ஸ்ரீ திரு விருத்தம் -51-60–வியாக்யானங்களில் அமுத மொழிகள் —

இவன் வந்து கிட்டுவதற்கு முன்னே கடலோசை வந்து செவிப்பட்டு பாதகம் ஆகிற படியை சொல்கிறது –
பதினாலாண்டு கூடிப் போன வழியை ஒரு பகலே வாரா நிற்க செய்தே -க்ரம ப்ராப்தி பற்றாமை நடுவே
திருவடியை வரக் காட்டினார் இறே-அப்படியே இங்கு ஓர் ஆள் வராவிட்டால் கண்டதெல்லாம் பாதகமாம் இறே –

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

பதவுரை

கடல்–கடலானது
மலை–மந்தர பர்வதத்தை
மத்து ஆ கொண்டு-மத்தாகக்கொண்டு
அரவால்–வாஸுகிநாகமாகிய கடை கயிற்றால்
சுழற்றிய–(தன்னைக் கடைவதற்குச் சுழலச் செய்த
மாயம்–அற்புத சக்தி வாய்ந்த
பிரான்–எம்பெருமான்
அலை கண்டு–(தன்னை) அலைத்து
கொண்ட–(தன்னிடத்தினின்று) எடுத்துக் கொண்ட
அமுதம்–அமிர்தத்தை
கொள்ளாது–(மீண்டும்) வாங்கிக்கொள்ள மாட்டாமல்,
வேரி துழாய் துணை ஆ–பரிமளத்தையுடைய (எம்பெருமானது) திருத்துழாயைத் தனக்குத் துணையாகக் கொண்டு
துலை கொண்டு–ஒத்து எதிர்வந்து
தாயம் கிளர்ந்து–பங்காளி யுரிமை கொண்டாடுதல் போலே மேலெழுந்து
பரதர் விலை கொண்டு தந்த சங்கம் இவை கொள்வான் ஒத்து–நெய்தல் நிலமக்களான வலையம் (என்னிடத்தினின்று) விலை வாங்கிக் கொண்டு எனக்குக் கொடுத்த இச்சங்கு வளைகளை மீட்டும் வாங்கிக் கொள்வது போன்றது.
அழைக்கின்றது,–(சண்டைக்குக்) கூப்பிடுகின்றது.

சக்கரவர்த்தி திருமகனை அண்டை கொண்டு மகாராஜர் வாலியை அறை கூவினால் போலே-
திருத் துழையை அண்டை கொண்டு நலியத் தொடங்கிற்று –

———————

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியேன் என்று வார்கின்றதே – 52-கால மயக்கு –அந்தாமத் தன்பு -2-5-

பதவுரை

அழைக்கும்–(அன்போடு) அழைக்கிற
கரும் கடல்–(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது.
வெண் திரை கை–(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே
கொண்டு போய்–எடுத்துக் கொண்டு போக,
விண்வாய்–ஆகாயத்திலே
புலம்பி அழைத்து–(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு
முலை மலை மேல் நின்றும்–(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின் மேல் நின்றும்.
அலர் வாய் மழை கண் மடந்தை–தாமரை மலரில் வாழ்பவளும் மழை போலக் குளிர்ந்த கண்களை யுடையவளுமான திருமகள்
அரவு அணை ஏற00(அப்பாற் கடலினிடையிற் பள்ளி கொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற,
(அது கண்டு)
மண் நாதர்–பூமிப்பிராட்டி
ஆறுகள் ஆய்–ஆறுகளாக பெருக விட்ட
மழை கண்ண நீர்–மழையாகிய கண்ணீரானது
திருமால் கொடையான் என்று–திருமால் கொடியவனென்று வெளியிட்டு
வார்கின்றது–பெருகுகிறது.

திருமால் கொடியேன் என்று – இருவருமான சேர்த்தி பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் –
அது நமக்கு இழவுக்கு உடல் ஆவதே -நீர்மைக்கு உடலானது -க்ரௌர்யத்துக்கு உடலாய் தலை கட்டுகிறதே –
இச் சோத்யத்துக்கு முன்புள்ள முதலிகள்-தானும் அவளுமான போகத்துக்கு நாம் ஸ்ரக் சந்தனாதிகளோ பாதியாய்
இருக்க என்ன அநாதரித்து போவதே என்று இன்னாதாய் அழுகிறாள் -என்று பரிகரித்தார்கள் –
இத்தை ஆளவந்தார் கேட்டருளி – வடிவிணை இல்லா மலர் மகளை இந்நீர் நடுங்க நடுங்கும்படி கடலிலே கொடு போவதே –
படுக்கையாக நான் கிடக்க செய்தே -என்று ஸ்ரீ பூமிப் பிராட்டி அழுகிறாள் காண் -என்று அருளி செய்தார்-
இத்தை ஸ்ரீ பட்டர் -கேட்டருளி -இது எல்லாம் வேண்டாம் காண்- அனுபபன்னமாய் இருப்பதோர் அர்த்தத்தை சொல்லவே –
இது எங்கனே கூடும்படி என்று தலைமகள் நெஞ்சிலே படும் –அவள் விசாரித்து நிர்ணயிக்கும் காட்டில் அவன் வந்து கொடு நிற்கும் –
என்னும் விஸ்ரம்பத்தாலே சொன்னார்களாக அமையும் காண் -என்று அருளி செய்தார்-

ஒரு ஆச்சார்யர் நம்பிள்ளை இடத்தில் குறைய நினைத்து தாமே திரு விருத்தத்தைப் பார்த்துக் கொண்டு போக
இப்பாட்டு அளவாக ஒரு வகையாக நிர்வகித்து இது தெரியாமையாலே ஒருத்தரும் அறியாதபடி அர்த்த ராத்திரியிலே வந்து
பிள்ளையை அழைக்க இப்பாட்டினுடையவும் இவருடையவும் ஸ்வ பாவம் அறியுமவர் ஆகையால்
அழைக்கும் கருங்கடலோ என்றாராம் என்று ஆத்தான் அருளிச் செய்வர்

ஸ்வாபதேசம்
பகவத் லாபத்தால் அல்லது கால ஷேபம் பண்ண இவர்க்கு அரிதாகையாலே பார்ஸ்த்வஸ்தர் அநுப பன்னங்களைச்
சொல்லியாகிலும் ஆஸ்வசிப்பிக்க வேண்டும்படியான தசை பிறந்தபடியைச் சொல்லுகிறது

————

இவள் இருந்து பகட்ட கேளாது இறே அது -காலமும் அதுவேயாய் -வர்ஷமும் மெய்யாய் நிலை நின்றவாறே
அவன் வரவு காணாமை -இவள் மோஹித்தாள் -இவளுடைய ஸ்லாக்யத்துக்கு அனுரூபமாக பந்துக்கள் கலங்கி –
வழி அல்லா வழியே பரிகரிக்க இழிய -இவள் பிரகிருதி அறிந்து இருப்பாள் ஒரு மூதறிவாட்டி –
நீங்கள் செய்கிறது பரிகாரம் அன்று –
இவள் பிழைக்க வேணும் ஆகில் நான் சொல்லுகிறபடியே இங்கனம் பரிகரிக்க பாருங்கோள்-என்கிறாள்-

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –வைகுந்தா மணி வண்ணனே -2-6-

பதவுரை

வாரா ஆயின முலையான–கச்சுப் பொருந்திய தனத்தை யுடையவளான
இவள்–இப்பராங்குச நாயகியினுடைய
இது–இந்த நோயானது
வானோர் கலைமகன் ஆம் சீர் ஆயின தெய்வம் நல்நோய்–தேவாதி தேவனான திருமாலினது தகுதியான திருக்கல்யாண குணவிஷயமாக வுண்டான சிறந்த நல்ல நோய்;
(இதற்குப் பரிஹாரமுறை யாதெனில்;)
தெய்வம்–திய்வமான
தண்–குளிர்ந்த
அம்–அழகிய
துழாய் தார் ஆயினும்–(அப்பெருமானது) திருத்துழாய் மாலையையாயினும்
தழை ஆயினும்–(அத்திருத்துழாயின்) ஓரிலையையாயினும்
தண் கொம்பு அது ஆயினும்–குளிச்சியான (அதன்) கிளையை யாயினும்
கீழ்வேர் ஆயினும்–கீழிலுள்ள (அதன்) வேரையாயினும்
நின்ற மண் ஆயினும்–(அதற்கு இருப்பிடமாய்) நின்ற மண்ணையாயினும்
கொண்டு வீசுமின் (நீங்கள்) கைக்கொண்டு (அதன் காற்று இவள் மேற்படும்படி) வீசுங்கள்

இதர ஸ்பர்சங்கள் தூரப் போந்ததும் பாதகமாம் போலே பகவத் விஷயத்தில்
தூரே உண்டான சம்பந்தமும் நோவுக்கு பரிகாரமாம் இறே –
ஸ்பர்ச வேதி ஆகையாலே -இவ்வருகே போர போர உறைத்து இருக்கும் -இறே-தம்மடியார் அடியார் -இத்யாதி –

ஸ்வாபதேசம்
இத்தால் இதர ஸ்பர்ச லேசமும் சத்தையினுடைய விநாசத்துக்கு ஹேதுவாய் -பகவத் விஷயத்தில் சம்பந்தம் உள்ள
ஏதேனும் ஒன்றாகிலும் சத்தா ஹேதுவாம் படியான பாவம் இவருக்குப் பிறந்த படி சொல்கிறது –

———

நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே -என்றாளே – வீச வேண்டிற்று இல்லை-இவளுடைய உக்தி மாத்ரத்தாலே உணர்த்தாள்
உறங்கின போது பசி பொறுக்கலாம்-உணர்ந்தால் ஜீவித்து அல்லது நிற்க ஒண்ணாது இறே –
மோகம் தானே நன்றாம்படி யாய் இருந்தது-இனி அங்கு நின்றும் ஓர் ஆள் வந்து தரித்தல்-இங்கு நின்று ஆள் விட்டு
வரவு பார்த்து இருந்து தரித்தல் -செய்ய வேண்டும்படியாய் ஆயிற்று
இங்கு நின்றும் ஒருவர் வரக் கண்டது இல்லை -தன் பரிகாரத்தில் கால் நடை தருவார் இல்லையாய் ஆயிற்று-
இனித் தன் பரிசரத்தில் வர்த்திக்கிற வண்டுகளை தூது விடுகின்றாள் –

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –கேசவன் தமர் -2-7–

பதவுரை

நெய்–(திருவாய்ப்பாடியிலே) நெய்யை
தொடு உண்டு–கைதொட்டுக் கவர்ந்து அமுது செய்து
ஏசும்படி–(பலரும்) பரிஹஸிக்கும்படி
அன்ன செய்யும்–(மற்றும் பல) அப்படிப்பட்ட காரியங்களைச் செய்தருளிய
எம் ஈசர்–எமது தலைவரும்
விண்ணோர் பிரானார்–(மேலுலகிலுள்ளார்க்கு) தலைவருமாகிய எம்பெருமானுடைய
மாசு இல் மலர் அடி கீழ்–குற்றமில்லாத செந்தாமரை மலர்போன்ற திருவடிகளின் கீழ்
எம்மை சேர்விக்கும்–எம்மை அடைவிக்கவல்ல
வண்டுகளே–ஓ வண்டுகளே! (நீங்கள்)
வீசும் சிறகால் பறத்தீர்–வேகமாக வீசுகிற சிறகுகளாலே பறந்து செல்லவல்வீர்;
விண் நாடும் துங்கட்டு எளிது–(அவர் வீற்றிருக்கு மிடமான பரமபதமும் உங்களுக்குச் செல்ல) எளிது;
(எனக்காக நீங்கள் அவர் பக்கல் தூது செல்லுதற்குப் புறப்படும் பொழுது)
பேசும்படி அன்ன பேசியும் போவது (நீங்கள் எனக்காக அவரிடம் சொல்லும்படியான வார்த்தைகளை (எனக்கு) சொல்லியும் போகவேணும்.

ஒரு நீர் சாவியை யாய் இவை உறாவிக் கிடக்கிற படி-சிலர் பட்டினி விட சிலர் ஜீவித்தாவோபாதி –
விடாய்த்த விக் கரணங்களை கொண்டு முடிந்து போய்- வேறு ஒரு சரீர பரிகிரகம் பண்ணி இவரை அனுபவிக்க
இருக்கை அன்றிக்கே-விடாய்த்த இவற்றைக் கொண்டே ஸ்பர்சிக்கும்படி பண்ண வேணும்
சகாமாஹம்-அவரைப் போலே வரில் பொகடேன்-கெடல் தேடேன் – என்று இருக்கும் அளவு அல்லேன் நான் –
ததா குருதயாம்மயி -அவருடைய சக்தியில் குறை இன்றிக்கே இருக்க செய்தே -இவ்வளவாக கார்ய கரமாக கண்டிலோம் –
உன் கிருபையாலே அதுவும் பலிக்கும்படி பண்ணித் தர வேணும்-என்னை அங்கே சேர விடுகையே
நிரூபகமாக உடைய வண்டுகள் அன்றோ நீங்கள் –

ஸ்வாபதேசம்
இத்தால் தூத ப்ரேஷண வியாஜத்தாலே தம் ஆற்றாமையை அவன் திரு உள்ளத்தில் படுத்துகிறார்

———–

இவள் விட்ட தூதுக்கு வந்து கலந்து -பிரிய நினைத்து -பிரிந்தால் வரும் அளவும் -இவள் ஜீவித்து இருக்கைக்காக –
இப்படி இருக்கிற இவன் -பிரிந்தால் தாழான் -என்று அவள் நெஞ்சில்-படுகைக்காக -நலம் பாராட்டு என்பதோர் கிளவியாய் –
அவளைக் கொண்டாடுகிறான் – குலே மஹதி சம்பூதே -என்று பெருமாளும் கொண்டாடினார் இறே-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீரக்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55- சார்வே தவ நெறி -10-4-

பதவுரை

வண்டுகளோ–வண்டுகளே!
வம்மின்–வாருங்கள்;
நீர் பூ–நீரிலுண்டாகிற பூவும்
நிலம் பூ–நிலத்திலுண்டாகிற பூவும்
மரத்தின் ஒண்பூ–மரத்திலுண்டாகிற சிறந்த பூவும் என்கிற இவை யெல்லாவற்றிலும்
உண்டு–(தேனைக்) குடித்து
களித்து–களிப்படைந்து
உழல்வீர்க்கு–(எங்கும்) திரிகிற உங்களுக்கு
ஒன்று உரைக்கியம்–(யாம் இப்பொழுது) ஒரு புதுமையைச் சொல்லுவோம்.
ஏனம் ஒன்று ஆய்–ஒப்பற்ற வொரு வராஹமூர்த்தியாய்
நண் துகள் ஆடி–பூமியின் தூளியை அளைந்து எம்பெருமானுடைய
வைகுந்தம்–பரமபதத்தை
அன்னாள்–ஒத்திருக்கின்ற இப்பராங்குச நாயகியினுடைய
குழல்வாய்–கூந்தலிலே இயற்கையாய் அமைந்துள்ள
விரைபோல்–பரிமளம்போல
விண்டு–மலர்ந்து மணம் வீசி
கள் வாரும்–தேன் பெருகப்பெற்ற
மலர்–பூக்கள்
தும் வியல் இடத்து–உங்களாட்சிக்கு உட்பட்ட (நீங்கள் தடையின்றி ஸஞ்சரிக்கிற) விசாலமான இடத்திலே
உளவோ–இருக்கின்றனவோ?

ஸ்வாபதேசம்
இத்தால் பர வியூக விபவாதிகள் எங்கும் புக்கு பகவத் குணங்களை அனுபவித்து திரிகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அக் குணங்களில் அவஹாகித்து இருக்கிற இவர் படி நீங்கள் அனுபவிக்கிற அவ்விஷயத்தில் தானுண்டோ -என்று
தம்மை அனுபவிக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் வார்த்தையை -அவர்கள் பாசுரத்தாலே தாம் அனுபவிக்கிறார் –
அம்பஸ்யபாரே-புவனஸ்ய மத்யே -நாகஸ்யப்ருஷ்டே -என்னக் கடவது இறே –
அம்பஸ்ய -வியூகம் / புவனஸ்ய -விபவம் அர்ச்சை /நாகஸ்யப்ருஷ்டே -பரம்-
இவையே இங்கு மூன்று வித மலர்கள் என்று உரைக்கப்பட்டன –

—————-

லந்து பிரிந்த தலைமகன் வரவு தாழ்க்க -பிரிவாற்றா தலை மகளைக் கண்ட தோழி –இவளுடைய ஆற்றாமை
இருந்தபடி இதுவாய் இருந்தது – நாயகனையோ வரக் காண்கிறிலோம் -இனி இவள் ஜீவிக்கை என்று ஒரு பொருள் இல்லை –
இவளை இழந்தோம் ஆகாதே -என்று-நோவுபட – இத்தைக் கண்ட தலைமகள் -இவள் சன்னதியிலே யாத்ருச்சிகமாக
ஒரு சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆயிற்றாய்-அத்தை இவளை நோக்கி –
நீயும் அறியாதபடி இங்கனே ஒரு சம்ச்லேஷம் வ்ருத்தம் ஆயிற்று காண் -நீ அஞ்ச வேண்டா காண் – என்று
தலைமகள் தான் தோழிக்கு வ்ருத்தமான சம்ச்லேஷத்தை சொல்லுகிறாள் –
தலைவன் இரவிடை கலந்தமையைத் தலைவி தோழிக்கு உரைத்தல்-

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –கண்கள் சிவந்து -8-8-

பதவுரை

வியல்–விசாலமான
இடம்–உலகங்களை
உண்ட–திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார்–பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த–(எம்மிடத்துச்) செலுத்திய
திரு அருளால்–சிறந்த கருணையினால்
உயல் இடம்பெற்று–உஜ்ஜீவிப்பதற்கு இடம் பெற்று
உய்ந்தும்–வாழ்ந்திட்டோம்,
அஞ்சலம்–(இனி வாடை முதலியவற்றுக்கு) அஞ்சுவோமல்லோம்
தோழி–வாராய்தோழி!
ஓர் தண் தென்றல் வந்து–ஒரு குளிர்ந்த தென்றற் காற்று வந்து
அயிலிடை யாரும் அறிந்திலர்–அருகில் எவரும் அறியாதபடி
அம் பூ துழாயின் இன் தேன்–அழகிய பூக்களையுடைய திருக்துழாயின் இனிய தேன் துளிகளை
புயலுடை நீர்மையினால்–மழை துளித்தல் போலத் துளிக்குந் தன்மை யுடையதாய்
என்–என்னுடைய
புலன்–அவயவங்களிலும்
கலன்–ஆபரணங்களிலும்
தடவிற்று–ஸ்பர்சித்தது

பிரளய ஆபத்தில் தன் வயற்றில் வைத்து நோக்குகிற போது பூமிக்காகா ஏதேனும் ஒரு கைமுதல் உண்டோ
அவர் பண்ணும் கிருபைக்கு பாத்ரமாம் இத்தனையே இத்தலைக்கு வேண்டுவது –
அவர் பண்ணும் அருள் ஒரு சககாரியை அபேஷித்து இரா இறே

எம்பெருமானார் எழுந்து அருளி இருக்க செய்தே -ஸ்ரீ பாதத்தில் சேவித்து இருக்கிறவர்கள் –
நமக்கு தஞ்சமாக நினைத்து இருக்க அடுப்பது என் -என்ன
வங்கி புரத்து நம்பி இருந்தவர் -மூடோயமல்பமதி -என்ற ஷத்ர பந்துவினுடைய வாக்கியம் அன்றோ -அது ஒண்ணாது காண் –
பிரணதி -என்று ஓன்று உண்டு –அதிலே ஒரு சர்வஞ்ஞன் அறிய நிர் மமனாய் விழ வேணும் இறே –
நம் தலையிலே ஏதேனும் ஒரு அந்வயம் ஒதுங்கில் அது செய்து தலை கட்டுகையில் உள்ள அருமையாலே அது இழவோடே
தலைக் கட்டும்படி இருக்கும் காண் – இத் தலையில் ஏதேனும் ஒரு அம்சம் உண்டாகில் அது அப்ரதிஷேத்திலே புகும்
இத்தனை அல்லது -உபாய சக காரம் ஆகாது – நீ உபாயம் ஆக வேணும் -என்கிற ஸ்வீகாரம் அவஸ்ய அபேஷிதமாய்
இருக்க செய்தேயும்-அத் தலையிலே உபாய பாவமாம் படி இறே இருப்பது-இவன் பக்கலிலே பரம பக்தி பர்யந்தமாக விளைந்தாலும் –
அது ஸ்வரூப பிரயுக்தமான ருசியிலே-அந்வயிக்கும் இத்தனை போக்கி -ஸ்வ தந்தரமாக நின்று பல பிரதமாக மாட்டாதே இறே இருப்பது-
ஆனால் பின்னை நினைத்து இருக்க அடுப்பதென் -என்ன
காளியனுடைய வார்த்தையை-நினைத்து இருக்க அடுக்கும் -என்று அருளி செய்து அருளினார் –
கிருபை பண்ண வேணும் என்கிற உக்தி மாத்ரத்தை இறே-இப்போது பிரதிகூல்ய நிவ்ருத்தி யாக நினைக்கிறது –

ஸ்வாபதேசம்
குண ஞானத்தாலே தரித்த படி சொன்ன படி-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்ச ந
எம்மின் முன்னுக்கு அவனுக்கு மாய்வர் -என்று மோகித்து கிடக்கிற தோழி போலே –
தாமோதரன் உண்டும் உமிழ்ந்தும் கடாய மன்னேர் அன்ன என்ற பாசுரத்தை
உள் கொண்டு அந்த ஆபத்து இவளுக்கு உண்டு என்று அவதாரிகை

—————

சம்ச்லேஷித்து விச்லேஷமும் வ்ருத்தம் ஆயிற்று-ஒரு கார்ய புத்யா பிரிந்தான் ஆகிலும் -ந ஜீவேயம் ஷணம் அபி –
என்னும்படி இறே தலை மகன்-ஆற்றாமை இருப்பது -அவனுடைய ஆற்றாமையால் வந்த தளர்தியை கண்ட பாங்கானவன் –
லோக யாத்ரையில் ஒன்றுக்கு ஈடுபடாத நீ ஒரு விஷயத்துக்காக இப்பாடு படும் அது தலைமைக்கு போராது காண் -என்று
திருத்தப் பார்க்க –அவளுடைய நோக்குக்கு இலக்கானார் படுமது அறியாமை காண் நீ இப்படி சொல்லுகிறது –
நீயும் அவள் நோக்குக்கு இலக்கு ஆனாய் ஆகில் -இப்படி சொல்லாய் காண் -என்று அவன்-கழறினததை
மறுத்து வார்த்தை சொல்லுகிறான்–கழற்றெதிர் மறுத்தல் என்று கிளவி-தலைவன் பாங்கனுக்கு கழற்று எதிர் மறுத்தல்

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – -57–முடியானே மூவுலகும் -3-8-

பதவுரை

புலம் குண்டலம்–அழகிய குண்டலங்களையுடைய
புண்டரீகத்த–தாமரைமலர் போன்றதான தலைவியின் முகத்திலுள்ள
போர்கெண்டை–(தம்மில் ஒன்றோடொன்று எதிர்த்துப்) போர் செய்கிற இரண்டு கெண்டை மீன்கள் போன்ற கண்கள்
வல்லி ஒன்றால் விலக்குண்டு–(மூக்காகிய) ஒரு கொடியால் (குறிக்கிட்டு இடையில்) விலக்கப்பட்டு
உலாகின்று–(தனித்தனி சீற்றத்தோடு) உலாவிக் கொண்டு
வேல் வழிக்கின்றன–வேலாயுத்த்தைக் கொண்ட குத்தினாற்போல வருத்துவனவாய் நோக்குகின்றன.
கண்ணன்–எம்பெருமானுடைய
கையால்–திருக்கைகளால்
மலக்குண்டு–கடைந்து கலக்கப்பட்டு
அமுதம் சுரந்த–(தன்னிடத்திலுள்ள) அமிர்தத்தை வெளிப்படுத்தின
மறி கடல் போன்று–அலை கிளரப் பெற்ற கடல்போல
அவற்றால் கலக்குண்ட நான்று–அக்கண்களால் (யாம்), கலக்கப்பட்ட பொழுது
கண்டார்–(அக்கண்களின் நிலைமையை ப்ரத்யக்ஷமாகப்) பார்த்தவர்கள்
யாரும்–எவரும்
எம்மை–எம்மை
கழறலர்–(ஒருத்தியின் கண் பார்வையில் அகப்பட்டு இப்படி கலங்கினானென்று) குற்றஞ் சொல்லமாட்டார்கள்.

ஸ்வாபதேசம் –
இத்தால் ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யில் அகப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை –
பகவத் விஷயத்தை காட்டியும் மீட்க ஒண்ணாத படியை சொல்லிற்று –
அவர்கள் -தேவு மற்று அறியேன் -என்று இருப்பவர்கள் காணும் –
பவத பரமோ மத -என்கிறபடி அவர் உகந்தது என்று இறே பின்னை பகவத் விஷயத்தை விரும்புவது –

—————

கீழ் பிறந்த அவசாதம் எல்லாம் நீங்கும் படிக்கு ஈடாக -ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றி
எல்லார் தலையிலும் பொருந்தும்படியான திருவடிகளைக் காட்டி -ஆன பின்பு நமக்கு
ஆகாதவர் இல்லை காணும் -என்று ஆஸ்வசிப்பித்து-இப்படி எல்லாம் செய்ய செய்தேயும் -ஒன்றும் செய்யாதானாய் –
அவன் நிற்கிறபடியை கண்டு அத்தை பேசுகிறார் –தோழி தலைவன் பெருமையை யுரைத்து தலைவியை ஆற்றுதல் –

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-திண்ணன் வீடு -2-2-

பதவுரை

ஒன்றே–ஒரு திருவடியிடமே
ஆயிற்று–பூமி முழுவதும் தானாய்ப் பரந்தது;
மற்றொரு திருவடி
முழுதாயிற்று–(பூமியிலே இடமில்லாமையாலே மேலே) போய்
உழறு அலர்–உலகுங்செல்ல வல்ல பரந்த
ஞானத்து சுடர் ஆய் விளக்காய்–ஞானமாகிய ஒளிக்கு இடமான விளக்குப் போன்றவனாய்
உயர்ந்தோரை இல்ல–(தன்னிலும்) மேற்பட்டவரை யுடையவனல்லாதவனும்
நிழல் தர–நிழலைச் செய்யும்படி
எல்லா விசும்பும்–ஆகாசாவகாம் முழுவதிலும்
நிறைந்தது–வியாபித்தது
நீண்ட அண்டத்து–அளிவிட வொண்ணாத பரமபதத்தில் எழுந்தருளியிருப்பனும்
அழறு அவர் தாமரைக் கண்ணன்–சேற்றில் மலர்ந்த செவ்வி மாறாத செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையவனுமான திருமால்.
இங்கு அளக்கின்றது என்னோ–இந்த லீலாவிபூதியில் அளக்க வேண்டுவதுண்டோ?

வாஸூதேவ தருச்சாயா —எங்கும் ஒக்க வ்யாப்தமாய் இருப்பதொரு வ்ருஷத்தின் உடைய நிழல் ஆயிற்று –
நாதி சீதா -இத்யாதி -மிக வெப்பதும் செய்யாதே -மிக வவ்வ விடுவதும் செய்யாதே –
நரகம் ஆகிற பெரு நெருப்பையும் விலக்கவற்று
சாகிமர்த்தம் ந சேவ்யதே – -இந் நிழலுக்கு புறம்பாய் இருப்பதொரு நிழல் உண்டாய் அங்கே ஒதுங்கவோ –
இது நன்று அல்ல என்னவோ -இதின் உள்ளே இருந்த அநிச்சையை சொல்லும் இத்தனை –
பூ -போக்கியம் -பழம்- தாரகம் -நிழல் -போஷகம்-
திருமால் இரும் சோலை எந்தாய் -உன் பாத நிழல் அல்லால் மற்றோர் இருப்பிடம்
நான் எங்கும் காண்கின்றிலேன் –ஆஸ்ரித ரஷகனுமாய் -ஆஸ்ரித விரோதி நிரசகனுமாய் இருக்கையாலே –
உன் திருவடிகளின் நிழல் ஒழிய வேறு எனக்கு ஒதுங்கலாவது ஒரு நிழல் கண்டிலேன் –
நின்ற நிலையிலே நின்றாரை -அளந்தார் -என்ன ஒண்ணாது இறே-அடிமாறி இடில் இறே அளந்தது ஆவது –
மரக்கால் பெருத்து நெல் அல்பமானால் அளப்பார் உண்டோ- ரஷ்ய வர்க்கம் சுருங்கி ரஷகன் பாரிப்பே விஞ்சி இருக்கிறது
இப்படி சர்வஞ்ஞனாய் -பராத்பரனான புண்டரீ காஷன் -இவ் விபூதியிலே சேர்ந்த என்னையும்-முன்னமே அளந்து இருக்க
இப்போது அத் திரிவிக்கிரம அவதாரத்தை எனக்கு பிரகாசிப்பத்தது -மறுபடியும் எதை அளைக்கைக்காவோ தெரிய வில்லை –

—————

எட்டா நிலத்திலே ஸ்ரீ வைகுண்டத்திலே ஓலக்கம் கொடுத்து இருக்கை அன்றிக்கே -அவதரித்து இங்கே வந்து –
ஸூலபனானான் என்றவாறே -தாம் பெற்றால் போலே இருக்க ஹ்ருஷ்டரானார் -அங்கே இருந்து இழக்கை அன்றிக்கே –
இங்கே வந்து கிட்டச் செய்தே -பேரா விட்டவாறே அவசன்னரானார் -அவ் வஸாதம் ஒரு பிராட்டி தசையை விளைவித்து –
கலந்து பிரிந்து பிரிவாற்றாத் தலைமகள்-சம்பந்தம் உண்டாய் இருக்க -போக யோக்யமான காலத்தில் -வந்து
உதவக் காணாமையாலே-இருள் பாதகமாகா நின்றது என்று சொல்லா நின்றாள் -என்று அவள் பாசுரத்தை
திருத் தாயார்-சொல்லுகிறாளாய் இருக்கிறது –இரவு நீடுதற்கு ஆறாத தலைவியைப் பற்றி செவிலி இரங்குதல்

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன் மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –முந்நீர் ஞாலம் -3-2-

பதவுரை

வல்வினையேன்–கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை–முல்லை யரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல் வரிசையை யுடைய
சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களை யுடையவளாகிய இப்பெண்பிள்ளை
(என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய–“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி–கற்பங்களினும்
அம்–அழகிய (நீண்ட)
கங்குல்–இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்–அழகிய குளிர்ந்த திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்–உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்-மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்–என்று வாய்விட்டுச் சொல்லி யலற்றுகிறாள்.

அதனில் பெரிய என் அவா விறே–இதில் பெரிது என்னும் இத்தனை -பகவத் தத்துவத்தை விளாக்குலை
கொண்டது இறே இவர் அவா பகவத் ஆனந்தத்தை பரிசேதிக்க-புக்க வேதம் பட்டது படும் இத்தனை –
இத்தை பரிச்சேதிக்கப் புக்காலும் -நேதி நேதி -என்கிறபடியே இதன்று என்னும் இத்தனை போக்கி –
இப்படி என்று பாசுரம் இட ஒண்ணாது –

ஸ்வா பதேசம்
இத்தால் அனுபவ யோக்யமான சம்பந்தமும் ஸ்வரூப ஞானமும் (மது சூதனன் -என்கையாலே ஸ்வரூப ஞானம் –)உண்டாய் இருக்க
போக யோக்யமான காலமும் போகத்துடன் செல்லப் பெறாமையாலே வந்த ஆற்றாமையை-பார்ஸ்வத்தார் சொல்லுகிறார்கள்

————-

தளப் பெரும் நீண் முறுவல் செய்யவாய் தட முலை வளப் பெரும் நாடன் மது சூதன் என்னும் -என்றாளே –
ப்ராப்த யௌ வநையாய்-பருவம் நிரம்பின இன்று இவள் சொல்லுக்கு கேட்க-வேணுமோ –
பால்யமே பிடித்து இவளுக்கு இது அன்றோ யாத்ரை என்கிறாள் –தலைமகள் இளமைக்கு செவிலி இரங்கல்

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60- –அறுக்கும் வினையாயின -9-8-

பதவுரை

முலையோ–ஸதனங்களோ வென்னில்
முழு முற்றும் போந்தில–மிக முழுவதும் தோன்றினவில்லை;
மொய் பூ குழல்–அடர்ந்த மென்மையான தலை மயிர்கள்
குறிய–(முடிகூடாமல்) குட்டையாய் யுள்ளன;
கலையோ–ஆடையோ வென்னில்
அரை இல்லை–இடையிற் பொருந்த உடுக்கப்படுவதில்லை;
நாவோ–நாக்கோவென்னில்
குழறும்–(திருத்தமாக வார்த்தை சொல்ல மாட்டாமல்) குதலைச்சொல் பேசுகின்றது.
கண்–கண்களோ வென்னில்
கடல் மண் எல்லாம் விலையோ என–கடல் சூழ்ந்த உலகமுழுவதும் (இவற்றுக்கு) விலைப் பொருளோ வென்று சொல்லும்படி
மிளிரும்–(ஒரு நிலையில் நில்லாமல்) பிறழ்ந்து நோக்குகின்றன;
பெருமான் மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகம்.–‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ? என்று பலகாலுஞ் சொல்லிப் பயில்கிற வார்த்தை
இவள் பரமே–(இப்படி இளமைப் பருவமுடைய) இவளிடம் உண்டாகக் கடவதோ?.

கடல் இத்யாதி -இவ்விடத்தை பட்டர் அருளிச் செய்யா நிற்க -அல்லாத அவயவங்களினுடைய-நிரம்பாமையை
சொல்லி வைத்து இதனுடைய பெருமையை சொன்னால் விரூபமாகாதோ -என்று ஜீயர் கேட்க –
இதிலும் சிறுமையே காணும் சொல்கிறது -இங்கனே சொல்லலாவது தானும் இன்று – நாளை இது தானும் சொல்லப் போகாது –
என்று அருளிச் செய்தார்-ஆகையால் -இதுவும் பால்யத்துக்கு சூசகம் என்றபடி-
பர வ்யூஹாதிகளை விட்டு -திரு வேங்கடமுடையான்-பக்கலிலேயாய்-அவன் தன் அளவில் அன்றிக்கே
திருமலையே உத்தேச்யம் என்று சொல்லுகிற-பாசுரம்-
முலையோ முழு முற்றும் –மீ மிசை யாலே ஒன்றும் இல்லை என்கிறது
இவள் இப்படி கூப்பிடுவது பால்யம் தொடங்கி உள்ளதாகையால் இது ஸ்வத ஸித்தம்-என்கிறார் —

ஸ்வாபதேசம்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்த-என்றும் -அறியா காலத்துள்ளே என்றும் சொல்லுகிறபடியே-
இவருக்கு பகவத் விஷயத்தில் உண்டான ப்ராவண்யம் சத்தா பிரயுக்தமான படி சொல்லுகிறது

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading