ஸ்ரீ திரு மாலை-40–திரு மறு மார்வ நின்னை–ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

தாழ்ந்த வகுப்பில் பிறப்பேயன்றி நீசமான அநுஷ்டாநமு முடையரேயாயினும்
“மேம் பொருள் போகவிட்டு” என்ற பாட்டிற்கூறிய அதிகாரத்திலே நிஷ்டையுடையராகில்
அவர்களுக்கு அந்தக் கருமங்களின் பலன் அநுபவிக்கக் கடவதல்ல என்கிறது, இப்பாட்டு.

திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்தராகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவறக் கொன்று சுட்டிட் டீட்டிய வினையரேனும்
அருவினைப் பயனது  உய்யார் அரங்க மா நகர் உளானே

பதவுரை

திருமறு மார்ப–பெரிய பிராட்டியாரையும் ஸ்ரீவத்ஸமென்கிற மறுவையும் திருமார்பிலே அணிந்துள்ளவனே
அரங்கமா நகருளானே!-;
மாநிலத்து உயிர்கள் எல்லாம்–(இந்தப்) பெரிய பூமண்டலத்திலே உள்ள ஜீவராசிகளெல்லாம்
வெருவு உற–(ஜகத் தெல்லாம்) நடுங்கும்படி
கொன்று சுட்டிட்டு –பர ஹிம்ஸை பண்ணி
ஈட்டிய வினையர் எலும்–விசேஷமாக ஸம்பாதிக்ப்பட்ட பாவங்களை யுடையவர்களானாலும்
நின்னை சிந்தையில் திகழ வைத்து –உன்னை (தங்கள்) நெஞ்சில் விளங்கும்படி வைத்து
மருவிய மனத்தர் ஆகில்–த்ருடமான அத்யவஸா யத்தை உடையராயிருப்பரேயானால் (அவர்கள்)
அருவினை பயன் அது உய்யார்–(தாங்கள் செய்த) மஹாபாதகங்களினுடைய பலனை அநுபவிக்கமாட்டார்கள்.

விளக்க உரை

திருமகள் கொழுநனான எம்பெருமானே!
என்னை இடைவிடாது நெஞ்சிலே அநுஸந்தித் திருப்பராகில்
அந்த ப்ரபாவத்தாலே
அவர்களுடைய பரஹிம்ஸை முதலிய கொடியபாவங்களும் தீயிலிட்ட தூசுபோல் உருமாய்ந்தொழியு மாதலால்
அவர்கள் நரகங்களிலே புக்கு அக்கருமங்களின் பலன்களான தண்டனைகளை
அநுபவிக்கவேண்டிய ப்ரஸக்தியே யில்லை என்றவாறு.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading