ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–78–ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)–

அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது)

ராமா, அவன் பேச ஆரம்பித்த உடனேயே எனக்கு ஆச்சர்யம் உண்டாயிற்று. மதுரமாக பேசினான்.
கை கூப்பி நின்று பணிவாக பேசினான். அவன் சொன்னதை அப்படியே சொல்கிறேன் கேள் ப்ரும்மன்,

என் வாழ்வில் நடந்த சுக துக்கங்கள். தாங்கள் முனிவர், உங்கள் கட்டளையை மீற முடியாது என்பதால் சொல்கிறேன்.
வைதர்பகன் என்பவர் என் தந்தை. நல்ல புகழ் வாய்ந்தவர். சுதேவன் என்றும் அவரை அழைப்பர். வீர்யவான்.
இரண்டு மனைவியரிடம், இரு புத்திரர்கள் பிறந்தனர். என் பெயர் ஸ்வேதன். மற்றவன் சுரதன்.

தந்தை ஸ்வர்கம் சென்றபின், ஊர் ஜனங்கள் எனக்கு முடி சூட்டி அபிஷேகம் செய்து வைத்தனர்.
நானும் தர்மத்தை அனுசரித்து நல்ல முறையில் ராஜ்யத்தை ஆண்டு வந்தேன். பல வருஷங்கள் இனிமையாக கழிந்தன.

ராஜ்யத்தை ஆண்ட படி, பிரஜைகளின் நன் மதிப்புக்கு பாத்திரமானவனாக, நாட்கள் சென்றன.
என் காலம் முடியும் தறுவாய் வந்து விட்டதை உணர்ந்து கால தர்மத்தை அனுசரித்து வனம் சென்றேன்.

இந்த ஜன நடமாட்டமில்லாத விசாலமான வனம், இதில் இதே குளக்கரையில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினேன்.
என் சகோதரன் சுரதன் அரியணையில் அமர்ந்தான். நானே முடி சூட்டி வைத்துவிட்டுத் தான் வந்தேன்.

இந்த குளக்கரையில் பல காலம் தவம் செய்து உத்தமமான ஸ்வர்க பதவியை அடைந்தேன்.
ப்ரும்ம லோகம் போயும், பசி தாகங்கள் என்னை விடவில்லை. இதனால் பெரிதும் வருந்தினேன்.
நேராக ப்ரும்மாவிடம் சென்று வேண்டினேன்.

பகவன், இதுவோ, ப்ரும்ம லோகம். இங்கு பசி தாகங்கள், மற்ற இந்திரிய உபத்ரவங்கள் கிடையாது என்பது பிரஸித்தம்.
எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் என்ன பாவம் செய்தேன்?
என்ன காரணத்தால் இவை என்னை இன்னமும் தொடர்ந்து வந்து பாதிக்கின்றன. என் ஆகாரம் என்ன என்று நான் கேட்கவும்

அவர் சொன்னார். சுதேவன் மகனே, உனக்கு ஆகாரம் வேண்டுமா? உன் சரீர மாமிசத்தையே சாப்பிடு.
தவம் செய்யும் பொழுது உன் உடல் கொழுத்துக் கிடந்தது. விதை விளைக்காமல் எதுவும் முளைக்காது ஸ்வேதா,

நீ தவம் செய்யம் பொழுது, ஒரு யதி, தபஸ்வி, அந்த நிர்ஜனமான வனத்திற்கு வந்தார்.
சூக்ஷ்மமான திருப்தி கூட உனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பிக்ஷைக்கு வந்திருக்கிறார்.
நீ அவருக்கு உபசாரமும் செய்யவில்லை. அதிதி வந்திருக்கிறார், அதுவும் நல்ல தபஸ்வி,

நீ அவரை கண்டு கொள்ளாமல், வரவேற்று பேசாமல், தவத்தில் மூழ்கி இருப்பது போலக் காட்டிக் கொண்டாய்.
அதனால் தான் ஸ்வேதா, ஸ்வர்கம் வந்தும், உன்னை பசி தாகங்கள் வாட்டுகின்றன.
புஷ்டியான ஆகாரங்களைக் கொண்டு உன் உடலை வளர்த்தாயே, அதையே சாப்பிடு.
என்ன ருசி, என்ன திருப்தி என்று தெரிந்து கொள்.
அந்த வனத்திற்கு அகஸ்திய முனிவர் வருவார். அவர் மூலம் விமோசனம் பெறுவாய் என்றார்.

அந்த அகஸ்திய முனிவர் தான் என்னை கரையேற்ற வேண்டும். தேவ தேவனுடைய கட்டளை,
இந்த அருவருக்கத் தக்க உணவை புசித்து வருகிறேன். பல வருஷங்கள் ஓடி விட்டன.

ப்ரும்மன், இந்த என் சரீர மாமிசத்தையே உண்டு வருகிறேன். அருவருத்தாலும், வேறு வழியில்லை.
பசி என்ற உனர்வு இன்னமும் என்னை விட்ட பாடில்லை. என்னை காப்பாற்றுங்கள். கரையேற்றுங்கள்.
கும்பயோனீ எனப்படும் அகஸ்தியரை அன்றி வேறு யாராலும் என்னை காப்பாற்ற முடியாது.

இந்த ஆபரணம் என்னைக் காப்பாற்ற நான் தருவதாக இருக்கட்டும். பகவன், ஏற்றுக் கொள்ளுங்கள்.
என் மேல் தயை செய்யுங்கள். முனிவரே, என்னிடம் உள்ள அனைத்து தனம், வஸ்திரங்கள், பக்ஷ்யம் (உண்ணத் தக்கவை),
போஜ்யம் (அனுபவிக்கத்தக்கவை) தருகிறேன்.

என்னிடம் உள்ள, காம, போகங்கள் அனைத்தையும் தருகிறேன். என்னை காப்பாற்றுங்கள் என கதறினான்.
அவனை கரையேற்ற இந்த ஆபரணத்தை நான் வாங்கிக் கொண்டேன்.

நான் இதை கையில் வாங்கிக் கொண்ட உடனேயே அந்த ராஜரிஷியின் முன் ஜன்மத்து மனித உடல் மறைந்தது.
அவனும், சரீரம் மறைந்த உடனேயே திருப்தியடைந்தவனாக தேவலோகம் சென்றான்.
இந்திரனுக்கு சமமான தேஜஸைப் பெற்றான். கஷ்டம் விலகி சுகமாக இருந்தான்.
அவன் தந்த ஆபரணம் தான் இது என்று சொல்லி முடித்தார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading