ஸ்ரீ மாறன் அலங்காரம்–நான்காவது எச்சவியலுரை–ஸ்ரீ திருக்கருகைப் பெருமாள் கவிராயர்–

https://www.tamilvu.org/node/154572?linkid=118853

————

300.மொழிந்ததைமொழிதன்மாறுபடுபொருண்மொழி
பிரிபொருட்சொற்றொடர்கவர்படுபொருண்மொழி
நிரனிரைவழுவேயதிவழுச்சொல்வழுச்
சந்திவழுவொடுசெய்யுள்வழுவென
வந்தவொன்பதுமொருவழிக்கடிவழுவே.
என்பது சூத்திரம்.

இவ்வோத் தென்னபெயர்த்தோவெனின் எஞ்சி நின்ற வழுவணி யுணர்த்தினமையான் எச்சவியலென்னும் பெயர்த்து,
ஆயினித் தலைச்சூத்திர மென்னுதலிற்றோவெனின் முன்னரோதப்பட்ட வணிபெறுஞ் செய்யுள்கட்குப்
பொருந்தாத வழுக்களு ளொருவழிக் கடியப்பட்ட வழுக்களைத் தொகுத்துணர்-ற்று.

(இ-ள்) மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்டுத் தொன்றுதொட்டுவந்த
வொன்பதுஞ் செய்யுளகத்துவருமெனி லோரிடங்களிற் களையப்பட்ட வழுவா மென்றவாறு.

வழி – இடம். ஓரிடங்களிற் களையப்படுமெனவே சிலவிடங்களில் வழுவமைதியாகக் களையப்படாதென்பதூஉ மாயிற்று.
அவையெல்லாம் மேற்காட்டுதும்.

301.அவற்றுள்,
பழியறவொருபொருண்மொழிபரியாய
மொழியொடுதொடர்வதுமொழிந்ததைமொழிதல்.
(எ-ன்) வைத்தமுறையானே மொழிந்ததைமொழிதலென்னும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அங்ஙனந் தொகுத்துக்கூறப்பட்ட வொன்பதுள், மொழிந்ததை மொழிதலென்னும்வழு ஒரு
பொருளைக்காட்டு நிலைமொழியப்பொருளைக் காட்டும் பரியாயமொழியொடுதொடர்வதா மென்றவாறு.

* 309-ம் சூத்திரத்திலும், நிரனிரையென இடையின ரகரவைகார ஈறான பாடங்கொண்டு நிரை – கூட்டமென வுரையெழுதப்பட்டிருக்கிறது.

உடுத்தாரகைபோன்றொளிர்மலர்ப்புன்னாகத்
தடுத்தாள்விழிகடுத்தானன்பா–நடுத்தா
னிலையென்பதாகுமிணைமேருவாகு
முலையென்பனதேமொழி. (813)
இது மொழிந்ததைமொழிதல்.

இதனுள், உடுத்தாரகைபோன்றொளிர்மலர் என்றதனா லவ்வாறாதல் காண்க.
நடு – இடை. தேம் – தேன். அஃதேற் சொற்பின்வருநிலையும் பொருட்பின்வருநிலையும் சொற்பொருட்பின்வருநிலையு
மவ்வா றல்லவோவெனின் அற்றன்று, அவற்றிற்குப் பொருள் வேறென்க. என்னையெனின்,
சொற்பின்வருநிலையென்பது மொழிந்தசொல்லே வரினும் பொருள் வேறுபடும்.
அது “மானைப் பொருகயற்கண் மானைப் புவனமட, மானைக் கமல மலர்மானை – மானை” என்பதனா லறிக.
பொருட் பின்வருநிலையென்பது மொழிந்தபொருளேமொழியினும் சொல் வேறு படப் பொரு ளொன்றாவதோ ரலங்காரம்.
அது “மாய்த்தேன் செனனம் வதைத்தேனென் வல்வினையைத், தேய்த்தேனறிவின் சிறுமையினை” என்பன.
சொற்பொருட்பின்வருநிலையென்பது சொல்லும் பொருளும் பெயர்த்து வேறுவேறாகிச் சொல்லொன்றாய் வருவது.
அது “மாதர்மாதர்கூர் வாளம ருண்கண்மா னிலத்து, மாதர் மாதர்கூர் வண்டிமிரளியதா மரைப்பூ, மாதர் மாதர்கூர்” என வரும்.

302.அதுவே,
சிறப்பினும்விரைவினுஞ்சிதைவின்றாகும்
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙன மொருபொருண்மேற் பலசொல்வருதல் சிறப்பின்கண்ணும் விரைவின்கண்ணும்
வருமெனி லிலக்கணவழுவின்றா மென்றவாறு. என்னை “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்பதனா லறிக.

மீமிசைத்தாய்த்தோன்றுமழல்வெண்மதிவந்தாலிறைவா
யாமிசைப்பதொன்றுளதாயெய்யேமாற்–பூமிசைவாழ்
பொன்னங்கொடிநோய்புடைபெயர்போழ்துற்றுணர்ந்த
நின்னன்பிதுவானினைந்து. (814)

இது சிறப்பின்கண் ணொருபொருட்பன்மொழி வந்தது.
கள்ளர் கள்ளர் பாம்புபாம்பு தீத்தீத்தீ போபோபோ விரைவின்கண் இரண்டும் மூன்று மொருபொருட்கு வந்தன. என்னை?
“அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ, லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்” என்பதனா லறிக.
பொருணிலை, விரைவு வெகுளி யுவகை யச்ச மவல மென்னு மைந்துபொருண்மைக்கண்ணும் வருமெனினும் இவை விரைவு.

303.பகர்ந்தமுன்மொழிப்பொருளொடுமுரண்பான்மையிற்
புகன்றிடுமதுவேமாறுபடுபொருண்மொழி.
(எ-ன்) மாறுபடுபொருண்மொழியாமாறுணர் – ற்று.

(இ-ள்) முன்னர்மொழிந்தமொழிப்பொருளொடு மதன்பின்னர் வருமொழிப்பொருள்மாறுபடுபகுதியையுடைத்தாகக் கூறுமது
மாறுபடு பொருண்மொழியா மென்றவாறு. பின்னர்வரு மொழிப்பொருளென்பது எதிர்மறையெச்சம்.

முற்றவுரைத்தமுதுவேதநுட்பமெல்லாங்
கற்றுணர்ந்துமெய்ஞ்ஞானங்கைக்கொண்டீர்–தெற்றெனவே
தத்துவங்கண்மூன்றினையுஞ்சந்தயந்தீரீரினிமே
னித்தமநித்தந்தெளியீர்நீர். (815)
இது மாறுபடுபொருண்மொழி. என்னை? இதனுள், ‘முதுவேத நுட்பமெல்லாங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானங் கைக்கொண்டீர்’ என்று கூறி,
‘தெற்றெனவே தத்துவங்கண்மூன்றினையுஞ் சந்தயந்தீரீர்’ என்றதனான் மாறுபடுபொருண்மொழியாயிற்று.
தெற்றென – தெளிய. தத்துவங்கண் மூன்றென்பன – சித் தசித் தீச்சுரம்.

304.அச்சமுங்காமமுமகமிகினுரித்தே.
(எ-ன்) இதுவு மெய்தியதிகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) அச்ச மகத்து மிகினுங் காம மகத்து மிகினு மவ்வா றுரைக்கப்படு மென்றவாறு. அகம் – உள்ளம். காமம் – விருப்பம்.

வாசமலர்மெல்லணைமேல்வைத்தாலுமண்டழல்போற்
கூசுமலர்ச்சிற்றடிக்குக்கொற்றவா–நேசமது (439)

நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற்
கஞ்சத்தடங்காண்கடம். (816)
இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.

305.உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன
பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே.
(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று
பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு.

எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு.
இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம்.

கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர்
மங்கைக்குமாயோன்மணவாள–னங்கைக்கு
ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப்
பட்டானிரதிபதி. (817)
இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டி
நோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க.

306.அதுவே,
கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில.
(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்
மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு.

கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல்
வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்–வெள்ளிமலை
பெற்றபதிவானோர்பெருமான்புரந்தபதி
புற்றரவின்பிள்ளைபுதன். (816)
இது கள்ளுண்டுமயங்கினான்மொழிந்தது. பித்தர் கூறுவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வரையிலவென்னாது கடிவரையிலவென்றதனால், பிள்ளைமையான்மொழியுங்காலு மாம்.
அஃதே லிக்குற்றங்களெல்லாஞ் செய்யுணோக்கிவருவனவாதலாற் செய்யுட் கிலக்கணங்கூறு நூலினுளன்றே யுணர்த்துவது ;
ஈண்டுரைத்தல் பிறிதெடுத்துரைத்த லென்னுங் குற்றமாமெனின்,
நன்றுசொன்னாய் ! அச்செய்யுளென்பன சட்டகம் அலங்காரமென இரண்டாம் ; அவற்றுள் அலங்காரமென்பன
அச்சட்டகத்தைப் பொலிவுசெய்வனவாமாதலாற் செய்யுட்குப் பொலிவழிவு செய்வன வீண்டு முற்கூறி யதன்
பின்ன ரொழிபிற் செய்யுட்குப் பொலிவு செய்வன செய்யுட்குவாராமற் புணர்க்கவென வீண்டுரைக்கப்பட்டதாதலாற்
பிறிதெடுத்துரைத்தலென்னுங் குற்றமாகாதென் றறிக.

307.உவர்ப்பறத்துணிந்தொருபொருள்குறித்துரைத்தசொற்
கவர்த்திருபொருட்குறல்கவர்படுபொருண்மொழி.
(எ-ன்) வைத்தமுறையானே கவர்படுபொருண்மொழியாமா றுணர்-ற்று.

(இ-ள்) ஒருபொருளைக் குற்றமறத்தெளிந் துட்கொண்டுரைத்த சொற்குப் பொருள் கவர்த்துப் பிறிதுமொருபொருளைக்
காட்டுவதாகி யிரண்டுபொருளைக் காட்டுதல் கவர்படுபொருண்மொழியென்னும் வழுவா மென்றவாறு.

பற்றற்றிடுதிடத்தாற்பற்றியதேபற்றியயன்
மற்றொன்றுதன்னைமதியாதாங்–கொற்றமிகும்
வேல்விட்டெறிந்தனையவெய்யவிழிநோக்கத்தாய்
மால்விட்டுநீங்கார்மனம் (819)
இது கவர்படுபொருண்மொழி.

இதனுள், மால்விட்டுநீங்கார்மனம் என்பது ஸ்ரீமந் நாராயணன் விட்டுநீங்காதார் மனமெனவும் பித்துவீட்டுநீங்காதார்
மனமெனவும் முதலே தெளிந்து கொண்டுரைத்த பொருளைக்காட்டுவதுடனிருபொருட்குக் கவர்த்தவாறு காண்க.
பத்தர்மேற்சொல்லுங்காற் பற்றற்றிடுதிடத்தா லென்பது அய னரன் மண் பெண் பொன் னென்னு மாசைகளைவிட்டு
நீங்கிய வுண்மைஞானத்தால் என்பதாம். பற்றியதேபற்றி என்பது அந்தரியாமியாகநின்ற அவனது
சொரூபரூபகுணவிபூதியையுட் கொண்டு அதுவே தியானமாக என்பதாம்.
அயல் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது அவைநாலுமேயன்றி வேறொன்றினையு முட்கொள்ளாதா மென்றவாறு.
பித்தர்மேற்சொல்லுங்கால், பற்றியதேபற்றி யயன் மற்றொன்றுதன்னை மதியாதாம் என்பது சான்றோர் தெருட்டத்
தெருளுறாது தான்பற்றியதே பற்றிக்கொண்டு உண்மையாக வொன்றினையும் பற்றாததாம் என நின்று கவர்த்தது காண்க.

308.வசைபொருந்தாவழிவரினதுமரபே.
(எ-ன்) மேற்சொன்ன கவர்படுபொருண்மொழி வழுவல்லவா மிட முணர்-ற்று.

(இ-ள்) அக் கவர்படுபொருண்மொழி குற்றம்பொருந்தாவிடத்துப் பொதுப்படவுரைப்பின் வழுவன்று, இலக்கணமா மென்றவாறு.

பரப்பமர்கண்ணாட்கிடும்பைபாலிக்குமென்றே
னிரப்பிடும்பையார்க்கெதிர்சென்றீயா–நிரப்பே
பெருநிரப்பென்கின்றாய்பெருமானேயெண்ணி
யிருநிதிக்குப்போவேனெனல். (820)
இதனுள் எனல் என்னும் அல்லீற்றுவியங்கோள், விதியும் விலக்குமாக நின்றும் வழுவன்றாயிற்று. என்னை?
யா னவ்வண்ணங்கூறவு நீ யதனையுட்கொள்ளாயாகிக் கூறாநின்றாய் ; நினது திருவுள்ள மதுவேயானா லிரண்டையு மனத்தா
லெண்ணித் துணிந்தென்னுடனே பொருண் மேற்செல்வேனென்று கூறாதொழிவாயாக வெனவும்,
அதுவல்லது செல்லத் துணிந்தாயெனில் எம்பெருமானே ! இறைவியோடும் நின்செலவை நீயே
சென் றியான் பொருண்மேற்செல்வேனென்று கூறுவாயாகவெனவும் இரண்டாய கவர்படுபொருண்மொழி
விதியினும் விலக்கினுங் குற்றமல்லவாயிற்று. பகுதி – பொருள்வயிற்பிரிதல். துறை – நின்செலவை நீயேகூறென்றல்.

309.முன்னரெண்ணிற்குமொழிமாற்றிக்கொளப்
பின்னரெண்ணிரல்பிறழ்வதுநிரனிரைவழு.
(எ-ன்) வைத்தமுறையே நிரனிரைவழுவாமாறுணர் – ற்று.

(இ-ள்) செய்யுளகத்து முன்னரெண்ணப்பட்ட பெயர்வினைகளான முறைக்கு மொழிமாற்றிக்கொள்ளும்படிக் கதன்
பின்னரெண்ணப் பட்டுவரும் பெயர்வினைகள் முறைபிறழவைக்கப்படுமது நிரனிரைவழுவா மென்றவாறு.
பெயர்வினையென்பது சொல்லெச்சம். நிரல் – முறை. நிரை – கூட்டம். பிறழ்தல் – தானமாறாடுதல்.

கலவமயில்சாபங்கழுநீர்குமுத
மிலவநுதல்சாயலிதழ்வா–யுலவுவிழி
நண்பாபொனங்கொடிதானண்ணுமிடநாவீறன்
பண்பார்துடரியிலோர்பால். (821)
என வரும். இதனுள், மயில் சாபங் கழுநீர் குமுதமென முதலே யெண்ணப்பட்ட பெயர்முறைக்குப் பின்னர்
இயல் நுதல் நோக்கம் வாய் என்னாது, நுதல் சாயல் வாய் நோக்க மென முறைபிறழவைத்தமையால்நிரனிரைவழுவாயிற்று.

310. உய்த்துணரிடமெனிலுரிமையுடைத்தே.
(எ-ன்) அம்முறைபிறழ்ச்சி யாமாறுணர் – ற்று.

(இ-ள்) அங்ஙனஞ் சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சி உய்த்துக் கொண்டுணரப்படுந்தானமாகில் வழுவன்றென்று
கொள்ளு மிலக்கண முறைமையுடைத் தென்றவாறு.

அங்ஙனஞ்சொல்லப்பட்ட முறைபிறழ்ச்சியென்பது அதிகார நோக்கத்தா லெச்சமாக விரிந்தது.

மந்தன்கதிர்மழைக்கோள்வானோர்குருமேதை
யிந்துநிலமகன்பாம்பென்பவற்றுட்–பைந்தொடியாய்
தேறுமிடைநான்குந்தெரிசுபக்கோளேனையவாய்க்
கூறியவைபாவக்கோள். (822)
என வரும். இதனுள், உய்த்துணர்ந்துகொள்ளப் பிழையாமல் வைத்தவிடமாவன : மந்தன்முதலாகப் பாம்பீறாக வடைவேயெண்ணி,
மழைக்கோள் வானோர்குரு மேதை யிந்து வென்னு மிடைப்பட்ட நான்குஞ் சுபக்கோளென்றும், மந்தன் கதிர் நிலமகன் பாம்பு
என முதலினு மீற்றினுநின்ற நான்கும் பாவக்கோளென்று முய்த்துணரவைத்தவாறு கண்டுகொள்க. பாம்பு – சாதியேகவசனம்.

311.நசைதீர்யதிவழுநாடுகிலோசை
யிசைதரநிகழாதிழுக்குவதாகும்.
(எ-ன்) முறையே யதிவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) விரும்பப்படாத யதிவழுவென்பதனை யாராயுங்காலத்துச் செய்யுட்கமைத்த புணர்ச்சி
யிசைபொருந்துவதாய்நடவாது மரபு வழுவுவதா மென்றவாறு.

பார்க்கும்பொழுதுநிலம்பார்த்துப்பார்வையையா
நீக்கும்பொழுதுநிலம்பாரா–நோக்கு
வடைவடைவேவந்தவவற்றுண்முதனோக்கந்
தடையறயாம்வாழ்வதற்கோர்சார்பு. (823)
இதனுள், நோக்கடைவடைவேவந்தவென்புழி நோக்குவடைவடைவே வந்த வெனச் சொற்கூடா தறுத்திசைத்து வழுவாயிற்று.

312.அதுவே,
வழுவின்றாமெனல்வகையுளிக்காகும்.
(எ-ன்) மேலெய்திய திகந்து படாமற் காக்கின்றது.

(இ-ள்) அங்ஙனம் வரப்பட்ட யதிவழு வழுவில்லையென்று சொல்லப்படுவது வகையுளியாகச்
சேர்த்துக்கொள்ளுமிடத்துக் குற்றமில்லையா மென்றவாறு.

வாளிவேல்சேலாமதர்நோக்கமேருமுலை
வேளினடல்விற்போன்மிளிருநுத–லாளிநிகர்
காவலவனாற்றலதுகாய்ந்தகனிவாய்பவளம்
யாவருணர்வுட்காதிவட்கு. (824)
இதனுள் வகையுளிசேர்த்தேகொள்ளக் குற்றமின்றாயிற்று. துறை குறிவழிச்சென்றபாங்கன் றலைவனைவியத்தல்.

313.திணைமுதலாகச்செப்பியவழுவினொன்
றணைதருமாயினுமதுசொல்வழுவே.
(எ-ன்) முறையே சொல்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) திணைமுதலாகச் சொல்லப்பட்ட சொல்வழுவேழினுள், பலவேயன்றி யொருவழுச்
செய்யுளகத்துப்பொருந்துமாயினு மது சொல் வழுவா மென்றவாறு.

அருட்குணத்துக்கூடாதென்றாய்ந்துரைத்தபின்னும்
பொருட்ககல்வலென்றேபுகன்றீர்–மருட்கைமிகுங்
கொன்னுனைவேல்போன்றவிழிக்கோதைபொருட்டாற்குறித்திங்
கென்னுனையான்சொல்வேனினி. (825)
இதனுள், புகன்றீரெனற் வுபசாரப்பன்மைக் கென்னுமையான் சொல்வே னென்னாது என்னுனையான்
சொல்வே னென்றதனாற் பால் வழுவாயிற்று.

314.மரூஉக்கட்டுரைச்சொலின்வழுவின்றதுவே.
(எ-ன்) சிறுபான்மை கடியப்படாதென்ப துணர் – ற்று.

(இ-ள்) அச்சொல்வழு மரூஉமொழியாய்வருங் கட்டுரைச் சொல்லோடுங் கூடிவருமெனின் வழுவில்லையா மென்றவாறு.

மன்றல்கமழுமலைநாட்டும்வண்டமிழ்தேர்
நன்றிபயில்பாண்டிநாட்டகத்தும்–வென்றிபயில்
சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்
காணார்பிறவிக்கடல். (826)
இதனுள், மலையமானாடென்பது மலைநாடென்றும், பாண்டியனா டென்பது பாண்டிநாடென்றும்,
சோழனாடென்பது சோணாடென்றும் மருவா யடிப்படவந்த வழக்காற்றால்வந்து வழுவின்றாயிற்று. துறை- கடவுள்வாழ்த்து.

315.ஆற்றல்சாலெழுத்தினுளமைத்தசந்தியின்வகை
மாற்றமதுறவழுவுதல்சந்திவழுவே.
(எ-ன்) வைத்தமுறையானே சந்திவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) பெருமையொடுகூடிய வெழுத்திலக்கணத்தினுள் விதிக்கப்பட்ட சந்திகளின்கூறுபாடு நூல்கூறிய
கூறுபாட்டான்வாராது செய்யுளகத்து வழுவுதல் சந்திவழு வென்னுங் குற்றமா மென்றவாறு.

பொய்யில்பொருண்மேற்புரிந்தினிநீபோகிலிவண்
மெய்யிலெழினலமும்வேறுபோந்–தொய்யிலுறாத்
தோள்பைங்கழையெனலாந்தொல்கவின்போகத்துயில்போம்
வாள்கண்ணிணைக்கெழுதாண்மை. (827)

இதனுள் வாள்போன்றகண்ணிணை வாட்கண்ணிணையென
“லள வேற் றுமையிற் றடவு மல்வழி, யவற்றோ டுறழ்வும் வலிவரி னாம்” என்னுஞ் சூத்திரத்தான்,
ளகாரம் டகாரமாக மெய்பிறிதாகமுடியற்பால வழி வாள்கண்ணிணையென வியல்பாய்முடிந்தமையாற் சந்திவழுவாயிற்று.

316.ஐயெனுருபுதொகினஃதியல்பாம்.
(எ-ன்) அத்திரிபு திரியாது இயல்பாமிட முணர்-ற்று.

(இ-ள்) இரண்டாம் வேற்றுமைதொக்கபுணர்ச்சியில் வல்லெழுத்து முதன்மொழிவந்துழித் திரியா தியல்பாய்முடியவும்பெறு மென்றவாறு.

அஞ்சொன்மடவாயரங்கத்தமுதமெனு
மஞ்சனையசெவ்விமழைவண்ணன்–கஞ்சமலர்த்
தாள்கண்டார்மாரன்றனக்கிலக்கானாற்றுளபத்
தோள்கண்டாரென்படார்சொல். (828)
இதனுள், தாள்கண்டார் தோள்கண்டாரென “இயற்கை மருங்கி னியற்கை தோன்றலு, மெய்பிறி தாகிடத் தியற்கை யாதலும்”
என்பதனா லியல்பாய்முடிந்தன. திணை – பெண்பாற்கூற்றுக் கைக்கிளை. துறை….

317.பழுதறப்பகர்ந்தபாட்டினதியல்பு
வழுவுதல்செய்யுள்வழுவெனமொழிப.
(எ-ன்) செய்யுள்வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அகத்தியன்முதலோர் செய்யுளியலுட் குற்றமறப்பகர்ந்த செய்யுளிலக்கணத்தோடுகூடாது வழுவும்
பகுதியாய்வருதல் செய்யுள் வழுவென்றுகூறுவர் பெரியோ ரென்றவாறு.

முல்லைவெண்ணகைமொய்குழனுமர்வாழ்
மல்லன்மால்வரைக்கெமர்வரைநல்வினையாற்
கூடலருண்மங்கையரைக்கூடிப்பிரிந்துவருந்
தாடவர்க்குவேள்போன்றணித்து. (829)

இஃது ஆசிரிய முதல்வந்து வெண்பாவாய் முடிந்தது. அவ்வாறு முடிதற் கோத்திலாமையால் வழுவாயிற்று.
பகுதி – இயற்கை. துறை – இடமணித்துக்கூறி வற்புறுத்தல்.

318.தவமுறுபவரவர்போலுணர்சாற்றலு
ணவமுறப்புனைசெயுணடைநவையிலவே.
(எ-ன்) மேற்சொல்லப்பட்ட செய்யுள்வழுச் சிறுபான்மை யொரோவிடங்களுள் வருவன வுளவாமென்று வழுவமைப்புணர்-ற்று.

(இ-ள்) தவசரிதையெய்துமிருடிகளும் அவர்போல்வாருமாகிய முற்றவுணர்ந்த மூதறிவுடைப் புலவோரா னவமாகப்
பாடப்படுவனவாஞ் செய்யுணடை யாசிரியரால் நீக்கப்படுங் குற்றமில்லையா மென்றவாறு.

நாராயணனேநமவென்றுரைப்பவர்பால்
வாராதொருநாளும்வல்வினைதான்
சாரானொருதலையாய்த்தண்டதான்சாராவாம்
பேராதமாயப்பிறப்பு. (830)
இது சவலைவெண்பாட்டு ; என்னை? இதனுள் முதலே காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டாலிறாது
மூவசைச்சீராயிற்ற குறள்வெண்பாவா யதன்பின்னரும் பிறப்பென்னும்வாய்பாட்டாலிற்ற குறள்வெண்பாவாய்த்
தனிச்சொலின்றிமுடிந்தமையா லென வறிக. இதற்கு முன்னோர்கூறியசூத்திரம் யாதோவெனின்
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த், தனிவர லில்லது சவலைவெண் பாட்டே” என்பதென வுணர்க.
அன்றியும், “அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய், நட்டாலு நண்பல்லார் நண்பல்லர்,
கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு, சுட்டாலும் வெண்மை தரும்” என்னுஞ் செய்யுளானு முணர்க.

எனவே மொழிந்ததைமொழிதன்முதலாகச் செய்யுள்வழுவீறாகச் சொல்லப்பட்ட வொன்பதும் பொதுவகையான்
வழுவெனக்கூறியவற்றைத் தனித் தனி விதிச்சூத்திரத்தா னிவ்வாறுவரின் வழுவென விதித்துச்
சிறப்புவிதியா னிவ்வாறுவரின் வழுவமைதியா மென்றவாறாயிற்று.

319.உலகிடங்காலங்கலையேநியாய
மாகமமலைவென்றாறொருவகையுள.

(எ-ன்) இதுவு மொருவகை வழுவாமா றுணர் – ற்று.

(இ-ள்) உலகமலைவு மிடமலைவுங் காலமலைவுங் கலைமலைவும் நியாயமலைவு மாகமமலைவு மென்று
கூறப்படுவனவா மொருவகைமலைவு மாறுளவா மென்றவாறு.

ஏகார மீற்றசை. மலைவென்பதனை யிறுதிவிளக்காக வெங்கு மொட்டுக. மலைவென்பது மாறுபடுதல்.
எனவே யவையு மொரு வகைவழுவாயிற்று. அஃதேல் ஒழிந்த வழுவுணர்த்துமாறெடுத்த தொகைச்சூத்திரத்து ளொருவகைப்படப்
பதினைந்தெனக்கூறாது இரு வகைத்தாகப் பிரித்துக்கூறியவா றென்னையோவெனின் முன்னரொன்பதுங் குற்றமாதல்
பெரும்பான்மையாய்ச் சிறுபான்மை யொரோவிடத்துக் குணமாதலுமுடையவென்றுரைக்கப்படும் ;
பின்னராறும் ஒருதலையாகவே குற்றமாய்ப் பொருந்துமிடத்துப் புனைந்துரைவகையா னன்புலவராற்
சிறுபான்மை மொழியப்படுமென்ப தறிவித்தற்குக்கூறியவா றெனவுணர்க.

320.ஒழுக்கநடையேயுலகமதாகும்.
(எ-ன்) வைத்தமுறையானே உலகமலைவாமா றுணர்-ற்று.

(இ-ள்) அவ்வாறனுள், பெரியோரா லெடுத்துவழங்கு மொழுக்க நடையே யுலகமென்றுகூறப்படுவதா மென்றவாறு.

எனவே உலகமென்பது மக்கண்மேலு நிலத்தின்மேலு மொழுக்கத் தின்மேலு நிற்கும் பலபொருளொரு
சொல்லாதலா னிவ்விடத் தொழுக்கத்தையேகோடற் குலகென் றெடுக்கப்பட்டது. அவ்வொழுக்க மெல்லாரும்
அறிவுறக்கிடந்தமையா னின்னதென் றெடுத்துரைக்கவேண்டுவ தில்லை.
அது மலைதலென்பது உலகத்தொழுகலாற்றோடு மாறுபட்ட வொழுக்கநிகழ்வதாகக் கூறுதல்.

பூமிநடுநின்றுபுணரியேழுந்தாவி
நேமிவரைதனினேர்நின்றமரர்–கோமகிழ்வுற்
றாண்டதுறக்கமதைப்பார்த்தவனிபோதுமென
மீண்டவனிவ்வேந்தர்க்குவேந்து. (831)
என வரும். இதனுள் ஒருதீவினுள்வேந்த னெழுதீவையு மெழுகடலையு மேழ்பூமியையுங் கடக்கப் பாய்ந்து,
சக்கரவாளகிரியி னிமிர்ந்துநின்று, தேவர்கோனாகிய விந்திரன் களித் தாண்டிருக்குந் தேவலோகத்தையெட்டிப் பார்த்துத்
தனக்குப் பூலோகமொன்றுமாண்டிருப்பதேபோதுமென மீண்டுவந்தவனாகு மிந்த வேந்தர்க்குவேந்த னென்று
மாறுபடக்கூறினமையா னுலகமலைவாயிற்று.

321. இடமதுமலைநாடியாறெனமூன்றே.
(எ-ன்) வைத்தமுறையானே இடமென்பதனை விரித்துணர்- ற்று.

(இ-ள்) இடமென வொன்றாய்நின்றவது மலையும் நாடும் யாறுமென மூன்றா மென்றவாறு.

மலையென்பன : பொதியமு மிமயமு முதலாயின. நாடென்பன : பதினெண்பாடைக்குமுரிய நிலங்கள்.
யாறென்பன : கங்கையும் பொருநையுங் காவிரியு முதலாயின. இவற்றுள் ஒன்றினுளுரியவாகச்சொன்ன பொருள்
பிறிதொன்றனுளுரியவாகச் சொல்லுதல் வழுவாம். அவை,

காரகிலும்பொன்னுங்கவின்செய்மலயத்தினிற்பெண்
ணாரமுதின்மெல்லடிகட்கையனே–பார்பரலாய்ச்
செந்தழல்பாரித்தகடஞ்செப்பினசும்பூரிமயச்
சந்தனச்சோலைத்தடமாந்தான். (832)
எனவும்,

பருவமாமழையுகுபஃறுளிதிரண்டுநீ
ரருவிபாடிமிழ்வளனமர்சிலம்பாநின்
னறைகழல்பணிந்தெழுகலிங்கத்தரசர்
திறைதருகலினத்திரள்வாம்பரிகளு
மாளுவராரியர்மராட்டர்சோனகரெமை
யாளுகவெனத்தாழ்ந்தருள்கடாக்களிற்றுட
னறக்கழிவினராயருஞ்சமத்தெதிர்ந்து
புறக்கொடைபுரிந்தோர்புரந்தநன்னகர்களுங்
கங்கையுள்வலம்புரிகான்றவெண்டரளமுந்
துங்கவண்பொருநைத்துறையுண்மாமணிகளு
மெண்ணிலாதளிப்பினுமிடைவிலையலவாற்
பெண்ணியல்பெருக்கியபேரமுதாமெனத்
திருமகளாமெனச்சிறந்தவள்
வருமுலைக்கெவனீவிலைவழங்குவதே. (833)

எனவும் வரும். இவற்றுள், இமயத்திற்குரியன பொதியிலகத்துளவாகவும் பொதியிலகத்துளவானவை
யிமயத்துளவாகவும்புணர்த்து மலையிட மலைவாயிற்று.
தண்பொருநைக்குரியன கங்கையொடுபுணர்த்துங் கங்கைக்குரியன தண்பொருநையொடுபுணர்த்து மாற்றிடமலைவாயிற்று.
மாளுவ மாரியமுதலாயினவற்றிற்குரிய கலிங்கத்தொடுபுணர்த்துங் கலிங்கத்திற்குரிய மாளுவ மாரிய
முதலியவற்றொடு புணர்த்தும் நாட்டிட மலைவாயிற்று.

322.சிறுபொழுதொடுபெரும்பொழுதெனக்கால
மறுவகைத்தாமெனவறைந்தனர்புலவர்
(எ-ன்) காலமாமாறு மதன்பகுதியு முணர்-ற்று.

(இ-ள்) காலம், சிறுபொழுதுடன் பெரும்பொழுதென இரண்டு கூறா யொரோவொன்றறுவகைத்தா மென்றுஆசிரியர்கூறினா ரென்றவாறு.

அவற்றுள், சிறுபொழுது : விடியல் உச்சி எற்பாடு மாலை யாமம் வைகறை என ஆறு. பெரும்பொழுது :
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என ஆறுமாம். அவற்றொடு மலைதலாவது :
ஒன்றற்குரிய பூவும் புள்ளும் பொழுதும் தொழிலும் வேறொன்றிற்குரியவாகப் புணர்த்துரைப்பது.

உம்மையினிரந்தோர்க்கொன்றீயாதோ
ரிம்மையின்வறுமையென்பவற்றினுக்கிடமென
விரப்பவராயிலமெனவிசைத்ததற்கெதிர்
புரப்பவரிலமெனப்புகலும்வெவ்வுரையினு
நிரப்பெவனெனநிகழ்த்துதனிமித்தமதாய்க்
கரப்புரையிஃதெனக்கலுழ்ந்தகண்ணீரினைத்
தடுப்பவர்போற்றுயிலையுந்தடுத்திருகையி
னெடுத்தணைத்தினையலென்றெனையும்வற்புறுத்திப்
போர்வேலவர்தாம்போமுனங்குறித்த
கார்காலத்தினிற்கார்வருமாலையிற்
குயிற்குலங்காமாகூகூவெனுநிலை
வெயிற்குலமெனவிருள்வெருளவெண்ணிலவெழப்
புரவலர்முகம்போற்பொற்புமிக்கதுவா
யிரவலர்தாமரையேமநன்மலரே
நின்னிற்பிரியலன்பிரியினாற்றலனெனு
மன்னர்பொய்ம்மொழியினுமடங்கலுமடங்கலுஞ்
சுடுஞ்சுடுந்தொடர்ந்துமன்னுயிரை
யடுங்கொடுமையவெனுமவரறிவிலரே. (834)
என வரும். இதனுள். வேனிற்காலத்திற்குரியகுயிலைக் கார்காலத்துடன் புணர்த்தும்,
பகன்மலர்தாமரையை இரவுமலர்ந்ததாகப் புணர்த்தும், பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுமாகிய விரண்டுகாலமு மலைவாயிற்று.

323.பொருளுமின்பமும்புணர்பொருட்டாகியநூ
லருளுமெண்ணான்கிரட்டியகலையதுவே.
(எ-ன்) பொதுவகையாற் கலைக ளின்னதுக்குங்கருவியாய்த் தோன்றுமென்பதூஉ மவற்றது தொகையு முணர்-ற்று.

(இ-ள்) கலையென்றுசொல்லப்பட்டவது பொருளு மின்பமு மெய்துதற்கே துவாய வேதமுதலியநூல்களுட் கூறப்பட்ட வறுபத்து நாலா மென்றவாறு.

ஏகார மீற்றசை. அவற்றொடுமலைதலாவது அவ்வந்நூல்களுட் கூறியபடிகூறாது பிறழக்கூறுதல்.

நாணமில்செய்கைநாடகக்கணிகையர்
மாண்மரபினிலொருவனிதைதன்மைந்தர்க்
குற்றவெண்ணிரண்டுடனோங்கியவுருவம்
பெற்றவந்நிலைத்தண்டியம்பிடித்தனளா
யாடலும்பாடலுமமைவிலன்கொளுத்த
நீடலிலயணமொன்றினினிரப்பினளாய்ப்
படிபுரந்தருளும்பார்த்திபன்முன்னர்க்
கடியரங்கேற்றியகாலையிற்பிண்டியிற்
யிணையலுங்களையாள்பிணையலிற்பிண்டியு
மணைதரல்களையாதாடலுந்தாள
மெய்யிற்பயிலவுமேதகவுடையிசை
கையிற்பயிலவுங்காலியல்பயிலவு
நடித்தனணடத்துடனாதமுமுன்னூல்
வடித்திடுபான்மையின்மலைத்திடநடத்தின
ளாடல்சான்றோரவருடன்
பாடல்சான்றோர்பயிலவைக்களத்தே. (835)

இதனுள், ஐயாண்டிற் றண்டியம்பிடித்து ஏழாண்டியற்றிப் பன்னீராண்டினி லவையரங்கேறினாளொன்னாது
மைந்தர்க் கிந்திரியகலின முறுவதென்றுவிசாரிக்கப்பட்ட பதினாறாமாண்டிற் றண்டியம்பிடித்து
ஆடலும் பாடலு முற்றக்கல்லா வாசானுட னவை யோரயணத்தின் முற்றக்கற்றனளாய்க் கடியரங்கேறின ளெனவுங்
கூறியதன்மேல் ஒற்றை யிற்செய்த கைத்தொழி லிரட்டையிற்புகாமலு மிரட்டையிற்செய்த கைத்தொழி லொற்றையிற்புகாமலுங்
கைத்தொழில்காட்டாது மலையக் காட்டினா ளெனவும், இசையை மெய்யினு மிபலைக் கையினுந் தாளத்தைப் பாதத்தினுங் காட்டாது
மயங்க நடித்தனளெனவும், அவடானே பின்னொருநாள் நாதமும் நூல்சொன்னபடிநடத்தாது
பிறழநடத்தின ளெனவுங் கூறினமையானுங் கலைமலைவாயிற்று. கலையென்பது வித்தை.
இசையைப் பிறழநடத்தினாளென்பது நின்றநரம்பிற் கைந்தாவது கிளையாதலா னதனைப் பகையென்றும்,
ஆறாவது பகையாதலா னதனைக் கிளையென்றும், நான்காவது நட்பாதலா னதனை யிணையென்றும்
இரண்டாவதனைத் தொடுத்தல். என்னை?
“ஐந்தா நரம்பிற் பகைவிரவா தாறாகி, வந்த கிளைகொள்ள நான்காகி – முந்தை, யிணைகொண்ட யாழெழுவு
மேந்திழைதன் னாவித், துணைவன் புகழே தொடுத்து” எனத் தொண்டி எச்சவியலிற் கூறியவதனா லறிக.
அஃதேல் இந்நூலுட்கூறிய தொனிக்குத் தெண்டிகூறிய வுதாரணமே யுதாரணமாகக்காட்டியவா றென்னையெனின்
இந்நூற் கது முதனூலாயதாற் காட்டியதென வுணர்க. அவடானே பின்னொருநா ளென்பது சொல்லெச்சம்.
அஃதன்றித் தோரியமடந்தை யவளாடியவவைக்களத் தங்ஙனம் பாடினா ளெனினு மாம்.
தோரிய மடந்தையாவாள் ஆடிச்செலவைத்தவளா யங்ஙன மாடினவள்காலுக்குப் பாடினவள்.

324.அளவையினாயபல்பொருட்கமைவினைத்திற
முளமுறமதித்துரைப்பதுவேநியாயம்.
(எ-ன்) நியாயமாமாறுணர் – ற்று.

(இ-ள்) ஒரோகாரணங்களா லுலகத்துண்டாயபொருள்கட் கமைக்கப் பட்ட வினையினது கூறுபாட்டைக் காட்சி
முதலாய நால்வகையளவைகளாற் குறித்துக் கேட்டோருள்ளத்துறும்படி யுரைப்பது நியாயமா மென்றவாறு.

அவை யறுவகைப்பட்ட சமயங்களோடுங்கூடிய வுலகத்துப்பொருள் களினது தோற்றமு மழிவு மின்னவகையவென்று கூறுதல்.
அவற்றை யவரவர்கூறியவாறு கூறாது மாறுபாடாக வுரைத்தல் மலைதலேயாம். அது,

அன்றாலிலைத்துயின்றவச்சுதனையல்லாது
பொன்றாப்பொருளெப்புவியிலுள்ள–தென்றான்
றனதகத்தாயெவ்வுலகுந்தானடக்கிக்கொண்ட
புனலகத்தாய்நீந்தம்புயன். (836)
என வரும். இதனுள், ஆதிப்பிரமகற்பாந்தத்திற் சகலகடவுளருஞ் சகலான் மாக்களுமழியச் சகலான்மக்களையு மகிலாண்ட
கோடிகளையுந் திருவுதரத்தடக்கி யழிவிலாதிருந்தது ஸ்ரீ மந்நாராயணனென்று மார்க்கண்ட னுரைத்தா னெனற்பாலதனைப்
புனலகத்தாய்நீந்தும் பிரமாவுரைத்தா னென்றமையான் நியாயமலைவாயிற்று.
அச்சுதன்- அழிவிலாதான். அக்காலத்துப் புனலகத்தாய் நீந்திக் கண்டது மார்க்கண்டன். ஒழிந்தனவு மிவ்வாறே யொட்டிக்கொள்க.

325.அறம்பகர்மனுமுதலாயினவாகமம்.
(எ-ன்) ஆகமமாமாறுணர் – ற்று.

(இ-ள்) அறத்தினதுமார்க்கத்தைக்கூறாநின்ற மனுமுதலாய பதினெண் வகை யறநூலுமே யாகமமா மென்றவாறு.

அவற்றொடு மலைவாவது : இன்னா ரின்னதுசெய்த லற மென்று விதிக்கப்பட்ட விதியிற் பிறழவருவது. அது,

ஓட்டினொடும்பொன்னையொருநிலையாயுட்கோடல்
வீட்டினதின்பத்தைமிகவிரும்ப–லேட்டிருண்மென்
கூந்தலாரின்பமதுட்கொள்ளாமையில்லறத்திற்
றோய்ந்துளார்க்குண்டாஞ்சுகம். (837)
எனவரும். இதனுள், துறவறம்பூண்டார்தொழிலை யில்லறம் புரிந்தாரோடு புணர்த்தமையா னாகமமலைவாயிற்று.

326.நாவலர்நாடகவழக்கினுணயந்து
மூவிருமலைவுமொழிவதற்குரிய.
(எ-ன்) எய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) மேற்கூறிய வாறுவகைவழுவு நாடகவழக்கத்தாற் கூறுங்கால் நாவலர்க்குரியவாகக் கொள்வதா மென்றவாறு.
நாடகவழக்கென்பது “நாடக வழக்கினு முலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்” எனத்
தொல்காப்பியத்துரைக்கப் பட்ட மூன்றனுள்ளு முதல்வழக்கு. அஃதாவது இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்தவுரையாய்த் தோன்றுவது. என அவ்வாறு புகழ்ச்சியிடத்து நீக்கப்படாவலங்காரமாயே வரு மென்பதாம். அவை வருமாறு :-

மேலைமலையிற்புகுதுமாதவனைநிற்றியென
மீளவருவித்துலகின்வாய்
மாலைமதியத்தினுடனோடநியமிப்பனுரு
மாறிவருவிப்பனிமையோ
ராலையநிலத்திடுவன்வேலைவலயத்தையவ
ணாகவுமமைப்பனழகார்
சோலைமலையிற்குடி கொளாதியைநிகர்த்ததொரு
சோதியைவிதிப்பனெளிதே. (838)
இதனுள், சம்பிரதமாதலி னுலகமலைவுப்பொருள்வந்தும் அலங்கார வழுவின்மையாயிற்று. இந்திரசாலமென்பது மிது.

காழகிற்பொழிலுஞ்சந்தனப்பொழிலுங்
கமழ்நறுஞ்சண்பகப்பொழிலுங்
கோழரைக்கமுகுநாளிகேரமும்பொற்
கோங்கும்வேங்கையுமலர்க்குருந்து
மாழையஞ்சுளைமுட்புறக்கனிப்பலவு
மாவுநாகமும்பணைமருதுந்
தாழையுமகிழும்வாழையுங்கரும்புந்
தனித்தனிதழைத்ததெம்மருங்கும். (839)
இது தண்பொருநையுண் மலையிரண்டிற்கும் பிறநிலங்கட்குமுரிய அகிலுஞ் சந்தனமுங் கோங்கும் வேங்கையுங் குருந்தும்
புன்னையும் வந்திட மலைவாயும் புகழ்ச்சியிடத்துப் பொருந்தின அலங்காரமாயிற்று.

காவியங்கண்ணியர்காலையின்மலர்கொய
வாவியுட்குறுகலும்வதனமண்டலத்தினை
மதியெனச்செழுந்தாமரைமலர்குவிதரப்
புதியதண்புனல்படிந்திடப்புகுமாலையி
லாடவர்முகத்தையுமருணோதயமென
வேடவிழாம்பலினத்தொடுமுகிழ்க்கும்
பாடல்சான்மருதப்பார்த்திபர்தலைவ
பொழுதுமாறுதனின்புலக்கருப்பொருட்கு
முழுதுமுண்மையதான்மொழிபலகிளைத்தெவன்
புலந்தெவன்பொதுவுணின்மார்வங்
கலந்தெவன்றீண்டலெங்காமர்மெல்லணையே. (840)
இதனுள் மாலையிற்குவியுங் கமலங் காலையிற் குவிந்ததாகவும், காலையிற் குவியும் ஆம்பல் மாலையிற்
குவிந்ததாகவுங்கூறியது காலமலை வாயினும் புனைந்துரைவகையா னலங்காரமாயிற்று.
பகுதி – பரத்தையிற் பிரிதல். துறை – பள்ளியிடத்தூடல்.

வெயினுழைந்தறியாப்பணைமரச்செறிவுள்
வெறிவரிவண்டினமிரைத்துப்
பயின்முகையவிழ்ந்துபனிற்றுதெண்ணறவைப்
பருவமாமழைப்பெயலெனவே
குயிலடங்கலுந்தாம்பொதும்பருளொளிப்பக்
குறிப்பொடும்வெளிப்படவிருந்து
மயிலடங்கலுந்தாமகவலுங்களிப்ப
வருந்தனீமதர்மழைக்கண்ணாய். (841)
இதனுள், கார்க்குரியன வேனிற்குப்புணர்த்தும் புனைந்துரை வகையா னலங்காரமாயிற்று.

செறியுமிற்றொறும்புனன்மலர்முதலியசிறப்பின்
குறியமந்திரத்தமைந்துளவுறுப்பினிற்கொடுபோழ்
தறிவிழந்தவைமுறைதடுமாறினுமவையே
நெறியவாயிறையுட்கொளநிறைக்குநன்னீரார். (842)
இது கலைமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

வண்டுலவுந்தண்டுளபப்பெம்மானேயனைத்துயிர்க்கும்வசதியாய
வண்டரண்டபகிரண்டமகத்தடக்குமுழுமுதனீயாயிற்றென்றாற்
பண்டுலகமனைத்தையுமோரடலெயிற்றாலிடந்தளந்தபான்மையல்லா
துண்டுமிழ்ந்தபடியயல்கண்டிருந்தவராரெவணிருந்தன்றுண்டவாறே (843)
இது நியாயமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

*இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்
றிடங்கொள்புல்லறிவினரேனுஞ்
சிறந்தவந்நகரத்தினியொருபிறவி
சிறக்கவிங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதே
பிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுக்
கழலகத்தமைப்பரக்கணத்தே. (844)
இஃது ஆகமமலைவாயினும் புனைந்துரைவகையா லலங்காரமாயிற்று.

327.ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன்முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே.
இச்சூத்திரம் இந்நூலுளுரைத்த விலக்கணமனைத்துந் தொகுத்திவ்வணி யிலக்கணத்திற்குப் பிறவாறு
வருவனவுளவெனினு மவற்றையுந் தழீஇக்கொள்க வெனப் புறநடையுணர்த்துகின்றது.

* இச்செய்யுள் பின்வருமாறு குருகாமான்மியத்துக் காணப்படுகிறது.

“இறந்தபல்செனனத்திழைத்ததீவினைநின்றிடங்கொள்புல்லறிவினோரெனினுஞ்
சிறந்தபேரறிவின்மேலொருசெனனஞ்செறிகவாங்கெமக்கெனத்தியானம்
பிறந்தவணுதித்தோர்வினையுமப்பொழுதேபிறக்கிடுமவரையென்றூத
ரறந்தவாவுலகத்திருத்துவர்நமனுமழலகத்தமைப்பனக்கணக்கே.”

இதன்பொழிப்பு ; செய்யுளெனத் தொகையானொன்றாயதனை வெண்பா வாசிரியமெனப் பகுத்த விருவகையினின்றுங்
கலி வஞ்சி மருட்பா பரிபாட லென்னு நான்கினொடு மாறென விரித் தவற்றைத் தெளியும்படிக்குப் பொருள்பெறும்
நான்கென்றுபகுத்த முத்தகங் குளகந் தொகை தொடர்நிலையென்னுஞ் செய்யுண்மரபும்,
வைதருப்பம் கௌடம் பாஞ்சாலமென்னு மூன்றுபாகமும், அவற்றொடும்பயில்வதான இன்பம் தெளிவு செறிவு சமனிலை
இன்னிசை உதாரம் வலி காந்தம் உய்த்தலில் பொருண்மை சமாதி யெனக்கூறப்பட்ட பத்துவகைக்குணமும்,
தன்மை முதற் பாவிகமீறாக வறுபத்துநாலென்னு மெண்ணையுடைய பொருளலங்காரமும்,
அடியினானுஞ் சொல்லினானு மெழுத்தினானு மடுக்கப்பட்டனவாகி முற்றுப்பெறவகுத்த மூன்றுவகை மடக்கலங்காரமும்,
வல்லின மெல்லின மிடையினமென்னு மூவினப்பாடன்முதலாக முறையினோடும் பொருந்திய விருபத்தாறின்மேலு மாறுகூட்டி
முப்பத்திரண்டென விழுமிதாய சித்திரக்கவிகளும் விரித்தபின்னர்க் குறையாய்நின்றனவாய வழுவும்,
வழுவமைதியு மிவையிவையென விரண்டுகூறாக்கிக்கூறிய பதினைந்தினொடு மணியிலக்கணநிரம்பாம லொழிந்தனவாய்
வருவனவுள வெனினு மவற்றையு மிவற்றினகத்தகப்படத் தழீஇக்கோடல் கற்றறிந்த வுத்தமர்கடனா மென்றவாறு.

அஃதேல் முற்கூறியனவல்லவோ மீண்டுங்கூறிற்று ; புனருத்தியாம் பிறவெனின், ஆகாது ; தொகுத்துமுடித்தலென்பது
தந்திரவுத்தியாகலா னிவ்வாறுரைக்கப்பட்டதென்றறிக. அஃதாக, “குறித்துரையெழுத்தொடு கூற்றவை செய்யுளி” னென்ற
முறையானே எழுத்து மொழி யடி யென்னா தீண்டு அடி மொழி யெழுத்தென்று முறைபிறழக்கூறியவா றென்னையெனின்
முந்துமொழிந்ததன்றலைதடுமாற்றென்னு முத்தி வகையான் அடிமடக்கென்பதும் சொன்மடக்கென்பதும் எழுத்தின்
கூட்டமென்ப தறிவித்தற்கும் ஓரெழுத்தானும் ஓரினத்தானும் வருவனவு மதன்பாற்படுமென்றற்கும் என்க.
நிரோட்டிய மோட்டியமுதலாகக் கூறப்பட்ட மிறைக்கவிகளும் நோக்கியாராயுங்காற் பெரும்பான்மையும்
எழுத்தின்பாற்படுமாயினு மவை வேறுவேறு சிறப்புப்பெயருடையவா யுலகி னுண்டாக்குகின்றனவாகலாற்
சொல்லின்முடியுமிலக்கணத்தா னவ்வாறு சொல்லப்பட்டது. சொல்லின்முடியுமிலக்கணந்தான்
யாதோவெனின் ஒப்பினாகியபெயருங் காரணமாகியபெயருங் குறித்துரைக்கப் படுதலா னவற்றினானே யுணர்ந்துகொள்க.

அஃதேல் மாலை மாற்றுஞ் சுழிகுளமும் சருப்பதோபத்திரமுங் கோமூத்திரியுமென நான்குமேயன்றே
யாண்டாசிரியனால் வடநூலு ளுரைக்கப்பட்டன.
ஒழிந்த மிறைக்கவி யீண்டுரைத்தல் மிகை படக்கூறிற்றாம்பிறவெனின், ஆகா ;
ஒழிந்தன ஒன்றினமுடித்த றன்னின முடித்தலென்னுந் தந்திரவுத்தியானுரைக்கப்பட்டது.
அல்லதூஉம், வடமொழிமுதனூலாதலாற் றனக்கொருவிகற்பம்படக் கூறுதலிலக்கணமென்பது ;
“முன்னோர்நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன்வேண்டும்விகற்பங்கூறி, யழியாமரபினதுவழி நூலாகும்” என்பவாகலின்.

எச்சவியலுரை முற்றும்.

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்னகவிராயன்பேரைவரோதயனே.
மாறனலங்காரம் முற்றும்.

—————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading