பழுதிலா வொழுகலாற்றுப் பல சதுப்பேதிமார்கள்
இழி குலத்தவர்கள் ஏலும் எம் அடியார்கள் ஆகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க
வழிபட்டு அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே
பதவுரை
மதிள் திருவரங்கத்தானே!-;
ஒழுகல் ஆறு–பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில்
பழுது இலா–ஒரு குற்றமு மற்றிருக்குமவர்களாய்
பல சதுப்பேதிமார்கள்–நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே!
எம் அடியார்கள் ஆகில்–“நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்)
இழி குலத்தவர்களேனும்–தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும்
நீர்–நீங்கள்
தொழுமின்–(அவர்களைத்) தொழுங்கள்;
கொடுமின்–(உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்;
கொள்மின்–(அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று–என்று உபதேசித்தருளி
நின்னோடும் ஒக்க–உனக்கு ஸமமாக
வழிபட–அவர்களை ஆராதிக்கும்படி
அருளினாய்–உரைத்தருளினாய்
(போல்-அசை).
விளக்க உரை
உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே
ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி
எம் பெருமான் கூறின வார்த்தை;-
‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மா தொடங்கி நெடுகி வருகிற வம்ச ப்ரவாஹத்திலே பிறந்து
சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது;
எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்;
பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக் கொள்ளலாம்.
விசேஷமாகச் சொல்வதேன்? என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ,
அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே
“பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி
“தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக.
ஆசார்ய ஹ்ருதயத்தில் –
“ம்லேச்சனும் பக்தனானால் சதுர் வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக் குல தைவத்தோ டொக்கப் பூஜை கொண்டு
பாவந தீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்”, என்னும் ஸ்ரீஸூக்தியும்
அதன் வ்யாக்யாந ஸ்ரீ ஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக் கடவன.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply