ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள் விஷயத்தில் தமக்கு உண்டான
அதி ப்ராவண்யத்தை அனுசந்தித்து திருப்தராகா நிற்கச் செய்தே –
ஸ்ரீ ஈச்வரனிலும் காட்டிலும் இவர் ஸ்வ விஷயத்தில் பண்ணின உபகாரம்
ஸ்ம்ருதி விஷயமாக -அத்தை அனுசந்த்திது -வித்தராகிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்களுடைய
கல்யாண குணங்களிலே தமக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தை -சொல்லி -ஹ்ருஷ்டராய் -இதிலே –
சர்வ சேதனர்களும் சம்ஹார தசையிலே மனசோடு கூட சர்வ விஷயங்களையும் இழந்து -அசித் கல்பராய்
இருக்கிற தசையைக் கண்டு -அப்படிப் பட்ட எனக்கு அபேஷா நிரபேஷமாக-தம்முடைய நிர்ஹேதுக பரம கிருபையாலே
கரண களேபர பிரதானம் பண்ணின ஸ்ரீ பெரிய பெருமாளும் -ஸ்ருஷ்டித்த மாத்ரம் ஒழிய -அவ்வோபாதி சம்சார சம்பந்தத்தை
விடுத்து தம்முடைய திருவடிகளைத் தந்திலர் –
இப்படி அதி துர்லபமான வற்றை நமக்கு பிதாவான ஸ்ரீ எம்பெருமானார்
தம்முடைய திருவடிகளை உபாய உபேயமாக எனக்கு தந்து இப்போது என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரித்தார் என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ எம்பெருமானார் திருவடி சம்பந்தம் வாய்ந்தவர்களிடம் தமக்கு ஏற்ப்பட்ட மிக்க ஈடுபாட்டை
கண்டு களியா நிற்கும் ஸ்ரீ அமுதனார் – இந்நிலை தமக்கு ஏற்படும் படி தம்மைக் கை தூக்கி விட்ட
ஸ்ரீ எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
ஸ்ரீ இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –
பத உரை
முன்னாள் -படைப்புக்கு முந்திய காலத்தில்
சிந்தையினோடு -மனத்தோடு கூட
கரணங்கள் யாவும் -இந்த்ரியங்கள் அனைத்தும்
சிதைந்து -அழிந்து போக
அந்தம் உற்று -நாசம் அடைந்து
ஆழ்ந்தது -பிரகிருதி தத்வத்தில் அழுந்திப் போனதை
கண்டு-பார்த்து
அவை-அந்த சிந்தையையும் கரணங்கள் யாவற்றையும்
என் தனக்கு -எனக்கு
அன்று -படைக்கப் புகும் அந்தக் காலத்திலே
அருளால்-தன் கிருபையால்
தந்து -கொடுத்த
அரங்கனும் -ஸ்ரீ பெரிய பெருமாளும்
தன் சரண்-தன்னுடைய திருவடிகளை
தந்திலன் -கொடுக்க வில்லை
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
எந்தை -என்னுடைய தகப்பனாய்
வந்து -எழுந்தருளி
தான்-தாமாகவே
அது தந்து -அந்தத் திருவடிகளைக் கொடுத்து
என்னை-கீழ்ப் பட்டுக் கிடக்கும் என்னை – -இப்பொழுது கை கொடுத்து எடுத்து அருளினார் .
வியாக்யானம் –
ஸ்ருஷ்டே-பூர்வ காலத்தில் பிரதான கரணமான மனச்சோடே கூட சர்வ கரணங்களும் அழிந்து நாசத்தை அடைந்து –
அசித் விசேஷமாம் படி தரைப்பட்ட படி கண்டு -அந்தக் கரணங்களை அசித் கல்பனாய் கிடக்கிற எனக்கு –
அக்காலத்திலே –
கரண களேபரைர் கடயிதும் தயமாநமநா -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-41 – – என்கிறபடியே
கேவலக் கிருபையாலே -உபகரித்து அருளின ஸ்ரீ பெரிய பெருமாளும் –
கரணங்களைத் தந்தவோபாதி -தம்முடைய சரணங்களைத் தந்திலர்-
ஸ்ரீ எம்பெருமானார் எனக்கு ஜனகராய்க் கொண்டு வந்து –
ஸ்ரீ அரங்கன் செய்ய தாளிணை யோடார்த்தான் – -52 –என்னும்படி –தாம் அந்தத் திருவடிகளை தந்து அருளி-
சம்சார ஆர்ணவ மக்னனான என்னை இன்று-எடுத்து அருளினார் -இது ஒரு உபகாரமே ! என்று கருத்து ..
தான் தந்து -அது -ஸ்ரீ அரங்கன் திருவடிகள் / தனது திருவடிகள் –
அத்ரபரத்ர ஸாபிதருவதற்கு அவன் திருவடிகள் அவரது இல்லையே -ஸ்ரீ உடையவர் இடமே எல்லா சொத்துக்களும் –
உபாய உபேயங்களாக தன்னுடைய திருவடிகளை தந்து என்றுமாம் –
சிந்தை -கரணங்கள் -தனி மதிப்பு மனஸ் என்பதால் தனியாக எடுத்து –
ஸ்ரீ அரங்கனுக்கு -இங்கே வந்த பின்பும் தன் சரண் கொடுக்க வில்லையே -இங்கே வந்ததே ரக்ஷிக்க என்று விருது வூதி –
ஸ்ரீ ஸ்வாமியை வரவழைத்த ஸ்ரீ அரங்கன் -ஸ்ரீ அமுதனாரை கைக் கொள்ள –
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் போல்வார் இல்லையே அமுதனார் -அவர்கள் போலே தாமே சென்று ஸ்ரீ ஸ்வாமியை பற்ற
ஆச்சார்ய சம்பந்தம் பெற்றால் தானே கொடுக்க முடியும் –
இரண்டு காரணங்கள் தாராமைக்கு –
பிரளய ஆர்ணவத்தில் இருந்து ஸ்ரீ அரங்கன் உதாரணம் பண்ண
சம்சார ஆர்ணவத்தில் இருந்து இவர் –
அவன் விபசரிக்க கரணங்களைக் கொடுக்க
ஸ்ரீ ஸ்வாமி கைங்கர்யம் பண்ண அருளினார் –
என்னையே எடுத்தனர் -நீசனேன் -என்னை எடுத்தால் லோகங்கள் எல்லாம் எடுத்தது போலே தானே-
தனது திருவடிகளை தந்தது தானே ஸ்ரீ கூரத் தாழ்வானை இட்டு என்னை உத்தரித்தது –
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து –
மனஷ் ஷஷ்தேந்த்ரியாணி -என்கிறபடியே இந்திரியங்களிலே-மனஸ் பிரதானம் ஆகையாலும் –
அவைகளுக்கு மனஸ் சஹாகாரம் இல்லாவிடில் தன் காரியங்களிலே அகிஞ்சித் கரங்களாய் போகையாலும்
மனசை எடுத்தது தச இந்த்ரியங்களுக்கும் உப லஷணம் –
இப்படி ஏகாதச இந்த்ரியங்களும் பிரளய காலத்திலேயே சேர்ந்து –
பிருதிவ் யப்ஸூ லீயதே -என்று தொடங்கி -தமம் பரேதேவ ஏகீ பவதி – என்னும் அளவும் சொன்ன க்ரமத்திலே லயித்து –
ஸூஷ்ம அவஸ்தையை பெற்று –
அந்தம் உற்று ஆழ்ந்தது –
சர்வமும் உப சம்ஹ்ருதமாய் அசித் அவிஷேதிமாய் கிடக்கிற தசையிலே –
முன்னாள்-
ஸ்ருஷ்டே -பூர்வ காலத்தில் –
கண்டு –
ததைஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி –என்றும் –
கரண களேபர சைர்க்கட இதும் தயமா நமனா – என்றும் –
அர்த்தித்வ நிரபேஷமாக நிர்ஹேதுக கிருபையால் தமக்கு பரிகரமாம் படியையும் –
விசித்ரா தேக சம்பந்தி ரீஸ்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி சம்யுதா -என்றும்
ஸ்வ சரண கமலத்திலே பரிசர்யார்த்தமாக –
அவை –
என்றது -மனசையும் தச இந்திரியங்களையும் கூட்டி –
சிந்தை –தந்திலன் —
கரணங்களுள் சிந்தையும் அடங்குமாயினும் -அஃது இன்றிக் கரணங்கள் இயங்க மாட்டாத
முக்கியத் தன்மை தோற்றச் சிந்தையை தனித்து எடுத்து கூறினார் –
கரணங்கள் அனைத்தும் சிதைந்து -ஆத்ம தத்துவம் அறியும் திறன் அற்றுப் போதலின் அந்த நாசம்-உற்றதாக கூறினார்
மழை பெய்து நெல் விளைந்தது -எனபது போலே-சிதைந்து அந்தம் உற்றதாக கூறுகிறார்
சிதைய -அந்தமுற்றது என்க -எச்சத் திரிபு
ஆழ்ந்தது –
தரையிலே போய்ப் படிந்தது -அதாவது அஷர தத்வம் தமஸ் எனப்படும்
பிரகிருதி தத்வத்தில் லயம் அடைந்தது -என்றபடி .
அந்த சிந்தை முதலிய கரணங்களை எனக்கு தந்த -என்னாமல்-என் தனக்கு தந்ததாக கூறுகிறார் .
கரணங்களை சொந்தமாக கொண்டு விரும்பிய வண்ணம்
உபயோகப்படுத்தும் ஸ்வாதந்த்ரிய சக்தியோடு அவற்றை கொடுத்தமை தோற்ற –
அருளால் தந்தான்-
வேண்டித் தந்திலன் –
வேண்டுவதற்கு அறிவில்லையே -அறிவு இழந்து அசேதன பொருள் போல் அன்றோ ஆத்ம தத்வம் கிடக்கிறது –
காரணம் இன்றி இயல்பாய் அமைந்த அருளினாலேயே ஸ்ரீ இறைவன் கரணங்களை தந்ததாக கூறினார் ஆயிற்று .
அன்று –
ஸ்ருஷ்டி காலத்தில் –
என் தனக்கு அருளால் –
நிர்ஹேதுகமாக எனக்கு கரண களேபரங்களை பிரதானம் பண்ணி அருளின
அரங்கனும் –
அப்படி பட்டவன் தூரஸ்தனாக நின்றால் அடியேன் சம்சார துக்கத்தை சகிக்க மாட்டாதே கூப்பிட த்வனி
அவன் செவிப்பட அரிது என்று ஆறி இருக்கலாமோ –
கார்யாந்தர அசக்தனாய் இருக்கிறான் என்று ஆறி இருக்கலாமோ –
அவன் அடியேன் ஜனித்த தேசத்தில் –
நித்ய சந்நிகிதனாய் இருந்தான் -சர்வரையும் ரஷிக்க வேண்டும் என்று
உத்சாஹா யுக்தனாய் அபய ஹஸ்தத்தைக் காட்டிக் கொண்டு இருந்தான் -தாதர்சனும்
தன் சரண் –
சர்வே வேதா யத்பத மாம நந்தி -என்றும் –
விஷ்ணோர் பதே பரமே மத்வ உத்ச -என்றும்
தனம் மதியம் தவ பாத பங்கஜம் -என்றும்
கதா புன ச சங்க ரதாங்க கல்பகத்வஜார விந்தாகுச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்கிரம த்வத் சரணாம் புஜத்வயம் மதிய மூர்த்த்னம் அலங்க்ரிஷ்யதே -என்றும் –
கதாஹம் பகவத் பதாம்புஜ த்வயம் சிரஸா சங்கர ஹிஷ்யாமி -என்றும்
ஏதத் தேஹா வாசநேமாம் த்வத் பாதம் ப்ராபய ஸ்வயம் -என்றும்
சம்சார துக்க நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தமான தம்முடைய ஸ்ரீ சரணார விந்தத்தை தந்திலன் –
சேர்த்து கொண்டது இல்லை –என்னுடைய அதி கர்ம பாஹூள்யத்தைப் பார்த்து -பிரதம சங்கல்ப-ரூபமாய்
சம்சார ப்ரவர்த்தகமான தம்முடைய நிஹ்ரக சக்தியை பிரவர்த்திப்பித்தான் -என்றபடி –
அன்று -படைக்கும் போது –
பிரகிருதி தத்வத்தில் லயம் அடைந்து -அறிவு ஒடுங்கி -அசேதனப் –பொருள்களினும் வேறுபாடு
இன்றிக் கிடந்த ஆத்ம தத்வங்களுக்கு -எல்லா கரணங்களையும் -சரீரங்களையும் -தந்தது போலே எனக்கும் தந்தானே அன்றி –
எனக்கு என வேறு எதுவும் ஸ்ரீ இறைவன் தந்திலன் என்று குறைபடுகிறார் ஸ்ரீ அமுதனார் –
அரங்கனும் தன் சரண் தந்திலன் –
கரணங்களைக் கொடுத்த ஸ்ரீ இறைவன்-இனி அவர்கள் பாடு என்று கை விட்டு விடாது
ஸ்ரீ திருவரங்கத்தில் எழுந்து அருளி இருந்து –
பெற வேண்டிய பெரும் பேறாகிய தம் திருவடிகளை அவர்களுக்கு கொடுப்பதற்கும் காத்து கிடக்கிறான் .
அடியேன் இருக்கும் இடமாகிய ஸ்ரீ திருவரங்கத்திலேயே காத்துக் கிடக்கும் ஸ்ரீ பெரிய பெருமாள்
தம் திருவடிகளை தந்திலரே என்று வருந்திக் கூறுகிறார் –
அரங்கனும் -உயர்வு சிறப்பு உம்மை
கரணங்களை கொடுத்தவனும் தன் சரணங்களைக் கொடுத்திலனே .
அடியேன் குடி இருக்கும் இடமாகிய ஸ்ரீ திருவரங்கத்திலேயே பேராது குடி புகுந்து கிடந்தும் –
சம்சாரப் படு குழியில் விழுந்து அழுந்தும் என் அவல நிலை கண்டும் –
சரணங்களைத் தந்து -மேலுறுமாறு செய்யாது வாளா கிடந்தானே -என்று வருந்துகிறார் .
ஏவம் சமர்த்தி சக்ர ஸ்த்தே ப்ராம்ய மானே ஸ்வ கர்மபி -என்றும்
சம்சார ஆர்ணவ மகநா நாம் விஷயாந்தர சேதஸாம் – என்றும்
சம்சார மருகரந்தாரே துர்வித திவ்யக்ரா பீஷனே -விஷய சூத்திர குல்மாட்யே த்ரிஷா பாத பசா லீநீ –
புத்திர தார க்ரஹா ஷேத்திர ம்ர்கத்ர்ஷ்ணாம் புபுஷ்கலே-க்ர்த்ய அக்ர்த்ய விவேகாந்தம் பரிப்ராந்தமிதச்தத-
அஜஸ்ரம் ஜாத த்ர்ஷ்ணார்த்த மவசன் நாங்க மஷமம் -ஷீன சக்தி பலாரோக்கியம் கேவலம் கிலேச சம்ஸ்ரியம் – என்றும் –
அவிவேககநாந்த தின்முகேப ஹூதா சந்தத துக்க வர்ஷிணி-பகவன் பவ துர்த்தி நே – என்றும்
சொல்லப்பட்ட சம்சார சாகரத்தில் நிமக்நனாய் இருக்க –
எந்தை இராமானுசன் –
சஹி வித்யா தஸ்தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும் –
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்-மறந்திலேன் -என்றும்
அஸ்தி ப்ரஹ்மேதி சேத்வேத சந்தேமேனம் ததோவிது -என்கிறபடியே -அது தானெது என்ன –
நாராயண சரணவ் -என்றதை கொடுத்த பிதாவான ஸ்ரீ எம்பெருமானார் –
இன்று வந்து –
இந்த தசையிலே ஸ்ரீ பெரும் புதூரிலே அவதரித்து –
ஸ்ரீ காஞ்சி நகரிலே ஸ்ரீ தேவப் பெருமாளுடைய அனுக்ரகம் பெற்று இருந்து -என்னை உத்தரிக்க வேணும் என்று
நான் இருந்த தேசத்தை தேடி வந்து –
பரகத ச்வீகாரத்தாலே அநேக க்ருஷிகளை பண்ணி என்னை பரிக்கிரகித்து –
தானது தந்து –
யச் ஸ்ரேயஸ் யான் நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யச்தேகம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று
உபசன்னனாய் அர்த்தியாதே இருக்கச் செய்தே -தானே நிர்ஹேதுக மாக –
ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் கொடுக்க அசக்யமான அந்த ஸ்ரீ நாராயண சரண த்வத்வங்களை
உபாய உபேயமாக கொடுத்து –என்னை எடுத்தனன் –
ஸ்ரீ அமுதனார் திரு உள்ளத்திலே ஓடுகிறது தம்மையே உத்தரித்தார் என்று காணும் —
என்னையே –
பிரபல பாபிஷ்டனான என்னையே –
சர்வ சக்தி யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரனாலும் எடுக்க அசக்யனான என்னையே உத்தரித்தார் –
ஸ்ருதா ஸ்ருதமான அர்த்தத்தைக் கொண்டு சொன்னேனோ –
இதுக்கு உதாஹரணம் அடியேனே –
சம்சார சாகரத்தில் நின்றும் உத்தரித்தார் –
மக்னா நுத்தரதே லோகன் காருண்யா சாஸ்திர பாணினா -என்ற அர்த்தைத்தை பிரத்யஷமாக கண்டேன் –
ஸ்வ அனுபவத்தாலே தெளிந்தேன் என்றது ஆய்த்து –
தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் ஸ்ரீ அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் .
ஸ்ரீ அரங்கன் சரணம் ஸ்ரீ எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் .
வச்யஸ் சதா பவதி -ஸ்ரீ ரங்க ராஜன் ஸ்ரீ எதிராஜராகிய தேவரீருக்கு எப்பொழுதும் வசப்பட்டவனாய் இருக்கிறான் – என்றபடி –
அவ்வளவு விதேயனாய் இருக்கிறான் ஸ்ரீ அரங்கன் ஸ்ரீ எம்பெருமானாருக்கு
தத்தே ரங்கீ நிஜமபிபதம் தேசிகா தேசகா ங்ஷீ -ஸ்ரீ அரங்கன் தனது பதத்தையும் ஆசார்யனுடைய ஆணையை
எதிர்பார்த்து கொடுக்கிறான்-என்பர் ஸ்ரீ வேதந்த தேசிகன் .
என் வேண்டுகோள் இன்றி தாமாகவே ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு
காரணம் தந்தை யானமையே என்கிறார் .
இராமானுசன் எந்தையே –தான் அது தந்து என்று இயைக்க –
தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை ஸ்ரீ இராமானுசன் ஸ்ரீ அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
ஸ்ரீ அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ் விஷயம் கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –ஸ்ரீ எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .
திருவடிகளைத் தருதலாவது –
அவைகளை நாம் பெறற்கு உரிய பெரும் பேறும் சாதனுமாம் என்னும் துணிவைத் தருதல் –
ஸ்ரீ அரங்கன் தந்தவை எல்லோருக்கும் தருமவைகளான கரணங்கள் .
ஸ்ரீ எம்பெருமானார் தந்தவையோ -எனக்கே தருமவையாய் அமைந்த அரங்கன் சரணங்கள் .
நான் உள்ள இடம் வந்தும் ஸ்ரீ அரங்கன் தன் சரண் தந்து என்னை எடுத்திலன்-
ஸ்ரீ எம்பெருமானாரோ நான் உள்ள இடத்துக்கு ஸ்ரீ கச்சியில் இருந்து வந்து தந்தையாய் நச்சி
ஸ்ரீ அரங்கன் சரணைத் தான் தந்து என்னை எடுத்து அருளினார் .
ஸ்ரீ அரங்கன் தந்தவை ஊன உடலும் -இவ்வுலகிய இன்பம் நுகர்ந்து சம்சாரத்தில் விழுந்து உழலுவதற்கு உறுப்பான கரணங்களுமாம்
ஸ்ரீ எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும்
திண் மதி ஸ்ரீ எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று –
இன்று –
ஸ்ரீ அரங்கனும் கை விட்டு -சம்சாரத்தில் விழுந்து அழுந்துகிற இந்நிலையில்
இதனால் காலத்தில் செய்த இவ் உதவி மாணப் பெரிது என்று ஈடுபடுகிறார் .
எடுத்தனன் –
என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது தவித்தமை தெரிகிறது .-
வந்து-
ஸ்ரீ பெரும் புதூர் பிறந்து -ஸ்ரீ காஞ்சி –வளர்ந்து கற்று -ஸ்ரீ ரெங்கம் எனக்காக வந்து
என்னை-சம்சார அரணவம் –ஸ்ரீ அரங்கனோ பிரளய அரணவத்தில் இருந்து எடுக்க-இது ஒரு வுபகாரமே ஆச்சர்யம்
என்னை –
ஸ்ரீ அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
அரங்கனும் — உயர்வு சிறப்பு உம்மை-
ஸ்ரீ ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் ஸ்ரீ அரங்கன் சரண் பெற்றிலர் ஸ்ரீ அமுதனார் .
ஸ்ரீ இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ ஸ்ரீ அரங்கனாம் பெரும் தேவர்
இன்று ஸ்ரீ இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும் ஸ்ரீ அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –
————
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -கண்ணனையும் பெரியாழ்வாரையும் காட்டிக் கொடுத்தாள்
திவ்ய பிரபந்தங்களில் திருவடி பிரஸ்தாபங்கள்
பொய்கையாழ்வார் –செய்ய சுடர் ஆழியான் அடிக்கே என்று உபக்ரமித்து
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என் நெஞ்சே –
ஓர் அடியில் தாயவனை கேசவனை -என்று திருவடிமயமாகவே தலைக்கட்டினார் –
பூதத்தாழ்வார் -அறை கழல் சேவடியான் செங்கண் நெடியான் என்று தலைக்கட்டினார்
பேயாழ்வார் இன்றே கழல் கண்டேன் என்று உபக்ரமித்து சக்கரத்தால் தாள் முதலே நங்கட்குச் சார்வு -என்று தலைக்கட்டினார்
திருமழிசை ஆழ்வார் -உன்ன பாதமென்ன நின்ற ஒண் சுடர்கே கொழு மலர் -என்று திருச்சந்த விருத்தம் தலைக்கட்டி அருளுகிறார்
திருவிருத்தத்திலும் தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய என்று உபக்ரமித்து அடிக்கண்ணி சூடிய மாறன் என்று தலைக்கட்டுகிறார்
பெரிய திருவந்தாதியிலும் – மொய் கழலே ஏத்த முயல் என்று தலைக்கட்டுகிறார்-
திருவாய்மொழியிலும்-துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே
திருவாசிரியத்திலும் மூ வுலகு அளந்த சேவடியோயே என்றும்
பெருமாள் திருமொழியிலும் திரைக்கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் என்று உபக்ரமித்து
நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே -என்று தலைக்கட்டுகிறார் –
பெரியாழ்வாரும் உன் சேவடி செவ்வித் திருக்காப்பு என்று உபக்ரமித்து
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-என்று தலைக்கட்டுகிறார்
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திரு நாமமே அடி பட்டுக் கிடக்கிறது
திருப்பாண் ஆழ்வார் -திருக் கமலபாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றவே -என்று அருளிச் செய்கிறார்
திருமங்கை ஆழ்வார் வயலாலி மணவாளன் திருவடியில் வாயை வைத்தே பிரபந்தம் தொடங்குகிறார்
தலைக்கட்டும் பொழுதும் நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –என்று அருளிச் செய்கிறார்
மதுரகவிகளும் முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே
திருப்பாவையில் உன் பொற்றாமரை படியே கேளாய் என்றும்
நாச்சியார் திருமொழியிலும் பெரும் தாளுடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே
அமுதானாரும் மாறன் அடி பணிந்து உயந்த –ராமானுஜன் அடிப் பூ மன்னவே
ஸ்ரீ ரெங்கம்-கோயில் –பொது நின்ற பொன் அம் கழல்
திருமலை –பூவார் கழல்
பெருமாள் கோயில் -துயரறு சுடர் அடி
திரு நாராயண புரம் –திரு நாரணன் தாள்
எம்பெருமானார் அச்யுத பதத்வய வ்யாமோஹத்தால் இறே -விஷயாந்தர விரக்தராய் திகழ்ந்தார்
அத்திகிரி பச்சை நிற அச்யுதனுடைய பதாம் புஜங்களிலும்
திருவேங்கடத்து அச்யுதனுடைய தாங்கு தாமரை யன்ன பொன்னாரடியிலும்
அரங்கமா நகர் அச்யுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்யுதனுடைய துளங்கு சோதி திருப் பாதத்திலும்
தயரதற்க்கு மகனான அச்யுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்யுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாக கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்யுதன் அனந்தசயனன் செம் பொன் திருவடியிலும்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடியிலும் ஆயிற்று– இவர் மையல் கொண்டு இருப்பது –
பூவார் கழல்கள் -கண்ணன் கழலினை -ககுத்தன் தன்னடி -பாற்கடலுள் பையத் துயன்ற பரமன் அடி –
வைகுண்ட செல்வனார் சேவடி –
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply