ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த -ஸ்ரீ ப்ரபன்ன பரித்ராணம்–

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

————————————————————————————————————————————————————————————————————————

முமுஷூவாய் -மோஷார்த்தமாக-சர்வேஸ்வரனைப் -பற்றி இருக்குமவனுக்கு
அநந்ய கதித்வமும் -ஆகிஞ்சன்யமும் வேணும் –
அநந்ய கதித்வம் ஆவது –களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -திருவாய் -5-8-8-என்கிறபடியே
சர்வேஸ்வரனை ஒழிய வேறு ஒரு ரஷகர் இல்லை என்று இருக்கை-
ப்ராதாக்கள் புத்ரர்கள் மாதா பிதாக்கள் ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரஷகராகக் குறை என் என்னில்
ப்ராதாக்கள் ரஷகர் அல்லர் -வாலி பக்கலிலும் -ராவணன் பக்கலிலும் காணலாம் –
புத்ரர்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் ருத்ரன் பக்கலிலும் கம்சன் பக்கலிலும் காணலாம் —
மாதா பிதாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் கைகேயி பக்கலிலும் ஹிரண்யன் பக்கலிலும் காணலாம் –
மாதா பிதாக்கள் யௌவன விரோதி என்று உபேஷித்தல்-ஷாம காலம் வந்தவாறே ஆள்பார்த்து தூற்றிலே பொகடுதல்-
விலை கூறி விற்றல் -ஆபத்து வந்தவாறே நெகிழ நினைத்தல்
அர்த்த ஷேத்ராதி களுக்காக எதிரிட்டுக் கொல்லுதல்-முடியும் அவஸ்தையிலே
சோர்வினால் பொருள் வைத்தது யுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து -பெரியாழ்வார் -4-5-3-என்கிறபடியே
ஈஸ்வரனை ஸ்மரித்துக் கரை மரம் சேர ஒட்டாதபடி அலைத்தல் முடித்தல் செய்யா நிற்பர்கள்-
ஸ்திரீகளுக்கு பர்த்தாக்கள் ரஷகர் அல்லர் என்னும் இடம் தர்ம புத்ராதிகள் பக்கலிலும் நளன் பக்கலிலும் காணலாம் –
இவர்கள் ரஷகர் அல்லரோ யாகிலும் நாட்டாருக்குக் கண் காட்டியாய்ப் போருகிறசந்திர ஆதித்யர்கள் ரஷகராகக் குறை என் -என்னில்
அவர்களும் ஈஸ்வர ஆஜ்ஞைக்கு அஞ்சி தாங்கள் நினைத்த படி சஞ்சரிக்கப் பெறாதே
நாழிகை கூறிட்டு -பெரியாழ்வார் -4-1-8-உதிப்பது அச்தமிப்பதாய்க் கொண்டு போருகையாலும்
ஹிரண்ய ராவணாதிகள் கையிலே அகப்பட்டு அவர்களுக்கு இழி தொழில் செய்து திரிவார் சிலராகையாலும் ரஷகராக மாட்டார்கள்
த்ரை லோக்யத்துக்கும் பாலகனான இந்த்ரனும் எப்போதோ நம்பதம் நழுவப் புகுகிறது என்று அஞ்சி சபோபஹதனாய்
இந்த்ரஜித்தின் கையிலே அகப்பட்டுக் கட்டுண்டு
மகாபலி போல்வார் கையிலே ஐஸ்வர் யத்தைப்  பறி கொடுத்து
கண்ணும் கண்ணீருமாய் கழுத்தும் கப்படமுமாய்க் -எளிவரவைக் காட்டும் வஸ்த்ரம் -கொண்டு திரிவான் ஒருவன் ஆகையாலே அவனும் ரஷகனாக மாட்டான் –
ப்ரஹ்மாவும் -மது கைடபர்கள் கையிலே அகப்பட்டு வேதங்களைப் பறி கொடுத்து -கண் இழந்தேன் -தனம் இழந்தேன் -என்று நிலம் துழாவு கையாலும்
ருத்ரன் கையிலே தலை அறுப்பு உண்கையாலும் ரஷகன் ஆகமாட்டான் –
ருத்ரனும் -சகல பிராணிகளையும் சம்ஹரிக்கையே தொழிலாக யுடையனாய்
விடாயர் முகத்திலே நெருப்பைச் சொரிந்தால் போலே இருக்கத்   தழல் நிற வண்ணனாய்-பெரிய திரு -6-1-3- தன்னை ஆஸ்ரயித்தவர்களை
அறுத்துத் தா பொரித்துத் தா –என்று கொடும் தொழிலைச் செய்வித்துக் கொள்ளுகையாலும்
தன்னை  ஆஸ்ரயித்த வாணனை -தலையிலே பூ வாடாதே நோக்குகிறேன் -என்று பிரதிஜ்ஞை பண்ணி
தன்னைத் தொழுத கைகளை கள்ளிக் காடு சீய்த்தால் போல்சீய்க்கக் கண்டு
உயிர் யுண்டாகில் உப்பு மாறி யுண்ணலாம் என்று நெற்றியிலே கண்ணைப் புதைத்துக் கொண்டு நழுவினன்   ஆகையாலும்
லோக குருவாய் தனக்குப் பிதாவான ப்ரஹ்மாவின் தலையைத் திருகிப் பாதகியாய் கூறு செய்த ஊரிலே குறும்பு செய்து கைத்தளையுமாய் கொண்டு
திரிவாரைப் போலே கையும் கபாலமுமாய் திறந்து கிடந்த வாசல்கள் தோறும் புக்கு தன்னை வெளியிட்டுக் கொண்டு திருவான் ஒருவன் ஆகையாலும் ரஷகன் ஆக மாட்டான் –
இனி அர்த்தம் ஆமோ என்று நிரூபித்தால் -கள்ளர் கொள்ளுதல் -காமம் கொள்ளுதல் -கோமுற்றார் கொள்ளுதல் –
ஜ்ஞாதி கொள்ளுதல் -வியாதி கொள்ளுதல் -பிறரோடு எதிரிட்டு விஷ பஷணம் பண்ணி தன்னைத் தானே முடித்துக் கொள்ளும்படி
பண்ணுதல் செய்கையாலே அர்த்தமும் ரஷகம் ஆக மாட்டாது –

ஈஸ்வரன் -மாதாபிதாக்கள் கைவிட்ட அவஸ்தையிலும் -பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றான் -பெரிய திருமொழி -8-9-7-என்றபடி
தன்னுருக் கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகம் காட்டியும்
இன் சொல்லுச் சொல்லியும் ப்ராதாக்களும் பர்த்தாக்களும் நெகிழ நின்ற வன்று தான் ஏறிட்டுக் கொண்டு
கழுத்திலே ஓலை கட்டித் தூது போயும் புருவம் நெரித்த உடத்திலே தேரை நடத்தியும் மார்விலே அம்பேற்றும்
சாவாமல் நோக்கியும் செத்தாரை மீட்டும்  நாராயணத்வ பிரயுக்தமான உதரத் தரிப்பாலே அகவையிலே நின்று
சத்தையை நோக்கிக் கொண்டு போருகையாலே இவனே எல்லார்க்கும் ரஷகன் –

இனி -ஆகிஞ்சன்யம் ஆவது -கர்ம ஜ்ஞான பக்திகளிலும்
அவற்றுக்கு ஹேதுவான ஆத்ம குணங்களிலும் -அந்வயம் இன்றிக்கே
அவற்றுக்கு விபரீதங்களான வற்றாலே தான் பரிபூர்ணனாய் இருக்கிற இருப்பையும்
தன்னுடைய ஸ்வரூபம் சர்வ பிரகாரத்தாலும் ஈஸ்வரனுக்கு அத்யந்த பரதந்த்ரமாய் இருக்கிற இருப்பையும் அனுசந்தித்து
நம்  கார்யத்துக்கு நாம் கடவோம் அல்லோம் -என்று இருக்கை-
இவை இரண்டையும்   யுடையனாய் ஈஸ்வரனையே உபாயமாகப் பற்றுகையாலே நிர்ப்பரனாய் இருக்குமவனுக்கு
சரீர அவசான காலத்திலேயே ப்ராப்தி அணித்த வாறே -ந யாமி -என்று அருளிச் செய்த படியே –
ஈஸ்வரன் தானே சரக்காளாய் வந்து -அர்ச்சிராதி மார்க்கத்தாலே பரம பதத்தேறக் கொண்டு போய்
நித்ய முக்தரோடே ஒரு கோவையாக்கி நித்ய கைங்கர்யத்தையும் கொடுத்து அருளும் —

ஸ்ரீ ப்ரபன்ன பரித்ராணம் முற்றிற்று –

——————————————————————————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading