ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /—1-9–இவையும் அவையும் உவவையும்–சாரங்கள் —

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

————

சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

——–

அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

————

உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

———

ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

———–

மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

———-

தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

————

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

————

கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

———-

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

———–

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–பாசுரம் -9-

இதில் எம்பெருமான் உடைய
சாத்ம்ய போக பிரதவத்தை அருளிச் செய்த பாசுரத்தை
அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில்
இத்தலையில் செவ்வைக் கேடு தனக்கு செவ்வையாம்படி
இவர்களுக்கு பாங்காக தன்னை அமைத்து பரிமாறும்
ஆர்ஜவ குண யுக்தனே ஆகிலும்
தன் நினைவு அறிந்து செவ்வியராய் பரிமாறும்
திருவடி திரு வநந்த ஆழ்வான் துடக்கமான
நித்ய ஆஸ்திரரோடு உகப்போடே கலக்குமா போலே
இன்று ஆஸ்ரயிக்கும் அவர்களோடு உகப்போடே கலந்து பரிமாறக் கூடுமோ என்னில்
அவர்கள் எல்லாரோடும் ஓரோர் பிரகாரத்தில் பரிமாறுகிறவன்
அவர்கள் எல்லாரோடும் பரிமாறுகிற பரிமாற்றம் எல்லாவற்றையும்
இவன் ஒருவனுடனே
சர்வ இந்த்ரியங்களாலும்
சர்வ காத்ரங்களாலும்
பொறுக்கப் பொறுக்க பரிமாறும் -என்கிற
இவையும் அவை யில் அர்த்தத்தை
இவை அறிந்தோர் தம் அளவில் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –

ஆர்ஜவம் உடன் -கலந்தார் -சொல்லி –
நம்முடன் கலப்பனோ -திருஷ்டாந்தம் -தம்முடன் கலந்து -அவர்கள் ஓர் ஓர் பிரகாரம் -இங்கு போலே அங்கு இல்லையே

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9–

வியாக்யானம்-–

இவை யறிந்தோர் தம்மளவில் –
இந்த ஆர்ஜவ குணத்தை அறிந்தவர்கள் விஷயத்தில்

ஈசன் உவந்து ஆற்ற அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப் பெற்று –
சர்வேஸ்வரன்
ஹ்ருஷ்டனாய்
சாத்மிக்க சாத்மிக்க
சர்வ அவயவங்களிலும்
சம்ச்லேஷிக்கும் ரசம் தன்னை பெற்று
பொறுக்க பொறுக்க உறுப்பு தோறும்-செறிப்பு -கலக்கம் -தீரக் கலக்குமதான பெறாப் பேற்றைப் பெற்று –
அதாவது
சராமோ வாநரேந்தரஷ்ய பிரசாதம் அபி காங்ஷதே-என்னும்படி
என்னுடைச் சூழல் உளானே
1-அருகல் இலானே
2-ஒழிவிலன் என்னோடு உடனே –
3-கண்ணன் என் ஒக்கலையானே-
4-மாயன் என் நெஞ்சின் உளானே
5-என்னுடைத் தோள் இணையானே
6-என்னுடை நாவின் உளானே
7-கமலக் கண்ணன் என் கண்ணின் உளானே
8-என் நெற்றி உளானே
9-என் உச்சி உளானே –
என்று -10-தலைக்கு மேலே ஏறின படியை அடி ஒற்றின படி –

அணையும் சுவை யாவது –
அருகலில் அறுசுவை-
பிராட்டி- திருவடி – திரு வநந்த ஆழ்வான் துடக்கமானாரோட்டை
கலவியில் ரசங்கள் எல்லாம் ‘
ஏக விஷயத்தில் உண்டாம்படி கலந்து -என்றத்தை நினைக்கிறது-

ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச –
இப்படிப் பெறாப் பேறு பெற்று
அத்தால் உண்டான அபி நிவேசத்தாலே
ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை
கேவலம் வாக்காலே வசிக்க-உணர வேண்டாம் -அஹ்ருதயமாக உக்தி மாத்ரத்தாலே

மால் பொற்றாள் நம் சென்னி பொரும் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான
சர்வேஸ்வரன் யுடைய
ஸ்ப்ருஹணீயமான சரணங்கள்
நம்முடைய சென்னித் திடரிலே சேரும் –
பொரு -என்று ஒப்பாய்
அத்தால் -சேரும் -என்றபடி
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொரும் -என்றத்தை அருளிச் செய்த படி –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி–

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி -9-இவையும்

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி–

பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -9-இவையும்

1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –

2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-

3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –

4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –

5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்

6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்

7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –

8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்

9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –

10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்

ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –

——————-————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆத்தான் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading