ஸ்ரீ சங்கரரின் ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன் —

இடையறாத தியானத்தால்
வசப்பட்ட மனத்தினால்,
குணங்களும் செய்கைகளுமற்ற
பரஞ்சோதி ஒன்று உள்ளதாமே,
அதனை யோகிகள் காண்பார்களாகில்,
காணட்டும்.
ஆனால் நமக்கோ
காளிந்தியின் மணல் திட்டுகளில் ஓடுகிறானே
நீலச் சிறுவன்
அவனே என்றென்றும்
விழிகளுக்கு அதிசயமாய்
விளங்கட்டும்.

– ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி (பகவத்கீதை உரையின் இடையில் வரும் பாடல்)

த்யாநாப்யாஸவஶீக்ருʼதேந மநஸா தந்நிர்கு³ணம்ʼ நிஷ்க்ரியம்ʼ
ஜ்யோதி​: கிஞ்சந யோகி³நோ யதி பரம்ʼ பஶ்யந்தி பஶ்யந்து தே |
அஸ்மாகம்ʼ து ததேவ லோசநசமத்காராய பூயாச்சிரம்ʼ
காலிந்தீபுலிநோத³ரே கிமபி யந்நீலம்ʼ மஹோ தா⁴வதி ||

வடநாட்டில் அத்வைதமும் கிருஷ்ண பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியைக் கடைப்பிடித்த இவரைப் போலவே,
தென்னாட்டில் அத்வைதமும் சிவ பக்தியும் இணைந்த ஆன்மீக நெறியை அப்பய்ய தீட்சிதர் கடைப் பிடித்தார் என்று கூறுவார்கள்.

ஸ்ரீ சங்கரரின் உரைகளிலும் கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம் போன்ற அழகிய துதிப்பாடல்களிலும்
இந்த இணைவை நாம் காண முடியும். அதன் நீட்சியே மதுசூதன சரஸ்வதியின் நெறியாகும்.

ஸத்யம்ʼ ஜ்ஞானமனந்தம்ʼ நித்யமனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ
கோஷ்டப்ராங்கண-ரிங்கணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் |
மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ புவனாகாரம்ʼ
க்ஷ்மாமாநாதமநாதம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–1-

சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம்
இடைவெளியற்றது (அனாகாசம்)
இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்)
எனும் பொருள்
மாட்டுத் தொழுவத்தில்
ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அனாயாசமானவன்
மாயையை அடக்கி அதனுள் இருப்போன் (பர-மாயாசம்).
தனது மாயையில் கற்பித்த பல்வேறு உருவங்களாகவும்
உருவமின்றியும்
உலகே உருவாகவும்
திகழ்வோன்.
ஸ்ரீ-பூ-தேவியரின் நாதனும்
தனக்கு மேல் ஒரு தலைவன் அற்றவனும் (அ-நாதன்)
பரமானந்த வடிவும் ஆகிய அந்த கோவிந்தனை
வணங்குவீர்.

————————-

ம்ருʼத்ஸ்நாமத்ஸீஹேதி யஶோதா-தாடந-ஶைஶவ ஸந்த்ராஸம்ʼ
வ்யாதித-வக்த்ராலோகித-லோகாலோக-சதுர்தஶ-லோகாலிம் |
லோகத்ரயபுர-மூலஸ்தம்பம்ʼ லோகாலோகமநாலோகம்ʼ
லோகேஶம்ʼ பரமேஶம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமாநந்தம் ||–2-

இங்கு மண்ணைத் தின்கிறாயே என
யசோதை அடிக்க வருகையில்
குழந்தைப் பருவத்தின் பீதியை அடைந்தவன்.
திறந்த வாயில்
லோகாலோக பர்வதங்களுடன் கூடிய
பதினான்கு லோகங்களைக் காட்டியவன்.
மூவுலகிற்கும் ஆதாரத் தூணானவன்.
உலங்களுக்கு ஒளியூட்டுபவன் (லோகாலோகம்)
தனக்கு வேறு ஒளி வேண்டாதவன் (அனாலோகம்)
லோகேஸ்வரனும் பரமேஸ்வரனும்
பரமானந்த வடிவும் ஆகிய கோவிந்தனை
வணங்குவீர்.

புராணங்களின்படி, பதினான்கு உலகங்களில் ஒவ்வொரு உலகத்திற்கும் கிழக்கிலும் மேற்கிலும் உதய,
அஸ்தமன பர்வதங்கள் உண்டு. அவற்றின் ஒருபுறம் ஒளியும் மறுபுறம் இருளும் உள்ளதால்,
அவை லோகாலோக பர்வதங்கள் என அழைக்கப் படுகின்றன.
பாடலின் இரண்டாம் அடியில் பர்வதங்களைக் குறிக்கும் லோகாலோகம் என்ற சொல்,
அடுத்த அடியிலேயே பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணனைச் சுட்டுமாறு வருகிறது –
உலகங்கள் அனைத்திற்கும் ஒளியூட்டி தன்னொளியால் தானே பிரகாசிப்பவன்
(லோகான் ஆலோகயதி ஸ்வாத்மபா4ஸா ப்ரகாஶயதி இதி லோகாலோக:).
உலக இயக்கமனைத்திற்கும் ஆதாரமாக இருந்தும் அதில் பற்றுக் கொள்ளாது
சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது வேதாந்த உட்பொருள்.

மூவுலகிற்கும் நிலைப்பொருளாக (அதிஷ்டானம்) விளங்கும் பிரம்மத்தின் சைதன்ய பிரகாசத்தினாலேயே
அதனிடம் கற்பிக்கப் பட்டவையான மூன்று உலகங்களும் ஒளிபெறுகின்றன.
கற்பிக்கப் பட்ட பொருள்களுக்கு தனியாக சொந்த இருப்பும் ஒளியும் கிடையாது.

அங்கு சூரியன் ஒளிர்வதில்லை
நிலவு நட்சத்திரங்கள் இல்லை
இந்த மின்னலும் ஓளிர்வதில்லை
எனில் நெருப்பிற்கு ஏது இடம்
அவன் ஒளிர்கையில்
அனைத்தும் பின்னொளிர்கின்றன
அவனது ஒளியினாலேயே
இவையனைத்தும் ஒளிர்கின்றன.– கட உபநிஷதம் 2.5.9

——————

த்ரைவிஷ்டப-ரிபு-வீரக்நம்ʼ க்ஷிதி-பா⁴ரக்நம்ʼ பவ-ரோகக்நம்ʼ
கைவல்யம்ʼ நவநீதாஹாரமநாஹாரம்ʼ புவனாஹாரம் |
வைமல்ய-ஸ்புட-சேதோவ்ருʼத்தி-விஶேஷாபாஸ-மநாபாஸம்ʼ
ஶைவம்ʼ கேவல-ஶாந்தம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–3-

அமரர் பகையாம் அரக்க வீரரை அழிப்பவன்
புவியின் பாரத்தை அழிப்பவன்
பிறவிப்பிணியை அழிப்பவன்
தானொருவனேயானவன் (கைவல்யம்)
வெண்ணெய் உண்பவன் (நவநீதாஹாரம்)
உணவற்றவன் (அனாஹாரம்)
உலகனைத்தும் உண்பவன் (புவனாஹாரம்)
மாசற்றுத் தெளிந்து சிறந்த
மனவெளியில் தோன்றுபவன்
தோற்றமற்றவன்
மங்கள வடிவினன் (சைவம்)
தனித்து மாறுபாடற்றிருப்பவன் (கேவல சாந்தம்)
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை
வணங்குவீர்.

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் – பிறவிப்பிணிக்குக் காரணமான அக்ஞானத்தை குருவாக விளங்கி
ஆத்மஞானம் எனும் மருந்தால் அழிப்பவன்.
அக்ஞானத்தினால் தோன்றும் பொய்ப்பொருள்கள் அனைத்திலிருந்தும் தனித்து நிற்கும் மெய்ப்பொருள் – கைவல்யம்.

பசி, தாகம் முதலியவை பிறவியில் கட்டுண்ட ஜீவன் உடலுடன் கொள்ளும் அபிமானத்தால் ஏற்படுபவை.
தளையற்ற பிரம்ம சொரூபத்திற்கு இவையேதும் இல்லை என்பதால் உணவற்றவன்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் விளையாட்டாக வெண்ணெய் உண்டவன்.
ஒடுக்கத்தின் போது (பிரளயம்) உலகனைத்தும் அதன் நிலைப்பொருளாகிய (அதிஷ்டானம்) பிரம்மத்தில்
சென்று ஒடுங்குவது உலகனைத்தையும் உண்பதாகக் கூறப்பட்டது.

மனவெளியில் தோன்றும் எண்ண அலைகள் சித்த வ்ருத்தி அல்லது சேதோ வ்ருத்தி எனப்படும்.
இவற்றை முழுவதுவாக அடக்குவதும் தடுப்பதுமே யோகம்
(யோகஶ்சித்தவ்ருத்தி நிரோத:) என்பது பதஞ்சலியின் முதல் சூத்திரம். இப்படி அனைத்து எண்ண அலைகளும்
அடங்கிவிட்ட மனத்தில் பின்பு ஏதுமற்ற வெறுமையும் சூனியமும் தான் இருக்கும் என்பதே
பதஞ்சலி யோகம் மற்றும் பௌத்தம், ஜைனம் முதலான அவைதிக தரிசனங்களின் கோட்பாடு.
அது எந்தவிதமான சூனியம் என்பதில் தான் அவைகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு
வேதாந்த மரபில் உணர்வற்ற அத்தகைய யோக நிலை ‘ஜட சமாதி’ என்று அழைக்கப் படுகிறது.
வேதாந்தத்தின் படி, பிரம்ம ஞானத்தேடலுடைய யோகியின் மனம் மற்ற எண்ண அலைகளனைத்தும் அடங்கிய
பிறகு சூனியத்தில் அல்லாமல் பூரணத்தில் நிலைக்கிறது – தனது நித்திய ஸ்வரூபவமான பிரம்மத்துவம் அன்றி
வேறேதும் இல்லை என்ற என்ற எண்ணம் உறுதிப்படும் நிலை.
‘பிரம்மாகார அகண்ட வ்ருத்தி’ என்று தத்துவ மொழியில் அது குறிப்பிடப் படுகிறது.
அத் தோற்றமே இங்கு ஸ்ரீகிருஷ்ணனுடையதாகக் குறிப்பிடப் பட்டது.

‘சாந்தம் சிவம் அத்வைதம்’ என்பது பிரம்மத்திற்குரிய அடைமொழியாக மாண்டூக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டது.
அதனையே ‘சைவம் கேவல சாந்தம்’ என்று இந்த சுலோகத்தின் கடைசி அடி குறிப்பிடுகிறது.

—————–

கோபாலம்ʼ பூலீலா-விக்ரஹ-கோபாலம்ʼ குல-கோபாலம்ʼ
கோபீகேலந-கோவர்தநத்ருʼதி-லீலாலாலித-கோபாலம் |
கோபிர்நிகதித கோவிந்த-ஸ்புட-நாமாநம்ʼ பஹுநாமாநம்ʼ
கோ-தீ-கோசர-தூரம்ʼ ப்ரணமத கோவிந்த³ம்ʼ பரமானந்தம் ||–4-

கோபாலன்
விளையாட்டாய்ப் புவியில் கோபால உருவெடுத்தவன்
கோபால குலத்தவன்
கோபியருடன் விளையாடி கோவர்த்தனம் தூக்கி
கோபர்களை லீலைகளால் சீராட்டியவன்
பசுக்கள் கூவியழைக்கும்
கோவிந்தா என்ற சிறப்பான பெயருடையவன்
மிகப்பல பெயர்களுடையவன்
புலன்களும் புத்தியும் செல்லமுடியாத தூரத்திலிருப்பவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

கோ என்ற சொல்லுக்கு பசு, பூமி, சப்தம் (வேதம்), புலன், என்று பல பொருள் உண்டு.
கோபாலன் – பசுக்களை, பூமியை, வேதங்களை, பசுக்களைப் போன்ற உயிர்களைக் காப்பவன்.
கோவிந்தன் – வேத வாக்குகளால் அறியப்படுவன். வேத வாக்குகளை அருளியவன்.
வராகாவதாரத்தில் பூமியையும், கிருஷ்ணாவதாரத்தில் பசுக்களையும் காத்தவன்.
இவ்வாறு ‘கோவிந்த’ பதம் நிர் குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்), ஸ குண பிரம்மம் (உருவமான பரம்பொருள்)
இரண்டையும் குறிப்பதனால், இவ்விரண்டு பரம்பொருள் தத்துவங்களையும் மாறிமாறி சுட்டும் வகையில் கோவிந்தாஷ்டகம் அமைந்துள்ளது.

கடைசி அடியில், கோ-தீ-கோசர-தூரம் என்பதில்
முதல் கோ புலன்களையும், அடுத்து வரும் கோசர என்பது செல்லுதலையும் குறிக்கிறது.

——————

கோபீ-மண்டல-கோஷ்டீ-பேதம்ʼ பேதாவஸ்தமபேதாபம்ʼ
ஶஶ்வத்கோகுர-நிர்தூதோத்கத-தூலீ-தூஸர-ஸௌபாக்யம் |
ஶ்ரத்தா-பக்தி-க்ருʼஹீதாநந்தமசிந்த்யம்ʼ சிந்தித-ஸத்பாவம்ʼ
சிந்தாமணி-மஹிமாநம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–5-

சுற்றியாடும் கோபிகைகளின் வெவ்வேறு குழுக்களில் உறைபவன்.
வெவ்வேறு உணர்வு நிலைகளை உடையவன்
வேற்றுமை யற்றவன்.
பசுக்களின் குளம்புகள் கிளம்பி எழுப்பும் புழுதி படிந்து
மங்கிய மேனியழகுடையவன்.
சிரத்தையாலும் பக்தியாலும் அடையும் ஆனந்தமானவன்.
அறிய வொண்ணாதவன்.
சத்தியப்பொருளென அறியப்படுபவன்.
சிந்தாமணியின் மகிமையுடையவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

தனது மாயையினால் வெவ்வேறு உணர்வு நிலைகளை (அவஸ்தைகள்) உடையவன்.
விழிப்பு, உறக்கம், கனவு (ஜாக்ரத் ஸுஷுப்தி ஸ்வப்னம்) ஆகிய மூன்று மாறுபட்ட நிலைகளிலும்
தான் என்ற ஆத்ம ஸ்வரூபம் மாறாதிருப்பவன்.
பிரம்மத்தின் இயல்பே ஆனந்தம் என்பதால், அவன்மீது கொண்ட சிரத்தையாலும் பக்தியாலும் பக்தர்கள் ஆனந்தமடைகின்றனர்.
சிந்தாமணி வேண்டியதை எல்லாம் தருவது. அது போன்றே ஈசுவரனும்.
மற்ற பொருள்களைப் போலல்லாமல் நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டதால், வேறு எந்த வகையிலும் அறியவொண்ணாதவன்.
ஆனால் உபநிஷத வாக்கியங்களாலும் வேதாந்த விசாரத்தாலும் அபரோக்ஷமாக (indirectly perceptible) அறிதற்குரிய ஞானமாயிருப்பவன்.

பிரம்மம் அறியவொண்ணாதது என்றவுடன், ஓ சரி, அதைத்தான் அறியவே முடியாதே
வேறு வேலையைப் பார்க்கப் போகலாம் என்று அர்த்தமல்ல.
மாறாக, அந்த அறிதலுக்கான இச்சையே மானுட வாழ்க்கையின் மிக உன்னதமான இலட்சியம் என்கிறது வேதாந்தம்.
ஏனென்றால், சம்சாரம் என்னும் பிறவிச் சுழலிலிருந்து விடுபடுதல் (மோட்சம்) என்பது உண்மையில் தனது
நிஜ ஸ்வரூபத்தைப் பற்றிய முழுமையான அறிதலே (ஞானம்).
“பிரம்மத்தை ஆய்ந்து அறிக” (அதாதோ ப்ரஹ்மஜிக்ஞாஸா) என்று தான் பிரம்ம சூத்திரம் தொடங்குகிறது.
அறிதலே விடுதலை, அறிதல் அன்றி வேறேதும் விடுதலையன்று. வேதாந்த விசாரமே அந்த அறிதலுக்கான வழிமுறை.

“அன்பே, அந்த ஆத்மாவை (அறிவினால்) காணவேண்டும், கேட்கவேண்டும், சிந்திக்க வேண்டும்,
தன்னில் நிலைக்க வேண்டும்”
(ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யோ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய:)
– மைத்ரேயியிடம் யாக்ஞவல்கியர், பிரகதாரண்யக உபநிஷதம்.

வலிமையற்றோன் அடைவதில்லை
ஆத்மாவை
ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும்
அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும்
அறிவுடையோனது ஆத்மா
பிரம்மத்தின் இருப்பிடத்தில்
சென்றடைகிறது.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல
அந்த ஆத்மா
மேதமையால் அல்ல
கேள்வியின் மிகுதியாலும் அல்ல.
அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான்.
அவனுக்கே தன்னியல்பை
வெளிப்படுத்துகிறது
ஆத்மா– முண்டக உபநிஷதம்

————————————–

ஸ்னான-வ்யாகுல-யோஷித்-வஸ்த்ரமுபாதாயாகமுபாரூடம்ʼ
வ்யாதித்ஸந்தீரத திக்வஸ்த்ரா தாதுமுபாகர்ஷந்தம்ʼ தா: |
நிர்தூதத்வயஶோகவிமோஹம்ʼ புத்தம்ʼ புத்தேரந்தஸ்தம்ʼ
ஸத்தாமாத்ரஶரீரம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்த³ம் ||–6-

குளியலில் ஆழ்ந்த யுவதிகளின்
ஆடைகளைக் கவர்ந்து மரத்திலேறிக் கொண்டு
பின்பு திக்கே ஆடையாக நின்று
தரமாட்டாயா என்று வேண்டும் அவர்களை
அருகில் அழைப்பவன்.
வேற்றுமையும் சோகமும் மோகமும் அற்றவன்.
[வேற்றுமையும் சோகமும் மோகமும் அழிப்பவன்]
அறிபவன் (புத்தன்)
அறிவின் அகத்துள் இருப்பவன்
உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன்.
அந்தப் பரமானந்த வடிவாகிய கோவிந்தனை
வணங்குவீர்.

ஸ்ரீகிருஷ்ணன் கோபியரின் ஆடைகவர்ந்த லீலையை முதலிலும்,
அதன் தத்வார்த்தமான உட்பொருளை அதன் பின்பும் குறிப்பிடுகிறார்.

இங்கு வேற்றுமை என்பது ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளத் தடையாக இருக்கும் பேதபுத்தியைக் குறிக்கிறது.
இந்தப் பேத புத்தியினால் தான் சோகமும் மோகமும் தோன்றுகின்றன.
நிலையற்ற பொருள்களில் (அனாத்ம வஸ்து) நான், என்னுடையது என்று கொள்ளும் தோற்றப்பிழை மோகம்.
அதன் காரணமாக, அப்பொருள்களின் அழிவையும் இழப்பையும் தனது அழிவாகவும் இழப்பாகவும் கருதி அடையும் துன்பம் சோகம்.
‘நிர்தூத-த்வய-ஶோக-விமோஹம்‘ என்ற சொல்லாட்சி, இந்தப் பிழைகள் அற்றவன், இவற்றை அழிப்பவன் என்று
இரண்டு அர்த்தங்களும் தருவதாக அமைந்துள்ளது.

உண்மை ஒன்றே உடலாய்க் கொண்டவன் (ஸத்தா மாத்ர ஶரீரம்) என்பதில் வரும் ‘ஸத்தா’ என்பது
வேதாந்தத்தில் முக்கியமானதொரு தத்துவச் சொல். மாறாமல் என்றும் இருப்பதான தன்மையே ஸத்தா எனப்படும்.
ஸத் எதுவோ அது ஸத்யம். உள்ளது எதுவோ அது உண்மை. இதுவே நேர்ப்பொருள்.
உண்மை என்றால் பொய் பேசாமலிருப்பது (வாய்மை) என்பது அச்சொல்லின் வழிப்பொருள் மட்டுமே.
பிரம்மம் இந்த ஸத் சொரூபத்தைத் தவிர வேறு எந்த சரீரத்தையும் (உருவையும்) உடையது அல்ல.
உலகமும் உயிர்களும் மற்றப் பொருள்கள் அனைத்தும் இந்த ‘பிரம்ம ஸத்தா’ என்ற மெய்ப்பொருளை
ஆதாரமாகக் கொண்டு பல சரீரங்களில் (உருவங்களில்) அறியப்படுகின்றன.

அனைத்துப் பொருள்களையும் நாம் அறிவது அறிவு (புத்தி) என்ற அகக்கருவியின் துணையைக் கொண்டு தான்.
பின்பு, அந்த அறிவின் அகத்துள் இருப்பவனை (புத்தேரந்த: ஸ்தம்) எப்படி அதே கருவியால் நேரடியாக அறிவது?
அது சாத்தியமன்று. பிம்பத்தை அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து அறிந்து கொள்வது போல,
அறிவின் பிரகாசத்தைக் கொண்டு அதனைப் பிரகாசிக்கச் செய்யும் ஆத்மாவை உய்த்துணர்வது மட்டுமே சாத்தியம் என்கிறது வேதாந்தம்.
அறிவோனை அறிவது எங்ஙனம்? (விக்ஞாதாரமரே கேன விஜானீயாத்) என்ற உபநிஷத் வாக்கியத்தின் பொருளே
இங்கு சுட்டப் படுகிறது.
பிரகதாரண்யக உபநிஷதத்தின் புகழ்பெற்ற உரையாடலின் இறுதியில் இந்த வாக்கியம் வருகிறது.

“யாக்ஞல்கியர்:
நீரில் போட்ட உப்புக் கட்டி, அதைத் திரும்ப எடுக்க முடியாதபடி அந்த நீரிலேயே கரைந்து விடுகிறது.
எப்பகுதியை சுவைத்தாலும் அது உப்பாகவே இருக்கும்.
அது போல, மைத்ரேயி, அந்தப் பேருயிர் முடிவற்றது, அளவிட முடியாதது, தூய அறிவே உருக் கொண்டது.
இப் பொருள்களினின்று ஆத்மா (தனிப்பட்டு) தோன்றுகிறது, அவற்றிலேயே (தனிப்பட்ட தன்மை) அழிகிறது.
(ஒருமையை) அடைந்த பின், அதற்கு அடையாளமில்லை, பெயரில்லை

மைத்ரேயி:
என் தலைவனே, (ஒருமையை) அடைந்தபின் அடையாளமுமில்லை, பெயருமில்லை என்று கூறி
இங்கு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.

யாக்ஞவல்கியர்:
நான் சொல்வதில் குழப்பம் ஏதுமில்லை. இது நிறைந்த அறிவு, மைத்ரேயி. இருமை என்பது இருக்கையில்,
வேறொன்றைப் பார்க்கிறான், வேறொன்றை முகர்கிறான், வேறொன்றைக் கேட்கிறான், வேறொன்றை வணங்குகிறான்,
வேறொன்றை உணர்கிறான், வேறொன்றை அறிகிறான்.
ஆனால், அனைத்தும் ஆத்மாவே என்கையில் எவ்வாறு வேறொன்றை நுகர்வான், எவ்வாறு வேறொன்றைக் காண்பான்,
எவ்வாறு வேறொன்றைக் கேட்பான், எவ்வாறு வேறொன்றை வணங்குவான், எவ்வாறு வேறொன்றை உணர்வான்,
எவ்வாறு வேறொன்றை அறிவான்? இவை அனைத்தையும் அறிவது எவனாலோ, அவனை அறிவது எங்ஙனம்?
அன்பே, அறிவோனை அறிவது எங்ஙனம்?”

—————————————-

காந்தம்ʼ காரணகாரணமாதிமநாதிம்ʼ காலகநாபாஸம்ʼ
காலிந்தீ-கத-காலிய-ஶிரஸி ஸுந்ருʼத்யந்தம்ʼ முஹுரத்யந்தம் |
காலம்ʼ காலகலாதீதம்ʼ கலிதாஶேஷம்ʼ கலிதோஷக்நம்ʼ
காலத்ரயகதிஹேதும்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமாநந்தம் ||–7-

காந்தன்
காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்
முதலானவன் முதலற்றவன்
கருமேகச்சுடர்
காளிந்திப் பொய்கையில் காளியன் சிரத்தில்
மீளமீள அழகு நடனம் புரிபவன்
காலமானவன்
காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்
அனைத்தையும் தோற்றுவிப்பவன்
கலியின் தீங்குகளை அழிப்பவன்
காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

காந்தன்: அனைத்தையும் ஈர்க்கும் அழகுடையவன். Magnetic.
காரண காரிய வாதத்தின் படி, அனைத்துப் பொருள்களுக்கும் ஆதிகாரணமாக,
சத்வம்-ரஜஸ்-தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையான மூல ப்ரகிருதி (ஆதி இயற்கை) உள்ளது என்று சாங்கிய தரிசனம் கூறுகிறது.
இந்த மூலப்ரகிருதி என்ற கருத்தாக்கத்தை ஒரு இறுதி உண்மை (ultimate reaity) என்று கொண்டால்,
பின்பு உபநிஷதங்கள் கூறும் சத்-சித்-ஆனந்த வடிவமான ஆத்மா / பிரம்மம் என்பது மற்றொரு இறுதி உண்மை என்று ஆகிறது.
இங்ஙனம் இரண்டு இறுதி உண்மைகள் உள்ளதாகக் கருதுவது, இரண்டற்ற ஒருமை (ஏகம் அத்விதீயம்) என்ற
உபநிஷதக் கருத்துக்கு முரணானதாக அமையும். எனவே, இந்த மூலப்ரகிருதி என்பது முதற்காரணமல்ல,
மாறாக பிரம்மத்தில் கற்பிக்கப்பட்டு அது உலகமாகவும் (ஜகத்), அனைத்துப் பொருள்களாகவும் தோன்றுகிறது என்கிறது வேதாந்த தரிசனம்.

அரையிருட்டில் கயிற்றைப் பாம்பு என்று கருதி மயக்கம் ஏற்படுகிறது.
இதன் பொருள் கயிறு, பாம்பு என இரண்டு உண்மைப் பொருட்கள் உள்ளன என்பதல்ல.
உண்மையான நிலைப்பொருளான (அதிஷ்டானம்) கயிற்றில், பாம்பு கற்பிக்கப் படுவது போல,
பிரம்மத்தில் மூல ப்ரகிருதி கற்பிக்கப் பட்டது.
அதுபற்றியே பரம்பொருளை காரணங்களுக்கெல்லாம் காரணம் (காரணகாரணம்) என்று கூறுகிறார்.
பிரம்மமே முதற்காரணம் என்பது ஆதி, அனாதி (முதலானவன், முதலற்றவன்) என்ற இரண்டு பதங்களால் மீண்டும் விளக்கப் பட்டது.

குயவன் களிமண்ணைச் சக்கரத்தில் இட்டுச் சுழற்றுவதால் சட்டி, பானை, குடம் என்று பல்வேறு விதமான
உருவங்களும் பெயர்களும் கொண்ட அழியும் பொருட்கள் இடையறாது தோன்றுகின்றன.
அதே போல, காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல்வேறு பெயர்களும் உருவங்களும் (நாமரூபம்) கொண்ட
சிருஷ்டியின் இயக்கம் இடையறாது நடக்கிறது. ஆனால், பிரபஞ்ச இயக்கத்தில், குயவன், களிமண், சக்கரம்
இவை யனைத்தும் வேறுவேறாக அல்லாமல் பிரம்மம் என்ற ஒற்றைப் பொருளே
இவையனைத்துமாகப் பரிணமிக்கிறது என்கிறது வேதாந்தம்.
காலம் (காலமானவன்), காலகலாதீதம் (காலத்தின் செய்கைகளுக்கு அப்பாலிருப்பவன்),
கலிதாஶேஷம் (அனைத்தையும் தோற்றுவிப்பவன்), கால-த்ரய-கதி-ஹேதும் (காலங்கள் மூன்றின் இயக்கத்திற்கு ஏதுவானவன்)
ஆகிய பதங்களால் இத்தத்துவம் குறிக்கப்பட்டது.
ஸ்ரீகிருஷ்ணன் காத்தல், படைத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம்) ஆகிய முத்தொழில் புரியும்
ஈசுவர சொரூபம் என்பதும் விளக்கப் பட்டது.
நவீன இயற்பியல் பரிச்சயமுள்ளவர்கள் singularity என்ற கருத்தாக்கத்துடன் ஒப்பிட்டு தோராயமாக
இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்
(வேதாந்தம் கூறும் பிரம்ம தத்துவத்தின் தளம் நவீன இயற்பியலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது,
ஆழமானது. இந்த ஒப்பீடு ஒரு சாதாரண புரிதலுக்கு மட்டுமே).

கலியின் தீங்குகளை அழிப்பவன் (கலிதோஷக்னம்). இயற்கையின் நியதிக்கேற்ப நிகழும் உலக வியவகாரங்களின்
நெறிகள் பிறழ்ந்து, நிலைகுலையும் காலகட்டம் கலியுகம் என்று உருவகிக்கப் படுகிறது.
அதர்மத்தின் ஆட்சி ஓங்கி தர்மத்தின் ஆற்றல் குறையும்போது, தீமைகளை அழிக்க அவதரிப்பவன்.

———————–

ப்ருʼந்தாவனபுவி-ப்ருʼந்தாரககண-ப்ருʼந்தாராதித-வந்த்யாங்க்ரிம்ʼ
குந்தாபாமல-மந்தஸ்மேர-ஸுதானந்தம்ʼ ஸுமஹானந்தம் |
வந்த்யாஶேஷ-மஹாமுநி-மாநஸ-வந்த்யாநந்த-பதத்வந்த்வம்ʼ
நந்த்யாஶேஷ-குணாப்தி⁴ம்ʼ ப்ரணமத கோவிந்தம்ʼ பரமானந்தம் ||–8-

பிருந்தாவன நிலத்தில்
தேவர்களின் கூட்டங்களும்
பிருந்தா முதலான கோபியரும்
வணங்கும் பாதங்களையுடையவன்.
குந்தமலர் போன்ற மாசற்ற புன்னகையின்
அமுதத்தால் மகிழ்விப்பவன்.
சிறந்த ஆனந்தமானவன்.
வணங்கத் தகுந்த மாமுனிவர்கள்
மனதில் போற்றி ஆனந்தமடையும்
இணையடிகளையுடையவன்.
போற்றத்தகுந்த எண்ணற்ற நற்குணங்களின்
கடலென விளங்குபவன்.
அந்தப் பரமானந்த வடிவான கோவிந்தனை
வணங்குவீர்.

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ணனின் சகுண ரூபம் போற்றப் படுகிறது.
பிருந்தா என்பது கண்ணன் மீது அன்பு கொண்ட கோபிகையின் பெயர். துளசியையும் குறிக்கும்.
மாமுனிவர்கள் மனதில் போற்றி ஆனந்தமடையும் இணையடி – புறத்தில் வெளிப்படையாக செய்யும் பூஜையைக் காட்டிலும்
(பாஹ்ய பூஜை) மனத்தினால் செய்யப் படும் பூஜை (மானஸ பூஜை) சிறந்தது என்பது கருத்து.

——————————–

गोविन्दाष्टकमेतदधीते गोविन्दार्पितचेता यो
गोविन्दाच्युत माधव विष्णो गोकुलनायक कृष्णेति ।
गोविन्दाङ्घ्रिसरोजध्यानसुधाजलधौतसमस्ताघो
गोविन्दं परमानन्दामृतमन्तःस्थं स तमभ्येति ॥–9-

கோவிந்தனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து
கோவிந்தா அச்யுதா மாதவா விஷ்ணோ
கோகுலநாயகா கிருஷ்ணா எனக் கூறி
இந்த கோவிந்தாஷ்டகத்தைக் கற்பவர்
கோவிந்தனின் பாதகமலத் தியானம் எனும்
அமுதநீரால் பாவமனைத்தும் நீங்கி
தன் அகத்துள் இருக்கும்
பரமானந்த அமுதமான
அந்த கோவிந்தனை
அடைவர்.

எட்டு சுலோகங்களுக்குப் பின் பல சுருதியாக இப் பாடல் அமைந்துள்ளது.
தோத்திரங்களின் வழக்கமான பலசுருதிகளைப் போல லௌகீக பலன்களைக் கூறாமல், ஞானமே பலனாகக் கூறப்பட்டது.

சிறுவயதில் ஸ்ரீசங்கரர் வழிபட்ட ஸ்ரீகிருஷ்ணன் ஆலயம், காலடி.
வெறுமனே பாடுபவர் என்று இல்லாமல் கற்பவர் (அதீதே) என்று கூறியது, இந்தத் தோத்திரம் கூறும்
வேதாந்தப் பொருளின் அர்த்த ஞானத்துடன் இதைப் பாடி தியானிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
தன் அகத்துள் உறையும் பரம்பொருளே கோவிந்தன் என்பதால், கோவிந்தனின் திருவடி தியானம் என்பது
ஆத்ம ஞானத்தினின்றும் வேறானதல்ல. அழிவற்ற ஆனந்தத்தை உண்டாக்குவதால், அதுவே அமுதநீர்.

அனைத்துப் பாவங்களும் காம குரோதங்களால் உண்டாகின்றன. அந்தக் காமகுரோதங்கள் அவித்யையாகிய
அக்ஞானத்தில் பிறப்பவை. எனவே, பாவத்திற்கு மூலகாரணமாகிய அவித்யையை அழிக்கும் ஞானத்தினால்,
பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன.

ஏற்கனவே தன்னிடம் இல்லாத ஒரு பொருளை அடைவது (ஸாத்ய வஸ்து) என்றால் சரி.
ஆனால் தன் அகத்துள் நீங்காமல் நிற்கும் பொருளை (ஸித்த வஸ்து) அடைவது என்றால்?
பிரம்மாகிய அந்தப்பொருளும் ஆத்மாவாகிய தானும் வேறல்ல என்ற *அறிதலை* (ஞானம்) அடைவது என்பதே இதன் பொருள்.
கீழ்க்கண்ட கீதை மொழிகள் இங்கு சிந்திக்கத் தக்கன.

अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः। सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥३६॥

பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும்,
அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய் (4.36)

तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः। गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः॥१७॥

பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர்,
தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள். (5.17)

இங்கு கூறப்பட்ட பகவானின் நாமங்களுக்கு நேரடியான பொருளுடன் கூட தத்துவார்த்தமான வேதாந்தப் பொருளும்
உண்டு என்பதால் பொருளுணர்ந்து அந்த நாமங்களைக் கூறுவதே வேதாந்த விசாரமாகவும் ஆகிறது.

அச்யுத – விலகாதவன்.
பக்தர்களின் இதயத்திலிருந்து விலகாதவன்.
பிரகிருதி குணங்களுக்கு வசமாகாமல் தன் நிலையிலிருந்து விலகாமல் (மாறாமல்) நிற்கும் பொருள்.
‘அச்’ என்பது இலக்கணத்தில் உயிரெழுத்துக்களையும், அதன் வழிப்பொருளாக உயிர்களையும் (ஜீவன்களை) குறிக்கும்.
அசி+யுத = ஜீவன்களிடம் பேதமற்றுப் பிணைந்திருக்கும் அத்வைதப் பொருள்.

மாதவ – மா என்பது திருமகளைக் குறிக்கும். திருமகள் கேள்வன்.
இனிமை தரும் வசந்தத்தின் (மாதவ) நாயகன்.
‘மா’ எனப்படும் மாயைக்குத் தலைவனாக, அதற்கு வசப்படாமலிருந்து அதனை இயக்குபவன்.
மா: அழகு. அழகுகளின் தலைவன்.

விஷ்ணு – வியாபித்திருப்பவன். நிறைந்த பூரண சொரூபன்.
எங்கும் எல்லோராலும் துதிக்கப் படுபவன்.
பிறவித்துயர் என்னும் விஷத்தை அகற்றுபவன்.

கோகுல நாயக – கோகுலம் எனும் ஆயர்பாடியின் தலைவன்
பசுக்கூட்டங்களின் (ஜீவர்களின்) தலைவன்
அக்கூட்டங்களுக்கு உரியதை அடையும்படி செய்பவன்.
அறிஞர் கூட்டங்களின் தலைவன்.

கிருஷ்ண – (பக்தர்களை) வசீகரித்து இழுப்பவன்.
பாவிகளை இழுத்து அழிப்பவன்.
காலச் சக்கரத்தை இழுத்து சுழலச் செய்பவன்.
(துஷ்ட மாடுகளையும் துஷ்ட ஜீவர்களையும்) இழுத்து நேர்வழியில் திருப்பி விடுபவன்.
அழகிய கருநிறமுடையவன்.

கோவிந்த என்ற பதம் முன்பே விளக்கப் பட்டது.
இது நிர்குண பிரம்மம் (அருவமான பரம்பொருள்), ஸகுண பிரம்மம் (உருவமான பரம்பொருள்) இரண்டையும் குறித்து நிற்கிறது.

—————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சங்கராச்சாரியார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading