ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/ 12- கங்கை காண் படலம்–

பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.–1-

பூவிரி – பூத் தொழிலாற் சிறப்புற்ற; பொலன்கழல் – பொன்னாற்
செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த; பொருஇல் தானையான் – ஒப்பற்ற
சேனையை உடையபரதன்; காவிரி நாடு அன்ன – காவிரி நதியால்
வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த;
கழனி நாடு ஒரீஇ- வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு
நீங்கி; தாவர சங்கமம் என்னும் தன்மையயாவையும் – நிலைத்திணை;
இயங்கு திணை என இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்;
இரங்கிட – (தன் நிலை கண்டு) வருந்த; கங்கை எய்தினான் -கங்கைக்
கரையை அடைந்தான்.

——–

எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே.–2-

கண் அகன் – இடம் அகன்ற; பெரும் புனல் – மிக்க நீரை உடைய;
கங்கை – கங்கையாறு; அண்ணல் – பெருமையுடைய; வெங்கரி – கொடிய
யானைகளின்; மதத்து அருவி – மத நீர்ப் பெருக்காகிய அருவி; எங்கணும்
பாய்தலால் – எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; எண்ண அரும்
சுரும்பு தம் இனத்துக்கல்லது – கணக்கிட முடியாத வண்டுக்
கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); உண்ணவும் – குடிக்கவும்;
குடையவும் – குளித்து மூழ்கவும்; உரித்தன்று ஆயது –
உரிமையுடையதல்லாததாக ஆயிற்று.

———–

அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே.–3-

அடிமிசைத் தூளி புக்கு – (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்து; அடைந்த தேவர்தம் – அங்கே உள்ள
தேவர்களது; முடி உற- தலைமீது படும்படி; பரந்தது – (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் – ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் – பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் – (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் – மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

———–

பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையை மடுத்தது, அக் கங்கை வெள்ளமே.–4-

அக் கங்கை வெள்ளம் – அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு – பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் – தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று இல்லை – சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய; மன்னன் சேனை ஆம்
வேலையே – பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது – உண்டு விட்டது.

———

கான்தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன –
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே.–5-

கான் தலை நண்ணிய – காட்டிடத்திற் சென்ற; காளை பின்படர் –
இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற; தோன்றலை – இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; தோன்றலை – பரதனை; அவ்வழி –
அந்த வழியிலே; தொடர்ந்து சென்றன – பின்பற்றிச் சென்ற சேனைகள்;
முற்றும் -; ஆன்றவர் உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு
உணர்த்தப்பெற்ற; மூன்று பத்து ஆயிரத்து இரட்டி -அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் – அக் குரோணிகள் ஆகும்.

அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க-அகௌஹிணீ என்னும் வடிசொற் சிதைவு என்பர்

———-

அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
‘துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?’ என்று, எடுத்த சீற்றத்தான்.–6-

அப்படை – அந்தச் சேனை; கங்கையை அடைந்த ஆயிடை –
கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) ‘குகன் எனப்
பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இப்படை எடுத்தது – இந்தச் சேனை
புறப்பட்டது; துப்பு உடைக் கடலின் நீர் சுமந்தமேகத்தை – பவளம்
உடைய கடலிலிருந்து நீரை முகந்து சூல் கொண்ட கரு மேகத்தை; ஒப்பு
உடை அண்ணலோடு – உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய
இராமபிரானோடு; உடற்றவேகொல் – பேர் செய்வதற்காகவேயோ;
என்று – எனக் கருதி; எடுத்தசீற்றத்தான்- மேல் எழுந்த கோபம் உடையவனாய் தென்கரை வந்து
தோன்றினான்

இதுமுதல் ஆறு பாடல்கள்
தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப்
பதினொராம்பாடலில் முடியும்.

———

குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் –
நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில்
புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான்.–7-

குகன் எனப் பெயரிய – குகன் என்ற பெயரை உடைய; கூற்றின்
ஆற்றலான் – யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்;
தொகை முரண் சேனையை – கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்)
சேனையை; துகளின் நோக்குவான் – ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்;
நகை மிக – (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்கள் தீ நாற –
கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; நாசியில் புகை உற – (உள்ளே
எரியும் கோபநெருப்பால்) மூக்கிலிருந்து புகை வெறிவர; குனிப்புறும் –
(கோபத்தால்) மேலேறிவளைந்த; புருவப் போர்விலான் – புருவமாகிய
போர்க்குரிய வில்லை உடையனானான்.

———-

மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ – ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான்.–8-

மை உற – தீமை உண்டாக; இறுதி உயிர் எலாம் வாங்குவான் –
இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின்
உடலிலிருந்து) வாங்குகின்ற; கை உறுகவர் அயில் பிடித்த காலன்
தான்- கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே;
ஐ – அழகிய; ஐ நூறாயிரம் உருவம் ஆயின – ஐந்து இலட்சம் வடிவம்
எடுத்தாற் போன்ற; உறு மெய் தானையான் – வலிய உடம்புடைய
சேனையை உடையவன்; வில்லின் கல்வியான் – வில்வித்தையில்
தேர்ந்தவன்.

——-

கட்டிய கரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
‘கிட்டியது அமர்’ எனக் கிளரும் தோளினான்.–9-

கட்டிய – (இடைக்கச்சில்) கட்டப்பெற்றுள்ள; கரிகையன் –
உடையவாளை உடையவன்; கடித்த வாயினன் – (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; வெட்டிய மொழியினன்- கடுமையாகப் பேசும்
சொற்களை உடையவன்; விழிக்கும் தீயினன்- (கண்கள்) விழித்துப்
பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; கொட்டிய துடியினன் –
அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்; குறிக்கும் கொம்பினன் –
(போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘அமர்
கிட்டியது’ – ‘போர் அருகில்வந்துவிட்டது;’ எனக் கிளரும் தோளினான்-
என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன் (ஆகி..)
(வரும் பாடலில் முடியும்).

———-

‘எலி எலாம் இப் படை; அரவம், யான்’ என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் –
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.-10-

‘இப்படை எலாம் எலி – இந்தச் (பரதன்) சேனை முழுவதும்
எலிகளாகும்; யான்அரவம் – யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும்
பாம்பாவேன்;’ என – என்று வீரவார்த்தை பேசி; வலி உலாம் – வலிமை
நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி
எலாம் – வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரு வழிப் புகுந்த
போல- ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; ஒலி
உலாம் சேனையை- (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை;
உவந்து கூவினான் – மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.(ஆகி).

——–

மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் –
ஒருங்கு அடைநெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங் கடையுகம்தனில், அசனி மா மழை
கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே,–11-

ஒருங்கு அடை நெடும் படை – ஒன்று சேர்ந்து வந்த பெரிய
(வேட்டுவச்) சேனை; அருங் கடை உகம்தனில் – அரிய கடையூழிக்
கூாலத்தில்; அசனி மா மழை – இடியோடுகூடிய மேகமும்; கருங்கடல் –
கரிய கடலும்; கிளர்ந்து என – (ஒலித்து) மிக்குஎழுந்தார் போல;
கலந்து சூழ – ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; மருங்கு அடை-
பக்கத்தில் உள்ள; தென்கரை – (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து
தோன்றினான் – (குகன் என முடிக்க)

———–

தோன்றிய புளிஞரை நோக்கி, ‘சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம்’ என்றான்.–12-

(தென்கரை வந்து சேர்ந்த குகன்) தோன்றிய புளிஞரை நோக்கி –
(தென்கரையில்தன்னால் அழைக்கப்பட்டுத் தன்முன் வந்து) தோன்றிய
வேடர்களைப் பார்த்து; ‘ஆன்ற பேர்அரசு – நிரம்பிய பெரிய
அரசாட்சியை; என் உயிர்த் துணைவற்கு – என் உயிர்போலச் சிறந்த
தோழனாகிய இராமனுக்கு; ஈகுவான் – தருவதற்காக; சூழ்ச்சியின்ஊன்றிய
சேனையை – (அதனை அவன் பெறாமல் தடுக்கும்) ஆலோசனையோடு
எதிரில் (வடகரையில்)கால் ஊன்றி நிற்கும் (இப்பரதனது) சேனையை;
உம்பர் ஏற்றுதற்கு – (போரில்தொலைத்து) வீரசுவர்க்கத்தே செல்ல
விடுதற்கு; ஏன்றனென் – தொடங்கியுள்ளேன்; நீர் அமைதி ஆம்’ –
நீங்களும் இதற்கு உடன்படுவீர்களாக; என்றான் – என்றுசொன்னான்.

———

துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற
ஓடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி, பட’ எனா, பெயர்த்தும் கூறுவான்.–13-

‘துடி எறி – போர்ப் பறைகளை அடியுங்கள்; நெறிகளும் துறையும்-
வருவதற்குரிய வழிகளையும் (தென்கரையில்) ஏறுதற்குரிய துறைகளையும்;
ஓடியெறி – அழித்துநீக்கி, இல்லாமல் செய்யுங்கள்; அம்பிகள் யாதும்
ஒட்டலிர் – தோணிகளுள்ஒன்றையும் (கங்கையில்) ஓட்டாதீர்கள்; கடி எறி
கங்கையின் – விரைந்து அலைவீசிவருகின்ற கங்கையாற்றின்; கரை
வந்தோர்களை – தென்கரைக்கு (தரமாக முயன்று)வந்தவர்களை; பிடி –
பிடியுங்கள்; பட எறி’ – இறக்கும்படி அழியுங்கள்; எனா – என்று (குகன்)
கூறி; பெயர்த்தும் -மேலும்; கூறுவான் – சில வீரவார்த்தைகளையும் சொல்லுவான் ஆனான்.

———-

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
என்று, எனை ஓதாரோ?–14-

‘என் ஆருயிர் நாயகன் – என் அரிய உயிர்த் துணைவனாகிய;
அஞ்சனவண்ணன்- மை போலும் கரிய நிறமான திருமேனி அழகனாகிய
இராமபிரான்; அரசு ஆளாமே – ஆட்சிஉரிமை எய்தாதபடி;
வஞ்சனையால் – சூழ்ச்சியால்; எய்திய -(அவ்வரசாட்சியைக் கைப்பற்றி)
அடைந்த; மன்னரும் – அரசரும் (பரதரும்); வந்தாரே – (இதோ
என்னருகில்) வந்துள்ளார்கள் அன்றோ!; தீ உமிழ்கின்றனசெஞ்சரம் –
நெருப்பைக் கக்குகின்றனவான (என்) சிவந்த அம்புகள்; செல்லாவோ –
(இவர்கள் மேற்) செல்லாமல் போய்விடுமோ?-; இவர் உஞ்சு போய்விடின்-
இவர்கள்(என் அம்புக்குத் தப்பிப்) பிழைத்து (இராமன் இருக்கும்
இடத்துக்குப்) போய்விட்டால்; ‘நாய்க்குகன்’ என்று – (உலகோர்) குகன்
றாய் போன்ற கீழ்த்தன்மை உடையவன் என்று; எனை – என்னைப் பற்றி;
ஓதாரோ’ – சொல்லாமல் இருப்பார்களா? (தொடரும்)

———

‘ஆழ நெடுந் திரை ஆறு கடந்து
இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு
விலங்கிடும் வில்லாளோ?
‘‘‘தோழமை” என்று, அவர்
சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
ஏழைமை வேடன் இறந்திலன்” என்று
எனை ஏசாரோ?–15-

‘இவர் -; ஆழம் – ஆழத்தையும்; நெடுந் திரை – நீண்ட பெரிய
அலைகளையும் உடைய; ஆறு – கங்கையாற்றை; கடந்து – தாண்டி;
போவாரோ- அப்பால் ( தென்கரைப் பகுதிக்குச் ) செல்வார்களா?
(மாட்டார்); வேழ நெடும்படை- யானைகளை உடைய நீண்ட பெரிய
சேனையை; கண்டு – பார்த்து (பயந்து); விலங்கிடும்- புறமுதுகு காட்டி
விலகிச் செல்லுகின்ற; வில் ஆளோ – வில் வீரனோ (நான்); ‘தோழமை’
என்று- (உனக்கும் எனக்கும்) நட்பு என்பதாக; அவர் சொல்லிய சொல்-
அந்த இராமபிரான் சொல்லிய வார்த்தை; ஒரு சொல் அன்றோ –
(காப்பாற்ற,மதிக்கப்பட வேண்டிய) ஒப்பற்ற வார்த்தை அல்லவா?
(அந்நட்புக்கு மாறாக இவர்களைப்போகவிட்டால்); ஏழைமை வேடன் –
அற்பனாகிய இந்த வேடன்; இறந்திலன் -(இவ்வாறு இராமனோடு நட்புச்
செய்து, இப்பொழுது சேனைக்குப் பயந்து இராமனை எதிர்க்கும்பரதனோடு
நட்பாய் மானங்கெட்டு வாழ்தலைவிட) இறக்கலாமே, அது தானும்
செய்தானிலனே; என்றுஎனை ஏசாரோ – என்றிவ்வாறு உலகத்தார்
என்னைப் பழியாமல் விடுவார்களா – (பழிப்பர்)(தொடரும்)

ஏழை ஏதலன் கீழ்மகன்
என்னாது…..தோழன் நீ எனக்கு” (திவ்யப். 1418) என ஆழ்வார் கூறியதும்
இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. “ஏழை வேடனுக்கு, ‘எம்பி நின் தம்பி, நீ
தோழன்; மங்கை கொழுந்தி எனச் சொன்ன, வாழி நண்பு” (5091) என்று
இவரே பிற்கூறியது கொண்டும் அறியலாம்.

——–

“முன்னவன்” என்று நினைந்திலன்;
‘மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன்” என்றிலன்;
அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது?
இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில்,
வேடர் விடும் சரம் வாயாவோ?–16-

‘இவன் – இப் பரதன்; “முன்னவன்” என்று நினைந்திலன் –
(இராமபிரானைக்குறித்து) தன் அண்ணன் என்று நினைந்தானில்லை;
“மொய் புலி அன்னான் ஓர் பின்னவன்நின்றனன்” – வலிமை
நெருங்கிய புலியை ஒத்த இளவலாகிய இலக்குவன் இராமனுக்குத் துணையாக
உடன் உள்ளான்; என்றிலன் – என்று கருதினானும் இல்லை; அன்னவை
பேசானேல் -அந்த (இராம இலக்குவர்களாகிய) இரண்டையும் பற்றி
நினைக்காமல் விட்டாலும்; என்னைஇகழ்ந்தது என் – (இடையே கங்கைக்
கரை யுடைய) என்னையும் (ஒரு பொருளாக மதியாமல்)இகழ்ந்தது என
கருதி?; இவ் எல்லை கடந்து அன்றோ – (இவன் இராமன்பால்
போர்செய்வது)இந்த எனது எல்லையைக் கடந்து சென்றால் அல்லவா?;
வேடர் விடும் சரம் – வேடர்கள்விடுகின்ற அம்புகள்; மன்னவர்
நெஞ்சினில் – அரசர்கள் மார்பில்; வாயாவோ’ -தைத்து உள் நுழைய
மாட்டாவோ?

——–

பாவமும் நின்ற பெரும் பழியும்,
பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண்
உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர்
உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும ஆர் உயிரும்
கொடு போய் அன்றோ?–17-

மண் உலகு ஆள்பவர் – (இப்) பூவுலகத்தை ஆள்கின்ற அரசர்கள்;
பாவமும் -(தாம் ஒரு செயலைச் செய்கிறபோது அதனால் விளையும்)
பாவத்தையும்; நின்ற பெரும் பழியும்- (செயல்முடிந்த பிறகு அதனால்)
தம்மேல் நின்ற பெரும் பழியையும்; பகை நண்போடும்-பகைவர் இன்னார்,
நண்பர்கள் இன்னார் என்பவற்றையும்; ஏவமும் – விளையும்குற்றங்களையும்;
என்பவை – என்று இதுபோலச் சொல்லப்படுபவைகளையும்; எண்ணாரோ-
நினைக்கமாட்டார்களோ?; ஆவது போக – அது கிடக்கட்டும்; என்
ஆருயிர்த்தோழமை தந்தான் மேல் போவது – எனக்கு அரிய
உயிரோடொத்த நட்புறவைத் தந்தஇராமன்மேல் படையெடுத்துச் செல்வது;
ஆர் உயிரும் சேனையும் கொடு போயன்றோ – தம்முடைய அரிய
உயிரையும் சேனைகளையும் (எனக்குத் தப்பி) உடன் கொண்டு சென்ற
பிறகல்லவா(முடியும்)?

———-

‘அருந் தவம் என் துணை ஆள,
இவன் புவி ஆள்வானோ?
மருந்து எனின் அன்று உயிர்?
வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை
உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று; கழிக்குவென்,
என் கடன் இன்றோடே.–18-

என் துணை – எனக்கு நண்பனாகிய இராமன்; அருந் தவம் ஆள-
அரியதவத்தைச் செய்துகொண்டிருக்க; இவன் – இந்தப் பரதன்; புவி
ஆள்வானோ? -உலகத்தை ஆட்சி செய்வானோ? (அதையும்
பார்த்துவிடுவோம்); உயிர் – என்னுடையஉயிர்; மருந்து எனின் –
(கிடைத்தற்கரிய) தேவர் அமுதமோ என்றால்; அன்று -அல்ல (நான்
அப்படி அதை அரிதாக எண்ணிப் பாதுகாக்க நினைக்க வில்லை);
வண்புகழ்கொண்டு- (இராமனுக்காகப் பரதனை எதிர்த்து) அதனால் சிறந்த
புகழைப் பெற்று; பின் மாயேனோ- அதன் பிறகு உயிர் துறக்க
மாட்டேனோ?; பொருந்திய கேண்மை – மிகவும் ஒட்டியஉறவை;
உகந்தவர் தம்மொடு – என்பால் கொண்டு மகிழ்ந்த இராம
இலக்குவர்களோடு; போகாதே – உடன் செல்லாமல்; இருந்தது நன்று –
(நான்) இங்கேயே தங்கியது நல்லதாய்ப் போயிற்று; என்கடன் – (நான்)
இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமையை; இன்றோடு கழிக்குவென் –
இன்றைக்கே செய்து முடிப்பேன்.

———–

‘தும்பியும் மாவும் மிடைந்த
பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர்
வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்!
துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம்
உயிர் மாய்வது நன்று அன்றோ?–19-

தும்பியும் – யானைகளும்; மாவும் – குதிரைகளும்; மிடைந்த –
நெருங்கிய; பெரும்படை – பெரிய சேனையால்; சூழ்வு ஆரும் –
சுற்றப்படுதல்பொருந்திய; வம்பு இயல் தார் இவர் – மணம் வீசுகின்ற
மாலையணிந்துள்ள இவர்கள்; வாள்வலி – படையின் ஆற்றல்; கங்கை
கடந்து அன்றோ – இக் கங்கையாற்றைக்கடந்து போன பிறகு அல்லவா
(காட்டமுடியும்?); வெம்பிய வேடர் உளீர்! – (இவர்களைக்கண்டு) மனப்
புழுக்கம் அடைந்துள்ள வேடர்களாய் உள்ளவர்களே!; துறை ஓடம்
விலக்கீரோ – நீர்த்துறையிலே இவர்களுக்கு ஓடம் விடுவதை
நிறுத்திவிடுங்கள். (ஒருவேளை இவர் நம்மைத்தடுத்து மேற்செல்லும்
ஆற்றல் உடையவராயினும் இவரோடு போரிட்டு); நம்பி முன்னே –
இராமபிரானுக்கு முன்னாலேயே; நம் உயிர் மாய்வது – நமது உயிர்
அழிந்து போவது; இனி நன்று அன்றோ? – இனிமேல் நல்லது அல்லவா?

———-

போன படைத் தலை வீரர்தமக்கு
இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின்,
சிலை மா மேகம்
சோனை பட, குடர் சூறை பட,
சுடர் வாளொடும்
தானை பட, தன் யானை பட,
திரள் சாயேனோ?–20-

போன – (நம்முடன்) வந்துள்ள; படைத்தலை வீரர் தமக்கு –
சேனையின்கண் உள்ள வீரர்களுக்கு; இரை போதா – (ஒருவேளைப்)
போர்க்கும் பற்றாத; இச்சேனை – இந்தப் (பரதனது) சேனை; கிடக்கிடு-
கிடக்கட்டும்; தேவர்வரின்- தேவர்களே (படையெடுத்து) வந்தாலும்; சிலை
மா மேகம் – என் வில்லாகியகரிய மேகம்; சோனை பட – அம்பு
மழையைச் சொரிய; குடர் சூறைபட -எதிரிகளது குடர்கள் சிதைந்து
அலைய; தானை சுடர்வாளோடும் பட – எதிரிச் சேனைகள்தம்கையிற்
பிடித்த படைக்கலங்களோடும் இறக்க; தனி யானை பட – ஒப்பற்ற
யானைகள்அழிய; திரள் சாயேனோ – (அப்படைக்) கூட்டத்தை
நிலைகுலைக்காமல் விடுவேனோ?

——

‘நின்ற கொடைக் கை என்
அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவன் மைந்தர் பலத்தை,
என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை
கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல்,
கங்கை மடுத்து இடை தூராதோ?–21-

அன்று – (முடிசூட்டு விழா நிகழ இருந்த) அந்நாள்; கொடை நின்ற
கை – (முடிசூட்டுவதற்கு முன்பு செய்யவேண்டிய தானம் முதலியவற்றைச்
செய்து) நின்ற திருக்கரங்களை உடைய;என் அன்பன்- என் அன்பிற்குரிய
இராமன்; நெடுஞ் சீரை உடுக்க – பெரியமரவுரியை உடுக்குமாறு;
கொடுத்தவள் – (அவனுக்குக்) கொடுத்தவளாகிய கைகேயியின்; மைந்தர்
பலத்தை – மகனார் ஆன பரதன் சேனையை; என் அம்பால் கொன்று
குவித்த – என்னுடையஅம்பினால் கொன்று குவியல் செய்த; நிணம்கொள்
பிணக்குவை – கொழுப்பு மிகுதிகொண்ட பிணங்களின் திரட்சியை;
கங்கை – இந்தக் கங்கா நதி; கொண்டு ஓடி – இழுத்துக் கொண்டு விரைந்து சென்று; துன்று
திரைக்கடல் – நெருங்கிய அலைகளை உடைய கடலில்; மடுத்து –
அவற்றைச் சேர்த்து; இடை தூராதோ?- அக்கடல் இடத்தைத் தூர்த்து
விடாதோ? (தூர்த்துவிடும்)

———-

‘ “ஆடு கொடிப் படை சாடி,
அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார்” எனும் இப்
புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு
இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி,
எடுத்தது காணீரோ?–22-

ஆடு – அசையும்; கொடி – கொடிகளை உடைய; படை –
சேனைகளை; சாடி – கொன்றழித்து; அறத்தவர் ஆள – தருமத்தின்
துணைவர்களாய இராமஇலக்குவர்கள் ஆளும்படி; வேடு- வேடர்கள்; பார்
கொடுத்தது – (இந்தப்)பூமியை மீட்டுக் கொடுத்தனர்; எனும் இப்புகழ்
மேவீர் – என்கின்ற இந்தப் புகழைஅடையுங்கள்; நாடு கொடுத்த என்
நாயகனுக்கு – (இவர்கள் ஆளும்படி) தான் ஆட்சியுரியவேண்டிய
நாட்டைக் கொடுத்துவிட்டு வந்த என் தலைவனாகிய இராமனுக்கு; இவர் –
இந்தப்பரதர்; நாம் ஆளும் காடு – நாம் ஆட்சி செயும் நமக்கு
உரிமையாகிய இந்தக்காட்டையும்; கொடுக்கிலர் ஆகி – ஆட்சி செய்ய
மனம் பொறாதவராய; எடுத்தது- படை எடுத்து வந்த படியை;
காணீர் – காணுங்கள்.

———-

‘ “ மா முனிவர்க்கு உறவாகி
வனத்திரைடயேவாழும்
கோ முனியத் தகும்” என்று,
மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு கடற்
படை என்றாலும்,
ஆ முனையின் சிறு கூழ்
என இப்பொழுது ஆகாதோ?’-23-

‘மா முனிவர்க்கு – பெரிய தவசிகளுக்கு; உறவாகி – இனிய
சுற்றமாகி; வனத்திடையே வாழும் – காட்டிடத்தில் வாழும்; கோ –
இராமன்; முனியத் தகும்’- (தன் தம்பியான பரதனை எதிர்த்தால் என்னை)
வெறுத்துக் கோபிப்பான்; என்று -; மனத்துஇறை கொள்ளாது –
மனத்தின்கண் சிறிதும் நினையாமல்; ஏ முனை உற்றிடில் – போர்முனையில்
சென்று (பரதனைச்) சந்தித்துப் போரிட்டால்; இப்பொழுது -இந்நேரத்தில்;
ஏழு கடற் படை என்றாலும் – ஏழு கடல் அளவு சேனை என்றாலும்; ஆ
முனையின் சிறு கூழ் என – பசு தின்பதற்கு முனைந்தவழி அதன் எதிரில்
கிடந்த சிறிய புல்என்று சொல்லும்படி; ஆகாதோ – அனைத்தும் அழிந்து
போகாதோ (போகும்.)

——-

என்பன சொல்லி, இரும்பு அன
மேனியர் ஏனோர்முன்,
வன் பணை வில்லினன், மல் உயர்
தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது
கண்டு, அரிஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன்.
மூரிய தேர் வல்லான்;–24-

வன் பனை வில்லினன் – வலிய கட்டமைந்த பருத்த வில்லை
உடையவனும்; மல்உயர் தோளினன் – மல் தொழிலால் சிறப்புற்ற
தோளை உடையவனும்; வாள் வீரற்குஅன்பனும் – வாளாற் சிறந்த
வீரனாகிய இராமனுக்கு அன்பு பூண்டவனும் ஆய குகன்; இரும்பு
அனமேனியர் ஏனோர்முன் – இரும்பை ஒத்த வலிய உடம்பை உடைய
வேடுவ வீரர்களுக்கு முன்னால்; என்பன சொல்லி – என்ற இச்
சொற்களைச் சொல்லி; நின்றனன் -; நின்றது கண்டு – (குகன்) நின்ற
படியைப் பார்த்து; மூரிய தேர்வல்லான் – வலிய தேரைஓட்டுதலில்
வல்லவனாகிய சுமந்திரன்; அரி ஏறு அன்ன முன்பனில் – ஆண்
சிங்கத்தைஒத்த வலிமை படைத்த பரதனுக்கு முன்னால்; வந்து
மொழிந்தனன் – வந்து சிலசொற்களைக் கூறுவானானான்.

——–

‘கங்கை இரு கரை உடையான்;
கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
குகன் என்னும் குறி உடையான்.–25-

‘கங்கை – கங்கையாற்றின்; இருகரை – இரண்டு கரைப் பகுதியில்
உள்ளநிலங்களையும்; உடையான் – தனக்குச் சொந்தமாக உடையவன்;
கணக்கு இறந்த -அளவில்லாத; நாவாயான் – படகுகளை உடையவன்;
உங்கள் குலத் தனி நாதற்கு -உங்கள் சூரிய வம்சத்தில் திருவவதாரம்
செய்தருளிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்கு; உயிர்த் துணைவன் –
ஆத்ம நண்பன்; உணர் தோளான் – உயர்ந்த தோள்களைஉடையவன்;
வெங்கரியின் ஏறு அனையான் – (மதம் பிடித்த) கொடிய ஆண்
யானையைஒத்தவன்; வில் பிடித்த வேலையினான்- வில்லைக் கையில் பிடித்துக் கொண்டுள்ள
(வேட்டுவவீரராகிய) சேனைக் கடலை உடையவன்; கொங்கு அலரும் நறுந்
தண்தார்- மணம் வீசித் தேன் பிலிற்றும் குளிர்ந்த மாலையைஅணிந்துள்ள;
குகன் என்னும் குறி உடையான்- குகன் என்கின்ற பெயரை உடையவன்;’
(அடுத்த பாட்டில் முடியும்)

——–

‘கல் காணும் திண்மையான்;
கரை காணாக் காதலான்;
அற்கு ஆணி கண்டனைய
அழகு அமைந்த மேனியான்;-
மல் காணும் மணி நிறத்தாய்!-
மழை காணும் மணி நிறத்தாய்!-
‘நிற் காணும் உள்ளத்தான்,
நெறி எதிர் நின்றனன்’ என்றான்.–26-

‘மல் காணும் திரு நெடுந்தோள் – மற்போரில் எல்லை கண்ட
அழகிய நெடிய தோளைஉடைய; மழை காணும் மணி நிறத்தாய் –
கார்மழையைக் கண்டால் போன்ற நீலமணி போலும்நிறம் வாய்ந்த
திருமேனி அழகனே!; கல்காணும் திண்மையான் – மலையைக் கண்டாற்
போன்ற வலிமை உடையவன்; கரை காணாக் காதலான் – (இராமன் பால்)
எல்லை காணமுடியாத பேரன்பை உடையவன்; காணில் -வடிவத்தைப் பார்த்தால்; அல் கண்டு அனைய அழகு அமைந்த
மேனியான் – இருளைக் கண்டாற்போன்ற அழகு பொருந்திய உடம்பை
உடையவன் (ஆகிய இத்தகைய குகன்); நெறி எதிர் – நீசெல்கின்ற
வழியின் எதிரில்; நின்காணும் உள்ளத்தான் – உன்னைப் பார்க்கும் மனம்
உடையவனாய்; நின்றனன் ‘என்றான் – நின்று கொண்டுள்ளான்’ என்று
சொன்னான்சுமந்திரன்.

———–

தன் முன்னே, அவன் தன்மை,
தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
யானே சென்று’ என எழுந்தான்.–27-

தன்முன்னே – தன் எதிரில்; அவன் தன்மை – அந்தக் குகனது
நல்லியல்புகளை; தந்தை துணை – தன் தந்தையாகிய தயரதனின்
நண்பனான சுமந்திரன்; முந்து உரைத்த – முற்பட்டுச் சொல்லிய;
சொல்முன்னே – சொல்லுக்கும் முன்பாக;உவக்கின்ற – மகிழ்ச்சி
அடைகின்ற; துரிசு இலாத் திரு மனத்தான் – குற்றம்சிறிதும் இல்லாத
நல்ல மனத்தை உடையவனாகிய பரதன்; ‘மன் முன்னே தழீஇக்
கொண்ட -நம் அரசனாகிய இராமன் வனம் புகுந்த முன்னமே (அன்பு
செய்து) தழுவிக் கொண்டுள்ள; மனக்குஇனிய துணைவனேல் – அவன்
மனத்துக்கு இனிய துணைவன் ஆனால்; என் முன்னே – என்னை(அவன்
வந்து பார்ப்பதற்கு) முன்னமே; யானே சென்று அவற் காண்பென்’ –
நானே(முற்பட்டு) சென்று அவனைக் காணுவேன்;’ என – என்று சொல்லி;
எழுந்தான் -புறப்பட்டான்.

——-

என்று எழுந்த தம்பியொடும்,
எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
துண்ணென்றான்.–28-

(பரதன்) என்று – இவ்வாறு சொல்லி; எழுந்த தம்பியொடும் –
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்; எழுகின்ற காதலொடும் –
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி- குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை – நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய
குகன்; நோக்கினான் – கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை – வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் – திடுக்குற்றான்.

———

வற்கலையின் உடையானை,
மாசு அடைந்த மெய்யானை,
நற் கலை இல் மதி என்ன
நகை இழந்த முகத்தானை,
கல் கனியக் கனிகின்ற துயரானைக்
கண்ணுற்றான்;
வில் கையினின்று இடை வீழ,
விம்முற்று, நின்று ஒழிந்தான்.–29-

வற்கலையின் உடையானை – மரவுரியாலாகிய ஆடையை
உடுத்துள்ள; மாசு அடைந்தமெய்யானை – புழுதி படிந்த உடம்பை
உடைய; நற் கலை இல் மதி என்ன – நல்லகலைகளில்லாத (ஒளியற்ற)
சந்திரன் போல; நகை இழந்த முகத்தானை – ஒளி இழந்தமுகத்தை
உடைய; பரதனை; கண்ணுற்றான் – (குகன்) கண்ணால் சந்தித்துப் பார்த்து;
கையினின்று வில்இடை வீழ – தன் கையிலிருந்து வில்லானது தானே
சோர்ந்து நிலத்தின்கீழ் விழும்படி; விம்முற்று – துன்பத்தால் கலக்கமுற்று;
நின்று ஒழிந்தான் -ஒரு செயலும் இன்றி நின்றவாறே இருந்தான்.

———-

நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்;
அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம்
தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின் பிறந்தார்
இழைப்பரோ பிழைப்பு?’ என்றான்.–30-

‘நம்பியும் – ஆடவரிற் சிறந்த இப்பரதனும்; என் நாயகனை – என்
தலைவனாகியஇராமனை; ஒக்கின்றான் – ஒத்திருக்கிறான்; அயல்
நின்றான் – அருகில்இருக்கின்றவன் (ஆகிய சத்துருக்கனன்); தம்பியையும்
ஒக்கின்றான் – இராமனது உடன்பிரியாத் தம்பியாகிய இலக்குவனை
ஒத்திருக்கின்றான்; தவ வேடம் தலை நின்றான் – (இப்பரதன்)
தவத்துக்குரிய வேடத்தை மேற்கொண்டுள்ளான்; துன்பம் ஒரு முடிவு
இல்லை -(இப் பரதன்) படுகிற துன்பத்துக்கோ ஓர் அளவே இல்லை;
திசை நோக்கித் தொழுகின்றான்- இராமன் சென்ற திசையாகிய
தென்திசையைப் பார்த்து அவ்வப்போது வணங்குகிறான்; (இவற்றால்இவன்
துயர்நிலை விளங்குதலின்) எம்பெருமான் – எம்கடவுளாகிய இராமனுக்கு;
பின்பிறந்தார் – தம்பிகள்; பிழைப்பு இழைப்பரோ’ – (தவறு
செய்வார்களா)’தவறு செய்வர் என்று நான் எண்ணியது பெரும் தவறு);
என்றான் – என்று நினைத்தான்.

——

‘உண்டு இடுக்கண் ஒன்று
உடையான், உலையாத அன்பு உடையான்,
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான்
குறிப்பு எல்லாம்
கண்டு, உணர்ந்து, பெயர்கின்றேன்’
காமின்கள் நெறி’ என்னா,
தண் துறை, ஒர் நாவாயில், ஒரு
தனியே தான் வந்தான்.–31-

‘உண்டு இடுக்கண் ஒன்று உடையான்- புதிதாக உண்டாகிய துன்பம்
ஒன்றை உடையவனும்; உலையாத அன்பு உடையான் -இராமன்பால் சிறிதும் தளர்ச்சியுறாத அன்பு கொண்டவனும்; கொண்ட தவ
வேடமே – (அந்த இராமன்) கொண்டிருந்த தவ வேடத்தையே;
கொண்டிருந்தான் – தானும்கொண்டுள்ளவனும் ஆகிய இப்பரதனது;
குறிப்பு எல்லாம் – மனக் கருத்து எல்லாம்; கண்டு- நேரில் பார்த்து
அறிந்து; உணர்ந்து – அதனை என் அநுபவத்தாலும் நுகர்ந்து;
பெயர்கின்றேன் – திரும்பி வருகின்றேன்; நெறி காமின்கள் – (அதுவரை)
வழியைப்பாதுகாத்திருங்கள்;’ என்னா – என்று சொல்லி; தண்துறை –
(கங்கையின்) குளிர்ந்தநீர்த்துறையில்; தான் ஓர் நாவாயில் ஓரு தனியே
வந்தான்- (குகன்) தான் ஒருபடகில் வேறு யாரும் இன்றித் தனியே வந்து
சேர்ந்தான்.

———–

வந்து எதிரே தொழுதானை
வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும் அவனும்,
அவன்த அடிவீழ்ந்தான்.
தந்தையினும் களிகூரத் தழுவினான் –
தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிறுக்கும்
சீர்த்தியான்.–32-

வந்து – (கங்கையின் வடகரைக்கு) வந்து; எதிரே தொழுதானை –
தன்னைஎதிரிலே கும்பிட்ட பரதனை; வணங்கினான் – (குகன்) தானும்
வணங்கினான்; மலர்இருந்த அந்தணனும் தனை வணங்கும் அவனும் –
(திருமாலின் திருவுந்தித்) தாமரையில்வீற்றிருக்கும் வேதியனாகிய பிரமனும்
தன்னை வணங்கும் சிறப்புப் பெற்ற பரதனும்; அவன் அடிவீழ்ந்தான் –
அந்தக் குகனது அடித்தலத்தில் விழுந்து வணங்கினான்; (அதுகண்டு) தகவு
உடையோர் சிந்தையினும் சென்னி யினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் –
நடுவுநிலைமையிற்சிறந்த மேலோர்களது மனத்திலும், தலையிலும் ஏற்றிப்
போற்றப்படும் புகழ் உடைய பண்பு நலம்செநிந்த உத்தமனாகிய குகனும்;
தந்தையினும் களிகூர – பெற்ற தந்தையினும் மகிழ்ச்சிமிக; தழுவினான் –
(அந்த அடி வீழ்ந்த பரதனை எடுத்து) மார்போடு அணைத்துக்கொண்டான்
(தொடரும்)

——-

தழுவின புளிஞர் வேந்தன்
தாமரைச் செங்கணானை,
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
எய்தியது என்னை?’ என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
முந்தையோர் முறையினின்றும்
வழுவினன்; அதனை நீக்க, மன்னனைக்
கொணர்வான்’ என்றான்.–33-

தழுவின புளிஞர் வேந்தன்- (அவ்வாறு பரதனைத்) தழுவிக்
கொண்ட வேடர் தலைவனான குகன்; தாமரைச் செங்கணானை –
செந்தாமரை போலும் கண்களை உடைய பரதனைப் (பார்த்து); ‘எழுவினும்
உயர்ந்த தோளாய்!- கணைய மரத்தினும் வன்மைமிக்குயர்ந்த தோள்களை
உடைய பரதனே!; எய்தியது என்னை’ என்ன- (கங்கைக் கரைக்
காட்டிற்கு) நீ வந்த காரணம் என்ன என்று வினாவ; (பரதன்) உலகு முழுது
அளித்த தந்தை – உலகம் முழுவதையும் ஒரு குடை நீழலில் ஆட்சி செய்த
சக்கரவர்த்தியாகியஎன் தந்தை தயரதன்; முந்தையோர் முறையினின்றும்
வழுவினன் – தன் மரபில் முன்னுள்ளாரது நீதிமுறையிலிருந்தும்
தவறிவிட்டான்; அதனை நீக்க – அந்த அநீதியை நீக்கும் பொருட்டு;
மன்னனைக் கொணர்வான்’ – முறைப்படி அடுத்து அரசனாகிய
இராமனைத் திரும்ப அழைத்துக்கொண்டு செல்வதற்காக (வந்தேன்);
என்றான் – என்று சொன்னான்.

——–

கேட்டனன், கிராதர் வேந்தன்;
கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி,
மீட்டு்ம், மண் அதனில் வீழ்ந்தான்;
விம்மினன், உவகை வீங்க;
தீட்ட அரு மேனி மைந்தன்
சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன், பொய் இல்
உள்ளத்தன், புகலலுற்றான்;–34-

கிராதர் வேந்தன்- வேடர் தலைவனாய குகன்; கேட்டனன் –
(பரதன் சொல்லிய வார்த்தைகளைக்) கேட்டு; கிளர்ந்து எழும் உயிர்ப்பன்
ஆகி – மேல் எழுந்து மிகும் பெருமூச்சு உடையவனாகி; மீட்டும் – (முன்
வணங்கியதோடு அன்றித்) திரும்பவும்; மண் அதனில் வீழ்ந்தான்-
பூமியில் விழுந்து வணங்கி; உவகை வீங்க – மன மகிழ்ச்சி மேல் பெருக;
விம்மினன் – உடம்பு பூரித்து; தீட்ட அரு மேனி மைந்தன் –
எழுதலாகாததிருமேனியையுடைய பரதனது; சேவடிக் கமலப் பூவில் –
திருவடிகளாகிய தாமரை மலரில்; பூட்டிய கையன் – இறுக அணைத்த
கையுடனே; பொய்யில் உள்ளத்தன் – பொய்யற்ற புரைதீர்ந்த மனத்தால்;
புகலல் உற்றான் – சில வார்த்தைகள் சொல்லலானான்.

—–

தாய் உரைகொண்டு தாதை உதவிய
தரணிதன்னை,
‘‘தீவினை” என்ன நீத்து,
சிந்தனை முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்!
தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,
தெரியன் அம்மா!–35-

‘புகழினோய்! – புகழ் உடையவனே!; தாய் உரை கொண்டு – (உன்)
தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு; தாதை
உதவிய – (உன்)தந்தையாகிய தயரதன் அளித்த; தரணி தன்னை –
(கோசல நாட்டு) அரசாட்சியை; தீவினைஎன்ன நீத்து – தீயவினை வந்து
சேர்ந்தது போலக் கருதிக் கைவிட்டு; முகத்தில் சிந்தனை தேக்கி –
முகத்தில் கவலை தேங்கியவனாய்; போயினை – (வனத்துக்கு) வந்தாய்;
என்ற போழ்து – என்ற காலத்தில்; தன்மை கண்டால் – (உனது)
நல்லியல்புகளைஅறியுமிடத்து; தெரியின் – ஆராய்ந்தால்; ஆயிரம்
இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின்
ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா! -.

——–

‘என் புகழ்கின்றது, ஏழை
எயினனேன்? இரவி என்பான்-
தன் புகழ்க் கற்றை,
மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்,
மன் புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்.
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் –
உயர் குணத்து உரவுத் தோளாய்!
‘உயர் குணத்து உரவுத் தோளாய்!- 36-

உயர்த்த உத்தமக்
குணங்களையும், வலிமையான தோளையும் உடைய பரதனே!; ஏழை எயின
னேன் – அறிவில்லாத வேடனாகிய யான்; என் புகழ்கின்றது? – எவ்வாறு
புகழ முடியும்; இரவிஎன்பான் தன்- சூரியன் என்று சொல்லப்படுகிறவனது;
புகழ்க் கற்றை- புகழாகியஒளித்தொகுதி; மற்றை ஒளிகளைத் தவிர்க்குமா
போல் – மற்றைக் கோள்கள், உடுக்களின் ஒளிகளையெல்லாம் அடக்கிக்
கீழ்ப்படுத்தித் தான் மேற் சென்றுள்ளவாறு போல;மன் புகழ் பெருமை
நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – எல்லா அரசர்களாலும்
பாராட்டப்பெறும் பெருமை படைத்த உங்கள் சூரிய வம்சத்து முன்னைய
அரசர்களது எல்லாப்புகழ்களையும்; உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் –
உனது புகழுக்கும் அடங்குமாறு செய்துகொண்டுவிட்டாய்.

——–

என இவை அன்ன மாற்றம்
இயைவன பலவும் கூறி,
புனை கழல், புலவு வேற் கை,
புளிஞர்கோன் பொரு இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான்;
ஆ அவற்கு அன்பு இலாதார்?-
இராமன்மேல் நிமிர்ந்த காதல்?–37-

புனை கழல்- அலங்கரிக்கப் பெற்ற வீரக்கழலை அணிந்த; புலவு
வேற்கை – புலால் மணம் வீசும்வேலைப் பிடித்த கையை உடைய; புளிஞர்
கோன் – வேடர் தலைவனாகிய குகன்; என இவைஅன்ன மாற்றம்
இயைவன புலவும் கூறி – என்று இதுபோன்ற பொருந்திய சொற்கள்
பலவற்றையும்சொல்லி; பொரு இல் காதல் அனையவற்கு –
இராமன்பாலும் அதனால் தன்பாலும் ஒப்பற்றபேரன்பினை உடையனாகிய
பரதனுக்கு; அமைவின் செய்தான் – பொருந்தியநல்லுபசரிப்புகளைத்
தகுதியாகச் செய்தான்; அவற்கு அன்பு இலாதார் யார்-அப்பரதனிடத்தில்
அன்பு செலுத்தாதவர் யார்உளர்?; இராமன் மேல் நிமிர்ந்த காதல்-
இராமனிடத்து மேல் சென்று உயர்ந்த அன்பு (அவன் சக்கரவர்த்தித்
திருமகள் என்பதாலா?அன்று); நினைவு அருங் குணம்கொடு அன்றோ-
நினைக்கவும் முடியாத நற்குணங்களின்நிலையமாக அவன் இருந்தான்
என்பதனால் அல்லவா? (அக்குணங்கள் இவன்பாலும் இருத்தலால்
இவனிடமும் அன்பு நிமிர்ந்தது.)

———–

அவ் வழி அவனை நோக்கி,
அருள் தரு வாரி அன்ன
செவ் வழி உள்ளத்து அண்ணல்,
தென் திசைச் செங் கை கூப்பி,
எவ் வழி உறைந்தான் நம்முன்?’
என்றலும், எயினர் வேந்தன்,
‘இவ் வழி , வீர! யானே காட்டுவல்;
எழுக!’ என்றான்.–38-

அருள் தரு வாரி அன்ன – கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் – நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்; அவ் வழி – அப்போது; அவனை நோக்கி – குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி – இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து வணங்கி;
‘நம்முன் – நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ – எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் – என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன் – வேட அரசனாகிய குகன்; ‘வீர! – வீரனே!; இவ் வழி –
இவ்விடத்தில்; யானே காட்டுவல் – நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்; எழுக’ – என்னுடன் புறப்படுவாயாக; என்றான் -.

———-

கார் எனக் கடிது சென்றான்;
கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
பருவரற் பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.–39-

(குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் –
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் –
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய –
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் – பார்த்து;
பார்மிசை – பூமியின் மேல்; பதைத்து – துடித்து; வீழ்ந்தான் – விழுந்து;
பருவரல் பரவை புக்கான் – துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;
மண்ணை – பூமியை; மண்ணு நீர் ஆட்டும் – திருமஞ்சனத் தண்ணீரால்
குளிப்பாட்டுகின்ற; கண்ணான் – கண்ணுடையவனாக ஆனான்.

——

இயன்றது, என் பொருட்டினால்,
இவ் இடர் உனக்கு என்ற போழ்தும்,
அயின்றனை, கிழங்கும் காயும்
அழுது என; அரிய புல்லில்
துயின்றனை எனவும், ஆவி துறந்திலென்;
சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும்செல்வமும்
கொள்வென் யானே!”–40-

உனக்கு இவ் இடர் என்பொருட்டினால் இயன்றது என்ற
போழ்தும் – (இராம!) உனக்கு இவ் வனவாசமாகிய துன்பம் என்காரணமாக
உண்டாகியது என்று அறிந்த அந்தநேரத்திலும்; (அதன் பிறகு) கிழங்கும்
காயும் அழுது என அயின்றனை – கிழங்கு, காய்முதலியவற்றை
(அரண்மனையில் இருந்து உண்ணும்) அமுது போல உண்டாய்; அரிய
புல்லில்துயின்றனை- உறங்குதற்கு இயலாத புற்படுக்கையில் உறங்கினாய்;
எனவும் – என்றுஅறிந்த இந்த நேரத்திலும்; யான் ஆவி துறந்திலென்-
யான் உயிர் போகப் பெற்றேன்இல்லை, (அம்மட்டோ); சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் – ஒளி விடும் பொன்னாற்செய்யப்பெற்று உயர்ந்த
திருமுடியை; சூடும் செல்வமும் கொள்வேன் – சூட்டிக்கொள்ளும்அரசச்
செல்வத்தையும் ஏற்றுக் கொள்வேன் போலும்.

—-

தூண்தர நிவந்த தோளான்
பின்னரும் சொல்லுவான்! ‘அந்
நீண்டவன் துயின்ற சூழல்
இதுஎனின், நிமிர்ந்த நேயம்
பூண்டவன், தொடர்ந்து பின்னே
போந்தவன், பொழுது நீத்தது
யான்டு?’ என, இனிது கேட்டான்;
எயினர்கோன், இதனைச் சொன்னான்;–41-

தூண்தர – தூணை ஒப்பாக; நிவந்த தோளான் – உயர்ந்த
தோள்களை உடையபரதன்; பின்னரும் சொல்லுவான் – மீண்டும்
குகனைப் பார்த்துப் பேசுவான்; ‘அந்நீண்டவன் துயின்ற சூழல் இது
எனின் – அந்த நெடியவனாகிய இராமன் உறங்கிய இடம்இது என்றால்;
நிமிர்ந்த நேயம் பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன்- (அவ்
இராமனிடத்தில்) மேற்சென்ற மிகுந்த அன்பு கொண்டு அவனைத் தொடர்ந்து
அவன் பின்னேயேவந்தவனாகிய இலக்குவன்; பொழுது நீத்தது – இரவுப்
பொழுதைக் கழித்தது; யாண்டு?’- எவ்விடத்தில்?; என – என்று; இனிது
கேட்டான் – இனிமையாக வினாவினான்;எயினர்கோன் – வேட
வேந்தனாய குகன்; இதனைச் சொன்னான் – இந்த விடையைக்கூறினான்.

——–

‘அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும்,
வெய்து உயிர்ப்போடும், வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!-
கண்கள் நீர் சொரிய, கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்;
இமைப்பிலன் நயனம்’ என்றான்.–42-

‘கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்!- மலையைக் கீழ்ப்படுத்தி
உயர்ந்ததோள்களை உடையவனே!; அல்லை ஆண்டு அமைந்த மேனி
அழகனும்- இருளைப் பயன்படுத்தி அமைத்தால் ஒத்த கரிய
திருமேனியுடைய அழகிற் சிறந்த இராமனும்; அவளும் – அந்தப்
பிராட்டியும்; துஞ்ச – உறங்க; வீரன் – இலக்குவன்; வில்லை ஊன்றிய
கையோடும்- வில்லின் மேல் வைத்த கையுடன்; வெய்து உயிர்ப்போடும்-
வெப்பமான மூச்சுடையவனாய்; கண்கள் நீர் சொரிய – தன்னிரண்டு
கண்களும் நீரைச்சொரிய; கங்குல் எல்லை காண்பளவும் – இரவு தன்
முடிவான விடியலைப் பார்க்குமளவும்; நயனம் இமைப்பிலன் – கண்கள்
இமைகொட்டாமல் (உறங்காமல்); நின்றான்’ -நின்றுகொண்டே (காவல்
செய்து) இருந்தான்; என்றான் –

——–

என்பத்தைக் கேட்ட மைந்தன்,
‘இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில்,
யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன்,
அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ? அழகிது,
என் அடிமை!; என்றான்.–43-

என்பத்தை- என்று (குகன் ) சொன்னதை; கேட்ட மைந்தன் –
கேட்ட பரதன்; இராமனுக்குஇளையார் என்று – இராமனுக்குத் தம்பிகள்
என்று சொல்லும்படி; முன்பு ஒத்ததோற்றத்தேமில் – பிறக்கும்பொழுது
ஒத்த தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள்இருவரிலும்; யான் –
பரதனாகிய யான்; என்றும் முடிவு இலாத துன்பத்துக்கு ஏது ஆனேன்-
எக்காலத்தும் கரைகாணாத பெருந்துன்பத்தை இராமன் அடைதற்குக்
காரணமாக ஆய்விட்டேன்; அவன் -அந்த இலக்குவன்; அது –
அத்துன்பத்தை; துடைக்க நின்றான் – இராமனிடமிருந்து நீக்கத் துணையாக
இராமனுடன் நின்றான்; அன்புக்கு எல்லை உண்டோ? – அன்புக்கு ஒரு
வரையறை உள்ளதோ; என் அடிமை அழகிது’ – நான் இராமனுக்குச்
செய்யும் அடிமைத்திறம்நன்றாயிருந்தது; என்றான் – என்று கூறினான்.

———

அவ் இடை, அண்ணல்தானும், அன்று,
அரும் பொடியின் வைகி,
தெவ் இடைதர நின்று ஆர்க்கும்
செறி கழல் புளிஞர் கோமா அன்!
இவ் இடை, கங்கை ஆற்றின்
ஏற்றினை ஆயின், எம்மை
வெவ் இடர்க் கடல் நின்று ஏற்றி,
வேந்தன்பால் விடுத்தது’ என்றான்.–44-

அண்ணல் தானும்- பரதனும்; அவ் இடை – அந்த இடத்தில்;
அன்று – அன்றையிரவு; அரும்பொடியின் வைகி- தற்குதற்கியலாத புழுதி
மண்ணில் தங்கியிருந்த, (பொழுதுவிடிந்ததும்); ‘தெவ் இடை தர –
பகைவர்கள் தோற்றோடும்படி; நின்று ஆர்க்கும்செறிகழல்- தங்கி ஒலிக்கும்
கட்டப்பட்ட வீரக்கழல் அணிந்த; புளிஞர் கோமாஅன்! -வேடர்களுக்கு
அரசனாகிய குகனே!; இவ் இடை – இந்த நேரத்தில்; கங்கை ஆற்றின்-
கங்கை ஆற்றிலிருந்து; எம்மை ஏற்றினை ஆயின்- எம்மைப் கரையேற்றிச்
(தென்கரை)சேரச் செய்தால்; வெவ இடர்க்கடல் நின்று ஏற்றி – கொடிய
துயரக் கடலிலிருந்துகரையேற்றி; வேந்தன்பால் விடுத்தது’ – இராமன்பால்
அனுப்பியது ஆகும்;’ என்றான்- என்று சொன்னான்.

——-

நன்று’ எனப் புளிஞர் வேந்தன்
நண்ணினன் தமரை; ‘நாவாய்
சென்று இனித் தருதிர்’ என்ன, வந்தன-
சிவன் சேர் வெள்ளிக்
குன்று என, குனிக்கும் அம் பொன் குவடு என,
குபேரன் மானம்
ஒன்று என, நாணிப் பல் வேறு
உருவு கொண்டனைய ஆன,–45-

(பரதன் கூறியது கேட்டு) புளிஞர் வேந்தன் – வேடர் வேந்தனாய
குகன்; ‘நன்று’- நல்லது (அவ்வாறே செய்வேன்) என்று சொல்லி; தமரை
நண்ணினன் – தன் இனத்தவரைஅடைந்து; ‘சென்று இனி நாவாய்
தருதிர்’ என்ன – (நீங்கள்) சென்று இனிமேல்படகுகளைக் கொண்டு
வருக என்று சொல்லிவிட; (நாவாய்கள்) சிவன் சேர் வெள்ளிக் குன்று
என- சிவபெருமான் வீற்றிருந்து அருளும் (திருக்கயிலாயம் எனப்பெறும்)
வெள்ளிமலை போல; குனிக்கும் அம்பொன் குவடு என –
(அச்சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில்) வளைத்த(மகா மேரு
மலையாகிய) பொன்மலை போல; குபேரன் மானம் என – (வடதிசைக்கு
அதிபனாகிய) குபேரனது புஷ்பக விமானம் போல; ஒன்று என நாணி –
(இவையெல்லாம்) தாம்ஒன்றாய் இருப்பதற்கு வெட்கமுற்று; பல்வேறு
உருவு கொண்டனைய ஆன – அவை தாமேஒவ்வொன்றும் பல்வேறு
வடிவங்களை எடுத்துக் கொண்டாற்போன்றவையாகிய நாவாய்கள்; வந்தன-
(கங்கையின் கண்) வந்து சேர்ந்தன.

———

நங்கையர் நடையின் அன்னம்
நாண் உறு செலவின் நாவாய்.
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன –
கலந்த எங்கும், –
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின்,
அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும்
இருவினை என்னல் ஆன,—46-

நங்கையர் நடையின்- பெண்கள் நடைபோன்ற நடையையும்;
அன்னம் நாணுறு செலவின் – அன்னப் பறவைகள்நாணப்படும் படியான
நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்; அங்கொடு இங்கு – அக்கரையில்
உள்ளாரை இக்கரையிலும்; இழித்தி ஏற்றும் அமைதியின் – ஏற்றி
இறக்கும்தன்மையினால்; அமரர் வையத்து அங்கொடு – தேவருலகமாகிய
அவ்வுலகத்தோடு; இங்கு – இவ்வுலகில்உள்ளாரை; இழித்தி ஏற்றும் –
ஏற்றி இறக்கும்; இருவினை – புண்ணியம், பாவம்என்னும் இருவினை;
என்னல் ஆன – என்று சொல்லும்படியாக இருந்தனவாய்; கங்கையும்
இடம் இலாமை மிடைந்தன- கங்கா நதியிலும் இடம் இல்லை என்னும்படி
நெருங்கின; எங்கும் கலந்தன – எல்லா இடங்களிலும் சேர்ந்தன.

——–

வந்தன, வரம்பு இல் நாவாய்;
வரி சிலைக் குரிசில் மைந்த!
சிந்தனை யாவது?’ என்று,
சிருங்கிபேரியர்கோன் செப்ப,
சுந்தர வரி விலானும்
சமந்திரன்தன்னை நோக்கி,
‘எந்தை! இத் தானைதன்னை ஏற்றுதி,
விரைவின்’ என்றான்.–47-

சிருங்கி பேரியர் கோன்- சிருங்கிபேரம் என்னும் நகரில்
உள்ளார்க்கு அரசன் ஆகிய குகன்; (பரதனை நோக்கி) ‘வரிசிலைக்
குரிசில் மைந்த – கட்டமைந்த வில் தொழிலிற் சிறந்த தயரத குமாரனாகி
பரதனே!; வரம்பு இல் நாவாய் வந்தன – கணக்கில்லாத படகுகள்
வந்துள்ளன; சிந்தனையாவது’ – (உன்) மனக்கருத்து என்ன?; என்று
செப்ப – என்று சொல்ல; சுந்தரவரிவில்லானும் – அழகிய கட்டமைந்த
வில்லானாகிய பரதனும்; சுமந்திரன் தன்னைநோக்கி – (மதியமைச்சருள்
மூத்தோனாகிய) சுமந்திரனைப் பார்த்து; ‘எந்தை – என்தந்தையே!;
இத்தானை தன்னை – இச்சேனைகளை; விரைவின் ஏற்றுதி’-விரைவாகப்
படகில் ஏற்றுக; என்றான் – என்று சொன்னான்.

————-

குரிசிலது ஏவலால், அக்
குரகதத் தேர் வலானும்,
வரிசையின் வழாமை நோக்கி, மரபுளி
வகையின் ஏற்ற,
கரி, பரி, இரதம், காலாள்,
கணக்கு அறு கரை இல் வேலை,
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு
ஏறிற்று அன்றே!–48-

குரிசிலது ஏவலால்- பரதனது கட்டளையால்; அக் குரகதத்
தேர்வலானும் – குதிரைகள் பூட்டிய தேரைச்செலுத்தலில் வல்ல
அச்சுமத்திரனும்; வரிசையின் வழாமை நோக்கி – முறைப்படி தவறாமல்
பார்த்து; மரபுளி வகையின் ஏற்ற – அவரவர்க்குள்ள மரபுகளின்படி
(படகுகளில்)ஏற்றியனுப்ப; கரி, பரி, இரதம், காலாள் – யானை,
குதிரை, தேர், வீரர் என்றுசொல்லப்பெறும்; கணக்கு அறு –
எண்ணிக்கையில் அளவுபடாத; கரை இல் வேலை – கரையற்றசேனைக்
கடல்; எரிமணி திரையின் வீசும் – ஒளிவீசும் மணிகளை அலைகளால்
(கரைக்கண்)எறிகின்ற; கங்கை யாறு – கங்கையாற்றை; ஏறிற்று – கடந்து
அக்கரை சென்றுஏறியது.

——-

இடிபடு முழக்கம் பொங்க,
இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி
இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியோடு வங்கம் வேலை
கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின,
நெடுங் கை வேழம்.–49-

இன மழை – கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க –
ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி
இறுதியின் – யுகப்பிரளயகாலத்தே; மகர நீரை – கடல் நீரை; முடிவுஉற
முகப்ப – அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப
போல – நெருங்கி யுள்ளவை போலவும்; கொடியோடுவங்கம் –
கொடியோடு கூடிய கப்பல்; வேலை – கடலின்கண்; கூம்பொடு –
பாய்மரத்தோடு; படர்வ போல – செல்வன போலவும்; நெடுங்கை வேழம் –
நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி –
தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச்
சென்றன.

———

சங்கமும் மகர மீனும்,
தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து
தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க,
கரை ஒரீஇப் போயிற்று அம்மா –
கங்கையும் இராமற் காணும்
காதலது என்ன மாதோ!–50-

மானம் – பெருமை பொருந்திய; பொங்கு – மேல்கிளம்பிய;
வெங்களிறு -கொடிய யானைகள்; நூக்க – தள்ளுதலால்; சங்கமும்
மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி – சங்கு, சுறாமீன், முத்து,
மணிக்கற்கள் ஆகியவற்றைத் தள்ளி; வங்க நீர்க் கடலும் –
மரக்கலங்களையுடையநீர்மிகுந்த கடலும்; தன்வழி வந்து படர –
தன்னிடத்து வந்து பரவும்படி; கங்கை -கங்கா நதியும்; இராமன் காணும்
காதலது என்ன – இராமனைக் காணும் அன்பு மீக்கூர்ந்தது என்னும்படி;
கரை ஒரீஇப் போயிற்று – கரை கடந்து சென்றது.

————–

பாங்கின் உத்தரியம் மானப்
படர் திரை தவழ, பாரின்
வீங்கு நீர் அழுவம்தன்னுள்,
விழு மதக் கலுழி வெள்ளத்து
ஓங்கல்கள் தலைகள் தோன்ற,
ஒளித்து அவன் உயர்ந்த கும்பம்,
பூங் குழற் கங்கை நங்கை முலை எனப்
பொலிந்த மாதோ!–51-

பாங்கின் -அருகில்; உத்தரியம் மான – பெண்கள் அணிந்துள்ள
மேலாடைபோல; படர் திரை தவழ – கரைமேல் சென்று தவழும்
அலைகள் செல்ல; பாரின் வீங்குநீர் அழுவம் தன்னுள் – உலகில்
மிகுந்த நீர்ப்பரப்பையுடைய யாற்றுப் பள்ளத்துள்; விழும் மதக் கலுழி
வெள்ளத்து ஓங்கல்கள் – விழுகின்ற மதநீர்ப்பெருக்காகிய கலங்கள்
வெள்ளத்தை உடைய மலைபோன்ற யானைகள்; ஒளித்துத் தலைகள்
தோன்ற – உடல் முழுவதும்நீரால் மறைக்கப்பட்டுத் தலைகள்மட்டும் மேல்
தோன்ற; அவண் உயர்ந்த கும்பம் -அங்கே கங்கைப் பரப்பின் மேல்
உயர்ந்து தோன்றுகின்ற மத்தகங்கள் (தலைமேடுகள்); பூங்குழல் கங்கை
நங்கை முலை எனப் பொலிந்த – அழகிய கூந்தலை உடைய கங்கை
மகளின்தனங்களைப்போல விளங்கின.

———

கொடிஞ்சொடு தட்டும், அச்சும், ஆழியும்,
கோத்த மொட்டும்,
நெடுஞ் சுவர்க் கொடியும்; யாவும்,
நெறி வரு முறையின் நீக்கி,
விடும் சுவல் புரவியோடும்
வேறு வேறு ஏற்றிச் சென்ற –
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என –
வயிரத் தேர்கள்.–52-

வயிரத் தேர்கள்- வலிய இரதங்கள்; கொடிஞ்சொடு –
கொடிஞ்சியுடன்; தட்டும் -தேர்த்தட்டும்; ஆழியும் – சக்கரமும்; கோத்த
மொட்டும் – இணைத்தமொட்டும்; நெடுஞ்சுவர்க் கொடியும் – நீண்ட
இருபக்கச் சுவர்களின் மேல் கட்டியகொடியும்; யாவும் – பிறவற்றையும்;
நெறிவரு முறையின் நீக்கி – முறைப்படியான வகையில்தனித்தனியாகப்
பிரித்து; விடும் சுவல் புரவியோடும் – (கத்தரியாது) விட்டு வளர்ந்த
பிடரியை உடைய குதிரையோடும்; வேறு வேறு – தனித் தனியாகப்
படகுகளில் எற்றி அக்கரை கொண்டுசெல்லப்பட்டன. (எவ்வாறு உளது
எனில்); மடிஞ்சபின் – இறந்த பிறகு (அவ்வுயிர்க்கு); உடம்பு கூட்டும்
வினை என – வேறு உடம்பினைக் கூட்டுகின்ற வினைபோல; ஏற்றிச்
சென்ற- ஏற்றிச் செல்லப்பட்டன.

———-

நால் – இரண்டு ஆய கோடி, நவை இல்
நாவாய்கள் மீதா,
சேல் திரண்டனைய ஆய கதியொடும்,
நிமிரச் சென்ற –
பாலி திரண்டனைய மெய்ய,
பயம் திரண்டனைய நெஞ்ச,
கால் திரண்டனைய கால,
கடு நடைக் கலினப் பாய் மா.–53-

பால் திரண்டனைய மெய்ய- பால் திரண்டாற்போன்ற (வெள்ளிய)
உடம்பை உடையன; பயம் திரண்டனைய நெஞ்ச -அச்சம்
திரண்டாற் போன்ற (திடுக்கிடும்) மனம் உடையன; கால் திரண்டனைய
கால – காற்று ஒன்றுகூடினாற்போன்ற (வேகமாகச் செல்லும்) காலினை
உடையன; கடுநடை – விரைந்து செல்லும்நடையை உடைய; கலினம் –
சேணம் அணிந்த; பாய்மா – பாயும் குதிரைகள்; நால் இரண்டு ஆய
கோடி- எட்டுக்கோடியானவை; சேல் திரண்டனைய ஆய கதியொடும் –
சேல்மீன்கள் கூடிச் சென்றாற்போன்ற செலவோடும்; நவை இல் நாவாய்கள்
மீது-குற்றமற்ற படகுகளின் மேலாக; நிமிரச் சென்ற- நிமிர்ந்து சென்றன.

——–

ஊடு உற நெருக்கி, ஓடத்து,
ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர்
குழமினர் துவன்றித் தோன்ற,
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம்
கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன,
மிடைந்தன குரவுக் கொங்கை.–54-

சூடகம் – வளையல் (அணிந்த); தளிர்க் கைம் மாதர் – தளிர்
போன்ற(மென்மையான) கையினை உடைய மகளிர்; ஊடு உற நெருக்கி –
இடையே புகுந்து நெருங்கிநெருக்கி; ஒடத்து – நாவாய்களில்; ஒருவர்
முன் ஒருவர் கிட்டி – ஒருவர்க்குமுன்னால் ஒருவர் அண்மி; குழுமினர்
துவன்றித் தோன்ற – திரண்டு நெருங்கித்தோன்றுதலால்; பாடு இயல் –
பெருமை பொருந்திய; களி நல் யானை -மதமகிழ்வுடைய உத்தம யானை;
பந்தி – வரிசையில்; அம் கடையின் குத்த -அழகிய முனைகளால்
குத்துமாறு; கோடுகள் மிடைந்த அன்ன – கொம்புகள் நெருங்கின என்று
சொல்லும்படி; குவவுக் கொங்கை – (அம்மகளிரின்) திரண்ட முலைகள்;
மிடைந்தன- நெருங்கின.

———

பொலங் குழை மகளிர், நாவாய்ப்
போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும்
மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி
அழிதர, அங்கம் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும்
கயற்குலம் நிகர்த்த, கண்கள்.–55-

நாவாய்- (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் –
செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க- ஒன்று மற்றொன்றோடு மோத;
பொலங்குழை மகளிர் – (அக்கலத்தில்உள்ள) பொன்னாலியன்ற குழை
அணிந்த மகளிர்; மலங்கினர் – மனம் கலங்கி; மறுகினர் – மயங்கி;
வெருவி – அச்சமுற்று; இரண்டு பாலும் நோக்க – இரண்டுபக்கமும்
பார்க்க; கண்கள் – (இவ்வாறு மிரண்டு பார்க்கு அவர்களின்) கண்கள்;
அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர – அசைகின்ற நீர்ப்பெருக்குத்
தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் – ஆற்று நீர் அங்கும்
இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் – பயந்து துள்ளுகின்ற;
கயற்குலம் நிகர்த்த – மீன் கூட்டத்தைஒத்துள்ளன.

——–

இயல்வு உறு செலவின் நாவாய்,
இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடிப்பு வீசும்
துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு
அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு
அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!–56-

இயல்பு உறு செல்வின் நாவாய்- இயல்பாகப் பொருந்திய
செலவினை உடைய மரக்கலங்கள்; இரு கையும் எயினர் தூண்ட –
இருபக்கத்தும் வேடர்கள் உந்துதலால்; துயல்வன துடுப்பு –
அசைவனவாகிய துடுப்புகள்; வீசும் துவலைகள் – வீசுகின்ற நீர்த்துளிகள்;
மகளிர் – (கலத்தில் உள்ள) மகளிரது; மென்தூசு – மெல்லிய ஆடை;
உயல்வு உறு – மறைந்து பொருந்திய; பரவை அல்குல் – பரந்த
அல்குலை; ஒளிப்பு அற தளிப்ப – மறைவு நீங்க வெளித் தோன்றச்
செய்ய; உள்ளத்து அயர்வுறும் – (இராமன் வனம் புகுந்த நாள்முதலாகப்
போகம் இழத்தலின்) மனச்சோர்வுஅடைந்த; மதுகை மைந்தார்க்கு –
மனவலிமை உடைய வீரர்களுக்கு; அயா வுயிர்ப்பு- வருத்தத்திலிருந்து
நீங்குதலை; அளித்தது – உண்டாக்கி (உற்சாகப்படுத்தி)யது.

———

இக் கரை இரைத்த சேனை
எறி கடல் முகந்து, வெஃகி,
அக் கரை அடைய வீசி, வறியன
அணுகும் நாவாய்-
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன
போக்கிப் போக்கி,
அக் கணத்து உவரி மீளும்
அகல் மழை நிகர்த்த அம்மா!–57-

இக் கரை – (கங்கையின்) வடகரையில் உள்ள; இரைத்த சேனை
எறிகடல் -ஒலித்துக்கொண்டுள்ள சேனையாகிய அலைகடலை; வெஃகி
முகந்து – விரும்பிஏற்றுக்கொண்டு; அக்கரை – தென்கரையில்; அடைய
வீசி – முழுவதும் இறக்கிவிட்டு; வறியன – ஒன்றும் இல்லாதனவாய்;
அணுகும் – (வடகரை வந்து) சேரும்; நாவாய் – மரக்கலம்; அலை ஆழி
புக்கு – அலை வீசும் கடலின் கண் புகுந்து; நல் நீர் -மிகுதியான நீரை;
பொறுத்தன – சுமந்தனவாய்ப் (புறப்பட்டு); போக்கிப் போக்கி –
(மழைப்பெய்து) கழித்துக் கழித்து; அக்கணத்து – அடுத்த கணத்திலேயே;
உவரிமீளும் – (மீண்டும் முகப்பதற்காகக்) கடலுக்குத் திரும்புகின்ற; அகல்
மழை- அகன்ற மேகத்தை; நிகர்த்த – ஒத்திருக்கின்றன.

——–

அகில் இடு தூபம் அன்ன
ஆய் மயிர் பீலி ஆர்த்த
முகிழுடை முரண் மாத் தண்டு
கூம்பு என, முகிலின் வண்ணத்
துகிலொடு தொடுத்த செம் பொன்
தகட்டிடை தொடுத்த முத்தின்
நகு கொடி நெடிய பாயா,
நவ் எனச் சென்ற நாவாய்–58-

நாவாய் – மரக்கலங்கள்; அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில்
பீலி ஆர்த்த- அகிற்கட்டைகளால் உண்டாக்கப்பெற்ற புகையைப்
போன்ற அழகிய மயில் தோகைகள்கட்டப்பெற்ற; முகிழுடை முரண்மாத்
தண்டு – அரும்புபோன்ற உறுப்பைத் தலையிற் கொண்ட(தேரிலிருந்து
பிரித்த) தண்டுகள்; கூம்பு என – பாய்மரமாகத் தோன்ற; முகிலின்
வண்ணத் துகிலொடு தொடுத்த – மேகநிறமான துணியொடு கட்டப்பெற்ற;
செம்பொன் தகட்டிடைதொடுத்த – செம்பொன்னால் ஆகிய தகட்டின்
இடையே அழகுறத் தைத்த; முகத்தின் நகுகொடி -முத்துக்களால் விளங்கும்
கொடிகள்; நெடிய பாயா – நீண்ட பாயாகத் தோன்ற; நவ் எனச்சென்ற –
பெரிய பாய்மரக் கப்பல்கள் போலச் சென்றன.

———–

ஆனனம் கமலத்து அன்ன,
மின்அன்ன, அமுதச் செவ் வாய்
தேன் நனை, குழலார் ஏறும்
அம்பிகள் சிந்து முத்தம்
மீன் என, விரிந்த கங்கை
விண் என, பண்ணை முற்றி
வானவர் மகளிர் ஊறும்
மானமே நிகர்த்த மாதோ!–59-

விரிந்த கங்கை – அகன்ற கங்காநதி; விண் என – ஆகாயம் ஆக;
சிந்து முத்தம் மீன் என – (கங்கையாறு) சிந்துகின்ற முத்துகள்
விண்மீன்களாக; கமலத்து அன்ன ஆனனம் – தாமரை மலர் போன்ற
முகம்; அமுதச் செவ்வாய் – அமுதமூறும் சிவந்தவாய் ஆகியவற்றை
உடைய; மின் அன்ன தேன் நனை குழலார் – தேன் சிந்தும் கூந்தலை
உடைய மின்னலை ஒத்த மகளிர்; ஏறும் அம்பிகள் – ஏறிச் செலுத்தும்
ஒடங்கள்; வானவர் மகளிர் பண்ணை முற்றி – தேவ மகளிர்கள் நீர்
விளையாட்டை முடித்து; ஊறும்மானமே நிகர்த்த – மேலேறிச்
செல்லுகின்ற விமானங்களை ஒத்தன.

———-

துளி படத் துழாவு திண் கோல்
துடிப்பு இரு காலின் தோன்ற,
நளிர் புனல் கங்கை ஆற்றில்
நண்டு எனச் செல்லும் நாவாய்,
களியுடை மஞ்ஞை அன்ன,
கனங் குழை, கயல் கண், மாதர்
ஒளிர் அடிக் கமலம் தீண்ட,
உயிர் படைத்தனவே ஒத்த.–60-

துளிபட – துளிகள் உண்டாகும்படி; துழாவு – (நீரைத்) துழாவுகின்ற;
திண்கோள்- வலிய கோலை உடைய; துடுப்பு – துடுப்புகள்; இரு காலின்
தோன்ற -இரண்டு கால்களைப் போலத் தோன்ற; நளிர் புனல் கங்கை
ஆற்றில்- குளிர்ந்த நீரைஉடைய கங்கா நதியில்; நண்டு எனச் செல்லும்
நாவாய் – நண்டு என்று சொல்லும்படிசெல்கின்ற மரக்கலம்; களி உடைய
மஞ்ஞை அன்ன – களிப்பை உடைய மயிலை ஒத்த; கணங்குழை-
பொற்றோடு அணிந்த; கயல்கண் – மீன் போன்ற கண்ணை உடைய;
மாதர் -மகளிரது; ஒளிர் அடிக் கமலம் தீண்ட – விளங்குகின்ற அடித்
தாமரைகள் படுதலால்; உயிர் படைத்தனவே ஒத்த – உயிர் பெற்றனவே
போன்றிருந்தன

———

மை அறு விசும்பில், மண்ணில்,
மற்றும் ஓர் உலகில், முற்றும்
மெய் வினை தவமே அன்றி
மேலும் ஒன்று உளதோ? கீழோர்
செய் வினை நாவாய் ஏறித் தீண்டலர்;
மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக,
தேவரின் முனிவர் போனார்.–61-

(இவ்வாறு நாவாய் ஏறிப் பலரும் செல்ல) முனிவர் – முனிவர்கள்;
கீழோர்செய்வினை நாவாய்- கீழான மனிதச் சாதியினரால் செய்யப்பெற்ற
தொழிலமைந்தமரக்கலத்தை; ஏறித் தீண்டலர் – தீண்டி ஏறாதவர்களாய்;
மனத்தில் செல்லும்மொய்விசும்பு ஓடமாக – மனத்தால் நினைத்த
மாத்திரையில் செல்லும் ஆகாயமே தாம் ஏறிச்செல்லும் ஓடமாகக் கருதி;
தேவரின் – தேவர்களைப் போல; போனார் – வான் வழியேசென்றார்கள்;
மை அறு விசும்பில் – குற்றமற்ற விண்ணுலகிலும்; மண்ணில் –
மண்ணுலகிலும்; மற்றும் ஓர் உலகில் – வேறோர் உலகிலும்; மெய்வினை –
உண்மையானதொழில்; தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ – தவமே
அல்லாமல் அதற்கு மேற்பட்டதாகவேறு ஒரு தொழில் உள்ளதா? இல்லை
என்றபடி,

——-

‘அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று
இறுதி செய் சேனையும், எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும், மகளிர் வெள்ளமும்,
செறி திரைக் கங்கை, பின் கிடக்கச் சென்றவே.–62-

அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று இறுதிசெய் சேனையும் –
அறுபதாயிரம் அகௌஹிணிகள் என்று (கணக்கு) முடிவு செய்யப்பட்ட
சேனைகளும்; எல்லைதீர் நகர் – அளவுகடந்த அயோத்தி நகரத்து; மறு
அறு மாந்தரும் – குற்றம் அற்ற மக்களும்; மகளிர் வெள்ளமும் –
பெண்கள் கூட்டமும்; செறி திரைக் கங்கை – நெருங்கிய அலைவீசுகின்ற
கங்கை; பின் கிடக்கச் சென்ற – கங்கையாறு பின்னிடும்படி போயின.

————-

சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான்தானும் ஏறினான்.–63-

சூழ்படை – (பரதன்) தன்னைச் சுற்றியுள்ள சேனை; நீர் கழித்து
வருதுறையாற்றை – நீர் கழியுண்டாக்கிப் பெருகும் கரையமைந்த
கங்கையாற்றை; கழித்து நீங்கியது என – கடந்து சென்றதாக; கள்ள
ஆசையை அழித்து – வஞ்சகமானமண்ணாசையைப் போக்கி; அவனி
பண்டு ஆண்ட வேறு வேந்தரை இழித்து – (இம்) மண்ணுலகைமுன்பு
ஆட்சி புரிந்த மற்ற அரசர்களையெல்லாம் கீழ்ப்படுத்தி; மேல்
ஏறினான்தானும் -மேற்சென்றவனான பரதனும்; ஏறினான் – (நாவாயின்
கண்) ஏறினான்.

———–

சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற
கோசலையைத் தொழுது நோக்கி,
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்?’ என்று
குகன் வினவ, ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி; மூன்று
உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம், யான்
பிறத்தலால், துறந்த பெரியாள்’ என்றான்.–64-

குகன்-; சுற்றத்தார்- உறவினர்கள்; தேவரொடும் – தேவர்களோடு;
தொழ – வணங்குமாறு; நின்றகோசலையைத் தொழுது நோக்கி –
இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து; ‘கொற்றத்தார்க்
குரிசில்! – வெற்றிமாலை சூடிய பரதனே!; இவர் ஆர்? என்று வினவ-
இவர் யாராவார் என்று கேட்க; (அதற்குப் பரதன்) ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் -அரசர்கள் (திறை தரக் குழுமித்) தங்கியிருக்கும் முன்றிலை
உடைய தயரதனது; முதல் தேவி- முதல் பட்டத்தரசி; மூன்று உலகும்
ஈன்றானை -மூவுலகங்களும் (முன்பு) உண்டாக்கியபிரமதேவனை; முன்
ஈன்றானை – முன்னால் (தனது திருஉந்திக் கமலத்தில்)தோற்றுவித்தருளிய
(ஸ்ரீ நாராயணன் திரு அவதாரமாகிய) இராமனை; பெற்றதால் பெறுஞ்
செல்வம்- (தன் மகனாகப்) பெற்ற காரணத்தால் பெறவேண்டிய அரசச்
செல்வத்தை; யான் பிறத்தலால்- நான் (கைகேயி மகனாகப் பின்னே)
பிறந்த காரணத்தால்; துறந்த – இழந்த; பெரியாள்’ – பெருமையுடையாள்;
என்றான் -.

———

என்றலுமே, அடியின்மிசை நெடிது வீழ்ந்து
அழுவானை, ‘இவன் யார்?’ என்று,
கன்று பிரி காராவின் துயர் உடைய
கொடி வினவ, கழல் கால் மைந்தன்,
‘இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும்,
இளையவற்கும், எனக்கும், மூத்தான்;
குன்று அனைய திரு நெடுந் தோள் குகன்
என்பான், இந் நின்ற குரிசில்’ என்றான்.–65-

என்றலுமே – என்று பரதன் கூறிய – அளவிலேயே; அடியின்
மிசை -கோசலையின் திருவடிமேல்; நெடிது – நெடுநேரம்; வீழ்ந்து –
நிலம்தொட்டு வீழ்ந்து; அழுவானை – அழுகின்ற குகனை; கன்று பிரி
காராவின் துயர் உடைய கொடி – கன்றைப்பிரிந்த காராம் பசுவின்
(துன்பம் போன்று மகனைப் பிரிந்த) துன்பத்தை உடைய கொடி
போல்பவளாகிய கோசலை; ‘இவன் யார்?’ என்று வினவ – (இதோ காலில்
விழுந்துகிடக்கிற) இவன் யார்? என்று கேட்க; கழல் கால் மைந்தன் –
வீரக் கழலணிந்த கால்உடைய பரதன்; ‘இந் நின்ற குரிசில் – இதோ
தொழுது நிற்கின்ற ஆண்மகன்; இராகவனுக்கு இன்துணைவன் –
இராமனுக்கு இனிய சகோதரன்; இலக்குவற்கும் இளையவற்கும்எனக்கும்
மூத்தான் – இலக்குவனுக்கும் சத்துருக்கனனுக்கும், எனக்கும் அண்ணன்;
குன்றுஅனைய திருநெடுந் தோள் குகன் என்பான்’ – மலையொத்த
திரண்ட அழகிய நெடிய தோள்களைஉடைய குகன் என்ற பெயரை
உடையவன்; என்றான் –

———-

‘நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால்;
நாடு இறந்து காடு நோக்கி,
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று
ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன்
தன்னொடும் கலந்து, நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய், அகல் இடத்தை நெடுங்
காலம் அளித்திர்’ என்றாள்.–66-

(அதுகேட்ட கோசலை அவர்களைப் பார்த்து); ‘மைந்தீர்’ – என்
பிள்ளைகளே!; இனித் துயரால் நைவீர் அலீர் – இனிமேல் நீங்கள்
துன்பத்தால் வருந்தாமல்இருப்பீர்களாக; மெய்வீரர் – சுத்த வீரர்கனாகிய

இராம இலக்குவர்கள்; நாடு இறந்து – கோசல நாடு கடந்து; காடு
நோக்கி -வனத்தை நோக்கி; பெயர்ந்ததுவும் – புறப்பட்டுச் சென்றதுவும்;
நலம் ஆயிற்று ஆம்அன்றே! – (இத்தகைய சிறந்த சகோதரனைத்
தருதலால்) நன்மைக்குக் காரணமாயிற்றல்லவா!; விலங்கல் திண்தோள் கை
வீரக் களிறு அனைய காளை – மலை போன்ற வலிய தோளைஉடைய
துதிக்கையாற் செய்யும் வீரச் செயலை உடைய ஆண் யானையை ஒத்த
ஆண் மகனாகிய; இவன்தன்னோடும் – இந்தக் குகனோடும்; கலந்து –
ஒன்றுபட்டு; நீவிர் ஐவீரும் -நீங்கள் ஐந்து பேரும்; அகல் இடத்தை –
அகன்ற பூமியை; நெடுங்காலம் -நீண்டகாலம்; அளித்தீர்’ – அரசாட்சி
செய்து காப்பாற்றுவீர்களாக; என்றாள்- என்று சொன்னாள்.

————–

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்தனை
நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’ என்ன, ‘நெறி திறம்பாத்
தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான்தன் இளந் தேவி; யாவர்க்கும்
தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்னப் பிரியாதான் தனைப்
பயந்த பெரியாள்’ என்றான்.–67-

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை- அறக்கடவுளே
என்று சொல்லத் தக்கவளாய்ப் பக்கத்தில் நின்ற சுமித்திரா தேவியை;
நோக்கி – (குகன்) பார்த்து; ‘ஐய! – பரதனே!; அன்பின் நிறைந்தாளை-
அன்பால் நிறைந்த கொள்கலமாகிய இப் பெருமாட்டியை; உரை’ – (யார்
என்று எனக்குச்)சொல்; என்ன – என்று கேட்க; (பரதன்) ‘நெறி திறம்பா-
சத்திய வழியில்சிறிதும் மாறுபடாத; தன் மெய்யை – தன் வாய்மையை;
நிற்பது ஆக்கி – என்றும் நிலைபெறுவதாகச்செய்து; இறந்தான்தன் –
தன் (மெய் எனும் பொய்யுடலைக் கைவிட்டு) இறந்தவனாகியதயரதனது;
இளந்தேவி – இளைய பட்டதரசியாவாள்; (அதன் மேலும் இவள்) யாவர்க்கும் – எல்லா மக்களுக்கும்; தொழுகுலம் ஆம்
இராமன் -வணங்கத்தக்க குல தெய்வமாகிய இராமனுக்கு; பின்பு
பிறந்தானும் உளன் என்ன – பின்னேபிறந்த தம்பியும் (ஒருவன்) உளம்
என்று அனைவரும் அறிந்து சொல்லுமாறு; பிரியாதான் தனை-
(இராமனை விட்டு) நீங்காத இலக்குவனை; பயந்த – பெற்றெடுத்த;
பெரியாள்’ -பெருமை உடையவள்; என்றான் – என்று சொன்னான்.
சொன்னான்.

———

சுடு மயானத்திடை தன் துணை ஏக,
தோன்றல் துயர்க் கடலின் ஏக,
கடுமை ஆர் கானகத்துக் கருணை ஆர்கலி
ஏக, கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம்,
தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால், அளந்தாளை, ‘“ஆர் இவர்?”
என்று உரை’ என்ன, குரிசில் கூறும்;–68-

(பின்னர்க் குகன்) தன் துணை கடு மயானத்திடை ஏக – தன்
கணவனாய தயரதன்(இறந்தாரைச்) சுடுகின்ற சுடுகாட்டிடத்தே செல்ல;
தோன்றல் – (தன் மகனாகிய) பரதன்;துயர்க் கடலின் ஏக – துன்ப
வெள்ளத்தினிடையே செல்ல; கருணை ஆர்கலி – அருட்கடலாகிய
இராமன்; கடுமை ஆர் கானகத்து ஏக – கொடுமை பொருந்திய
காட்டிடத்தே செல்ல;(இவ்வாறு செய்து) கழல்கால் மாயன் – கழலணிந்த
காலையுடைய திருமால்; நெடுமையால் -(வாமனனாக வந்த மாவலி)
பால் மூவடி மண் கேட்டுப் பின்னர் எடுத்த) நெடிய திருவுருவத்தால்;
அன்று -முற்காலத்தே; அளந்த உலகு எல்லாம் – மூவடியில் ஈரடியால்
அளந்த எல்லா உலகங்களையும்; (திருமால் போல அவதாரம் எடுத்துச்
சிரமப்படாது) தன் மனத்தே நினைந்து செய்யும்கொடுமையால்
அளந்தாளை – தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கிற
கொடுமையினால்(எளிதாக) அளவு செய்தவளாகிய கைகேயியை; “ஆர்
இவர்” என்று உரை’ என்ன- இவர் யார்என்று சொல்லுக என்று கேட்க;
குரிசில் – பரதன்; கூறும் – சொல்வான்ஆயினன்.

———–

படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்
செவிலியை, தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்
உலகத்தே, ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,
இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’–69-

‘படர் எலாம் படைத்தாளை – துன்பங்களை எல்லாம்
உண்டாக்கினவளை; பழிவளர்க்கும் செவிலியை – உலக நிந்தை
என்கின்ற பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத் தாயை; தன் பாழ்த்த பாவிக்
குடரிலே – தனது பாழான தீவினையுடைய வயிற்றில்; நெடுங்காலம்
கிடந்தேற்கும் -நீண்டநாள் (பத்துத் திங்கள்) தங்கியிருந்த எனக்கும்;
உயிர்ப்பாரம் குறைந்து தேய – உயிர் என்கின்ற சுமை குறைந்து
தேயும்படி; உடர் எலாம் உயிரிலாஎனத் தோன்றும் உலகத்தே –
உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும்படி உள்ள
உலகத்தின்கண்; ஒருத்தி அன்றே இடரிலா முகத்தாளை – இவ் ஒருத்தி
மட்டும் அல்லவாதுன்பமே இல்லாத முகம் உடையவள்;
இவளை, அறிந்திலையேல் – (இவ்வளவு நேரம் முகத்தைக் கண்டே
அறிந்து கொண்டிருக்கவேண்டும், அப்படி) அறியவில்லையானால்; இந்
நின்றாள் – இதோ இருக்கின்றவள்; என்னைஈன்றாள் – என்னைப்பெற்ற
கைகேயி யாவாள்,’

———-

என்னக் கேட்டு, அவ் இரக்கம் இலாளையும்
தன் நல் கையின் வணங்கினன் தாய் என;
அன்னப் பேடை சிறை இலது ஆய்க் கரை
துன்னிற்று என்னவும் வந்தது, தோணியே.–70-

என்னக் கேட்டு- (குகன்) பரதன் இவ்வாறு சொல்லக் கேட்டு; அவ்
இரக்கம் இலாளையும் – அந்தஇரக்கமற்றவளாகிய கைகேயியையும்; தன்
நல் கையின் – தன் நல்ல கைகளால்; தாய் எனவணங்கினன் – தனக்குத்
தாய் எனக் கருதி வணங்கினான்; தோணி – மரக்கலம்; அன்னப் பேடை-
பெண் அன்னம்; சிறை இலது ஆய் – சிறகுகள் இல்லாமல்; கரை
துன்னிற்றுஎன்னவும் – கரையை வந்து அடைந்தது என்று
சொல்லலாம்படி; வந்தது – கரையை வந்தடைந்து.

————–

இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்-
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் –
கழிந்தனன், பல காவதம் காலினே.–71-

(தோணியிலிருந்து) இழிந்த – இறங்கிய; தாயார் – தாய்மார்கள்;
சிவிகையின் ஏற- பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த
புதுப் புனல்போயினான் – கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில்
நடந்து சென்றான்; குகனும்ஒழிந்திலன் உடன் ஏகினான் – குகனும்
தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்; காலில் பல காவதம்
கழிந்தனன் – (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து
கடந்தான்.

————

பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்.–72-

(பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் – வினைச் சுமையிலிருந்து விலகிய;
பரத்துவன் – பரத்துவாசன்; என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர்
மாதவன் வைகு இடம்- என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த
உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர – அன்பு மிக;
அணுகினன் – சேர்ந்தான்; அவன் – அப்பரத்துவாசன்; ஆண்டு –
அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு – அறுதொழில் உடைய
அந்தணரோடு; எதிர்மேவினான் – எதிர்கொண்டு வந்தான்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading