ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் / ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – -1-3-9-

கீழ் – ஆறு, ஏழாம் பாசுரங்களால் பிரமன் சிவன் இவர்களுடைய -அபரத்வமும் -தலைமை இன்மையினையும்,
சர்வேஸ்வரனுடைய பரத்வமும் அருளிச் செய்தார்:
இப் பாசுரத்தில் அவர்கள் இருவரும் இவனைப் பற்றி-லப்த ஸ்வரூபராய் – ஸ்வரூபத்தை அடைந்தவர்களாய்
இருக்கிறபடியை அருளிச் செய்கிறார்.
‘ஆயின், பிரமன் முதலியோர்கட்கும் உத்பாதகனாய் காரணனாய் -அவர்களுக்கும் ரக்ஷகனான சர்வேஸ்வரன்,
அவர்களும் காலிட மாட்டாத பூமியிலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் யாது?’ எனின்,
ஆஸ்ரியிக்குமவர்களுக்கு த்வரை பிறக்கைக்காகவும் –
பற்றுகின்றவர்கட்கு விரைவு உண்டாவதற்காகவும், –
ருசி ஜனகன் ஆகைக்காகவும்-
ருசியைத் தோற்றுவிப்பவன் ஆகைக்காகவும் வந்து பிறப்பன்,’ என்று-
பரித்ராணாம் ஸாதூ நாம் – அவன்தான் அருளிச்செய்து வைத்ததுவே காரணம்.
‘ஆயின் துஷ்க்ருதர் விநாசம் -, பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் யாது பற்றி?’ எனின்,
‘பொல்லாரைப் பொன்று நெறி போக்கல் அதனுடைய பலமாய் வருமதுவே,’ என்று அவன் தானே அருளிச் செய்தான்-

————————

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

இப் பாட்டுக்கு அர்த்த த்வய அனுகுணமாக சங்கதி த்வயமாதல் –
அன்றிக்கே ஏக சங்கதியாய் கீழ் வாக்ய விவரணமாய் அவர்கள் லப்த ஸ்வரூபராய் இருக்கிற படியையும்
அவதாரத்துக்கு ஹேதுவையும் அருளிச் செய்கிறார் என்றுமாம்

——————–

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம் பெறத் துந்தித்
தலத்து எழு திசை முகன் படைத்தநல் உலகமுந் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே
சொலப் புகில் இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே–1-3-9-

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் –
ஆறு ஏழாம் பாசுரங்களில் கூறிய பொருளைத் தொடர்ந்து பேசுகிறார்-அநு பாஷிக்கிறார் –
முப் புரங்களையும் எரித்ததால் அபிமானங்கொண்டுள்ள சிவன், திரு மேனியில் வலப் பாகத்தைப் பெற்று
ஸ்வரூபத்தை அடைந்தவனாய் இருப்பன்.
பஸ்ய ச ஏகாதச மே ருத்ரன் தக்ஷிணம் பார்ஸ்வ ஆஸ்ரிதன் ( ‘எனது வலப் பாகத்தில் தங்கியிருக்கின்ற உருத்திரர்
பதினொருவரையும் பார்ப்பாய்,’ )என்பது மோஷ தர்மம்.

எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் இடம்பெறத் துந்தித்தலத்து –
இடம் பெற -அத்து -உந்தித்தலம் -என்றாய் -அத்து சாரியைச் சொல்லாய் -பொருள் இன்றியே போய் –
இடம் பெற உந்தித்தலம் என்கிறது –பூ தலம்-என்னுமா போலே
எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த உலகமும் தானும் இடத்தாற் குறைவு இன்றித்-அசங்குசித்தமாக –
திருநாபிக் கமலத்தில் இருப்பான்.
‘உந்தி’ என்பதும், ‘துந்தி’ என்பதும் திருநாபிக்குப் பெயர்.
ப்ராஹ்மாணம் ஈசம் கமலாசனஸ்த்தம் ( ‘கமலமாகிய ஆசனத்தில் தங்கியிருக்கின்ற தலைவனாகிய பிரமனையும் பார்க்கிறேன்,’ )
என்பது ஸ்ரீ கீதையில் அருச்சுனன் கூற்று.
இங்குக் கூறிய இவை, இவர்களுடைய எல்லா வகையான-ரக்ஷணத்துக்கும் – காத்தலுக்கும் உபலக்ஷணம்.

எழுச்சியாவது,
பதினான்கு உலகங்கட்கும் நிர்வாகனான – தலைவனாய் இருக்கிற செல்வம்.
இறைவன் விரும்பி வந்து அவதரிக்கையாலே ‘நல்லுலகம்’ என்கிறார்.
‘ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந் தனிஉடம்பன்’ என்கிறபடியே,
பிராட்டிக்கும் பிரமன் முதலியோர்க்கும் சமமாகத் திருமேனியில் இடங்கொடுத்து வைத்தால்,
அந்தப்புரத்தில் உள்ளவர்கள் என்று அவர்கள் இருப்பிடத்தில் இவர்களுக்கு நலிய ஒண்ணாதபடி
கூறாகக் கொடுத்து வைத்தானாதலின், ‘இடம் பெற’ என்கிறார்.
ச விகாசமாய் இருக்கும் என்பதால் இடம் பெற என்று அருளிச் செய்கிறார்
‘ஆயின், இவர்கட்குத் திருமேனியைக் கூறாகக் கொடுப்பான் என்?’ என்னில், இறைவனுடைய திருமேனி –
சர்வ அபாஸ்ரயமாய் -எல்லார்க்கும் பற்றுக்கோடாய் இருத்தலால் என்க.
பால் குடிக்குங்குழந்தைகள். தாயின் மார்பினை அகலில் நாக்கு வரளுமாறு போன்று,
பிரமனும் திரு நாபிக் கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.
ஆயின், இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில்,
ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகா குணம் ஆகையாலே,
ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்து கொண்டு செல்வார்கள்.
மற்றும், சாமந்தர்கட்குப் புறம்பே நாடுகள் மிகுதியாய் இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழி அரிசியைத்
தங்களுக்கு மேன்மையாக நினைத்திருப்பார்கள் அன்றோ? அங்ஙனமே,
இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின்,
வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடி வாங்கி யிருந்து,
கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் ப்ராப்தியாக –
தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.

பின்னும் –
பிரமன் முதலியோர்க்குத் திருமேனியிலே இடங்கொடுத்ததற்கு மேலே.

தன் உலகத்தில் அகத்தனன் – தான் உண்டாக்கின பிரமனாலே உண்டாக்கப்பட்ட உலகங்களிலே வந்து அவதரிப்பான்.
‘ஆயின், பிரமனும் சிவனும் தன் திருமேனியில் ஒவ்வோர் இடத்தைப் பற்றிப் பெற்ற ஸ்வரூபத்தினை யுடையவர்கள் ஆகும்படி இருக்கிறவன்,
அவர்களுங்கூடக் காலிட அருவருக்கிற சம்சாரத்திலே வந்து அவதரிக்கைக்குக் காரணம் என்?’ என்னில், புலப்பட-
‘காண வாராய் என்று என்று கண்ணும் வாயுந் துவர்ந்து’ இருப்பவர்களுக்குத் தன்-சங்கல்பத்தாலே சம்விதானம் – நினைவினாலே
அவர்கள் விரும்பியவற்றைக் கொடுத்தல் கூடாது ஆதலின்,
அவர்கள் கண் முதலிய கரணங்களுக்குப் புலப்பட வேண்டும் என்று,
‘ஏன்? தன் நினைவினாலே அவர்கள் விரும்பியவற்றைக் கொடுப்பின் என் செய்யும்?’ என்னில்,
‘மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையும்,’ என்பார்கள்.
‘இப்படிப் பிறப்பது கர்மத்தாலயோ?’ எனின், தானே – ஆத்ம மாயயா ‘என்னுடைய இச்சையே’ என்கிறபடியே,
ஒரு கர்மத்தால் அன்று; இச்சையேயாம்.

சொலப்புகில் இவை பின்னும் வயிற்று உள-
அவன் இப்படி அவதரித்துச் செய்யும் காத்தல்களில்-ஏகதேசம் – ஒரு சிறிது சொல்லில் சொல்லும் அத்தனை;
எல்லாம் சொல்லித் தலைக் கட்டப் போகாது:
சொலப் புகில் உள்ளே உள்ளேயாம் இத்தனை.
இனி, இதற்குத் தன்னாலே படைக்கப் பட்டவர்களாக உள்ளவர்கட்கு ‘என் மகன்’ என்று விரும்பும் படியாக வந்து பிறந்து
‘உனக்கு அரசைத் தந்தேன்; அது தன்னை வாங்கினேன்; போ,’ என்றும்,
கையிலே கோலைக்கொடுத்துப் ‘பசுக்களின் பின்னே போ,’ என்றும் சொல்லலாம்படி எளியனாய் இருக்கிற தான்,
இவர்களுக்கு ஓர் ஆபத்து வந்தால் இவர்களை வயிற்றிலே வைத்து நோக்கும் படியை அருளிச் செய்கிறார் என்று கூறலும் ஆம்.
‘நன்று; இப்படி இதுவே பொருள் என்பது நீர் அருளிச் செய்யும் போது தெரிகின்றது;
அல்லாத போது தெரியாதபடி இராநின்றதே!’ என்ன,

இவை அவன் துயக்கே-
மம மாயா துரத்யயா ‘என்னுடைய மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்கிறபடியே,
அவன் தானே ப்ரக்ருதி -மாயையாகிற விலங்கை வெட்ட புண்ணியம் இல்லாதவர்கள் தன் பக்கல் அணுகாதபடி செய்து,
அவர்கள் அகலப் புக்கால் அவன்தான் அனுமதி கொடுத்து, உதாசீனனாய் இருக்கையாலே தெரியாது ஒழிகிறது என்கிறார்.
துயக்கு–சம்சயம் -ஐயம்.

——————-

ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –

பரித்ராணாய ஸாதூ நாம் -தன திருவடிகளில் ருசி பிறந்து ஆஸ்ரயித்தவர்களுக்குத் தன் திருவடிகளை சீக்கிரமாக
பிராபிக்க வேணும் என்னும் த்வரை பிறைக்காக்காக வந்து பிறப்பன் என்கிறது –
தர்ம சமஸ்தாப நார்த்தாய -என்று தன்னுடைய ஆஸ்ரயணத்தில் ருசி இல்லாதார்க்கும் தன்னுடைய
விக்ரஹ ஸூந்தர்யத்தை பிரகடிப்பித்து-அத்தாலே ருசி ஜனகன் ஆக்கைக்காக வந்து பிறப்பன் என்கிறது
சாது பரித் ராணார்த்த மாகப் பண்ணின அவதாரத்தின் பலமாயிற்று துஷ்க்ருத் விநாசம்-
பூ தலம் என்னுமா போலே உந்தித் தலம்
அடைய வளைந்தான் -ஏழாம் பிரகாரம் –
சொல்லப் புகில் உள்ளே உள்ளே யாம் -வாசா மகோசரம் -அந்த தசையிலும் ரக்ஷிக்குமவன் –
இவை -லோகம் என்றும் தசரத வ ஸூ தேவாதிகள் என்றுமாம்
துரைக்கு மனம் திரிபு -சம்சயமும் விபர்யயமும் -இங்கு பிரகரணத்துக்குச் சேர சம்சயம் விவஷிதம்-

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading