ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-5-3-

‘நினைந்தும் பேசியும் நைந்தும் தப்பச் செய்தேன்,’ என்றார் முதற்பாட்டில்;
தப்பச் செய்தேன் என்ற இடம் தப்பச் செய்தேன் என்றார் இரண்டாம் பாட்டில்;
‘நீர் நம்முடைய மேன்மையைப் பார்த்து அங்ஙனம் நெகிழப் போகாதே, நாம் தாழ நின்று எல்லாரோடும் பொருந்தும்
சீல குணத்தையும் ஒரு கால் பாரீர்,’ என்று திரு உலகு அளந்தருளின சீல குணத்தை காட்டிக் கொடுக்க,
அதனை நினைந்து அகல மாட்டாதே, அணுகவுமாட்டாதே, நடுவே நின்று,அணாவாய்த்துக் காலம் கழிக்கிறார்.
‘அவனை ஒழிய அப்படிக் காலம் கழிக்க வல்லரோ?’ என்னில், 
சீர் கலந்த சொல் நினைந்து போக்கும் போது போக்க வல்லரே;
சீல குண அநுசந்தானத்தால் போக்கலாமன்றே?

———————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ் இரண்டு பாட்டில் பிரமேயத்தையும் அனுபாஷியா நின்று கொண்டு –
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவன் -என்ற பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –
இப் பாட்டிலும் மேல் பாட்டில் போலே தம்மோடு அவனுக்கு விசேஷ சம்பந்தம் தோற்றாமையைப் பற்ற
தான் ஒருவனே என்ற ஈடுபாட்டைப் பற்ற அகல மாட்டாதே அணுகவும் மாட்டாதே -என்றது
அணாவாய்த்து -வினோதம் பண்ணிக்க கொண்டு என்றபடி -சம்சயித்து என்றுமாம் –
அவன் நீர்மையைக் காட்டுகையாலே அகல மாட்டாதே –
அடியேன் சிறிய ஞானத்தன் என்கையாலே அணுகவும் மாட்டாதே அணாவாய்த்து -என்கிறார்
ஆழ்வார் தம்மோடு சேர வேணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிற ஈஸ்வரனைப் பற்ற இப்போது இவருடைய
அவஸ்தை ஏமாற்றம் போலே இருக்கையாலே அணாவாய்த்து -என்றது –
ஸுந்தர்ய சீலாதி குண சேஷ்டிதங்களோடே பரஸ்பர சாரஸ்யாவஹமாம் படி சேர்ந்து இருக்கிற திரு நாமங்களை சார்த்தமாக அனுசந்தித்து
அனுபவித்து அல்லது தப்ப ஒண்ணாத படி போக்கற வளைந்து கிடக்கிற பாப பலமான தரை காண ஒண்ணாத துக்கத்தைப்
போக்கிக் கொள்ளார்களாமாகில் இந்தக் காலம் தன்னை எத்தை அனுசந்தித்துப் போக்குவார்கள் -என்றபடி –
அது எப்படி என்ன சீல குண இத்யாதி

———————–

மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் தானோர் உருவனே–1-5-3-

மா யோனிகளாய் –
மஹா யோனிகளாய் -விலக்ஷணமான –வேறுபட்ட பிறவிகளை யுடையராய்-

நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் –
யோனிகளைத் தத்தமது அதிகாரத்துக்குத் தக்கனவான மரியாதைகள் உண்டு, படைத்தல் முதலியவைகள்;
அவற்றில் வந்தால் அறிவித்த சர்வேஸ்வரன் பக்கல் இரு கால் மட்டுச் சென்று கேள்வி கொள்ள வேண்டாதபடி
கற்று இருப்பவரான வானோர் பலரும் முனிவரும் ஆன பிறவிகளை யுடையவர்களை.
அவர்கள், சப்த ரிஷிகள் -தச ப்ரஜாபத்திகள் -ஏகாதச ருத்ரர்கள் துவாதச ஆதித்யர்கள் அஷ்ட வஸூக்கள் இப்படிக் கூறப்படுகிறவர்கள்.

நீ படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன் –
‘நீ படை’ என்று முந்துற நான்கு முகங்களையுடைய பிரமனைப் படைத்தவன்.
யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் – ‘முன்னர்ப் பிரமனை எவன் உண்டாக்கினானோ’ என்கிறபடியே,
பிரமனைப் படைத்து, ‘இவ்வருகு உண்டான காரிய வர்க்கத்தை உண்டாக்கு’ என்று விட்டால்,
சர்வேஸ்வரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி துப்புரவு உடையவன் ஆகையால்  பூர்ணனான- நிறை நான்முகனை-

சேயோன் எல்லா அறிவுக்கும்-
அவ்யவதாநேந- நேரே தன் பக்கல் பிறந்து, தான் ஓதுவிக்க ஓதி, அவற்றாலே ஞானத்தில் குறைவு அற்று
இருக்கிற பிரமன் முதலானவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருப்பான்.

திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் –
திக்குகளோடே கூடப் பூமிப் பரப்பு முழுவதையும் தாவி அளந்து கொண்டவன்.
இதனால், எத்துணை வியக்கத் தக்க ஞானத்தை யுடையவர்களுடைய ஞானத்துக்கும் அப்பாற்பட்டவனாய் இருந்தும்,
தானே தன்னைக் கொடுவந்து காட்டுமன்று வருத்தம் அறக் கொடு வந்து காட்டுவான் என்பதனைத் தெரிவித்தபடி.
‘நாய்ச்சிமார் தொடும் போதும் பூத் தொடுமாறு போன்று கூசித் தொடும் திருவடிகளைக் கொண்டு அன்றே
காடும் ஓடையும் அளந்து கொண்டான்!’ என்று ஆச்சரியப்படுகிறார்.
‘நன்மை தீமை பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளைக் கொடு வந்து வைக்கைக்குக் காரணம் என்?’ என்னில்,

எல்லா எவ்வுயிர்க்கும் தாயோன் –
எல்லா உயிர்கட்கும் தாயினைப் போன்று அன்புடையனாகை
ஈண்டு, ‘எல்லா எவ்வுயிர்’ என்றது, குணாகுணம் நிரூபணம் பண்ணாதே -உயர்வு தாழ்வுகள் பொருந்திய
பிறவிகளையுடைய எல்லா உயிர்களையும்.

தான் ஓர் உருவனே –
ஒருவர்க்கும் நிலம் அல்லாத மேன்மையினையும் நினைந்தார்;
அப்படிப்பட்டவனுடைய நீர்மையினையும் நினைந்தார்;
‘இவனும் ஒரு படியை யுடையவனாய் இருக்கிறானே!’ என்று ஈடுபாடு உடையவர் ஆகிறார். 
கடுநடை யிட்டு ஓடுகிறவர் இவன் சீல குணத்தை நினைந்து கால் தாழ்க்கிறார்.

‘கார் கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார் கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் – சீர்கலந்த
சொன்னினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவர் இப்போது?(பெரிய திருவந். 86)

‘இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர் எட்டோடு
ஒருநால்வர் ஓரிருவர் அல்லால் – திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே!
நாமா மிகவுடையோம் நாழ்.(பெரிய திருவந். 10) 

‘திதியின் சிறாகும் விதியின் மக்களும்
மாசில் எண்மரும் பதினொரு கபிலரும்
தாமா இருவரும் தருமனும் மடங்கலும்
மூவேழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்’

————–

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

நடை என்று -தம் தாமுடைய அதிகார அனுரூபமான மரியாதைகள் உண்டு -ஸ்ருஷ்டியாதிகளைச் சொல்லுகிறது
யோனிகள் -ஏவம் பூதமான ஜந்துக்கள்
நிறை -ஞான பூர்த்தி –
திருவடியால் தாயோன் -திரு என்று அழகாய் -ஸூ குமாரமான -அடி என்றும்
திரு என்று நாய்ச்சியாராய்-அவளும் கூசித் தொடும்-சங்கோஸித்து ஸ்பர்சிக்கும் – திருவடிகள் என்றபடி
தான் ஓர் உருவனே-உரு ஸ்வபாவம் -என்று ஆச்சர்யப் படுகிறார் –
சேயோன் தாயோன் என்றதை பற்ற மேன்மையையும் நீர்மையையும் –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading