சர்வேஸ்வரன் சர்வ அபேஷித ப்ரதனாய் இருந்தானே யாகிலும் இதர விஷயங்களிலே ருசி யற்று
அவன் திருவடிகளிலே ஆஸ்ரயிப்பார்க்கு அல்லது நித்ய விபூதியைக் கிட்டுகை அரிது –
ஹேயத்திலே ஹேயதா புத்தியும் உபாதேயத்திலே உபாதேயதா புத்தியும் வேண்டாவோ -பேற்றுக்கும்
கீழில் பாட்டில்-ருசி யுடையவனுக்கு உதவின படி சொல்லிற்று –
இதில் – ருசி தான் வேண்டுவது – என்கிறது –
ஊனக் குரம்பையினுள் புக்கிருள் நீக்கி
ஞானச் சுடர் கொளீஇ நாடோறும் ஏனத்
துருவா யுலகிடந்த ஊழியான் பாதம்
மருவதார்க்கு உண்டாமோ வான் —91-
அனுபவிக்கைக்குத் தான் வேண்டினவோபாதி இறே ருசியும் அப்பெரிய பேற்றை பெரும் போது
தனக்கு ருசி வேண்டாவோ – இத்தலை நினையாத போதும் நினைத்திருந்து நோக்குமவன் –
விரோதியான இவ்வாகாரத்தை யன்றோ துடைத்தது– ஏனத்துருவாய் இடந்த –ஞானப் பிரான்
இவை அழிந்து கிடந்த சம்ஹார காலத்திலும் தன் மேலே ஏறிட்டுக் கொண்டு நோக்கும் ஸ்வ பாவனான வனுடைய
திருவடிகளை நாள் தோறும் பொருந்தி ஆஸ்ரயியாதார்க்கு பரமாகாச சப்த வாஸ்யமான பரமபதம் உண்டாமோ –
———————-
அவாப்த சமஸ்த காமனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரிதர் உடைய த்ரவ்யமே தனக்கு தாரகமாக
நினைத்து இருக்கும் ஸ்வ பாவன் என்கிறது -அவ்வோ ஜன்மங்களில் அவதரித்து
அதில் உள்ளார் உடைய தாரகமே தனக்கு தாரகமாய் இருக்கிறபடி –
ஸ்ரீ வராஹமானான் ஆகில் கோரைக் கிழங்கு தாரகமாம்-இடையனாகில் வெண்ணெய் தாரகமாம் –
வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு -92-
சம்சாரிக்கு பிரளயம் போலே இவனுக்கு வெண்ணெய் பெறா விடில் –
பண்டொரு நாள் பிரளயம் கொள்ளாத படி பூமியை யடங்க
வயிற்றிலே வைத்தும் வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்தும் செய்த வயிற்றிலே
பரப்பை இத்தனை வெண்ணெய் இட்டு நிறைக்கலாம் என்று பார்த்தோ நீ செய்தது –
பிள்ளை யுறங்கா வில்லி தாசர் வயிற்றை யறுத்து வண்ணானுக்கு இட மாட்டானோ – என்றாராம் –
வயிறா வண்ணான் சாலா –
———————-
கீழ்ப் பாட்டிலே ஆஸ்ரித வாத்சல்யம் சொல்லிற்று -இதில் ஆஸ்ரித வாத்சல்ய கார்யமான
அவர்கள் விரோதிகள் பக்கல் யுண்டான சீற்றம் சொல்லுகிறது –
வயிறு அழல வாளுருவி வந்தானை யஞ்ச
எயிறிலக வாய் மடுத்த தென் நீ பொறி யுகிரால்
பூவடியை ஈடழித்த பொன்னாழிக் கையா நின்
சேவடிமே லீடழியச் செற்று -93-
கன்றுக்கு முலை கொடுக்கை அல்ல இறே வாத்சல்யம்
முன்னணை கன்றைக் கொம்பிலே சூடுகை இறே –
கொண்ட சீற்றம் உண்டு என்று-முடிந்த பின்னும் சீற்றம் மாறாது ஒழிவதே -முடிந்தால் சீற்றம் மாறுவது தன்னளவுக்கு –
சரணாகதர்க்கு தஞ்சமாவது ஆஸ்ரித அர்த்தமாக சரண்யன் விரோதி வர்க்கத்தின் மேலே சீரும் சீற்றம்
கோபச்ய வசமே இவான்-அவன் தரமல்லாவனுக்குத் தோற்றாப் போலே இவரும் தரமல்லாதத்க்குத் தோற்றார்
——————
செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா -94-
தன் பக்கல் உள்ளவை அடங்க இவர்களுக்கு காட்டினான் ஆய்த்து –
இறையேனும் -பர வ்யூஹாதிகளில் போகாது –எனக்கு சங்கல்ப்பிக்க வேண்டா –
————–
இப்படிப் பட்ட கரணங்களைக் கொண்டு சேதனர் சம்சாரத்துக்குப் பரிகரம் ஆக்கிக் கொண்டபடி என்
என்று விஸ்மிதர் ஆகிறார் –
நா வாயில் உண்டே நமோ நாரணா வென்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத
மாக்கதிக் கண் செல்லும் வகை யுண்டே என்னொருவர்
தீக்கண் செல்லும் திறம் -95-
இவை இங்கனே குறைவற்று இருக்க சம்சாரத்தைச் சென்று ப்ராபிக்கிற பிரகாரம் இருந்தபடி என்
உஜ்ஜீவிக்கைக்கு நேர் வழி கிடக்க விநாசத்துக்கு ஈடான விலக்கடி தேடி அனர்த்தப் படுவதே
—————-
திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய்
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம்
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே
கண்டாய் கடைக்கட் பிடி –96–
அவனுடைய அனுக்ரஹ நிக்ரஹங்களுக்கு புறம்பாய் நின்று பல பிரதமாக வல்லது ஓன்று இல்லை கிடாய்
விஹிதத்தைச் செய்து நிஷிதத்தைப் பரிஹரித்து போருகிற நம்மோடு விஹித நிஷித்தங்களோடு வாசி இல்லை
அவனைக் குறித்து பரதந்த்ரமாம் இடத்தில்-சர்வமும் பகவததீனம் அன்றோ-
கார்யத்தில் ஒன்றும் இல்லை பிரதிபத்தி மாத்ரமே இவனுக்கு உள்ளது
அவன் கிருபையாலே இவன் சத்தை அழியாதே கிடக்கிற இத்தனை –
—————
பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர்சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் –97–
புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில்-உன் திருவடிகளை கிட்டி அன்றோ அவள்
அந்த பிரசாதம் பெற்றது-இத்தால் தர்மம் அவன் இட்ட வழக்காம் என்னும் இடம் சொல்லுகிறது-
பிராயச் சித்தம் பண்ணியதால் சுத்தன் இன்றிக்கே இருக்கிறவனையும் சுத்தன் ஆக்கிற்று
திருவடிகளின் ஸ்பர்சத்தாலே-என்கிறது-பிறரை ஸூத்தராக்கும் படி பார்த்து அருளினான் –
உன் திருவடிகளோடு சம்பந்தம் இல்லாதது புண்யம் இல்லை-உன் கிருபையை விலக்க வல்ல பாபம் இல்லை
—————–
அவனுக்கு ஈஸ்வரத்வம் இவனுக்கு சரீர பூதனாகையாலே வந்தது-அத்தனை போக–ஸ்வத இல்லை -என்கிறார் –
பொன் திகழு மேனிப் புரி சடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத் தால் திரிவரேலும் ஒருவன்
ஒரு வனங்கத் தென்று முளன் -98-
ஒருவன் ஒருவனுக்கு சரீர பூதனாய்க் கொண்டு உளனாய் இருக்கும்
ஒருவன் ஒருவன் திரு மேனியில் ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபனாய் இருக்கும் –
இத்தால் பரன் திறம் அன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை -என்கிறார் –
——————–
ஈஸ்வர்களாக பிரமித்து இருக்கிற படியைக் கண்டு திரு உள்ளம் பயப்பட நாம் கழுத்திலே கயிற்றை இட்டுக் கொண்டால்
அறுத்து விழ விடுகைக்கு ஒருத்தன் உண்டு காண் – என்கிறார் –
உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-
நீயும் உளையாய் இருக்க என் சத்ருக்கள் வந்து என் மயிரைப் பிடிப்பதே
உன் ஜீவனத்துக்கும் என் பரிபவத்துக்கும் சேர்த்தியைச் சொல்லப் போய்க் காண் –
இவன் அவனை ஒரு நாள் உண்டு என்று இருக்கில்-பின்னை இவன் என்றும் நமக்கு உளன் என்று இருக்குமவன்
பின்னிவன் என்றும் நமக்கு உண்டு என்று இருக்கும்
தான் புகுரப் புக்கால் ஆணை இட்டுத் தடுக்காதார் நெஞ்சை வாசஸ் ஸ்தானமாக யுடையவனே
அவர்கள் ஹ்ருதயம் விட்டுப் போக வறியான்–அவனுக்கு உத்தேச்ய பூமி இவ்விடம்–
நாம் நமக்கு இல்லாதாப் போலே அவன் நமக்கு என்றும் உளன் –
————-
ஆக –
இப்படிப் பட்டவனைப் பெறுகைக்கு நமக்குச் செய்ய வேண்டுவது -என் என்னில்
பெறுவதும் அவனையே-பெறுகைக்கு சாதனமும்-அவனே என்று -அத்யவசித்துப் போவாய் -என்கிறார் –
ஓரடியும் சாடுதைத்த வொண் மலர்ச் சேவடியும்
ஈரடியும் காணலாம் என்நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை -100-
எல்லாரையும் ஈடுபடுத்தி அளந்த கொண்ட ஒரு திருவடிகளும் –
சகடாசூர நிரசனம் பண்ணின போக்யமான திருவடியும் ஒரு செவ்விப் பூவைக் கொண்டோ தான் அத்தை நிரசித்தது –
அவ்விரண்டு திருவடிகளும் பிராப்யம் -திருவடிகளைத் தருவானும் விரோதியைப் போக்குவானும் அவனே –
இப்படி அத்யவசிக்க-அனந்தரம் பிராப்யமாகச் சொல்லுகிற ஈர் அடிகளையும் காணலாம்
அவற்றை சாஷாத் கரிக்கைக்கு ஒரு தட்டு இல்லை –
வையம் தகளி -இத்யாதி –
சாஷாத்கார அநந்தரம் பின்னை செய்யுமது என் என்னில்
அவன் திருவடிகளில் நித்யகைங்கர்யத்தைப் பண்ணி வாழும் அத்தனை என்கிறார் –
————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply