இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -61-70– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பாரதந்தர்யம் தன்னை அனுஷ்டித்துக் காட்டின படியைச் சொல்லுகிறார் –

(ஸ்வரூபமும் ரூபமும் ஆஸ்ரித பாரதந்த்ரம் என்றார் கீழ்
இதில் சேஷ்டிதங்களும் அடியார்களுக்காகவே என்கிறார்)

நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் -அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனை உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு —61-

பதவுரை

அன்று கருமாணி ஆய்–முன்பொரு காலத்திலே கரிய கோலப் பிரமசாரியாய்ச் சென்று
இரந்த–(மாவலி பக்கல் மூவடி மண்) யாசித்த
கள்வனே–க்ருத்ரிமனான பெருமானே!
நின்றது ஓர் பாதம்–(பூமியை அளப்பதாக நின்ற ஒரு திருவடியானது
நிலம்–பூ மண்டலத்தை
புதைப்ப–ஆக்ரமித்துக் கொள்ள (அதன் பிறகு)
நீண்ட தோள்–விம்ம வளர்ந்த திருத்தோளானது
திசை எல்லாம் சென்று–திக்குக்களெல்லாவற்றிலும் வியாபித்து
அளந்தது என்பர்–(மேலுலகத்தை) அளந்துகொண்ட தென்று (பெரியோர் செல்லுகின்றனர்) (இப்படி நீ காரியஞ் செய்தவிது)
உன்னை பிரமாணிக்கார் பெற்ற பேறு–உன்னை நம்பினவர்கள் எல்லாரும் பெற்ற புருஷார்த்தமாகும்

ஒரு நினைவற்று இருக்கச் செய்தே நின்றதொரு திருவடிகள் பூமிப பரப்பை அடங்கலும் புறம் தோற்றாதே தன் கீழே
அடங்கும் படி அளந்து கொள்ள -அபிமதம் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே முசிவற வளர்ந்த திருத் தோளானது
திக்குகள் எல்லா வற்றையும் சென்று அளந்து கொண்டது என்று விவஷிதர் சொல்லா நின்றார்கள்-

இந்திரன் கண்ணும் கண்ண நீருமாய்க் கொண்டு திருவடிகளில் வந்து விழுந்த அன்று
ஸ்ரமஹரமான கருத்த நிறமும் இரப்பிலே தகண்
ஏறின ப்ரஹ்மச்சாரி வேஷமும் உடையனாய்க் கொண்டு மகாபலியை சர்வ ஸ்வ அபகாரம் பண்ணின கிருத்ரிமனே
உன்னை அழிய மாறி மஹா பாலி பக்கலிலே கிடந்த பூமியை மீட்டுக் கொண்ட செயல் உன்னிடத்தில் தங்கள் பரத்தைப் பொகட்டு நியஸ்த பரராய் உன்னை விஸ்வசித்து இருந்த ஆஸ்ரிதர் ஆணவர்னர்கள் நிர்ப்பரராய் மார்பிலே கை வைத்து உறங்கும்படி பெற்ற பேறு அன்று
அவர்களுக்கு வைத்த தண்ணீர் பந்தல் என்றபடி
த்ரிவிக்ரம வடிவுடன் செய்த செயல் இது
தன்னது என்ன -அவன் பக்கலிலே இரந்ததாயாய்-வஞ்சித்தாயாய்ச செய்தது
இந்திரன் ஒருத்தனுக்குச் செய்ததேயோ –

ஆஸ்ரித விஷயத்தில் தன்னை அழிய மாறி வஞ்சிக்கும் -தூது போம் -சாரத்யம் பண்ணும் –
எல்லாம் செய்து ரஷிக்கும் என்று
உன்னை பிரமாணித்தவர்கள் மார்விலே கை வைத்து உறங்கும் படி பண்ணினாய் அத்தனை அன்றோ –

(கரே நிபதிதே தோயே வாமனோ பூத் அவாமன -கையிலே மாவலியின் தான நீர் விழுந்த உடனே வாமனன் நெடியோன் ஆனான் –
அடியாருக்காகவே தனது ஸ்வரூபத்தையும் தாழ்த்திக் கொண்டு யாசிப்பதையும் -வஞ்சிப்பதையும்
தூது போவதையும் தேர் ஓட்டுவதையும் மற்றும் பல இழி தொழில்களையும் செய்து அவர்களை ரக்ஷிப்பவன்
என்று மார்பிலே கை வைத்து உறங்கலாம் படி பெற்ற பயன் அன்றோ –
அனைவருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தல் அன்றோ இந்தச் செயல் என்கிறார் -)

——————————————————————————————————

இப்படி ஆஸ்ரித பரதந்த்ரனானவனே என் பிரதிபந்தகங்களைப் போக்கி அபேக்ஷிதத்தையும்
தருவான் என்று அவனைப் பற்றினேன் என்கிறார் –

பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் -ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-

பதவுரை

பெண் நசையின் பின் போய்–நப்பின்னைப் பிராட்டி விஷயத்திலுண்டான ஆசைக்கு வசப்பட்டு,
ஏறின்–விருஷபங்களினுடைய
பெருத்த எருத்தம்–பெருத்த முசுப்புகளும்
கோடு–கொம்புகளும்
ஓசிய–முறியும்படியாக
எருத்து–(அந்த ரிஷபங்களின்) கழுத்தை
இறுத்த–முறித்த
நல் ஆயர் ஏறு–விலக்ஷணனான கோபால கிருஷ்ணன்
மாறு–(நமது பாபங்களுக்கெல்லாம்) சத்துருவானவன்.
என்று சொல்லி–என்றெண்ணி
வணங்கினேன்–அவனை ஆஸ்ரயித்தேன்
முன்–இதற்கு முன்பு
பேறு ஒன்றும் அறியேன்–இப்படிப்பட்ட புருஷார்த்தத்தைச் சிறிதும் அறியாதவனாயிருந்தேன்
பேதைமையால்–அப்படி அறியாதிருந்ததனால்
பெற்று அறியேன்–அதனைப் பொறாதும் இழந்தொழிந்தேன்.

ருஷபங்களுடைய வளர்ந்த கழுத்துக்களும் கொம்புகளும் முறியும்படிக்கு ஈடாக நப்பின்னை பிராட்டி பக்கலிலே உண்டான
ஆசையைப் பின் சென்று -அந்த ருஷபங்களுடைய கழுத்தைத் திருத்திப் பொகட்டவனாய் தன்னோடு ஒத்த நல்ல பருவத்தை யுடைய
இடைப் பிள்ளைகளுக்கு எல்லாம் தலைவனாகையாலே வந்த செருக்கை யுடையவனான கிருஷ்ணன்
நம்முடைய பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்களுக்கு சத்ருவாய் இருக்குமவன் என்று ஆஸ்ரயித்தேன் –

இதுக்கு முன்பு இப்படி இருப்பது ஒரு புருஷார்த்தம் அறியவும் பெற்றிலேன் –
அத்தாலே இப்புருஷார்த்தைப் பெற்று அனுபவிக்கப் பெறாமல் இழந்து போனேன் –
இதுக்கு அடி என் அறிவு கேடு ஐயோ அறிவு கேடு என் படுத்தாது தான் –

(ஸஹஜ ஸ்த்ரீகள் நாம் யாவரும் -அவன் ஒருவனே புருஷோத்தமன்)

(ஞானான் மோக்ஷ அஞ்ஞானாத் ஸம்ஸார —
குண மயீ மம மாயா துரத்யயா -மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்திதே -கீதை -7-14-
கச்ச த்வமே நம் சரணம் -என்று உபதேசிக்க
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்பதால் வணக்கமே சரணாகதி யாகுமே –
நமக்கு பிரபலமான புருஷகார பலம் -நப்பின்னை -உண்டாய் இருக்க நம் பாபங்களைக் கண்டு சீறி இவனால் உதற முடியாதே
நின் அன்பின் வழி நின்று -பெரியாழ்வார் -3-10-7-ப்ரேம பரதந்த்ரன் அன்றோ)

———————————————————————————————–

அபிமானியான ருத்ரனுடைய சாபத்தைப் போக்குகையாலும் அவனே ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

ஏறு எழும் வென்று அடர்த்த வெந்தை எரி உருவத்து
ஏறேறி பட்ட விடு சாபம் -பாறேறி
யுண்ட தலை வாய் நிறையக் கோட்டங்கை யொண் குருதி
கண்ட பொருள் சொல்லில் கதை–63-

பதவுரை

ஏறு ஏழும்–ரிஷபங்களேழையும்
வென்று–ஜயித்து
அடர்த்த–தொலைத்த
எந்தை–ஸ்வாமியான கண்ணபிரான்
எரி உருவத்து ஏறு ஏறி பட்ட–நெருப்புப் போன்ற உருவத்தை யுடையவனும் வ்ருஷப வாஹநனுமான ருத்ரன் அநுபவித்த
விடு சாபம்–எல்லாரும் கைவிடும் படியான சாபத்தை (ப்போக்குதற்காக)
பாறு ஏறி உண்ட தலை வாய் நிறைய–பருந்துக்கள் ஏறி யிருந்து உண்ணுதற்குரிய கபாலம் வாய் நிரம்பும்படியாக
கோடு–குவிந்த
அம் கை–அழகிய திருக் கையாலே கீறியெடுத்து அளித்த–

ஒண் குருதி -அழகிய ரத்தத்தாலே–

கண்ட பொருள் அக்கபாலம் கையினின்று கழன்று விழக் கண்ட விஷயத்தை
சொல்லில்–சொல்லத் தொடங்கினால்
கதை–பெரியதொரு பாரத கதையாக முடியும்.

ருஷபங்கள் ஏழையும் ஜெயித்துப் திருகிப் பொகட்ட என் ஸ்வாமியான கிருஷ்ணன் –
நெருப்புப் போலே ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாத வடிவை யுடையனாய் –
செருக்குப் போக்கு வீடாக ருஷபத்தை மேற்கொண்டு நடத்தக் கடவனுமான ருத்ரன் முன்பு
தலை யறுக்கிற இடத்தில் அனுமதி பண்ணி இருந்து
பின்பு குபிதனாய்க் கொண்டு ப்ரஹ்மா -கபாலீ த்வம் பவிஷ்யசீ –என்று சபிக்க

சாப உபஹதனாய்க் கையும் தலையோடுமாய்க் கொண்டு இரந்து திரியும்படி மறுபாடு உருவப்பட்ட வந்தேறியான சாபத்தை
கழுகும் பருந்தும் பாறு -என்கிற பஷி விசேஷமான அவை மேல் விழுந்து ஜீவித்த தலையோடு வாயளவும் நிறைந்து
ஸ்புடிதம் பஹுதா யாதம்-என்னும்படி –
சில்லுச் சில்லாக வெடித்துப் போம் படி குவிந்த அழகிய திருக் கையாலே
திரு மேனியில் ஒரு பிரதேசத்தைக் கீறி வாங்கித் தெறித்த -அழகிய ரத்தத்தால் கையில் நின்றும் தவிழ்ந்து போம்படி கண்ட
இவ்வர்த்தத்தைச் சொல்ல இழி யில் ஒரு மஹா பாரதத்தோடு ஒக்கும் –

ஈஸ்வரனாகவும் வேண்டா -பாதகியாகவும் வேண்டா –
அங்கை என்றது பாதகத்தைப் போக்க வல்ல அழகிய கை என்றபடி –

ஒண் குருதி -என்றது
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே அப்ராக்ருதமான திரு மேனியில் நின்றும்
உண்டானதாகையாலே அடிக் கழஞ்சு பெற்ற குருதி -என்றபடி –

(ஓன்று மா கடல் உருவம் ஓன்று செந்தீ -திரு நெடும் தாண்டகம் -2-
தழல் நிற வண்ணன் குழல் நிற வண்ண -பெரிய திரு -6-1-2-
உருவம் கார் உருவம் எரி -முதல் திரு -5-
வேறு இசைந்த செக்கர் மேனி நீறணிந்த புன் சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்தவன் கபால மிசை
ஊறு செங்குருதியால் நிறைத்த காரணம் தன்னை
ஏறு சென்று அடர்த்த வீச பேசு கூசம் இன்றியே –திருச்சந்த விருத்தம் -42-
கபாலீத்வம் பவிஷ்யஸி -மாத்ஸ்ய புராணம் -சாபத்தால் பீடிக்கப்பட்டு கையும் மண்டை ஓடுமாயத் திரிந்து யாசித்து
வெண் தலைப் புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் -திருச்சந்த -113-
ஸ்புடிதம் பஹுதா யாதம் -மாத்ஸ்ய புராணம் –
ஊறு செங்குருதி-என்றும்
அலங்கல் மார்பில் வாச நீர் -திருச்சந்த -113–
தலை அறுப்புண்டவனும்
தலை அறுத்து சாபம் பெற்றவனும் பரம் பொருள் அல்லரே
அந்த சாபத்தைப் போக்கி அருளினவனே பரம் பொருள்
மாத்ஸ்ய புராணம் -182-அத்யாயம் இந்த வ்ருத்தாந்தம் விவரிக்குமே-
தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாம அங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய சிரஸ் சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர
ப்ரஹ்ம ஹாஸ் அஸகுலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவி ஹிமவந்தம் சிலோச்சயம்

தத்ர நாராயணஸ ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ்தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்

மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ் ஸ்ருதா

விஷ்ணு ப்ரஸாதாத் ஸூ ஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம் யதா –இவை அங்குள்ள சாரமான ஸ்லோகங்கள்)

———————————————————————————————

இப்படி ஈஸ்வர அபிமானிகளுக்கும் கார்யம் செய்யக் கடவ நீ உன்னால் அல்லது செல்லாத நான்
உன் திரு நாமங்களைச் சொல்லி முழு மிடறு செய்து அனுபவிக்கும் படி
பண்ணி அருள வேணும் என்கிறார் –

(கதை -என்றதும் இதிஹாஸ புராண பெரும் பொருளான  தாத்பர்யமான திரு நாம சங்கீர்த்தனம் பற்றி அருளிச் செய்கிறார்-கலவ் கேஸவ கீர்த்தனம் –
அருகில் சேவிக்க முடியாதவன் திரு நாமங்கள் மூலம் அனுபவித்து மகிழ்வான் அன்றோ-இதற்கும் அவன் திரு உள்ளம் பற்ற வேண்டுமே )

கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
இதையம் இருந்தவையே ஏத்தில்-கதையும்
திருமொழி யாய் நின்ற திருமாலே உன்னைப்
பரு மொழியால் காணப் பணி–64-

பதவுரை

கண்ணா–கண்ண பிரானே!
கதையும்–இதிஹாஸ புராணங்களும்
பெரும் பொருளும்–அவற்றின் சிறந்த அர்த்தங்களும்
இதயம்–அவற்றின் தாற்பரியமும்
இருந்த வையே–உள்ளது உள்ளபடியே
ஏத்தில்–அறிந்து துதித்தால்
நின் பேரே–(அவை யெல்லாம்) உன்னுடைய திரு நாமங்களேயாம்
கதையின் திருமொழி ஆய்நின்ற திருமாலே–இதிஹாஸ புராணங்களின் ஸ்ரீஸூக்தி வடிவமாக நிற்கிற திருமானே!
உன்னை–உன்னை
பரு மொழியால் காண–பரிபூர்ண சப்தங்களாலே கண்டு அது பவிக்கும்படி
பணி–திரு வுள்ளம் பற்ற வேணும்-

சர்வ ஸூலபனான கிருஷ்ணனே -த்வத் வைபவத்தைக் கதை போலே வகை இட்டுப் பரக்கச் சொல்லுகிற அர்த்தங்களும்
அந்த இதிஹாசங்களின் தாத்பர்ய அம்சமும் இருந்தபடியே அறிந்து கொண்டு ஸ்துதிக்கில் –
உன்னுடைய குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களேயாய் இருக்கும் –

உபநிஷத் ஸித்தமான வித்யா விசேஷங்களில் கதை போலே அவன்
குண சேஷ்டிதங்களை விஸ்தரித்துச் சொல்லுகிற அழகிய சப்தங்களுக்கு
உள்ளீடான பொருளாய்க் கொண்டு நின்ற ஸ்ரீ யபதியானவனே-

இப்படி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரும்ஹணங்களாலே பிரதி பாதிக்கப் பட்ட ஸ்ரீ யபதியான உன்னை
இப்படி சப்த த்வாரா காண்கை அன்றிக்கே
ஒரு தேச விசேஷத்திலே வந்து பரிபூர்ணமாக -சதா பஸ்யந்தி -என்று அனுபவித்து –
அனுபவ ஜெனித ப்ரீதிக்கு போக்கு விட்டு
அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று முழு மிடறு செய்து பேசுகிற பரிபூர்ண சப்தங்களாலே கண்டு
அனுபவிக்கும் படி -திரு உள்ளமாய் அருள வேணும் –

கதையும் திரு மொழியுமாய் நின்ற என்கிற இடத்தில்
கதை என்று இதிஹாசாதிகளையே சொல்லிற்று ஆகவுமாம் –

(கோது கழித்து -கங்கா காங்கேய –எச்சில் வாய் -அசாரம்-சாரம் -சார தரம்-சார தமம்–
தேவதாந்த்ர -உபாயாந்தர -உபயாந்தர -பிரபத்தி மஹா விஸ்வாஸம்-குலையுமே -திரு நாம சங்கீர்த்தனம் தான் தாத்பர்யம்)

(ஸர்வே வேதா கிருஷ்ண
வேதைஸ் ச ஸர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
ஸத்யம் சத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜ முச்யுதே -வேதாஸ் ஸாஸ்த்ரம் பரம் நாஸ்தி –
த்வம் ஆஸீர் மாத ஸ்ரீ கமி துரித மித்தந்தவ விபவ தத் அந்தர் பாவாத் த்வாம் ந ப்ருத கபி தத்தே ஸ்ருதிரபி –ஸ்ரீ குணரத்ன கோசம் -28-
காணப் பணி
இது போல் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் கேட்டால் போதாது
தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -என்று அங்கு கண்டு அனுபவித்து
ஹாவு ஹாவு ஹாவு அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத -என்னவும் பண்ணி அருள வேணும் –
இப் பேற்றை நிர்ஹேதுக கிருபையால் பண்ணி அருள வேணும் என்கிறார் )

—————————————————————————————————–

இப்போது உமக்குச் செய்ய வேண்டுவது ஓன்று உண்டோ –
நீர் எல்லாம் பெற்றீரே காணும் -என்ன
அந்த லாபத்தை அனுசந்தித்துத் தத் அனுரூபமாகப் பரிமாறுகிறார் –

(இங்கேயே இருந்து திவ்ய தேச கைங்கர்யம் என்றும்
அங்கு சென்றும் இதே போல் கைங்கர்யம் தொடர வேண்டும் என்றும்
இரண்டு நிர்வாகங்கள்
மாம் நமஸ்க்ரு பணிந்தேன்)

பணிந்தேன் திரு மேனி பைங்கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய்த் துணிந்தேன்
புரிந்து ஏத்தி யுன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது–65-

பதவுரை

திருமேனி–உனது திருமேனியை
பணிந்தேன்–ஸேவித்தேன்-கண்டு பணிந்தேன் -கண்டேன் என்று சொல்ல மாட்டாரே -அஹங்கார கர்ப்பமாக இருக்குமே
உன் சே அடி மேல்–உனது செவ்விய திருவடிகளின் மேல்
பை கமலம்–அழகிய தாமரை மலர்களை
அன்பு ஆய்–அன்பு கொண்டு
கையால் அணிந்தேன்–கையால் ஸமர்ப்பித்தேன்
உன்னை–உன்னை
புரிந்து ஏத்தி–விரும்பித் துதித்து
புகல் இடம் பார்த்து–பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி-இங்கு புறப்பாடு முடிந்து திருக் கோயிலுக்குள்ளே புகும் இடம்  பார்த்து என்றுமாம்
ஆங்கே இருந்து ஏத்தி வாழும் இது துணிந்தேன்–அவ்விடத்திலேயே இருந்து கொண்டு மங்களாசாஸநம் பண்ணி
வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

ந நமேயம் (வணங்க லில் அரக்கர் )என்னும் படி -ஸ்வாதந்தர்யத்தால் -தலை வணக்கம் அற்ற நான் உன்னுடைய அழகிய திருமேனியைக் கண்டு
ஆழம் கால் பட்டு வேறு அற்ற மரம் போலே (சேஷத்வ )ஸ்வரூப அனுரூபமாக விழுந்தேன் –

அடிமை செய்யா விடில் தரிக்க ஒண்ணாத ப்ரேமத்தை உடையனாய்க் கொண்டு வகுத்த சேஷியான உன்னுடைய சிவந்த
திருவடிகளின் மேலே எடுத்துக் கை நீட்டக் கண்ட கையாலே அழகிய தாமரைப் பூக்களை அழகு பெறச் சாத்தினேன் –

எழுந்து அருளா நின்றால்-முன்னே சேவித்து -முன்புள்ள அழகைக் கண்டு களித்து
உன்னை ஸ்தோத்ரம் பண்ணிப் புக்கு அருளுகிற இடத்திலே
பின்புள்ள அழகைக் கண்டு கால் வாங்க மாட்டாதே அவ்விடம் தன்னிலே இருந்து தேவருடைய ஸம்ருத்தி இப்படி மாறாதே
செல்ல வேணும் என்று புகழ்ந்து மங்களா சாசனம் பண்ணி
இப்படி அனுபவித்து வாழுகை ஆகிற இப்புருஷார்த்தத்தில் வியவஸ்த்தினன் ஆனேன் –

(வா போகு வா -சக்ரவர்த்தி பெருமாள் இடம் -இவர் நம்பெருமாள் இடம்)

அங்கன் இன்றிக்கே –
புகலிடம் -என்கிறது –
அவதார சமாப்தியிலே போய்ப் புக்கருளும் ஸ்ரீ வைகுண்டத்தையாய்
அங்கே சூழ்ந்து இருந்து ஏத்துவார் -என்கிறபடியே –
அவர்கள் நடுவே புக்கு இருந்து ஏத்தி வாழ வேணும் -என்னுமதிலே அத்யவசித்தேன் என்னவுமாம் –
இது திரு மலை நம்பி நிர்வாஹம்-

(த்விதா பஜ்யேய மப் யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹஜோ தோஷ ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த –36-11-என்று
வணக்கம் அற்று இருந்த என்னை திருமேனியைக் காட்டி ஐயப்பாடு அறுத்து மேலும் ஆதாரம் பெறுக வைத்தாய்
அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி
ஸ்வயம் ப்ரயோஜனமாகவே சாத்தினேன்
கஜ ஸிம்ஹ கதீ வீரவ் ஸார்த்தூலவ் ருஷபோபமவ் -நடை அழகு
பூர்வாங்கா ததிகா பராங்க கலஹம் -முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்-

இங்கே இருந்து அர்ச்சா ஸ்தலங்களில் பல்லாண்டு பாடி வாழ வேண்டும் பட்டர் நிர்வாகம்

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -10-10-9-
ந ச புந ராவர்த்ததே
புணை கொடுக்கிலும் போக ஒட்டார் -பெரியாழ்வார் -4-5-2-
தத் விப்ராஸோ விபன்யவோ ஜாக்ருவாம்ஸ சமிந்ததே
சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே
அங்கு புக்கு பல்லாண்டு ஏத்தி வாழ வேணும் -என்பதே திருமலை நம்பி நிர்வாஹம் -)

————————————————————————————————

பகவத் ப்ராவண்யம் பெற்ற அளவு அமையும் -(அன்பால் பைங்கமலம் திருவடிகளில் சாத்தினேன் -என்றாரே கீழே )
அத்தை விட அநர்த்தா வஹமான விஷயாந்தரங்களில் -தோஷத்தை அனுசந்தித்து அருசி பிறக்கையே வேண்டுவது என்கிறார் –

(ருசி பிறந்தமை கீழ் அருளிச் செய்து
ஸாம்ஸாரிக தண்மை -தோஷ தர்சனம் -பண்ணி அருசியும் வளர வேண்டுமே)

இது கண்டாய் நல் நெஞ்சே இப்பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது -இது கண்டாய்
நாரணன் பேரோதி நரகத்தருகு அணையாக்
காரணமும் வல்லையேல் காண்–66-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
இப் பிறவி ஆவது இது கண்டாய்–இந்த ஸம்ஸாரத்தின் கொடுமை இப்படிப் பட்டது காண்.
நாம் உற்றது எல்லாம் இது கண்டாய்–(இந்த ஸம்ஸாரத்தில்) நாம் அநுபவித்த துக்கங்களெல்லாம் இப்படிப் பட்டவை காண்
நாரணன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
பேர்–திரு நாமங்களை
ஓதி–ஸங்கீர்த்தனம் பண்ணி
நரகத்து–ஸம்ஸாரமாகிற நரகத்தினுடைய
அருகு–ஸமீபத்திலும்
அணையா காரணமும்–நாம் நிற்கலாகாது என்று வெறுப்பதற்குக் காரணமும்
இது கண்டாய்– இந்த ஸம்ஸாரத்தின் தோஷமே காண்;
(இப்படி ஒவ்வொன்றையும் நான் எடுத்து உரைக்க வேண்டாதபடி)
வல்லை ஏல்–நீயே தெரிந்து கொள்ளக் கடவையாகில்
காண்–எல்லாம் தெரிந்து கொள்.

*நல் நெஞ்சே கீழே சொல்லி -வல்லையேல் -இங்கு ஸம்ஸாரத்தின் தண்மை உன்னையும் படுத்தும் அன்றோ)

சம்சாரம் பொல்லாது என்றால் -அதுக்கு இசைந்து என்னோடே ஒரு மிடறான நல்ல நெஞ்சே –
இது நிலை நிற்கும் –
போக்யமாய் இருக்கும் -என்று நாட்டார் பிரமிக்கிற ஆகாரம் இன்றிக்கே –
பகவத் பிரசாதத்தாலே தரிசிக்கும் அளவில் அத்ருஷ்ட தோஷ துஷ்டமான இந்த சம்சாரம் ஆகிறது –
அல்ப அஸ்திரத்தவாதி தோஷ தூஷிதமான இவ்வாகாரத்தோடே கூடின இதுவே கிடாய்

முன்பு அநாதியான காலம் எல்லாம் நன்றாய்த் தோற்றுகிற ஆகாரத்தாலே
நாம் மாறுபாடுருவ துக்க அனுபவம் பண்ணிப் போந்தது இது கிடாய் –

வகுத்த சேஷியான நாராயணனுடைய குணாதிகளுக்கு (ஆதி -சேஷ்டிதங்கள் )வாசகமான திரு நாமங்களை -நிரந்தரமாகச் சொல்லி
சம்சாரம் ஆகிற நரகத்தினுடைய பர்யந்தத்திலும் பிரவேசியாமைக்கு காரணமும்
அஸ்திரத்தவாதி (ஆதி அல்பம் )தோஷங்களால் த்யாஜ்யம் என்னும் ஆகாரம் பிரத்யஷிக்கலாம் படி இருக்கிற இஜ் ஜன்ம சம்பந்தம் கிடாய் –

மேல் எழத் தோற்றுகின்ற நன்மையில் பசை இல்லை –
தோஷமே வேஷம் என்று இத்தைத் தப்பாத படி காண வல்லை யாகில்
நாம் சொன்னது ஒக்கும் என்னும் இடத்தைக் கண்டு கொள்ளு –

(மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாய
பந்தாயா விஷயா சங்கி
முக்த்யை நிர்விஷயம் மன -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-)

————————————————————————————–

இவர் திரு உள்ளத்தைக் குறித்து -சம்சார தோஷத்தைக் காண் -என்ற அநந்தரம் -அவன் நிர்ஹேதுகமாக
தன்னைக் கொண்டு வந்து காட்ட -அதிலே தாம் கண்ட அம்சத்தை அருளிச் செய்கிறார் –

(நம் பெருமையைப் பாராமல் ஸம்ஸார தண்மையையே பார்க்க வேணும் என்று இவர் உபதேசிக்க
பதறி -தோஷமே கண்ணில் படாமல் நம் சொத்தை
பரம விமல திருமேனி -ஆழ்வாரது –
வேறே ஒன்றைக் காண முடியாமல் மானஸ அனுபவம் -கனவில் போல் –
கண்டேன் இங்கேயே –
பின்பு திருக்கண்டேன் அடுத்த ஆழ்வார்
பொன்னாழி கை கண்டேன் அவர்
இவரும் கனலும் சுடர் ஆழி -கண்டேன்)

கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி -கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்துப பின்னும்
மறு நோய் செறுவான் வலி-67-

பதவுரை

யான்–அடியேன்
கனவில்–ஸ்வப்நம் போன்ற ஸ்வாநுபவத்திலே
திருமேனி–திவ்ய மங்கள விக்ரஹத்தை
கண்டேன்–ஸேவிக்கப் பெற்றேன்
ஆங்கு–அப்போது
அவன் கை–அவனது திருக் கையிலே
கனலும் சுடர் ஆழி கண்டேன்–ஜ்வலிக்கிற சுடர் மயமான திருவாழியைக் கண்டேன்
உறு நோய் வினை இரண்டும்–வந்தேறியாய் இருக்கச் செய்தேயும் ஒன்றி -அனுபவித்தே அற வேண்டிய  மிக்க நோய்களுக்குக் காரணமான புண்ய பாபங்களென்கிற இரண்டு கருமங்களையும்
ஒட்டுவித்து–தொலைத்திட்டு
பின்னும்–பின்னையும்
மறு நோய் செறுவான்–மறு கிளை கிளர்ந்து வரக் கூடிய வாஸநா ருசிகளையும் தொலைத்தருளுமாவனான எம்பெருமானுடைய
வலி–மிடுக்கையும்
கண்டேன்–காணப் பெற்றேன்.

நிர்ஹேதுகமாக அவனாலே அங்கீ க்ருதனான நான் இந்திரிய த்வாரா விட்டு நீட்டிக் காண்கை யன்றிக்கே
ஸ்வப்ன கல்பமாய் –
அதிலும் விசத தமமான ஸ்வ அனுபவ தசையில்
அழகிய திரு மேனியைக் கண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

அப்படிப்பட்ட அழகை யுடையவன் திருக் கையிலே பிரதி பக்ஷத்தின் மேலே சீறு பாறு என்னா நின்றுள்ள
தேஜோ ரூபமான திரு வாழியைக் கண்டேன் –

துறக்க ஒண்ணாத படி ஆத்மாவோடு கூடி துக்க அவஹமான புண்ய பாப ரூப கர்மங்கள் இரண்டையும்
துரத்தி விட்டுப் பின்னையும் மறு கிளை கிளர்ந்து வரக் கடவதாய் –
துக்க ஹேதுவான வாஸனா ருசிகளையும் செறுத்து முடிக்குமவன் மிடுக்கையும் காணப் பெற்றேன் –

(ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -மநு ஸ்ம்ருதி -12-122-மானஸ ஸாஷாத் காரம்
ஸூ பாஸ் ரயமான திவ்ய மங்கள விக்ரஹத்தைக் காட்டி அருளி வாஸனா ருசியையும் போக்கி அருளியவனுடைய பலத்தைக் கண்டேன்
தானி ஸர்வாணி ஸம் யம்ய யுக்த ஆஸீத மத் பர -என்று இவ் வர்த்தம் கீதையில் காட்டப்பட்டுள்ளது அன்றோ)

——————————————————————————————-

பிரயோஜனாந்தர பரரே யாகிலும் -தன்னை வந்து அர்த்தித்தால் வருந்தியும் –
அவர்கள் அபேக்ஷித சம்விதானம் பண்ணும் என்கிறார் –

வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலிமிக்க வாள் வரை மத்தாக -வலி மிக்க
வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோணாகம் கொம்பு ஒசித்த கோ–68-

பதவுரை

வலி மிக்க–மஹா பலசாலிகளாய்
வாள் எயிற்று–வாள் போன்ற கோரப் பற்களை யுடையராய்
வாள்–வாட் படையை யுடையரான
அவுணர்–ஆஸுர ப்ரக்ருதிகள்
மாள–முடிந்து போவதற்காக
வலி மிக்க வாள் வரை மத்து ஆக–மிக்க வலிவுள்ளதாய் ஒளியை யுடைத்தான மந்தர மலையை மத்தாகக் கொண்ட
வலி மிக்க வாள் நாகம்–அதிகமான சக்தியையும் ஒளியையுமுடைய வாஸுகி நாகத்தை
சுற்றி–கடை கயிறாகச் சுற்றி
கடல் மறுக கடைந்தான்–கடல் குழம்பும்படி கடைந்தருளினவன் (எவனென்றால்)
கோள் நாகம்–மிடுக்கை யுடைய குவலயாபீடமென்னும் மத யானையினது
கொம்பு–கொம்புகளை
ஒசித்த–முறித்தொழித்த
கோ–ஸ்வாமியாவன்

பெரு மிடுக்கராய்-ஒளி விடுகிற எயிற்றை உடையருமாய் சாயுதருமான ஆசூர பிரக்ருதிகள் நசிக்கும் படியாகவும்
தான் நெருங்கின இடத்திலும் பிரிந்து-திரிந்து – போகாத படி கடி நோத்தரமாய்-ஒளி விடுகிற மந்த்ர பர்வதம் மத்தாகவும்
நெடும் போது இடவாய் வலவாய் சுற்றிக் கடைகிற அளவிலும் -அற்றுப் போகாதபடியான மிடுக்கையும்
மலையோடு தேய்ப் புண்கையாலே வந்த ஒளியையும் உடைய வாஸூகியாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றிக்
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படியாக கடலைக் கடைந்து அருளினவன் சர்வர்க்கும் வேர்ப் பற்றான

தன் திறத்தில் நலிய வந்த மிடுக்கை யுடைய குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்ட
சர்வ சேஷி கிடீர் –

இத்தால் தம் விரோதியைப் போக்கித் தம்மை எழுதிக் கொண்ட படி சொல்லுகிறது –

(ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் -பெரிய திரு -5-7-4-
இப்பாசுரத்தால் தமது விரோதிகளை போக்கித் தம்மை தோற்பித்துக் கொண்டான் சர்வேஸ்வரன் என்கிறார்)

——————————————————————————————————-

ஸ்வர்க்கத்தில் தேவர்கள் இவனைப் பற்றி தங்கள் பிரயோஜனம் பெற்ற அளவன்றிக்கே -பூ லோகத்தில்
ராஜாக்களும் இவனைப் பற்றியே தம் தாம் பதம் பெற்றுப் போகா நின்றார்கள் கிடீர் -என்கிறார் –

கோவாகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே
மாவேகிச செல்கின்ற மன்னவரும் -பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் –69-

பதவுரை

கோ ஆகி–ராஜாதி ராஜர்களாய்
மா நிலம் காத்து–பரந்த பூ மண்டலத்தை அரசாட்சி புரிந்து
நம் கண் முகப்பே–நம் கண்ணெதிரே
மா ஏகி செல்கின்ற–குதிரை யேறித் திரிகின்ற
மன்னவரும்–அரசர்களும்,
செம் கமலப் பூ மேவும்–செந்தாமரை மலர் பொருந்தி யிருக்கப் பெற்ற
நாபியான்–திரு நாபியை யுடைய பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளுக்கு
ஏழ் பிறப்பும்–பல பல ஜன்மங்களிலே
தண் கமலம்–அழகிய தாமரைப் பூக்களை
ஏய்ந்தார்–ஸமர்ப்பித்தவர்களான
தமர்–பக்தர்களாவர்

சர்வத்துக்கும் ஸ்வாமி களாக முடி சூடி -பரப்பை யுடைத்தான பூமியை -சிறியதை பெரியது நலியாத படி ரக்ஷித்து
நம் கண் வட்டத்தில் குதிரை முதுகே படை வீடாக நடத்திச் செல்கின்ற ராஜாக்களும் -போக்யதை பொருந்தி இருந்துள்ள சிவந்த
தாமரைப் பூவைத் திரு நாபியிலே யுடையனாய் -(பூ புஷ்ப்பம் என்றும் இனிமை -போக்யதை என்றும் )

அத்தாலே சர்வ காரண பூதனான சர்வேஸ்வரனுடைய சிவந்த திருவடிகளிலே
ஜென்மங்கள் தோறும் குளிர்ந்த தாமரைப் பூ முதலான புஷபங்களைச் சாத்தி ஆராதித்த
ஆஸ்ரிதர் கிடீர் -ஏய்ந்தாருடைய (ப்ரஹ்மாதிகளுடைய )தமர் கிடீர் -என்னுதல் –
செங்கமலப் பூ மேவும் நாபியான் -என்னவுமாம் –

பூ வேகும் செங்கமல நாபியான் -என்று பாடமான போது -(எதுகைக்கு இது பொருந்தும் )
பூக்கள் தள்ளும் படியான (வெட்கப்பட்டு ஒதுங்கும் படி )செவ்வியை யுடைய
கமலத்தை நாபியிலே உடையவன் என்று பொருளாகக் கடவது –

முதலாம் திருவுருவம் மூன்று என்பர் ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா
நிகரிலகு காருருவா நின்னகத்தன்றே
புகரிலகு தாமரையின் பூ –-பெரிய திருவந்தாதி -72-

(ஏய்ந்தார் தமர் -இவனை ஆஸ்ரயித்தவர்களே சக்கரவர்த்திகள் ஆவார் என்றும்
ஏய்ந்தாருடைய தமர் என்று இவரை ஆஸ்ரயித்த ப்ரஹ்மாதிகளை ஆஸ்ரயித்தவர்களும் சக்கரவர்த்திகள் ஆவார் என்றும் கொள்ளலாம் -)

——————————————————————————————————–

இப்படி பிரயோஜனாந்தர பரராய் ஆஸ்ரயிக்கை அன்றிக்கே –
அநந்ய பிரயோஜனராய் தன்னை ஆஸ்ரயித்தவர்களுடைய திரு உள்ளத்தை உகந்து –
அருளின திருப்பதிகள் எல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டும் என்னும் படி
ஓக்க விரும்பி அவன் பரிமாறும் படியை அருளிச் செய்கிறார் –

(ஆழ்வார் திரு உள்ளத்துக்கு எட்டு திவ்ய தேச வாசமும் ஒவ்வாது -எட்டைச் சொன்னது அனைத்துக்கும் உப லக்ஷணம்
பக்தானாம் -அடியார் உள்ளமே -அவனுக்கு பரம புருஷார்த்தம்

சோழ நாட்டு இரண்டும் -தலை அடை மொழி -தொண்டை நாட்டு -தண் கால் –
தமர் உள்ளும் -திருவேங்கட யாத்திரை மநோ ரதம் -தண் பொருப்பு
வேலை -திருப்பாற்கடல்
தமர் உள்ளும் புண்டரீகர் போல்வார் சிந்திக்கும் திருக்கடல் மல்லை
திருக்கோவில் -இவர்கள் மூவரும்
மதிள் திருக்குடந்தை -இங்கு தானே சாரங்க பாணி -ஸூ ரஷிதம் -திராவிட ஆம்னாய பெருமாள் அன்றோ

இதிஹாச புராணம் -அத்தாலே அது முற்பட்டது -அச்சு எழுத்து குறைவான புராணம் முதலில் சொல்லாமல்
அப்யஹிதம் பொருள் உயர்ந்த ஒன்றை முதலில் சொல்ல வேண்டும்
அதே போல் இங்கும் -அர்த்த கௌரவத்தாலே
வந்தே கோவிந்த தாதவ் -பட்டர் எம்பாரைச் சொல்லி பின்பே கூரத்தாழ்வானை அருளிச் செய்தது போல் இங்கும்
தமர் உள்ளமே அவனுக்கு பரம புருஷார்த்தம் )

தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண் கால்
தமருள்ளும் தண் பொருப்பு வேலை -தமருள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏவல்ல வெந்தைக்கு இடம் –70-

பதவுரை

தமர் உள்ளம்–பக்தர்களுடைய ஹ்ருதயம்
தஞ்சை–தஞ்சை மா மணிக் கோயில்
தலை அரங்கம்–சிறந்ததான திருவரங்கம்
தண் கால்–திருத் தண் கால்
தமர் உள்ளும்–பக்தர்கள் தியானிக்கிற
தண் பொருப்பு–அழகிய திருமலை
வேலை–திருப்பாற்கடல்
தமர் உள்ளம்–பக்தர்கள் சிந்திக்கிற
மா மல்லை–திருக்கடன்மல்லை
கோவல்–திருக்கோவலூர்
மதிள் குடந்தை–திருமதிள்களோடு கூடிய திருக்குடந்தை (ஆகிய இத்தலங்களெல்லாம்)
ஏவல்ல எந்தைக்கு இடம் என்பர்–எதிரிகளை முடிக்க வல்லவனான எம்பெருமானுக்கு -பெருமாள் கோதண்ட பாணி சக்ரவர்த்தி திரு மகன் –இருப்பிட மென்பர்.

மேல் சொல்லுகிற திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதம உத்தேசியமான ஆஸ்ரிதருடைய ஹிருத்யங்கள் —
தஞ்சை மா மாணிக் கோயில் -திருப்பதிகள் எல்லா வற்றிலும் பிரதானமான பரம பதத்தோடே கூட என்னலாம் படியான கோவில்
திருத் தண் கால் -ஸ்ரீ வைஷ்ணவர் தங்களுக்கு சர்வ ஸ்வம்மாக அனுசந்தித்து இருக்கும் ஸ்ரமஹரமான திருமலை
எல்லா வற்றுக்கும் அடியான திருப் பாற் கடல் -ஆஸ்ரிதரான புண்டரீகாதிகள் தங்களுக்கு உத்தேச்யமாக அனுசந்தித்து இருக்கும்
தறைக் கிடைக் கிடக்கும் திருக் கடல் மல்லை -எங்கள் மூவரோடும் ஓக்க நெருங்கின திருக் கோவலூர்
அரணான மதில்களை யுடைத்தாய் திரு மழிசைப் பிரான் உகந்த திருக் குடந்தை –

ஆகிற இவ்வோ திவ்ய தேசங்கள் எல்லாம்
பிரதி பக்ஷத்தை எய்து விழ விட வல்ல என் ஸ்வாமி யான தசாரதாத் மஜனுக்கு வாசஸ் ஸ்தானமாக
அறிவுடையார் சொல்லா நின்றார்கள்-

ஏ வல்ல வெந்தை-
எய்க்கைக்கு வல்லனான என் ஸ்வாமி -என்றபடி –

(தமர் உள்ளம் -அப்யர் ஹிதம் பூர்வம் -சிறந்த ஒன்றை முதலில் சொல்வதே நியாயம் –
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் -என்றும்
நெஞ்சமே நீள் நகர் -திருவாய் -3-8-2-என்கிறபடியே
பெரும் கோயிலை முதலில் சொல்லி
வெள்ளத்து இளம் கோயில் -இரண்டாம் திரு -54-என்றபடியே -ஆராமம் சூழ்ந்த அரங்கம் போன்ற திவ்ய தேசங்களாக இளம் கோயில்கள் எல்லாம்
பிரதிபக்ஷத்தை எய்த்து விழ விட வல்ல தசரதாத்மஜனுக்கு வாசஸ்தானம் என்பர் அறிவுடையோர் என்கிறார்
ஏ வல்ல எந்தை -எய்தற்கு வல்லனான என் ஸ்வாமி என்றபடி -)

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading