ஸ்ரீ திரு மாலை-6-மறஞ்சுவர் மதிள் எடுத்து -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

விஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர்
“விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பலதோஷங்களுள்ளனவாயினும்
அவற்றை நாங்கள் விடவேணுமென்ற நியதியில்லை;
ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும் விஷயங்கள் பல உளவாகையால்
ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல,
“அப்படியேயானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக்கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்க வேணுமே
அவ்விஷயங்களைப் போலவே போக்தாவும் அஸ்திரன் கிடீர்” என்கிறார் இப்பாட்டால்.

மறம் சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம் சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம் சுவர் கோலஞ் செய்து புள் கவ்வக் கிடக்கின் றீரே.

பதவுரை

மறம் சுவர்–கொடுமையாகிற சுவரை
மதிள் எடுத்து–மதிளாக எழுப்பியும்
மறுமைக்கு–ஆமுஷ்மிக பலத்திற்கு
வெறுமை பூண்டு –ஏழ்மையை மேற் கொண்டும் இருக்கிற நீங்கள்
புறம் சுவர்–வெளிச் சுவராய்
ஓட்டை–அநித்யமான
மாடம்–சரீரமானது
புரளும் போது–தரையில் விழும் காலத்தை
அறிய மாட்டீர்–அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற–தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
அரங்கனார்க்கு–அழகிய மணவாளனுக்கு
ஆள் செய்யாதே–அடிமை செய்யாமல்
புறம் சுவர்–வெளிச் சுவரான உடம்பை
கோலம் செய்து–அலங்கரித்து
புள் கவ்வ–பறவைகள் கவ்விக் கொள்ளும் படி
கிடக்கின்றீரே–கிடக்கின்றீர்களே.

விளக்க உரை

இவன் ‘தீவழியிற்சென்று அநியாயமாய்க் கெட்டுப்போகிறானே!
இவனுக்கு உரிய ஹிதங்களைச் சொல்லி இவனை மீட்போம்’ என்று ஸஹஜ காருண்யலிகளான சில மஹாநுபாவர்
இதஞ்செய்வதற்குக் கிட்டவந்தால் அவர்களை அபதார்த்தமாக நினைத்துத் துச்சமாகப் பேசும்படியான
கொடுமையை மறம் என்கிறது.

ஹிதஞ்சொல்லவந்த விபீஷணாழ்வானை “த்வாம் துதிக் குலபாம்ஸநம்” என்றிகழ்ந்த
ராவணனோடொத்த குணசாலிகளாய்த்து மறஞ்சுவர் மதிளெடுப்பார்.

அமாநித்வம் முதலிய ஆத்மகுணங்களைத் தனக்கு அரணாகக் கொள்ளவேண்டியது போய்,
கொடுமையை அரணாகக் கொள்ளவேண்டும் படியாய்த்தே உங்கள் பாவம்! என்கிறார்.

“பூதபவ்ய பவந்நாத; கேசவ: கேசிஸூதந; -ப்ராகாரஸ் ஸர்வ வ்ருஷ்ணீ நாமாபந்நாபயதோ ஹரி; (பாரதம்-ஸபாபர்வம்) என்று
அடியவர்க்கு மதிளாகக் சொல்லப்பட்ட எம்பெருமானை விட்டு
மறஞ்சுவரை நீங்கள் மதிளாகப் பற்றினபடி மிகவுமழகியதே!

இப்படி கொடுமையையே காப்பாகக்கொண்டால் அதனால் பலிப்பது ஆமுஷ்மிகத்திற்கு ஒரு கைம்முதலில்லாமையே யன்றோ;
அதனைச் சொல்லுகிறது – மறுமைக்கே வெறுமைபூண்டு என்று
சரீரத்திற்கு தாரகமாயிருப்பதைத் தேடுகிறாற்போல் ஆத்மாவுக்குத் தாரகமாயிருப்பதையும சிறிது தேடியிருப்பானானால்
ஆமுஷ்மிக பலத்திற்கு அது ஒரு பற்றாசாகும்;
அங்ஙனன்றியொழிந்தமையால் இவனுடைய வியாபாரம் ஆமுஷ்மிகத்திற்கு தாரித்ரியத்தை விளைத்துவிட்டதென்க.

புறஞ்சுவர் என்கிறது-தேகத்தை;
சுவராவது உள்ளே கிடக்கிற வஸ்துவைக் காக்குமது;
ஆத்மாவுக்குரிய நன்மைகளை உண்டாக்கி அதனைக் காபபாற்றுதற்பொருட்டு எம்பெருமானால் தரப்பட்ட (சுவரென்னும்)
சரீரத்தைக் கொண்டு அக்காரியத்தைச் செய்யாமல் புறம்பே வியாபரித்தபடியால புறஞ்சுவர் என்ன வேண்டிற்று.
ஓட்டை மாடம் என்றும் இச்சரீரத்திற்கே நாமாந்தரம் போலும்.
ஒரு ஓட்டைவீடானது ‘அப்போது விழுந்தது, இப்போது விழுந்தது’ என்னும்படி அஸ்திரமாயிருக்குமாபோலே
இச்சரீரமும் ‘இப்போதோ அப்போதோ’ என்னும்படி நச்வரமாயிருக்குமாறு காண்க.

புரளும்போது அறியமாட்டீர்-
இத்தகைய சரீரம் எப்போது கீழே விழப்போகிறதென்று கேட்டால் அந்த ஸமயத்தை நீங்கள் அறிந்துசொல்ல வல்லீரல்லீர் ;
இன்று விழுந்தாலும் விழும்; நாளைக்கு விழுந்தாலும் விழும்;
ஆகையாலே இந்த சரீரத்தை போக்தாவாக மாறுபட நினைத்து நீங்கள் பரக்க வியாபாரங்கள் செய்தாலும்,
இது மின்னின்னிலையிலதாதலால் இதை நம்பி ஒன்றுஞ் செய்யக்கூடியதாயில்லையே என்கை.

அன்றியே,
இச்சரீரம் புரளுங்காலத்திலே உங்களுக்கு அறிவு நடையாடாதாகையால்
“ப்ராணப்ரயாணஸமையே கபவாதபித்தை: கண்டாவரோதநவி தௌஸ்மரணம் குதஸ்தே” (முகந்தமாலை) என்றபடி
அப்போது உங்களால் ஒன்றும் நன்மை தேடிக் கொள்ள முடியாது;
“அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்” என்றபடி செய்யுங்கள் என்று உபதேசிக்கிறாரென்றுங் கொள்ளலாம்.

அறஞ்சுவராகி நின்ற –
தர்மமாகிற சுவர் வடிவெடுத்து வந்தாற்போலிரா நின்ற;
“தர்மஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்ற வாயோலைப் படியே தர்மத்திற்குச் சுவராய் (ரக்ஷகராய்) நின்ற என்றுமாம்.

புறஞ்சுவர் கோலஞ்செய்து-
“அஸந்நேவ ஸ பதி, அஸத் ப்ரஹ்மேதி வேதசேத்” என்ற சுருதிப்படி ஆத்மாவானது பாழ்த்துக்கிடக்க,
அவ்வாத்மாவை “ஸந்தமேநம் ததோ விது:” என்னும்படி ஸத்தாக்குகிற வழியிலே ஒரு முயற்சி செய்யாமல்
இன்னடிகிலுண்பதும் பொன்னுடைமை பூண்பதும் பூந்துகில் சாத்துவதுமாய் நீங்கள் சரீரத்திற்குச் செய்கிற கோலங்கள்
சவாலங்காரத்தோடும் விதவாலங்காரத்தோடும் ஒக்குமென்றவாறு.

“புள் உண்ணக் கிடக்கின்றீரே” என்னாமல்
“கவ்வ” என்றதன் கருத்து –
நன்றியறிவற்றவனுடைய மாமிசத்தைப் பறவைகளும் திண்ணமாட்டா என்பது ஸித்தாந்தமாதலால்,
மஹோபகாரகனான எம்பெருமானிடத்து நன்றியறிவற்ற உங்களுடைய மாமிசத்தைப் பறவைகளும் தின்னமாட்டா;
கவ்வின உடனே ‘இது க்ருதக்நமாம்ஸம்’ என்று எறிந்துவிடுமென்பதாம்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading