அவதாரிகை –
கீழில் திருவந்தாதியில்
ஆழ்வார் உபய விபூதி உக்தனுடைய சேஷித்வத்தை பிரகாசித்தாராய் நின்றார்
அது போய் –
இவருடைய சேஷத்வ ஜ்ஞானத்துக்கு உறுப்பாய் –
அந்த ஜ்ஞானம் தான் போய் –பக்தி ரூபா பன்னமாய்த்து –
அது ஜ்ஞான விஷயம் -இது பக்தி விஷயம் –
பக்தியாலே வழிந்து புறப்பட்ட சொல்லாய் இருக்கிறது –
அவர்க்குப் பக்தி இல்லையோ என்னில் -உண்டு
கார்ய காரண ரூபமான அவஸ்தா பேதமே உள்ளது –
உபய விபூதியையும் அனுசந்தித்துப் பிறந்த ஜ்ஞானம் அவரது –
அது பக்வமாய் -பக்தி ரூபாபன்ன படி இவரது
கீழில் திருவந்தாதியில்
அவர் விபூதி விஷயமாக அனுசந்தித்து -பரப்படங்கலும்-
இவர்
தம் மனசின் யுள்ளே அனுசந்தித்து
அந்த பக்தி பாரவச்யத்தாலே பிறந்த பாசுரமானது ஒரு பிரபந்தமாய்க் கொண்டு தலைக் கட்டிற்றாய் இருக்கிறது –
கீழில் திருவந்தாதியில்
ஜகத்துக்கு ஈஸ்வரன் சேஷியாய்-ஜகத்து அவனுக்கு சேஷமாய் இருக்கும் என்று
பரத்வ ஜ்ஞானத்தைச் சொல்லிற்று –
அந்த பரத்வ ஜ்ஞானம் தானே ஸ்வ ப்ராப்த்யுபாயம் என்றது –
உபாயம் வேறு ஒன்றாய் உபேயமும் வேறு ஒன்றோ காண்கிறது லோகத்தில் –
இப்படியாகக் கூடுமோ என்னில்
சர்வ சக்தி ஆகையினாலே -தானே உபாயமும் உபேயமும் –
நிமித்த காரணமும் சஹ காரி காரணமும் வெவ் வேறாக இருக்கக் காணா நிற்கச் செய்தே
த்ரிவித காரணமும் அவனேயாய் இரா நின்றானே -சர்வ சக்தி யாகையாலே -அப்படியே இதுவும் கூடும்
அவன் ஜகத் அந்தர்யாமியாய் -தாமும் ஜகததர்ப்பூதர் -ஆகையாலே
தாமும் சேஷ பூதராய்த் தமக்கு உபாயம் அவனேயாய் இருக்கிறது-
சாமான்யத்தில் உள்ளது விசேஷத்திலும் உண்டாய் இருக்குமே
அகில ஜகத் ஸ்வாமின் -என்றால்
அஸ்மின் ஸ்வாமின் -என்னக் கடவது இறே-
சாதனம் தம் தலையில் இன்றியிலே அவனே யாகையாலே
இனி ஒரு பாகம் பிறக்கும் அளவும் பார்த்து இருக்க வேண்டாவோ
குருகைக் காவலப்பன் பக்கலிலே பரமேஸ்வர மங்கலத்து ஆண்டான் சென்று –
ஜகத்துக்கும் ஈஸ்வரனுக்கும் சம்பந்தம் இருக்கிறபடி என்-என்று கேட்க –
எஜ் ஜகத்துக்கும் எவ் வீஸ்வரனுக்கும்-என்று கேட்கத் –
த்ருப்தனாய் போனான் –
அதாகிறது –
ஆத்மாவையும் ஈஸ்வரன் என்று பிரமாணம் சொல்லக் கடவது –
சரீரம் ஆத்மாவுக்கு சேஷமானாப் போலே
ஜகத்தும் ஈஸ்வரனைக் குறித்து சரீரமாய் இருக்கக் கடவது –
அவர் -பொய்கை ஆழ்வார் -பதிம் விச்வச்ய-என்றார் –
இவருக்கும் ஒக்குமே இது -அவ்வர்த்தத்தையே அனுபவிக்கிறார் –
ஏக கர்த்ருகமாக இருக்க வேண்டாவோ -பின்ன கர்த்ருகமாய் அத்திருவந்தாதி ஒருத்தரதுமாய்
இத்திருவந்தாதி ஒருத்தரதுமாய் அன்றோ இருக்கிறது
அதினுடைய அநந்தரம் பிறந்த அவஸ்தையைச் சொல்லுவான் என் என்னில்
த்ரிமுனி வ்யாகரனமும் மூவர் கூடச் செய்யச் செய்தே ஏக சாஸ்த்ரமாய்த்து இறே ப்ரேமேயைக்யத்தாலே –
ஜைமினியும் -வியாசனும் கூட மீமாம்சையைப் பன்னிரண்டு அத்யாயம்
ஜைமினியும் வியாசன் நாலு அத்யாயமுமாய்ச் செய்யச் செய்தே
பூர்வ மீமாம்சையும் உத்தர மீமாம்சையையும் ப்ரேமேயைக் யத்தாலே
ஏக சாஸ்த்ரமாய்த்து இறே –
அப்படியேயாய் இருக்கிறது –
அதில்–விசித்திர ஜ்ஞான சக்தி யுக்தன் -ஜகத் காரண பூதன் -அவனாகிறான் –
சங்க சக்ர கதாதரன் -என்றது இறே –
இதுவும் பக்தி யாகிறது -முன்பு உண்டாய் இருந்தது ஓன்று இன்றியே இருக்கையாலே
இப்போது உண்டாக்கின படியாலே சொல்லுகிறது –
அவனே உபாயமான படியாலே பக்தி உத்பாதகனும் அவனேயாய் இருக்கிறபடி சொல்லுகிறது –
ஜகத் வைசித்ரியினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னைத் திருத்தின படி என்று அனுசந்திக்கிறார் –
அவர்க்கு உள்ளது பரத்வ ஜ்ஞானமோ என்னில் –
எல்லார்க்கும் எல்லாம் உண்டு –
அவர்கள் பரிக்ரஹித்த அம்சங்களைச் சொல்லுகிறது
ஆழ்வார்கள் ஒருவருக்கு ஒருத்தர் பாவஜ்ஞராய் பரிமாறுகையாலே ஏக கண்டராய் இறே இருப்பது –
திரு வநந்த ஆழ்வானுக்கு மிடறு ஒன்றாய் தலை பலவானாப் போலே –
(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )
————————————————————————–
ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான
தம்முடைய சேஷத்வத்தையும்-அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது
அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது –
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–1-
பதவுரை
ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.
அன்பே தகளி ஆ–(பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப் பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.
அன்பே தகளியா-
வையம் தகளியா -என்று லோகப் பரப்பை அடையத் தம்முடைய பக்தியாலே அனுசந்தித்து –
பக்தியைத் தகளியாகக் கொள்ளுகிறார் –
அதாவது –
வையம் தகளி -கேட்கையாலே எம்பெருமான் பக்கல் பிறந்த ச்நேஹமே தகளியாக –
அன்பு ஆகிறது
பக்தி -தைல வர்த்திகளுக்கு ஒரு ஆதாரம் வேணும் இறே
ஒன்றால் அழியக் கடவது அல்லாத பக்தியானது போய்-ஒரு தகளியாய்ப் புக்கது -என்றபடி ஆகிறது –
மேலிதுக்கு எல்லாம் ஆதாரமாய் இருக்கிறபடி –
கீழில் ஜ்ஞானப் பரப்பை அடைய பக்தியாய்ப் பழுத்த படி
பக்தி ரூபாபன்னமாய் இறே ஜ்ஞானம் இருப்பது –
ஆகை இறே மயர்வற மதி நலம் அருளினான் -என்றது-
ஆர்வமே நெய்யாக-
அது பாகமான படி -அந்த அன்பையே அடியாக யுடைத்தாய்
பெற்று அனுபவித்து அல்லது தரிக்க மாட்டாத அடியான அபி நிவேசமானது
அதுக்கு உட்பட்ட நெய்யாய்ப் புக்கது –
ஆர்வம் ஆகிறது -அன்பினுடைய த்விதீய பர்வம் –
அன்பாகிறது சிநேக கார்யமான அத்தலைக்குப் பரியும் பரிவு
ஆர்வம் ஆகிறது -அன்புக்கு விஷயம் ஆனவனுக்கு ஸ்மாரகமாய்
அவ்விஷயத்தை விட்டுக் கால் வாங்க ஒண்ணாத படியாகப் பிறப்பதொரு அவஸ்தை –
அன்றிக்கே
அன்பு அத்தலைக்கு பரியும் பரிவாய்
ஆர்வம் ஆகிறது அதுக்கு அடியான அபி நிவேசம் -என்றுமாம் –
ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் -நாச் -4-8-என்னக் கடவது இறே-
இன்புருகு சிந்தை இடு திரியா –
இவ்விரண்டையும் அடியாக யுடைத்தாய்
அநுபாவ்ய விஷயத்தினுடைய ரச்யதையாலே சிதிலமாகிற மனசானது அதுக்கு இட்ட திரியாக –
ப்ராப்தியாலும் –
குணாதிக விஷயம் ஆகையாலும் –
த்யேய வஸ்துவை விடாதே உருகி இனிதாய் இருக்கிற
மநோ ரதம் காரணமான திரியாக –
சிந்தைக்கு அடியாக இறே மனஸ் இருப்பது –
நன்புருகி-
நன்பு என்கிறது
ஆத்மாவுக்கு சஹஜமான தர்ம பூத ஜ்ஞானமாய் -அத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேச ப்ராஜ்ஞவத் -ப்ரஹ்ம ஸூதரம் -2-3-29-என்கிறபடியே –
ஜ்ஞாதாவை நினைக்கிறதாதல்-
அன்றிக்கே
நன்பு -என்கிறது
ஆத்மாவாய்-அதுக்கு நன்மையாவது
அல்ப அஸ்த்திரமான அசேதனத்தில் காட்டில் வேறுபட்டு
ஜ்ஞானனந்த லஷணமாய்-
நித்தியமாய் –
ஈஸ்வர சேஷமாய் -இருக்கை –
உருகி என்கிறது –
அசேத்யமாய்-
அதாஹ்யமாய் –
அக்லேத்யமாய் -இருக்கக் கடவதான ஆத்மவஸ்து -த்ரவ த்ரவ்யம் பட்டது பட்டது –
நித்ய வஸ்து உருகுகையாவது என் என்னில்
அவ் விஷயத்தில் தான் இழியும்படி அவகாஹித்த படியைச் சொல்லுகிறது –
ந விவேதாத்மநோ காத்ரம் -தத் ஸ்ம்ருத் யாஹ்லாத சம்ஸ்தித -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-7-39-என்னும் படியே
பிரஹலாதன் பாம்புகள் கடித்ததையும் உணராமல்
எம்பெருமானை நினைந்து மகிழ்ந்து இருந்தானே –
ஆக
இவை எல்லாவற்றாலும் சொல்லிற்று ஆயத்து –
விஷயா தீனமாகப் பிறந்த பக்தியிலே சில அவஸ்தா விசேஷங்கள் இருந்தபடி
பரபக்திக்கு அநந்தரம் பரஜ்ஞானம் ஆய்த்து
பின்னைப் போய்ப் பரம பக்தி பர்யந்தம் ஆய்த்து –
இங்கனே இருக்கக் கடவ தொரு க்ரமம் உண்டு இறே-
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
அவ் வளவிலே பகவத் பிரசாத லப்தமான பர ஜ்ஞானம் ஆகிற உஜ்வல தீபத்தை ஆரோபித்தேன் –
விளக்கு ஆகிறது
தன்னையும் தானே காட்டிப் பிறரையும் காட்ட வற்றாய் இருப்பது
அப்படியே –
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் ஆனது
தன் சேஷத்வத்தையும் காட்ட வற்றாய் –
அவன் தன் சேஷித்வத்தையும் காட்ட வற்றாய் இருக்கும் –
விளக்கேற்றினேன் –
அவ் வழியாலே அடிமை செய்கிறேன்-
நாரணற்கு-
சர்வ சேஷியான சர்வேஸ்வரனுக்கு-
அசேவ்ய சேவையைத் தவிர்க்கிறது –
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–
ஜ்ஞான ஸ்வரூபமான தமிழைப் பண்ணின நான் –
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -வேதார்த்த சங்க்ரஹம்-என்று
பக்தி ரூபாபன்ன ஜ்ஞான பிரபந்த ப்ரவர்த்தகனான நான் –
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்–ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் –
ஆப்ததமனான நான் சொன்னேன் –
காதல் குருகூர்ச் சடகோபன் சொன்ன –திருவாய் -2-1-1-என்னுமா போலே –
சோக ஸ்லோகத்வமாகத-பால -2-40-என்னக் கடவது இறே
என்னளவிலே யாய்ப் போகை அன்றியே –
நாட்டார்க்கும் எல்லாம் பக்தி பிரகாசிக்கும் படி பண்ணினேன்
தமக்கு உண்டான சாஷாத்காரம் இப் பிரபந்தம் கற்றார்க்கும் உண்டாக்கவற்று –
இனி இத்தால்
தம்முடைய பக்தி இருந்தபடியையும்
அபி நிவேசம் இருந்த படியையும்
இதுக்கு அடியான விஷயத்தின் உடைய ரச்யத்தை இருந்தபடியையும்
சேஷத்வ ஜ்ஞான அநு சந்தானத்துக்கு யோக்யமாம் படி ஆத்மா போய் தாந்தமான படியையும்
அவன் பக்கல் உண்டான சேஷத்வ பிரதிபத்தி இருந்த படியையும்
இவை எல்லாவற்றையும் சொல்லிற்று ஆகிறது-
————————————————————————–
அவதாரிகை –
இப்படிப்பட்ட பக்தியை யுடையவராய் –
அவன் திரு நாமத்தை அக்ரமமாக வாக்கிலும் சொல்லிக் கூப்பிடுமவர்களுக்கு
சர்வேஸ்வரன் கொடுக்கும் தரம் இருக்கும்படி –
நித்ய சம்சாரியானவனை -நித்ய ஸூரிகளோடே ஒரு கோவை யாக்கும் -என்கிறார்-
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-
பதவுரை
நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களையும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான
நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்
நாரணன் தன் நாமங்கள்–மற்றவன் பேர் -ஞானத்தால் நன்கு உணர்ந்து-தானத்தால்-சாற்றினால்-
நாராயணன் உடைய அசாதாரணமான திரு நாமங்களையும்-மற்றும் பிரகார வாசியான திரு நாமங்களையும் –
யுக்தமான படியே பக்தி பூர்வமாக யுணர்ந்து -மேற்பட உச்சமான ஸ்தானத்திலே சாற்றினால் –
ஞானத்தால் நன்கு உணர்ந்து-
பக்தியாலே அழகியதாக உணர்ந்து –
இருவர் கூட ஞானத்தை அப்யசிக்கச் செய்தே
சஞ்சயனுக்கு பக்தி யுண்டாய் -திருதராஷ்டிரன் வரி யடையவே கற்றுப் போனான் இறே
இருவர் கூட அப்யசித்தோம் -உனக்கு ஞானம் உண்டாய்த் தோற்றுவான் என்-
எனக்கு தோற்றாது ஒழிவான் என் -என்ன
உன்னைப் போலே வரியடைவே கற்கை அன்றிக்கே
நான் பக்தியை உடையேனாய்க் காண் அப்யசித்தது -என்றான் இறே –
நன்கு உணர்ந்து-
உறவை அறிந்து பேரைச் சொல்ல வேணும் –
அதாகிறது –
ஈஸ்வர ஸ்வரூபம் இருக்கும்படியையும்
ஸ்வ ஸ்வரூபம் இருக்கும்படியையும் -அழகிதாக அனுசந்திதித்து –
அவன் சேஷித்வத்தையும் தன் சேஷத்வத்தையும் அனுசந்தித்து –
நாரணன் தன் நாமங்கள்-
அல்லாத திரு நாமங்களில் காட்டில் இதுக்கு வ்யாவ்ருத்தி
ஜ்ஞான ஆனந்தங்கள் ஸ்வரூப நிரூபகமாய் -அல்லாத ஜ்ஞான சக்தியாதிகள் குணமானாப் போலே யாயிற்று
திருமந்தரம் ஸ்வரூப நிரூபகமாய் அல்லாதவை திரு நாமங்களாய் இருக்கிறது –
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடுடையன் -அவன் யார் என்னில் -நாராயணன் -திருவாய் -9-3-1-என்றது இறே
நாமம் பல சொல்லி நாராயணா – மூன்றாம் திரு -8-என்றது இறே
நாரணன் தன் நாமங்கள் –
வகுத்த சேஷியானவனுடைய திரு நாமங்கள் –
தானத்தால் –
பிரயோஜன நாந்தர பரனாய்ச் சொல்லுதல் –
பிரயோஜன நிரபேஷனாய்த் தவிருதல் -செய்கை அன்றிக்கே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமையாலே சொல்லுகை –
சொல்லி அல்லது நிற்க மாட்டாமை
பக்தியினுடைய ஸ்தானத்திலே –
பக்திக்கு அனந்தரமான ஸ்தானம் ஆகையாவது விவசராய்க் கூப்பிடுகை –
மற்று –
அவ்யயமாய்ப் பொருள் இன்றிக்கே நிற்றல் -அசை நிலை –
மற்று ஓன்று பக்திக்கு மேலே திரு நாமத்தையும் சொன்னால் –
அவன் பேர் –
விபூதிக்கு வாசகமாயும் –
குணங்களுக்கு வாசகமாயும் உள்ள திரு நாமங்கள்
பேர் -சடங்கு வேண்டாமை
தானத்தால் சாற்றினால் –
அவன் பக்கல் உண்டான பக்தி வழிந்த சொல்லாலே பெரும் தானத்தைச் சொல்லிக் கூப்பிட்டால் என்றாதல் –
அன்றிக்கே
கீழ்ச் சொன்ன பக்திக்கு அனுரூபமாக அடைவு கெடக் கூப்பிட்டு-என்னுதல்-
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய் -3-5-8-என்னக் கடவது இறே
நன்கு உணர்ந்து சாற்றுகை யாவது –
நெஞ்சாலே உணர்ந்து அப் பேரை வாயாலும் சொல்லுகை –
சாற்றினால் –
உகவாதார் மண் உண்ணவும் உகப்பார் களிக்கவும் கேட்கச் சொல்லிக் கூப்பிடுகை –
பின்னை அவன் செய்யுமது என் என்னில்
வானத்தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே –
நித்ய விபூதிக்கும் இவன் சம்பந்தத்தால் ஒரு நிறம் உண்டாம்படி பண்ணி –
நித்ய ஸூரிகளோடே ஒரு கோவையாம்படி பண்ணுமதன்றோ-என்னுதல் –
அன்றிக்கே
அவர்களைக் கொண்டு போய் ஸ்ரீ வைகுண்டத்திலே அங்கு உள்ளார்க்கு
பூஷணமான தேவர்கள் ஆக்குகை அன்றோ -என்னுதல்
மலி புகழ் வானவர்க்காவர் நற்கோவை -திருவாய் -4-2-11-என்னும்படியே
அடியார்கள் குழாங்களை —உடன் கூடுவது என்று கொலோ-திருவாய் -2-3-10- என்று இறே
இவர்கள் பிரார்த்தனை –
வானத்து அணி அமரர் –
பரமபதத்துக்கு விசேஷம் அச்ப்ருஷ்ட தோஷ கந்தரான நித்ய ஸூரிகளை உடைத்தாகை –
சம்சாரிகளை நித்ய ஸூரிகளை ஆபரணமாக யுடைத்தான பரம பதத்திலே கொண்டு போய் வைக்கும் என்றுமாம்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே -திருவாய்-10-5-8-என்னக் கடவது இறே
இப்படிச் செய்கிறது தன்னை ஆஸ்ரயிப்பார் இல்லாமையோ என்னில்
நங்கள் பணி யமரர் கோமான் பரிசு-
நமக்கு நிருபாதிக பந்துக்களாய்-நித்யாஞ்சலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந-பார -சாந்தி -344-45-என்கிறபடியே
அவன் திருவடிகளிலே பணிகையே யாத்ரையாக யுடையரான அநந்த வைனதேயாதிகள் உள்ளிட்ட
நித்ய சித்த புருஷர்களுக்கு ஸ்வாமியானவனுடைய பிரகாரம்
பணி யமரர் –
வேறு பணியை யறியாதே -ஒரு நாள் பணிந்து ஒரு நாள் பணியாது இராதே
அவனைப் பணிகையே ஸ்வரூபமாய் இருக்கை-
பணி யமரர் –
முக்தரையும் முமுஷூக்களையும் போலே சில நாள் புறம்பே பணிந்து –
பின்னை தெளிந்து
அழுக்கு உடம்பு எச்சில் வாயால் -திருக் குறும் தாண் -12-என்றும்
காவடியேன் பட்ட கடை -இரண்டாம் திரு -10-என்றும்
சொல்ல வேண்டாதார்
பணி யமரர் கோமான் பரிசு வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அக்தன்றே-
அடைவுகெடக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் -என்றபடி –
————————————————————————–
கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே –
அவ் வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே
ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி
அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்-
இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் –
அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் –
அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் –
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-
பதவுரை
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
அழகிய செவ்விப் பூக்களைக் கொண்டு
நமக்கு ஆஸ்ரயிக்கலாம் படி எளியனாய் அவதாரங்களுக்கு எல்லாம் அடியான
திருப் பாற் கடலிலே அநிருத்த ஆழ்வானாய் இறே கண் வளர்ந்து அருளுகிறது –
வாஸூதேவ -சங்கர்ஷண-பிரத்யும்ன -அநிருத்தர்களில் கடைக் குட்டியான அநிருத்த ஆழ்வானாய்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் திருவடிகளை –
சம்சாரிகளை அக்கரைப் படுத்த வேணும் என்று திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
பூர்வஜன் -நமக்காக தானே முற்பட்டவன் -என்றபடி –
பரிசு புரிவார் –
சாஸ்திர உக்தமான படியே ஆஸ்ரயிப்பார் ஆவது –
பக்தி பிரகாரத்தாலே -ஏற்றபடி –
புகப் பெறுவர் போலாம் –
புகப் பெறுவாராமீ பேற்றில் குறை யில்லை –ஆஸ்ரயியாதே
இழப்பார் இழக்கும் அத்தனை -என்கிறது –
புகப் பெறுவர் போலாம் –
தாம் புகப் பெறாத வெறுப்புச் சொல்கிறது –
இப்படிக் கொள்கிறது தன்னை ஆஸ்ரயிக்கைக்கு ஆள் இல்லாமையாலோ என்னில்
புரிவார்கள்-இத்யாதி
எப்படிப்பட்ட எவ்விடத்தே தான்-என்னில் –
புரிகை யாகிறது -செயலாதல் -விருப்பமாதல் –
புரிவார்கள் –
சாதகராய்த் திருவடிகளை ஆஸ்ரயிப்பார் -சபிப்பார் -ஜடை பின்னுவராய்
சம்சாரிகளில் பழையரான பிரம்மாதி தேவர்கள் –
தொல்லமரர் –
நாலு நாள் முற்பாடரானவர்கள்
கேள்வித் –
காண ஒண்ணாதே என்றும் கேட்டே போம் இத்தனை –
யாம் ந தேவோ முனய ந சாஹம் ந ச சங்கர ஜாநந்தி பரமேசச்ய
தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-
துலங்கொளி சேர் தோற்றத்து-
அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸத்தா நம் -பார -ஆரண்ய -136-18-என்கிறபடியே
நிரவதிக தேஜோ ரூபமாய்க் கொண்டு தோற்றுவதான
ஆதித்ய வர்ணம் தமாசா பரஸ்தாத் -ஸ்வே-3-8- என்றும்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் -நாச் -10-2-இத்யாதி வத்
நல்லமரர் கோமான் நகர் –
சிலநாள் சம்சார ஸ்பர்சம் உண்டாய்ப் பின்பு ஒரு ஸூஹ்ருத விசேஷத்தாலே
அது கழிந்து க்ரமத்தாலே பெறுவார்கள் அன்றிக்கே
அச்ப்ருஷ்ட சம்சார கந்தராய் ஸ்வ பாவ சித்தரான பெரிய திருவடி திரு அநந்த ஆழ்வான் உள்ளிட்ட
அயர்வறும் அமரர்களுக்கு நாயகன் ஆனவனுடைய நகரத்தை
நல்லமரர் கோமான் –
நாலு நாள் சாவாதே இருந்து பேர் படைத்த சாதகர் ஆனவர்கள் அன்றிக்கே சாத்யராய்
பிரியில் தரியாதே இருக்கும்படியான நித்ய ஸூரிகளுக்கு அதிபதி என்று அவனுக்கு ஸ்வரூபம் –
அவனுக்கு ஸ்வரூபம் கொடுக்க வல்லவர்கள் நகர் –
நிர் விசேஷம் என்று போகாமே –
ஒரு திவ்ய தேசமும் –
திவ்ய புருஷர்களும் -தானுமாய் இருக்கப் பெறுவதே
நல்லமரர் கோமான் நகர் பாற் கடலான் பாதம் நறு மலரால் பரிசு புரிவார் புகப் பெறுவர் போலாம் –
இத்தால் –
அர்ச்சாவதாரத்திலே ஆஸ்ரயித்து
பின்னை விபவமாய்
அநந்தரம் வியூஹமாய்
அநந்தரம் மோஷமாய்-பரமபதம் பெறுவார்கள் -என்று சொல்லுகிறார் –
சொல்லுகிறது ஆழ்வார்களுக்கு உப லஷணம் அல்ல என்னும் இடமும்
தங்கள் பிரதிபத்தியின் அளவுக்கு ஈடாகச் சொல்லுகிறார் என்னும் இடம் தோற்றுகிறது-
கடைக்குட்டி அநிருத்த ஆழ்வான் ஆகிற திருப் பாற் கடலிலே ஆச்ரயித்தவன் பரமபதம் பெறும் என்றது இறே
ஆகையால் அவற்றிலே எங்கேனும் ஓர் இடத்திலே ஆஸ்ரயித்தால்
அநந்தரம் பேறு சித்தம் -என்னும் இடம் தோற்றுகிறது-
————————————————————————–
கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் –
அன்றிக்கே –
இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்-
இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்-
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4–
பதவுரை
நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புறவிதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை
வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.
நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு –
பக்தியைச் சொல்லுகிறது-என்னவுமாம்
ஏவம் விதமான பூவை யுண்டாக்கி ஆஸ்ரயிக்க-என்னவுமாம் –
அன்பே தகளியா -என்று ஒரு விளக்கை ரூபித்தால் போலே
ஒரு புஷ்பமாக ரூபித்து அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்
நகர் இழைத்து-
எம்பெருமானுக்குப் பாங்காக தம்முடைய ஹ்ருதயத்திலே அவனுக்கு ஒரு வாச ஸ்தானத்தைக் கற்பித்து
நகர் -என்றது
நகரமாய் -கோயில் என்றபடி
நித்திலத்து நாண் மலர் கொண்டு –
நீர்மையை யுடைத்தான முத்தை செவ்வியை உடைத்தான இதழாக புத்தி பண்ணி
சிநேக ரூபமாகிற இதழை யுடைத்தாக்கி
நித்திலத்து நாண் மலர் –
குளிர்ந்து பரிமளிதமாய் இருக்கை-
குளிர்த்தி யாகிறது த்விதா பஜயேயமப் யேவம் ந நமேயம் -யுத்த -36-11-என்னாது இருக்கை
நாண் மலர் -போக்யமாய் இருக்கை
ஆங்கே -அதிலே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து –
அபி நிவேசம் ஆகிற உஜ்வலமாகா நின்ற ரத்னங்களும் வைரங்களும் ஆகிற அல்லியையும் தாதியும் சேர்த்து யுண்டாக்கி
திகழா நின்றுள்ள மணியும் வைரமும் ஆகிறது -பக்தி விசேஷமாய் இருக்கிறபடி
நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் –
இப்படி உபமான ரஹிதமாய் இருப்பதொரு பாவ புஷ்பம் ஆகிற தாமரைப் பூவை தரித்துக் கொண்டு
பணிந்தேன் -ஆஸ்ரயித்தேன்-
பைங்கமலம் -பரந்த பூ
ஹ்ருதய கமலத்தைக் கொண்டு பணிந்தேன் –
மற்றுள்ள கமலங்களுக்கு ஒப்புண்டு போலே காணும்
இந்த ரூபத்தில் முத்தை நினைக்கிறது ச்நேஹத்தை
மணியும் வைரமுமாக நினைக்கிறது அபி நிவேசத்தை
நாடாத மலர் நாடி -திருவாய் -1-4-9- என்னக் கடவது இறே
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய் -4-3-2-
பக்தியைப் பாவ புஷ்பமாக நிரூபிக்கைக்கு காரணம்
பெரிய பிராட்டியாரோடு எம்பெருமானை அனுபவிக்கையால் பிறந்த விபாகம்
ஆரைத் தான் ஆஸ்ரயிக்கிறது என்னில்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி-
நிரதிசய போக்யையான பெரிய பிராட்டியாரை வலத் திரு மார்பிலே அணைத்துக் கொண்டுள்ள
சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே விழுந்தேன்
இத்தால்
ஆஸ்ரயணீய வஸ்து லஷ்மீ பதியான வேஷம் -என்கை-
பணிவுக்கு விஷயமாவான் ஸ்ரீ யபதி இறே
அவளுடைய சந்நிதியிலே அபுஷ்கலமான சமாஸ்ரயணமும் புஷ்கலமாம் இறே
ஆஸ்ரயிப்பார் உடைய நன்மை தீமை கணக்கிட ஒட்டாளே
நன்மைக்குப் பரிகை நம் உறவுக்குப் போகாது என்னும்
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் –
————————————————————————–
பக்தியைத் தீபமாகப் பேசினார் –
நகரம் கோயிலாகப் பேசினார் –
இதில் பக்தி தன்னைச் சொல்லுகிறார் –
அன்றிக்கே
பக்திமான்களுக்கு ஸூலபனாம்படி யாக வுமாம் –
நிகரில்லாப் பைங்கமலம் ஏந்திப் பணிந்தேன் -என்றாரே –
ஆழ்வீர்-நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன
ஒன்றைச் சொன்னேன் அத்தனை -இப்படிப்பட்ட உன்னை ஒருவராலும் பரிச்சேதிக்கலாய் இருந்ததோ -என்று
கீழ்ப் பாட்டில் சொன்ன நீர்மையை அறியப் போமோ -என்கிறார் –
பணிந்தார்க்குத் தரம் செய்யும் படியாக வுமாம் –
அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து-5-
பதவுரை
படி நின்ற–பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல் வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ் வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலி யிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓத வல்லார் ஆர்–பேச வல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)
அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்-
இப்படி பக்திமான்களுக்காக வந்து திரு வவதாரம் பண்ணி -அவர்கள் பக்கல் உண்டான பஷ பாதம் தோற்றும்படி
மூன்று அடிக்கு உள்ளே அளப்பதாகத் திரு உள்ளத்தாலே கணிசித்து
அதுக்கு ஈடாக ஏற்கவே மூன்றடியை அபேஷித்தான் ஆய்த்து-
அடி மூன்றாலே இரந்து லோகத்தை அன்று அளந்து கொண்டாய்-
அதாகிறது –
தன்னதைத் தான் கொண்டானாகை யன்றிக்கே
பிறரத்தைத் தான் கொண்டான் என்று தோற்றுகைக்காக-
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –
பூமியை உனக்காக்கிக் கொள்ளுகைக்காக அளக்கைக்காக மூன்றடியை யாசித்து
இரண்டு திருவடிகளாலே இந்த லோகத்தை அன்று அளந்து கொண்டாய்
அளக்கைக்காக அடி மூன்றையும் பெற்று உடையாய்க் கொண்டு
இரண்டு அடியாலே லோகங்களை அன்று அளந்து கொண்டாய்
அதுக்கடியாக சிற்றடியாலே மூன்று அடிக்கு பூமியை இரந்து ப்ராப்தி பண்ணிக் கொண்டாய்
தூர தர்சி யாகையாலே இரண்டு அடியாலே அளந்து ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பதாக மூன்று அடியை இரந்தாய்
உன்னுடைய இந்த நினைவை ஒருவராலே அறியலாய் இருந்ததோ
படி நின்ற-
பூமியிலே ரஷகனாய்ச் செவ்வே நின்ற –
அன்றிக்கே
ஒப்பாய் நின்ற ஸ்வ பாவமாய் நின்ற என்றுமாம் –
நீரோத மேனி நெடுமாலே –
ஓதம் கிளர்ந்த கடல் போலே இருக்கிற வடிவு அழகை யுடையையாய் -சர்வாதிகனான சர்வேஸ்வரனே
நெடுமாலே –
மிக ஓங்கின வடிவை யுடையவனே -ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவனே -என்றுமாம் –
நீரோத மேனி நெடுமாலே –
அழகுக்கு எல்லை காணிலும் வ்யா மோஹத்துக்கு எல்லையைக் காணப் போகாது
நின்னடியை யாரோத வல்லார் அறிந்து-
உன் திருவடிகளினுடைய நீர்மையை அறிந்து ஓத வல்லார் ஆர் –
ஆர் அறிந்து பேச வல்லார் -என்கிறார்
என்னைப் போலே அறிவு கெட்டுப் பேசில் பேசும் அத்தனை
அபரிச்சேத்யனான உன் திருவடிகளை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை -என்கிறார்
நீ மஹா பலி பக்கல் சென்று இரந்து பூமியை அளந்து கொண்ட அச் செயலை பர்ச்சேதிக்கில் அன்றோ –
உன்னைச் சிலராலே பரிச்சேதித்து ஆஸ்ரயிக்கலாவது-என்கிறார்
உன் மேன்மையை எல்லை காணிலும் நீர்மையை எல்லை காண ஒண்ணாது -என்றபடி
————————————————————————–
அறியப் போமோ -என்றாரே –
ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று –
இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் –
ஆகில் பின்னை இங்கனே எல்லோரும் அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் –
அது வேண்டா
இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள்
அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் –
அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் –
அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்-
அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-
பதவுரை
அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டிமேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்திமிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன் பேர்–அப்பெருமானது திருநாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹாபாக்யசாலிகள்
கார் ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப் பெறுவார்கள்.
அறிந்து –
ஹேய உபாதேய விபாகத்தைப் புத்தி பண்ணி –
பகவத் விஷயத்தினுடைய வை லஷண்யத்தையும் –
சப்தாதி விஷயங்களினுடைய பொல்லாங்கையும் அறிந்து –
சரீரத்தினுடைய ஹேயதையை அறிந்து -என்றுமாம் –
ஐந்தும் உள்ளடிக்கி-
அந்த ஹேயமான சப்தாதி விஷயங்களிலே ஸ்ரோத்ராதி அஞ்சு இந்த்ரியங்களும் போகாதபடி நியமித்து பிரத்யகாக்கி -உள்ளே விஷயம் காட்டிக் கொடுக்கிறபடி
பட்டிப் பசுவுக்கு அகத்தே கட்டி இரையிடுமாப் போலே அவன் வடிவு அழகிலே மூட்டுகை –
யாய் மலர் கொண்டு –
சத்ருசமான புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு -செவ்விப் பூக்களைக் கொண்டு –
ஆர்வம் செறிந்த மனத்தராய்-
ச்நேஹம் மிக்க
மனசை யுடையராய் அபி நிவேசம் நெருங்கின மனஸ் ஸூ
செவ்வே அறிந்து –
அவன் சேஷீ-நாம் சேஷ பூதர் -என்கிற முறையை நேரே புத்தி பண்ணி
அவன் தன்பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர்-
அவன் திரு நாமங்களைச் சொல்லி அவனை ஸ்தோத்ரம் பண்ணும் பாக்யாதிகர்-இதுவே யாத்ரையாக இருக்குமவர்கள் –
காண்பரே காரோத வண்ணன் கழல்-
ஸ்ரமஹரமான கருத்த கடல் போலே இருக்கிற வடிவை யுடையனானவன் திருவடிகளைக் காணப் பெறுவார் –
காண்பரே –
தம்முடைய நோயாசை -நப்பாசை –
காரோத வண்ணன் –
அயர்வறும் அமரர்களுடைய சாத்துப்படியான உடம்பு –
காண்பரே –
இது நிச்சயம் –
————————————————————————–
இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் -என்று அறிந்து நீயும் விடாதே
அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று
தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார்
அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் –
பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை –
கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-
பதவுரை
ஆழிநெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.
கழல் எடுத்து-
திரு யுலகு அளந்து அருளின போது-ஒரு திருவடிகளை மேலே எடுத்து –
இத்தால் ஆஸ்ரயித்தாரை வாழ்வித்த படி –
மேல் -அநாஸ்ரிதரைக் கெடுத்த படி
வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார் அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச –
தழல் எடுத்த போராழி ஏந்தினான் –
வாய் மடித்துச் சுழலா நின்றுள்ள கண்களை யுடையராய் –
ஹ்ருதயத்தில் கொளுத்தின பயாக்னியை உடையரான நமுசி பிரப்ருதிகள் அஞ்சும்படி –
அவர்கள் மேலே விழுமாப் போலே இருக்கிற திரு ஆழியை ஏந்தினான் -என்றபடி
பொன் மலர்ச் சேவடியே –
பொன் போலேயும் மலர் போலேயும் ஸ்ப்ருஹணீயமுமாய் ஸ்லாக்யமுமான திருவடிகளையே
ஓர் –
அனுசந்திப்பாய்
ஆழி நெஞ்சே –
அளவுடைய நெஞ்சே -அது செய்யும் இடத்து
உகந்து ஓர் –
விருப்பத்தோடு அனுசந்திக்கப் பார்
உன் அளவுடைமை கொண்டு ஓராதே -உகப்பைக் கொண்டே ஓர் –
தேவைக்காக ஒண்ணாது –
ஓர் –
ஆஸ்ரயிக்கப் பார் -என்றபடி-
————————————————————————–
ஆன பின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் –
அதாவது –
பொய் யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது –
ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன
பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க –
அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் –
நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே
பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்-
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்று அளாவி உகந்து
முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-
பதவுரை
(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகு பெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.
உகந்து –
தாய் வடிவு கொண்டு வந்தவள் ஆகையாலே தாயார் உகக்குமா போலே பொய்யே உகந்து –
யசோதைப் பிராட்டி உகக்குமா போலே உகந்து –
உள்ளே முனிவு கிடக்க -உகப்பை மெய்யாக பாவித்த படி –
மெய்யாகா விடில் முலை சுரவாதே-நெஞ்சு இல்லையாகில் இல்லையே –
உன்னை வாங்கி –
யசோதைப் பிராட்டி சநேஹத்தோடே தூக்கி எடுக்குமா போலே -உறக்கத்திலே தூக்கி எடுத்து –
அவள் பரிவாலே ஒசழக்காக எடுக்குமா போலே எடுத்து –
ஒளி நிறம் கொள் கொங்கை-
யசோதைப் பிராட்டி யுடைய முலை போலே பாலாலே விம்மி உஜ்வலமாகா நின்ற முலைகளை –
முலைப்பால் நெறித்து அத்தாலே புகர் பெற்றபடி –
அகம் குளிர உண் என்றாள்-
தாய்மார் ஆனவர்கள் எடுப்பதற்கு முன்பே பிள்ளைகளுடைய ஸ்ரமம் ஆறும்படி -தந்தாமுடைய உகப்பு தோற்ற –
வயிறு நிறைய உண் என்று சொல்லுவான சில சொற்கள் உண்டு -அவற்றைச் சொன்னாள்-
உண்டு அல்லது நிற்க ஒண்ணாத படி ஹ்ருதயம் குளிரும்படிக்கு ஈடாகச் சொன்னாள் –
முலை யுண்ண வேண்டாதே பேச்சிலே வயிறு நிறையும்படி
ஆவி-
அவளுடைய பிராணனை
நீயும் உகந்து முலை யுண்பாய் போலே முனிந்து உண்டாய் –
நீயும் உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
அவள் பொய்யே யுகந்து முடிக்க நினைத்தால் போலே
நீயும் பொய்யே உகந்து முலை யுண்பாரைப் போலே முனிந்து முடித்தாய் –
இவனும் முனிவு தெரியாதபடி உகந்தபடி
அவளும் முலை கொடா விடில் தரியாதாளாய் வந்தாள்-
இவனும் முலை யுண்ணா விடில் தரியாதானாய் யுண்டான்
முனிந்து யுண்கை யாகிறது
அகாலத்திலே முலை கொடுத்தால் பிள்ளைகள் சீறுவர்கள் ஆய்த்து-
நம்முடைய பரமபக்தியும் பிரபத்தியும் எல்லாம் நிரூபித்தால் பூதனையுடைய உகப்பு போலே பொய்யாய் இருக்கும் –
அலை பண்பா லானமையால் அன்று—
அவள் அப்படி முதல் அழியக் கார்யம் பார்த்த அன்று நீ இப்படிச் செய்தது –
நீ அலைத்த பண்பை யுடையை ஆகையாலே இறே-
மிக்க நீர்மையை யுடையை ஆகையாலே இறே –
மிக்க குணத்தை யுடையை ஆகையாலே இறே –
அலை பண்பால் –
பெரும் குண சமுத்ரம் ஆகையால் –
உனக்கு ரஷிக்க மித்ர பாவம் அமைந்து இருக்கச் செய்தே -பூதனை தன்னை முடித்து –
ஜகத்துக்கு சேஷியான யுன்னை யுண்டாக்கித் தந்தது -நீ குணாதிகனாகை இறே
அவளை முடித்து உன்னைத் தந்தது ஆஸ்ரிதர் பக்கல் உனக்கு உண்டான ஓரம் இறே என்னுதல்-
தங்களை வாழ்விக்கைக்காக இறே என்னுதல்
அங்கன் அன்றிக்கே
அலை பண்பால் –
அழிந்த நீர்மையை யுடையளாய் என்று அவள் பக்கலிலே பொகடவுமாம்
உகந்து உன்னை வாங்கி ஓளி நிறம் கொள் கொங்கை அகம் குளிர
உண் என்றாள் ஆனமையால்
அன்று நீயும் உகந்து முலை யுண்பாய் போல் முனிந்து
ஆவி யுண்டாய் அலை பண்பால் –
என்று அந்வயம்-
————————————————————————–
வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் –
இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை-
பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் –
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந்நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-
பதவுரை
அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?
அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி-
தனக்கு அஞ்சுகை தவிர்ந்து -அத்தலைக்கு அஞ்சினபடி –
உனக்கு இரங்கி-
பரிவாலே வயிறு பிடித்த படி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு –
தளராதே கால் தரையிலே பாவும்படி நின்று முலை தந்த இந்த ஸ்வ பாவத்துக்கு
மோஹிக்க வேண்டும் தசையிலே தரித்து நின்று -ரஷை பார்த்த படி
அன்று வரன் முறையால் நீ யளந்த –
அன்று வரிஷ்டமான க்ரமத்தாலே -ஸ்வா பாவிகமான ஸ்வாமி த்வ ப்ராப்தியாலே நீ அளந்து கொண்ட –
பெற்ற தாயான முறையாலே ஜகத்துக்கு முலை கொடுத்த படி –
முறையால் இவ் வுலகு எல்லாம் படைத்து அளந்தாய் -திருவாய் -3-1-10- இத்யாதி வத்
மா கடல் ஞாலம்-
பெரிய கடல் சூழ்ந்த பூமியானது –
பெரு முறையால் எய்துமோ பேர்த்து–
பெருமைக்கு ஒப்பாக முன்னிட்டால் போருமோ -என்கிறார் –
அதுவும் பெரிய செயல் –
இதுவும் பெரிய செயல்
ஆனாலும் அந்த ஸ்வ பாவத்துக்கு
இது மறித்துப் பார்க்கும் போதுபெருமைக்கு ஒப்பாகப் போருமோ –
இதில் இது பெரிது என்று ஒன்றுக்கு ஓன்று பெருக்கினால் பூமியை அளந்தது இந் நீர்மைக்கு ஒக்குமோ -என்கிறார் –
பின்னைச் செய்த செயல் விஞ்சி இருக்கும் இறே-
பேர்த்து–பெரு முறையால் எய்துமோ –
அவளுடைய ஸ்வ பாவத்துக்கு நீ பெரிதாகச் செய்த செயல் தெரியட்டும் ஒப்பன்று என்கிறது –
பேர்த்து –
பேர்த்தால் -எண்ணினால் -என்னவுமாம் –
————————————————————————–
ஆக -இருந்தபடி இதுவாகையால்
இந்த யசோதைப் பிராட்டியினுடைய பக்தியை முதலிலே தேவர் பக்கலிலே பண்ண விறே எடுப்பது –
அந்த ஸ்நேஹம் இன்றிக்கே இருக்கச் செய்தே உன் பக்கலிலே ப்ராவண்யம் உண்டாய்த்து
இனி அநாதி காலம் தேவதாந்த்ரங்கள் கால் கடையிலே துவண்டு பட்ட தண்மை
இனி ஒரு காலமும் வாராத படி தேவர் நோக்கி யருள வேணும் -என்கிறார் –
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-
பதவுரை
காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆச்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னைத் துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–போக்கி யருள வேணும்.
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய்-
பிள்ளையான தன்மையில் குறைவற்று இருக்கச் செய்தே
ஒன்றால் சலிப்பிக்க அரிதான பெரிய சகடத்தை கட்டழியத் தள்ளிப் பொகட்டாய் –
மா சகடம் –
அது இவன் அருகில் வரில் என்பட கடவோம்
மண்ணிரந்து காத்தனை பல்லுயிரும்-
உன் உடைமையைப் பறித்துக் கொள்ள இந்த்ரனுக்காக அர்த்தித்வத்தில் குறையாதே நின்று பெற்று
உன் திருவடிகளாலே எல்லார் தலையிலும் ஸ்பர்சித்து அளந்து கொண்டு
சேதன வர்க்கத்தை அடைய நோக்கி உஜ்ஜீவிப்பித்தாய் –
காவலனே –
இங்கனே செய்ய வேண்டுகைக்கு அடி என் என்னில் -ரஷகன் ஆகையாலே
ரஷை அவனுக்கு ஸ்வரூபம் ஆனால் போலே
ரஷ்யத்துக்கு அடிமை செய்வது ஸ்வ பாவம் –
காவலன் ஆவதின் கார்யம் காக்கை -சேஷத்வத்தின் கார்யம் சேஷ வ்ருத்தி-
ஆனால் நீர் இவை கொண்டு கொள்ளப் புகுகிற கார்யம் என் என்னில் –
நின்னுள்ளி நின்றமையால்-
இப்படிப்பட்ட ஸ்வ பாவத்தை யுடையனான உன் பக்கலிலே வைக்கப் பட்ட
அனுசந்தானத்தை யுடையேன் ஆகையாலே –
ஏத்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை ஸ்துதிக்கிற வாக் இந்த்ரியத்தையும்
உன் பக்கலிலேயான காயிக வியாபாரத்தையும் -யுடையேன் ஆனேன் –
உடையேன் என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான ஏந்திய வா வுடையேன் –
தனத்துத் தானே யேத்துகைக்கு ஈடான நாவை யுடையேன் ஆனேன்
பூ வுடையேன் – என்கையாலே
அடிமை செய்கைக்கு உப கரணமான பூவையும் யுடையேன் ஆனேன் –
நின்னுள்ளி நின்றமையால் -ஏந்திய நா வுடையேன் பூ வுடையேன் –
உன்னை சமாஸ்ரயணீயனாக யுடையேன் ஆகையாலே
ஆஸ்ரயிக்கும் கரணங்களையும் த்ரவ்யங்களையும் புஷ்கலமாக உடையேன் ஆனேன் –
ப்ராப்த விஷயத்தை நினைக்கையாலே பரிபூர்ண சமாஸ்ரயணம் பண்ணினேன் ஆனேன் –
அனுசந்திக்கப் படுகிற விஷயம் நீ யாகையாலே எனக்கு ஒரு குறை இல்லை
ஆனாலும் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
கா அடியேன் பட்ட கடை –
உனக்கு அடியேனான நான் அப்ராப்த விஷயங்களான இதர தேவதைகளின் காலிலே விழுந்து
தாழ்வு செய்கையால் வந்த தண்மை
இனி முன்னம் வாராதபடி தேவர் பார்த்து அருள வேணும்
அடியேன் பட்ட கடை கா –
அடிமை யாகிற பெருமையை யுடைய நான்
தலையான நான்
கடையான அடிமைப்பட்ட எளிமை இனி வாராதபடி பார்த்து அருள வேணும்
அடியேன் பட்ட கடை –
அனந்யார்ஹ வஸ்து பட்ட பாடே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply