ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –48–நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றி இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

எனக்காரும் நிகரில்லை -என்று இவர் சொன்னவாறே ஸ்ரீ எம்பெருமானார் இவரைப் பார்த்து –
நீர் நம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை அவலம்பித்தல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை-விரும்புதல்-
செய்யில் இந்த ஹர்ஷம் -உமக்கு நிலை நிற்க மாட்டாதே என்ன –
என்னுடைய நைச்யத்துக்கு-தேவரீர் கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமும் ஒழிய புகல் இல்லையாய் இருக்க –
வ்யர்த்தமே நாம் இனி அகலுகைக்கு காரணம் என் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ இராமானுசன் இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற விருந்தான் –எனக்காரும் நிகர் இல்லை –
என்று இவர் சொன்னவாறே எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் -நம்மை விட்டு காலாந்தரத்தில்
வேறு ஒரு விஷயத்தை விரும்புதல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை ஆதரித்தல் செய்யில்
இந்த ஹர்ஷம் நிலை நிற்க மாட்டாதே என்ன –
என்னுடைய நைசயத்துக்கு-தேவரீருடைய கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமே ஒழிய –
புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் அந்ய பரர் ஆகைக்கு காரணம் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

எனக்காரும் நிகரில்லை என்று களித்து கூறும் அமுதனாரை –
நம் இருவரில் எவரேனும் ஒருவர் மற்று ஒருவரை விட்டு விலகிடின் உமது இக் களிப்பு நிலை நிற்க மாட்டாதே -என்று
ஸ்ரீ எம்பெருமானார் வினவ –
என்பால் உள்ள நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ் வருளுக்கும் இந் நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-
ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் -என்கிறார் –

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

பத உரை –
நிகர் -ஒப்பு
இன்றி நின்ற -இல்லாமல் நின்ற
என் நீசதைக்கு -எனது நீசனாம் தன்மைக்கு
நின் அருளின் கண் அன்றி-தேவரீர் உடைய கிருபையின் திறத்தில் ஒழிய
புகல்-கதி -ஒதுக்கும் இடம் –
ஒன்றும் இல்லை -ஒன்றும் கிடையாது
அருட்கும் -அந்த கிருபைக்கும்
அக்தே புகல்-அந்த நீசனாம் தன்மையே புகலாகும்
புன்மையிலோர் -குற்றமற்றவர்
பகரும் -பேசும்
பெருமை-பெருமையை உடைய
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
இருவோமுக்கும் -நம் இரண்டு பேருக்கும்
பயன் ஆன பின்பு -பிரயோஜனம் ஏற்பட்ட பிறகு
நாம்-பயன் கண்ட நாம்
இனி -இனி மேல்
பழுதே -வீணாக
அகலும் பொருள் என் -அகலுவதற்குக் காரணம் என்ன –

வியாக்யானம்-

இந்த பூமியில் ஆத்ம குண ராஹித்யத்தாலும்-அநாத்மகுண பாஹூள்யத்தாலும் வந்த தண்மையை வுடையவர்களை
தனித் தனியே ஆராய்ந்து பார்த்தல் என்னைப் போலே
ஆத்ம குண லவ லேச ரஹீதராய் -அநாத்ம குண பரி பூரணராய் இருப்பார் ஒருவரும் இல்லாமையாலே-
உபமான ரஹீதமாய்க் கொண்டு நின்ற என்னுடைய நீசதைக்கு –
அந் நீசதை தானே பச்சையாக அங்கீகரிக்கும் தேவரீருடைய கிருபையின் இடத்தில் ஒழிய-
ஒதுங்க நிழல் ஒன்றும் இல்லை –
அந்த கிருபை தனக்கும் -எத்தனையேனும் தண்ணியரே அநுத்தம பாத்ரம் ஆகையாலே
என்னுடைய நீசத்தை ஒழிய புகல் இல்லை –

அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரானவர்கள் பேச்சுக்கு விஷயமான பிரபாவத்தை வுடையவரே-
எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் –
இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம்
வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –
இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ

உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி –
அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் –
புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –
நாம் பழுதே-யகலும் பொருள் என் -ஸ்ரீ அமுதனார் தம்மையும் நம்மையும் -சேர்த்து அருளிச் செய்கிறார் –
தம்மையும் உடையவரையும் என்றுமாம்-

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு –
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் –
அஹமஸ்ம் யபராதா நாமாலய -அத்யாபி வஞ்சநபர -இத்யாதிப்படியே
ஆத்ம குண ராகித்யத்தாலும் -அநாத்தம குண பாஹூள்யத்தாலும் வந்த தண்மையை உடையவர்களை –
இந்த விபூதியிலே தனித் தனியே ஆராய்ந்து பார்த்தாலும் -என்னைப்-போலே ஆத்ம குண லவ லேச ரஹீதனாய் –
அநாத்மா குண பரி பூர்ணனாய் -இருப்பார் ஒருவர் ஆகிலும்-கிடையாமையாலே –
கோன்யோச் திசத்ர சோம்ய -என்கிறபடியே உபமான ரஹீதனாய் கொண்டு இருக்கிற என்னுடைய நீச பாவத்துக்கு –

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு –
நீசத்தை-தாழ்வு
அது நற்குணம் இல்லாமையாலும் -தீய குணம் உள்ளமையாலும் உண்டாவது .
அன்பு அருள் முதலிய நற்குணம் வாய்ந்தோர் உயர்ந்தோர் .-அவை இல்லாதவர் தாழ்ந்தோர் .
சினம் வசை கூறல் முதலிய தீய குணம் உடையோர் மிகத் தாழ்ந்தோர் –
இவர்களில் எனக்கு ஈடாவார் எவரும் இலர் .
குணம் இல்லாமையிலும் -குற்றம் உடைமையிலும் ஒப்புயர்வற்றவனாய் நன் இருத்தேன்
நிகரின்றி நின்றது என் நீசதை என்கிறார் .-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் 3-3 4- – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார்
நின்ற என் நீசதை
நீசதை நீங்கி சிலர் நல்லவர் ஆதலும் உண்டு -என் நீசதை அங்கனம் நீங்காது நிலை நிற்பது
தோன்ற -நின்ற என் நீசதை-என்றார் .

உன் அருளின் கண் அன்றி –
வயசநேஷு மனுஷ்யாணாம் ப்ர்சம் பவதி துக்கித -என்கிறபடியே
பர துக்க துக்கித்வ நிராசி கீர்ஷத்வ-அசஹிஷ்ணுத்வாதி லஷணமான தேவரீருடைய கிருபா குணம் ஒழிய –
புகல் ஒன்றும் இல்லை –
வேறு ஒரு புகல் இடம் இல்லை -அந்த நீசதை தானே பச்சையாக அங்கீகரிக்கும் தேவரீருடைய கிருபையினிடத்தில் ஒழிய
ஒதுங்க நிழல் ஒன்றும் இல்லை என்றபடி –

நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
நிகரற்ற நீசனான நான் உயர தேவரீர் திரு வருளைத் தவிர வேறு புகல் இல்லை-என்றபடி.
எனவே தேவரீரை விட்டு அடியேன் அகல வழி இல்லாமையினால்
அருளுக்கு அடியேனை இலக்காக்க வேணும் என்பது கருத்து .

கண்-
இடம் -அபராத கணைர பூர்ண குஷி-கமலா காந்த தயே கதம் பவித்ரீ -என்னுமா போலே –
இவரும் வயிறு நிரம்புகைக்காக எப்போதும் பூர்ண தோஷத்தை தேடித் திரியுமவர் ஆகையாலும் –
சர்வேஸ்வரன் ஆர்த்த அபராதியான காகாசுரனை சிஷித்ததுவும் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று சொன்னதுவும் –
பாபிஷ்டரை ரஷித்தால் – யசஸ்ஸூ அதிசயித்து இருக்கும்-என்றதைப் பற்றவாகையாலும் –
சேஷ பூதனுடைய தோஷங்கள் எல்லாம் -சேஷியினுடைய கிருபா குணத்துக்கு-லஷ்யங்களாய் இறே இருப்பது –

ஆக தம்முடைய நீசதைக்கு -எம்பெருமானாருடைய கிருபா குணமொழிய- வேறு ஒரு புகல் இடம் இல்லை
என்று அருளிச் செய்யத் தட்டில்லை இறே –

அருட்கும் அக்தே புகல் –
தேவரீருடைய கிருபா-குணத்துக்கு அடியேனுடைய துஷ்ட பாவதையே லஷ்யமாய் இருக்கும் –
தோஷ ரஹீதர் ஆனவர்கள் பக்கலிலே-கிருபா குணத்துக்கு பிரயோஜனம் இல்லாமையாலே –
எத்தனை யேனும் தண்ணியரே -அதுக்கு பாத்ரம் ஆகையாலும் –
எனக்கு சதர்சரான பாபிஷ்டர் ஒருவர் ஆகிலும் இல்லாமையாலே -என்னுடைய நைச்யமே அதற்கு புகலிடம் -என்றது –

த்வயாபி -இப்படி நமக்கு கைப்பட்ட தேவரீருக்கும் –
இதாநீம் -இத்தனை நாளைக்கு இப்போது –
பகவன் -சர்வஞ்ஞனாய் இருந்தாயே -நான் சொல்ல வேணுமோ –
தயாயா -தேவரீர் உடைய கிருபைக்கு –
அநுத்தமம் பாத்ரமிதம் -என்கிறபடியே பூர்ண பாத்ரமான நானும் –
லப்த்தம் -தேவரீருக்கு பெறாப் பேறாக லபித்தேன் –
அநந்த பவார்ண வாந்த -பிரசித்த ஆர்ணவத்துக்கு பரிகணம் உண்டு –
என்னுடைய சம்சாரமாகிற ஆர்ணவத்துக்கு அந்தம் இல்லை –
காலமும் அநாதியாய் -ஜன்மங்களும் பலவாய் -கர்மங்களும் விசித்ரங்களாய் -பஹூவாய் இருக்கையாலே –
இந்த அரணவம் அனந்தமாய் இருக்கும் –
இப்படிப்பட்ட பவார்ணவத்தின் உடைய அகாத ஜலத்திலே –
நிமஜ்ஜதா -அழுந்திக் கிடப்பவன் –
கேவலம் ஸ்வ இச்சையவாஹம் ப்ரேதேஷகம் சித்கதாசன -என்கிறபடி அனநதமான-காலத்துக்கு –
மே-அடியேனுக்கு –
கூலமிவ -கரை போலே –
லப்தோஹி-பிரசித்த ஆர்ணவத்திலே விழுந்து அழுந்தின-சேதனன் அப்போதே முடிய -முஹூர்த்த மாத்ரத்திலே
அந்த பிணத்தை கொண்டு வந்து கரையிலே தள்ளி விடும்-என்று சர்வ ஜக பிரசித்தம் –

இந்த சம்சாரத்திலே அழுந்தி -அசந்நேவ-என்கிறபடியே -இருந்த என்னை
சிரகாலத்துக்கு-சத்தை உண்டாக்கி அந்த அர்ணவத்துக்கு பாரமாய் கைபட்டாய் –
கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் -பண்டை வல் வினை பாற்றி அருளினான் – என்று
இருவருக்கும் பிரயோஜனமாய் இருந்தது என்று -அபியுக்தரும்-அருளிச் செய்தார் இறே –
அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே – என்றும் –
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் அருளிச் செய்தார் இறே -ஸ்ரீ நம் ஆழ்வாரும் –

பரம காருணிகோ ந பவத்பர -பரம சோச்யதமோ நஹிமத்பர -என்னக் கடவது இறே —

அருட்கும் அக்தே புகல் –
தேவரீருடைய அருளுக்கு முழு இலக்காய் அமையும் தகுதி அடியேன் ஒருவனுக்கே உள்ளது என்று கருத்து –
குற்றம் அற்றவரை ஏற்பதில் அருளுக்கு சிறப்பு இல்லை .
குற்றம் நிறைந்தவரை ஏற்பதிலே தான் அருளுக்கு சீர்மை .
இராவணனே யாயினும் ஏற்பேன் என்ற ஸ்ரீ இராம பிரான் அருள் சீறியது .
குற்றம் புரிந்த வண்ணம் உள்ள அரக்கியரை அளித்த ஸ்ரீ பிராட்டியின் திருவருள் அதனிலும் சீரியது –
தவம் நீச சசவத் சம்ருத -நேசனான நீ முயல் போன்றவன் -என்று ஸ்ரீ பிராட்டி கூறிய படி
நீசனாகிய இராவணன் முதலியோர் போல் அல்லாமல்-
நிகரில்லா நீசனாகிய–என்னை ஏற்று அளித்ததனாலே தேவரீர் அருள் மிக சீரியது ஆகும்

நான் நீசதையில் நிகர் அற்றவன் –
நின் அருள் ஏனையோர் அருள்களினும்-நின் பால் உள்ள ஏனைய குணங்களினும் -சீர்மையில் நிகர் அற்றது .
நிகர் அற்றமையில் -என் நீசதைக்கும் தேவரீர் அருளுக்கும் ஒற்றுமை உண்டு .
ஆகவே அவை நிலைத்து ஏன் இணைந்து இருக்க மாட்டா -என்கிறார் .

இங்கு ஸ்ரீ வேதாந்த தேசிகன்
மயி திஷ்ட்ட திதுஷ்க்ருதாம் பிரதானே மித தோஷா நிதரான் விசின்வதீத்வம்
அபராத கணைர பூர்ண குஷி கமலா காந்த தயே கதம் பவித்ரீ –என்று
பாபம் செய்தவர்களுக்குள் எண்ணற்ற பாபங்கள் செய்ததனா பிரதானனாகிய நன் இருக்க –என்னைப் புறக்கணித்து –
அளவுக்கு உட்பட்ட பாபம் செய்தவர்களை தேடிக் கொண்டு இருக்கும் நீ
பாபத் திரள்களினால் வயிறு நிரம்பாமல் கமலியின் காதலனுடைய அருள் அணங்கே –
எப்படி யாகப் போகிறாயோ -என்றும் –

அஹம ச்ம்யபராத சக்ரவர்த்தீ கருணே த்வம்ச குனேஷூ சார்வ பௌ மீ
விதுஷீ ச்த்திதிமீத்ருசீம் ச்வயம்மாம் வருஷ சைலேச்வர பாத சாத்குரு-என்று
நான் பாபம் செய்தவர்களுள் சக்கரவர்த்தியாய் மேம்பட்டவன்
கருணையே -நீயும் குணங்களுள் தலை சிறந்தவள் .
இத்தகைய நம் நிலையை உணர்ந்து தானாகவே என்னை
ஸ்ரீ திரு வேம்கடமுடையான் திருவடிக்கு உரியனாக்குவாயாக -என்று ஸ்ரீ தயா சதகத்திலே -29 30- –
இக் கருத்தினையே தழுவி அருளி இருப்பது
நினைவுறத் தக்கது

புன்மை –
தோஷங்களுக்கு ஆகாரமான சம்சாரம் –
அநாதி அவித்யா கர்ம வாசனா ருசிபிரகிருதி சம்பந்த ரூபமான சம்சாரம் -என்றபடி –

இலோர் –
சம்சாரிகமான பந்தத்தை பூண் கட்டிக் கொண்டு நிற்கையாலே அவர்களை இங்கே சொல்ல ஒண்ணாது இறே –
முக்தர் சிறிது காலம் சம்சாரத்தை பூண் கட்டிக் கொண்டு திரிந்து -பின்னை -கரை கண்டோர் -என்னும்படி
அதை சவாசநமாக பொகட்டு -பகவத் குண அனுபவத்திலே -ஆழம் கால் பட்டு-இருந்தார்களே யாகிலும்
நிருப பதமாக சொல்லுகையாலே அவர்களையும் இங்கே சொல்லக் கூடாது இறே –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்த ரஹீதரான நித்ய சூரிகளை ஆய்த்து -இலோர் -என்று அருளிச் செய்தது –

பகரும் பெருமை –
ஏக தேசாவஸ்தாநத்தாலும் –ஏக விஷய அனுபவத்தாலும் -அடியே பிடித்து இவருடைய-பிரபாவத்தை –
அடைவே அறியுமவர்கள் -நித்ய சூரிகள் ஆகையாலே –
அவர்களாலே ஸ்தோத்ரம் பண்ணப்பட்ட -பிரபாவத்தை உடையரான –

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச
புன்மை உடையோர் சோறு கூறைகளை விரும்பி பேசிடின் அதில் உண்மை இராது –
அப் பேச்சினால் பேசப்படுவோர்க்கு பெருமை இல்லை –
அவாவினை அறத் துரந்தமையின் -புன்மை இலாதார் பேசிடினோ அதனில் உண்மை இல்லாது இராது –
பயன் கருதி இல்லாததை ஏற்றி அவர்கள் பேச மாட்டார்கள் அன்றோ –
ஸ்ரீ எம்பெருமானார் பெருமை உண்மையானது என்பது கருத்து .

புன்மையிலோர் என்பது –
என்றும் சிறிது அளவும் புன்மை இல்லாதவர்கள் ஆகிய ஸ்ரீ நித்ய சூரிகளைச் சொல்லுகிறது என்று
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் .அப்பொழுது
தாமரை கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்றபடி
விண்ணோர் தலை மகனது-அருள் நிறைந்த தாமரைக் கண் அழகைப் பாடுவதை விட்டு –
ஸ்ரீ எம்பெருமானார் அருள் பெருமையையே-பகருகின்றனர் -என்றது ஆயிற்று .

பயன் இருவோமுக்குமான பின்னே –
தேவரீரும் அடியேனும்-ஆகிற இருவருக்கும் ஸ்வரூப லாபமும் குண லாபமும் ஆகிற
பரம பிரயோஜனம் சித்தித்த பின்பு –
இப்படி இருவருக்கும் பிரயோஜமாய் இருக்க –

இனி நாம் பழுதே அகலும் பொருள் என் –
இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் –
நாம் என்றது
தம்மையும் ஸ்ரீ எம்பெருமானாரையும் –
அன்றிக்கே –
நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே –
ஸ்ரீ எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் –

நாம் பழுதே அகலும் பொருள் என் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் –
அறியாதன அறிவித்த அத்தா நீ-செய்தன அடியேன் அறியேன் -என்கிறபடியே
நாம் க்ருத்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ –
பாவத்தால் நான் பிறப்பேன் ஏலும் -இனி எந்தை-எதிராசன் தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்கிறபடியே –
கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்டக் கடவதாகையாலும் –
பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும் –
நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய
தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –

இனி நாம் பழுதே அகலும் பொருள் ஏன் –
வீணாக காரணம் இன்றி நமதுய் பயனைக் கெடுத்து அகல மாட்டோம் -என்றபடி

பயனிருவோக்கும் ஆன பின்னே –
தேவரீருக்கு பயன் குண லாபம்
அடியேனுக்கு பயன் ஸ்வரூப லாபம்

கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினன் -என்று இருவருக்கும்
பயன் உண்டானதை ஸ்ரீ மதுர கவிகளும் அருளிச் செய்தார் .

நிமஜ்ஜ்தோ நந்த பவார்ணவாந்த சிராய மே கூல மிவாசி லப்த
த்-வயாபி லப்தம் பகவன் நிதானி மனுத்தமம் பாத்ரமிதம் தாயாய -என்று
பகவானே அளவில்லாத சம்சாரக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டு இருக்கிற எனக்கு
நெடும் காலம் கழித்து கரை போலக் கிடைத்து உள்ளீர் –
உம்மாலும் கருணைக்கு முகச் சிறந்த கொள்கலமாக நான் கிடைக்கப் பெற்று உள்ளேன் –
ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தய நீய வாந்தச-
விதி நிர்மித மேத்தா தான்யம் பகவன் பாலய மாஸம ஜீஹப -என்று-பகவானே உம்மைத் தவிர நான்
வேறு நாதன் அற்றவனாய் இருக்கிறேன்-
நீரும் என்னைத் தவிர இரக்கப்படத் தகுந்தவன் இல்லாதவனாய் இருக்கிறீர்-
தற்செயலாக அமைந்த இந்த தொடர்பினை காத்து அருள வேண்டும் விட்டு விடாதீர் -என்று
ஸ்ரீ ஆள வந்தாரும் காட்டி யருளினார்

ஸ்ரீ மணவாள மா முனிகளும் இப்பாசுரத்தின் கருத்தை அடி ஒற்றி
யதிராஜ விம்சதியில் -வாசா மகோசர மகா குண தேசகாக்ர்யா கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷோ ஹமேவ ந புனர் ஜகதீச்ருசஸ் தத் ராமாநுஜார்ய கருணை வது மத் கதிச்தே -என்று-
மொழியைக் கடக்கும் பெரும் புகழை உடையரான ஆசார்யர்களில் சிறந்த ஸ்ரீ கூரத் ஆழ்வான்-கூறிய
எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே
உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் ஸ்ரீ எம்பெருமானரே
தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு அனுசந்திக்கதக்கதாகும்-

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-5 1-3 –
புன்மையிலோர் என்பது –
என்றும் சிறிது அளவும் புன்மை இல்லாதவர்கள் ஆகிய ஸ்ரீ நித்ய சூரிகளைச் சொல்லுகிறது என்று
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர்

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

நன்றாக–நிச்சயமாக – அத்யாவசாயம் திடமாக உள்ளதே –சம்பந்தம் உணர்ந்து -நானும் உனக்கு பழ வடியேன்-
உனது திரு அருளுக்கு பரிபூர்ண பாத்ரனான பின்பு -என்னுடைய ஏற்றம் அறியாயோ
உன் அருளுக்கு நானே இலக்கு -என் பிரார்த்தனைக்கு நீயே இலக்கு -நீ தயநீயரைத் தேடி இரா நின்றாய்
-உன் தயையைத் தேடி நான் இரா நின்றேன் –
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும்
அஃதே புகல் -அமுதனார் -இத்தை ஒட்டியே அருளுகிறார்

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5 2-8 –

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3 3- –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–3-3-4-

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading