவருக்கு அருளுகின்றார்.  இந்த இராமானுஜ திருமேனி மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் கட்டளைப்படி தாமிரபரணி நீரை காய்ச்சிய போது முதலில் அவதரித்த திருமேனியாகும்.  ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரின் திருமேனி, உலுக்கான் படையெடுப்பின் போது, வலசையாக எழுந்தருளியபோது, இதனை அங்கிருந்த திருப்புளிஆழ்வார் மரத்தினடியில் புதைத்து வைத்து பின்னர் திருவாய்மொழிப் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டதாகும்.

அளவிலா ஆனந்தம் அழகிய மணவாளனுக்கு!.  எம்பெருமானாரையே பரதெய்வமாக நித்யமாய் ஆழ்வாருக்கும், எம்பெருமானாருக்கும் கைங்கர்யமே புருஷார்த்தமாகக் கொண்டு திருநகரியிலே கைங்கர்யஸ்ரீயுடன் வாழ்ந்தருளினார்.

உத்தமனே!  உலகாரியனே!  மற்றொப்பாரையில்லா
வித்தகனே!  நல்ல வேதியனே!  தண்முடும்பை மன்னா!
சுத்த நன்ஞானியர் நற்றுணையே!  சுத்த சத்துவனே!
எத்தனை காலமிருந்து உழல்வேன் இவ்வுடம்பைக் கொண்டே?

என்று பிள்ளைலோகாச்சாரியாரிடத்து திருமேனியோட்டை அறுதியிட்டு, திருவாய்மொழிப்பிள்ளை, தமக்கு விமோசனத்தினை வேண்டுகின்றார். 

அந்த சமயம் திருவாய்மொழிப்பிள்ளை தம் அந்திம காலம் நெருங்குவதையறிந்து அழகிய மணவாளனை அழைக்கின்றார். ”காலம் கலிகாலமாகையாலே
ஆழ்வார்களின் திவ்யஸூக்திகளான அருளிச்செயலிலே ருசியும், விசுவாசமும் கொண்டு இத்தை வளர்த்துப்போவார் யார்?”
 என்று மிகவும்
க்லேசமுடையவராய் கேட்கின்றார். 

அழகிய மணவாளனுக்கு உள்ளுணர்வு உணர்த்துகின்றது.  தம்மை மனதில் வைத்துதான் பிள்ளைக் கேட்கின்றார் என்று. 

திருவடி பணிந்து ‘அடியேன் அப்படியே செய்கிறேன்” என்கின்றார் குரு உகக்கும் வண்ணம். 

பிள்ளை ”கேவலம் வார்த்தை போராது” என்கிறார். 

குருவின் திருவடிகளைப் பிடித்து சபதம் செய்கின்றார். 

குருவும் இந்த தீவிரமான சிந்தையைதானே எதிர்பார்த்திருந்தார்!  அந்த தாக்கத்தினை ஏற்படுத்திய மகிழ்வோடு அழகிய மணவாளனுக்குச் சில கட்டளையிடுகின்றார்.

-” ஸ்ரீபாஷ்யத்தினைக் கற்று ஒரு முறை அனைவருக்கும் காலக்ஷேபம் செய்யவும்.

ஸம்ஸ்கிருத சாஸ்திரங்களிலே பல காலும் கண் வையாமல், நமக்கும் எம்பெருமானாருக்கும் ப்ரியமான திருவாய்மொழி முதலான அருளிச்செயல்களிலே அநவரதமும் பரிசீலனைச் செய்து, அனைவருக்கும் அதன் உட்பொருளை பிரஸாதிக்கவும். 

பூர்வர்களைப் போல  மங்களாசாஸனபரராய் ஸ்ரீரங்கத்தில் நித்யவாஸம் செய்து, கைங்கர்யங்களை செய்து வரவும்.”

என்று நியமிக்கின்றார். 

அங்கு கூடியிருந்தோர் அனைவரிடத்தும் இவரிடத்துக் காட்டிக் கொடுத்தருளி, ”இவரை சாதாரணமாக நினைக்காதீர்கள்.  இவர் ஒரு அவதார விசேஷம்.  ஆதரித்து போருங்கள்” என்று அருளுகின்றார்.

வைணவ தர்ஸனத்திற்கு ஒரு அவதார புருஷர் கிடைத்ததையெண்ணி பெருமிதத்துடன், நிறைவுடனே எந்த கவலையுமின்றி, ‘மாகவைகுந்தம்
காண்பதற்கு என் மனமேகமென்னும்
” என்கிறபடியே தம் ஆச்சார்யன் பிள்ளைலோகாச்சாரியாரின் திருவடிகளைக் கண்மூடி தியானிக்கின்றார்.


ஆச்சார்யனின் திருவடி ஸம்பந்தத்தினால் விஷ்ணுதூதர்களுடன் விமானத்தில் மண்ணுலகை துறந்து விண்ணுலகிற்கு பயணிக்கின்றது அவரது சூக்கும சரீரம்!

ஆழ்வார் இவருக்கு செய்த அருளை “கண்ணி நுண்சிருத்தாம்பில்” எட்டாம் பாசுரத்தில் கொண்டாடுகிறார்.

“அருள் கொண்டாடும் அடியவர் இன்புற,
அருளினான் அவ்வருமறையின் பொருள்,
அருள் கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான்,
அருள்கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே! ”

ஆழ்வார் நம்மைத் திருத்த வேண்டி த்வயத்தின் அர்த்தத்தை திருவாய்மொழியின் மூலம் பாடினார். நமக்கு செய்ய வேண்டிய உபதேசங்களையெல்லாம் எம்பெருமான் அளித்த மயர்வற மதிநலத்தின் மூலம் செய்தார். அந்த அருளானது, எம்பெருமானின் அருளையே எதிர் பார்த்திருக்கும் அடியார்க்காய் செய்தது.

யார் இவர்கள் ?

வேறு ப்ரயோஜனத்துக்காக எம்பெருமானை அண்டாதவர்கள், தங்கள் கைம்முதலில் ஏதும் செய்ய முடியாது என்று அறிந்தவர்கள், தாங்கள் உய்ய, அரங்கனின் அருளல்லது மற்றில்லை என்று, அவன் அருளுக்காக காத்திருந்து, அதையே கொண்டாடியும் வாழ்பவர்கள். இவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”.

இந்த பெருமை பெற்றவர்களுக்காக மட்டுமே திருவாய்மொழி பிறந்தது. திருவாய்மொழியின் அர்த்தங்களைக் கொண்டு எம்பெருமானின் அருளால் மட்டுமே வாழ்ச்சி என்றிருப்பவர்கள் “அருள் கொண்டாடும் அடியவர்கள்”. அவர்கள் இன்புற வேண்டி ஆழ்வார் ‘எம்பெருமானின் அருளாய்’ திருவாய்மொழியை அருளினார். அவரின் ‘அருள்’ உலகிலே சீறிய பேரருள் என்கிறார் மதுரகவிகள்.

பெரிய கோவிலில் அரையர் ஸ்வாமிகள் அரங்கனுக்கு கொண்டாட்டங்கள் சேவிப்பார். அதில், “ரிக் யஜுஸ் ஸாம அதர்வன நான்மறை சிகரக்கோவில் பெருமாள்!!” என்பதும் ஒன்று. அதன்படி, நான்மறையின் பொருளாய் விளங்குவது அரங்கரே என்பது பூர்வாச்சார்யர்கள் திருவுள்ளம் என்பது தேறுகிறது.

இந்த பாசுரத்தில், “அருமறையின் பொருள், அருள் கொண்டு” என்று பிரித்தால், அரங்கனின் நிர்ஹேதுக க்ருபையினாலே ஆயிரம் பாசுரங்களையும் ஆழ்வார் பாடினார் என்பது தேறும்.
ஆக, “அவனை அடைய, அவனே வழி” என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் படி நம்மை அவன் திருவடிக் காட்படுத்திக் கொள்ள, அவனருளே உருவான ஆழ்வாரைக் கொண்டு ஆயிரம் தமிழ் பாட வைத்தான்.

ஆனால், மதுரகவிகள் அரங்கனின் அருளுக்கு ஏங்காது, அவனைக் காட்டிக் கொடுத்த ஆழ்வாரின் திருவருளுக்கு பல்லாண்டு பாடுகிறார். மேலும் ஆழ்வாரின் அருள் உலகில் உள்ள எல்லாவற்றையும் காட்டிலும் மேலானது என்கிறார். இது எவ்வாறு சாத்தியமானது ?

ஆழ்வாரின் , ஆயிரம் இன் தமிழில் –
“திருவடியை அடைவிக்கும் திருவடி சேர்ந்துய்மினோ”
என்று, அரங்கன் திருவடியை அடைய அதையே பற்றுங்கோள் என்று நமக்கு உபதேசம் செய்கிறார்.

அரங்கனின் திருவடி வேறு, ஆழ்வார் வேறல்லவே(இதை ஸ்ரீ வேதந்தவாசிரியருடைய வாக்கினால் பல முறையும் கேட்டோம்). ஆக, ஸம்ஸார தாபத்தை தகிக்க வேண்டி அரங்கனாகிற நிழலிலே (வாசுதேவ தருச்சாயா) ஒதுங்கினார் ஸ்ரீ நம்மாழ்வார். அதே காரணத்திற்காக ஆழ்வார் திருவடிகளில் ஒதுங்கினார் ஸ்ரீ மதுரகவிகள்.
ஆயிரம் இன்தமிழ் பாடும் வரை, ஆழ்வாரை சம்சாரத்தில் காக்க வைத்தார் அரங்கர். பதினொரு பாசுரம் பாடிய அளவிலேயே ஸ்ரீமதுரகவிகளுக்கு ஆழ்வார் அருள் கிடைத்தது. இது தான் ஆழ்வாரின் அருளுக்கும், அரங்கனின் அருளுக்கும் உள்ள வேறுபாடு.

இங்கே ஆழ்வாரை சொல்வது, அவர் தொடக்கமாக, உடையவர் வரையிலும், அவரைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் பர்யந்தமும் வந்த நம் குருபரம்பரையில் இரத்தினங்களாய் மிளிரும் நம் ஆச்சார்யர்கள் அளவும் ஒக்கும். ஆழ்வாரிடமிருந்து துவங்கும் இந்த ஆச்சார்ய பரம்பரையில், நம் ஆச்சார்யர்கள் அளவும் உள்ளவர்கள் எல்லாம், அரங்கனின் திருவடிகளே. ஆழ்வார் மதுரகவிகளுக்கு செய்த அநுக்கரஹம் போல், அரங்கனின் பாதுகைகளாக இருந்து, இவர்கள் நமக்கும் செய்கிறார்கள்.
ஆக, ஆச்சார்யர்களின் அருளால் மட்டுமே அரங்கனின் திருவடியில் நாம் ஒதுங்க முடியும் என்பதை உணர்ந்து, ஆழ்வார் ஆச்சார்யர்களின் க்ருபைக்கு பாத்திரமாக வேண்டியது மட்டுமே, நாம் செய்ய வேண்டியது. இதற்கான உபாயமும் அவர்களே. அவர்கள் திருவடியில் ப்ராவண்யம் ஏற்பட, அவர்கள் ஸம்பந்தத்தால் நம் அஞ்ஞானமாகிற பாபம் அழிக்க பட்டு அரங்கனின் திருவடியில் நித்ய கைங்கர்யம் ப்ராப்த்தமாகிறது.

———

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ முரளி பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading