1. மந்திரப் படலம்
மன்னனே! அவனியை
மகனுக்கு ஈந்து, நீ
பன்ன அருந்தவம்
புரி பருவம் ஈது’ என,
கன்ன மூலத்தினில்
கழற வந்தென,
மின் எனக் கருமை போய்
வெளுத்தது – ஓர் மயிர்.
அவனி – பூமி; கன்ன மூலம் – காதின் அடியில், காது அடியில்
தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் –
இடித்துரைத்தல்.
———-
தீங்கு இழை இராவணன்
செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் –
அவனி காவலன்
படிமம் – பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம்.
———-
எய்திய முனிவரன்
இணைகொள் தாமரை
செய்ய பூங் கழலவன்
சென்னி சேர்த்த பின்,
‘வையகத்து அரசரும்
மதி வல்லாளரும்
வெய்தினில் வருக’ என
மேயினான் அரோ.-4-1-
முனிவரன் – வசிட்டன்; செய்ய பூங்கழலவன் – தயரதன்;
மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர், இங்கே அமைச்சர்;
வெய்து – விரைவாக; அரோ- அசை.
————-
ஆளும் நல் நெறிக்கு அமைவரும்
அமைவினன் ஆகி,
நாளும் நல் தவம் புரிந்து,
நல் நளிர் மதிச் சடையோன்
தாளில் பூசையின் கங்கையைத்
தந்து, தந்தையரை
மீள்வு இல் இன் உலகு
ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள்.–66-1-
நளிர் மதிச் சடையோன் – சிவபிரான். சிவனை வழிபட்டுக்
கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு
சேர்ப்பித்தவன்பகீரதன்.
————
‘நறைக் குழற் சீதையும்
ஞால நங்கையும்,
மறுத்தும், இங்கு ஒருவற்கு
மணத்தின்பாலரோ –
கறுத்த மா மிடறுடைக்
கடவுல் கால வில்
இறுத்தவற்கு அன்றி?’ என்று
இரட்டர் கூறினார்.–76-1-
மறுத்தும் – மீட்டும் – இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்-
சிவன்; இரட்டர் – இரட்டதேயத்து அரசர்.
———-
‘ஏத்த வந்து உலகு எலாம்
ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல்,
புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக்
காத்தல் நன்று’ என,
வேத்தவை வியப்புற,
விதர்ப்பர் கூறினார்.-76-2-
பூத்தவன் – திருமால்; வேள்வியைக் காத்தவன் – விசுவாமித்திரனது
வேள்வியைக் காத்தளித்த இராமன்.
——-
பெருமையால் உலகினைப்
பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஒம்புதற்கு
உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில்
தக்கது; ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது’ எனக்
கலிங்கர் கூறினார்.–76-3-
‘தருமமே தாங்கல்’ என்பது இராமனை நினைத்துக் கூறியதாம்.
———
கேடு அகல் படியினைக்
கெடுத்து, கேட இலாத்
தாடகை வலிக்கு ஒரு
சரம் அன்று ஏவிய
ஆடக வில்லிக்கே
ஆக, பார்!’ எனாத்
தோடு அவிழ் மலர் முடித்
துருக்கர் சொல்லினார்.–76-4-
படி – பூமி; ஆடக வில்லி – பொன் வில்லை உடைய இராமன்;
ஆடகம்- பொன் வகைகளுள் ஒன்று. ஆடகம், சாம்பூநதம், கிளிச் சிறை,
சாதரூபம் என்பவை பொன்னின்நான்கு வகைகள். இவற்றைச் செம்பொன்,
கரும்பொன், பசும்பொன், வெண்பொன்என்பர்.
———–
‘கற்ற நான்மறையவர்
கண்ணை, மன்னுயிர்
பெற்ற தாய் என அருள்
பிறக்கும் வாரியை,
உற்றதேல் உலகினில்
உறுதி யாது?’ என,
கொற்றவேல் கனை கழல்
குருக்கள் கூறினார்.–76-5-
வாரி – கடல்; கனை – செருக்கிய; குருக்கள் – குரு
தேசத்தவர்கள்.
——–
வாய் நனி புரந்த மா
மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை,
தரும வேலினாய்,!
நீ நனி புரத்தலின்
நெடிது காலம் நின்
சேய் நநி புரக்க!’ எனத்
தெலுங்கர் கூறினார்.–76-6-
வாய்- இடம்; முறைத்தாய்- முறைப்படி; நின் சேய்- இராமன்.
———
‘வையமும் வானமும்
மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப; திகழும்
யாண்டு எலாம்,
நெய் தவழ் வேலினாய்!
நிற்கும் வாசகம்;
செய் தவம் பெரிது!; எனச்
சேரர் கூறினார்.–76-7-
நிற்கும் வாசகம் – புகழ்.
———
பேர் இசை பெற்றனை;
பெறாதது என், இனி?
சீரியது எண்ணினை;
செப்புகின்றது என்?
ஆரிய! நம் குடிக்கு
அதிப! நீயும் ஓர்
சூரியன் ஆம்’ எனச்
சோழர் சொல்லினார்.-76-8-
ஆரிய – தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர்
சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார்.
———
ஒன்றிய உவகையர்;
ஒருங்கு சிந்தையர்,
தென் தமிழ் சேண் உற
வளர்த்த தென்னரும்,
‘என்றும் நின் புகழொடு
தருமம் ஏமுற,
நின்றது நிலை’ என
நினைந்து கூறினார்.–76-9-
தென்னர்- பாண்டியர்; ஏமுற- ஏமம்; உற- பாதுகாப்பு அடைய.
———-
‘வாள் தொழில் உழவ! நீ
உலகை வைகலும்
ஊட்டினை அருள் அமுது;
உரிமை மைந்தனைப்
பூட்டினை ஆதலின்,
பொரு இல் நல் நெறி
காட்டினை; நன்று’ எனக்
கங்கர் கூறினார்.–76-10-
வாள் தொழில் உழவ! – தயரதனை நோக்கிய விளி. “வில்லேர்
உழவர்” என்பது போல.
——–
‘தொழு கழல் வேந்த! நின்
தொல் குலத்துளோர்
முழு முதல் இழித்தகை
முறைமை ஆக்கி, ஈண்டு
எழு முகில் வண்ணனுக்கு
அளித்த இச் செல்வம்
விழுமிது, பெரிது!’ என
மிலேச்சர் கூறினார்.–76-11-
முகில் வண்ணன் – இராமன்; இச்செல்வம் – அரசுச் செல்வம்.
———-
‘கொங்கு அலர் நறு விரைக்
கோதை மோலியாய்!
சங்க நீர் உலகத்துள்,
தவத்தின் தன்மையால்,
அங்கணன் அரசு
செய்தருளும் ஆயிடின்’-
சிங்களர் – ‘இங்கு இதில்
சிறந்தது இல்’ என்றார்.-76-12-
கோதை – மாலை; மோலி – மௌலி, அதாவது மகுடம்;
அங்கணன்-அருள் கண்ணையுடைய இராமன்.
———
ஆதியின் மனுவும் நின்
அரிய மைந்தற்குப்
பாதியும் ஆகிலன்;
பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவப் பயன்
விளைந்ததாம்’ என,
சேதியர் சிந்தனை
தெரியச் செப்பினார்.–76-13-
ஆதியின் மனு – வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் – சேதி நாட்டவர்.
———–
அளம் படு குரை கடல்
அகழி ஏழுடை
வளம் படு நெடு நில
மன்னர் மன்னனே!
உளம் படிந்து உயிர் எலாம்
உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது!’ என
விராடர் கூறினார்.–76-14-
அளம் – வயல், உப்பளம் என்பது போல.
———-
பொன்னும், மா மணியும்.
புனை சாந்தமும்,
கன்னி மாரொடும்
காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும்
ஈந்தனள், அந்தணர்க்கு,
அன்னமும் தளிர்
ஆடையும் நல்கினான்.–9-1-
அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை.
—————
நல்கி, நாயகன்
நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி,
வணங்கி, புரை இலா
மல்லல் மாளிகைக்
கோயில் வலங்கொளா,
தொல்லை நோன்புகள்
யாவும் தொடங்கினாள்.-9-2-
புரை – குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி
இல்லாத எனஉரைக்க. நோன்பு – விரதம்.
————
கடி கமழ் தாரினான்,
கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
மொழிமின்’ என்றனன்.–9-3-
கணித மாக்கள் – சோதிடர்; வடி மழுவாளவன் – பரசு ராமன்.
——–
3. கைகேயி சூழ்வினைப் படலம்-
வந்து மன் நகரில் தம்தம்
வகைப்படும் உருவம் மாற்றி,
சுந்தரத் தடந்தோள் மாந்தர்
தொல் உருச் சுமந்து தோன்றாது,
அந்தரத்து அமரர், சித்தர்,
அரம்பையர், ஆதி ஆக
இந்திரை கொழுநற் போற்றி
இரைத்துமே எய்தி நின்றார்–75-1
மன் நகர் – அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர்
முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார்
என்பதாம்; இந்திரை – திருமகள். 75-1
——
4. நகர் நீங்கு படலம்-
விழுந்து பார்மிசை,
வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,
எழுந்து, ‘என் நாயகனே!
துயர் ஏது எனாத்
தெளிந்திலேன்; இது
செப்புதி நீ’ எனா,
அழுந்தினாள்; பின்னர்
அரற்றத் தொடங்கினாள்.-29-1-
வெய்து உயிர்த்து – வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்;
அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள்.
————
அன்னாள் இன்ன பன்னி
அழியத் துயரால், மன்னர்
மன்னானவனும் இடரின்
மயங்கி, ‘மைந்தா! மைந்தா!
முன்னே வனம் ஏகிடல் நீ
முறையோ? முதல்வா! முறையோ?
என்னே, யான் செய் குறைதான்?’
என்றே இரங்கி மொழிவான்;–53-1-
பன்னி – பலமுறை சொல்லி; மன்னர் மன் ஆனவனும் – தயரதனும்.
———-
உணர்வு ஏதும் இலாள் உரையால்
உரை சால் குமரன் நெடு நாள்
புணரான் நிலம்; மா வனமே
போவானேயாம்; என்னில்,
இணரே பொலி தார் நிருபா;
இடரால் அயர்வாய்; இதுவும்
துணையோ? – துணைவா!’ என்றாள்;
‘துயரேல் ! துயரேல்!’ என்றாள்.–53-2-
குமரன் – இராமன்; இணர் – பூங்கொத்து.
———-
சேல் ஆகிய மா முதல்வன்
திரு உந்தியின் நீள் மலரின்-
மேல் ஆகிய நான்முகனால்,
வேதங்களின் மா முறையின்-
பால் ஆகிய யோனிகளின்
பல ஆம் வருணம் தருவான்,
நால் ஆகியது ஆம் வருணம்தனின்,
முன் எமை நல்கினனால்.–76-1-
சேல் ஆகிய மா முதல்வன் – மீனாக அவதாரம் செய்த திருமால்;
முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில்.
———–
‘ “அந் நான்மறையோன் வழியில்,
அருள் காசிபன் நல் மைந்தன்,
மின் ஆர் புரி நூல் மார்பன்,
விருந்தேசனன் மெய்ப் புதல்வன்,
நல் நான்மறை நூல் தெரியும்
நாவான் சலபோசன் எனச்
சொன்னான் முனிவன் தரு
சுரோசனன் யான்” என்றான்.–76-2-
பிரமன் – காசிபன், விருத்தேசனன், சலபோசன், சுரோசனன் எனக்
குல முறைக்காண்க.
———
தாவாத அருந்தவர் சொல்
தவறாததானால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா
மகவு உண்டு’ என்றே
ஓவாதவர் முன் நின்றறேன்;
ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள்பொன்றி,
பொன் – நாடு அதனின் புக்கார்.’–86-1-
தவறாது அதனால் – எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது –
ஒன்றும் பேசாது.
———
இம் மா மொழி தந்து அரசன்
இடர் உற்றிடுபோழ்தினில், அச்
செம் மா மயில் கோசலையும்,
திகையா, உணர்வு ஓவினளால்;
மெய்ம்மாண் நெறியும், விதியின்
விளைவும், தளர்வின்றி உணரும்
அம்மா தவனும் விரைவோடு
அவலம் தரு நெஞ்சினனாய்.–87-1-
ஓவினள் – ஒழிந்தாள்; மாதவன் – வசிட்டன்
——
என்று என்று சீற்றத்து
இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின்
பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம்
மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான்
மருமான் இவை கூறலுற்றான்;–127-1-
மருமான் – பரம்பரையில் வந்தவன். இராமன்.
———–
ஆய் தந்த மென் சீரை அணிந்து
அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினள்,
சேய் அரிக் கண்கள் தேம்ப,
வேண் தந்த மென் தோளி தன்
மென் முலை பால் உகுப்ப –
தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி
தழைத்தி!’ என்றாள்.–147-1-
ஆய் – தாய், கைகேயி; தாய் – சுமித்திரை.
—————
‘வானமே அனையது ஓர்
கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன்,
உலகம், யாவையும்,
கானமே புகும்எனின்,
காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?’
என்றார் சிலர்.–191-1-
ஊனம் வேறு இலான் – இராமன். இராமனுடன் அனைவரும் காடு
சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது
மக்கள் கூற்று,.
———–
போயினான் நகர்
நீங்கி – பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி,
துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி,
உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி,
அளித்தருள் ஆதியான்.–234-1-
பேரொளி ஆகி, மும்மூர்த்திகள் ஆகிய பிரமன், திருமால், சிவன்
ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி – உயிர்களுக்குத் தாயும் ஆகி
உள்ள இராமன்.
———–
5. தைலம் ஆட்டு படலம்-
தொடுத்த கலிடைச் சிலர்
துவண்டனர், துயின்றார்;
அடுத்த அடையில் சிலர்
அழிந்தனர் அயர்ந்தார்;
உடுத்த துகில் சுற்று
ஒரு தலைச் சிலர் உறைத்தார்;
படுத்த தளிரில் சிலர்
பசைந்தனர் அசைந்தார்.–16-1-
கல் இடை – கல்லிடத்து; அடை – இலை; பசைந்தனர் – அன்பு
கொண்டவராய்.
———
ஒரு திறத்து உயிர் எலாம்
புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை
இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத்
தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன்
போய பின்னரே.–46-1-
இரு திறத்து உள வினை – நல்வினை, தீவினை.
———-
துந்துமி முழங்க, தேவர்
தூய் மலர் பொழிந்த வாழ்த்த,
சந்திர வதனத்து ஏயும்
அரம்பையர் தழுவ, தங்கள்
முந்து தொல் குலத்துளோரும்
முக்கணான் கணமும் சூழ,
அந்தரத்து அரசன் சென்றான்,
ஆன தேர்ப் பாகன் சொல்லால்.–59-1-
அரசன் – தயரதன்.
———
6. கங்கைப் படலம்-
அன்ன காரணத்து
ஐயனும், ஆங்கு அவர்
உன்னு பூசனை
யாவும் உவந்தபின்,
மின்னு செஞ் சடை
மெய்த் தவர் வேண்டிட,
பன்ன சாலையின்
பாடு இருந்தான் அரோ.–27-1-
பன்ன சாலை – தவத்தோர் தங்கும் குடில்; பர்ண சாலை – பன்ன
சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை.
———–
7. குகப் படலம்
நின்றான் நெஞ்சில்
நிரம்புறும் அன்பால்,
இன்றே நின் பணி
செய்திட, இறைவா!
நன்றே வந்தனென்;
நாய் அடியேன் யான்’
எயினரின் இறையோன்.–10-1-
எயினர்- வேடர்; இறைவா- இராமனே;கூவினன்- அழைத்தான்.
——–
வெயில் விரி கனகக் குன்றத்து
எழில் கெட விலகு சோதிக்
கயில் விரி வயிரப் பைம் பூண்
கடுந் திறல் மடங்கல் அன்னான்
துணில் எனும் அணங்கு வந்து
தோன்றலும், அவளை, ‘நாமே
எயிலுடை அயோத்தி மூதூர்
எய்து நாள் எய்துக!’ என்றான்.–22-1-
கனகக் குன்றத்து….சோதி என்றது இலக்குவன் திருமேனியை; கயில்-
மூட்டு; மடங்கல் – சிங்கம். சிங்கம் அன்னான் இலக்குவன். தூக்கம் என்னும்
மகள்அங்கே வந்தாள். அவளை நாம் அயோத்திக்கு வருகின்ற நாளில்
எம்பால் வருக என்றான்இலக்குவன்; பதினான்கு ஆண்டுகளும் உறங்காமல்
இருந்தான் ஆதலின் ‘உறங்காவில்லி’ என்பது அவனுக்கு ஒரு பெயர்.
———-
மறக் கண் வாள் இளைய வீரன்
ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும், அண்ணல்
உபய பங்கயங்கள் போற்றி,
‘துறக்கமாம், என்னல் ஆய
தூய மதில் அயோத்தி எய்தி
இறுக்கும்நாள், எந்தை பாதம்
எய்துவல்’ என்னப் போனாள்.–22-2-
உபய பங்கயம் – இரண்டாகிய தாமரை – இங்கே திருவடிக்கு
உருவகம். துயில் மடந்தைஇலக்குவனைத் தீண்டாது சென்றாளாம்.
——–
மற்றவள் இறைஞ்சி ஏக,
மா மலர்த் தவிசின் நீங்காப்
பொற்றொடி யோடும் ஐயன்
துயில்தரும் புன்மை நோக்கி,
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி,
இரு கண் நீர் அருவி சோர,
உற்ற ஓவியம்அது என்ன,
ஒரு சிலை அதனின் நின்றான்.–22-3-
ஒரு சிலை – ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை
ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின்.
———
9. சித்திரகூடப் படலம்-
நெய் கொள் நீர் உண்டு,
நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த
வை கொள் வேல் எனக்
காலனும் மறுகுறும் கண்ணாய்!
மெய்கள் நோகின்ற பிடிகளை
விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின
நிற்பன காணாய்!’–36-1-
மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு
கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம்.
———-
விடம் கொள் நோக்கி! நின்
இடையின் மின் என வெருவி,
படம் கொள் நாகங்கள் முழை
புகப் பதைப்பன பாராய்!
மடங்கள் ஆளிகன் எனக்
கொடு மழைஇனம் முழங்க,
கடம் கொள் கார் மதக்
மைம்மலை இரிவன காணாய்!–36-2-
மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி,
மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள்
ஓடுகின்றன.
——–
எய்த இன்னல் வந்த போது
யாவரேனம் யாவையும்
செய்ய வல்லர் என்று கொள்க;
சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம்
வல்ல ஆய; எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை
கட்ட வல்ல ஆயவே.’–50-1-
‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக
நீதி இங்குக்கூறப்படுகிறது.
———-
‘தினைத் துணை வயிறு
அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை
வருத்தி வாழ்வன;
அனைத்து உள உயிர்களும்
யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார்
இல்லை. மன்னனே!’–55-1-
எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று
வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி.
————
10. பள்ளிபடைப் படலம்
ஆய காதல்
தனையனைத் தந்த அத்
தூய தையல்
தொழிலுறுவார், ‘உனைக்
கூயள் அன்னை’ என்றே
சென்று கூறலும்,
ஏய அன்பினன்தானும்,
சென்று எய்தினான்.–41-1-
தொழில் உறுவார் – ஏவல் மகளிர்; அன்பினன் – இராமன்.
————-
தீ அன கொடியவள்
செய்த செய்கையை
நாயினேன் உணரின், நல்
நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து
உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி
அதனின் வீழ்க, யான்’–116-1-
தோம் – குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும்
நரககதியில் நான் செல்வேனாக.
———
உந்து பொன்
தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந்
தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித்
தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று,
அழுது மாழ்கினார்.–125-1-
தேர் வலான் – சுமந்திரன்; மாழ்கினார் – மயங்கினார்,
————–
என்று கொண்டு மா
தவன் இயம்பலும்,-
நின்று நின்று தான்
நெடிது உயிர்த்தனன்;
‘நன்று, நன்று!’ எனா
நகை முகிழ்த்தனன்;-
குன்று குன்றுறக்
குலவு தோளினான்.–131-1-
மா தவன் – வசிட்டன்; முகிழ்த்தல் – மொக்குவிட்டு மலர்தல்,
அங்குச் சிரித்தான் என்பது பொருள்; தோளினான் – பரதன்.
———
அன்னதாக, அங்கு,
ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம்
தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-
சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள்
எரிமீது வீழவே.–136-1-
அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர்.
————
11. கங்கை காண் படலம்
வந்து எதிரே விழுந்தவனும்
வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள்
புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ
எங்கு எழுந்தாய் – இமையோர்தம்
சிந்தையினும் சென்னியினும்
வீற்றிருக்கும் சீர்த்தியாய்!– 32-1-
2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல்.
———
ஏறினர் இளவலோடு,
இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும்
உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி
நீங்கி, பெட்போடும்
கூறு தென் கரையிடைக்
குழீஇய போதிலே.–63-1-
பேறு உள பெருநதி – புண்ணியப் பயன் உடைய கங்கை.
————
தன் அன தம்பியும்,
தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும்,
தூய தோழனும்,
துன்னினர் ஏறலும்,
துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால்
நடத்தல் மேயினான்.–63-2-
தம்பி – சத்துருக்கனன்; தேர் வலவன் – சுமந்திரன்; தோழன் –
குகன்; துழா துடுப்பு – துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும்
என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா
என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு – மட்டை
ஆகும்.
———-
அன்ன காதல்
அருந் தவர், ‘ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார்
உளர், நீ அலால்?’
என்ன வாழ்த்திடும்
ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில்
போய் மறைந்திட்டதே.–5-1-
ஏல்வை – பொழுது.
————-
இன்ன ஆய
எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும்,
மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு
எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு
ஏகிய சொல்லுவாம்.–19-1-
ஆண்தகை துன்னு – இராமன் தங்கியுள்ள.
—————–
ஐய! நின்னுடைய
அன்னை மூவரும்,
வைய மன்னரும்,
மற்றும் மாக்களும்.
துய்ய நாடு ஒரீஇத்
தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள்
உதவுவாய்’ என்றான்.–89-1-
ஒரீஇ – நீங்கி.
————-
கங்குல் வந்திடக்
கண்டு, யாவரும்
அங்கணே துயில்
அமைய, ஆர் இருள்
பொங்கு வெம் பகை,
போக, மற்றை நாள்,
செங் கதிர் குண
திசையில் தோன்றினான்.–94-1-
அங்கணே – அவ்விடத்தே.
———–
‘வானின் நுந்தை சொல்
மரபினால் உடைத்
தானம் நின்னது என்று
இயைந்த தன்மையால்,
ஊனினில் பிறந்து
உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன்’ என,
அவன் சொல்வான்.–111-1-
2485 ஆம் பாடலின் மாற்றுவரும் இது. இராமன் கூறும் பாட்டைத்
திருப்பிப் பரதன் கூற்றாகமாற்றியதாகும். தயரதன் சபையில் கூறிய
சொல்லால் அரசு நின்னதாயிற்று; ஊனினில் பிறந்து- தயரதனிடத்தில்
பிறந்து; நீ உரிமையாகையின் – நீ மூத்தவனாய் உரிமைபெற்றபடியால்.
யான் அது ஆள்கிலேன் என்றான் பரதன் என்க. இதை இராமன்
கூற்றாகவும்உரைக்கலாம்.
——————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply