பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை -8-1-சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்-

கீழே இனிய பாசுரங்களால் அவனை அனுபவித்தார்

நினைத்த படியே -பாஹ்ய சம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமையாலே தளர்ந்து -திருத் தாயார் பாசுரமாக இத் திரு மொழி செல்லுகிறது –
திருக்கண்ண புரத்தானைக் கண்டு அதன்  அடியாக விளைந்து இருக்க வேண்டும் என்று வினவ வந்தார் இடம் சொல்கிறாள்-

திருக் கண்ணபுரத்தம்மான் யுடைய வைலஷண்யமும் -அது அடியாக ஆழ்வாருக்கு பிறந்த வைலஷண்யமும் காட்டும் இத் திருமொழி –

———————————————————–

சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு  ஒண் சங்கம்  என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்போட அன்போடு இருகின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்தம்மானை கண்டாள் கொலோ 8-1-1-

திவ்ய பூஷணங்கள் போலே திவ்ய ஆயுதங்கள் தோற்ற -நாயகி சொன்னதை தாயார் மீண்டும் சொல்கிறாள் –
அவன் மேல் அன்பு யுண்டான பின்பு பசலை நிறம் யுண்டாகவும் ஆகுமே
கலை இலங்கு மொழியாளர் -சாஸ்திரம் இவர்கள் பேச்சிலே விளங்கும்-

——————————————————

செருவரை முன்னா சறுத்த சிலையன்றோ கைத்தலத்து என்கின்றாளால்
பொருவரை முன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின்னொப்பார் ஒப்பிலா வென்னப்பா வென்கின்றாளால்
கருவரை போல் நின்றானைக் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ  –8-1-2-

ஆசறுத்த -சீக்கிரமாக தொலைத்த –
சம்ஸ்லேஷத்துக்கு பிரதி பந்தகங்களை தொலைக்க பரிகரங்கள் கொண்டு இருந்தும் விஸ்லேஷப் படவோ –
அரையர் ஐதிகம்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பிலா என்னப்பா என்கின்றாள் –
மின்னப் பொன் மதிள் சூழ் இரு விண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பாரில்லா அப்பன் -திருவாய் மொழி
தாமரை போல் மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை -என்றும்
கணபுரத்து பொன் மலை போல் நின்றவன் -என்றும் பெரிய திரு மடல் -பொன் மலையாக இருவரையும் பேசிய நயம் –

———————————————————-

துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-3-

சேஷித்வ ஸூசகமான திருத் துழாய் மாலை அணிந்துள்ளான்
திரு முக மண்டல ஸோபைக்கு கை விளக்கு -மணி மகர குண்டலங்கள்
கன்னி மா மதிள் புடை சூழ்  கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –
சேமித்து வைத்த வஸ்துவை இவள் ஒருத்தியுமே அறிந்து கொண்டாள் போலே இருந்தது –
உள்ளிருக்கிற வஸ்துவின் சீர்மைக்குத் தக்கபடி அரணாகப் போரும்படி இருப்பதாய்
ஒருவராலும் அழிக்க ஒண்ணாத   படியான பெருமையை உடைய மதிளாலே
சூழப் பட்ட திருக் கண்ண புரததிலே வந்து சந்நிஹிதனானவனைக் கண்டாள் போலே இருந்தது –

—————————————————————–

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார்வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-4-

ஹிதம் சொல்லி விலக்கப் பார்க்கும் நீங்கள் அவனுடைய அழகிய பவளம் போன்ற திரு அதரத்தை
ஒரு கால் சேவித்த பின் சொல்மின்
அது கண்டார்க்கு விட்டுப் போகலாய் இருந்ததோ
நான் புரள வேண்டிய திரு மார்பிலே வண்டுகள் புரளுகின்றனவே –
அவற்றுன் பாக்கியம் என்னே  -என்னுடைய பாபம் என்னே –

————————————————-

அடித் தலமும் தாமரையே அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித் தலமும் பொற் பூணும்  என் நெஞ்சத்து உள்ளகலாது என்கின்றாளால்
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள்  என்கின்றாளால்
கடிக்கமலம் கள்ளுகுக்கும்கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-5-

தாமரைப் பூக்கள் அவயவங்கள் -திரு அபிஷேகமும் அதில் சாத்தின திரு ஆபரணங்களும்
நெஞ்சை விட்டு அகலாமல் உள்ளனவே
புருஷகார பூதை நித்ய வாஸம் பண்ணி இருக்கவும் நான் இழக்கவோ
பிராட்டி மேல் விழுந்து நித்ய அனுபவம் பண்ணும் படியான பரம ரசிகன் அன்றோ
அவனையோ நான் இழப்பது –

—————————————————–

பேராயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏரார் கன மகரக் குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீரார் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
காரார் வயல்மருவும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-6-

என் ஒருத்தியைக் கை விட்டு பெரியோம் என்ற திரு நாமம் இழக்கப் போகிறானே
அவனது வடிவு அழகு நம்மை மறந்து பிழைக்க விட வில்லையே
வெறும் புறத்திலே  ஆலத்தி வழிக்க வேண்டும்படியான திரு மேனி நீர் கொண்டு எழுந்த காள மேகமோ பச்சை மலையோ –

————————————————————————————————

செவ்வரத்த உடை ஆடை யதன் மேலோர் சிவ்ளிகைக் கச்சென்கின்றாளால்
அவ்வரத்த வடியிணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கைவளர்க்கும் அழலாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-7-

தாமரையே திரு அவயவங்கள் என்று மீண்டும் சொல்லி
திரு மேனி விஷயத்தில் சங்கை -மை வளர்க்கும் மணி யுருவம் மரகதமோ மழை முகிலோ –
அவனது உடை வாய்ப்பிலே தோற்று வாய் வெருவுகிறாள்
இங்கு உள்ளார் நித்ய அக்னி ஹோத்ரிகள் –

———————————————–

கொற்றப் புள் ஓன்று ஏறி மன்றூடே  வருகின்றான் என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரர்க்கும் இந்திரனே யொக்குமால் என்கின்றாளால்
பெற்றக்கால் அவனாகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-8-

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி எனது தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர் -நம் ஆழ்வாருக்கு –
இங்கே இவருக்கு திரு வீதியூடே கருடவாஹன   சேவை சாதித்து அருளுகிறான்
தாஹித்தவர்கள் இருந்த இடத்திலே சாய்கரம் கொண்டு சாய்ப்பாரைப் போலே வீதியூடே வந்து சேவை சாதிக்கிறான்
வெற்றிப் போர் -வெறும் போர் பாட பேதங்கள்
இந்திரர்க்கும்  இந்த்ரன் ஒக்கும்-வ்ருத்தாசுர வதம் பின்பு மகேந்தரன் பேர் பெற்றானே
பெண்ணாய் பிறந்தவர்கள் அணைந்து வாழ அன்றோ அவனுக்கு திரு மார்பு-

—————————————————

வண்டமரும் வனமாலை மணி முடி மேல் மண நாறும் என்கின்றாளால்
உண்டிவர் பால் அன்பு எனக்கு என்று ஒரு காலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ –8-1-9-

பாவனா முதிர்ச்சியால் பண்டு இவரை எங்கேயோ பார்த்தது போலே உள்ளதே எங்கே என்கிறாள் –
பண்டிவரைக் கண்டறிவது எவ் ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்-
முதல் நாள் கண்டால் ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தாலும் முகத்தில் தண்ணளி யாலும் ஆக
முன்பே கண்டறியும் முகமாய் இருந்ததீ   – எவ் ஊரில் தான் கண்டது -என்னும்படி இருக்கும் –
சிர பரிசயம் பிறந்தால் பின்பு -முன்பு ஓர் இடத்திலும் இவனைக் கண்டு அறியோம் – யென்னும்படியாய் இருக்கும் –
நித்ய அபூர்வமான விஷயம் -என்றபடி
சொன்ன இரண்டு அர்த்தத்தையும் அது  காட்டுமோ –
பயில்கின்றாளால் -என்றது கண்டாயே – எற்றைக்கும் இதுவே வார்த்தை அன்றோ – இப்படியாக வேண்டாவோ -என்று ஜீயர் –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமான விஷயம் என்பதால்
கண்டவர் தமது மனத்தை தாமே வழங்கும்படி ஆகர்ஷகத்வம் யுடையவன்-

—————————————————————-

மாவளரும் மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
காவளரும் கடி பொழில் சூழ் கண்ண புரத் தம்மானைக் கலியன் சொன்ன
பாவளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே –8-1-10-

திரு நாட்டை ஆள வல்லார்  ஆவார் -பயன் சொல்லி நிகமிக்கிறார்
பூவளரும் கற்பகம் சேர் பொன்னுலகில் மன்னவராய் புகழ் தக்கோரே  –
உபரிதன லோகங்களுக்கு அடைய
கற்பகத்தை சிறப்பாகச் சொல்லக் கடவர்கள் –
பரமபதத்தில் -ஆண்மின்கள் -என்றபடியே
தாங்களே நிர்வாஹகராய் -இவ்வருக்கு உள்ளார் அடங்கலும் சாத்த்யர் ஆவார்கள் –
பொன்னுலகில் மன்னராகி -வான் இளவரசு வைகுண்ட குட்டன் வாசுதேவன் என்றபடியே
நித்ய முக்தர்களை தலைவராக்கி தான் இளவராசாய் இருப்பான்-

————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading