ஸ்ரீ“திருத்தாள் மாலை”  —பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யரால் அருளப்பட்ட தமிழ் பாசுரங்கள்

ஸ்ரீ:“திருத்தாள் மாலை”–முகவுரை.
உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!  {திருவாய்மொழி. 1-1-1}
“தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
அக்குணங்களும் தன்னைப்பற்றி நிறம் பெற வேண்டும்படியாயிருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான்;
இப்பேற்றுக்கு என் பக்கத்தில் சொல்லலாவது ஒன்றுமின்றிக்கேயிருக்க, நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகனானான்;
ஸ்வஸ்வரூபாபந்நரா யிருக்கிறவர்களுக்கும் அவ்வருகாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்;
தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான் என்று அவன் பண்ணின உபகாரங்களடையச் சொல்லி,
இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார்.
ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்:
அதுபோல பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நானென்று பிழைக்க விரகில்லை;
அவன் திருவடிகளிலே தலைசாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே என்கிறார்;
உயர்வறவுயர் நலமுடையவன் துயரறு சுடரடி தொழுதெழப் பாராயென்கிறார்.
“அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யமுபாகத: என்னுமாப்போலே”
“ சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே,
ஸ்தநந்தயப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப்போலே, இவரும் ‘உன் தேனேமலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்”
“செய்ய சுடராழியானுக்கே சூட்டினேன் சொன்மாலை” என்று பொய்கையாழ்வாரும்,
“நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் பனிமலராள், அங்கம்வலங் கொண்டானடி” என்று பூதத்தாழ்வாரும் 
“இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” என்று பேயாழ்வாரும்,
“நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை, யாரோதவல்லார்?” என்று திருமழிசைப்பிரானும்,
“எப்போதும், கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான், மொய்கழலே ஏத்த முயல்” என்று நம்மாழ்வாரும்,
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று மதுரகவியாழ்வாரும்,
“அணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும் அம்மான்தனடி யிணைக்கீழ் அலர்களிட்டு அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே?” என்று குலசேகரப் பெருமாளும்,
“மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பெரியாழ்வாரும்,
“அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி” என்று ஸ்ரீ ஆண்டாளும்,
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே” என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
“நீள்மதிளரங்கத்தம்மான் திருக், கமலபாதம் என் கண்ணினுள்ளனவொக்கின்றதே” என்று திருப்பாணாழ்வாரும்,
“தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்துள்ளமை
இவண் காண்க.
“தனக்குவமையில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்பர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்.
ஸ்ரீய:பதியின் திருத்தாள் வைபவம்” எனும் நன்னூலை ஸ்ரீமான் பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியாரவர்கள் இயற்றியுள்ளார்.
அது “திருத்தாள்மாலை”என்ற திருநாமத்தோடு இத்தமிழ்ச்சங்கத்தின் 88-வது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
சிரஞ்சீவி பஞ்சாமிருதத்தின் திருமண மாலையாய்த் திகழ்வதே இச்செய்ய தமிழ்மாலையின் தனிச்சிறப்பு.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
——————————–
தூய நான் மறையின் தொன்முடி துலங்கும் சுந்தரச் சோதியார் திருத்தாள்
ஆயிரங் கண்ணன் அரன் அயனாதி யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில் நிலையுற நிலவு செய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும் பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள்.                                 
சுட்டிய தூணிற் றோன்றியக் கணமே சுடரெழக் குதிகொளுந் திருத்தாள்
கிட்டிய கேடன் கனகனை மாளக் கிடத்து மாவூருடைத் திருத்தாள்
ஒட்டிய மைந்த னுரையினை மெய்ப்பித் துவந்தவன் தொழுதெழுந் திருத்தாள்
மட்டிலா வினையேன் மனத்திலு மன்ன மகிழ்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                      
ஒளிவடி வேந்தி யடியிரந் தோங்கி யுலகெலா மளந்தருள் திருத்தாள்
களமிகக் கமலங் கொண்டயன் துலக்கக் கங்கையைக் கான்றதோர் திருத்தாள்
வளமிக வழங்கு மாவலி சிரத்தே வைப்புற மகிழ்ந்தருள் திருத்தாள்
எளியனே னிருளா ரிவ்வித யத்து மிலங்கிடத் தலங்கொளுந் திருத்தாள்.              
திருமகள் வருடச் சிவந்தலர் திருத்தாள் செவ்வியத் தாமரைத் திருத்தாள்
வரமது வேண்டி யணுகிய வானோர் வணங்கிட மகிழ்ந்தருள் திருத்தாள்
தருமசிந் தையனாந் தசரதன் மனையில் தவழ்ந்தலங் கரித்தருள் திருத்தாள்
கருமியேன் வினைகள் களைந்தருள் வானென் கருத்தினுங் கனிந்தமர் திருத்தாள்.                      

தூயமா முனிவன் கௌசிகன் பின்னர்த் தொடர்ந்து கானடந்தருள் திருத்தாள்
சாயலாண் மங்கை யகலிகை சாபந் தவிர்த்தருள் பவித்திரத் திருத்தாள்
தீயவ ரரக்கர் பூண்டொடு தீவான் செறிவன முகந்தருள் திருத்தாள்
பேயனே னேனும் பெரும்பதந் தனையான் பெற்றிட  வருள்செயுந் திருத்தாள்.                       

கொங்கல ரடிக்கே யுரியவ னென்ற குகன்றனுக் குதவிய திருத்தாள்
கங்கையின் மதுரக் கனிகளாய்ந் தளித்த சபரியை யுவந்தருள் திருத்தாள்
கங்குலும் பகலும் கருணையே பொழியுங் கமலமா மென்மலர் திருத்தாள்
துங்கமி லெளியேன் மனத்திலுந் துலங்கத் தோய்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                  

பரிவுடன் பணிந்த பரத நம்பிக்குப் பாதுக மீந்தருள் திருத்தாள்
விரியழற் பங்கி விராதனை யுதைத்து வீழ்த்தி விண் ணருளிய திருத்தாள்
அரியெனக் கவந்த னறிந்துள முருக வாதரித் தருளிய திருத்தாள்
எரிவினை மிஞ்சு மெளியனே னுளத்து மிலங்கிவீற் றிருப்பமர் திருத்தாள்.                    

அஞ்சலி கரத்தோ டடிபணிந் தேத்தும் அனுமனுக் கருள்புரி திருத்தாள்
செஞ்சிறைக் கிழவன் சடாயு கண் டேத்தச் சேண்பத மருளிய திருத்தாள்
தஞ்சனே னடியே னென்ற வீடணற்குத் தண்ணளி யருளிய திருத்தாள்
நஞ்சினுங் கடிய நெஞ்ச னேனுக்கும் நலந் தர நயந்தருள் திருத்தாள்.                       

நிராசனராய தண்டக முனிவர் நினைவினில் நிலவு செய் திருத்தாள்
விராவரு கானப் புள்விலங் கவைக்கும் வியன்பத மருளிய திருத்தாள்
தராதலத் தன்று சராசர முற்றுந் தனிக்கதி தந்தருள் திருத்தாள்
பராவுத வில்லாப் பாவியே னுளத்தும் படிந்தருள் பண்ணிய திருத்தாள்.                     

வேண்டிய வசுதே வன்றளை யவிழ வியந்தவன் கண்டதோர் திருத்தாள்
ஆண்டவ னருளார் நந்தகோ பன்ற னகந்தனிற் றிகழ்தரு திருத்தாள்
மூண்டெழு காத லசோதையா மன்னை முகந்தனை மலர்த்திய திருத்தாள்
ஈண்டி வந்திந்த எளியனே னகத்து மிருளற வொளிதருந் திருத்தாள்.                    

தலைவனா நந்தன் மாளிகை யெங்குந் தவழ்ந் தெழிலூட்டிய திருத்தாள்
முலையினூ டுயிருண் டரக்கியை வீழ முடித்துமீ தாடிய திருத்தாள்
தலைநெறித் தோடித் தங்கிய கபட சகடிறத் தாக்கிய திருத்தாள்
நிலையிலா வெளியேன் நெஞ்சிலு நிலைத்து நின்றருள் பரப்பிய திருத்தாள்.                                   

தயிர்கடை யொலிக்குத் தாளமிட்டது போற் சதிருட னாடிய திருத்தாள்
உயருர லுருட்டி நிறுத்திமீ தமுத முண்ணுவா னுயர்ந்தெழு திருத்தாள்
நயமுற மடுவிற் காளியன் முடிமேல் நடனமுற் றருளிய திருத்தாள்
மயலுறு மெனது மனதையு முகந்து மன்னிட மகிழ்ந்தருள் திருத்தாள்.                           

வலம்புரி யாழிக் குறிகண்மண் படிய வனவிருந் தையிலுலாந் திருத்தாள்
சிலம்புகள் செய்யுஞ் சிஞ்சித மார்ப்பத் தெருவெலாந் திரிந்தருள் திருத்தாள்
நிலம்பெறு நித்ய போக்யமா யிலகும் நிதியென நிலவிடுந் திருத்தாள்
அலம்பெறு மடியே னகத்தையுந் தனதோ ராசனமாக்கிய திருத்தாள்.                    

சுருதிபின் தொடரக் குழலிசை சுவைப்பச் சுரபிகள் பின்தொடர் திருத்தாள்
அரிவையர் துகிலை யபகரித் தாங்கோர் குருந்திடை யமர்ந்தருள் திருத்தாள்
இருமையு மெவர்க்கு மிணையிலாக் கதியா யிலகிடு மிண்டைநாண் மலர்த்தாள்
கருவினை கனிந்த கடையனே னகத்துங் கருணையோ டமர்ந்தருள் திருத்தாள்.              

தன்னையா தரித்த தருமனாதி யர்க்காய்த் தூதுசென் றருளிய திருத்தாள்
சொன்னவா றிளையோன் தூய சிந்தனையினாற் சுருக்குறக் கட்டுணுந் திருத்தாள்.
மன்னவன் வகுத்த மல்ல ரீட்டத்தை மட்குழி யொத்திய திருத்தாள்
என்னையா தரிப்பா யென்னுளந் தங்கி யிலங்கிய பங்கயத் திருத்தாள்.                                

————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பிள்ளைப்பாக்கம் இளையவல்லி ஸ்ரீ லஷ்மி நரசிம்ஹ ஆச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading