ஸ்ரீ திருவாசிரியம்–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை–பாசுரம் -4–

ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,
யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே.

பதவுரை

யாவகை உலகமும்–எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும்–எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா–இல்லாமலிருந்த
மேல் வரும் பெரு பாழ் காலத்து-கீழ்க் கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம்–எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அரு தனி ஒரு வித்து தான் ஆகி-பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க் கொண்டு
தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று-நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முளையைப் படைத்து
முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி-முக் கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ் வகையாலே)
மூ உலகம் வளைத்த உந்தி-மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியை யுடையவனாய்
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
கடவுள்–ஸர்வோத்தமனான ஸ்ரீமந் நாராயணனுடைய
மா முதல் அடியே–(உஜ்ஜீவனத்திற்கு) மூல காரணமான திருவடிகளையே
ஊழி ஊழி தோறு ஸர்வ காலமும்
ஓவாது–இடைவிடாமல்
வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்-‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.

(ஊழிதோறூழி)
கீழ்ப் பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று
பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோ ரதித்தார்,
பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார்,
அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு… உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று
எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள்,

அதைப் பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம்,
இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக் கொண்டிரா நின்றார்கள்.
இது மிக அழகாயிரா நின்றது
இப்படிப்பட்ட போது போக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு,
அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில்.

யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும்
எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார்.

“பன்மைப் படர் பொருளாதுமில் பாழ் நெடுங்காலத்து நன்மைப் புனல் பண்ணி
நான் முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம்
இங்கு ‘அநுஸந்திக்கத்தகும்.

சேதந வர்க்கங்களிலும் அசேதந வர்க்கங்களிலும் ஒன்றுமில்லாதபடி மஹா ப்ரளயங் கோத்த காலத்தில்,
தேவ மநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக் கிடப்பவையான
ஜீவ வஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.

தனி வித்து ஒரு தானாகி –
தான் ஒரு தனி வித்தாகி என்று அந்வயிப்பது.
வித்தாகி என்னாமல் ஒரு வித்தாகி என்னாமல் ஒரு தனி வித்தாகி என்றதனால் –
நிமித்த காரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும்
எம்பெருமான் தானே யாகிறான் என்று தெரிவிக்கப் பட்டதாயிற்று.

உலகில் குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்க வேணுமானால் மேற் சொன்ன முக்காரணங்களும் அமைய வேண்டும்,
பானைக்கு மண் உபாதான காரணமென்றும்,
சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரி காரணமென்றும்,
குயவன், காலம், அத்ருஷ்டம் முதலியன் நிமித்த காரணமென்றும் சொல்லப் படும்.

கார்ய வஸ்துக்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாக வேண்டுமாகில்
பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதான காரணம்? எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்?
என்று கேள்வி பிறக்குமே,
எம்பெருமான்றானே மூவகைக் காரணமுமாகிறானென்பது வேதாந்திகளின் கொள்கை.
இஃது இங்கு விரிப்பிற் பெருகும்.

மேல் வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீத லக்ஷணை யினாலென்க.
இங்கு வியாக்யான ஸ்ரீஸூக்கி –
“மேலென்றது பண்டென்றபடி,
வருமெறது போனவென்றபடி.

அரும் பெறல் என்றது நிர்ஹேகத்வத்தைக் காட்டும்.
இப்படிப்பட்ட விலக்ஷணமான தொரு காரண வஸ்துவானது ஸம்ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால்
தானாகவே வந்து முகங்காட்டிக் காரியம் செய்த்தென்கை. அன்றி, ஒருவகை முயற்சியால் பெற முடியாதது.

அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வராக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இரு வகைப் படும்.
எம்பெருமான் தானே ஸ்ருஷ்டிப்பது அத்வாரக ஸ்ருஷ்டியாம்,
ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வராக ஸ்ருஷ்டியாம்.
அண்ட ஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதலால் அது அத்வாரக ஸ்ருஷ்டி இவ் வருகுள்ள வற்றை
நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறானாகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரக ஸ்ருஷ்டி.

இதைச் சொல்லுகிறார் மேல்
தெய்வ நான்முகக் கொழு முளையீன்று என்று.
கப்பும் கிளையுமு காயும் கனியும் முளையினின்று உண்கிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான்
கொழு முளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி.
இப்பாலுள்ள கார்யவர்க்கங்களை யெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.

“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் என்றபடி
பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தானனாதலால்
தேவ பல நுகலி என்றும் அருளிச் செய்தார்.

ஆக, ஸத்வாரக ஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகல வஸ்துக்களுக்கும் மூல கந்தம் திருநாபி யாகையாலே
மூவுலகம் விளைத்த வுந்தி என்றார்.
இப்படிப்பட்ட திருவுந்தியை யுடைய மாயக் கடவுளுண்டு –
ஆச்சரியமான ஞான சக்திகளுடையனான ஸர்வேஸ்வரன்
அவனுடைய திருவடிகளை, ஊழி தோன்றி யோவாது வாழிய வென்று யாக தொழ விசையுங்கொல்.

அந்தத் திருவடிகளை ஸ்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப் போலே நாமும் ஆகாமல்
அவற்றுக்குப் பல்லாண்டு பாடப் பெற வேணும்.

வாழிய – வியங்கோள்வினை முற்று.

———————————————–————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading