பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-3-கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்-

கீழே இரண்டு  திரு மொழிகள் திருத் தாயார் பாசுரமாக சென்றது –
இத் திருமொழி மகள் பாசுரமாக செல்கிறது -கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொல்லக் கேட்டு
உணர்ந்து தனது கையிலே வளைகளை  காணாமல் வளை இழந்தனே என்று
ஒரு கால் சொன்னது போலே ஒன்பதின் கால் சொல்லி கதறுகின்றாள் –

கீழ் பிறந்த  மோஹமானது போய் அல்பம் அறிவு பிறந்து-அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகி தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக அத்தாலே இரவல் வாயாலே -தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –
சம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாமையால் பிரிவாற்றாமைக்கு   பரக்கப் பாசுரம் இடுகிற  படி –

————————————————–

கரையெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரையெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –8-3-1-

கரை எடுத்த சுரி சங்கும் -கோஷத்தை யுடைத்தாய் வளைந்த சங்குகளையும் –
காவேரி நன் நதி பாயும் கணபுரம் -சங்குகளையும் பவளக் கொடியையும் திரட்டிக் கொண்டு வருகின்றதாம்
பசுக்களை ரஷித்த கோபாலன் நம்மை கை விட மாட்டான் என்று அவன் பக்கல் ஆசை வைத்ததற்கு பலன் வளைகளை இழந்தது  தான்-

—————————————————-

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளை –8-3-2-

அரி விரவும் முகில் கணத்தால்-கறுப்பானது கலந்து பரவப் பெற்ற மேகக் கூட்டங்களாலும்
சிறு தறு கண்  கரி -சிறுத்து வட்டணித்த கண்களை யுடைய குவலயா பீடம் –
வடிவிலே பெருமைக்கு ஈடாக பெருத்து இருக்கை அன்றிக்கே ஜாதி உசிதமாம் படி சிறுத்து
க்ரௌர்யம் எல்லாம் தோற்றும்படியாய் பார்க்கிற கண்களை உடைத்தாய் இருந்துள்ள குவலயா பீடம் -என்றவாறு
தறுகண்மை -அஞ்சாமைக்கு என்று கொண்ட ஒரு சொல்லாய் -செறு-என்று பாடம் கொள்ள வேண்டும்
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன –நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
குவலயா பீடம் மருப்பு ஒசித்த அந்த  மிடுக்கு இன்றைக்கும் விளங்கும் படி நித்ய சந்நிதி
பண்ணி அருளுபவன் அன்றோ என்று ஆசை வைத்தேன் -நன்றாக வளைகள் இழக்கும் பலன் பெற்றேனே-

——————————————————

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

ரிஷபங்கள் ஏழையும் அடக்கி நப்பின்னை
சந்த்ரனுடைய ஷயரோகம் தீர்த்து அருளியவனும் இவனே
இன்னும் இது போன்ற அனுக்ரஹம் செய்து அருள இங்கே நித்ய சந்நிதி பண்ணி அருளும்
இவன் இடம் ஆசை கொண்டதுக்கே நான் பெற்ற பலன் -வளையல்களை இழந்ததே-

————————————————————–

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும்
புணர் மருதம் இற   நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே –8-3-4-

கட்டுண்டு  அசக்தனாய் இருந்து சௌலப்யம் காட்டி அருளினவன்
அப்படி கட்டுண்டு தளர் நடை இடும் பருவத்திலும் சகடாசுரர்களை-பொய் மாய மருதமான அசுரரை -என்றபடி  முடித்த வலிமை என்னே
என்று ஈடுபட்டு இருந்ததே காரணமாக வளையல்களை இழந்தேனே
மணமருவு  தோளாய்ச்சி -சர்வ கந்த வஸ்து அநவரதம் தோளைக் கட்டிக் கொண்டு கிடப்பான் இறே-

—————————————————————

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-

தயிர் களவு கண்டு மறைக்கத் தெரியாமல் முகத்திலும் உடம்பிலும் தடவிக் கொண்ட மௌக்யத்துக்க்கு தோற்று வளை இழந்தேன்
உண்ட சுவட்டை நாவினால் நக்கி மறைத்துக் கொள்ளலாம்படி இருக்க களவு நன்கு வெளிப்படும் படி
தடவிக் கொண்டது பேதமையின் கார்யம் அன்றோ
என்று இக் குணத்தில் ஈடுபட்டு உள் குழைந்து வளை இழந்தாள் பரகால நாயகி –

—————————————

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே–8-3-6-

ஆஸ்ரிதர்களைப் பரிந்து காத்து அருளுபவன் அன்றோ -இதற்காக அன்றோ இங்கே சந்நிதி பண்ணி அருளுவது
இவன் மேல் ஈடுபட்டு  ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் போலே கிருபைக்கு ஆளாகாமல் வளை இழந்தேன் காண்மின் –
பவளங்கள் மேட்டு நிலங்களில் மூடப் படர்ந்து நெருப்பு போலே ஜ்வலிக்கின்றதாம் திருக் கண்ணபுரத்தில்-

————————————–

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண்திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே -8-3-7-

சகல பதார்த்தங்களையும் பிரளயம் கொள்ளாத படி திரு வயிற்றிலே வைத்து காத்து அருளினவன் இவன் அன்றோ
இப்படி ஆபத்துக்கு உதவுபவன் என்று நம்பி ஆசை வைத்து வளையல்கள் இழந்து நிற்கிறேன்
எழு கடலும் –என்ற பாடமே முந்துறக் கொள்ளப் பட்டது
எழு சுடரும் -பாடாந்தரம் -இதுவே எங்கும் வழங்கி வருகிறது-
எழு கடலும்-எழு வகைப் பட்ட கடல்களையும்
எழு சுடரும் -என்ற பாடமான போது எழா நிற்கிற ஆதித்யாதிகளையும் நினைத்தது ஆகிறது –

———————————————————

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

ஆர்த்தருடைய கூக்குரல் கேட்டு கடுக வந்து ரஷிக்க ஷீராப்தி நாதனாக  கண் வளர்ந்து அருளுபவன் இவனே
திரு நாபி கமலம் கொண்டு சிருஷ்டித்து காத்து அருளும் பெருமான் நம்மைக் கை விடான் என்று
நம்பி ஆசை வைத்து பலனாக வளையல்கள் இழந்தேன்-

————————–

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே –8-3-9-

பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்யப் பெற்ற ஸ்ரீ நிறைந்த மார்பன்
இங்கே வந்து சந்நிஹிதன் ஆனதால் ஸூலபன் ஆனவன்
சஹாச்ர நாமங்களால் ப்ரதிபாதிக்கப் பட்ட திவ்ய  குண சேஷ்டிதங்கள் யுடையவன்
நித்ய அனுபவ ஹர்ஷத்தால் ஆயிரம் வாய்களாகப் பணைக்கப் பட்ட திரு அநந்த ஆழ்வான் மீது சயனித்து அருளுபவன்
பெருமை யுடையார் என்ற பெயர் பெற்ற எல்லாரிலும் பெருமை பெற்றவன்
பெண்ணீர்மை  யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே -நாச்சியார் -8-1-என்றதை கணிசியாமல்
தனது பெருமைகளுக்கு பொருந்தாத படி என் வளைகளை கவர்ந்தான் என்கிறாள்
பெய் வளை-அணிந்து கொண்டு இருந்தவளை
பேராளர் பெருமான் -பேராளர் -மகான்கள் -அவர்களுக்கும் மஹான் இவன் என்றபடி –

————————–

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே -8-3-10-

ஸ்ரீ வாமநாவதார சௌலப்ய  சௌசீல்ய சௌந்தர்யாதிகளை  பிரகாசிப்பித்துக் கொண்டு
இங்கே நித்ய வாஸம் செய்து அருளி இருக்கும்
ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் விஷயமாக அருளிச் செய்த இத் திரு மொழியை
ஓதி யுணருமவர்கள்-சர்வ பாப விநிர்முக்தர் ஆவார்-

———————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading