ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -1-3–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1-

பதவுரை

மாணிக்கம்–மாணிக்கத்தை
கட்டி–(இரண்டருகும்) கட்டியும்
இடை–நடுவில்
வயிரம்–வயிரத்தை
கட்டி–கட்டியும்
ஆணிப் பொன்னால்–மாற்றுயர்ந்த பொன்னால்
செய்த–செய்யப்பட்ட
வண்ணம்–அழகிய
சிறு தொட்டில்–சிறிய தொட்டிலை
பிரமன்–சதுர்முகனானவன்
பேணி–விரும்பி
உனக்கு–உனக்கு
விடு தந்தான்–அனுப்பினான்
மாணி குறளனே–ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே!
தாலேலோ!
வையம் -உலகங்களை
அளந்தானே–(த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே!
தாலேலோ!

விளக்க உரை

திவ்யமான தொட்டிலைப் பிரமன் கொணர்ந்து ஸமர்ப்பித்தானென்கிறாள்.
மாணிக்கம் – நவரத்நங்களுள் ஒன்று : இது செந்நிறம் உடையது;
(நூல்களில் கருமாணிக்கமென வருதல் இல் பொருளுவமையாம்).
ஆணிப்பொன் – மாற்றறிதற்குக் கொள்ளும் உயர் தரப் பொன்;
இதுக்கு மேலே மாற்றில்லை யென்னும்படியான சிறந்தபொன் என்றுரைப்பர்.
தால் ஏல் ஓ= தால் – ‘தாலு’ என்ற வட சொல் விகாரம், தாடையென்றுபொருள்; ஏலே ஓ=அசைச்சொற்கள்;
குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள் ‘உளு உளு உளு ஆயீஇ! என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச்
சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு. மாணிக்கம், வயிரம், வண்ணம், பிரமன் – வட சொல் விகாரங்கள்.

———

உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!-1-3-2-

பதவுரை

உடை ஆர்–திருவரைக்குச் சேரும்படியான
கனம் மணியோடு–பொன் மணியையும்
இடை–நடு நடுவே
விரவி–கலந்து
கோத்த–கோக்கப் பட்ட
எழில்–அழகிய
தெழ்கினோடும்–இடைச் சரிகையையும்
ஒண் மாதளம்பூ–அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும்
விடைஏறு–ரிஷப வாஹகனாய்
காபாலி–கபால தாரியாய்
ஈசன் விடுதந்தான்–ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-;
உடையாய்–ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல்–அழாதேகொள், அழாதேகொள்
தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ!

விளக்க உரை

சிவபிரான் மாதளம்பூக் கோவையென்கிற அரைவடம் முதலியவற்றை அனுப்பியிருக்கிறான்
(அவற்றைச் சாத்திக்கொள்) என்று சொல்லித் தாலாட்டுகிறான்.
உடை என்பது வஸ்திரத்துக்கு வாசகமாயினும் இங்குத் தனியாகு பெயராய் இடையைக் காட்டிற்று.
தெழ்கு – அரையில் சொருகும் கத்தி. சிவன் ரிஷபவாஹனனாதாலால் விடையேறு என்றும்,
பிரமனுடைய ஐந்து தலைகளிலொன்றைப் பறித்துவிட்டதனால் அக்கபாலம் அப்படியே கையிலொட்டிக் கொண்டதுபற்றிக் கபாலி என்றும்,
அணிமா மஹிமா கரிமா லகிமா ப்ராப்தி ப்ராகாம்யம் ஈசத்வம் வசித்வம் என்று சொல்லப்படுகிற
அஷ்டைச்வரியங்களையுடையனாகையாலே ஈசன் என்றும் சொல்லப்பட்டான்.
கனகம் என்ற வடசொல் கனம் எனக்குறைந்தது. உடையாய் – உடையான் என்பதன் ஈறுதிரிந்தவிளி.

————-

என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ! தாமரைக் கண்ணனே தாலேலோ!–1-3-3-

பதவுரை

எம்தம் பிரானார்–எமக்கு ஸ்வாமியாய்
எழில்–அழகிய
திருமார்வார்க்கு–திருமார்பை யுடையாய்
சந்தம் அழகிய–நிறத்தாலழகிய
தாமரை தாளர்க்கு–தாமரை போன்ற திருவடிகளை யுடையரான தேவர்க்கு
இந்திரன் தானும்–தேவேந்த்ரனானவன்
எழில் உடை–அழகை யுடைய
கிண்கிணி–கிண் கிணியை
தந்து–கொணர்ந்து ஸமர்ப்பித்து
உவனாய் நின்றான்–அதோயிரா நின்றான்
தாலேலோ! தாமரைக் கண்ணனே! தாலேலோ–

விளக்க உரை

இந்திரன் அரைச் சதங்கையைக் கொண்டு வந்து ஸமர்ப்பித்து அதோ நிற்கின்றான் காண் என்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
முன்னிரண்டடிகளும் படர்க்கையாயிருந்தாலும் முன்னிலைப் படர்க்கையெனக் கொள்க.
எழில் திருமார்வனும் தாமரைத்தாளனுமான உனக்கு என்றபடி.
‘கிண்கிண்’ என்று ஒலிப்பது பற்றிச் சதங்கைக்குக் கிண்கிணி என்று காரணப் பெயராயிற்று.
உவன் – நடுவிலிருப்பதைக் காட்டுஞ் சுட்டெழுத்தான ‘உ’ என்பதனடியாய் பிறந்த ஆண்பாற் பெயர்;
அதிக தூரத்திலும் அதிக ஸமீபத்திலுமில்லாமல் நடுத்தரமாய் இருப்பவனென்று பொருள்.

————

சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4-

பதவுரை

சங்கில்–சங்குகளில்(சிறந்த)
வலம் புரியும்–வலம்புரிச் சங்கையும்
சே அடி–செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த)
கிண்கிணியும்–சதங்கையையும்
அம் கை–அழகிய கைகளுக்கு உரிய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–தோள்வளைகளையும்
நாணும்–பொன்னரை நாணையும்
அரை தொடரும்–அரைவடத்தையும்
அம் கண்–அழகியதாய் விசாலமான
விசும்பில்–ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்–தேவர்கள்
போத்தந்தார்–அனுப்பினார்கள்
செம் கண்–சிவந்த கண்களை யுடையையாய்
கரு முகிலே–கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே!
தாலேலோ!
தேவகி–தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே–சிங்கக் குருகே!
தாலேலோ!

விளக்க உரை

தேவதைகள் பலர் கூடிப் பல திருவாபரணங்களை அனுப்புகிறார்களென்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
சங்கில் + வலம்புரி, சங்கின் வலம்புரி,‘
‘குறில்செறியாலன அல்வழிவந்த ’என்ற நன்நூற் சூத்திரத்திள் இறுதியில் ‘பிற’ என்ற மிகையை நோக்குக.
நாண் திருமார்வுக்கு அலங்காரமாகச் சாத்தத்தக்க நாணாகவுமாம்.
செங்கண் + கருமுகில், செங்கட்கருமுகில். கருமுகிலே! முற்றுவமை.

—————–

எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5-

பதவுரை

எழில் ஆர்–அழகுமிக்கிருந்துள்ள
திருமார்பிற்கு–வக்ஷஸ்ஸ்தலத்துக்கு
இவை ஏற்கும் என்று–இவை பொருந்தும் என்று
அழகிய–அழகியவையான
ஐம்படையும்–பஞ்சாயுதங்களையும்
ஆரமும்–முத்து வடத்தையும்
கொண்டு–எடுத்துக்கொண்டு,
வழுஇல்–குற்றமற்ற
கொடையான்–ஔதார்யத்தையுடையனான
வயிச்சிரவணன்–குபேரானானவன்
தொழுது–(இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு
உவனாய் நின்றான், தாலேலோ!
தூ மணி–பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனே–வடிவையுடைய கண்ணனே!
தாலேலோ!

விளக்க உரை

சிறு குழந்தைகளுக்கு அனுக்கம் வராமலிருப்பதற்காக எம்பெருமானுடைய பஞ்சாயுதங்களை யமைத்துக் கழுத்திலணியும்படி
ஓராபரணஞ் செய்து அணிய செய்வது வழக்கம். அவ்வாபரணமே இங்கு ஐம்படை என்கிறது.
அதனைக் குபேரன் கொணர்ந்து ஸமர்ப்பித்து அதோ நின்கின்றார்காண் என்று சொல்லித் தாலாட்டுகிறள்.
‘திருமாற்பிற்கு’, ‘திருமார்வுக்கு’ என்பன பாடபேதங்கள். ஹாரமென்ற வடசொல் ஆரமெனத் திரிந்தது.

வழிவில் கொடையான் – அரைகுறையாகக் கொடுப்பது, அஹங்காரத்தோடு கொடுப்பது, கைம்மாறு கருதிக்கொடுப்பது,
கேட்டபின்பு கொடுப்பது, புகழை விரும்பிக் கொடுப்பது ஆகிய இவையெல்லாம் தானத்திற்குக் குற்றங்கள்;
அவ்வகைக் குற்றமொன்றும் இல்லாதபடி கொடுப்பவனும் குபேரன். ‘வயிச்சி ராவணன்’ என்று நீட்டியோதும்
பாடம் இடையில் வந்ததாகையாலும் பொருத்தம் அற்றதாகையாலும் மறுக்கத்தக்கது.
இதன் வியாக்கியானத்தில் ‘அரவை அரா என்னுமாபோலே வைச் ரவணன் என்கிறதை வயிச்சிராவணன் என்கிறது’ என்று
காணப்படுகின்ற வாக்கியமும் இலக்கண மறியாதவர்களால் ஓலைப்புத்தகங்களில் ஓரத்தில் குறிப்பாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.
பிறகு அச்சுப் பதிப்பிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டதென்றும் பொருட் பொருத்தமற்றதென்றும் அழகியமணவாளச்சீயர்
பலகாலுமருளிச் செய்யக் கேட்டிருக்கை.
‘வைச் ரவணன்’ என்ற வட சொல் வயிஸ்ரீஅவணனென விகாரப்பட்டது.
ப்ரஹ்ம புத்ரனான புலஸ்த்யப்ரஜாபதியினுடைய புத்திரனாகிய விச் ரவ முனிவனுக்கு பரத்வாஜ புத்திரினியிடம்
பிறந்தவனான குபேரனைச் சொல்லுகிறது.

—————-

ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6-

பதவுரை

ஓதம்–அலையெறிப்பையுடைய
கடலில்–ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி–ஒளியை யுடைத்தாய்
முத்தின்–முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்–ஹாரத்தையும்
சாதி–நல்ல ஜாதியிலுண்டான
பவளமும்–பவழ வடத்தையும்

சந்தம்–அழகு பொருந்திய
சரி–முன் கை வளைகளையும்
வளையும்–தோல்வளைகளையும்
மா தக்க என்று–விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன் விடுதந்தான்–வருண தேவனானவன் விடுதந்தான்
சோதி சுடர்–மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய
முடியாய்–கிரீடத்தை யணிந்த கண்ணனே!
தாலேலோ. . !
சுந்தரம் தோளனே–அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே!
தாலேலோ. . !

விளக்க உரை

வருணைதேவன் கருங்கடற் கடவுளாதலால் அக்கடலில் நின்றுந்தோன்றின முத்துக்களினாலும் பவழங்களினாலும் ஆகிய
ஹாரங்களையும் முன்கைச் சரிகளையும் சங்கு வளையல்களையும் அனுப்பினான். அதைச்சொல்லித் தாலாட்டுகிறாள்.
அரக்கு முதலியவற்றால் செய்யப்பட்ட க்ருத்ரிமப்பவழங்களும் உண்டாதலால் அப்படியல்லாமல் உண்மையான சிறந்த
பவளமென்கைக்காகச் சாதிப்பவள மெனப்பட்டது. சோதிச்சுடர் – ஒரு பொருட்பன்மொழிதக்க – வினைமுற்று.

—————-

கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள்,
கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7-

பதவுரை

தேன் ஆர்–தேன் நிறைந்துள்ள
மலர்மேல்–(செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை–பெரிய பிராட்டியார்
கான் ஆர்–காட்டிலுண்டான
நறு துழாய்–பரிமளம் மிக்க துளசியாலே
கை செய்த–தொடுத்த
கண்ணியும்–மாலையையும்
வான் ஆர்–சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள
செழு–செழுமை தங்கிய
சோலை–சோலையாய்த் தழைத்த
கற்பகத்தின்–கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த
வாசிகையும்–திரு நெற்றி மாலையையும்
போத்தந்தாள்–அனுப்பினாள்
கோனே–ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல் தாலேலோ!
குடந்தை–திருக்குடந்தையிலே
கிடந்தானே–கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே!
தாலேலோ!

விளக்க உரை

நல்ல திருத்துழாய் மாலை முதலியவற்றைப் பெரிய பிராட்டியார் கொடுத்தனுப்பினளென்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
காநநம் என்ற வடசொல் கான் எனச் சிதைந்தது. தன்னிலத்தில் வளர்ந்ததனால் மணங்குன்றாத திருத்துழாய் என்றபடி.
கைசெய்த என்ற விடத்து, கை – தமிழுபசர்க்கம்.

குடந்தை – கும்பகோணம். குடமூக்கு என்பது முழுப்பெயர். அதில் ஏகதேசமான குடம் என்ற சொல்லை மாத்திரங்கொண்டு
என்ற எழுத்துப் பேறும் ஐ விகுதியும் பெறுவித்துக் குடந்தையென்றார்.
வில்லிபுத்தூர் என்ற முழுப்பெயரில் புது என்றமாத்திரத்தைக் கொண்டு புதுவை என்பது போலவும்,
குருகூரைக் குருகையென்றும், அழுந்தூரை அழுந்தையென்றும், நாகூரை நாகையென்றும், தஞ்சாவூரைத் தஞ்சை என்றும்,
திருச்சேறூரைத் திருசேறையென்றும் பெருங்குளத்தை குளத்தையென்றும் அருளிச் செய்தல் போலவும்
குடமூக்கூரைக் குடந்தையென்றாரென்று கொள்ள வேணும்.
தூப்புல் பிள்ளை தாமும், நவரத்தினமாலையும், மும்மணிக் கோவையிலும், திருவயிந்திரபுத்தை அயிந்தை என்றருளிச்செய்திருப்பதும் நோக்கத்தக்கது.

————

கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை
உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ
அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8-

பதவுரை

கச்சொடு–கச்சுப் பட்டையையும்
பொன்–பொன்னாற்செய்த
சுரிகை–உடை வாளையும்
காம்பு–கரை கட்டிய சேலையையும்
கனம்–கநக மயமான
வளை–தோள் வளைகளையும்
மணி–ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி–உச்சியிலே சாத்தத் தக்கதான
சுட்டி–சுட்டியையும்
ஒண் தாள்–அழகிய காம்புகளை யுடைத்தாய்
நிரை–ஒழுங்கான
பொற்பூ–பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று–‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்–பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்–அனுப்பினாள்;
நஞ்சு–விஷமேற்றின
முலை–பூதனையின் முலையின் பாலை
உண்டாய்–உண்ட கண்ணனே!
தாலேலோ;
நாராயணா! அழேல்! தாலேலோ

விளக்க உரை

ஸ்ரீ பூமிப்பிராட்டியார் சில ஆபரணங்களையும் ஆடையையும் கொடுத்தனுப்பினதைச் சொல்லித் தாலாட்டுகிறாள்.
அச்சுதனுக்கு என்றது முன்னிலைப் படர்க்கை; அச்சுதனானவுனக்கு என்றவாறு. அவநி- வடசொல்; பூமி.
’ஷூரிகா’ என்ற வடசொல் சுரிகையெனத் திரிந்தது;

———

மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ! அரங்கத் தணையானே தாலேலோ!!–1-3-9-

பதவுரை

மெய்–திருமேனியிலே
திமிரும்–பூசுகைக்குரிய
நானம் பொடியோடு–கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும்–மஞ்சள்பொடியையும்
செய்ய–சிவந்ததாய்
தட–விசாலமாயுள்ள
கண்ணுக்கு–கண்களில் (சாத்த)
அஞ்சனமும்–மையையும்,
(திரு நெற்றியில் சாத்துகைக்கு)
சிந்தூரமும்–ஸிந்தூரத்தையும்
வெய்ய கலை பாகி–கொடிய ஆண்மானை வாஹமாகவுடைய துர்க்கையானவள்
கொண்டு–எடுத்துக்கொடு வந்து
உவளாய் நின்றாள்–அதோ இரா நின்றாள்;
ஐயா–ஸ்வாமியான கண்ணனே!
அழேழ் அழேழ் தாலேலோ;
அரங்கத்து–ஸ்ரீரங்கத்திலே
அணையானே–(திருவனந்தாழ்வானைப்) படுக்கையாக வுடையவனே!
தாலேலோ.

விளக்க உரை

துர்க்காதேவியானவள் வாசனைப்பொடி முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பிக்க வந்திருக்கிறாளென்று சொல்லித் தாலாட்டுகின்றாள்.
துர்க்கைக்கு மான் வாஹனமாகையால் கலைப்பாகி எனப்பட்டது. ‘பாகன்’ என்பதன் பெண்பால் பாகி என்பது;
மானின்மேல் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்துபவள்.
கலா என்ற வடசொல் ‘கலை’ என ஐயீறாகத்திரிந்ததென்று கொண்டு நூற்கலைகளை நடத்துகிற ஸரஸ்வதி என்று பொருள்கொள்வதும் ஏற்கும்;
இப்பொருளில் வெய்ய என்பதற்கு-விரும்பப்படுகின்ற என்று பொருள்.
இத்திருமொழியில் முதற்பாட்டில் பிரதானனாகப் பிரமதேவன் சொல்லப்பட்டபடியால் அவனுக்குப் பத்தினியான ஸ்ரஸ்வதியை
இப்பாட்டிற் சொல்லிமுடிக்கிறதென்று கொள்வது மிகவுமிணங்கும்.

——-

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10-

பதவுரை

வஞ்சனையால் வந்த–வஞ்சக வேஷத்தோடே வந்த
பேய்ச்சி–பூதனையினுடைய
முலை உண்ட–முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை–மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
தாலாட்டிய–தாலாட்டின படிகளை
செம் சொல் மறையவர்–செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
சேர்–நித்ய வாசம் பண்ணப் பெற்ற
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த
பட்டன்–பெரியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்–இப்பாசுரங்கள்
எஞ்சாமை–குறைவு படாமல்
வல்லவர்க்கு–ஓத வல்லவர்க்கு
இடர் இல்லை–துன்பம் ஒன்றுமில்லையாம்.
தான் ஏ – அசை

கண்ணபிரானைத் தொட்டிலிற் கண்வளர்த்தித் தாலாட்டாக யசோதைப்பிராட்டி அன்று சொன்ன பாசுரங்களை
உட்கொண்டு நான் இத்திருமொழி பாடினேன்; இதை நின்றாகக் கற்பவர்கள் ஒருவகைத் துன்பமுமடையாமல்
நித்யாநிந்தம் பெறுவரென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
தாலாட்டிய என்றது விசேஷணமன்று. இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர்.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுமுடன்தொக்க தொகை.

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading