https://www.tamilvu.org/node/154572?linkid=118853
ஸ்ரீ மாறனலங்கார வரலாறு
அலங்காரமென்பது செய்யுளுக்கு அழகுசெய்யும் லக்ஷணங்களைக் கூறும் சாஸ்திரம்.
இவ்வலங்கார சாஸ்திரத்தை வடமொழியாளர் மிகவும் விரும்பிக் கற்பர்.
இந்தச் சாஸ்திரத்தின்பெருமை அக்நிபுராணத்திற் பேசப்பட்டுள்ளது.
வாமநசூத்திரம், காவ்யாதர்சம், ஸரஸ்வதீகண்டா பரணம், காவ்யப்ரகாசம், அலங்காரஸர்வஸ்வம், ரஸமஞ்சரி,
ஸாஹித்ய தர்ப்பணம், ப்ரதாபருத்ரீயம், அலங்கார கௌஸ்துபம், சந்திராலோகம், குவலயானந்தம்,
சடவைரிவைபவதிவாகரம் (இது நம்மாழ்வார் விஷயமான வடமொழி மாறனலங்காரம்)
முதலிய நூற்றுக்கணக்கான வடமொழி நூல்கள் அலங்காரத்தைப் பற்றிச் சொல்பவைகள்.
தமிழில் முதன்முதல் அணியைப் பற்றித் தெரிவிக்கும் நூல் தொல்காப்பியம்.
தொல்காப்பியர் கூறுவது உவமை ஒன்றுதான்.
அவர் அகத்திணையியலில் ஏனையுவமம் உள்ளுறையுவம மிவைகளை விளக்கி உவமவியலில் உவமத்தைத்
தொழில், பயன், வடிவு, வண்ணம் எனப் பிரித்து விரித்தெழுதியிருக்கிறார்.
தொல்காப்பியர் காலத்து உவமையொன்றே அணியாகக் கருதப்பட்டது.
பிற்காலத்தார் அதிலிருந்து பல அணிகள் கற்பித்துக் கொண்டனர்.
நச்சினார்க்கினியரும் உவமமொன்றனையே அணியாகக் கருதினர்.
இவர் தம் காலத்திற் பல அணிவிகற்ப வேறுபாடுகளுடன் வெளிவந்த ஒரு அணி நூலைத்
தமது தொல்காப்பிய வுரையிற் குறைகூறுகின்றனர்.
இவர் உவமவிகற்பங்களுக்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுள்கள் சில,
தண்டியலங்காரவுரையில் வேற்றுமையணி, தற்குறிப்பேற்றவணி முதலியவைகளுக்குதாரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
நிரனிறை, சமம் முதலியவற்றை உவமத்தின் விகற்பமாயே கொண்டார் நச்சினார்க்கினியர்.
இப்படி உவமமே பலவணிகளினுற்பத்திக்குங் காரணமாயிருந்தது என்பதை வடமொழியாளரும் சம்மதிக்கின்றனர்.
அப்பையதீக்ஷிதர் தாமெழுதிய சித்திரமீமாம்ஸை யென்னுங் கிரந்தத்தில் இவ்விஷயத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அச்சுலோகம் வருமாறு :-
இதன் மொழிபெயர்ப்பு,
“உவமையென்னுந்தவலருங்கூத்தி
பல்வகைக்கோலம்பாங்குறப்புனைந்து
காப்பியவரங்கிற்கவினுறத்தோன்றி
யாப்பறிபுலவரிதய நீப்பறுமகிழ்ச்சிபூப்பநடிக்குமே” என்பதாம்.
இவ்வணியிலக்கணமானது தொல்காப்பியத்திற் பொருளதிகாரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில், தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபாகமாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது.
“எழுத்துஞ்சொல்லும் பொருளுநாடிச், செந்தமிழியற்கை சிவணியநிலத்தொடு, முந்துநூல்கண்டுமுறைப்படவெண்ணி”
என்னும் தொல்காப்பியப் பனம்பாரர் பாயிரத்தால்,
தொல்காப்பியத்திற்கு முதனூலும் இப்பாகுபாடே கொண்டிருந்ததெனத் தெரிகிறது.
இறையனாரகப் பொருளுரையை யுற்றுநோக்கும்போது, ‘யாப்பு’ , தனியுறுப்பாகக் கருதப்பட்டு,
தமிழிலக்கணம் நான்கு பிரிவாகக் கருதப்பட்டதென்று தோன்றுகிறது.
அதன்பின்புதான் ‘அணி’ தனியுறுப்பாகக்கொள்ளப்பட்டு, தமிழிலக்கணம்,
எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென ஐந்து பிரிவுடையதாக வகுக்கப்பட்டது.
இவ்வைந்திலக்கணமும் ஒருங்கே கூறும் நூல்கள் வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல்விளக்கம், முத்துவீரியம் என்பனவாம்.
இவை ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கிரமத்தில் அணியிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
வீரசோழிய அணிகளுக்கு முதனூல் ஆசார்யதண்டியியற்றிய வடமொழிக் காவ்யாதர்சம்.
இலக்கணவிளக்க முதலிய மற்ற இலக்கணங்களின் அணியிலக்கணங்களுக்கு முதனூல்,
தமிழ்த் தண்டியலங்காரமும் அதன் உரைகளுமாம்.
தனியாய் அணியிலக்கணமாத்திரங்கூறும் நூல்கள்
அணியியல் அல்லது அணிநூல், தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன.
இவற்றுள் அணிநூலைப் பற்றி விசாரிப்போம்.
யாப்பருங்கலவிருத்தியில் “உருவகமாதிவிரவியலீறாவரும். . . . அலங்காரமென்பது அணியியலாதலின்” என்று
கூறியிருப்பது தண்டியலங்கார அணிமுறைவைப் புக்குப் பொருத்தமில்லாததால் வேறு அணிநூலைக் குறித்ததாக வேண்டும்.
நேமிநாதவிருத்தியில்,
“புனையுறுசெய்யுட்பொருளையொருவழி, வினைநின்று விளக்கினது விளக்கெனப்படுமே”
“முதலிடைகடையென மூவகையான” என்பன அணியியல் ஆகலின் என்றுள்ளது.
இதில் இரண்டு சூத்திரத்தாற் குறித்த விளக்கணி தமிழ்த் தண்டியலங்காரத்தில்,
தீபக மென்றபெயரால் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கிறது.
ஆதலால் இவ்விருத்திகாரர் குறித்த அணியியல் என்னும் நூல் தண்டியலங்காரத்தினும் வேறாகவேண்டும்.
நச்சினார்க்கினியர் தொல்காப்பியவுரையில்
“இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளுஞ்
சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென
இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர்” எனக்கூறி அவ்வணி நூலுக்குத் தமது சம்மதமின்மையையும் தெரிவிக்கிறார்.
இவ்வாக்கியத்திலுள்ள விஷயம் வடமொழியிலிருந்து பெயர்த்த தண்டியலங்காரத்தைக் குறிக்காது
வேறு அணிநூலையே குறித்ததாக வேண்டும்.
பரிமேலழகர் பக்ஷாந்தரமாய்க்கூறும் நுவலாநுவற்சி, ஒட்டு என்னும் பரியாயப் பெயர்கள் முறையே
வீரசோழியத்திலும் தண்டியலங்காரத்திலும் காணப்பட்டபோதிலும் அவர் தன்மதமாகக்கூறிய
பிறிதுமொழிதல் என்பது அணிநூலுட் கண்டதாகவிருந்தாலு மிருக்கலாம்.
இப்படியே வீரசோழியம், தண்டியலங்காரங்களுட் காணப்படாத சில அணிகளின் பரியாயப் பெயர் இவருரையிற் காணப்படுகின்றன.
இன்னோரன்ன காரணங்களால், தண்டியலங்காரத்தினும் வேறாய அணிநூல் அல்லது
அணியிய லென்ற நூலொன்று இருந்து விழுந்திருக்க வேண்டுமென் றேற்படுகிறது.
ஆனால், தண்டியலங்காரத்திற்கே அணியியலென்னும் பெயர் இருந்திருக்கிறது.
அணியியலென்றபெயருடன் அடியார்க்குநல்லாரும், மாறனலங்காரவுரையாசிரியரும் (மா-அ-சூத் 25-ன் கீழ்)
எடுத்துக்காட்டி யிருக்கிறமுறையே சூத்திரம் இரண்டு மொன்றும் தண்டியலங்காரத்துட் காணப்படுகின்றன.
இத் தண்டியலங்காரச் சூத்திரங்கள் அணியியலென்னும் நூலிலிருந்து முன்னோர் மொழியாக
எடுத்துத் தண்டியலங்காரத்துட் சேர்க்கப்பட்டிருக்கலாமென்று கருதுவதற்கு இடங்கொடுக்கின்றன.
இனி, ‘மாறனலங்காரம்’ என்பதைப் பற்றி விசாரிப்போம்.
மாறன் என்பது பாண்டியரைக் குறிக்கிற பழம் பொதுப்பெயர்களுள் ஒன்று ;
இங்கு ஆழ்வார்களுட்சிறந்த நம்மாழ்வாரைக் குறிக்கிறது.
இவர் பாண்டியரது அரசாட்சிக்குட்பட்ட பொருநையாற்றின் அடைகரையாகிய திருவழுதி வளநாட்டுக்குரிய சிற்றரசர்.
மாறன், காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன், பொருநற் (தாம்ரபர்ணி) சேர்ப்பன்,
பொருநற்சங்கணித்துறைவன், மகிழ்மாலைமார்பினன் முதலான பெயர்கள்
இயல்பாயும், காரணம்பற்றியும் இவருக்கு வழங்கி வந்தனவென்று திருவாய்மொழியால் தெரிகிறது.
இவர் பிறந்தபொழுதே தொடங்கித் திருமாலினிடத்து விசேஷபக்தியுடையராய்
உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் தண்ணனேயென் றத்யவசித்துத்
ததேக த்யானபரராயிருந்து நான்கு வேதங்களையும்
திருவிருத்தம் திருவாசிரியம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக
லோகோஜ்ஜீவநார்த்தமாக வெளியிட்டருளினர்.
இவரை அக்காலத்திலிருந்த மதுரகவி முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
பிற்காலத்து வந்த நாதமுனி, யாமுநாசார்யர், ராமாநுஜர் முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும்
ஆசார்யராக மதித்து நேரிலும் விக்ரகரூபமா யெழுந்தருளப் பண்ணியும்
ஆழ்வார்களுட் டலைமையானவராய்க்கொண்டு ஆராதித்து வந்தனர்.
வடநாட்டிலும் துளசீதாசர் முதலானோரால், பாராட்டிப் பூசிக்கப்பட்டார் இவ்வாழ்வாரெனின்,
இவரைப் பற்றி நாம் அதிகமாயெழுத வேண்டியதில்லை.
இந்நூலாசிரியர் இவ்வாழ்வாரிடத்து ஏழாட்காலும் பழிப்பிலாத் தொண்டு பூண்டு
மறந்தும் புறந்தொழாதவமிசத்துட்பிறந்த வைணவமதாபிமானமுள்ளவரான படியினாலே,
தண்டியலங்கார முதலிய நூல்கள் அரசர் முதலியவர்களைப் பற்றிக்கூறி
லௌகிக திருஷ்டாந்தங்களுடையனவாயிருப்பது கொண்டு, தா மிந்த அலங்கார நூலையியற்றி
இதை ஆழ்வார்க்குச் சமர்ப்பித்து உதாரணங்களை
ஆழ்வார் விஷயமாகவும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வைஷ்ணவபரமாய்ச் செய்து சேர்த்தருளிக்
‘காரிதந்தருள் கலைக்கடலியற் பெயர்புனைந்து’ (மா-அலங். பா)
‘திருமகிழ்ப்பரமதேசிகன் பெயரால்’ (மா-அகப்) இந்நூலை வெளியிட்டருளினர்.
ஆகவே மகிழ்மாறன் அல்லது நம்மாழ்வாரை நாயகனாகக் கொண்ட அலங்கார சாஸ்திரமாகுமிது.
வடமொழியிலும் நம்மாழ்வார் விஷயமான ஒரு அலங்கார சாஸ்திரம் ‘சடவைரிவைபவதிவாகரம்’ என்ற பெயருடன்
குவலயாநந்தத்தை யநுசரித்ததாய் விளங்குகிறது.
கூடிய சீக்கிரம் அச்சில்வரும் இத் தமிழணி நூல், பாயிர இலக்கணத்தை முதலிற் பெற்று,
அது தவிரப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு பகுப்புடையதாயிருக்கிறது.
இந்நூற் பொதுப்பாயிரத்துள் “வெள்ளையினகவலின் விளம்பலு மரபே” என்றபடி
இந்நூலாசிரியர் பொதுவியலைமாத்திரம் வெண்பாவா லமைத்திருக்கிறார்.
அகவலின் வெள்ளையினறைக வென்ற முந்து நூல் விதித்தமையுளவாகவும்,
விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோர்
இலக்கணங்களைக் கூறியதுபோலவும், சிலப்பதிகாரத்திற் சிலகாதைகள் பாவினங்களாற் பாடியது போலவும்
இவரும் முதலியலை வெண்பாவாலும் மற்றவற்றை நூற்பாவாலும் கூறினர்.
தண்டியலங்காரத்தில் மேற்கூறிய நான்கியலுக்கும் சேர்ந்த சூத்திரங்கள் 125 தான்.
தண்டியலங்கார உதாரணச் செய்யுள்களிலும் மாறனலங்கார உதாரணச் செய்யுள்கள் மிகவு மதிகம்.
ஆகவே தண்டியலங்காரத்தினும் மாறனலங்காரம் மிக்க விரிவுடையது.
தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தைப் பின்பற்றின மொழிபெயர்ப்பு.
மாறனலங்காரம், தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும்,
“முதுமொழித்தண்டி முதனூலணியையும், புதுமொழிப் புலவர்புணர்த்தியலணியையும்,
தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையும், மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும்,
சதுர்பெற விரண்டிடந்தழீஇய சார்பென”விளங்குகிறது.
ஆயினும், இது தண்டியலங்காரத்தின் வழி நூலாகும்.
இதனுரையில் வடமொழித் தண்டியாசிரியரை யபூர்வமா யோரோரிடத்தும்,
தமிழ்த் தண்டியாசிரியரை அடிக்கடி பல இடங்களிலும் சுட்டியிருக்கிறார்.
இந் நூலாசிரியர் சிலஇடங்களிற் சிலநியாயம்பற்றிச் சிறிது வேறுபடுவதுமுண்டு.
எடுத்துரைப்பிற் பெருகுமாதலால் 84ம் சூத்திரவுரை முதலிய இடங்களிற் கண்டுகொள்க.
தண்டியலங்காரத்துட்கூறிய பொருளணிகளின்றொகை 35.
இந் நூலுட்கூறிய அணிகளின்றொகை 64.
இந்நூலார், தண்டியாசிரியர்கூறிய நுட்பமென்னுமலங்காரம் பரிகரத்துளடங்குதலா லதைக் குறைத்தார்.
சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத்திணையியலிலுங் கூறியுள்ளவும்
மற்ற அணிநூல்களுட் கூறப்படாதனவுமாகிய பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழியென்னும் மூன்றையும்
செய்யுட்கணி செய்தலால் அணியுட் சேர்த்துமிகுத்தார்.
வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதினிகழ்த லென்னுமைந்தும் அழகெய்துவதா யிருத்தலின்,
இலக்கியங்கண்டதற் கிலக்கணமியம்புதலாயிவற்றையு மிகுத்தார்.
தண்டியாசிரியர் உவமவிரியுட்சேர்த்தும், ஏனையாசிரியர் வேறுவேறாகப் புணர்த்துமிருக்கிற ஐயம்,
தெரிதருதேற்றம், பொதுநீங்குவமை என்பவற்றுள் ஐயத்தையும், தெரிதருதேற்றத்தையும்,
ஏனையாசிரியர்மதமுடன்பட்டுப் பிறிதோரணியாக்கியும், பொதுநீங்குவமையைத் தண்டியாசிரியர் மதம்பற்றி யுவமையுட்புணர்த்தும்,
தன்கோட் கூறலென்னுமுத்தியானும், தன்குறியிடுதலென்னுமுத்தியானும், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி முடிக்கும் வழி
நூலிலக்கணம்பற்றியும் இவ்வாறெல்லாம் முடித்தார்.
இவ்வாறு சூக்குமமாய்க் காணப்படும் வேறுபாடுகளுக்கெல்லாம் மேற்கண்டபடியே கொள்ளவேண்டும்.
தண்டியாசிரியர் ஒரே சூத்திரத்திற் பன்னிரண்டு சித்திரகவிகளுக்குப் பெயர்மாத்திரங் கூறிச்செல்ல,
இந்நூலார் முப்பத்திரண்டு சித்திரகவிகள் கூறி அவற்றுக்கு இலக்கணமுங் கூறிச்செல்கிறார்.
‘தேவா’ ‘மாதவனே’ ‘தண்மதி’ ‘சேடுறு’ என்றுதொடங்குகிற சக்கரபெந்தச் செய்யுள்களில்
‘திருமலை’, ‘தென்குருகூர்’, ‘வடமலையப்பன்’, ‘சீராமராமசெயம்’, ‘தருமமேகைதரும்’ என்பவைகளும்
இரதபெந்தத்தில் ‘நாராயணாயநம’, என்பதும் காதைகரப்பிற்
‘கொல்லான்புலாலைமறுத்தானை’ என்னுங் குறளும் அழகாயமைக்கப் பட்டுள்ளன.
தண்டியலங்காரவாசிரியர் தாமே மூலமும் உதாரணமுங் காட்டினாற் போல,
இந்நூலாசிரியர் தாமே உதாரணச் செய்யுள்களும் செய்தமைத்தாரென்று தோன்றுகிறது.
“இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோவெனின்” என்று உரையில்வருவது கொண்டும்
பிற ஆதாரங்கொண்டு மிவ்வாறு ஊகிக்கவேண்டியதாயிருக்கிறது.
இந்நூலிற் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, குறள், நாலடி, சிந்தாமணி,
சிலப்பதிகாரம், வெண்பாமாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி முதலிய பழைய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
இந்நூலாசிரியர் செய்தருளிய திருக்குருகாமான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன்கிளவிமணி மாலை,
இந்நூலுரையாசிரியர் செய்தருளியதாக நினைக்கப்படுகிற மாறன் பாப்பாவினம் முதலிய வைணவ நூல்களிலிருந்தும்
அடிக்கடி மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
திருப்பதிக்கலம்பகம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.
அந்நூலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
மற்றைய உதாரணச் செய்யுள்களெல்லாம் நம்மாழ்வார் விஷயமாகவும், திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும்
வெண்பா முதலிய பாப்பாவினங்களிற் பெரும்பாலும் அகப்பொருட்டுறைகளமையப் பெற்றனவாய்
நூலாசிரியராற் செய்யப்பெற்றுச் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வுதாரணங்களெல்லாம் கற்பனைக் களஞ்சியமாய்ச் சொற்சுவை பொருட்சுவை நிரம்பி அழகாயிருக்கின்றன.
பெரும்பாலும் உதாரணச் செய்யுள்களுக்குத் திணையும் துறையும் கூறப்பட்டிருக்கின்றன.
சில உதாரணங்களுக்குப் பொழிப்புரையும், சிலவுதாரணங்களுக்குக் குறிப்புரையும் கூறப்பட்டுள்ளன.
நன்னூலின் ஆரம்பத்துட் கூறியிருப்பதுபோல இந்நூலிலும் ஆரம்பத்திற் பொதுப்பாயிரத்திலக்கணம்
மிக விரிவாயும் தெளிவாயுங் கூறப்பட்டிருக்கிறது.
இத் தமிழணி நூலின் பொருளடக்கத்தையும் பெருமையையும் பின்வரும் நூற்பாவானும், வெண்பாவானும் ஒருவா றறிந்துகொள்க.
ஆறெனத்தொகைவகையினில்விரித்தவற்றைத்
தேறமெய்பெறுநான்கெனத்தெரிசெய்யுளும்
பாகமோர்மூன்றும்பயில்குணம்பத்து
மாகவெண்ணான்கிரட்டியபொருளணியு
மடிமொழியெழுத்தினடுக்கினவாக
முடிவுறவகுத்தமூவகைமடக்கு
மூவினப்பாடன் முதலாமுறைமையின்
மேவினவிருபானாறன்மேலாறென
விழுமியமிறைக்கவிவிரித்தபின்னெஞ்சிய
வழுவழுவமைதியுமிவையெனவகுத்து
மொழிந்தவைம்மூன்றுடன்முற்றா
தொழிந்தவுங்கோடலொள்ளியோர்கடனே”
வாய்ந்ததிருப்பதிநூற்றெட்டினையும்வாழ்த்தியே
யாய்ந்ததமிழ்மாறனணியெனப்பேர்–தோய்ந்துளதாற்
காண்டகுசீர்மற்றோரணியுங்கவின்புணர்க்க
வேண்டுமோவீங்கிதற்குமேல்”
சுமார் நூறுவருஷங்களுக்குமுன் ‘கர்னல் மெக்கன்ஸி’ துரையவர்களால் மிக்க திரவியச் செலவு செய்து சேர்க்கப்
பெற்று இப்போது துரைத்தனத்தா ரிடமிருக்கும் சென்னை இராஜாங்கப் புத்தக சாலையில்
இந்நூலின் காகிதக் கையெழுத்துப் பிரதியொன்றிருப்பது, சில பெரியோர்களுக்குத் தெரிந்த விஷயம்.
கிரந்தமந்தணகூடம் (Tamil Museum) என்ற பெயர் வைத்துக்கொண்டு அநேக சாஸ்திரங்களை வெளியிடப்போவதாய்
முன்னுக்கு வந்த S. சாமுவேல்பிள்ளை என்பவர், சுமார் 55-வருடத்துக்குமுன்,
தா மச்சிட்ட ‘தொல்காப்பிய நன்னூல் ஐககண்ட்ய’ புஸ்தகத்தில் இந்நூலைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ சூரியநாராயண சாஸ்திரியாரவர்களும்,
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ செல்வக்கேசவராய முதலியாரவர்களும் தாங்களியற்றிய தமிழ்ப் பாஷை விஷயமான நூல்களில்
இந்நூலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சென்னையில் வசித்த வைணவ வித்வான்களாகிய மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ இராஜகோபால பிள்ளையவர்கள் முதலியோர்
இந்நூலை அச்சிட எண்ணிப் பொருண்முட்டுப்பாட்டால் நின்றுவிட்டனர்.
முதன் முதல் வெளியான செந்தமிழ்ப் பகுதியினின்று, காலஞ்சென்ற ஸ்ரீமாந்.பாண்டித்துரைத் தேவரவர்களும்,
முன்பு செந்தமிழ்ப் பத்திராசிரியராயிருந்த ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்காரவர்களும்
இந்நூலை அச்சிடுவதைச் சங்கத்தின் முதனோக்கங்களுளொன்றாகக் கொண்டிருந்தன ரென்பது தெரிகிறது.
எக் காரணங்களாலோ அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
இத்தகைய அரிய நூல்களை யச்சிட்டுத் தமிழகத்திற் குபகரித்து வரும் தமிழ்ச்சங்கத்தார்க்குத்
தமிழபிமானிகள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
நூலாசிரியர்
பெயர்:- இவ் வரிய பெரிய நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர்.
திருக்குருகைப்பெருமாள் என்றால், திருக்குருகை யென்னும் ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று பொருள்.
“திருக்குருகைப்பெருமாள் தன் திருவடிகள் வாழியே” என்பது அஷ்டகஜம் அப்பிள்ளை அருளிச்செய்த நம்மாழ்வார் விஷயமான
வாழித்திருநாமம். இந்நூலாசிரியர் நம்மாழ்வாருடைய ஆஸ்தான கவிரா யராதலால் அவருக்குத்
திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்று பெயராயிற்று.
இவருக்குச் ‘சடையன்’ என்னும் இயற்பெயருமுண்டு. ‘சடகோபன்’ என்பது சடையன் எனத் திரிந்ததுபோலும்.
தகப்பனார் :- இவருடைய தகப்பனார் பெயரும் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’ என்பதேயாம்.
ஜாதி :- வேளாளர். ‘சீரகத்தார்வணிகன்’ என்று பாயிரத்திலிருப்பதை நோக்க வேளாளரும்
ஒருவகை வைசியவகுப்பிற் சேர்ந்தவரென்பது வெளியாகின்றது.
ஆழ்வார்திருநகரிக்கோயிற் சத்தாவரண உத்ஸவங்களிற் படிக்க வேண்டிய ‘திருப்பணிமாலை’ படிப்பவருக்கு
ஏற்பட்ட சுதந்தரங்களைத் தெரிவிக்கும் கோயிற்கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றிருக்கிறது.
அந்தச் சுதந்தரங்களை இப்போது வத்தராயிருப்பு ஆழ்வாரப்பபிள்ளை என்பவர் பெற்றுவருகிறது கொண்டு
இந் நூலாசிரியர் இவரின் முன்னோராயிருக்கலாமென்று சிலர் நினைக்கின்றனர்.
ஆழ்வாரப்ப பிள்ளையின்பந்துவாகிய அமிர்தகவிராயரின் வம்சத்தில் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’கள் சிலரிருந்திருக்கின்றனர்.
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள திருவரங்கத்தந்தாதியின் பழையவுரை யெழுதி வைத்தவர்
திருக்குருகைப்பெருமாள் கவிராயர். இவர் இந்நூலாசிரியரல்லர்.
இவர் மாறன்கோவை இயற்றிய வேங்கடத்துறைவான் கவிராயர் வம்சத்தவராயிருக்க வேண்டும்.
இப் பெயரினர் ‘O.K.S.’ என்ற நவீனக்குறியால் வழங்கப்படுகிற திருநெல்வேலி ஜில்லா
வைணவ வேளாள வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரிகிறது.
ஊர் :- திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி. இவற்றிற்குப் பிரமாணம் :-
“பெருநிலம்புகழ்திருக்குருகைப்பெருமாளருள்குருகூர்வருமனகன்செழுந்தேன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகன்புகழ்த்திருக்குருகைப்பெருமாள்கவிராயன்
அருட்குணத்துடன்வளர்சடையன்பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”–(மாறனலங்காரப்பாயிரம்)
“குருகையம்பதித்திருக்குருகைப்பெருமாள்
பொருவில்பேரன்புடன்புரந்தருள்புதல்வன்
மருக்கமழ்சீரகத்தார்வணிகேசன்
திருக்குருகைப்பெருமாள்கவிராசன்
அருட்குணத்தவர்புகழ்சடையன்
பொருட்டொடர்நவம்புணர்புலமையோனே”(மாறனகப்பொருட்பாயிரம்)
“இருக்குமுதற்பனுவலினாலியற்றமிழ்தேர்நாவீறனென்னுமேன்மை
யருட்புயலைப்புகழ்புலமைத்திருக்குருகைப்பெருமாள்பேரன்புகூருந்
தருக்குலவும்பொழிற்குருகாபுரிவணிகன்சடையனிதைத்தமிழாற்சாற்றித்
திருக்குருகைப்பெருமாள்வண்கவிராசனெனப்புனைபேர்சிறந்ததொன்றே”(திருக்குருகாமான்மியப்பதிகம்)
முதலியன.
மதம் :- வைணவம்.
இவர் ‘மணவாளமாமுனி’ முதலிய தென்கலை ஆசார்யசிரேஷ்டர்களை அலங்கார நூலின் மத்தியில் வணங்கியிருப்பதாலும்,
ஸ்ரீநிவாசஜீயர் என்னும் தென்கலை ஆசார்யபுருஷரது சிஷ்யராதலாலும், தென்கலை வகுப்பைச் சேர்ந்தவர்.
ஞாநாசிரியர் :- இந் நூலாசிரியருக்குப் பஞ்சஸம்ஸ்காரமென்னும் தீக்ஷை முதலிய செய்து வைத்த ஞாநாசிரியர்
‘ஸ்ரீநிவாஸஜீயர்’ என்பது ‘சிற்குணச் சீநி வாதனின் னருளா, னற்பொருண் மூன்றையும் நலனுற வுணர்வோன்’ என்னும்
மாறனலங்காரப் பாயிரத்தாலும்,
‘சிற்குணத் திருமலைச்சீநிவாதன், பொற்புடைத் திருவடி போற்றிய புனிதன்’ என்னும் மாறனகப் பொருட்பாயிரத்தாலும் தெரிகிறது.
அன்றியும், மாறனலங்காரத்துள்ளே இவ் வாசிரியரைச் சில இடங்களில் வாழ்த்தியிருக்கிறார். அச்செய்யுள்கள் வருமாறு :-
“முத்திக்கவனேமுதற்காரணனென்றும்
பத்திவிடாதேபயிலென்றுஞ்–சத்தியமாய்ச்
செல்வத்திருப்பதிவாழ்சீநிவாதன்பகர்ந்த
சொல்வித்தகமேதுணிந்து”(காபாலிகாந்தியகுளகம், குரவன் வாழ்த்து)
“முப்புரிநூன்மார்பினான்முக்கோல்கைக்கொண்டுளான்
பொய்ப்புலனைவென்றபொறையுடையான்-மெய்ப்பொருளைச்
சேவிக்குநுண்ணுணர்வான்சீநிவாதன்றமியே
னாவிக்கருள்புரிந்தாள்வான்”(திணை : வாகை, துறை : தாபதவாகை)
இவ்வாசிரியர், ஸ்ரீமணவாளமாமுநிகளின் ஆசிரியர் திருவாய்மொழிப் பிள்ளையால் ஸ்தாபிக்கப்பெற்ற
திருநகரி உடையவர் (ராமாநுஜர்) ஸந்நிதி எம்பெருமானார் ஜீயர்மடாதீந பரம்பரையில் 8 (?)வது ஸ்வாமியாக எழுந்தருளியிருந்தவர் ;
திருப்பதி மடத்திலிருந் தெழுந்தருளியவர். (மேற்குறித்த பிரமாணங்களை நோக்குக)
இவர் திருப்பதியிலிருந் தெழுந்தருளும்போது கொண்டுவந்த, ஸ்ரீநிவாஸன் படத்திற்கு
நாளிது வரை நித்தியபூஜையும் உத்ஸவமும் நடத்திவருகிறார்கள்.
இந்த ஜீயர், தாம் வீற்றிருந்த மடத்தைச் சார்ந்த உடையவர் ஸந்நிதியை ஜீர்ணோத்தாரணஞ் செய்தாரென்பது,
பின்வரும் ஆழ்வார் திருநகரித் திருப்பணிமாலைச் செய்யுளால் விளங்கும்.
“இவர்ந்தபூதூ ரெதிராசன்கோயிலை
யுவந்தனைத்தழகுங்கண்டுலகினோங்கினான்
சிவந்தபங்கயமுகன்சீநிவாசமா
தவன்றிரிகோற்கோன்மாதவர்கிரீடமே”
சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலைப் புத்தக அட்டவணையில் இவர் ஸ்ரீநிவாஸாசார்யர் என்றெழுதியிருக்கிறது.
இந்த ஜீயர் சுவாமி, உபயவேதாந்த ப்ரவர்த்தகராய்த் திக்குவிஜயம் செய்து வாக்மியாயிருந்தாரென்று சொல்லப்படுகிறது.
இந்நூலாசிரியர் செய்த வேறு நூல்கள் :-
1. மாறனகப்பொருளும் அதன் உதாரணம் நூற்றெட்டுத் திருப்பதிக்கோவையும்.
2. திருக்குருகாமான்மியம்.
3. நம்பெருமாள் மும்மணிக்கோவை.
4. மாறன் கிளவிமணிமாலை முதலியன.
இவற்றில் முன்னையதைத் தவிர மற்றைய நூல்களெல்லாம் மாறனலங்காரத்தில் உதாரணமாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன.*
காலம் :- இந்நூலால் இவர்காலம் இன்னதென்று தெரியாமற்போன போதிலும்,
இவர் செய்த மற்றொரு நூலாகிய திருக்குருகாமான்மியம் அரங்கேற்றிய காலம் அதிற் குறிக்கப்பட்டிருப்பதால்
அதிலிருந்து இவர்கால மின்னதென் றேற்படுகிறது. அச்செய்யுள் வருமாறு :-
அறந்திகழாண்டவையெழுநூற்றிருபான்மூன்றி
லணிகிளர்கார்த்திகைமாதமெட்டில்வாழ்வு
சிறந்திடுதிங்களினாளுத்தரத்திலேகா
தெசியின்மகரமுகூர்த்தந்திருந்தமுற்றத்
துறந்தவரெண்மகிழ்மாறர்திருமுன்னாதிச்
சுருதியுடன்மிருதியுஞ்சொற்றமிழின்வாய்மை
பிறந்தபெருங்காப்பியமுந்தெரிந்தோர்கேட்கும்
பெற்றியுடனரங்கேற்றப்பெற்றதன்றே”
இதிற் குறிப்பிட்டுள்ள வருஷம் கொல்லம் ஆண்டு. கொல்லமாண்டு 723-வது
எனவே, இப்போது 1090 நடப்பதால், 365 வருஷங்களுக்கு முன் இவர் இருந்தாரென்றேற்படுகிறது.
குருகாமான்மியத்திலிருந்து இந்நூலுக்கு உதாரணமெடுத்திருப்பதால் இந்நூல் பின்னாற்செய்யப் பெற்றதென்று வைத்துக் கொள்வோம்.
ஆகவே ஏறக்குறைய 360-வருஷங்களுக்குமுன் இந்நூலியற்றப் பெற்றதென்பது ஏற்புடையதாகும்.
ஜீயர்காலம் நிர்ணயிக்கப் புகுமிடத்தும் இக்காலவரையறை சரியாயேற்படுகிறது.
உரையாசிரியர் காலமும் இதுவேயாகும்.
இதுபற்றியேதான் ‘செந்தமிழில்’ இரண்டுமூன்றிடங்களில், உரையாசிரியராகிய இரத்திந கவிராயர் பிரஸ்தாபம்
வருமிடத்து ஸ்ரீ.உ.வே.இராகவையங்காரவர்கள் ‘350-வருஷங்களுக்குமுன்னிருந்த’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இவர்பெருமை :- இவர் பாலியத்திலேயே நிகண்டு, இலக்கணம், இராமாயணம், சங்கநூல்கள், பழையவுரைகள்
இவற்றை ஐயந்திரிபறக் கற்றுச் சிறந்த வித்வானாகிய தமது தகப்பனாரிடம் கற்று வல்லுநராய்,
மாணாக்கர்க்குப் பாடமோதியும், பழைய நூல்களைத் தேடித் தொகுத்து வைத்துக் ‘கல்விக்களஞ்சிய’மொன் றேற்படுத்தியும்,
பொருட்டொடர் நவம்புணர்புலமையோன் (மா-அக & அல) என்றபடி புதுவகையான பெருங்காப்பியம் சிறுகாப்பிய முதலான
நூல்களியற்றியும், தங்காலத்து வித்வான்களுடன் வாதஞ்செய்தும், அரசராற் சன்மானிக்கப்பெற்றும் தமிழை விருத்திசெய்து
சிறந்த வீரவைணவப் புலவராய் வீற்றிருந்தார். இவர் விஷயமாய் அபியுக்தரருளிய பின்வருஞ் செய்யுளையும் நோக்குக.
“நேற்றுப்பிறந்துவரும்பாவியானநிலாநெருப்புக்
காற்றும்படிதொங்கறந்திலனேயருங்கூடற்சங்கந்
தோற்றும்படிசொன்னசொன்னாற்பத்தொன்பதையைம்பதென்று
சாற்றுந்திருக்குருகைப்பெருமாணஞ்சடைக்குட்டியே”
———
இந்நூலுரையாசிரியர்
இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரையருளிச் செய்தவர் தென்றிருப்பேரைப் பதியிற்பிறந்த காரிரத்நகவிராயர் என்பவரே.
தென்றிருப் பேரையென்னும் பாடல் பெற்ற திவ்யதேசம் ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்துள்ளது.
இவர், திருக்குருகைப் பெருமாள்கவிராயர் அநேகமாணாக்கர்க்குப் பாடமோதிக்கொண்டு சிறந்த வித்வானாயிருப்பதைக்
கேள்வியுற்று அவரிடம் படிக்க ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அவரிடம் கல்விகற்றுச் சிறந்தவித்வானானார்.
செந்தமிழ்ப் பத்திரிகையில் இவரைக் குறிக்கநேரும்போதெல்லாம் இவர் பெயரை இரத்திநகவிராயரென்றே குறித்திருக்கிறது.
ஆனால் உற்று நோக்கும்போது இவரது இயற்பெயர் ‘காரிரத்நகவிராய’ ரென்பதென்று தெரிகிறது.
‘காரிரத்நம்’ என்பது ஆழ்வார்திருநாமம். காரிராசன் பெற்ற இரத்திநம் போன்ற புதல்வன் என்பது இதன்பொருள்.
‘காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்து’ (மா. அல) ‘காரிமாறன் சடகோபன்’ (திருவாய்)
‘காரி.. . . . . . . .ரத்நம்’ (மாறன்கோவை) முதலியவற்றையும் நோக்குக.
இவருரை மிகவுஞ்சிறந்ததோருரை. இவ்வுரையின்றேல் இந்நூலின்பெருமை வெளிப்படாது.
சங்க நூல்கள் பிற சான்றோர் நூல்கள் முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்.
சில உதாரணச் செய்யுள்களிலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றை அழகாய் விளக்குகிறார்.
சில உதாரணச் செய்யுளுக்குக் குறிப்புரையும் சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கூறுகிறார்.
இவர் வேண்டுமிடங்களில் தண்டிமதம், தொல்காப்பியர் போன்ற பிற நூலாரின் கருத்து முதலியவற்றையெடுத்துக் கூறித்
தக்கசமாதானங் கூறுகிறார். உதாரணச்செய்யுள்களைச் சூத்திரப் பொருளோடு அழகாய்ப் பொருத்திக் காட்டியிருக்கிறார்.
இவர் காலம் முன்னே கூறப்பட்டது.
இவர்செய்த வேறு நூல்கள் :-
தொல்காப்பிய நுண்பொருண்மாலை,
பரிமேலழகருரை நுண்பொருண்மாலை (இது செந்தமிழில் வெளிவந்துளது),
ஆசிரியர் செய்த நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை,
மாறன்பாப்பாவினம் முதலியன.
இவருக்குக் கோயிலில் ‘வாகனமாலை’ படிப்பதற்காக அக்காலத் தரசன் சிறந்த மானியங்கள் விட்டிருந்தான்.
அவற்றை இன்னமும் இவர்சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள்.
இவரைப்போலவே இவர் வமிசத்தோரும் சிறந்த வித்வான்களாயும் வைணவர்களாயுமிருந்து தமிழையபி விருத்தி செய்தார்கள்.
மகா-ராஜ-ராஜ-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரம்ம ஸ்ரீ மஹாமஹோபாத்யாய சாமிநாதையரவர்கள்,
ஸ்ரீ-உ வே.ரா.இராகவையங்காரவர்கள் முதலியோருக்கு அரும்பெறற்றமிழ் நூல்களருளிய குடும்பம் இதுவே.
இக்குடும்பத்தினர் ஏடுகளே திருக்கோவையாருரையாசிரியர் பேராசிரியரென்றும்,
அச்சிட்ட தொல்காப்பியச்செய்யுளியலுரை முதலியவை பேராசிரியரது ; நச்சினார்க்கினியரதன் றென்றும்,
பரிபாடலுரையாசிரியர் பரிமேலழகர் என்றும் அறியுமாறு அருமையான பல விஷயங்களைத் தெரிவித்தன.
இக்குடும்பத்தார் காப்பாற்றி வைத்த ஏடுகளின் பெருமை பிரம்ம ஸ்ரீ வே. சாமிநாதையரவர்கள்
ஸ்ரீ.உ.வே.ராகவையங்காரவர்கள் முதலியோருக்கே தெரியும்.
இவ்வமிசத்தவர் வைணவபரமாய் எத்துணையோ தமிழ்நூல்கள் செய்திருக்கிறார்கள். தமிழுரை செய்திருக்கிறார்கள்.
வடமலையப்ப அரசரின் ஸமஸ்தானவித்வான் சிறியகாரிரத்நகவிராயர் இவ்வம்சத்தவர்.
சாபா நுக்ரகசக்தியுடன் கவிபாடத் தகுந்த புலவர் இவ்வம்சத்தி லநேகரிருந்திருக்கின்றனர்.
குமரகுருபர சுவாமிகள் வம்சபரம்பரையோரில் ஆழ்வார் திருநகரிக்கிளையினர் அநேகர் இவ்வம்சத்தாரிடம்
பாடங்கேட்டிருக்கிறார்களென்று தெரிகிறது.
இம்மாறனலங்கார உரையாசிரியர் விஷயமான சிறப்புப் பாயிரச் செய்யுளையெடுத்துக் காட்டி இதனுடன் நிறுத்துகிறேன்.
தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தான்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன் பேரைவரோதயனே.
A.M. சடகோபராமாநுஜாசார்யன்
(நேஷநல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
திருச்சிராப்பள்ளி.)
25-5-1913.
—————
மாறனலங்காரத்தின் சித்திரபத்திரங்கள்.
——-
1. நான்காரச்சக்கரபெந்தம்
வானமாதியவானவா
வானவாமனுவானவா
வானவாமனமானவா
வானமானிறமானவா.
இது, நடுவுநின்று கீழாரின்வழி யிறங்கி யிடஞ்சென்று
அடுத்த ஆரின்வழி நடுவடைந்து முதலடிமுற்றி,
மறித்தும் நடுவுநின்று அவ்வாரின்வழி திரும்பி யிடஞ்சென்று
அடுத்தஆரின்வழி நடுவுசென்று இரண்டாமடிமுற்றி,
அவ்வாறே மூன்றாமடி நான்காமடிகளுஞ்சென்று முற்றியவாறு காண்க.
———-
2. இதுவும் நான்காரச்சக்கரபெந்தம்
தேவாமோகூராதிதமகிபாமாமோக
பூவாளிஓஒபொருதலைக்க–வோவாது
துங்கமுரசாயதேதுன்பமெனும்பூமகட்கு
வெங்கனலாவானேன்விது.
இது, மேலாரின்முனைதொடங்கியிறங்கிக் கீழாரின்முனையிறுதி சென்று முதலடி முற்றி,
இடப்பக்கத்து ஆரின்முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிசென்று தனிச்சொல்லகப்பட விரண்டாமடி முற்றி,
மறித்தும் அம்முனைநின்ற துகரந்தொடங்கி வட்டைவழியே யிடஞ்சுற்றி மூன்றாமடியும் நான்காமடியுஞ்சென்று,
தொடங்கிய துகரத்தை மறித்துங் கொண்டுமுற்றிக் குறட்டினிடமே திருமலை யென நின்றவாறு காண்க.
ஓகார அளபெடை யறிகுறியொழியநின்றது.
——————-
3. ஆறாரச்சக்கரபெந்தம்
மாதவனேதென்னரங்கேசமான்மருளாகமிகு
போதனுமன்பிற்றொழுகேசவபுரைகூர்பவமே
வாதிதமாகுதற்கிங்கேயெனாருயிர்காபொதுவே
வேதநமாநமபோதநைவார்க்குள்ளமேதகவே.
இது, இடப்பக்கத்தாரின் முனைநின்றுதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஓரடிமுற்றி,
அடுத்த கீழாரின்முனைநின்று மேலாரின்முனையிறுதிமேலேறி இரண்டாமடிமுற்றி,
அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின்முனையிறுதிமேலேறி மூன்றாமடிமுற்றி,
முற்றிய வேகாரத்தினின்று மறித்துந் தொடங்கி வட்டை வழி யிடஞ்சுற்றிச் சென்று மறித்தும்
அவ்வேகாரத்தைக்கொண்டு நான்காமடி முற்றியவாறு காண்க.
——–
4. எட்டாரச்சக்கரபெந்தம்
தண்மதிநிகர்வதயங்கியவதனம்
பொன்னணிமுலைநிடதப்புரைவரைநிகர்
மடிசேர்தருதாமதபத்தர்க்கெட்டா
மாறன்றுடரிமலைதன்மின்போன்றொளிர்
தண்ணென்பொற்சுனைமன்னியமாமல
ரம்மடவார்மையுண்டாட்டமர்கண்ணே.
இது, இடக்குறுக்காரின்முனைதொடங்கி வலக்குறுக்காரின்முனை யிறுதிசென்று முதலடிமுற்றி,
அதனையடுத்த இடக்கீழாரின்முனை தொடங்கி அதனெதிர் மேலாரின்முனையிறுதி இரண்டாமடிமுற்றி,
அதனையடுத்த கீழாரின்முனைதொடங்கி யதனெதிர்நின்ற மேலாரின் முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அதனையடுத்த வலக்கீழாரின் முனைதொடங்கி யெதிர்நின்ற மேலாரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய தகரத்தினின்று வட்டைவழியே யிடஞ் சுற்றி ஐந்தாமடியாறாமடிகள் முற்றியவாறு காண்க.
இதனுள், முதலடிதொடங்கிவந்த குறட்டெழுத்துக்களை யிடஞ் சுற்றிப்படிக்க
வடமலையப்பன் என்னுந் திருநாமம்வருமாறு காண்க.
————
5. இதுவும் எட்டாரச்சக்கரபெந்தம்
சேடுறுதட்பச்சீரிமகிரிக்கைவிலின்
போர்பொருவீரபுராரிசெற்றத்தடர்த்
தின்பமது றவமரியலருணிருதனேர்
முன்புமேத்தமராரிம்பர்நம்பாலுறு
சேர்மழைபோனிறத்திருவுறைமுதல்வன்
தாரிணைத்தாளெதிர்தாளுற்றுன்னெஞ்சே
இது, இடக்குறுக்காரின் முனைநின்றுதொடங்கி அதனெதிராரின் முனையிறுதிசென்று முதலடிமுற்றி,
அடுத்தஇடக்கீழாரின்முனைநின்று அதனெதிராரின் முனையிறுதிசென் றிரண்டாமடிமுற்றி,
அடுத்தகீழாரின் முனைநின்று எதிர்த்தமேலாரின்முனையிறுதிசென்று மூன்றாமடிமுற்றி,
அடுத்த வலக்கீழாரின்முனைநின்று அதன் எதிராரின்முனையிறுதிசென்று நான்காமடி முற்றி,
முதலடிதொடங்கிய சேகாரம்தொட்டு வட்டைவழியிடஞ்சென்று எதிராரினிறுதியில் ஐந்தாமடிமுற்றி,
அதனடுத்தஅறை தொடங்கி அம்முறைசென்று முன்னடிதொடங்கிய சேகாரத்தைக் கொண்டு ஆறாமடிமுற்றியவாறு காண்க.
முதலடி தொடங்கிக் குறட்டில்விழுமெழுத்துக்களை யிடஞ்சுற்றிப் படிக்கச் சீராமராமசெயம் என்னும் ராமதோத்திரம் வருதலும்,
குறட்டினின்றும் ஐந்தாமறைகளில் இடஞ்சுற்றிப்படிக்கத்தருமமேகைதரும் என வருதலுங் காண்க.
—————-
6. பதுமபெந்தம்
மாறாமாலாலேமாறாமா
மாறாமாவேளேமாறாமா
மாறாமாகோவாமாறாமா
மாறாமாவாதேமாறாமா
இது, நடுப்பொகுட்டினின்றும் மேல் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்சென்று வலமே
அடுத்த புறவித ழகவிதழ்வழியே பொகுட்டினிழிந்து அடுத்த அகவிதழ்வழி புறவிதழ்சென்று முதலடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்றும் கீழ் வலக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ் வழி அடுத்த
கீழ்க்கோணத்துள்ள புறவித ழகவிதழ்சென்று பொகுட்டினிழிந்து கீழிடக்கோணத்துள்ள
அகவிதழ்வழி யதன்புறவிதழ்சென்று இரண்டாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று கீழிடக்கோணத்துள்ள அகவிதழ் புறவிதழ்வழி இடக்கோணத்துள்ள
புறவித ழகவிதழ் சென்று பொகுட்டினிழிந்து மே லிடக்கோணத்துள்ள அகவிதழ்வழி அதன் புறவிதழ்சென்று மூன்றாமடிமுற்றி,
மறித்தும் பொகுட்டினின்று மே லிடக்கோணத் தகவிதழ் புறவிதழ்வழி மேற்கோணத்துள்ள புறவித ழகவிதழ்
சென்று பொகுட்டினிழிந்து முதலடிதொடங்கிச் சென்றகோ ணத்திகழ்களிற்சென்று நான்காமடிமுற்றியவாறு காண்க.
—————-
7. முரசபெந்தம்
போதவானதுவாதரா
மாதவாதணவாதநா
நாதவாணதவாரவா
வேதவானதுவாரகா
இது, செவ்வேவரைந்தநான்கடியுள்ளும் முதலடியு மீற்றடியும் நான்கடிகளிலும் மாறாடிக்
கோமூத்திரிபோல மடங்கிச்சென்று முற்றியும்,
இரண்டாமடி முற்சதுரத்தின்வலஞ்சென்று நான்கடியிலும் மாறாடி மூன்றாமடிமுதலெழுத்தான்முடிந்தும்,
மூன்றாமடி, பிற்சதுரத்தின் இரண்டாமடி யினிறுதியெழுத்தினின்றுதொடங்கி இடஞ்சென்று நான்கடியினுமாறாடி
மூன்றாமடியினிறுதியெழுத்தான் முடியுமாறு காண்க.
அன்றியும், இரண்டுமூன்றாமடிகள் முறையே முற்பாதி பிற்பாதிகளில் வலமிடமாகத் தம்முண் மாறாடிமுழுவதுங் காண்க.
——————
8. உபயநாகபெந்தம்
மாறன்சடகோபன்வண்குருகூர்வாழ்பொருநை
யாறனளிமேயவன்னமே–யேறுத்
தமனாமாமாசரதன்றாண்மொழிதற்பாமன்
னெமர்யாயெமையாளிறை
அறமுமறமமைந்தவன்பென்பதுவும்
பெறனன்னலமதுண்மைபேரா–துறுபாற்கோர்
மானமனமேநினைமான்மாமேகத்தந்தமே
யேனமெமையாளியை
இவ் விரண்டுபாட்டும், இரண்டுநாகங்களின் தலைநின்றுதொடங்கி
வான்முனைகளிறுதியாக இடையிடையே தத்தம்முடலினும், பிறிது பிறிதுடலினும் மாறாடி முடியுமாறு காண்க.
————
9. இரதபெந்தம்
நாராராராயநயனயணாவிண்ண்
ணாராமணாயனிலமாயவா–சீராய
நன்காநமநமநன்காநமநம
மன்காமன்றாதாய்நம.
மாயவனேவேதமதியேவயநாக
பாயவனேதேநளினபாதாபராபரா
தூயவனேகாரணாபூரணாதோணிலமா
னாயகனேசீராகநாராயணாயநம
இவற்றுள், முதற்பாட்டு, மேற்பாதியின்சிகரத்தினின்றும் இரு மருங்கிலு மிடையிலும்நாராயணாயநமவென்னும்
மந்திரம்நிற்க வலமிடமாக மடங்கியிறங்கிமுடியுமாறும், பிற்பாட்டு, கீழ்ப்பாதியின் மேற்றளத்தின்முதலறை தொடங்கி
வலமிடமாகமடங்கியிறங்கி அடியறையினின்று நடுப்பத்தியில்நாராயணாநமவென் றேழ்தளத்தும் மாறாடியேறி முடியுமாறுங் காண்க.
இதனுள் விண்ண் என்னு மொற்றளபெடை யோரெழுத்தாதலால் அறிகுறியொழிய வோரறையுள்நின்றது.
————–
10. சருப்பதோபத்திரம்
தேமாபூமாமாபூமாதே
மாதாகாவாவாகாதாமா
பூகாவாலாலாவாகாபூ
மாவாலாநீநீலாவாமா
இது, நாற்புறமும் தலைப்பாகவைத்து வரிசையாய்ப்படித்தாலும், மடக்கிப்படித்தாலும்,
நான்கடியையும் மேனின்று கீழிறக்கியும் கீழ்நின்று மேலேற்றியும் படித்தாலும்
சொரூபங்கெடாமல் மாலைமாற்றாய் முடியுமாறு காண்க.
————
11. கூடசதுர்த்தம்
நாதாமானதாதூயதாருளா
ணீதானாவாசீராமனாமனா
போதாசீமானாதரவிராமா
தாதாதாணீவாமனாசீதரா
இப்பாட்டின் நான்காமடியானது, முதன்மூன்றடியையும் கீழேகாட்டியவாறு
மேனின்றுகீழுங் கீழ்நின்று மேலுமாக லெழுதத்தோன்றிய பத்தெழுத்துவரி
மூன்றினுள் இடைவரியாய் மறைந்துகிடப்பது காண்க.
——————
12. கோமூத்திரி
மாயாமாயாநாதாமாவா
வேயாநாதாகோதாவேதா
காயாகாயாபோதாகாவா
பாயாமீதாபேதாபேதா
இது, முன்னிரண்டடி மேல்வரியாகவும், பின்னிரண்டடி கீழ்வரியாகவு மெழுதி,
அவ்வரியிரண்டையும் கோமூத்திர ரேகைவழிபடிக்க ஒன்றுவிட்டொன்று மாறாடிமுடியுமாறு காண்க.
———–
13. சுழிகுளம்
சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான
இது, செவ்வேயெழுதிய நாலடிநான்குவரியுள், முதலடி முதலெழுத்தினின்றும்
சுழிரேகைவழியே இடஞ்சுற்றிப்படிக்க நாலடியு முடியுமாறு காண்க.
————–
Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் – TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்தேடல்
தேடல்…
த.இ.க. பற்றி தொடர்புக்கு
English
முகப்பு
Tamil Nadu Logo
கல்வித் திட்டங்கள்
நூலகம்
கணித்தமிழ்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
தகவலாற்றுப்படை
முகப்பு >TVU
TVU
முகப்பு தொடக்கம்
14. எழுகூற்றிருக்கை
494-499ஆம்பக்கங்களிலுள்ளது.
——–
ஒருதனித்திகிரியினிருவிசும்பொழுக்கத்
தொருஞான்றொருபகலொடியாவுழப்பிற்
பதமிரண்டுமிலாப்பாகுடையூர்தியின்
முந்நீர்வரைப்பினிருபால்வியப்பா
னொருபிணர்த்தடக்கையொன்றியவிருகவுண்
மும்மதநால்வாய்க்கரியுரிமுக்கட்
செம்மலினிருகணுமிமையாத்தேவர்க
ளொருபோழ்தகலாதொருவழிப்படநின்
றிருகையுங்கூப்பிமுப்போதினுமிறைஞ்ச
நான்முகமுதல்வனினசைஇயநல்கு
மைந்தருநீழலினறமுதனான்கினுண்
முந்தியமுப்பான்முழுநலமெதிர்கொள
விருமருங்கினுமின்னொருமருங்கரம்பைய
ரொருதிறத்திருபதநடநவின்றொழுக
மும்முரசானாமுன்றிலினிரட்டத்
தெம்முரண்முருக்கித்திசையவைநான்கினு
மைம்பொறியதனகத்தாறைந்தவித்துச்
செம்பொருணான்மறைதெற்றெனத்தேர்ந்த
முக்கோற்பகவர்முறைமுறைபிறழா
விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென
வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர்
முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட
னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு
மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச
வாழ்நாளறுதியில்வவ்வுதற்கமைத்த
நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன
வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர்
முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத்
திருபிறப்பாளனோரிடத்தெதிருபு
லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர
வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை
னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ
னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த
வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும்
நலங்கிளரொருதனிமுதலெனநாடிப்
பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு
முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு
நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந்
தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென
வாறறியந்தணரருமறைப்பொருளா
பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள்
ஞானபூரணககோதயநாவீற
மானபூடணகுருகாபுரிவரோதய
மறுசமயத்தவர்மத்தமால்யானையைத்
தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர்
வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட
விருசரணாம்புயத்தென்னையுமொன்றா
யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத்
திம்மாநிலத்தென்பொருட்டாற்
கைம்மாறெவனீகைக்கொண்டதுவே.
இது 297, 298-ஆஞ் சூத்திரங்களிலும் உரையிலுங் கூறியமுறையைத் தழுவி யெழுதியது.
இதில் முதலேழுநிலங்களும் நிலந்தொறும் எண்ணேறியிறங்கி ஏழிறுதியேறிய பேரேற்றமும்,
பின்னேழுநிலங்களும் அவ்வாறு ஒன்றிறுதியிறங்கிய பேரிறக்கமுமாகக்கொள்க.
பேரிறக்கத்துள் முதனிலமட்டும் நடத்தி முடிக்கப்பெற்றிருக்கிறது.
ஏனைய நிலங்களும் நடத்திமுடிப்பதற்கு உதாரணம் வந்துழிக்காண்க.
——————–
15. சதுரங்கபெந்தம்
மானவனாமேவலாமாறனித்தமாமாலை
யானதவபோதனுமாயாய்ந்தகோ–மானவடி
நாதனின்மேனன்கலன்பூணென்முனநீவந்தெவனொன்
றாதயமாவன்புலமாய.
*இச்செய்யுளை இச்சதுரங்க அரங்கின் நாலுபக்கமும் மையங்களினானான்கு பதினாறறையிலும்
நடுவி னாலறையிலும் மாதவன் என்னுந் திருநாம நிற்குமாறு ஆராய்ந்து அமைத்துக்கொள்க.
————
16. கடகபெந்தம்.
கோலநிலமேலழகுகூடுநெடுவீடுறமா
மூலமெனச்சென்றுதவுமுன்னோனே–நீலமணி
வண்ணாவடமலையாமாதவாகஞ்சமலர்க்
கண்ணாசரணாகதி.
இது, முகப்பின்பூட்டுவாய்தொடங்கி வலமே இரண்டாமறை சென்று கீழறையினிறங்கி,
மறித்து மவ்வறையின்வழியே மேலறையிலேறி நடுவறையிலிறங்கி யாறாமறைவரைசென்று,
அதன்கீழறையிறங்கி மறித்தும் முன்போலவேயேறியிறங்கி ஏழாமறைநின்றும் வலமே
கூற்றியிறுதியறைசென்று முடியுமாறு காண்க.
———-
17. கடகபெந்தம் (வேறு)
நாகநகராகநிதிநாகரிகராகநிறை
யேகநகராசியிணையில்லா–தார்கணிகழ்
தென்னரங்கனாளாயசீராளராஞான
நன்னரங்கர்க்கேயடியேனான்.
இது, பூட்டுவாய்நின்று வலப்பக்க மிரண்டாமறைசென்று கீழறையினிறங்கி யவ்வழியே மேலறையிலேறியிறங்கி
வலஞ்சென்று இடை யிடையேயுள்ளகுண்டுகளாகிய நான்கறைகளிலுஞ்சென்றுமீண்டு மிறுதியறை சென்று முடியுமாறு காண்க.
இப்பாட்டிற்கு உரையெழுதப் படாமையாலும்
சுத்தபாடந்தோன்றாமையாலும் பெந்தத்திற்குப் பொருந்துமாறு இங்குச் சிறிது வேறுபடுத்தி யெழுதப்பட்டிருக்கிறது.
——————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply