ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-10-

இறைவன் விமுகர் பக்கல் பண்ணுமவை நிற்க;
அவன் காட்டின வழியே காணப்புக்க நாம்,
மனம் வாக்குக் காயங்களால் நம் விடாய் கெடத் திருவுலகு அளந்த திருவடிகளை அனுபவிப்போம்,’
என்று பாரிக்கிறார்.

——————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

கீழ் எல்லாம் பரோபதேசம் பண்ணிப் போந்தவர்
இங்கே தாம் அனுபவிக்கக் கடவேன் என்று சொல்லுகிறது -அவர்கள் திருந்தாமையாலே –
இதுக்கு ஹேது அவன் பண்ணி வைத்த மயக்கம் என்று அனுசந்தித்து அருளி ஸ்வ அனுபவத்தில் இழிகிறார் என்கிறார் –
அவன் காட்டின வழி என்றது அவதரித்து வடிவழகைக் காட்டின வழி என்றபடி –

———————

துயக்கறு மதியில் நன் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்த நல் அடிப்போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே–1-3-10-

துயக்கு அறு மதியில்-
துயக்கற்ற மதியை யுடைய -சம்சய விபர்யய -ஐயம் திரிபுகள் இல்லாத மதியை யுடையவர் ஆகையாலே,
நன் ஞானத்து உள் அமரர்-
மேலான அமரர்.
‘உள்’ என்பது ‘மனம், இடம், மேல்’ என்னும் பல பொருளைக் காட்டும் ஒரு சொல்;
அது இங்கு, மேல் என்னும் பொருளில் வந்தது. நன்றான ஞானத்தையுடையரான அமரரையுங்கூட என்றபடி,
துயக்கும் மயக்குடை மாயைகள்-
அறிவு கெடும்படி தெரியாமையைப் பண்ணுகின்ற குணங்களோடும் செயல்களோடும் கூடின அவதாரங்கள்.
துயக்கு-மனந்திரிவு

வானிலும் பெரியன வல்லன்-
ஆகாயத்தை அளவிட்டு அறியிலும் அளவிட்டு அறியப் போகாது.
அமரர்-
இந்திரன் முதலிய தேவர்கள்.
‘இராஜச தாமத குணங்கள் மிக்கிருக்கும் தேவர்களை ‘நன்ஞானத்துள் அமரர்’ என்னலாமோ?’ எனின்
இரஜோ குண தமோ குணங்கள் மிக்கிருந்தாலும், சத்துவ குணம் தலை எடுத்தாலும் அப்படியே
அதற்குரிய குணங்கள் மிக்கிருக்குமே அவர்கள் தங்களுக்கு; அதை நோக்கி அருளிச் செய்கிறார்.
சத்துவ குணம் தலை எடுத்தபோது, ‘நம் காரியம் நம்மாற் செய்யப்போகாது; அவனே நம் காரியத்திற்குக் கடவன்,’ என்று இருப்பர்;
அடுத்த கணத்திலேயே எதிரிடா நிற்பர். ‘அப்படி எதிர்த்த இடம் உண்டோ?’ எனின்,
தங்கள் இருப்பிடமும் இழந்து, பெண்களும் பிடி உண்டு, எளிமைப்பட்ட அளவிலே அதனைப் போக்கித் தர வேண்டும் என்று இரக்க,
பின்னை இவனும் சென்று, நரகனைக்கொன்று, சிறை கிடந்த பெண்களையும் மீட்டுக் கொடுத்துக் காத்த காலத்தில்
புழைக்கடைக்கே நின்றது ஒரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு வர,
இந்திரன் வச்சிரப்படையைக் கொண்டு தொடர்ந்தான் அன்றோ! அச்சரிதம் இங்கு நினைவு கூர்க.
இனி, ஒருகால விசேடத்தில், ஞானத்தால் மேற்பட்ட பெரிய திருவடியும்,
‘தேவரீரையும் நாய்ச்சிமாரையும் தாங்கினேன் நான் அன்றோ?’ என்பது போன்று,
சிவிகையார் சொல்லும் வார்த்தையைச் சொன்னான் ஆதலின், ‘நன் ஞானத்துள் அமரர்’ என்றதற்கு நித்திய சூரிகளை
என்று பொருள்கோடலும் அமையும்.
ஆதலால், அவனுடைய ஆச்சரியங்கள் நம்மால் அளவிட்டு அறியப்போமோ? அது நிற்க.
அவன் திருவருளால் காட்டின வடிவழகை அனுபவிப்போம் நாம் என்கிறார்:

புயல் கரு நிறத்தனன்-
வர்ஷுக வலாஹகம்- மழை பெய்யும் நீனிற முகிலைப் போன்று திருமேனியை யுடையவன்.

பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –
இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக் குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பார்.
‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச் செய்வர்.
பெருநிலம் கடந்த
பரப்பை யுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான்.
இவர்கள் நன்மை தீமை பாராமல் தன்னுடைய தூய்மையே இவர்களுக்கும் ஆகும் படி செய்தான் என்றபடி.
‘படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய்’ என்று ஆசைப்பட வேண்டும்படி இருத்தலின்,
‘நல்லடிப் போது’ என்கிறார்.
கதா புன இத்யாதி -‘திருவிக்கிரமனே, உத்தம ரேகைகள் பொருந்திய தாமரை போன்ற உனது
இரண்டு திருவடிகள் என் தலையினை அலங்காரம் செய்வது எப்போதோ?’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.
செவ்விப் பூச் சூட ஆசைப்படுகின்றவர்களைப் போன்று ஆசைப்படுகிறார்கள் என்க.

அயர்ப்பிலன்-
மறக்கக் கடவேன் அல்லேன்
அலற்றுவன்-
முறை இன்றிப் பேசுவேன்.
தழுவுவன்-
ஸூ காடம் பரிஷஸ்வஜே ( ‘மிகவும் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’)என்பது போன்று, தழுவுவேன்.
வணங்குவன் –
நிர்மமனாய் -செருக்கு அற்றுத் திருவடிகளிலே விழுவேன்.
அமர்ந்து –
அநந்ய பிரயோஜனனாய் -வேறு ஒரு பயனையும் கருதாது இப்படிச் செய்வேன்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

மதி -அந்தக்கரணம் ஆகவுமாம்-தர்ம பூத ஞானம் ஆகவுமாம் –
துயக்கறு மதியில் என்றது ஹேது கர்ப்ப விசேஷணம் –
துயக்கும் –மயக்குடை என்கிற புநர் உக்திக்கு -துயக்கும் உண்டாகும் படி மயக்கத்தைப் பண்ணக் கடவதான
குண சேஷ்டிதங்களோடே கூடின அவதாரங்கள்-
வானிலும் பெரியன் என்றத்தை அவதாரத்துக்கு விசேஷணம் ஆக்கி அருளிச் செய்கிறார் –
சிவியார் -கை வர்த்தகர் -தண்டிகை முதலானவை சுமப்பார் –
அயர்ப்பிலன் இத்யாதி -பவிஷ்யத் அர்த்தத்தில் வர்த்தமானத்திலும் -சொல்லாய் இருக்கையாலே
ஸ்ரீ பிள்ளான் வர்த்தமான அர்த்தம் பணிப்பர்
தன்னுடைய ஸூத்தியே –கங்கா பிரவாஹாதிகள் த்ருஷ்டாந்தத்வேன த்ரஷ்டவ்யங்கள்
மயக்குடை -பிராமகத்வ சக்தியை யுடைய என்றுமாம்

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading