ஸ்ரீ இராமநுச கதி-TAMIL HINDU May 26, 2017 By முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி-

ஸ்ரீ உடையவர் இராமாநுசர் மண்ணுலகில் அவதரித்து மானுடரின் மேம்பாட்டுக்குப் பெருமாளின் அருளோடு
ஆற்றிய புண்ணிய கைகங்கரியங்களைப் பற்றிய பல அரிய செய்திகள்
இவ்வாண்டு முழுதும் ஊடகங்களில் வெளியாயின. வாசித்து உய்ந்தோர் பலர்.

எம்பெருமானாரைப் பற்றி இதுவரை வெளிவராத புதிய செய்தி பக்தமான்மியம் என்னும்
தமிழ் மொழிபெயர்ப்புக் காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது.
இம் மொழிபெயர்ப்புக் காப்பியத்தின் ஆசிரியர் கொங்குக் கச்சியப்பர் எனப் புலவர்களால் போற்றப் பெறும் பெரும் புலவர்,
சிரவை ஆதீனத்தின் இரண்டாம் அதிபர் தவத்திரு கந்தசாமி சுவாமிகள்.
சுவாமிகள் அருளிய பக்த மான்மியம் எனும் இக்காப்பியம் 7367 விருத்தப் பாக்களில்
அரி பத்தர்களின் பெருமையினை விளக்குகின்றது.

பத்தியை உடையவர்கள் பத்தர். அவர்களுடைய மகத்தாகிய பெருமையைக் கூறுவது பக்த மான்மியம்.
பத்தியாவது யாது? அன்பு பத்தி காதல் என்னுஞ் சொற்கள் இச்சையின் மிகுதிப்பாட்டைக் குறிப்பன.
இம்மை வாழ்வில் பரம்பொருளாகிய இறைவனொடு உணர்விற் கலந்து நிற்கும் உணர்வே பத்தி.
இறைவனை நெஞ்சிற் பதித்தலால் எழும் இன்ப உணர்வே பத்தி.
இதனை முழுமையாகப் பெற்றவர்கள் சீவன் முத்தர்கள்.

இந்த நூல் 104 அரி பத்தர்களின் அற்புதமான வாழ்வை விவரிக்கின்றது.
பத்தி என்பது சாமானிய அன்பினைப் போலத் தோற்றமளித்தாலும் பயிலுதற்கரிய தொன்றாம்.
இறைவன் “எற்பணி யாளாய் எனைப் பிரியாதே, ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு, என்வழி நின்றனன்” எனத் தமிழாகமமும் ,
‘பத்திவலையிற் படுவோன்’ எனத் தமிழ் மறையும்,
ஓதினும் அந்நிலை சாமானியத்தில் அடையப்படுவ தொன்றன்று என்னும் உண்மை அரிபத்தர்களின் வாழ்வில் வெளிப்படுகின்றது.
அரியின் பத்தர்களாயினும் அவர்களுக்கும் துன்பமுண்டு. அத்துன்பம் உலக வாழ்வில் மயங்கி
மண் பெண் பொன் ஏனும் மூவேடணையில் உழலுவோரின் துன்பம் போன்றதன்று.
சுடச்சுட ஒளிரும் பொன் போன்று, அரைக்குந்தோறும் மணக்கும் சந்தனம் போன்று, அரிபத்தர்களின்
பத்திப் பெருமையைச் சுடர்விடச் செய்வன. அன்னோர் எதிர்கொள்ளும் சோதனைகளும் துன்பங்களும்
உண்மையில் அவைசோதனைகளும் அல்ல; துன்பங்களும் அல்ல.
அவை பத்தர்களின் மகத்துவத்தை உலக வாழ்வில் உழலும் மாந்தருக்கு உணர்த்த அரி மேற்கொளும் உபாயங்களேயாம்.
அவற்றைக் காப்பியமாக எடுத்துரைப்பதே பக்தமான்மியம்.

சந்திரதத்தர் பத்தமான்மியம் மூல நூலின் ஆசிரியர்; மிதிலையிலே பிறந்தவர்.
கொடுங்கோல் வேந்தனின் ஏவலால் சிறையினில் வருந்தினார். அரியின் மந்திரத்தை ஓதிய வலிமையினால் சிறை நீங்கினார்.
தன் அறிவில் தெளிந்து நாரணனைத் தொழுது, நாரணனை போன்ற குரு சொன்ன உபதேசத்தில் மூழ்கி
யமபயம் அகல, பகவனது அருளினைப் பெற்று, பரந்தாமனின் சொற்படி,
வடமொழியில் பக்தர்களின் பெருமையைச் சாற்றும் பக்தமான்மியம் எனும் காவியத்தை இயற்றினார்.

திருமாலின் பழவடியார்களின் பத்தி ததும்பும் வாழ்க்கையினையும் அடியவர் திருத்தொண்டினையும் எடுத்தியம்பும்
அருமையான காவியம் பக்தமான்மியம். இக்காப்பியதில் இருபதாவது கதியாக அமைந்தது இராமாநுச கதி.
இக்கதியில் கூறப்பட்டுள்ளவாறு இராமானுஜரின் வரலாற்றைக் காண்போம்.

ஆதிசேடன் மீது அறி துயில் கொள்ளும் அச்சுதனின் பொன்னடித் துணைகளைப் பரவுகின்ற அடியார்கள்
தம் சென்னிமிசை பதிதருளும் திருப்பதம் வாய்ந்தோன்;
உயர்ந்த பிராமணக் குலத்தினர் செய்த பெருந்தவம் ஒரு வடிவெடுத்து வதது போன்ற திருமேனி உடையவன்;
இராமானுஜன் எனும் திருநாமம் வாய்ந்த ஆச்சாரியன்.
அன்னவனை ஈன்றருளும் அன்னை தந்தை ஆகியோர் பெயர் இன்னவென முன்னூலினிடை விளங்கவில்லை.
இருப்பினும் பாம்பணைத் துயில்பவனின் ஆயிரம் நாமங்களில் ஒன்று கொண்டவர் தந்தை;
அவனுடைய திருமார்பில் உறைகின்ற திருவின் பெயர்களில் ஒன்று கொண்டவர் அன்னை எனலாம்.

நுண்ணிய அறிவுடையார் ஏத்தும் இராமானுஜப் பேர் ஒண்மையன் தன்னுடைய அறிவாகிய அளவுகோல் கொண்டு
வேத சாத்திரங்கள் கூறும் வளமான பொருள்களை யெல்லாம் அளவிட்டு ஆராய்ந்து பூரண சந்திரன் போல ஒளி திகழ்ந்தான்.
தன் தற்போதம் அறத் தன்னைத் தடுத்தாளும் சற்குரவன் வருதல் எந்நாளோ எனக் காதலனை
வேட்டுருகும் காதலியைப் போல மனம் ஏங்கியிருந்தான்.
வரம்பில் கருணை நாரணன் தன் பத்தன் உளம் நலியச் சகிப்பானோ?
இராமானுஜனின் அதிதீவிர பக்குவந் தெரிந்து, உள்ளங் கையில் நெல்லிக் கனி போன்று
முத்தியை அளிக்கும் மந்திரத்தை அருளினன்.
அழல் நெய்யைப் பற்றுதல் போல இராமானுஜன் அருமந்திரத்தை நெஞ்சிற் பற்றினன்.

பாம்பின் மேல் பரதம் பயிலும் நாரணக் குரவன்,
“ ஒருகணத்திற் பலித்து இன்பத்தைக் காட்டும் இம்மந்திரத்தை விண்ணிற் பொலியும் தேவர்களும் அறியார்கள்.
பத்தியிற் சிறந்த நீ இம்மத்திரத்தைக் கைக்கொண்டு இன்பநிலை எய்துவாயாக” என அருளினான்.

அந்த அரிய மந்திரத்தை இராமானுசன் சிந்தையிற் பதித்து ஏத்திடவே,
மந்த புத்தி உடைய உலகவர்களின் உள்ளத்தில் காண முடியாத பேரானந்தம் விளைந்தது.

“நாம் பெற்ற இப்பேரானந்தத்தை இந்த உலகில் ஆள்வாரிலி மாடெனத் திரிந்து சற்றும் இறையறிவு இலாத
ஆணவ இருளால் சிமிழ்ப்புண்டு உழல்பவர்களும் பெற்று உய்யச் செய்வேன்” என உறுதி பூண்டார்

கீழ்மக்கள் நெஞ்சம்போல் இருண்ட இரவில், பேய்களும் கண்ணுறக்கம் கொளும் யாமத்தில்
அறிவு சூனியரும் தெளியுமாறு குரவன் அருளிய மந்திரத்தை பலமுறை உரக்கக் கூவினான் ,
அந்த இணையற்ற அருளாளன்.

அந்த ஒலி கேட்டு உறக்கம் ஒழிந்து ‘இஃது என்ன ஒலியோ’ என மருண்டவர்களும்
இராமானுசன் சொன்ன மறையொலி நெஞ்சிற் பதியப் பெற்று, ஒருகணத்தில் ஞான சம்பன்னர்களானார்கள்.
ஞானவான்களாகிய அவர்கள், ‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின்” எனும்
ஆன்றோர் நவின்றதை மெய்ப்பிக்குங் கருணையாளனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் பொழிந்து தொழுதனர்.

பன்னிரண்டு ஆண்டுகள் இரவும் பகலும் சோர்ந்துவிடாத மெய்த் தொண்டின் வழி நின்றவர்கட்கே
குருதேசிகனால் அருளப்படும் இம்மந்திரமாகிய அரிய செல்வத்தை இராமானுசன் எளிதில் நமக்குத் தந்தான்,
அவனுடைய பெருமையை நம்மால் உரைக்கவுவும் இயலுமோ எனப்பலரும் புகழ்ந்தேத்தும் இராமானுசருடைய வரலாற்றில் ,
உலகவர் பலர் அறியாத நிகழ்வொன்றை புகல்வேன்.

அத்தகைய புகழ் வாய்ந்த இராமானுசர் தம் சீடர்கள் ஆயிரவர் தம்மைச் சூழ,
‘நீலாசலம்’ எனப் பெயருடைய பூரி ஜகந்நாதேச்சுரத்தைத் தரிசித்து வழிபட அங்கு நண்ணினார்.
ஜகந்நாதரின் பொற்பாதங்களைத் தொழுது வீற்றிருக்கும் நாளில் ஜகந்நாதரைப் பூசிக்கும்
அருச்சகர்களின் செயல்களை முற்றும் ஆராய்ந்தார்.

ஜகந்நாதரைப் பூசிக்கும் அருச்சகர்கள் செயல்கள் காண்போர் உள்ளத்தில் அருவருக்கத் தக்க
அநாச்சாரம் கொண்டனவாக இருந்தன; அவர்கள் எச்சாதியினரொடுங் கூடிக் கலந்து உணவருந்துவாராகி இருந்தனர்.
அந்த அபேதப் பண்பைக் கண்டு இராமானுஜர் ஆச்சரியமுற்றார்.

ஜகந்நாத நகரில் வாழ்வோர் தாம் தாம் அந்நிய சாதியர் என்ற நினைவின்றி அனைவரும் ஒன்றாகக்கூடி
உணவு உண்ணல் ஆகிய கருமங்களைச் செய்கின்றனர். இவர்களை நல்ல ஆசார நியமத்தராக நான் இயற்றுவேன்;
அரிய வேதங்கள் புகல்கின்ற சதாசாரத்தினை (சத்+ ஆசாரம். உயர்ந்தோரின் நல்லொழுக்கம்)
இங்கு நிலைநாட்டாமல் இப்பதியை விட்டு அகலேன் என்று மனதில் உறுதி கொண்டார்.

சீடர்கள் சூழப் பூசா திரவியங்களொடு, அறக்கருணை ஒரு சற்றுமின்றி, அதிபலாத்காரமாய், அருச்சகர்களைப்
புறக்கணித்து விட்டுத் தாமே சகந்நாதத் திருக்கோவிலைத் திறந்து ஜகந்நாதருக்கு ஆசார நியமங்களுடன்
அன்பாற் பூசனை சிறக்கச் செய்து நைவேத்தியம் நிகழ்வித்தார்.
தம் சீடருடன் தாமும் அந்நிவேத்தியத்தை உண்டு உறக்கம் கொண்டார்.

அவ்வுறக்கத்தின்போது இராமானுசர் ஒரு கனவு கண்டார்.
அச்சொப்பனத்தில் திரு ஜகந்நாத மூர்த்தி தன் மெய்யுருவை இராமானுஜருக்குக் காட்டிப் புகன்றிடுவார்.

“என்பால் மெத்த அன்பு பூண்ட இராமானுஜப் பேர் கொண்ட அன்பனே! உனக்கு யான் பகர்வதொன்றுண்டு.
இத்தலத்து அநாசாரத்தில் எனக்கு மிக்க பெருவிருப்பம். அதோடு மட்டுமன்றிச் சித்தத்தில் பத்தியுடையார்
செயல்களெல்லாம் எனக்குத் திருப்தி அளிப்பனவே. பத்திக் கடலில் நெஞ்சம் பதிந்தவர் எவரானாலும்
எதனை அவர் எனக்குத் தந்தாலும் எனக்கு அதில் இச்சையே.
எனவே, என்னை விரும்பிப் பூசை செய்யும் பூசகர்களை கணத்தில் இங்கு வர அழைப்பாயாக.
என்னைப் பிரிந்திருக்க அரைக்கணமும் அவர் ஆற்றார். யானும் அவரை விட்டு அரைக்கணமும் நீங்கேன்.
அதனால் நீ இங்கு அமைத்துள்ள பூசாசாதனங்க ளெல்லாங் கொண்டு அமைத்த நியமங்கள் எனக்கு ஒவ்வாதாம்.

நம் மீது பத்தி சிறிதும் நெஞ்சில் இன்றி உலக போகங்களாகிய பித்தம் மேவிப் பொய்யான உடலை
மெய்யென எண்ணி அதற்கு உழலும் வம்பர்களுக்கு வைத்தாய் உன் ஆசாரத்தை.
அந்த ஆசாரக் கதையை வானோர்க்கும் மேலாய் நம் ஜகந்நாதத்து வாழ்வார்க்குச் சிறிதும் ஓதாதே.

பலவடிவோடுப் படிகம் ஒத்து எவற்றையும் பற்றும் கன்ம மயமான மனத்தவர்களுக்கு உன்னுடைய ஆசாரக் கதைகள் மிக இனிக்கும்.
அதல்லாமல், தற்போத மனம் கழன்று என்னைப் பூசித்து என் மயமாகி நிற்போர்க்கு இனிது யாது? தீது யாது?
பேயாற் பிடிப்புண்டோர் செயல்களெல்லாம் பேயின் செயலேயாக நிகழ்தல் போல்,
என் பத்தராவார் இவர்கள் இயற்றிடுகின்றவெல்லாம் என் செயல்களேயாகி எனக்கு உவப்பளித்திடும்”
என்று அளப்பரும் போதமிக்கவரும் இணையற்ற கருணை வள்ளலுமாகிய இராமானுஜருடைய
நற்கனவில் ஜகந்தாதன் நவின்றருளினான்.

இவ்வாறு ஜகந்நாதன் நவின்றும், வேதங்கள் ஓதும் தூய ஆசாரசீலங்களில் ஒன்றையும் அகன்றிடற்குத் தன்னுள்ளம்
இசையாத இராமானுசர் , “ மாயவன் அநாசார பத்தர்களிடம் அருள் மிகுந்து அவர் தம்மை வாஞ்சித்து,
என் மீது கோபம் கொள்ளுவது மிகவும் வியப்பைத் தருகிறது. இத்தேயத்தில் நாற்குலத்தோரும் சேர்ந்து ஒன்றாக உணவு நுகர்கின்றார்.
இத் தீங்கைக் கண்டும் யான் எவ்வணம் உளம் சகிப்பேன். மேக வண்ணனுக்கு வேதாசாரக் கடப்பாட்டில் நின்று செய்யும்
உயர்ந்த ஆசார பத்தி ஒப்பாதது என்னே! பத்திக்குப் பெருமை அநாசாரமே போலும்.
நம்மைப் போல ஆசாரம் மிக்கவர்களாக இருந்தால் ஜகந்நாதன் கோபம் கொள்வானென்று தான்
இப்பதியில் வாழ்வார் இத்தனை அநாசாரமாக இருக்கிறார்கள் போலும்.
என்னவானாலும் நான் என் உடல் கழியுங்காறும் வேதோக்தமான சதாசாரத்தைக் கைவிடேன்;
இவரோடு ஒன்றாக இருந்து உண்ணுதற்கோர் சற்றும் சம்மதம் கொள்ளேன்” என்று கூறி
விரக்தியுடன் அங்குத் தங்கி இருந்தார்.

இவ்வாறு இராமானுஜர் ஜகந்நாதத்தில் தங்கியிருக்கும்போது, அரவணையில் துஞ்சும் பக்தவத்சலன்
கருடாழ்வரை நோக்கிச் சொல்லுவன், இராமானுஜன்பாற் சென்று,
“இத்தலத்து உனது ஆசாரமெல்லாம் எனக்கு அவசியமில்லை. இங்குள்ள எனது அருச்சகரை எனக்குப் பூசை இயற்றிடச்
செய்யில் என் மனம் உவப்புறும். அவர்கள் மனம் வாடில் ஒருகணமும் யான் சகியேன்.
யான், நினது ஒரு ஆசாரச் சீல பத்தி முதலிய நற்குணங்களைக் கண்டு அளவில்லாத இன்பம் அமைந்தேன், அது மெய்யே.
உன்னுடைய மந்திரம் தியானம் முதலியவற்றால் நான் உன் வசம் ஆனேனென்றாலும், இங்கு வாழ்பவருக்கு என் மீதில்
இணையில்லாத மெய்ப்பத்தி உண்டு. இயல்பான பத்தி உணர்வு உந்துதலால் அநாசாரம் என்று சொல்லப்படுகின்ற
இவர்களுடைய பண்பு என்னுடைய உள்ளத்துக்கு இன்பமே அடையச் செய்கின்றது.

திருமகளை மார்பிற் பதித்து வைத்துள்ள என்னைப் போல, இந்நகருளார்பால் அன்பு அதிகரித்து வாழும் ஆசை
உன் நெஞ்சில் இருக்குமாகில் , இப்பதியில் வாழ்வாயாக.
இவர்கள் பண்பு அநாசாரம் , குற்றம் என உனக்குத் தோன்றினால் உடனே இப்பதிவிட்டு நீங்கி உன் பதிக்குச் சென்று
உன் ஆசாரத்துடன் அங்கு வாழ்வாயாக
அங்கு தூய நல் சதாசாரத்தின் துறை பிழையாமல் என்னைப் பேரன்பினோடு பூசனை புரிந்து வாழ்தி.
என்னுடைய நாமந்தன்னைச் செபித்தல் ஒன்றாலேயே நினக்குச் சர்வாபீஷ்டங்களையும் ஈகுவன், உண்மை. என்று
இனையவை பலவும் யாம் இயம்பியவாகச் சொல்லி இராமானுஜனையும் அவனைத் துதிக்கும் மாணாக்கரையும்
உவகையுறப் புரிந்து அரைக்கணத்தில் அவர்தம் பதியேகப் புரிதி” என்றனன்.

நாராயணப் பகவன் உத்திரவிட்டு ஏவக் கருடன் விரைந்து அகமகிழ்வோடு இராமானுசரை அடைந்து,
நிகழ்ந்த செய்தியை ஓதினான். அதைக் கேட்டு இராமானுஜர் நெஞ்சமிக்குவந்து,
‘எந்தப்பொருளை அடையும் பொருட்டு இங்கு வந்தேனோ அந்தப் பொருள் கதுமென என் கைவரக் கடைக்கண் பாலித்தான்.
பழமறைகள் இன்னும் கண்டு தேறா மூர்த்தி பொது நீக்கி என்னை ஆண்ட கருணக்குக் கைம்மாறு ஏது?
கருமணி வண்ணத்தெம்மான் கரையில்லாத பேரருள் பெற்றமைந்த எனக்கு இந்நகரம் யான் வாழும் தேயம்
இருள் நகராகிய நரகம் சொர்க்கம் எதுவாயினும் எனக்கினிதே.
விரைவில் என்னுடைய நகருக்கு செல்கின்றேன் என்று இராமானுஜர் , பிரம சொரூபியாக விளங்கிய
கருடனிடத்துப் புகன்று தன்னுடைய சீடர்களுடன் உறக்கங் கொண்டார்.

கருடமூர்த்தி, உறக்கம் கொள்ளும் அவர்களை ஒருமாத்திரைப் பொழுதுக்குள்ளே அவர்கள் தம்பதியில்
அன்னவர்தம் மனைகளில் கொண்டு சேர்த்தார். அதன்பின் ஜகந்நாதம் வந்தார்.
இராமானுஜர் ஜகந்நாதத்தை விட்டு அகன்றார் என்னும் செய்தியை அறிந்த அவ்வூர் மக்கள்
குற்றமில்லாத அன்பு ஓங்க அருச்சகன் தனை அழைத்து எல்லை யில்லாத அன்பும் இன்பமும் பொங்க, வாசத் துளபமாலையும்
‘மலர்மின்(திரு) செம்பொற் குசயுகளமும் தோய் மார்பின’னாகிய கார்நிற அண்ணலின் அருட்பதம் பணிந்தர்.

அவ்வேளையில், இராமானுஜர் தம் பதியில் துயிலுணர்ந்தார்.
ஜகந்நாதத்திலிருந்த தான் தன் பதிக்கு வந்து சேர்ந்த காரணத்தை நாடி அளப்பிலா வியப்பும் உவகையும்
மிக்கோங்கும் உளத்தராகி, விட்டுணு அன்புடன் தம் கனவில் கூறியது பலிதமானதைத் தெளிந்தார்.
“ இத்தகைய திருவிளையாடலை மாயன் இயற்றிடற்கு ஏது தன் தாமரை மலரிதழ் போன்ற தன் திருவடி மேல்
மெய் பத்தி கொண்ட பத்தர்கள் மிது வைத்திருக்கும் வாத்சல்லியமே யன்றி வேறென்ன என்று கூறுவது.
உத்தம பத்திக்கு ஒப்பது வேறொன்றுளது எனலாமோ?

ஜகந்நாதத்தில் பொருந்தியிருந்த அநாசாரங்களைப் போக்கி, மக்களை நல் நெறிப்படுத்த யான் மேற் கொண்ட சிரமமும்,
அதனால் அங்குள்ளவர் வருத்தம் கொண்ட செயலையும் தன் உயரிய மனத்திடைச் சகிக்க ஆற்றானாகி
இத்திருவிளையாடலைப் புரிந்த கரும்புயன்மேனி வள்ளலின் கருணையை என்ன என்பது?

வேத நெறியில் பலதுறைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் பொருந்துகின்ற அதிகாரம் அதாவது
தகுதி, பக்குவம் சற்றும் அமைந்திடாதவர்களும் தாமோதரனது திருவடியைச் சிந்தையில் சற்றும் பிரியாத
பத்தியுற்ற பண்பினால் நாரணனுக்கு உவப்பானவராக உள்ளனர். அதனால் பத்தியின் மான்மியத்தைப் பேசவும் படுமோ”
என எண்ணிய இராமானுஜர், பின்னர்,
பத்தியின் மாண்பினை மிகவும் கொண்டாடித் திட சித்தங்கொண்ட தம் சீடர்களும் மற்றும் இவ்வுலகத்தில்
பிறந்தவர்களும் நாரணன் பதஞ் சேர்ந்து உய்யும் வண்ணம் பகவனை அடையப் பத்திமார்க்கத்தைத் தாபித்தார்.

புறச் சமயத்தவரும் நாரணனின் பொற்றாளில் பத்தி எய்தச் செம்மையான பாடியம் சொன்ன
அப்புகழோன் அறநெறி வழுவாச் சீடர் கூட்டத்துடன் உலகவர் அடைதற்கு அரியதாகிய
மாயனின் பொன்னடியாகிய சின்மயத்தை அணைந்தார்.

மேட்டிமையான வருணாச்சிரமத் தூய்மையைக் காட்டிலும் நெஞ்சில் வஞ்சகமற்ற பாமரபத்தர்களின்
அநாசாரமாக வெளிப்படும் அன்பே நாராயணனுக்கு இன்பமளிப்பது,
எனவே பத்தர்களின் அநாசாரத்தைப் பழித்து அவர்களை இகழ்தல் முறையன்று .
இது ஸ்ரீவைணவத்தின் சீரிய கொள்கை.

“அற்ற முரைக்கிலடைந்தவர் பாலம்புயைக் கோன்
குற்ற முணந் திகழும் கொள்கையனோ- எற்றே தன்
கன்றி னுடம்பின் வழுவன்றோ காதலிப்ப(து)
அன்றதனை யீன்றுகந்த ஆ. (ஞானாசாரம் 25)

கன்றினைச் சமீபத்தில் ஈன்ற பசு, வாஞ்சையுடன் கன்றின் மேலுள்ள வழும்பாகிய அழுக்கை நக்கி நக்கித் துடைக்கும்.
அது போல புத்தடியார்களின் புன்மையைக் கண்டு நாரணன் அவர்களை இகழான்;
அவர்கள் பால் அவன் கொள்ளும் வாஞ்சையால் அப்புன்மைகளை இன்பமாகவே ஏற்றுக் கொள்வன்.

————–

ஆழ்வார் விக்கிரஹங்களிலிருந்து சில சான்றுகள்
a)சீர்காழி அருகிலுள்ள -திருநகரி கோயிலில் -திருமங்கையாழ்வார் திருமேனி/ விக்ரஹம் சேவிக்கலாம்
அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது.

b)திருச்சி -உறையூர் கோயிலில் திருப்பாணாழ்வார் திருமேனி யினை சேவிக்கலாம் –
அவர் பாதத்திலும் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .

c)திருச்சி -திருவெள்ளறை கோயிலில் -குலசேகர ஆழ்வார் திருமேனியினை சேவிக்கலாம்
அவர் பாதத்தில் ராமானுஜர் உருவம் காணப்படுகிறது .
இவர் இரண்டாம் வருணமான க்ஷத்ரிய இனத்தைச் சேர்ந்தவர்.
இங்கு அனைத்து ஆழ்வார்களையும் அவர்களது பாதங்களில் தவறாமல் ராமானுஜர் திருவுருவத்தினையும் சேவிக்கலாம் .

d)திருநெல்வேலிக்கு அருகில் , ஆழ்வார் திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் சடாரியினை சேவிக்கலாம் .
அதிலும் ராமானுஜர் திருவுருவம் காணப்படுகின்றது .

ராமானுஜருக்கு அந்தரங்க சீடராயிருந்து அவருக்கு பால் காய்ச்சுதல் ,திருவாராதன பொருட்களை சித்தம் செய்தல் என்று
அணுக்க தொண்டராய் இருந்தவர் வடுக நம்பி ஆவார் .இவர் ப்ராஹ்மணர் அல்லர் .

b) திருக்கச்சி நம்பிகளுக்கு சீடனாயிருந்து வைணவ சித்தாந்தம் கற்க ஆசைப்பட்டார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் அமுது செய்து மீதமாகும் சேஷதத்தினை(போனகம் செய்த சேடம் ) உண்ண ஆசைப்பட்டார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் மூன்றாம் வர்ணமாம் வைஸ்ய குலத்தைச் சேர்ந்தவர் ஆவார் .

c) ராமானுஜர் தனது நித்தியகால பூஜைக்காக சிறிய வரதராஜர் விக்ரஹம் ஒன்றை வைத்திருந்தார் .
அவருக்கு திருவாராதனம் செய்யும் முன்னர் பூதசுத்தி ,ஸ்தலசுத்தி செய்வார் .இவற்றால் திருப்தி அடையாது ,
தனது அந்தரங்க சீடரான உறங்கா வில்லி தாசரது கரஸ்பர்சம் பெற்ற பின்னரே முழு சுத்தியானதாக திருப்தி அடைந்து ,
அதன்பிறகு ஆராதனை-ஷோடச அங்க பூஜைகளை செய்வார் .இந்த உறங்கா வில்லி தாசரும் ஐந்தாம் வர்ணத்தவர்தான்.
முன்பு அகளங்க சோழனிடம் மெய்காப்பாளனாயும்- மல்லராகவும் இருந்தவர் .
பின்னர் ராமாநுஜரிடம் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரானார்.

அவரது சாதி மறுப்பு புரட்சியினால் வெறுப்புற்ற சாதி அந்தணர் அவருக்கு பிக்ஷை உணவில் விஷமிட்டனர் .
இச் செய்திகள் “ஆறாயிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம்” என்னும் நூலில் காணலாம் .

“ராமோ விக்ரஹவாந் தர்ம: ஸாது ஸத்ய பராக்ரம:” – என்பது ராமாயணம்.( மாரீசன் ராவணனுக்கு சொன்னது .)
ராமன் என்பவன் , தர்மமே ஒரு உருவமாகி வந்தவன் .அவன் என்றுமே மாறாத உண்மை உருவன் ,நல்லவன் ,வீண் போகாத வீரன்.
அதே ராமனை -“அதாதோ தர்ம ஜிஞ்சாஸ: ” என்று கூறி பூர்வ மீமாம்ஸை தொடங்குகின்றது .

யத்ர யோகேஸ்வர கிருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர:|
தத்ர ஸ்ரீ : விஜயோ பூதி : த்ருவா நீதிர் மாதிரி மம || – மஹாபாரதம் .

எந்தப் பக்கத்தில் ப்ரஹ்மமான கண்ணன் உளனோ, அங்கே தான் நிலைத்த தர்மம் என்கிறார் சஞ்சயன் த்ருதராஷ்டிரரிடம் .
அந்த கண்ணனை பிரம்மமாக துதித்து -“அதாதோ ப்ரம்ம ஜிஞ்சாஸ: “ என்று கூறி உத்தர மீமாம்ஸை தொடங்குகின்றது .

——————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading