ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத்-முதல் அத்தியாயத்தின் பகுதி-2

ஸ்லோகம்-9
சிஷ்யர்களுக்கிடையே உள்ள உரையாடல். பிரம்ம ஞானத்தை அடைந்தவன் அனைத்துமாகி விடுகிறான்.
ப்3ரஹ்மவித்3யா ஸர்வ ப4விஷ்யந்தஹ – பிரம்மமே எல்லவாகவும் இருக்கின்றது.
அப்படியென்றால் இந்த பிரம்மம் அதையறிந்து எல்லாமுமாக ஆகிறது? பிரம்மம் தன்னையே அறிந்ததனால் எல்லாமுமாக இருக்கிறது.
மனுஷ்யா மன்யந்தே – இப்படி மனிதர்கள் கருதுகிறார்கள்.
கிமு தத்3 ப்3ரஹ்ம ஆவேத்3 – அதை இந்த பிரம்மம் அறிந்து
யஸ்யாத் – எதனால்
தத் ஸர்வம் ப3வத்3 இதி – அனைத்துமாக ஆனது.
கிம் ப்3ரஹ்ம? – அந்த பிரம்மம் வரையறைக்குட்பட்டதா இல்லையா? அது எதை அறிந்தது

1. பிரம்மம் எதையாவது அறிந்து அனைத்துமாக ஆனதா அல்லது எதையும் அறியாமல் எப்படி இருக்கிறது?
2. பின்னர் பிரம்மம் தன்னை அறிந்து அனைத்துமாக ஆனது, அல்லது எதையாவது அறிந்து அப்படியானதா?
பிரம்மம் தன்னை அறிந்தே அனைத்துமானது.

கேள்வி : கர்மாவும், கர்த்தாவும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? அது அதையையே எப்படி அறிய முடியும்?

————–

ஸ்லோகம்-10
பகுதி-1 – மஹாவாக்கிய பகுதி

ப்3ரஹ்ம வா இத3ம் அக்3ரே ஆஸீத் – பரமாத்மா இதுவாக (ஜீவாத்மாவாக) அறிவை அடைவதற்கு முன்பு இருந்தது.
பிரம்மன் ஞானத்தை அடைவதற்கு முன்பு ஜீவாத்மாவாக இருந்தது.
தத்3 – அந்த பிரம்மன்;
ஆத்மானமேவம் ஆஸீத் – தன்னையே அறிந்தது;
அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பரம்பொருளாக இருக்கிறேன் என்று தன்னை அறிந்தது
தஸ்மாத் – ஆகவே;
தத்3 – அந்த பிரம்மன்;
ஸர்வம் அப4வத் – அனைத்துமாக ஆனது.

விசாரம்:-
கேள்வி: பிரம்மன் ஞானத்திற்கு முன் ஜீவனாக தன்னை அறிகின்றது. இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியே அக்ஞானம்.
இந்த இடைவெளியை ஞானத்தைக் கொண்டுதான் நீக்க முடியும்.
பதில்: அஹம்-நான்; ப்3ரஹ்ம- பிரம்மனாக; அஸ்மி-இருக்கின்றேன்.
நான் என்ற சொல்லுக்கு “உணர்வு” இருக்கிறது. அது மூன்று உடலோடும் கலந்திருக்கிறது.
(உணர்வு + உடல்) இதற்குள்தான் வியாபிக்க முடியும்.
இந்த மூன்று உடல்களுக்கும் “நான்” என்ற சொல்லுக்கு உணர்த்துகிறதா இல்லையா?
இதுதான் ஜீவ விசாரம் – த்ருக், த்ருஷ்ய விவேகம், அவஸ்தாத்ரய விவேகம், பஞ்சகோச விவேகம், மூன்று சரீர விசாரம்.
நான் என்ற சொல் மூன்று உடலையும் குறிக்காது. அது உணர்வையும், சைதன்யத்தையும் மட்டும் குறிக்கிறது.

அஹம் – நான் – அறிவு ஸ்வரூபம்தான் சரியான பொருள்
ப்3ரஹ்ம – பரம்பொருள் – தெரிகின்ற உலகத்துக்கே ஆதாரம் என்று காரிய-காரண விசாரத்தை செய்து,
காரணம்தான் ஸ்த், காரியம் மித்யா என்ற கருத்தை அடைவதுதான் முடிவானது.
அஸ்மி – இருக்கின்றேன். (எல்லா காலத்திலும்)

நான் பிரம்மன் என்று அறிந்து கொள்ளும்போது அனைத்துமாக இருக்கிறேன் என்று உணர்கின்றேன்.

சங்கர பாஷ்ய விசாரம்:
கேள்வி-1: ஜீவாத்மா ஞானம் அடைவதற்கு முன்னும் ஜீவாத்மாவாகத்தான் இருந்தது.
அந்த ஜீவாத்மா தன்னையறிந்து நான் பரமாத்மா என்று அறிந்தது, பரமாத்வாகவே மாறியது.
ஜீவன் உபாஸனை செய்து பிரம்மனாக மாறுகிறான். உபாஸனை என்ற சாதனை மூலம் பிரம்மனின் அங்கமாக மாறிவிடுவான்.
ஜீவன் பிரம்மனாக போகிறான் எனவே அதற்கு முன்பே பிரம்மன் என்று உபநிஷத் சொல்லியிருக்கிறது.

பதில்-1: ஒன்று ஏதோ ஒரு நிமித்தத்தினால் வேறொன்றாக மாறுகிறது.
ஆனால் அந்த நிமித்தம் நீங்கினால் அது மீண்டும் பழைய நிலைக்கே சென்று விடும். தண்ணீர் வெப்பத்தினால் ஆவியாகிறது.
பிறகு வெப்பம் நீங்கினால் மறுபடியும் நீராக மாறி விடுவதை உதாரணமாக் கொள்ளலாம். இந்த வகையான மாற்றம் நிலையானதல்ல.
ஜீவன் உபாஸனையால் பிரம்மனாக மாறியிருந்தால், அந்த உபாஸனை நீங்கினால் மீண்டும் ஜீவனாகி விடுவான்.
எது உருவாக்கப்பட்டதோ அது அழியக் கூடியது என்பது நியதி. ஜீவன் உபாஸனை மூலம் பிரம்மனாக உருவாகினால்,
அது அழியக்கூடியதாகி விடும். இந்த நிலை பிரம்ம நிலை கிடையாது.

ஸ்ருதஹானம் அங்குத கல்பனா – கேட்டதை விட்டு விட்டு கேட்காததை கற்பனை செய்வதை போல இருக்கிறது.
பிரம்ம என்ற சப்தத்தை விட்டுவிட்டு ஜீவன் என்று நீயாக கற்பணை செய்கிறாய்.
ஜீவனாக இருக்கும் நிலை அறியாமையினால் வந்த விளைவு. ஞானத்தினால் பிரம்மன் அறிந்து கொள்ளும் நிலை.

கேள்வி-2 – பிரம்மனிட்த்தில் எப்படி அறியாமை வரும்? சூரியனிட்த்தில் எப்படி இருள் வரும்?
1. நித்தியமான பிரம்மன் எப்படி அறியாமைக்குரிய விஷயமானது?
2. அறியாமைக்குரிய ஆஸ்ரயமாக எப்படி வரும்?
பதில்-2 – 1. உபநிஷத் பிரம்மத்தைப்பற்றீ விளக்குவதால் அதைப்பற்றிய அறியாமைத்தான் நம்மிடம் இருக்கிறது என்று அறிய வேண்டும்.
எந்தப்பொருள் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருந்தாலும் அத்யாஸம் காரணமாக மறைக்கப்பட்டிருந்தால் அதை விளக்க வேண்டியதாக இருக்கிறது.
அறியாமை அறிவுள்ள வஸ்துவிடம்தான் இருக்கும். எனவே இதுதன் அறிவுக்கும், அறியாமைக்கும் ஆஸ்ரயமாக இருக்கும்.
சேதன வஸ்துவாக் பிரம்மம் ஒன்றுதான் இருக்கிறது. பிரம்மனுக்கு வேறாக ஒரு அறிவு ஸ்வரூபம் இல்லை, ஆஸ்ரயம் பிரம்மத்துக்குத்தான் போய் சேரும்.

கேள்வி-3 – பிரம்மனே எல்லாவுமாக இருப்பதால் எதற்காக சாஸ்திரத்தை நாம் படிக்க வேண்டும்?
பதில்-3 – இந்த கேள்வி பிரம்மத்தை அறிவதற்கு முன்பாகவா? பிரம்மத்தை அறிவதற்கு பின்பாகவா?
பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு, புரிந்து கொண்டவனுக்கு சாஸ்திரம் தேவையில்லை, ஆனால் புரியாதவனுக்கு அதை புரிந்து கொள்ள சாஸ்திரம் கட்டாயம் தேவை.

கேள்வி-4 – நான் எப்பொழுதும் பிரம்மனாகவே இருக்கிறேன், பிறகு எதற்கு அதை புரிந்து கொள்ள வேண்டும்?
பதில்-4 – பிரம்மத்தை புரிந்ததற்கு முன் உள்ள அனுபவங்கள், புரிந்தவுடன் அனுபவிக்கும் அனுபவங்கள்
பார்த்தோமேயானால் நமக்கு ஏன் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிய வரும்.
புரிந்தவனுடைய மனநிலையையும், புரியாதவனுடைய மனநிலையும் ஒப்பிட்டுப் பார்த்தோமேயானால் அதன் அவசியம் தெரிய வரும்.
எனவே சாஸ்திரத்தின் உதவியை பயன்படுத்திக் கொண்டால்தான் பிரம்ம ஞானத்தை அடைய முடியும்.

கேள்வி-5 – சாஸ்திரம் பிரம்மன், ஜீவன் என்ற தத்துவத்தை தனித்தனியாக பேசியிருக்கிறது.
அதை நான் எடுத்துக் கொள்ளலாமா? ஜீவன் இறந்தாலும் கர்ம பலன்களை எடுத்துக் கொண்டு செல்கிறான்.
பிரம்மனுக்கு வேறாக ஜீவன் இருக்கிறான் என்று விளக்கப்படுகிறது.
இந்த ஜீவன் ஈஸ்வரனை அடைய வேண்டும்.என்றும் உபதேசிக்கிறது.
இதை வைத்துப் பார்க்கும் போது ஜீவன் வேறு, இரம்மன் வேறு என்று நன்றாக தெரிகிறதல்லவா?
மற்ற சாஸ்திரங்கள் ஜீவன், பிரம்மன் என்று தனித்தனியாக உபதேசிக்கிறது.
பதில்-5 – இங்கு பிரம்மனைப் பற்றி தெரிந்தால்தான் அனைத்துமாக முடியும் என்று சொல்வதால்,
உபநிஷத் பிரம்மனைத்தான் தாத்பர்யமாக சொல்கிறது.
ஜீவனைப் பற்றி சொல்வதெல்லாம் அனுவாதம் வாக்கியம் (தெரிந்ததைச் சொல்வது).
ஆனால் பிரம்மத்தைத்தான் முக்கிய நோக்கமாக, அறியப்பட வேண்டியதாக உள்ளது என்று உபதேசிக்கிறது.

கேள்வி-6 – யார் பிரம்மத்தை தெரிந்துக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் பிரம்மம் தானே?
அறிவை அடையும்போது மனதில் விகாரம் (மாற்றம்) ஏற்படும். பிரம்மன் மாற்றத்துக்குட்பட்டதா?
பதில்-6 – நீ அறிபவனை அறிபவன் பிரம்மன். இப்படி பதில் சொன்னவுடன், அறிபவன் திரும்ப இருக்கிறான்.
இரண்டு விதமான அறிபவர்கள் இருக்கிறார்கள். பிரமாதா அந்தக்கரணங்களின் மூலமாக அறிபவன் விகாரத்தையுடையவன்.
இன்னொரு அறிபவன் எப்பொழுதும் அறிந்துக் கொண்டேயிருக்கின்றான். இவன் எந்த மாற்றத்தையும் அடைவதில்லை.

கேள்வி-7 – ”அந்த பிரம்மன் தன்னையே அறிந்து, தான் பிரம்மனாக இருக்கிறேன்” என்ற வாக்கியத்தில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.
பிரம்மன் தன்னையே அறிவதன் பலன் அறிபவன் அறியப்படும் என்ற தோஷம்.
அறிபவன் அறியப்படும் பொருளிலிருந்து வேறுபடுகிறான். அதன்படி பிரம்மன் எப்படி பிரம்மனாகவே அறியும்?
பதில்-7 – பிரம்மத்தை ஒரு விஷயமாகவோ, பொருளாகவோ அறியவில்லை. அது ஏற்கனவே விளங்கிக் கொண்டிருக்கிறது,
ஏற்கனவே பிரம்மன் என்னிட்த்திலே விளங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் பிரம்மன் என்று விளங்கவில்லை,
எனவே சாஸ்திரத்தின் துணைக்கொண்டு அதன் ஸ்வரூபத்தை மட்டும் தெரிந்துக் கொண்டேன்.
எனக்கு அல்லாததை நீக்கிய்வுடன் நான் அறிந்து கொண்டேன்.
அனாத்மா நிஷேதனம் – பிரம்மம் அறிதல்; என்னையேதான் அறிந்து கொள்ளுதல் – கண்ணாடியில் நம்மை பார்ப்பது போல.

———–

ஸ்லோகம்-10 : பகுதி-2 – அதிகாரியைப் பற்றிய விஷயம்

தேவர்களுக்கெல்லாம் யார் யார் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள்.
அது போல ரிஷிகளுக்குள் யாரெல்லாம் பிரம்மத்தை அறிகிறார்களோ அவர்களும் பிரம்மனாகிறார்கள். அது போலவே தான் மனிதர்களுக்கும்.
ப்ரத்யபு3த்4யத் – அறிகிறார்களோ, பர்யுதஸ்த்வம் – விலக்குதல்;

நியமங்கள் – கர்மகாண்டம்
அர்த்தி – செய்யப்போகும் கர்மத்தின் பலனை விரும்புவனாக இருக்க வேண்டும்.
தக்‌ஷ – ஆசைப்பட்டதை அடைவதற்கான சக்தியிருக்க வேண்டும். கர்மம் செய்வதற்கான சக்திக்கிடையாது.
அபர்யுதஸ்த்வம் – சாஸ்திரத்தால் நிஷேதம் செய்யாததாக இருக்க வேண்டும். ஸ்வதர்மமாக இருக்க வேண்டும்.

நியமங்கள் – ஞானகாண்டம்
முமுக்‌ஷுத்வம் – பிரம்மனை அடைய வேண்டும் என்று லட்சியமாக இருத்தல்.
விவேக, வைராக்யம், சமாதானம் (சம, தம, உபரதி, திதிக்‌ஷா, சமாதானம்) – சாதன சதுஷ்டயம்,
மனுஷ்யானாம் – தகுதியுடையவர்கள்.

———-

ஸ்லோகம்-10 : பகுதி-3 – வாமதேவர் விளக்கம்

சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை அடைந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று அறியும் போதுதான்
நமக்கு இன்னும் சிரத்தை அதிகமாகிறது. இந்த உபதேசத்தில் மிகுந்த விசுவாசம் ஏற்படும்.
தத் ஏத3த் பஷ்யன் – அதை ஆத்மாவாகவே அறிந்த காரணத்தினால்;
ரிஷி வாமதேவர் – ரிஷியான வாமதேவர்
ப்ரதிபேதே3 – இவ்வாறு சொல்கிறார்.
அஹம் மனு அப4வம் – நான் மனிதனாக இருக்கின்றேன்.
சூர்ய – சூரியனாக இருக்கிறேன்., என்று கூறுகிறார்.
இப்படி அவர் கூறுவது, நானே அனைத்துமாக இருக்கிறேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

————

ஸ்லோகம்-10 : பகுதி-4 – விக்ன அபாவஹ – தடையில்லை

இந்த ஞானத்தை அடைந்து நிஷ்டை அடைந்து விட்டால் இதை யாரும் பறிக்க முடியாது.
அல்லது யாரும், எதுவும் தடையாக இருக்க மாட்டார்கள். பலனை அனுபவிப்பதில் தடையெதுவும் இருக்காது.
இப்படிபட்ட ஞானத்தை சிறப்பான மனிதர்களால்தான் அடைய முடியும். தேவர்களும் பெரும் தடையாக இருக்கிறார்கள்.
கலிகாலத்தில் இதை அடைவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும் என்ற முகவுரையுடன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார்.

மந்திர விளக்கம்:-
தத்3 இத3ம் அபே த3ர்ஹி – இப்பொழுதும் கூட
ய ஏவம் வேத3 – யார் இப்படி அறிகிறார்களோ
அஹம் ப்3ரஹ்ம அஸ்மி – நான் பிரம்மனாக இருக்கிறேன்.
ஸ இத3ம் ஸர்வம் ப4வதி – அவர் அனைத்துமாக மாறி விடுகிறார்கள்.
தஸ்ய ஹ ந தே3வாஷ்சந – இவரை தேவர்களாலும்
அபூ4த்யா ஈஷதே – ஞானத்தால் அடைந்த பலனை (ஸ்ர்வாத்மபாவம்) தடை செய்ய சக்தியிருக்காது.
ஆத்ம ஏஷம் ப4வதி – அந்த ஞானி அவர்களாகவே மாறி விடுவதால், இந்த தடை நேராது.

எப்பொழுது, யார் நான் பிரம்மன், அனைத்துமாக இருக்கிறேன் என்ற ஞானத்தை அடைந்திருக்கிறார்களோ
அவர்களுக்கு தேவர்களாலும் துன்பத்தை கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த ஞானியே தேவர்களின் ஆத்மாவாகவே இருக்கின்றான்.

சங்கர பாஷ்ய விசாரம்:
கேள்வி-1: சாதாரண மனிதர்களால் இதை அடைய முடியுமா?
பதில்-1: முடியும்.
கேள்வி-2: தேவர்களால் இதை அடைய தடை செய்யப்படுமா?
பதில்-2: ஞானம் அடையும் வரை தடையாக இருக்கலாம். ஞானம் அடைந்த பின்னர் அதன் பலனை அனுபவிக்க எதுவும் தடையாக இருக்காது.
தடையாக இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நீங்கி விடும்.
கேள்வி-3: பிறந்தவுடன் மூன்று பேருக்கு கடன்பட்டவனாக இருக்கிறோம். நம் ஆயுள் முழுவதற்கும் அதை தீர்க்கவே சரியாக இருக்கும்.
பின் எப்படி ஞானம் அடைவதற்கு நேரம் கிடைக்கும். கடன் கொடுத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தி கொண்டிருப்பார்கள்.
1. ரிஷிகளிடம் கடன்பட்டுள்ளோம், இதை அவர்கள் வகுத்துக் கொடுத்த சாஸ்திரங்களை படிப்பது மூலம் தீர்த்து விடலாம்.
2. தேவர்களுக்கு கடன்பட்டுள்ளோம் – இதை யாகங்கள், பூஜைகள் முதலியவைகளால் அடைத்து விடலாம்..
3. பித்ருகளுக்கு கடன்பட்டுள்ளோம். – இதை குழந்தைகள் பெறுவதன் மூலம் அடைக்கப்படுகிறது.
தேவர்களின் கடனும், பெற்றோர்களின் கடனும் அடைப்பதிலே வாழ்நாள் செலவாகி விடும்.
தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை விட மேலான
ஆனந்தத்தை அடைவதை விரும்பாமல், அவர்கள தடை செய்து கொண்டிருப்பார்கள்.
பதில்-3: யார் வைராக்கியத்தை அடைந்திருக்கிறார்களோ அவர்கள் இந்த கடனிலிருந்து விடுபடுவார்கள்.
அவர்கள் எந்த ஆஸ்ர்மத்தை சேர்ந்தவர்களாயினும் இது பொருந்தும்.
ஞானம் அடைவதற்கு முன் தேவர்களால் தடை ஏற்படுத்த முடியும்.
ஆனால் ஞான நிஷ்டை அடைந்து அதன் மூலம் அடையும் பலனை அனுபவிக்க யாராலும் எந்த தடையையும் செய்ய முடியாது.

நமக்கும் பிரம்மத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அவித்யாதான், எனவே வித்யாவை, ஞானத்தை அடைந்ததும் பிரம்மனாகி விடுவோம்.
அதற்குப்பிறகு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள், இருக்கவும் முடியாது.

செய்த செயலின் விளைவு எதன் அடிப்படையில் வருகிறது? எப்படிப்பட்ட பலன் வரும் என்று எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
· ஜோதிஷ்விதக – ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள். இவர்கள் சொல்வது காலத்தின் அடிப்படையில்தான் பலன் வரும்.
· வஸ்து – இது சார்வார்க்கர்களின் மதம், பொருளினுடைய தன்மை- நாம் பயன்படுத்துகின்ற பொருள்தான் பலனை நிர்ணயிக்கிறது.
· கர்ம – நீ எப்படிப்பட்ட செயல் செய்கிறாயோ அதன் அடிப்படையில்தான் பலன் நிர்ணயிக்கப்படுகிறது.
· தேவர்கள் – உபாஸகர்களுடைய நம்பிக்கை – நாம் அடைகின்ற கர்ம பலன்களுக்கு காரணம் தேவர்கள்தான்.

யாருமே நமக்கு தடையாக இருக்க முடியாது. அந்தத் தடைகள் எல்லாம் நாம் உருவாக்குவது தான்.
நாம் எப்படிப்பட்ட செயல் செய்கிறோமோ இவற்றின் பலன்களை காலம், வஸ்து, கர்ம்ம், தேவர்களின் மூலமாக பலன்களை அனுபவிக்கிறோம்.
நமக்கு வரும் தடைகள் எல்லாம் நம்முடைய கர்மபலனின் அடிப்படையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
இப்படி இருக்கும் போது நாம் மோக்‌ஷம் அடைவதற்கு யாருமே தடையாக இருக்க மாட்டார்கள்.
எனவே நற்காரியங்களை செய்து, புண்ணியங்களைச் சேர்த்து தடையை நீக்கி கொள்ள வேண்டும்.

———-

ஸ்லோகம்-10 : பகுதி-5 – அவித்யா சூத்திரம்

अथ य: अन्याँ देवातँ उपस्ते – யாரொருவன் வேறொரு தேவதையை உபாஸிக்கிறானே;
अन्य अहँ – நான் வேறு
अन्य असाव – நான் உபாஸிக்கும் தேவதை வேறு
न स वेद – அவன் உண்மையை அறிந்தவனில்லை.
தன்னை பிரம்மத்தினின்று வேறுபட்டு இருக்கின்றேன் என்று அறிந்து கொண்டிருப்பதுதான்,
நினைத்துக் கொண்டிருப்பதுதான் அவித்யா.

——————

ஸ்லோகம்-10 : பகுதி-6 – அவித்யா சூத்திர விளக்கம்

यथा पशु: – எப்படி விலங்குகள் மனிதனுக்கு உதவி செய்கின்றதோ
एवँ सह – செய்வது போல அக்ஞானிகள்
देवानाम् – தேவர்களுக்கு அடிமைபட்டு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்
यथा ह वै बहव: पशवो मनुष्य भुञ्ज्यु – எப்படி விலங்குகள் மனிதர்களுக்கு சேவை செய்வது போல
ऎवमॆकैके पुरुषो देवान् भुनक्ति – மனிதர்களும் தேவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.
एकस्मिन्नेव पशवादीयमाने अप्रियँ भवति, किम् बहुषु? – ஒரு விலங்கு குறைந்துப்போனாலே மனிதன் வருத்தப்படுவான்,
இன்னும் பல விலங்குகள் குறைந்தால் என்ன சொல்வது?
तस्मात् तेषाँ तन् अप्रियँ यदॆत् मनुष्या विधुः – அது போல, தேவர்களுக்கு ஒரு மனிதன் ஞானியாகி விட்டால்,
நமக்கு சேவை செய்ய ஒருவர் குறைந்து போய் விடுமே என்று வருத்தப்படுவார்கள்.
இங்கே தேவர்கள் என்பதை, இந்திரியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சங்கரரின் விசாரம்:
கேள்வி-1: ஞானம் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது மோட்சமாகும்.
அது தடைப்பட்டு வேறெதாவது எண்ணம் வந்துவிட்டால் நாம் திரும்பவும் சம்சாரத்திற்கு வந்து விடுவோம்.
அறிவு மட்டும் வந்தால் போதாது. ஜீவன் முக்தன் என்பவன் இருக்கவே மாட்டான்.
உயிரை விடும் போது அஹம் ப்ரஹ்ம அஸ்மி என்று நினைத்தால்தான் மோட்சத்தை அடைவான்.
பதில்-1: ஆத்மஞானம் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் காரணம் நீங்குகிறதா அல்லது மரணத்திற்கு முன்
கடைசியாக உள்ள எண்ணம் நீங்குகிறதா? எப்பொழுது சரியான ஞானம் வருகிறதோ அப்பொழுதே அக்ஞானம் நீங்கி முக்தியடைகிறோம்.
எனவே அந்திம காலத்தில் கடைசியாக தோன்றினால்தான் மோக்‌ஷம் கிடைக்கும் என்பது தவறு.
தொடர்ந்து இருந்தால்தான் மோட்சத்தில் இருப்போம் என்பதும் தவறு.
ஞானம் அடைந்த பிறகு வரும் எண்ணங்கள் எல்லாம் மித்யா என்ற உணர்வுடன் இருக்கின்ற நிலையில் எப்படி சம்சாரத்திற்கு திரும்ப முடியும்.
இந்த ஞானம் உலகிலுள்ள விவகாரங்களில் உள்ள மித்யா தன்மையுடன் இருப்பதால் இவனால் திரும்ப சம்சாரியாக முடியாது.

———

ஸ்லோகம்-11,12,13

தேவர்களின் வர்ணாசிரம தர்மத்தைப் பற்றிய கருத்துக்கள் இந்த ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளன

————-

ஸ்லோகம்-14

க்ஷத்ரஸ்ய க்‌ஷத்ரம் – சத்திர்யனுக்கு சத்திரியனாக இருப்பதுதான் தர்மம்
धर्मात्परँ नास्ति – தர்மத்திற்கு மேலானது எதுவும் இல்லை;
अबलीयान – பலமற்றவன் ; बलीयान् – பலமுள்ளவன் – अशम्सते – வெற்றிக்கொள்வான்
தர்மம்தான் ஒருவனுக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கிறது. தர்மத்தை கடைப்பிடித்தோமானால்
நாம் எல்லா காரியத்திலும் வெற்றியை கொடுக்கும். தர்மத்துடன் வாழ்ந்தால் யாருக்கும், எதைக்கண்டும் பயப்படத்தேவயில்லை.
சத்தியம்தான் தர்மம், சத்தியத்தைப் பேசுகிறவன் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாகிறான்.

சத்தியத்தின் லட்சணங்கள்:
1. சாஸ்திரத்தில் உள்ள கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளுதல்
2. புரிந்ததை வாக்கின் வழியே வெளிப்பட வேண்டும்.
3. உடலளவில் செயல்படுத்துவது. இதற்கு கர்மம் அல்லது தர்மம் என்று பெயர்.
உண்மையை பேசுகின்றவனை தர்மத்தைக் கடைபிடிப்பவன் என்று உலகம் சொல்கிறது.
யார் தர்மம் பேசுகிறார்களோ அவர்களை சத்யம் பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே சத்தியப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் தர்மப்படி நடக்கிறேன், பேசுகிறேன் என்பதும் ஒன்றுதான் என்று வேதம் உரைக்கிறது.

————

ஸ்லோகம்-15 – மனித வர்ண ஸ்ருஷ்டி, மனித ஜென்மத்தின் மேன்மை

பிராமண மனிதன் முதலில் தோற்றுவிக்கப்படுகிறான், அவனிடமிருந்து சத்திரியனும், சத்திரியனிடமிருந்து வைசியனும்,
வைசியனிடமிருந்து சூத்திரனும் தோன்றினார்கள். இது குணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆத்மாவை புரிந்து கொண்டால் அது நம்மை எல்லாவிதத்திலும் காப்பற்றுகிறது.
புரிந்து கொள்ளாவிட்டால் அதுவும் நம்மை காப்பாற்றாது. ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இறந்து போகிறவன் பரிதாபத்திற்குரியவன்.

வர்ணாசிரம தர்மப்படி நடந்து கொண்டால் மேலான உலகத்தை அடைந்து இன்பத்தை அனுபவிக்கலாம்.
கர்மத்தை யோகமாக செய்தால் சித்தஸுத்தி அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைவான்.
தர்மப்படி நடக்காவிட்டால் நரகத்தைத்தான் அடைவான். நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால்,
ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த மனித ஜென்மம்தான் தேவை.

நாம் உண்மையில் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கின்றோம். ஆனால் அதை உணராமல் இருப்பதால்
எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டிருக்கின்றோம். எல்லா ஜீவராசிகளுக்கும் ஆத்மா இருக்கிறது,
ஆனால் மனிதனால் மட்டும்தான் முயற்சித்தால் தெரிந்து கொள்ள முடியும்.
எனவே ஆத்மாவை அறிந்துகொண்டால் எல்லாவற்றிலிருந்தும் காப்பாற்றபடுவோம்.

நம்மால் ஆத்மாவை புரிந்து கொள்ளாமல் இருப்பதால் எப்படி நம்மை காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கிறோம்
என்பதை இரண்டு உதாரணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
1. வேதத்தை ஓதாமல் இருந்தால் அதனா,ல் நமக்கு எந்த பலனும் கிடையாது. உச்சரிக்காத வேதம் பலனற்றதாக இருக்கும்.
2. ஆரம்பிக்காத கர்மம் நமக்கு எந்த பலனும் கொடுக்காது.

आत्मानमेव लोकमुपासीतः –
·ஆத்மாவை பிரகாச ஸ்வரூபமாக அறிய வேண்டும்.
·ஆத்மா அனைத்தையும் வியாபித்து எல்லா பொருட்களையும் பிரகாசிக்கிறது. ஆனால் அந்த பொருட்களில் உள்ள தோஷம் இதை பாதிக்காது.
(உ-ம்) சூரிய ஒளியானது சாக்கடையிலும் விழுகிறது, கங்கையிலும் விழுகிறது, ஆனாலும் எந்த தோஷங்களாலும் சூரியன் பாதிக்கப்படுவதில்லை.

————-

ஸ்லோகம்-16 – ஆத்மாவை அறியாதவனின் நிலை

அக்ஞானி தேவர்களுக்கும் அடிமையாக இருக்கிறான், விலங்குகளுக்கும், அடிமையாக இருக்கிறான்.
அதாவது இவன் மற்றவர்களுக்கு போக்யமாக இருக்கிறான்.
आत्मा सर्वेषाँ भूतानाँ लॊकः – இந்த உலகமே பயன்படுத்தி கொள்ளும். உதாரணமாக,
· தியாகம் செய்யும் போது – தேவர்களுக்கு போக்யமாகி விடுகிறோம்.
· வேத சாஸ்திரம் படிக்கும்போது ரிஷிகள் நம்மை அனுபவிக்கின்றார்கள்
· விருந்தினர்களை உபசரிக்கும்போது அவர்கள் நம்மை நன்றாக அனுபவிப்பார்கள்.
· பறவை, விலங்கு, புழுபூச்சிகளும் நம்மை அனுபவிக்கின்றது.
யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறோம்.

—————

ஸ்லோகம்-17 – அக்ஞானியின் ஸ்வரூபத்தை விளக்குகிறது

ஏன் எல்லோரும் ஆத்ம ஞானத்தை அறிய விரும்புவதில்லை? ஏனென்றால் ஆசையின் வசப்பட்டு ஏதேதோ
அனாத்மாவை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சங்கரர் கூறுகிறார்.
जाया मे स्यात् – எனக்கு ஒரு மனைவி வேண்டும்.
अथ प्रजायेय – எனக்கு குழந்தை வேண்டும்
अथ वित्तँ मे स्यात् – எனக்கு நிறைய செல்வம் வேண்டும்
अथ कर्म कुर्वीयेति – கர்மத்தை செய்ய வேண்டும்.
கர்மம் செய்ய இந்த ஐந்து பொருட்களும் தேவை, அதாவது மனைவி, எஜமானன்(கணவன்), புத்திரன், மானுஷம்,
வித்தம் (மற்ற திரவியங்கள், பணம், பொருட்கள், உடலாரோக்கியம், அங்கஹீனமற்றவனாக இருத்தல்)
தெய்வ வித்தம் (உபாஸனம், ஜபம், அறிவு) இந்த ஐந்தும் உடையவன் யாகம் செய்வதற்கு தகுதியானவனாக இருக்கிறான்.

இல்லறத்திலிருப்பவர்களால்தான் இந்த மாதிரி யாகங்களை செய்து சித்தஸூத்தியடைவார்கள்.
இந்த வாய்ப்பை இழந்தவர்கள் சேவையில் ஈடுபட்டு சித்தஸூத்தியடைவார்கள்.
அல்லது இந்த ஐந்தையும் உபாஸனை செய்தால், அதே ஸித்தியடைவார்கள்.
எஜமானனை தன்னுடைய மனதாகவும், வாக் இந்திரியத்தை மனைவியாக, பிராணனை புத்திரனாகவும்,
கண்களை மானுஷ வித்தமாக தியானிக்க வேண்டும். காதுகளை தெய்வ வித்தமாக தியானிக்க வேண்டும்.
இவ்விதம் கர்மத்தில் ஈடுபட்டு விடுவதால், ஆத்ம ஞானத்தை அடைய வருவதில்லை.

——————

பகுதி-5 : ஸப்தான்னம் பிரமாணம் ( ஏழு விதமான அனுபவிக்கப்படும் பொருட்கள்)

இந்த உலகத்தை ஏழு விதமான போக்ய பொருட்களாக பிரிக்கப்பட்டு அதை எப்படி ஜீவன் அனுபவிக்கிறான்
என்பதை விளக்கப்படுகிறது. நாம் ஒரு பொருளை அனுபவிக்கும்போது வேறொன்று நம்மை அனுபவிக்கிறது.

த்வைதம் இரண்டாக பிரிக்கப்படுகிறது. அவைகள்
1. ஈஸ்வர ஸ்ருஷ்டி – நாம் அனுபவிக்கும் பஞ்சபூதங்களாலான எல்லா பொருட்களும்
2. ஜீவ ஸ்ருஷ்டி – ஏற்கனவே ஈஸ்வரனால் படைக்கப்பட்ட பொருட்களின் மீது ஜீவன் ஏற்றி வைக்கும் சில மாற்றங்கள்,
சில பாவனைகள். (உ-ம்) பெண்ணே தாயாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், மகளாகவும் இருக்கிறாள்,
இது ஜீவ ஸ்ருஷ்டி. ஈஸ்வர ஸ்ருஷ்டியை போக்யமாக மாற்றினால் அதுவே ஜீவஸ்ருஷ்டி.

ஜீவ ஸ்ருஷ்டியே சம்சாரத்திற்கு காரணம். ஒரு பொருளை சுக சாதனமாக அல்லது துக்க சாதனமாக நினைத்தால் அதுவே ஜீவ ஸ்ருஷ்டி.
சாஸ்திர ஜீவஸ்ருஷ்டி, அசாஸ்திர ஜீவஸ்ருஷ்டி. சாஸ்திர ஜீவ ஸ்ருஷ்டி சாதனமாக எடுத்துக்கொண்டு மோட்சத்தை அடைய வேண்டும்.
பிறகு அதையும் விட்டுவிட வேண்டும். கடைசியில் எப்பொழுதும் சாட்சியாக இருக்க வேண்டும்.
யாரெல்லாம் நமக்கு துயரம் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களுக்கு நாம்தான் அந்த சக்தியை கொடுத்திருக்கிறோம்.

ஸ்லோகம்-1 – சப்தான்னத்தின் அறிமுகம்

இந்த சப்த அன்னத்தை படைக்கிறவன் ஜீவன். இவன் எதைக் கொண்டு, எதன் அடிப்படையில்
ஸ்ருஷ்டியை படைக்கிறான் என்றால், அவன் மேற்கொண்ட கர்மத்தின் அடிப்படையிலும்,
அவன் செய்கின்ற தியானத்தின் அடிப்படையிலும் ஸ்ருஷ்டியை உருவாக்குகிறான்.
நாம் எவ்வளவு தர்மத்துடன் வாழ்கிறோமோ, தர்மத்துடன் கர்மத்தை செய்கிறோமோ அதன் அடிப்படையிலே தான்
நம்முடைய ஸ்ருஷ்டி உருவாகிறது. எனவே மற்றவர்கள் நம்மை எப்படி நினைக்கிறார்கள் என்பது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்து அமைகிறது.

ஈஸ்வர ஸ்ருஷ்டியில் சுக-துக்கங்கள் உண்டாவதில்லை. நம்முடைய ஸ்ருஷ்டியில்தான் இவைகள் உண்டாகின்றன.

நான்கு வகையான அன்னங்கள் உள்ளன, அவைகள்:-
1. சாதாரண அன்னம் – எதையெல்லாம் நாம் சாதாரணமாக இயற்கையிலிருந்து வருபவைகளை உட்கொள்கிறோமோ அவையெல்லாம் சாதாரண அன்னம்.
2. தேவர்களுக்கு கொடுக்கும் அன்னம் –
3. தேவதைகளிடமிருந்து நமக்கு தேவையான அல்லது நம் ஆசைகளை நிறைவேறுவதற்காக அளிக்கப்படும் பொருட்கள்
4. பால்
சாதனை மூலம் இந்த நான்கு அன்னமும் நமக்கும், மற்றவர்களுக்கு கொடுத்தும் பயன்படுத்திக் கொள்பவைகள்
5. மனம்
6. வாக்கு
7. பிராணன்
இந்த மூன்றும் ஆத்மார்த்தமாக நமக்காக, நம்மிட்த்திலே உள்ள அன்னம், இவைகள் சாத்யமாகவும் உள்ளது.
உடலே போக்யமாக உள்ளது, அதை அனுபவிப்பவன் சிதாபாஸன்.

————–

ஸ்லோகம்-2 – ஏழு அன்னங்களுக்கு காரணம் எது?

मेधा – உபாஸனை, तपँ- கர்மம், இந்த இரண்டும்தான் ஏழு அன்னங்களும் கிடைப்பதற்கு காரணாமாக இருக்கிறது.
அதாவது தியான, கர்மத்தின் பலனாகத்தான் இந்த அன்னங்கள் கிடைக்கின்றன.
1. உணவையே லட்சியமாக கொண்டு வாழக்கூடாது, அதை உயிர் வாழ மட்டும் கருவியாக உபயோகிக்க வேண்டும்,
மற்றவர்களுக்கு பகிர்ந்துண்ண வேண்டும்.
2. காம்ய கர்ம மாக உபயோகிக்க கூடாது
3. சுயநலத்திற்காக பயன்படுத்தாமல், கர்ம யோகமாக செய்ய வேண்டும்.
4. பால்: எல்லா ஜீவராசிகளுக்கும் பிறந்தவுடன் உணவாக கிடைக்கிறது. தேவர்களுக்கு கொடுக்கும் ஆஸுதியில் பாலும், நெய்யும் முக்கியமாக கருதப்படுகிறது.
5. மனதில் ஆத்மாவை அடைந்தேன் என்ற அறிவு ஏற்படுதல்
6. குருவினிடத்தில் சென்று நம்முடைய வாக்கினால் மட்டும் ஆத்மாவை அடையும் வழியை அறிந்துக் கொள்ள வேண்டும்.
7. பிராணன் நன்றாக இருந்தால்தான் வாக்கு நன்றாக செயல்படும்.

—————-

ஸ்லோகம்-3 – மனமானது ஸம்ஸ்காரத்திற்கு ஆதாரமாக இருக்கிறதா?

மனம் ஒரு சூக்‌ஷுமமான அங்கம். இதிலிருந்து உற்பத்தியாவதுதான் எண்ணங்கள்.
இதில் விதவிதமான உணர்வுகள் எழுகின்றது. ஒவ்வொரு உணர்வும் எண்ணங்கள்தான்.
மனமானது உணர்வுமயமானது. சிரத்தை, கோபம், பயம், துணிவு, இன்பம், துன்பம், பொறாமை போன்ற உணர்வுகள் அடங்கியது.
மனத்தின் குணங்கள் ஆத்மாவின் குணங்களாகும்.

மனம் இருக்கிறது என்பதற்கு என்ன பிரமாணம்?
நம்முடைய கண் திறந்து பார்த்துக் கொண்டிருந்த போதிலும் சில விஷயங்கள் நம் கவனத்திற்கு வருவதில்லை,
இதற்கு காரணம் மனமானது கண் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் இல்லை.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது, மனம்தான் நாம் எந்த ஒரு அறிவையும் அடைவதற்கு காரணமாக இருக்கிறது.

வாக்கு: இது பிரகாச ஸ்வரூபம் – இது நம்முடைய மனதிலிருக்கிற அறிவையும், வெளியிலிருக்கிற பொருட்களையும் பிரகாசிக்கிறது.
இதனால்தான் நாம் இன்ப-துன்பத்தை அடைகிறோம், அனுபவிக்கிறோம்.

பிராணன்: இதுதான் ஸ்தூல உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரமாக இருக்கிறது.
அக்ஞானியாக இருப்பவன் தன்னுடைய ஆத்மாவானது, மனம், வாக்கு, பிராணன் இதில் ஏதாவது ஒன்றாகத்தான் கருதுகிறான்.
அதாவது மனதையோ, வாக்கையோ, பிராணனையோ நான் என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறான்.
இந்த மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும் ஏனென்றால் இவைகள்தான் மோக்‌ஷத்தை அடைவதற்கு சாதனையாக உள்ளது.

———–

ஸ்லோகம்-4-10

ஒரு ஜீவன் ஆத்மான்னத்தை மூன்று விதமாக அனுபவிக்கிறான்.
1. அத்யாத்மம்: ஜீவனிடமிருக்கின்ற மனம், வாக்கு, பிராணன்
2. அதிபூதம்: இந்த ஜகத் – ஹிரண்யகர்ப்பனாகவும், விராட்டாகவ்வும் இருக்கும்
3. அதிதெய்வம்: பிரஜாபதி – தேவதைகளின் சேர்க்கையாக இருக்கின்ற பொருட்களை அனுபவிக்கிறோம்.
இந்த உலகம் நாம் அனுபவிக்குக் போக்யமாக இருக்கிறது, இது வாக்கு, மனம், பிராணன் என்று பிரிக்கப்படுகிறது.
பூலோகம் வாக்காகவும், புவர் லோகம் – மனமாகவும், ஸ்வலோகம் பிராணனனாகவும் உள்ளது.
வேதம் – ரிக், யஜூர், சாம இவைகளெல்லாம் பிராணனனாக கருதப்படுகிறது
மாதா, பிதா, மக்கள் இவர்களும் பிராணனனாக கருதப்படுகிறது
அறிந்ததெல்லாம் – வாக்கு,
அறியப்போவது – மனம்
அறியாதது – பிராணன்

—————–

ஸ்லோகம்-11-13

அதிதெய்வம் அன்னத்திரையம்:
தேவதைகளின் ஸ்வரூபம் பிரஜாபதி. ஜீவர்களின் கர்ம பலனாக தோன்றியவர்.
பூமி – கோளகம் – அக்னி – இந்திரியம் – வாக்கு வெளிப்படுவதற்கு;
சுவர்க்கம் – கோளகம் – ஆதித்யன் – இந்த்ரியம் – மனது;
ஜலம் – கோளகம் – சந்திரன் – இந்திரியம் – பிராணன்;

————–

ஸ்லோகம்-14

பிரஜாபதியை கால தத்துவமாக சொல்லப்படுகிறது. இவரை நாம் நம்முடைய கர்ம பலத்தால் அவரை அனுபவிக்கிறோம்.
இவரை வாக்கு, மனது, பிராண தத்துவமாக தியானிக்க வேண்டும்.

—————

ஸ்லோகம்-15

அகங்கிரஹ உபாஸனை – பிரஜாபதியை நானாக தியானிக்க வேண்டும்.

——————

ஸ்லோகம்-16

சம்சார உலகத்தில் அடையக் கூடிய சாதனையும், சாத்தியமும் விளக்கப்படுகிறது.
இந்த சம்சார வாழ்வில் அடையக்கூடிய சாத்தியம் – மனுஷ்யலோகம், பித்ருலோகம், பிரம்மலோகம்.
புத்திரனால் மனுஷ்ய லோகத்தையும், காயிக, வாக் கர்மங்களினால் பித்ரு லோகத்தையும்,
மானஸீக உபாஸனைகளால் தேவலோகத்தையும், பிரம்மலோகத்தையும் அடையலாம்.

எனவே உபாஸனைகளால் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மூன்று சாத்னைகளால் மோட்சத்தை அடையமுடியாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

—————

ஸ்லோகம்-17

கர்மத்தால் மட்டும் மோட்சத்தை அடைய முடியாது என்று இந்த ஸ்லோகம் உணர்த்துகிறது.
புத்திரன் எப்படி மனுஷ்யலோகத்தை அடைவதற்கு உதவி செய்வான்.
பொதுவாக அவரவர் கர்ம வினையை அவர்களேத்தான் அனுபவிக்க வேண்டும்.
சம்பத்தி கர்ம à அப்பா பையனுக்கு தான் செய்து கொண்டிருந்த கர்மத்தை கொடுத்துவிட வேண்டும்.
இறந்து போன தந்தைக்கு சிரார்த்தம் போன்ற கர்மத்தை செய்து, தந்தை மனிதலோகத்துக்கு பிறக்க உதவி செய்கின்றான்.
தந்தைக்கு புண்ணியம் குறைந்திருந்தால் மகன் செய்கின்ற கர்மத்தால் வரும் புண்ணியங்களால்
அவர் மீண்டும் மனித லோகத்துக்கு வந்து பிறக்க உதவி செய்யும்.
ஒரு சமயம் தந்தைக்கு தேவையில்லாமலிருந்தால் வேறொரு தந்தைக்கு செல்லலாம்.
மகனிடமிருந்து புண்ணிய தானம் பெறுவதும் அவரது கர்மவினைப்படிதான் நடக்கும்.

—————–

ஸ்லோகம்-18-20

உபாஸனையின் மூலம் பிரம்மலோகத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்பனாக இருந்து அந்த லோகத்தை அனுபவிக்கிறான்.
அவனுடைய மூன்று இந்திரியங்கள் மனம், வாக்கு, பிராணன் தேவதைகளாக மாற்றப்படுகிறது.
தெய்வீக வாக்கு – அவன் சொல்வது நடக்கும். மிகச்சிறப்பாக எல்லா நியமங்களையும் கடைப்பிடித்து செய்த உபாஸனை மூலம் இந்த நிலையை அடையலாம்.
தெய்வமனது – திவ்யமான மனம். மனமானது சில சமயம் இன்பமாக இருக்கிறது.
சில சமயம் துயரத்தையோ, பயத்தையோ கொடுக்கிறது. ஆனால் இந்த உபாஸனுக்கு இன்பத்தை கொடுக்கும் கருவியாக மட்டும் இருக்கிறது.
தெய்வ பிராணன் – உறுதியான பிராணன், உடல் நல்ல ஆரோக்யமாக இருக்கும். நோய், நொடி, வலி உபாதைகளால் பாதிக்கப்படாமல் இருக்கும்.

உபாஸனை மூலம் வாக்கு, மனம், பிராணன் இவைகளெல்லாம் கட்டுப்படுத்தப்படும், நெறிப்படுத்தப்படும், ஒழுங்குபடுத்தப்படும்.

————–
ஸ்லோகம்-21-23

பிராண ஸ்துதி, பிராண உபாஸனை : தேவலோக ப்ராப்தி. கண், காது, வாக்கு போன்ற இந்திரியங்கள்
தத்தம் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம் என்ற உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டு இருந்தது.
ஆனால் இவைகள் சோர்ந்து போய் செயலை நிறுத்தி ஓய்வெடுக்க ஆரம்பித்தது.
ஆனால் பிராணன் மட்டும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது.
எனவே இந்தப் பிராணனை தியானிப்பவர்கள் ஹிரண்யகர்ப்பனை அடைவார்கள்.

—————-

பகுதி-6 : உத்த பிராமனம் (3 மந்திரங்கள்)

ஜகத் மித்யா என்று விளக்கப்படுகிறது.
படைக்கப்பட்ட அனைத்தும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. 1. நாமம், 2.ரூபம், 3.கர்மம்.
இவை மூன்றும் ஒன்றாக இணைக்கப்படுகிறது,, அதுவே ஸரீரம், நமது உடல்.
இந்த உடல் மித்யா என்று உணர்ந்து விட்டால், நாம, ரூப, கர்மங்கள் மித்யாவாகி,
இந்த ஜகத்தும் மித்யாவாகிறது. உதாரணமாக களிமண்ணில் நாம, ரூப, கர்மங்களை ஏற்றி வைத்திருப்பதை போன்றது.

ஜகத்திற்கு ஆறு வேறு பெயர்களை சங்கரர் குறிப்பிடுகிறார்.
1. அவித்யா விஷயம்,
2. வியாக்ருத-அவ்யாக்ருத ஆத்மஹம்
3. சாதனா-சாத்தியம்
4. கிரியா-காரக பலம் – செயல், செயல்புரிவதற்கு காரணம், செயலினால் விளைந்த பலன்
5. நாம-ரூப-கர்மாத்மகம் –
6. ஸரீர ஸ்வரூபம்.
நாமம் என்பது சப்தம் அது சாமானியம், விசேஷம் என இருவகையாக உள்ளன. சாமான்ய உபாதானம், விசேஷ உபாதானம்.
“அ” என்கின்ற சாமான்ய சப்தமானது விசேஷ சப்தத்திற்கு உபாதான காரணமாக இருக்கிறது.
எனவே விசேஷ சப்தங்கள் எல்லாம் மித்யா என்று உணர வேண்டும். சாமான்ய ரூபம் – சத்தியம், விசேஷ சப்தம் – மித்யா.

ஒருவருடைய செயல் நம்மை கோபத்தையோ, துன்பத்தையோ கொடுக்கும்போது நாம் அதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல்,
அவர் ஏதோ கையை அசைத்தார், சப்தம் எழுப்பினார், காலை ஆட்டினார் என்று எடுத்துக் கொண்டால், அது நம்மைப் பாதிக்காது.
ஒருவர் நம்மைப்பார்த்து திட்டினால், பாராட்டினால் அவர் ஏதோ சப்தம் போட்டுவிட்டு செல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதல் அத்தியாயத்தின் முடிவுரை
எட்டு விதங்களில் இந்த உலகை அத்யாரோபம் செய்யப்பட்டிருக்கிறது.
1. சாதன பிரபஞ்சம் – விதவிதமான கர்மங்கள், உபாஸனைகள், சப்தான்னத்தில் முதல் நான்கு சாதனையாகின்றது.
2. சாத்ய பிரபஞ்சம் – ஒவ்வொரு உபாஸனைக்கும் சொல்லப்பட்ட கர்மப்பலன்கள்.
சப்தான்னத்தில் கூறபட்ட மனம்-மனிதலோகம், வாக்கு-பித்ருலோகம், பிராணன்-தேவலோகம்.
3. அவ்யாக்ருதம் பிரபஞ்சம் – மாயா
4. ஜீவனுடைய கர்த்ருத்வம் – ஜீவனை கர்த்தா என்று ஏற்றுக்கொள்ளுதல். ஒவ்வொரு ஜீவனும் தனக்கென்று தனி உலகத்தை படைத்துக் கொள்கிறார்கள்.
5. ஜீவனுடைய போக்த்ருத்வம் – ஜீவன் போக்தாவாகவுமிருக்கிறான். செய்த செயல்களின் விளைவை அனுபவிக்கின்றான்.
6. நாம-ரூப-கர்ம – ஸ்ருஷ்டியை இவ்விதமாக ஏற்றுக்கொள்ளுதல்
7. ஸரீரம் – ஸரீரம் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளுதல் ஆனால் உண்மையில் இதுவும் மித்யாதான்
8. சம்சாரம் – ஜீவன் போக்தாவாகவும், போக்யமாகவும் இருக்கும் நிலை.

கர்ம காண்டமும், ஞான காண்டமும் அறிவை அடைவதற்கான பிரமாணம்.
இதில் கர்மகாண்டமானது சாதனையாகவும், ஞான காண்டமாவது சாத்திய்மாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.
கர்ம காண்டத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை, மோட்சத்தை அடைய முடியாது.

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading