ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -7-4-7–

ஸ்ரீ ராம விருத்தாந்தத்தை அருளிச் செய்கிறார்.

மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே–7-4-7–

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் –
சாரிகை வந்த சடக்கு, நாலு திசைகளிலும் விட்ட அம்புகள் எதிர் அம்பாய் ஒன்றோடு ஒன்று பொருது
கலார் கலார் என்று ஒலிக்கின்ற ஒலி, கடல் இரைத்தால் போலே இரா நின்றது.
சாரிகை வந்த சடக்கு, தன்னில் தான் எதிரம்பு கோத்தது காணும்.

இன நூறு பிணம் மலை போல் புரள-
நூறு நூறாக இனம் இனமான பிணங்களானவை, அம்பு பட்டு உருவின சடக்காலே உயிர் ஓரிடத்து ஒதுங்கப் பெறாதே
இரண்டு துண்டங்களிலும் கலந்து மலை போலே கிடந்து துடிக்கிறபடி.

கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா –
ஆபூர்ய மாணம் அசலப்ர திஷ்டம்’-ஸ்ரீகீதை, 2:70. ‘அசலப்ர திஷ்டம்’ என்றது,
தண்ணீர் கூட்டம் தானாய் நிறைந்திருக்கிறதாயும் ஒரே விதமாயும் இருக்கிற கடல்’ என்றபடியே
கரையைத் தாண்டாது’ என்றபடி.
புக்க எல்லாம் கொண்டிருக்கக் கூடிய கடல், இரத்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே மடுக்கும்படி.
வைய மூடு பெரு நீரில் மும்மை பெரிதே’பெரிய திருமொழி. 11. 4 : 4.- என்றார் அன்றோ?

நீறு பட
சாம்பலாகும்படியாக.
சிதா தூமாகுலபதா க்ருத்ர மண்டல ஸங்குலா
அசிரேணைவ லங்கா இயம் ஸ்ஸஸாந ஸத்ருஸூ பவேத்’-, சுந். 26 : 26.
சுடுகாட்டுக்கு ஒப்பாக’ என்று சொன்னபடியே,

இலங்கை செற்ற நேரே –
இலங்கை செற்ற பொழுது. ‘
நேர்’ என்பது, ‘நேரம்’ என்று காலத்தைக் காட்டுவதாம்.
இலங்கை செற்ற பொழுது மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்பது அந்வயம்.
அன்றிக்கே, ‘இலங்கையைச் செற்ற வாய்ப்பு’ என்னுதல்.
அன்றிக்கே, ‘மாயாப் பிரயோகத்தால் அன்று, செவ்வைப் பூசலிலே நின்று காண் இலங்கையை அழித்தது’ என்னுதல்.
நேர் – நேராக என்றபடி. அப்போது, ஏகாரம்: தேற்றகாரம். ஆர்ஜவத்தால் -நேர்மையாலே இலங்கை செற்றது’ என்றபடி.

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading