ஸ்ரீ திரு மாலை-41–வானுளார் அறியலாகா –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

பகவத் ஸம்பந்தம் பெற்றவர்களுக்கு நீஹீந ஜந்மத்தாலும் நிஹீன அநுஷ்டாநத்தாலும்
ஒரு குறையுமில்லை யென்பது மாத்திரமேயல்ல;
அவர்கள் தங்களுடைய உச்சிஷ்டாந்நத்தாலே ஸம்ஸாரிகளையெல்லாம் பரிசுத்தராக்கும் படியான
பெருமை பொருந்தியவர்கள் என்பது இப்பாட்டு.

வானுளார் அறியலாகா வானவா என்பாராகில்
தேனுளாம் துளப மாலைச் சென்னியா என்பாராகில்
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்கள்  ஏனும்
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –

பதவுரை

ஊனம் ஆயினகள் செய்யும்–தாங்கள் நிஹீநமான செயல்களைச் செய்யுமவர்களாயும்.
ஊன காரகர்கள் ஏனும்–பிறரைக் கொண்டு நஹீநமான க்ருத்யங்களைச் செய்விப்பவர்களாயுமிருந்த போதிலும்.
வான் உளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் –மேலுலகத்திலுள்ள பிரமன் முதலியோராலும் அறிய முடியாததேவனே, என்று அநுஸந்திப்பராகில்.
தேன் உலாம் துளபம் மாலை சென்னியா என்பர் ஆகில்–‘தேன் பெருகா நின்ற திருத்துழாய் மாலையைத் திரு முடியிலே அணியுமவனே! என்று அநுஸந்திப்பாராகில்
(அப்படிப்பட்ட மஹாத்துமாக்கள்)
போனகம் செய்த சேடம்–தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை
தருவர் ஏல் அன்றே–அநுக்ரஹிப்பாரானால் அப்போதே
புனிதம் –(அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்.

விளக்க உரை

தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய
ஸ்வரூபம் ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது.
“நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம்.
கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால்,
“அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை
அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க.

இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல்,
அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும்,
தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும்
அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி
இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அ

வ்வளவேயுமன்று;
அவர்கள் தாங்களமுது செய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால்
அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி
அத்தனை பெருமை பொருந்தியவர்கள் காண் என்கிறது.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading