ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/11-ஆறு செல் படலம்–

வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான், என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர்.–1-

வரன்முறை தெரிந்து உணர் – அரச குலத்தின் மரபு முறைகளை
ஆராய்ந்து உணர்ந்த; மறையின் மாதவத்து – வேதவழியில் செய்யப்படும்
தவங்களைச் செய்துள்ள; அருமறை முனிவனும் – வேதத்திற்சிறந்தவசிட்ட
முனிவனும்; ஆண்டையான் என – (பரதன் உள்ள) அவ்விடத்தில்
இருக்கின்றான் என்றறிந்து; விரகின் எய்தினர் -(மந்திரக் கிழவர்கள்) ஆலோசனைக்குரிய சூழ்ச்சியோடு; விரைவின் வந்து-
விரைந்துஅரசவைக்கு வந்து; ஈண்டினர் – நெருங்கி; பரியும் நெஞ்சினர்
பரதனை வணங்கினர்- அன்பினால் இரங்கும் மனம் உடையவராய்ப்
பரதனை வணங்கினார்கள்.

———

மந்திரக் கிழவரும், நகர மாந்தரும்,
தந்திரத் தலைவரும், தரணி பாலரும்,
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும்,
சந்தரக் குரிசிலை மரபின் சுற்றினார்.–2-

அந்தர முனிவரோடு- ஆகாய வழியில் இயங்கவல்ல
முனிவர்களோடு; மந்திரக் கிழவரும் – மந்திராலோசனைக்குஉரிமை
உடைய அமைச்சர்களும்; நகர மாந்தரும் – நகரத்தில் உள்ள மக்களின்
பிரதிநிதிகளாய் உள்ளவர்களும்; தந்திரத் தலைவரும் – சேனைத்
தலைவர்களும்; தரணிபாலரும் – அரசர்களும்; அறிஞர் யாவரும் –
அவ்வத் துறையில் முறைபோகிய வல்லார்களும்ஆகிய அனைவரும்;
சுந்தரக் குரிசிலை – அழகிற் சிறந்த பரதனை; மரபின் -அவரவர்க்
குள்ள வரிசை முறையின்படி; சுற்றினார் – (நெருங்கிச்) சூழ்ந்து
கொண்டார்கள்.

———-

சுற்றினர் இருந்துழி, சுமந்திரப் பெயர்ப்
பொன் தடந் தேர் வலான், புலமை உள்ளத்தான்,
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான்,
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான்.–3-

சுற்றினர் இருந்துழி- (வசிட்ட முனிவனும், மந்திரக் கிழவரும்,
அறிஞரும்) சூழ இருந்தபோது; கொற்றவர்க்குஉறுபொருள் அரசர்க்குரிய
சிறந்த பொருள்களை; குறித்த கொள்கையான் – நன்குஉணர்ந்து
நிறைவேற்றம் கொள்கைப் பிடிப்பு உடைய; புலமை உள்ளத்தான் –
அறிவால்நிறைந்த மனம் உடைய; சுமந்திரப் பெயர்ப் பொன் தடந்
தேர்வலான் – பொன்னால்இயன்ற பெரிய தேரைச் செலுத்துதலின் திறன்
வாய்ந்த சுமந்திரன் என்னும் பெயருடைய (அமைச்சர்தலை)வன்; முற்று
உணர் முனிவனை – எல்லாம் முழுதுணர்ந்த வசிட்ட முனிவனை; முகத்து
நோக்கினான் – (தன் மனக்கருத்தை வாயால் உரைக்க வேண்டாது அது
தோன்றும்படி) நேரேபார்த்தான்.

——–

நோக்கினால் சுமந்திரன் நுவலலுற்றதை,
வாக்கினால் அன்றியே உண்ர்ந்த மா தவன்,
‘காக்குதி உலகம்; நின் கடன் அது ஆம்’ எனக்
கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான்;–4-

சுமந்திரன் -; நோக்கினால் – மனத்தொடு பட்ட பார்வைக்
குறிப்பினால்; நுவலலுற்றதை – சொல்லியதை; வாக்கினால் அன்றியே –
(அவன்) வாயினாற்சொல்லாமலே; உணர்ந்த – தெரிந்துகொண்ட;
மா தவன் – பெருந்தவம் செய்த வசிட்டமுனிவன்; ‘உலகம் காக்குதி –
இந்த அரசாட்சியைப்பாதுகாப்பாய்; இது – இத்தரணி தாங்குதல்; நின்
கடன் ஆம் – நீ (எற்றுச்)செய்யவேண்டிய கடமையாகும்; என -; கோக்
குமரனுக்கு – அரச குமாரனாகிய பரதனுக்கு; அது – அரசின் சிறப்பும்
இன்றியமையாமையும; தெரிய – விளங்கும்படி; கூறுவான்-
எடுத்துரைக்கலானான்.

——

வேதியர், அருந் தவர், விருத்தர், வேந்தர்கள்
ஆதியர் நின்வயின் அடைந்த காரியம்,
நீதியும் தருமமும் நிறுவ; நீ இது,
கோது அறு குணத்தினாய்! மனத்துக் கோடியால்–5-

‘கோதறு குணத்தினாய்!- குற்றமற்ற குணத்தை உடைய (பரதனே)
வனே!; வேதியர் – அந்தனர்; அருந்தவர் – அரியதவம் செய்த முனிவர்;
விருத்தர் – (அநுபவத்தால்) முதிர்ந்த பெரியோர்; வேந்தர்கள் – அரசர்கள்;
ஆதியர் – முதலானோர்; நின்வயின் -உன்னிடத்து; அடைந்த காரியம் –
வந்து சேர்ந்த செயல்; நீதியும் -(மக்களுக்கு நன்மை செய்ய உள்ள) அரச
நீதியையும்; தருமமும் – (அவரவர் செயலை அவரவர்செய்தற்குத்
தடையிலாத) அரச தர்மத்தையும்; நிறுவ – (அரசன் இல்லாமையால்
சிதையாவண்ணம்)நிலை நிறுத்தவே; நீ-; இது – இச்செயலை; மனத்துக்
கோடி – மனத்தின் கண்நினைத்துக் கொள்வாயாக.’

———-

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய! நீ
இருமையும் தருவதற்கு இயைவது; ஈண்டு, இது,
தெருள் மனத்தார் செய்யும் செயல் இது ஆகுமால்.–6-

ஐய! நீ-;தருமம் என்று ஒரு பொருள் – அறம் என்று சொல்லப்
படுகின்ற ஒப்பற்ற ஒரு பொருளை; தந்து – உலகிற்குத் தந்து (மக்கள்
அனைவரையும் மேற்கொள்ளுமாறு செய்து); நாட்டுதல்-நிலைநிறுத்துதல்;
அருமை என்பது – மிகவும் அருமையான செயல் என்பதனை; பெரிது
அறிதி – நன்கு அறிவாய்; ஈண்டு – இவ்விடத்தில்; இது – இவ்வறம்;
இருமையும் -இம்மை, மறுமை ஆகிய இரண்டையும்; தருவதற்கு -;
இயைவது – பொருந்தியதாகும்; இது -இவ்வறம்; தெருள்மனத்தார் –
தெளிவுபெற்ற மனம் உடைய மேலோர்; செயும் செயல்ஆகும் – செய்யும்
செயலாகும்.

———-

‘வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம்,
நள் உறு கதிர் இலாப் பகலும், நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும், தேர்தரின்,
உள் உறை உயிர் இலா உடலும், ஒக்குமே.–7-

‘தேர்தரின்- ஆராயும்பொழுது; வள்உறு வயிரவாள் அரசு –
வளமை பொருந்திய வன்மையான வாளையுடையஅரசனை; இல்வையகம் –
பெறாத உலகம்; நள் உறு கதிர் இலாப் பகலும் – (எல்லோராலும்)
விரும்பப்படுகின்ற சூரியன் இல்லாத பகலையும்; நாளொடும் –
விண்மீன்களோடும்; தெள்ளுறு மதி இலா இரவும் – தெளிந்த
வெண்மையான சந்திரன் இல்லாத இரவையும்; உள்உறைஉயிர் இலா
உடலும் – உள்ளே பொருந்திய உயிர் இல்லாத உடலையும்; ஒக்கும் –
போலும்.’

——–

‘தேவர்தம் உலகினும், தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்,
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம்.–8-

‘தேவர்தம் உலகினும் – தேவலோகத்திலும்; தீமை செய்து உழல்-
பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற; மா வலி அவுணர்கள்
வைகும் நாட்டினும்- பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள
நாடுகளிலும்; ஏ எவை உலகம் என்று இசைக்கும்அன்னவை – எவை
எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய்
தலைவரை இன்மை – தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல்
இருத்தலை; கண்டிலம்- (யாம்) பார்த்திலோம்.’

——-

‘முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்,
மறையவன் வகுத்தன, மண்ணில், வானிடை,
நிறை பெருந் தன்மையின் நிற்ப, செல்வன,
இறைவரை இல்லன யாவும் காண்கிலம்,–9-

‘முறை தெரிந்து – முறைமையை நன்கு ஆராய்ந்து; ஒருவகை முடிய
நோக்குறின் -ஒருபடித்தாக இறுதிவரை பார்த்தால்; மறையவன் வகுத்தன –
பிரமனால் படைக்கப்பட்டனவாகிய;மண்ணில் வானிடை – நிலத்திலும்,
விண்ணிலும்; நிறை பெருந்தன்மையின் – நிறைந்துவிளங்கும்
பேரியல்போடு; நிற்ப -நிலைத்து நிற்பன; செல்வன – இயங்குவன (வாகிய
பொருள்களில்); இறைவரை இல்லன – தலைவரைப் பெற்றிராத
பொருள்கள்; யாவும் எவையும்; காண்கிலம் – காண்கின்றிலோம். (யாம்)’

——–

‘பூத்த, நாள்மலர் அயன் முதல புண்ணியர்
ஏத்து, வான் புகழினர், இன்றுகாறும் கூக்
காத்தனர்; பின், ஒரு களைகண் இன்மையால்,
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால்.–10-

‘பூத்த – (திருமாலின் திருஉத்தியில்) உண்டான; நாள்மலர் –
அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன் முதல
புண்ணியர் – பிரமதேவன்முதலிய மேலோர்களால்; ஏத்து – பாராட்டப்
பெறுகின்ற; வான் புகழினர் -சிறந்த புகழைப் பெற்ற (உன்) முன்னோர்கள்;
இன்றுகாறும் – இன்று வரையிலும்; கூ -(இந்தப் ) பூமியை; காத்தனர் –
(அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் -இப்போது; ஒரு களைகண்
இன்மையால் – (நீ அரசன் ஆகாதபடியால்)தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை இல்லாமையால்; (இவ்வுலகம்)
நீத்த நீர் – கடலின்கண்; உடைகல நீரது – உடைந்த கப்பல் தத்தளிப்பது
போன்றது; ஆகும் -.’

———

உந்தையோ இறந்தனன்; உம்முன் நீத்தனன்;
வந்ததும், அன்னைதன் வரத்தில்; மைந்த! நீ
அந்தம் இல் பேர் அரசு அளித்தி; அன்னது
சிந்தனை எமக்கு’ எனத் தெரிந்து கூறினான்.-11-

‘மைந்த! – பரதனே!; உந்தையோ இறந்தனன் – உன் தந்தையாகிய
தயரதனோஇறந்துபட்டான்; உம் முன் – உன் தமயனாகிய இராமனோ
(தந்தை சொற்கேட்டு); நீத்தனன் – (அரசைக்) கைவிட்டுக் கானகம்
புகுந்தான்; வந்ததும் – (இந்த அரசுஉனக்குக்) கிடைத்திருப்பதும்;
அன்னை தன் வரத்தில் – உன் தாயாகிய கைகேயியின்வரத்தால் ஆகும்;
நீ அந்தம் இல் பேரரசு அளித்தி – நீ அழிவற்றதாகிய இந்தக்கோசலத்
தரசை ஏற்று நடத்துக; அன்னது – (அவ்வாறு) நீ அரசு ஏற்பது; எமக்குச்
சிந்தனை – எங்களுக்கு எண்ணம்;’ என – என்று; தெரிந்து கூறினான் –
ஆராய்ந்து சொன்னான்.

———-

தஞ்சம் இவ் உலகம், நீ தாங்குவாய்’ எனச்
செஞ்சேவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர்’ என, நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் – அருவிக் கண்ணினான்.–12-

‘இவ் உலகம் – இந்த உலகம்; தஞ்சம் – (உனக்கு) அடைக்கலம்; நீ
தாங்குவாய் – நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்; என – என்று;
முனிவரன் -முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவே –
செம்மையாக; செப்பக் கேட்டலும்- சொல்லக் கேட்டவளவில்; அருவிக்
கண்ணினான் – அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும்பரதன்; ‘நஞ்சினை
நுகர்’ என – விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல; (அதுகேட்டு)
நடுங்குவாரினும் – நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன்த-
பயந்து சோர்ந்தான்.

———

நடுங்கினன்; நாத் தடுமாறி, நாட்டமும்
இடுங்கினன்; மகளிரின் இரங்கும் நெஞ்சினன்;
ஒடுங்கிய உயிரினன்; உணர்வு கைதர,
தொடங்கினன், அரசவைக்கு உள்ளம் சொல்லுவான்;–13-

(பரதன்), நடுங்கினன் – (முனிவன் சொன்னதைக் கேட்டு) நடுங்கி;
நாத்தடுமாறி – (பேசுதற்கியலாமல்) நாக் குழறி; நாட்டமும் இடுங்கினன் –
கண்கள்(குழிவிழுந்து ) உள்செல்லப் பெற்று; மகளிரின் – பெண்களைப்
போல; இரங்கும் நெஞ்சினன்- நெஞ்சினாற் புலம்பிக் கொண்டு; ஒடுங்கிய
உயிரினன்- மூச்சு ஓடுங்கப்பெற்று(மூர்ச்சித்து); உணர்வு கைதர – (பின்னர்)
மூச்சு எழும்பி உணர்வு வரப்பெற; அரசவைக்கு- அரசவையில் உள்ளவர்க்கு;
உள்ளம் – தன் மனக்கருத்தை; சொல்லுவான் தொடங்கினன் – சொல்லத்
தொடங்கினான்.

——–

மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய், முதல்
தோன்றினன் இருக்க, யான் மகுடம் சூடுதல்,
சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால்,
ஈன்றவன் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ?-14-

‘மூன்று உலகினுக்கும்- மேல், நடு, கீழ் என்னும் மூன்று இடங்களில்
உள்ள மூன்று உலகங்களுக்கும்; ஓர் முதல்வன்ஆய் – ஒப்பற்ற
முதற்பொருளாகி; முதல் தோன்றினன் இருக்க – (எனக்கு) முன்னே
பிறந்தவனாகிய இராமன் இருக்கின்ற போதே; யான் மகுடம் சூடுதல் –
யான் அரசனாக அரசுகட்டில் ஏறி மணிமகுடத்தைச் சூடிக்கொள்ளுதல்;
சான்றவர் உரைசெய – பெரியோர்கள்தக்கதே என்ற தம் வாயால்
எடுத்துரைக்க; தருமம் ஆதலால் – அறம் என்று கருதப்படுகின்றது
ஆதலாம்; ஈன்றவள் செய்கையில் – (இதே செயலைச் செய்த) என்னைப்
பெற்றதாயாகிய கைகேயியின் செயற்பாட்டில்; இழுக்கு உண்டாகுமோ –
தவறு உளதாகுமா?’

———

அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை,
நடைவரும் தன்மை நீர், “நன்று இது” என்றிரேல்,
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து, இது
கடை வரும் நீ நெறி்க் கிலியின் ஆட்சியோ!–15-

‘நடை வரும் தன்மை நீர்- உயரிய ஒழுக்கத்திற் செல்லும் தன்மை
உடைய சான்றோர்களாய நீவிர்; அடைவு அருங்கொடுமைஎன் அன்னை
செய்கையை – ஓரிடத்திலும் சென்று அடைதற்கு அரிய பெருங்கொடுமை
உடைய என்தாய் கைகேயியின் செயலை; ‘இது நன்று’ -; என்றிரேல் –
என்று சொல்வீராயின்; இது- இக்காலம்; ஈண்டு – இவ்விடத்தில்;
இடைவரும் காலம் இரண்டும் நீத்து -திரேதாயுகம், துவாபரயுகம்
என்னும் இரண்டு காலமும் கடந்து சென்று; கடைவரும் – நான்குயுகங்களில்
இறுதியில் உள்ள; தீ நெறி – தீயவழியில் (மக்களைச்) செலுத்துகின்ற;
கலியின் ஆட்சியோ! – கலிபுருடனின் ஆட்சிக்காலமாகிய கலியுகமோ?’

அறத்தின் ஆட்சி மங்கிக் கொடுமை மலிந்திருப்பது கலியின் இயல்பு
என்பதனைப் ‘பொலிக. கலியும் கெடும் கண்டு கொண்டீர்” (திவ்யப். 3352.)
“கலியிருள் பரந்த காலை”(கலிங்கத். அவதாரம். 30 ) “தருமந் தவிர்ந்து
பொறைகெட்டுச்சத்தியஞ் சாய்ந்து தயை, தெருமந்து தண்பூசனை முழுதுஞ்
சிதையக், கலியே பொருமந்தக் காலம்”(திரு அரங்கத்துமாலை. 75.) என
வருவன கொண்டு அறியலாம்.

————

வேத்தவை இருந்த நீர், விமலன் உந்தியில்
பூர்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்,
மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர்எனின், காட்டிக் காண்டிரால்.-16-

‘வேத்தவை இருந்த நீர்- அரசவையில் அமர்ந்துள்ள நீவிர்;
விமலன் உந்தியில் பூத்தவன் முதலினர் -திருமாலின் திருவுந்தித்
தாமரையில் தோன்றிய பிரமதேவன் முதலிய; புவியுள் தோன்றினர்-
மண்ணுலகத்தில் தோன்றிய (அரசு புரிந்த) அரச குலத்தினருள்; மூத்தவர்
இருக்கவே -உடன் பிறந்தவர்களுள் வயதால் முதிர்ந்தவர் இருக்க; நிலம்
முறைமையால் காத்தவர் – உலகத்தைமுறைப்படி (அரசு நடத்திக்)
காத்தவர்கள்; உளர் எனின் – இருப்பார்கள் ஆயின்;காட்டி – அவர்களைச் சான்றாகக் காட்டி; காண்டிர் – உம் கருத்தையும்
ஒப்புக் காண்பீர்களாக.

———

நல் நெறி என்னினும், நான் இந் நானில
மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்;
அன்னவன்தனைக் கொணர்ந்து, அலங்கல் மா முடி
தொல் நெறி முறைமையின் சூட்டிக் காண்டிரால்.–17-

‘நான் -; நல் நெறி என்னினும் – (அரசு புரிவது) தரும நெறியே
என்று நீங்கள்சான்றுகளால் நிரூபித்த வழியும்; இந் நானில மன்
உயிர்ப்பொறை – இப்பூமியில்உயிர்களைப் பாதுகாக்கும் சுமையை; சுமந்து
இருந்து வாழ்கிலேன் – தூக்கி அரசனாக இருந்துவாழ உடன்
படமாட்டேன்; அன்னவன்தனைக் கொணர்ந்து – அந்த (அரசாட்சிக்குரிய)
இராமனைக் கொண்டு வந்து; அலங்கல் மாமுடி – மலர் மாலையோடு கூடிய
மகுடத்தை; தொல்நெறி முறைமையின் – தொன்று தொட்டு வரும் மரபு
வழிப்படி; சூட்டிக் கண்டிர் -(அவன் தலையில்) அணிவிக்கக் காணுங்கள்.’

———

அன்று எனின், அவனொடும் அரிய கானிடை
நின்று, இனிது இருந் தவம், நெறியின் ஆற்றுவென்;
ஒன்று இனி உரைக்கின், என் உயிரை நீக்குவென்’
என்றனன்; என்றபோது; இருந்த பேர் அவை,–18-

‘அன்று எனின் – (இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வந்து முடி
சூட்டல்) இயலாதுஆயின்; அவனொடும் – அந்த இராமனோடும்; அரிய
கானிடை – வாழ்தற்கரியகாட்டிடத்து; நின்று – வாழ்ந்து; இருந்தவம் –
பெரிய தவத்தை; இனிது -இனிமையாக; நெறியின் – செய்தற்குரிய
முறைப்படி; ஆற்றுவென் – செய்வேன்; இனி -இதற்குமேல்; ஒன்று
உரைக்கின் – (மாறாக) ஒன்றை நீங்கள் சொன்னால் (என்னை ஏற்றுநடத்த
வற்புறுத்தினால்); என் உயிரை நீக்கு வென் – என் உயிரை அழித்துக்
கொள்வேன்; என்றனன் – என்று சொன்னான்; என்றபோது – என்று பரதன் சொல்லியபோது; இருந்த பேர்
அவை -அங்கே அமர்ந்திருந்த அரசவையில் உள்ளார்……

அரசவையில் உள்ளார்….‘வாழ்த்தினார்’ (2263) எனப் பின்வரும் கவியிற்
சென்றுமுடியும்.

———-

‘ஆன்ற பேர் அரசனும் இருப்ப, ஐயனும்
ஏன்றனன், மணி முடி ஏந்த; ஏந்தல் நீ,
வான் தொடர் திருவினை மறுத்தி; மன் இளந்
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார்?-19-

ஆன்ற – குணங்களான் அமைந்த; பேர் அரசனும் – பெருமை
மிக்க தயரதனும்;இருப்ப – உயிரோடு இருக்கின்றபோதே; ஐயனும் –
இராமனும்; மணிமுடி ஏந்த -மணிகள் அழுத்திச் செய்யப்பெற்ற
மகுடத்தைத் (தலையில்) தாங்க; ஏன்றனன் -உடன்பட்டான்; ஏந்தல் நீ –
பெருமையின் உயர்ந்த பரதனே! நீ; வான் தொடர்திருவினை – மிக
உயர்ந்த பாரம்பரியமாக வருகின்ற அரசச்செல்வத்தை; மறுத்தி -வேண்டாம்
என்கிறாய்; மன் இளந்தோன்றல்கள் – அரசகுலத்தில் தோன்றிய இளைய
குமாரர்களில்; நின்னின் தோன்றினார்? – உன்னைப் போலப் புகழுடன்
தோன்றியோர்;யார் உளர் – யார் இருக்கின்றார்கள்?’ (எவரும் இல்லை
என்றபடி)

——–

ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும், வளர்க்க வேண்டுமோ?
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்,
வாழிய நின் புகழ்!’ என்று வாழ்த்தினார்.–20-

‘ஆழியை உருட்டியும்- (அரசேற்று நடத்தி) ஆனைச்சக்கரத்தைச்
செலுத்தியும்; அறங்கள் போற்றியும் -பல்வகையான அறச்செயல்களைப்
பாதுகாத்தும்; வேள்வியை இயற்றியும் – (அரசர்க்குரியபரி மேதம், இராயசூயம் முதலிய) யாகங்களைச் செய்தும்; வளர்க்க
வேண்டுமோ? – (நின்புகழைஇனி நீ) வளர்க்க வேண்டியதில்லை;
நின்புகழ் – (இத்தகைய நற்குண நற்செயல்களால்இப்போது பெற்றுள்ள)
நின்புகழே; ஏழினோடு ஏழ்எனும் உலகம் எஞ்சினும் – பதினான்கு
உலகமும் அழிந்திட்டாலும்; வாழிய – வாழ்வதாக;’ என்று வாழ்த்தினார்-.

———-

குரிசிலும், தம்பியைக் கூவி, ‘கொண்டலின்
முரசு அறைந்து, “ இந் நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு” என்பது சாற்றி, தானையை,
“விரைவினில் எழுக!” என, விளம்புவாய்’ என்றான்.–21-

குரிசிலும் – பரதனும்; தம்பியைக் கூவி – (தன்) இளவலான
சத்துருக்கனனைஅழைத்து; கொண்டலின் – மேகம் போல; முரசு
அறைந்து – இடியென ஒலிக்கும்முரசினை அடித்து; இந் நகர் முறைமை
வேந்தனை – இந்நகரத்திற்கு மரபு வழிப்படி அரசனாகவேண்டிய
இராமனை; ஈண்டுத் தருதும்’ – காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து
வரப்போகிறோம்; என்பது சாற்றி – என்னும் செய்தியை அறிவித்து;
தானையை – நம்சேனைகளை; ‘விரைவினில் எழுக’ என – (இராமனை
அழைத்து வர) விரைவாகப் புறப்படுக என்று;விளம்புவாய்’ –
சொல்லுவாயாக;’ என்றான் – என்று கட்டளை இட்டான்.

———-

நல்லவன் உரைசெய, நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்தலால் – உயிர் இல் யாக்கை அச்
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே.–22-

நல்லவன் உரை செய- நற்குணத்தாற் சிறந்த பரதன் பணிக்க; நம்பி-
சத்துருக்கனன்; கூறலும் – (இராமனைஅழைத்து வரும் செய்தியைச்)
சொல்லுதலும்; அல்லலின் – துன்பத்தால்; அழுங்கிய- இரங்கிக்கெட்ட;
அன்பின் மாநகர் – இராமன்பால் அயரா அன்பினை உடைய; அயோத்தி
மாநகர மக்கள்; உயிர் இல் யாக்கை- உயிர் இல்லாத உடம்புகள் எல்லாம்;
அச்சொல் எனும் அமிழ்தினால்- அந்த வார்த்தை என்னும் அமுதத்தால்;
துளிர்த்தது -(மீண்டும் உயிர் பெற்றுத்) துளிர்விட்டது; என்ன – என்று
சொல்லும்படி; ஒல்லென -பேராலி உண்டாகுமாறு; இரைத்தது – மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர்.

——–

அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள
புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி
கவிக்கும்’ என்று உரைக்கவே, களித்ததால் – அது
செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?–23-

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய்- ஐம்புலன்களை
அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக; புவித்தலை உள உயிர்
எலாம் -உலகத்திடத்து உள்ள உயிர்கள் எல்லாம்; ‘இராமன் பொன்முடி
கவிக்கும்’ – இராமன்பொன்மயமான மகுடம் சூடப்போகிறான்; என்று
உரைக்கவே என்று (முரசொலி மூலம்சத்துருக்கனன்) சொல்லவே;
களித்தது – பெரு மகிழ்ச்சி அடைந்தன; அது – அந்தச் சொல்;
செவிப்புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொல் – செவி யென்னும்
பொறி,கேள்வி என்னும் புலம் அனுபவிக்கும்படியான ஒப்பற்ற
தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

———

படு முரசு அறைந்தனர், ‘பரதன் தம்முனைக்
கொடி நகர்த் தரும்; அவற் கொணரச் சேனையும்
முடுகுக’ என்ற சொல் மூரி மா நகர்,
உடுபதி வேலையின் உதயம் போன்றதே!–24-

‘பரதன் – ; தம் முனை- தன் அண்ணனாகிய இராமனை; கொடி
நகர் – கொடிகள் கட்டப்பெற்றுள்ள அயோத்தி மாநகர்க்கு;தரும் –
அழைத்துவரப் போகிறான்; அவன் கொணர – அந்த இராமனை
அழைத்துவர; சேனையும் முடுகுக’ – சேனைகளும் புறப்படுவதற்கு
விரைவாக; என்ற படுமுரசு அறைந்தனர் சொல்- என்றிவ்வாறு ஒலிக்கும்
முரசினை அடித்தவர்கள் கூறிய சொல்லானது; மூரி மா நகர் -பெருமையும்
சிறப்பும் உடைய அயோத்தி நகரமாகிய; வேலையின் – சமுத்திரத்திலே;
உடுபதி – விண்மீன்களுக்குத் தலைவனாகிய சந்திரனின்; உதயம்
போன்றது -தோற்றம் போன்றது.

———

எழுந்தது பெரும் படை – ஏழு வேலையின்,
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி, முந்து எழ,
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை; போய்க்
கழிந்தது துயர், நெடுங் காதல் தூண்டவே.–25-

பெரும் படை – பெரிய (அந்தச்) சேனை; மொழிந்த பேர்
ஊழியின் -(எல்லோராலும்) பேசப்படுகின்ற உலக இறுதிக் காலத்தில்; ஏழு
வேலையின் – ஏழுகடல்களும் பொங்கி எழுந்தது போல; முழங்கி –
பேரொலி செய்து; முந்து எழ -முற்பட்டுப் புறப்பட; (அதனால்) கேகயன்
மடந்தை ஆசை – கைகேயியின் (தன் மகன்அரசாள வேண்டும் என்னும்)
ஆசை; அழிந்தது – கெட்டழிந்தது; பானது உள் நின்றுசெலுத்திவிட;
துயர் – (இராமனைப் பிரிந்ததனாலும், பிரித்ததனாலும்) உண்டாகியதுன்பம்;
போய்க் கழிந்தது – மிகவும் அதிகமாகியது.

———

பண்ணின புரவி, தேர், பகடு, பண்டியும்,
மண்ணினை மறைத்தன; மலிந்த மாக் கொடி
விண்ணினை மறைத்தன; விரிந்த மாத் துகள்,
கண்ணினை மறைத்தன, கமலத் தோனையே–26-

பண்ணின – அலங்கரிக்கப்பெற்றனவாகிய; புரவி, தேர், பகடு,
பண்டியும்- குதிரை, தேர், யானை, வண்டி ஆகியவை; மண்ணினை
மறைத்தன – (வெற்றிடம்இல்லாமல் பரந்திருத்தலின்) மண்ணை
மறைத்துவிட்டன; மலிந்த மாக் கொடி -(சேனைகளில் அங்கங்கே)
நிரம்பியுள்ள பெரிய கொடிகள்; விண்ணினை மறைத்தன – (ஆகாயம்எங்கும்
கட்புலன் ஆகாதபடி பரந்திருத்தலின்) ஆகாயத்தை மறைத்து விட்டன;
விரிந்த மாத்துகள் – சேனைகள் செல்வதால் மேல் எழுந்து விரிந்த
பெரிய புழுதித் துகள்கள்; கமலத்தோனை – (சத்திய லோகத்தில் உள்ள)
பிரமதேவனது; கண்ணினை மறைத்தன -கண்களை மறைத்துவிட்டன.

——

ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;
காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே.–27-

‘ஒல்’ என் பேர் ஒலி – (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய)
‘ஒல்’ என்றபெரிய ஆரவாரம்; ஈசன் – (அழித்தற் கடவுளாகிய) சிவன்;
இவ் உலகினை அழிக்கும்நாள் – இந்த உலகினை அழித்துச் (சர்வ
சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும்ஓசையின் – எழுகின்ற
பேரோசையைவிட; நிமிர்ந்துளது – மேற்சென்றுளது; அவ்அனிகராசி –
அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் – காயாம்பூப் போலும்
கருநிறமுடைய இராமனை; காண மூண்டு எழும் ஆசையின் –
காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்;
நிமிர்ந்தது – மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.)

———

படியொடு திரு நகர் துறந்து, பல் மரம்
செடியோடு தொடர் வனம் நோக்கி, சீதை ஆம்
கொடியொடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப்
பிடியொடு நடந்தன – பெருங் கை வேழமே.–28-

பெருங்கை வேழம்- (சேனையில் உள்ள) பெரிய துதிக்கையையுடைய
களிற்று யானைகள்; பிடியொடு – (தம்) பெண் யாணைகளுடனே; படியொடு
திருநகர் துறந்து – பூவுலகஆட்சியோடு அழகிய அயோத்தி நகரத்தையும்
விட்டு; செடியொடு பல்மரம் தொடர் வனம்நோக்கி – செடிகளோடு
பல மரங்கள் ஒன்றை ஒன்று பற்றி நெருங்கியுள்ள காட்டை நோக்கி;சீதை
ஆம் கொடியொடு – சீதாபிராட்டி யென்கின்ற கொடியுடனே; நடந்த –
நடந்து சென்ற; அக் கொண்டல் ஆம் என – அந்த மேச நிறனாகிய
இராமன் போல; நடந்தன – நடந்து சென்றன.

——-

சேற்று இள மரை மலர் சிறந்தவாம் எனக்
கால் தளம் பொலிதரு கன்னிமா ரொடும் –
ஏற்று இளம் பிடிக்குலம் – இகலி, இன் நடை
தோற்று, இள மகளிரைச் சுமப்ப போன்றவே.–29-

சேற்று இள மரை மலர் – சேற்றின்கண் தோன்றுவன ஆகிய
இளமையான தாமரை மலர்; சிறந்தவாம் என – எம்மைக் காட்டிலும்
சிறந்தனவோ; என – என்று கேட்பது போல; கால்தளம் – பாதமாகிய
மலரிதழ்; பொலிதரு – விளங்குகின்ற; கன்னிமாரொடும் – இளம்
பெண்களுடனே; இளம் பிடிக்குலம் – இளைய பெண்யானைக்கூட்டம்;
இன் நடை இகலி – இனிய நடையால் பகைத்து; ஏற்று – (எதிர்) ஏற்று;
தோற்று – நடை அழகில் அவர்கள் விஞ்சியபடியால்) தோல்வியடைந்து;
(அதற்குத்தண்டனையாக) இள மகளிரைச் சுமப்ப போன்ற –
இளம்பெண்களை (இப்போது) சுமந்து திரிவனபோன்றன.

—-

வேதனை வெயிற்கதிர் தணிக்க, மென் மழைச்
சீதநீர் தொடு நெடுங் கொடியும் சென்றன;
கோதை வெஞ்சிலையவன் கோலம் காண்கிலா
மாதரி்ன் நுடங்குவ, வரம்பு இல் கோடியே.–30-

வேதனை – வருத்தத்தைத் தரும்; வெயிற்கதிர் தணிக்க –
சூரியனால் ஆகியவெம்மையை (இராமனை அழைத்து வரச் செல்லும்
சேனைகளுக்கு) இல்லாதவாறு போக்க; (வானளாவிநின்று) மென்மழைச்
சீதநீர் தொடு – மெல்லிய மேகங்களது குளிர்ச்சி பொருந்தியநீரைத்
தொட்டுக் கொண்டு (கீழ்த் துளித்து); சென்றன – (சேனைகளின் இடையே)
சென்றன வாகிய; வரம்பு இல் கோடி – கணக்கற்ற கோடியளவான;
நெடுங்கொடியும் -நீண்ட கொடிகளும்; கோதை – கையுறை அணிந்த;
வெஞ்சிலையவன் – கொடிய(கோதண்டம் எனப்பெறும்) வில்லை ஏந்திய
இராமனது; கோலம் – பட்டாபிடேகக் கோலத்தை; காண்கிலா – காணப்பெறாத; மாதரின் – பெண்கள் போல;
நுடங்குவ – அசைகின்றனவாயின.

——-

வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்தென,
அண்ணல் வெங்கதிரவன், அளவுஇல் மூர்த்தி ஆய்,
மண்ணிடை இழிந்து ஒரு வழிக்கொண்டாலென,
எண்ண அரு மன்னவர் களிற்றின் ஏகினார்.–31-

எண்ண அரு மன்னவர் – கணக்கிட முடியாத அரசர்கள்; அண்ணல்
வெங் கதிரவன்- பெருமை பொருந்திய வெப்பமுள்ள ஒளிக்கதிர்களை
உடைய சூரியன்; அளவு இல் மூர்த்திஆய் – அளவுபடாத பல
வடிவங்களை எடுத்துக்கொண்டு; மீ வெண்மதி செல – தன்மேலே
வெண்மதியானது சென்றுகொண்டிருக்க; மேகம் ஊர்ந்து – (தான்)
மேகத்தின் மேல்ஊர்தியாக ஏறி; மண்ணிடை இழிந்து – பூமியில் இறங்கி;
ஒரு வழிக் கொண்டால் என- ஒரேவழியில் பயணம் செய்தாற் போல;
களிற்றின் ஏகினார் – (வெண்குடைநீழலில்) யானைமேல் சென்றார்கள்.

———

தேர்மிசைச் சென்றது ஓர் பரவை; செம்முகக்
கார்மிசைச் சென்றது ஓர் உவரி; கார்க்கடல்,
ஏர்முகப் பரிமிசை ஏகிற்று; எங்கணும்
பார்மிசைப் படர்ந்திது, பதாதிப் பௌவமே.–32-

ஓர் பரவை – (சேனை வீரர்களாகிய) ஒரு கடல்; தேர் மிசைச்
சென்றது -தேர்மேல் சென்றது; ஓர் உவரி – (யானை வீரர்களாகிய) ஒரு
சமுத்திரம்; செம்முகக் கார் மிசைக் சென்றது – சிவந்த (புள்ளிகளை
உடைய) முகத்தை உடைய மேகம்(போன்ற யானை) மேல் சென்றது;
கார்க்கடல் – கரிய (குதிரை வீரர்களாகிய) கடல்; ஏர்முகப் பரிமிசை
ஏகிற்று – அழகிய முகத்தை உடைய குதிரைகளின் மேல் சென்றது; பதாதிப் பௌவம் – காலாட் படை வீரர்களாகிய கடல்;
பார்மிசைஎங்கணும் படர்ந்தது – மண்ணில் மேல் எல்லா இடங்களிலும்
படர்ந்து சென்றது.

——–

தாரையும் சங்கமும், தாளம் கொம்பொடு
பார்மிசைப் பம்பையும், துடியும், மற்றவும்,
பேரியும், இயம்பல சென்ற – பேதைமைப்
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே.–33-

தாரையும் – தாரை என்ற நீண்ட ஊது கொம்பும்; சங்கமும் -;
தாளம் -; கொம்பு – வளைந்த ஊது கருவியும்; பம்பையும் – பம்பை
என்னும் பறையும்; துடியும் -; பேரியும் – பெருமுரசும்; மற்றவும் –
ஏனைய வாத்தியங்களும்; பார்மிசை – மண்ணின் மேல்; பேதைமைப்
பூரியர் குழாத்திடை – அறியாமையுடையபுல்லர்கள் கூட்டத்தின்கண்;
அறிஞர் போல – (கற்றுத் துறைபோகிய) நல்லறிவாளர்ஒன்றும் பேசாமல்
மௌனமாக இருத்தல் போல; இயம்பல சென்ற – ஒலிக்காமல் சென்றன.

——

தா அரு நாண் முதல் அணி அலால், தகை
மே வரு கலங்களை வெறுத்த மேனியர்,
தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர்,
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார்.–34-

தேவரும் மருள்கொளத் தெரியும் காட்சியர் – தேவர்களும்
திகைக்கும் ஒளிர்கின்றதோற்றமுடைய; மகளிர் – பெண்கள்; தா அரு-
குற்றம் அற்ற; நாண் முதல்- நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனப்பெறும்;
அணி அலால் – அணிகலன்கள் அல்லாமல்; தகை மேவரு – அழகு
பொருந்திய(பொன்னாலும் மணியாலும் புனைந்த); கலன்களை –
அணிகளை; வெறுத்த மேனியர் -வேண்டாம் என்று நீக்கிய உடம்போடு;
பூ உதிர் கொம்பு என – பூக்களை உதிர்த்துவிட்டபூங்கொம்பு போல;
போயினார் – (அக்கூடத்தில்) சென்றார்கள்.

———–

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனிக்குடை மீது இலாப் படை
பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே.–35-

அதிர் கடல் – ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற; வையகம்
அனைத்தும் – உலகம் முழுவதையும்; காத்தவன் – (நீதி வழுவாது)
காப்பாற்றிய தயரதசக்கரவர்த்தியின்; விதிவரு – மரபுவழியில்
பாரம்பரியமாக வருகின்ற; தனிக்குடை- ஒப்பற்ற வெண்கொற்றக்குடை;
மீது இலா – மேலே பிடிக்கப்படாது உள்ள; படை- அச்சேனை;
பொதி பல கவிகை மீன் – நெருங்கிய பலவாகிய (மற்றை மன்னர்களின்)
வெண்குடைகளாகிய விண்மீன்கள்; பூத்தது ஆகிலும் – வானம் எங்கும்
நிரம்பித்தோன்றின ஆயினும்; கதிர் மதி – ஒளியுடைய சந்திரன்;
நீங்கிய கங்குல் – இல்லாத இரவை; போன்றது -.

———-

செல்லிய செலவினால், ‘சிறிய திக்கு’ எனச்
சொல்லிய சேனையைச் சுமந்ததே எனில்,
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை, ‘ஓர்
மெல்லியல்’ என்றவர் மெலியரேகொலாம்.?–36-

செல்லிய செலவினால் – பரந்து செல்கின்ற செல்கையால்;
‘திக்கு சிறிய’- திசைகள் இடம் போதாமல் சிறியன; எனச் சொல்லிய
சேனையை – என்று பிறரைச்சொல்லச்செய்கின்ற (பேரளவுள்ள) இந்தச்
சேனையை; சுமந்தது எனில் – (இந்தப் பூமி)சுமந்து கொண்டுள்ளது
என்றால்; ஒல் ஒலி வேலை நீர் உடுத்த பாரை – ஒல்லென்றுஒலிக்கின்ற
கடல் நீரை ஆடையாகச் சுற்றி உடுத்துக் கொண்டுள்ள பூமியை; மெல்லியல்-
மென்மைத் தன்மை உடைய பெண் என்று சொன்னவர்கள்; மெலியர்
கொல் – மெலியர்போலும்.

———-

தங்கு செஞ் சாந்து அகில் கலவை சார்கில,
குங்குமம் கொட்டில, கோவை முத்து இல, –
பொங்கு இளங் கொங்கைகள் – புதுமை வேறு இல
தெங்கு இளநீர் எனத் தெரிந்த காட்சிய.–37-

பொங்கு இளங் கொங்கைகள் – (மகளிரது) பருத்துக் கொண்டுள்ள
இளமையானதனங்கள்; தங்கு செஞ்சாந்து அகில் கலவை சார்கில –
(தம்மிடம் பூசப்பெற்று எப்பொழுதும்) தங்கியிருக்கப்பெற்ற செஞ்சந்தனம்,
அகில் குழம்பு, கலவைச் சாந்து இவை(இப்போது) சாரப் பெறாமல்;
குங்குமம் கொட்டில – குங்குமக் குழம்பு பூசப்பெறாமல்; கோவை முத்து
இல – முத்துவடம் அணியாமல்; வேறு புதுமை இல – வேறு புதிய
செயற்கை நலன்கள் இல்லாமல் (இருப்பதால்); தெங்கு – தென்னையின்;
இளநீர்எனத் தெரிந்த காட்சிய – இளநீர்க் காய்கள் போலத் தோற்றம்
உடையவாயின.

———-
இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளங் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று எனப் பொலிந்தன – குலவுத் தோள்களே.–38-

குலவுத் தோள்கள் – (ஆண்களின்) திரண்ட தோள்கள்; இன்
துணைவர் -(அவர்களுடைய) இனிய மனைவியரது; முலை எழுது
சாந்தினும் – முலை மேல் தொய்யில்எழுதப்பெற்ற சாந்தினால்; மன்றல்
அம் தாரினும் – (தாமே அணியும்) மணம் வீசும்மாலையால்;
மறைந்திலாமையால் – இப்பொழுது மறையாமல் (இயற்கையாகஉள்ளபடி) விளங்கித் தோன்றுதலால்; துன்று இளங்கொடி முதல் –
நெருங்கிய இளைய கொடிமுதலாகிய; தூறு நீங்கிய – புதர்கள் இல்லாமற்
போன; குன்று என – மலைபோல;பொலிந்தன – தோன்றின.

————

நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின்
துறை அற, அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன – கொற்றம் முற்றுவான்.
கறை அறக் கழுவிய கால வேலையே.–39-

நறை அறு கோதையர் – வாசனைப் புகை ஊட்டாத கூந்தலை
உடைய மகளிர்; நாள்செய் கோலத்தின் துறை அற – நாள்தோறும்
செய்யப்படுகின்ற அலங்காரத்தின் தன்மைகள்நீங்கினமையால்; அஞ்சனம்
துறந்த – மை தீட்டப் பெறாத (இயற்கையான தோற்றத்தோடுஉள்ள)
கண்கள்; கொற்றம் முற்றுவான் – (போர்செய்து) வெற்றியை முடித்த
ஒருவன்; கறை அறக் கழுவிய – போர்காலத்துப் படித்த போன்ற
வேற்படையை; குறை அற நிகர்ந்தன- குறைவில்லாமல் ஒத்திருக்கின்ற
ஆயின.

——–

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில
தெரிவையர் அல்குல், தார் ஒலி இல்தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி,
அரிஇனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே.–40-

தெரிவையர் அல்குல் – மகளிரது இடைப்பகுதி; தார் ஒலி இல்
தேர் என -மணி ஒலி இல்லாத (அலங்கரிக்கப்பெறாத) தேர் போல; மணி
விரி மேகலை விரவி ஆர்க்கில- மணிகள் பதிக்கப் பெற்ற மேகலை
அணியப்பெற்றிலாமல் ஒலி யற்றவையாய் இருந்தன; பவளச் சீறடி –
பவளம் போன்ற சிவந்த நிறம் வாய்ந்த சிறிய அடி; அரி இனம்
ஆர்க்கிலாக் கமலம் என்ன – வண்டுக் கூட்டங்கள் ஒலிக்காத தாமரை
மலர் போல; பரிபுரம் ஆர்க்கில – சிலம்புகள் ஒலிக்கப்பெறாமல், உள்ளன.

——–

மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே கொலாம்!
புல்கிய மணிவடம் பூண்கிலாமையால்,
ஒல்கிய ஒரு வகைப் பொறை உயிர்த்தவே.–41-

ஒல்கிய – (மகளிரது ) வளையும் தன்மை உள்ளனவாகிய இடைகள்;
புல்கிய -(எப்பொழுதும் தம்மைத்) தழுவிக் கிடக்கும்; மணிவடம் –
மணிகள் பதிக்கப்பெற்றவடங்களை; பூண்கிலாமையால் – (இப்பொழுது)
அணியாமையால்; ஒருவகைப் பொறைஉயிர்த்த – ஒருபடியாகப் பாரம்
நீங்கி இளைப்பாறின; (எனவே) கேகயன் மடந்தைமல்கிய வாசகம் –
கைகேயியின் வளமான வரம்; நல்கியது – அருள் செய்தது; அரிவையர்
நடுவிற்கே கொல் – மகளிரது இடைக்கு மட்டும் போலும்.

——-

‘கோமகன் பிரிதலின், கோலம் நீத்துள
தாமரைச் செல்வியும், தவத்தை மேவினாள்’
காமனும், அருந்துயர்க் கடலில் மூழ்கினான்
ஆம்’ என, நிகழ்ந்தது – அவ் அளவு இல் சேனையே.–42-

அவ் அளவு இல் சேனை – அந்த அளவற்ற சேனையானது;
கோமகன் பிரிதலின் -அரச குமாரனாகிய இராமன் நாடு விட்டுக் காடு
சென்றபடியால்; கோலம் நீத்துள – தன்அலங்காரத்தைத் துறந்துள்ள;
தாமரைச் செல்வியும் – இலக்குமியும்; தவத்தைமேவினாள் – (தானும்)
தவம் செய்ய விரும்பிச் சென்று விட்டாள்; காமனும் -மன்மதனும்;
அருந்துயர்க் கடலில் மூழ்கினான் ஆம் – (இன்பம் நுகர்வார் எவரும்
இன்மையின் தன்தொழில் இறந்தது என்று) அரிய துன்பக் கடலில்
மூழ்கிவிட்டானாகும்; எனநிகழ்ந்தது – என்று சொல்லுமாறு பொலிவும்
மகிழ்ச்சியும் இன்றிச் சென்றது.

————-

மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்?
கண்ணினும் மனத்தினும் , கமலத்து அண்ணல்தன்
எண்ணினும், நெடிது – அவண் எழுந்த சேனையே.–43-

அவண் எழுந்த சேனை – அயோத்தியில் (அப்போது) புறப்பட்ட
சேனை; மண்ணையும், வானையும், வயங்கு திக்கையும் – பூமி,
ஆகாயம், திசைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருசேர; உண்ணிய நிமிர்
கடல் – உண்ணுதற்கு எழுந்த யுகாந்த காலக் கடலை; ஒக்கும் என்பது
என் – ஒத்திருக்கும் என்று சொல்வது நிரம்பாதாகும்; கமலத்து அண்ணல்
தன் – (படைப்புக் கடவுளாகிய) பிரமதேவனது; கண்ணினும், மனத்தினும்,
எண்ணினும் நெடிது – (படைத்த பொருளைக் காணும்) கண்ணையும்,
நினைக்கும்) மனத்தையும்,(நினைக்கின்ற) நினைப்பையும் கடந்து
நீண்டதாகும்.

———-

அலை நெடும் புனல் அறக் குடித்தலால், அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால், நெடு
மலையினை மண் உற அழுத்தலால், தமிழ்த்
தலைவனை நிகர்த்தது – அத் தயங்கு தானையே.–44-

அத் தயங்கு தானை – விளங்குகின்ற அந்தச் சேனை; அலை
நெடும் புனல் அறக்குடித்தலால் – கடந் நீரை முற்றும் வற்றக்
குடித்தலாலும்; அகம் நிலைபெற நிலைநெறிநிறுத்தலால் – பூமி இடம்
(ஒரு புறம் சாயாது) நிலைபெறும்படி நிலையான முறையில் நிற்கச்
செய்வதாலும்; நெடு மலையினை மண் உற அழுத்தலால் –
பெருமலைகளை மண்ணிற் புகும்படிஅழுத்திவிடுதலாலும்; தமிழ்த்
தலைவனை – தமிழன் தலைவனாகிய அகத்திய முனிவனை; நிகர்ந்தது –
ஒத்துள்ளது.

———-

அறிஞரும், சிறியரும் ஆதி அந்தமா
செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்டநாள்
மறிகடல் ஒத்தது – அவ் அயோத்தி மாநகர்.–45-

அவ் அயோத்தி மாநகர் – அந்த அயோத்தி மா நகரமானது;
அறிஞரும்,சிறியரும் ஆதி அந்தமா – அறிவானமைந்த பெரியோர்
முதல் சிறியவர் வரை (அனைவரும்); செறி பெருந் தானையும் –
நெருங்கியுள்ள பெரிய சேனையும்; திருவும் -செல்வமகளும்; நீங்கலால் –
நீங்கிக் காடு நோக்கிச் சென்றுவிட்டபடியால்; குறியவன் – அகத்திய
முனிவன்; புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – (தன்)நீரை
யெல்லாம் வயிற்றில் அடக்கிய அந்நாளில்; மறிகடல் ஒத்தது- அலைவீசும்
கடல்வறிதானாற் போன்றது.

———–

பெருந் திரை நதிகளம், வயலும், பெட்புறு
மரங்களும், மலைகளும், மண்ணும், கண்ணுறத்
திருந்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அருந்தெரு ஒத்தது – அப் படை செல் ஆறு அரோ.–46-

அப்படை செல் ஆறு – அந்தப் படைகள் செல்கின்ற வழி;
பெருந்திரை நதிகளும்- பேரலைகளைக் கொண்ட நதிகளும்; வயலும் -;
பெட்புறு – விரும்புதல் அமைந்த; மரங்களும் -; மலைகளும் -;
மண்ணும் -; கண்ணுற – பக்கங்களில் கட் புலனாகத் தோன்ற, (அதனால்);
அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோத்தியாகிய தெய்வத் தன்மை
வாய்ந்த பெரு நகரத்தின்; திருந்தல் இல் அருந்தெரு ஒத்தது –
திருத்தமற்ற அரியதெருவைப் போன்றது.

——

‘தார்கள் தாம், கோதைதாம், தாமம்தாம், தகை
ஏர்கள்தாம், கலவை தாம், கமழ்ந்தின்று என்பரால் –
கார்கள்தாம் என மிகக் கடுத்த கைம்மலை
வார் கடாம் அல்லது, அம் மன்னன் சேனையே.–47-

அம் மன்னன் சேனை – (அந்தப் ) பரதன் ஏவிய சேனையில்;
கார்கள்தாம் என- மேகங்களே என்று சொல்லும்படி; மிகக் கடுத்த
கைம்மலை – மிகவும் பொருந்த அமைந்தயானைகள்; வார்கடாம்
அல்லது – பெருகவிடும் மதசலம் அல்லது; ‘தார்கள் தாம், கோதை தாம்,
தாமம் தாம், ஏர்கள் தாம், கலவை தாம் – தார், கோதை, தாமம்,
பல்வசைச் சிறப்பான அழகுப்பொருள்கள், கலவைச் சாந்து (இவற்றின்);
கமழ்ந்தின்று’ -மணம் வீசப் பெறவில்லை; என்பர் – என்று சொல்லுவர்.

——–

ஆள் உலாம் கடலினும் அகன்ற அக்கடல்,
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் –
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே.–48-

ஆள் உலாம் கடலினும் – மக்கள் மரக்கலத்தில் ஏறி உலாவுதற்
கிடனாக உள்ளகடலைக்காட்டிலும்; அகன்ற அக்கடல் – விரிந்து
பரந்துள்ள அச் சேனைக்கடலில்; வாள் உலாம் நுதலியர் – ஒளி பரந்த
நெற்றியுடையமகளிரது; மருங்குல் அல்லது – (மின்னல் போன்ற) இடையே
அல்லாமல்; (வேறாகிய) தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி –
தோளின்கண் தவழ்கின்ற காதணியாகிய குண்டலம்முதலாகிய பழமையாக
அணியும் அணிகளின்; கேழ் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை –
நிறம் விளங்குகின்ற மின்னல் ஒளி மிக்கு ஒளிர்வது இல்லை.

——

மத்தளம் முதலிய வயங்கு பல் இயம்
ஒத்தன சேறலின், உரை இலாமையின்,
சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது – அப் படையின் ஈட்டமே.–49-

அப் படையின் ஈட்டம் -அந்தச் சேனைத் தொகுதி; மத்தளம்
முதலிய வயங்கு பல்இயம் – மத்தளம் முதலாகிய விளங்குகின்ற பல
வாத்தியங்கள்; உரை இலாமையின் ஒத்தனசேறலின் – ஒலிக்காமல்
பொருந்திச் செல்கின்ற படியால் (ஒலியவிந்த படைச்செலவு); நெடுஞ் சுவர்-
நீண்ட சுவரில்; சித்திரம் தீட்டிய – சித்திரமாக வரைந்த; சேனைப்
பத்தியை நிகர்த்தது – சேனை வரிசையை ஒத்துள்ளது.

———-

ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல்
ஊடு உற உரம் தொளைத்து, உயிர் உணாவகை.
ஆடவர்க்கு அரும் பெருங் கவசம் ஆயது –
காடு உறை வாழ்க்கையைக் கண்ணன் நண்ணவே.–50-

கண்ணன் – கண்ணாற் செய்யப்படும் அருளிற் சிறந்தவனாகிய
இராமன்; காடு உறவாழ்க்கையை நண்ண – காட்டின்கண் வசிக்கும்
வாழ்க்கையை மேற்கொள்ள, (அச்செயல்); ஆடவர்க்கு – ஆண்களுக்கு
எல்லாம்; ஏடு அறு கோதையர் – புறவிதழ் நீக்கிய மலர் கொண்டு
தொடுத்த மாலை அணிந்த மகிளிர்; விழியின் எய்த கோல் –
கண்ணிலிருந்து எய்த காதற் பார்வை அம்பானது; உரம் ஊடு உறத்
தொளைத்து உயிர் உணா வகை- மார்பினை ஊடுருவிச் சென்று அவர்கள் உயிரைப்
போக்காதபடி; அரும்பெரும் கவசம் ஆயது- அரிய பெரிய கவசம்
அணிதல் போன்றதாய்ப் பாதுகாப்பானது.

——–

கனங் குழைக் கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின், தீர்ந்தவே கொலாம் –
அனங்கன் ஐங் கொடுங் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில, மகளில் கொங்கையே?–51-

அனங்கன் ஐங்கொடுங்கணை அடரும் ஆடவர் மனம் – மன்
மதனது (பிறரை வருத்தும்)ஐந்து கொடிய கணையால் நெருக்கப்படும்
ஆண்களது மணம்; மகளிர் கொங்கை – பெண்களது முலைகளில்;
கிடந்து உண்கில – இருந்து தங்கி அநுபவியாமல் போயின; கனம் குழை
கேகய மகளின் கண்ணிய சினம் – கனமான காதணி அணிந்த
கைகேயியின்மேல் (மகளிர்) கருதியசினம்; கிடந்து – பெண்கள் இடத்தே
தங்கி; எரிதலின் – எரிகின்றகாரணத்தால்; தீர்ந்தவே கொல் –
(கொங்கைகள் கடும் என்று கருதித்)தவிர்ந்தனவோ?

———–

இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான்.–52-

இன்னணம் – இவ்வாறு; நெடும்படை ஏக – பெருஞ்சேனை செல்ல;
ஏந்தலும் – பரதனும்; தன்னுடைத் திரு அரை – தன்னுடைய அழகிய
இடுப்பிலே; சீரைசாத்தினான் – மரவுரியைத் தரித்து; பின்
இளையவனொடும் – பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய
சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் – (மனத்துள்) தோன்றியதுக்கத்
தோடும்; நல்நெடுந் தேர்மிசை – நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல்
மேயினான் – (வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான்.

———-

தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் – திரு நகர்ப் புரிசை வாயிலே.–53-

தாயரும் – (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்;
அருந்தவத்தவரும் – செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்;
தந்தையின் ஆயமத்திரியரும் – தன் தந்தையாகிய தயரதன் கண்
பொருந்திய மந்திரிமார்களும்; அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத
பலவாகிய சுற்றத்தார்களும்; தூய அந்தணர்களும் -தூய்மையான
வேதியர்களும்; தொடர்ந்து சூழ்வர – தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர;
திருநகர்ப் புரிசை வாயில் போயினன் – அழகிய அயோத்தி நகரத்து
மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான்.

———–

மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்;–54-

இளவல் – நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்; வழிச்
செல்வாரொடும் -(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி)
வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்;
உந்தியே போதல் கண்டு – மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச்
செல்லுதல் கண்டு; ஓடி – விரைந்து சென்று; ஆர்த்து – பேரொலிசெய்து;
அழன்று – கோபித்து; அந்தரத்து எற்றுவான் – ஆகாயத்தில் மேலே
வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்-
அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி – (அவ்விடத்திலிருந்த
மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் – (தம்பிக்குச்) சொல்லலானான்.

——

‘முன்னையர் முறை கெட
முடித்த பாவியைச்
சின்னபின்னம் செய்து, என்
சினத்தைத் தீர்வெனேல்,
“என்னை இன்று என் ஐயன் துறக்கும்”
என்று அலால்,
“அன்னை” என்று, உணர்ந்திலென்,
ஐய! நான்’ என்றான்.–55-

ஐய! – சத்துருக்கனனே!; ‘முன்னையர் முறைகெட – (நம் குலத்து)
முன்னோர்களின் முறைமை சிதைய; முடித்த பாவியை – (வரத்தின்
மூலமாகத்) தன் ஆசையைநிறைவேற்றிக் கொண்ட (என் தாயாகிய) பாவியை;
சின்ன பின்னம் செய்து – கண்டதுண்டம் செய்து; என் சினத்தைத்
தீர்வெனேல் – என் கோபத்தைத் தீர்த்துக்கொள்வேனானால்; என்
ஐயன் – என் தலைவனாகிய இராமன்; இன்று என்னைத் துறக்கும்-
இன்றே என்னைத் தம்பியல்லன் என்று துறந்துவிடுவான்; என்று அலால் –
என்றுகருதி அதனால் அமைதியாக இருந்தேனே அல்லாமல்; (இவளை)
‘அன்னை’ என்று நான் உணர்ந்திலென்- ‘தாய்’ என்று கருதி நான்
அமைதியாக இருந்தேனில்லை; என்றான் -.

——————-

ஆதலால், முனியும் என்று ஐயன், அந்தம் இல்
வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும்,
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய்!
போதும் நாம்’ என்று கொண்டு, அரிதின் போயினான்.–56-

‘கோது இலா அருமறை குலவும் நூல்வலாய்! – குற்றம் இல்லாத
அரிய மறை பொருள்களைத்தன்னிடத்தே கொண்டுள்ள வேத நூலில்
தேர்ச்சி பெற்றவனே!; அந்தம் இல் வேதனைக் கூனியை- முடிவில்லாத
வேதனைகளை அனைவர்க்கும் உண்டாக்கிய கூனியை;
வெகுண்டும் என்னினும்- மிகவும் (வெறுத்துக்) கோபிக்கிறோம் ஆனாலும்;
ஐயன் முனியும் ஆதலால் -இராமபிரான் வெறுப்பான் என்ற காரணத்தால்;
என்று – என்று கருதி; நாம் போதும்- நாம் அவளை விட்டுப் போவோம்;
என்று அரிதின் கொண்டு – என்று சொல்லிச்சிரமப்பட்டு (அவனைத்
தடுத்து) அழைத்துக்கொண்டு; போயினான் – சென்றான்.

———-

மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட,
ஐயனும் தேவியும் இளைய ஆளியும்
வைகிய சோலையில் தானும் வைகினான்.–57-

மொய் பெருஞ் சேனையும் – நெருங்கிய பெரிய சேனையும்; மூரி
ஞாலமும் – பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து –
ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட – பரதனின் பக்கல் ஒரு கடல்
போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய
சோலையில் – இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய
இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் – (பரதன்)
தானும்; வைகினான் – (அன்று) தங்கினான்.

———

அல் அணை நெடுங் கணீர் அருவி ஆடினன்,
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்,
வில் அணைந்து உயர்ந்த தோள் வீரன் வைகிய
புல் அணை மருங்கில், தான் பொடியின் வைகினான்.–58-

(பரதன்) அல்- இரவில்; நெடுங்கண் அனை நீர் அருவி ஆடினன்-
(தன்)நீண்ட கண்களிலிருந்து வருகின்ற நீராகிய அருவியில் மூழ்கி; கல்
அணை கிழங்கொடு கனியும்உண்டிலன் – மலையில் விளையும்
கிழங்குகளோடு பழங்களையும் புசியாது; வில் அணைத்து உயர்ந்த தோள் வீரன் வைகிய- வில்லைத் தழுவியிருக்கும் உயர்ந்த
தோள்களை உடைய இராமன் தங்கியிருந்த; புல்லணைமருங்கில் –
புல்லாலாகிய படுக்கையின் பக்கத்தில்; தான் -; பொடியின் –
மண்புழுதியின்கண்; வைகினான் – தங்கியிருந்தான்.

———–

ஆண்டு நின்று, ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி’ என, தானும் ஏகினான் –
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடர, காலினே,.–59-

‘ஆண்டு நின்று – அங்கிருந்து; ஆண்தகை – ஆடவர் திலகனாய
இராமன்; ஈண்டிய நெறி – நெருங்கிய வழியிலே; அடியின் ஏகினான் –
காலால் நடந்துசென்றான்; என – என்று (அறிந்து); தானும் – பரதனும்;
தூண்டிடு தேர்களும்- செலுத்தப்படும் தேர்களும்; துரகராசியும் –
குதிரைத் தொகுதிகளும்; காண்தகுகரிகளும் – காட்சிக்குப் பொருந்திய
யானைகளும்; தொடர – (தன்னைப்)பின்பற்றிவர; காலின் ஏகினான் –
காலால் நடந்து சென்றான்.

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading