இனி இனி என்று இருபது கால் அருளிய நம்மாழ்வார் –

உற்றாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த நச்சுப் பொய்கை ஆகாமைக்கு
பிரபந்தம் தலைக் கட்ட
வேர் சூடுவார் மண் பற்றுப் போலே
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்பிடும் ஆர்த்தி
அதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம்-ஆசார்ய ஹிருதயம் -229-

 

——————————————————————————————————————-

திரு விருத்தம் –

1-தாமான தன்மையில் அருளிச் செய்தது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை உயிரளிப்பான்
எண்ணின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மேய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

2-பிரிவாற்றாத் தலைவி இருளுக்கும் வாடைக்கும் இரங்குதல்-
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவியப்
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவரார் எனை யூழி களீர்வனவே –13–

3-தலைமகனது தாரில் ஈடுபட்ட தலைவி அற்றது கூறுதல் –
எங்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேரமரர்
தங்கோனுடைய தங்கோனும்பரெல்லாயவர்க்கும் தங்கோன்
நங்கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே–25–

——————————————————————————————————————————————————————

திருவாய்மொழி —

4-முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
வென் நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே –3-2-1-
5-வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பான் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2-

6-கிற்பன் கில்லேன் என்றிலேன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

7-கோலமே தாமரைக் கண்ணது ஒரஞ்சன
நீலமே நின்று எனதாவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதான முன்னிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வனே –3-8-8-

8-கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த
புள்வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–3-8-9-

9–மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே –4-9-6

10-நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் ஆகிலும் இனி யுன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை யம்மானே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்று இருந்த எந்தாய் உனக்கு மிகை யல்லேன் அங்கே –5-7-1-

11-வாராவருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக் குடந்தை
ஊரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-

12-ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப்பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-

13-அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஓன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே –6-9-8-

14-ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –5-9-9-

15-எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே –6-10-6-

16-என்றே என்னை உன்னேரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே –7-3-8-

17-கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10-

18-எவை கொல் அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகழாவது ஓர் நாள் அறியேனே –9-8-3-

19-முனியே நான் முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-

20-எனக்காரா வமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என்னன்பேயோ -10-10-6-

—————————————————————————————————————————————————

அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading